Followers

Search Here...

Showing posts with label ராமாயணம். Show all posts
Showing posts with label ராமாயணம். Show all posts

Saturday 22 August 2020

சீதையை ராவணன் ஏன் நெருங்கவில்லை.. அத்தனை நல்லவனா ராவணன்? ராவணனே இதற்கு காரணம் சொல்கிறான்.. தெரிந்து கொள்வோமே....வால்மீகி ராமாயணம்

ராமர் இல்லாத சமயத்தில், சீதையை கடத்தி சென்றான் ராவணன்

தன்னை ஏற்பதற்காக, சீதைக்கு 1 வருடகால அவகாசம் கொடுத்தான்.

சீதையை ராவணன் ஏன் நெருங்கவில்லை.. அத்தனை நல்லவனா ராவணன்?

ராவணனே இதற்கு காரணம் சொல்கிறான்... தெரிந்து கொள்வோமே....

வால்மீகி ராமாயணம் - யுத்த காண்டம்:




ராமபிரான் வானர படைகளுடன், மகேந்திர மலை, சஹ்ய மலை, மலய மலையை தாண்டி, வேலாவனம் என்ற காட்டை தாண்டி, கடற்கரை அருகில் வந்து விட்டார் (இன்று ராமேஸ்வரம் என்று சொல்கிறோம்).


"கடலை கடந்து இலங்கை வந்து விட்டால் என்ன செய்வது? 

ஒரு வானரன் ஹனுமான் வந்தே இலங்கையை கலங்கடித்து விட்டான். கோடிக்கணக்கான வானரர்கள் உள்ளே நுழைந்தால்? இனி என்ன செய்ய வேண்டும்?"

என்று ராவணன் சபை கூட்டி, மந்திரிகளிடம் ஆலோசனை நடத்தினான்.


ராக்ஷஸர்கள் பலர், படைத்தளபதி ப்ரஹஸ்தா, வஜ்ரதம்ஸ்ட்ரா, நிகும்பன் (கும்பகர்ணன் பிள்ளை) ஆகியோர் ராவணனுக்கு ஆதரவாக பேசினார்கள். 

பிறகு விபீஷணன் பேசினார்.

விபீஷணன் மட்டும் "சீதையை தகுந்த மரியாதையுடன் திருப்பி அனுப்பி விடு" என்றார்.. 

உடனேயே சபையை கலைத்து விட்டு, வெளியே சென்று விட்டான் ராவணன்.


பிறகு ராவணன் அரண்மனைக்கு சென்று மீண்டும் விபீஷணன் சொல்லி பார்த்தார். 

"சீதையை அனுப்ப முடியாது" என்று மீண்டும் நகர்ந்தான்.


அடுத்த நாள், மீண்டும் சபை கூட்டினான் ராவணன்.


ஆறு மாத தூக்கத்துக்கு பின், சபைக்கு வந்து இருந்தான் கும்பகர்ணன்.

கும்பகர்ணன் ராவணன் செய்த இந்த பேடிதனமான காரியத்தை கடுமையாக கண்டித்தான்.. இருந்தாலும் 'ராமரை கொன்று யமலோகம் அனுப்புவேன். கவலைப்படாதே!' என்று சொல்லி அமர்ந்தான்.


ராவணன் ஆத்திரத்தில் இருந்தான்.

பிறகு மஹா பலசாலியான 'மஹாபார்ஷ்வன்' என்ற ஒருவன், ராவணனை பார்த்து கை குவித்து பேசினான்..

"ராமன் ஒரு சிறு பொடியன். அவனுக்கு மரத்தில் இருக்கும் தேன் கூட்டில் உள்ள தேனை கூட எடுக்க முடியாது.

நீங்கள் ஈஸ்வரன். 

ஈஸ்வரனுக்கே யார் ஈஸ்வரனாக முடியும்?

எதிரிகளை ஒடுக்க, சீதையை பலாத்காரம் செய்யுங்கள். 

அவளை அனுபவித்து விடுங்கள். பிறகு ஏற்படும் விளைவுகளை நாம் பார்த்து கொள்ளலாம்.

கும்பகர்ணன், உங்கள் மகன் இந்திரஜித் உங்களுடன் இருக்கும் போது, அந்த இந்திரன் தன் ஆயுதங்களை வீசினாலும் தடுத்து விடுவார்கள்.

சீதை திருப்பி கொடுப்பதோ (தானம்), சமாதானமோ, பேதமோ இங்கு தேவையே இல்லை. தேவைப்பட்டால் போர் செய்வோம்.

நம்மை எதிர்த்து எவன் வந்தாலும், அவன் மீது நம் ஆயுதங்கள் பாயும்"

என்று ராவணனுக்கு சாதகமாக பேசினான்.




மஹாபார்ஷ்வன் பேசிய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து, ராவணன் அவனுக்கு பதில் அளித்தான்.

"மஹாபார்ஷ்வா! நான் சொல்வதை கவனி. இது எனக்கு மட்டுமே இருந்த ரகசியம்.

மஹாபார்ஷ்வ நிபோதம் த்வம் 

ரஹஸ்யம் கிஞ்சித் ஆத்மன: 

- வால்மீகி ராமாயணம்

இது பல காலங்கள் முன் நடந்த ஒரு சம்பவம். நானே அதை உனக்கு சொல்கிறேன்.

சிர வ்ருத்தம் ததாக்யாஸ்தே 

யத் அவாப்தம் மயா புரா

புஞ்சிகஸ்தலா என்று ஒரு தேவ கன்னிகை, சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்ம தேவனை பார்க்க ஆகாய மார்க்கமாக அக்னியை போன்று சென்று கொண்டிருந்தாள்.

பிதாமஹஸ்ய பவனம் 

கச்சந்திம் புஞ்சிகஸ்தலாம் | 

சஞ்சூர்யமானாம் அத்ராக்ஷம் 

ஆகாசோ அக்னி சிகாமிவ ||

அவளை பலாத்காரம் செய்து அனுபவித்தேன்.

கலங்கிய குட்டை போல ஆன அவள், ப்ரம்ம தேவன் இருக்கும் சத்ய லோகத்துக்கு ஓடினாள்.

சா பிரசஹ்ய மயா புக்தோ

க்ருதா விவசனா தத: | 

ஸ்வயம்பு பவனம் ப்ராப்தா

லோலிதா நளினி யதா ||

மஹாத்மாவான ப்ரம்ம தேவன் நடந்ததை அறிந்து கொண்டார்.

என் மீது கோபப்பட்டு என்னை சபித்தார்.

தஸ்ய தச்ச ததா மன்யே

ஞாதம் ஆஸீன் மஹாத்மனா |

அத சங்குபிதோ தேவோ மாம்

இதம் வாக்யம் அப்ரவீத் ||

'இனி எந்த ஒரு பெண்ணையாவது பலாத்காரம் செய்து கெடுக்க நீ முயன்றால், உன் தலை சுக்கு நூறாகி போகட்டும்' என்று சொல்லி விட்டார்.

அத்ய ப்ரப்ருதி யாம் அந்யாம்

பலான் நாரீம் கமிஸ்யாமி |

ததா தே சதகா மூர்கா

பலிஸ்யதி ந சம்சய: ||

இந்த சாபத்தின் பயத்தால் தான், சீதையை பலாத்காரம் செய்யாமல் இன்று வரை இருக்கிறேன்."

இத்யஹம் தஸ்ய சாபஸ்ய

பீத: ப்ரசபம் ஏவ தாம் |

நாரோபயே பலாத் சீதாம்

வைதேகீம் சயனே சுபே ||

என்று பதில் சொன்னான்.


எப்படிப்பட்ட கீழ்த்தரமான புத்தி கொண்ட ராவணன்!! என்று அறிந்து கொள்ளலாம்.

இப்படி, 

கீழ்த்தரமான புத்தி கொண்ட ராவணன், சாபத்துக்கு பயந்து, பிறர் மனைவியான சீதையை விடவும் மனம் இல்லாமல், 'ஒரு வருட காலம் தந்தாவது, சீதையின் மனதை மாற்றி விட வேண்டும்' என்று முயற்சி செய்து கொண்டிருந்தான்.




"பிறர் மனைவியை தொட நினைத்த ராவணனை ஆதரிப்பவன், எத்தனை கீழ்த்தரமானவனாக இருக்க வேண்டும்?" 

என்று நாம் தீர்மானிக்கலாம்.


தன் சொந்த சகோதரனனாலும், பலம் பொருந்தியவனனாலும், செல்வாக்கு மிகுந்தவனனாலும், அரசனே என்றாலும்

பிறர் மனைவியை அபகரித்து வைத்து இருந்த ராவணனை, மீண்டும் 3வது முறையாக சொல்லி பார்த்தார் விபீஷணன்


சபையில் அனைவருக்கு எதிராக எட்டி உதைத்து, 'நீ அந்த ராமனிடமே போ!' என்றான் ராவணன்.

'கீழ்தரமான இவனிடம் இனியும் இருக்க கூடாது' என்று 

விபீஷணன் ராமபிரானை சரண் அடைவோம் என்று முடிவு செய்து கிளம்பினார்.

சாபத்துக்கு பயந்த இந்த பேடி ராவணனை, உயர்த்தி புகழும் சிலரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...

Friday 14 August 2020

பொறுமையின் லாபம் என்ன?.. வால்மீகி ராமாயணம் பதில் சொல்கிறது.. தெரிந்து கொள்வோம்.

கஷ்டம் வரும்போது, நாம் எதை கடைபிடிக்க வேண்டும்?..


ராமாயணத்தில், "14 வருட வனவாசம் முடித்துக்கொண்டு, ராமபிரான் பரத்வாஜ ரிஷியின் ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.. நீங்கள் ராமபிரானை வெகுசீக்கிரத்தில் பார்க்க போகிறீர்கள்" 

என்று ஹனுமான் பரதனை பார்த்து சொன்னார்.

தசரதர், ராமபிரான் பிரிவை தாளமுடியாமல் தேகத்தை விட்டு, சொர்க்க லோகம் சென்று விட்டார்.


பரதன், கௌசல்யா, அயோத்தி மக்கள் என்று அனைவரும் மீள முடியாத சோகத்தில் மூழ்கினார்கள்


"பொறுமையால்" 14 வருடங்கள் உயிர் தரித்து இருந்தனர்.


14 வருடம் தானும் மரவுரி அணிந்து, ராமபிரானுக்காக காத்து இருந்த பரதன், ஹனுமானை பார்த்து சொல்கிறார்...


கல்யாணி பத காதேயம் 

லௌகிகீ ப்ரதிபாதி மே!

ஏதி ஜீவந்தம் ஆனந்தோ 

நரம் வர்ஷ சதாதபி!!

- தமிழர் "வால்மீகி ராமாயணம்"


कल्याणी बत गाथेयं लौकिकी प्रतिभाति में !

एति जीवंतम आनंदो नरं वर्ष शतादपि !!

- valmiki ramayan





அர்த்தம்:

"பல வருடங்கள் ஒருவனுக்கு கஷ்ட காலமாக அமைந்தாலும், பொறுமையை கடைபிடித்து வாழ்ந்து வந்தால், நிச்சயமாக பேரானந்தம் இவனை வந்து சேரும்.

இந்த வாக்கியம் இன்று சத்தியமாக ஆயிற்று !!"

என்று பரதன் சொல்கிறார். 


Meaning:

"If one survives difficult times patiently, Joy comes to one even after many years.

This saying is auspicious."

Says bharat (brother of rama)


பொறுமையை இழக்கும் போது, மனதுயர் அதிகமாகும், ஆயுள் குறையும்.

கஷ்டங்கள் வரும்போது, நாம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.


அன்பில் என்ற ஊரில் அவதரித்து, திருநீர்மலையில் முக்தி பெற்ற "தமிழர் வால்மீகி" உலகுக்கே ராமாயணம் கொடுத்தார். 


தமிழர் வால்மீகி த்ரேதா யுகத்தில் பொது மொழியான சமஸ்கரிதத்தில் எழுதினார்.


"தமிழில் வால்மீகியின் ராமாயணத்தை எழுதுவோம்" என்று கலி யுகத்தில் இன்னொரு தமிழ் புலவன் நினைத்தார்.

கம்ப ராமாயணமும் கிடைத்தது.


ராமாயணத்தை கொடுத்த தமிழர் வால்மீகியால், உலக மக்களுக்கும், உண்மை தமிழர்களுக்கும் பெருமை. 

ராமபிரானே "பரவாசுதேவன்" என்று நிரூபிக்கும் ஸ்லோகம்.. வால்மீகி ராமாயணம்

ராமபிரானே பரவாசுதேவன் என்று நிரூபிக்கும் ஸ்லோகம்.. வால்மீகி ராமாயணம்.
இந்த சிறிய ஸ்லோகத்தை நாம் தினமும் சொன்னால், தமிழர் வால்மீகியை ஆனந்தப்படுத்தும், ராமாயணம் படித்த திருப்தியும் உண்டாகும்..

ப்ரியதே சததம் ராம: ச ஹி விஷ்ணு சனாதன: !
ஆதி தேவோ மஹாபாகு ஹரி நாராயண ப்ரபு: !
சாக்ஷாத் ராமோ ரகு ச்ரேஷ்ட:
சேஷோ லக்ஷ்மண உச்யதே !
- வால்மீகி ராமாயணம் (யுத்த காண்டம் - பட்டாபிஷேகம்)




அர்த்தம்:
அன்பே வடிவான ராமபிரானே காலத்துக்கும் அப்பாற்பட்ட விஷ்ணு.
நீண்ட கைகள் கொண்ட, ரகு குலத்தில் உதித்த ராமரே, ஆதி தேவனான ஹரி நாராயணன்.
நாராயணன் சயனித்து இருக்கும் ஆதிஷேஷனே லக்ஷ்மணன்.

அன்பிலில் அவதரித்து, திருநீர்மலையில் முக்தி பெற்ற "தமிழர் வால்மீகி" உலகுக்கே ராமாயணம் கொடுத்தார்

தமிழர் வால்மீகி த்ரேதா யுகத்தில் பொது மொழியான சமஸ்கரிதத்தில் எழுதினார்.

"தமிழில் வால்மீகியின் ராமாயணத்தை எழுதுவோம்" என்று கலி யுகத்தில் இன்னொரு தமிழ் புலவன் நினைத்தார்.
கம்ப ராமாயணமும் கிடைத்தது.

ராமாயணத்தை கொடுத்த தமிழர் வால்மீகியால், 
உலக மக்களுக்கும், உண்மை தமிழர்களுக்கும் பெருமை.

Monday 6 January 2020

ராக்ஷஸர்கள் வானரர்கள் யார்?...மனிதர்களை விட பலசாலிகளான இவர்கள் எப்படி அழிந்தார்கள்? அறிவியல் கண்டுபிடிப்புகள் இது போன்ற மனிதர் வர்கம் இருந்தது என்று கண்டுபிடித்து சொல்கிறதே! அறிவியல் சொல்வதை ஹிந்துக்களை பார்க்க வேண்டாமா?ராமாயணம் நிரூபிக்க படுகிறதே!

"ராக்ஷஸர்கள்" என்று அழைக்கப்பட்ட ஜாதி இன்று இல்லை.
அதே போல,
"வானரர்கள்" என்று அழைக்கப்பட்ட ஜாதியும் இன்று இல்லை.
ஆனால் "மனிதர்கள்" என்ற ஜாதி அன்றும் இருந்துள்ளது.. இன்றும் இருக்கிறோம்.




வானரர்கள், ராக்ஷஸர்கள் 'இருவருமே மனிதர்களை போல தான் இருந்தார்கள்..'
ஆனால்,
'மனிதர்களை விட பன்மடங்கு பலம் பொருந்தியவர்களாக இருந்தார்கள்' என்று நம் ராமாயணத்தில் காட்டப்படுகிறது.
வானத்தில் பறக்கும் சக்தியுடன், 
குரங்கு போலவும் மனிதன் போலவும் தேவைக்கு ஏற்றவாறு உருமாறி கொள்ளும் மாய சக்தி கொண்ட, 
மிகவும் பலசாலிகளாக இருந்த மனிதர்களை (நரர்கள்) - 
"வானரர்கள்" என்று அழைத்தனர்.

நர (மனித) மாமிசத்தை அப்படியே பச்சையாக சாப்பிடும், 
உருவத்தை சாதாரண மனிதனை போன்று மாற்றி கொள்ளும் சக்தி கொண்ட, 
ராக்ஷஸ ரூபத்தில் உயிர் நடுங்கும் உருவத்துடன், மாய சக்தி உடையவர்களாக, 
தனக்கு தேவைப்படும் போது எந்த அதர்மமும் செய்ய துணிந்தவர்களாக, 
எதையும் செய்ய துணிந்தவர்களாக, 
மனிதர்கள் நல்ல காரியங்கள் செய்தால் அவர்களை கொலை செய்து அப்படியே விழுங்கவும் துணிந்தவர்களாக, 
படித்தவர்களாகவும், தவம் செய்து பாவங்களை போக்கி கொள்ளும் சக்தி உள்ளவர்களாகவும், 
மஹா பலசாலிகளாகவும் இருந்த மனிதர்களை -
"ராக்ஷஸர்கள்" என்று அழைத்தனர்.

12 லட்சம் வருடம் முன், த்ரேதா யுகத்தில் நடந்த ராமாயண சமயத்தில்,
மனிதர்களை விட பலசாலியான, வானில் பறக்கும் சக்தி கொண்ட "வானரர்கள்" என்ற ஜாதி இருந்தது தெளிவாக சொல்லப்படுகிறது.
அதே போல,
மனிதர்களை விட பலசாலியான, நர மாமிசம் சாப்பிடும், தனக்காக எதையும் செய்ய கூடியவர்களான, மாய சக்தி உடையவர்களான, "ராக்ஷஸர்கள்" என்ற ஜாதி இருந்தது பற்றியும் தெளிவாக சொல்லப்படுகிறது.
மனிதர்களில் உயர்ந்த "விஸ்ரவஸ்" என்ற ரிஷிக்கும், த்ருணபந்து என்ற ராஜாவின் (ராஜரிஷி ஆனவர்) பெண்ணான "இடவிடா" என்பவளுக்கும் "குபேரன்' பிறந்தான்.
அவன் தேவர்களில், யக்ஷர்களின் தலைவனானான்.
பூலோகத்தில், இலங்கையில் ஆட்சி புரிந்து வந்தான்.

"விஸ்ரவஸ்", ராக்ஷஸ குலத்தில் பிறந்த "கேகசி" என்பவளையும் மணந்தார்.
இவர்களுக்கு நேபாளத்தில் உள்ள சாலிக்ராம என்ற தேசத்தில், ராக்ஷஸனாக பிறந்தார்கள்  "ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை" போன்றவர்கள்.
குறிப்பாக "ராவணன், சூர்ப்பனகை" இருவரும் 100 சதவீதம் "ராக்ஷஸ சக்தியுடன், ராக்ஷஸ குணத்துடன்" இருந்தனர்.
விபீஷணன் ராக்ஷஸ சக்தியுடன் இருந்தாலும், குணத்தில் மனித குணத்துடன் ஒத்து இருந்தான். தர்மமாதர்மம் பேசுவான்.

ராவணன் தன் தந்தையிடம் பூரணமாக வேதம் கற்றவன்.
ராவணன், குபேரன் சகோதர முறை.
புலஸ்திய ரிஷி இவர்களுக்கு தாத்தா முறை.
ராவணன் 'புலஸ்திய கோத்திரம்'.

தனக்கு தேவை என்றால், எந்த காரியமும் செய்ய துணிபவர்கள் ராக்ஷஸர்கள்.
யாருக்கும் அடங்காதவர்கள்.
ராவணன் தன் தம்பி என்று கூட பார்க்காமல், குபேரனை அடித்து துரத்தி, அவன் வைத்து இருந்த இலங்கையை பிடித்தான். அவன் வைத்து இருந்த குபேர சொத்தை பிடுங்கி, புஷ்பக விமானத்தையும் (flight) பிடுங்கி கொண்டான்.
மேலும்,
நர மாமிசம் பச்சையாக சாப்பிடுபவன் ராவணன்..
மாய சக்தி கொண்டவன்.
பொதுவாகவே ஒரு தலை, 2 கைகளுடன் இருக்கும் ராவணன், மஹா பலசாலிகளான, யாருக்கும் அடங்காத ராக்ஷஸர்கள் கூட்டத்துக்கு "தலைவன்" என்று காட்டி கொள்ள, சபைக்கு மட்டும், 10 தலைகளுடன், 20 கைகளுடன் வருவான்.
ராக்ஷஸ கூட்டமே ராவணனை பார்த்து நடுநடுங்கும்.
மேலும்
'போர் சமயத்தில் எதிரிகளை பயமுறுத்த, 10 தலைகளுடன், 20 கைகளுடன் வருவான்' என்று வால்மீகி ராமாயணம் தெளிவாக காட்டுகிறது.




ஹனுமான் கடலை தாண்டி, இலங்கையில் சீதையை தேடிய போது, ராவணன் அவன் அரண்மனையில் ஒரு தலையுடன், 2 கைகளுடன் தான் படுத்து இருந்தான் என்று காட்டப்படுகிறது.
இதே ராவணன்,
சீதை அபகரித்து, ஜடாயுவுடன் போர் செய்யும் போதும், 
ராமபிரானிடம் போர் புரியும் போதும், 
10 தலைகளுடன், 20 கைகளுடன் தன்னை காட்டினான்.
மாய சக்தி நிறைந்தவன்.
செய்யும் பாவங்களுக்கு கடுமையான தவம் செய்து, பாவத்தை போக்கி கொள்ளும் சக்தியும் உடையவன் ராவணன்.

சீதையை இலங்கை இழுத்து வந்து, "10 மாதத்தில் தன்னை ஏற்று கொள்ள மறுத்தால், இவளை தனக்கு இரவு உணவாக வெட்டி சாப்பிட ஏற்பாடு செய்" என்று அவளை சுற்றியுள்ள ராக்ஷஸ பெண்களிடம் சொல்லி செல்கிறான்.

கும்பகர்ணன் தூக்கத்திலிருந்து எழுப்படும் போது, 100 பன்றிகளை விழுங்கி மேலும் பல மாமிசங்களை விழுங்கினான் என்று சொல்லப்படுகிறது.
இவனுடைய சாதாரண உடலே 100 அடிக்கு மேல் இருந்தது என்று காட்டப்படுகிறது. இதை தவிர மாய சக்தியும் கொண்டவன் கும்பகர்ணன்.

இரவிலிலும் கண் தெரியும் சக்தி உள்ளவர்கள் ராக்ஷஸர்கள். 
மனிதர்களை வெறுப்பவர்கள். 
முக்கியமாக மனிதர்களில் நல்ல காரியங்கள் செய்தால், அனைவரையும் நர மாமிசமாக சாப்பிட்டு விடுபவர்கள் ராக்ஷஸர்கள்.
வானரர்களில் "ஹனுமான்" மிகவும் பலசாலி, பாரத மண்ணிலிருந்து இலங்கை வரை தாண்டும் பலசாலி. மாய சக்தி கொண்டவர். ஆனால், சாத்வீகர்.
வானரர்களில் "வாலி" மஹா சக்தி வாய்ந்தவன். அறிவு குறைந்தவன். அதர்மம் செய்பவன். 
ஆனால் ராக்ஷஸர்களை போல மனிதர்களை ஹிம்சிப்பவர்கள் அல்ல. மனிதர்களை போலவே இரவில் கண் தெரியாதவர்கள்.

ராக்ஷஸர்கள் பலத்துக்கு வானரர்கள் தூசுக்கு சமானமானவர்கள்.
ராக்ஷஸர்கள் மனிதர்களை மதிக்கும் அளவில் கூட வைக்கவில்லை.

'தன் 10 தலைகளையும் அறுத்து, ராஜசமான கோரமான யாகம் செய்து, ப்ரம்ம தேவனை அழைத்தான்' ராவணன்.
ப்ரம்ம தேவன் இவன் தவ வலிமைக்கு பணிந்து காட்சி கொடுக்க, "தேவர்கள், யக்ஷர்கள், கிண்ணரர்கள் என்று யாராலும் தான் சாக கூடாது" என்று அடுக்கி கொண்டே போன ராவணன், வானரர்களையும், மனிதர்களையும் சொல்லவில்லை.

மனிதனால், ராக்ஷஸ குலத்தில் உள்ள கடைசி ராக்ஷஸனை கூட எதிர்க்க முடியாது என்பதால், மனிதனை பற்றி அவன் நினைவில் கூட இல்லை.
பரமாத்மா நாராயணன் மனிதனாக பிறந்து, ப்ரம்ம தேவன் கேட்டு கொண்ட பிரார்த்தனைக்காக ராவணனை மனிதனாகவே இருந்து ஒழித்தார்.
ராவணன் அழிந்தாலும், ராக்ஷஸர்கள் பிறகும் இருந்தார்கள்.
இலங்கையில் மிச்சப்பட்ட ராக்ஷஸர்களுக்கு விபீஷணன் அரசனாகி, இலங்கையை ஆண்டான்.

12 லட்சம் வருடம் முன் நடந்த இந்த ராமாயண நிகழ்வில் சொல்லப்படும் இந்த மூன்று பேரை, இன்றைய ஆராய்ச்சி மூலம்

  1. Homo-erectus,
  2. Homo-neanderthal,
  3. Homo-sapiens (human)

என்று 3 வித மனிதர்கள் இருந்தார்கள் என்று கண்டுபிடிக்கிறார்கள்.
'Homo-erectus என்று சொல்லப்பட்ட இவர்களின் மண்டை ஓடு ஆப்ரிக்கா போன்ற தேசங்களில் ஆரம்பித்து பாரத தேசம் வரை இருந்தது'
என்று கண்டுபிடித்த இவர்கள், ஆப்ரிக்கா கலாச்சாரத்தை மட்டுமே கொண்டு இவர்கள் பலசாலிகளாகவும், கொஞ்சம் நல்லவர்களாகவும் இருந்தனர் என்று மேலோட்டமாக சொல்கிறார்கள்.
Homo-erectus என்று சொல்லப்பட்டவர்கள், ஆப்பிரிக்க முதல் இந்திய தேசம் வரை பரவி இருந்தார்கள் என்று மட்டும் இவர்கள் கண்டுபிடிப்பு நின்று விட்டது. இவர்கள் 6 லட்சம் வருடங்கள் முன்பு வரை இருந்தார்கள் என்று சொல்கிறது இன்றைய ஆராய்ச்சி.




Homo-neanderthal என்று சொல்லப்பட்டவர்கள் தான் "ராக்ஷஸர்கள் " என்று நாம் சிறிது நம் ராமாயண சரித்திரத்தை படித்தாலேயே புரிகிறது. 
இன்றைய ஆராய்ச்சியின் மேலோட்டமான அனுமானத்தின் படி "இப்படி தான் இவர்கள் இருந்தார்கள்" என்று காட்டுகிறது இன்றைய விஞ்ஞானம்.




இந்த உருவங்களைஇவர்கள் பலத்தை பார்த்தால், ராமாயணம் சொல்லும்  சூர்ப்பனகை, ராக்ஷர்கள் குணத்துடன் ஒத்து போகிறது. 
இந்த ஆராய்ச்சிகள் ஐரோப்பா கண்டத்தில் மட்டுமே செய்யப்பட்டதால், Homo-neanderthal என்று சொல்லப்பட்ட இவர்களை போன்றே வர்ணிக்கப்பட்ட்ட ராக்ஷஸர்களை பற்றி ராமாயணத்தில் சொல்லி உள்ளதை இவர்கள் ஆராய்ச்சி செய்யவில்லை என்று தெரிகிறது.

"Homo-erectus" என்று சொல்லப்பட்டவர்கள் தான் "வானரர்கள்" என்று நாம் சிறிது நம் ராமாயண சரித்திரத்தை படித்தாலேயே புரிகிறது.

12 லக்ஷம் முன் த்ரேதா யுகத்தில் நடந்ததாக சொல்லப்படும் இந்த நிகழ்வில் இவர்கள் இந்திய மண்ணில் யார்? எப்படி இருந்தார்கள்? என்று அறிய முடிகிறது.

ஆப்பிரிக்காவில் இந்த Homo-erectus மனிதர்களின் எலும்புகள் கிடைத்ததால், இவர்கள் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தனர் என்று சொல்லி, நின்று விட்டனர் நவீன ஆராய்ச்சியாளர்கள்.

இந்தியாவில் Homo-erectus  இருந்தார்கள் என்று சொல்லும் இவர்கள், இங்கு எப்படி இருந்தார்கள் என்று ஏன் ஆராய்ச்சி செய்யவில்லை?
காரணம்,
பாரத தேசத்தின் சரித்திரத்தை கோரி, கஜினி போன்ற இஸ்லாமியர்கள் நுழைவதற்கு முன் சென்று ஆராய வெளிநாட்டினர் தயார் இல்லை. 

உலகமே பிச்சைக்கார நாடாக இருந்த போது, 
பாரத மக்கள் சுயசார்புள்ளவர்களாக, மிகவும் வலிமையுள்ள, செல்வ செழிப்புள்ள, கலாச்சாரம் மிக்க மனிதர்களை கொண்ட நாடாக இருந்தது.
பாரத நாட்டை ஆராய்ச்சி செய்வது,
பாரத மண்ணின் கலாச்சார பெருமையை, ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாசங்களை உண்மை என்று சொல்ல வேண்டி வரும் என்பதால் இந்தியாவில் Homo-erectus  இருந்தார்கள் என்று சொல்லும் இவர்கள், இங்கு எப்படி இருந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்யவில்லை.

"பாரத மக்களை ஹிந்துக்களாக வாழ விடக்கூடாது" என்று இருக்கும் மேலைநாடுகளிடம், பாரத மண்ணில் நடந்த சரித்திரங்களை பிரபலப்படுத்துமா!! என்று எதிர்பார்ப்பதே அறிவீனம்.

பாரத மண்ணில் பிறந்த நாமாவது, நம் தேசத்தின் உண்மையை, பெருமையை அறிந்து கொள்ளலாமே, நாம் உலகுக்கு சொல்லலாமே!

12 லட்சம் வருடம் முன் இந்த மூவரும் யார்?
பாரத மண்ணில் இருந்து இவர்கள் என்ன செய்தார்கள்?
என்று ராமாயணத்தில், நம் கண் முன்னே காட்டி விடுகிறார், தமிழன் வால்மீகி.

  1. Homo-erectus (வானரர்கள்)
  2. Homo-neanderthal (ராக்ஷஸர்கள்)
  3. Homo-sapiens (human) (மனிதர்கள்)

என்று 3 வித மனித உருவம் கொண்டவர்கள் இருந்தார்கள். இவர்கள் இப்படி பட்டவர்கள்.. இப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள்.
அனைவரும் பொது மொழியான சம்ஸ்க்ரிதம் அறிந்தவர்கள் என்று காட்டி, இன்றைய ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பை, அன்றே எழுதி வைத்த்தார் வால்மீகி என்ற தமிழன். 

பாரத மக்களுக்கு காலம் காலமாகவே இந்த ஆராய்ச்சிகளின் உண்மை தெரிகிறது.
மனிதர்கள் பெரும்பாலும் சாதுக்கள். சக்தி குறைந்தவர்கள். தர்மத்தில் இருக்க ஆசைப்படுபவர்கள். மனிதர்களிலும் பொறமைக்காரர்கள் உண்டு.
இன்று இருக்கும் நாம் அனைவருமே மனிதர்கள் தான்.

ராக்ஷஸர்கள் பெரும்பாலும் பயங்கரமானவர்கள்.. நர மாமிசம் சாப்பிடுபவர்கள். எதையும் செய்ய துணிந்து விடுவார்கள். மாய சக்தி கொண்டவர்கள்.
தர்மத்தில் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைக்கும் சில நல்லவர்களும் இருப்பார்கள். ஆனால் இவர்கள் மிக குறைவே.

"இல்வலா, வாதாபி" என்ற இரு மாயாவி ராக்ஷஸர்கள், "அகத்தியர்" போன்ற தமிழ் முனியை நர மாமிசமாக சாப்பிட நினைத்து, தமிழ் முனி அகத்தியரின் தவ வலிமையால் அழிந்தனர். 

மாய சக்தி நிறைந்த ராக்ஷஸர்களும், மனிதர்களும் எந்த விதத்திலும் சமம் இல்லை.
மனிதர்களையே மதிக்காதவர்கள் ராக்ஷஸர்கள். 
இன்று இருக்கும் சில வேடிக்கை மனிதர்கள், தங்களை ராவணன் பரம்பரை என்று கூறிக்கொள்கிறார்கள். இது வேடிக்கையிலும் வேடிக்கை.

வானரர்களும் குணத்தில் எல்லை மீற கூடியவர்கள்.. வெகுளிகள்.. 
அதே சமயம், ஹனுமானை போன்ற சில வானரர்கள் அதி புத்திசாலியாகவும், இருந்தார்கள்.

இது வரை,
யார் Homo-erectus (வானரர்கள்)?
யார் Homo-neanderthal (ராக்ஷஸர்கள்)?
யார் Homo-sapiens (human) (மனிதர்கள்)?
இவர்கள் உண்மையில் எப்படி இருந்தார்கள்? என்று ராமாயணம் காட்டியதை பார்த்தோம்.

இனி,
"பொதுவாக பலசாலிகள் தான் நிலைப்பார்கள்" என்று இந்த இன்றைய அறிவியல் சொல்கிறது.
"Survival of fittest" என்று சொல்கிறது.

"உலகில் வாழ வேண்டுமென்றால், எப்படியாவது போட்டி போட்டு ஜெயித்து காட்டு" என்று பயமுறுத்துகிறது..

இதன் அடிப்படையில் பார்த்தால்,
Homo-sapiens (human) என்ற மனிதர்களை விட பலமடங்கு பலசாலியாக இருந்த Homo-erectus (வானரர்கள்) ஜாதியும், Homo-neanderthal (ராக்ஷஸர்கள்) ஜாதியும், எப்படி இன்று இல்லாமல் போனார்கள்?





பலசாலிகளான ராக்ஷஸர்கள், பலசாலிகளான வானரர்கள்எப்படி அழிந்து இருக்க வாய்ப்பு உண்டு?
பலம் குறைந்த "மனிதர்கள்" இன்றுவரை எப்படி இருக்கிறார்கள்?

உலகத்தில் பலம் வாய்ந்தவர்கள் தான் அழிவார்கள் என்பதே உண்மை.
சாதுக்கள், தன் சாது குணத்தாலேயே அழிவில்லாமல் இருப்பார்கள் என்பதே உலக உண்மை.

பலம் வாய்ந்த யாழி, டைனோசர் போன்ற பலம்வாய்ந்த மிருங்கங்கள் இன்று இல்லை.

புலி சிங்கம் போன்ற பலம்வாய்ந்த மிருங்கங்கள், இன்று குறைந்து விட்டது.

ஆச்சர்யம் என்னவென்றால், புலி, சிங்கம் குறைந்து விட்டது.. மான்கள் இன்றும் இருக்கிறது..

எப்படி பலம் பொருந்திய ராக்ஷஸர்கள், வானரர்கள் காணாமல் போனார்கள்? காணாமல் போயிருப்பார்கள்?
இன்று அழிந்து வரும் புலி இனத்தை கவனித்தாலேயே, நாம் காரணத்தை புரிந்து கொள்ளலாம்.

புலியின் எண்ணிக்கை மனிதர்கள் வேட்டை ஆடுவதால் உண்மையில் குறைவதில்லை..
மாறாக, புலிகளுக்குள்ளேயே பொறாமை உண்டு, புலிகளுக்கு உள்ளேயே சண்டைகள் ஏற்பட்டு விடும். 
சம பலத்தில் உள்ள சிங்கமும் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்ளும் 
தங்கள் இனத்தை தாங்களே அழித்து கொள்ளும் குணம் கொண்டவை.

மான்களுக்கு மனிதனாலும் ஆபத்து, மிருகங்களாலும் ஆபத்து.
ஆனால் அவைகளுக்குள் சண்டை செய்து சாவது கிடையாது. கூடி வாழ கூடியவை. சாது மிருகங்கள். 

பலம் வாய்ந்த ராக்ஷஸர்கள், வானரர்கள், பலம் குறைந்த மனிதர்களால் அழிக்கப்பட்டு இருக்கவே முடியாது. 
வாலியும் சுக்ரீவனும் சகோதர்கள். இருந்தாலும் கொலை செய்யும் அளவுக்கு தங்களுக்குள் சண்டை இட்டு கொண்டனர்.

ராவணன், தன் சொந்த மாமன் "மாரீசனை" மாய மான் போல சென்று, ராமரை சீதையை விட்டு வெகு தூரம் இழுத்து செல்ல சொன்னான்.

"ராமபிரான் தன்னை நிச்சயம் கொன்று விடுவார்" என்று பயந்த மாரிசன் மறுக்க,  சீதையை அபகரிக்க திட்டமிட்ட ராவணன், "மறுத்தால் மாமன் என்று கூட பார்க்காமல் கொன்று விடுவேன்" என்று மிரட்டி அனுப்புகிறான்.
மாரீசன் ராமபிரானால் இறந்தும், துளியும் அதை பற்றி கவலைப்படவில்லை ராவணன்.
அதேபோல,
"பிறர் மனைவியை பேடி தனமாக கொண்டு வந்ததை கண்டித்த தன் சொந்த தம்பியை, சபையில் அனைவரும் பார்க்க எட்டி மிதித்தான்" ராவணன். 

இந்த உதாரணங்களே பலம் பொருந்திய இவர்கள், ஏன் காலப்போக்கில் அழிந்தார்கள் என்பதை விளக்குகிறது. 

எத்தனை பூகம்பம் வந்தாலும், மான்களை போன்ற, பலம் குறைந்த மனிதர்கள் இன்று வரை வாழ்கின்றனர்.

மனிதர்களில் கூட, ராக்ஷஸ குணம் கொண்ட மனிதர்களை  போலி மதங்கள் உருவாக்குகிறது. 
ஹிந்து மதத்தை அழிக்க, 
ஹிந்து தர்மத்தை அழிக்க, 
சாதுக்களான ஹிந்துக்களை மதம் மாற்ற 1000 வருடங்களாக முயற்சி செய்தும், 
ஹிந்துக்கள் அழியாமல், இன்று கூட 80 கோடி ஹிந்துக்கள் பாரத மண்ணில் இருக்கின்றனர். 
உலகம் முழுவதும் பார்த்தால், இன்னும் பல கோடி ஹிந்துக்கள் பரவி கிடக்கின்றனர். 

அழிக்க வந்த போலி மதங்கள், அழிக்க முடியாத ஹிந்து தர்மத்தை பார்த்து மலைத்து நிற்கின்றன. 

"நரமாமிசம் உண்ணும்" "மாய சக்திகள் கொண்ட" ராக்ஷஸர்கள் அழிந்தாலும், 
"ஆகாயத்தில் பறக்கும்", "மாய சக்திகள் கொண்ட" வானரங்கள் அழிந்தாலும், 
மனிதர்களாகிய நாம் அழியவில்லை. 
மனிதர்களில், பிற மதங்களை பார்த்து பொறாமைப்படாத சாதுக்களான,  ஹிந்துக்கள் என்றுமே அழிவதில்லை.




உருவாக்கப்பட்ட போலி மதங்கள், பொறாமை குணத்தாலேயே அழிந்து போகும். 

அறிவுள்ள மனிதர்கள், பொறாமையை தூண்டும், பிற வழிபாடுகளை இகழும், ஊருக்கு உதவாத அறிவுரையை கூறும்  போலி மதங்களை, பௌத்த மதம் பரவி, பிறகு பாரத மண்ணை விட்டு விரட்டப்பட்டது போல, அழிந்து போகும்.

ஹிந்துக்கள் அழிவதே இல்லை.
12 லக்ஷம் வருடம் முன்பு இருந்த அகத்தியரும், ராமரும் வாழ்ந்த சனாதன தர்மம் வாழ்க்கை முறையையே, இன்றும் ஹிந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்கிறோம் நாம்.

ஹிந்துவாக வாழ்வதில் பெருமை கொள்வோம்.   
வாழ்க ஹிந்துக்கள்.


Saturday 24 November 2018

ஞானத்தை விட அன்பு உயர்ந்தது ராமாயணத்தில் நடந்த ஒரு சம்பவம்.

தெய்வத்திடம் ஏற்படும் ப்ரேமையை (அன்பை), ஞான உபதேத்தால் வீழ்த்தவே முடியாது.
பிரேமை (அன்பு) தான் ஜெயிக்கும்.


இதற்கு சான்றாக ராமாயணத்தில் ஒரு சம்பவம் நடந்தது.

தசரத மகாராஜனை காண, விஸ்வாமித்ரர் அயோத்தி வந்தார்.

ப்ரம்ம ரிஷியான விஸ்வாமித்ரர் வருகையினால் சந்தோஷப்பட்டு,
"தங்கள் ஆணைக்கு காத்து கொண்டு இருக்கிறேன். உங்களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்"
என்று சொல்லி சபைக்குள் அழைத்தார் தசரதன்.
விஸ்வாமித்ரர் மிகவும் சந்தோஷப்பட்டார்.
"தசரதா, எங்களை போன்ற ரிஷிகளுக்கு உலக தேவைகள் எதுவும் கிடையாது.
எங்களுக்கு ஏற்படும் தேவையை, ஒரு கஞ்சனிடம் சென்று கேட்கும் நிலையை ஈஸ்வரன் எங்களுக்கு கொடுப்பதில்லை.

எங்களை தரிசிக்கும் ஆவல் கொண்ட, எங்களுக்கு ஏதாவது உண்மையாக கொடுக்க ஆசைப்படுபவர்களிடம் மட்டுமே, எங்களை ஈஸ்வரன் அனுப்புகிறார்.

இந்த உலகத்திலேயே உன்னை போன்ற கொடையாளி கிடையாது என்று அறிவேன். நீ ப்ரம்மத்தை உணர்ந்தவன், சத்யம் தவறாதவன் என்றும் அறிவேன்.

இந்த நற்குணங்கள் உன்னிடம் இயற்கையாகவும், பரம்பரை பரம்பரையாகவும் உள்ளது.
மேலும் ப்ரம்ம ரிஷியான வசிஷ்டர் உனக்கு குல குருவாகவும், உன் வீட்டு புரோகிதராகவும் இருக்கிறார் என்பதும் உன் பெருமையை காட்டுகிறது.

நான் வந்த விஷயத்தை சொல்கிறேன்.
நானும், என்னோடு பல ரிஷிகளும் சேர்ந்து,  ஸித்தாஸ்ரமத்தில் யாகம் செய்கிறோம்.

பல நல்ல காரியங்களுக்காகவும், உலக நன்மைக்காகவும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ராக்ஷசர்கள் நடமாட்டம் அங்கு உள்ளது.
ராக்ஷசர்கள் நர மாமிசம் சாப்பிடுபவர்கள்.
இதனால் அங்கு இருக்கும் சாதுக்கள் நடமாட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.
இந்த கஷ்டத்தை போக்கி, அங்கு இருக்கும் சாதுக்களுக்கு உபகாரம் செய்ய வேண்டியது, தசரத ராஜனான உன் கடமை."
என்று சொல்லிக்கொண்டே, அங்குமிங்கும் கண்களால் ஒரு நோட்டமிட்ட விஸ்வாமித்ரர்,
"அதோ, அங்கு அழகான குடுமியுடன், நின்று கொண்டிருக்கும் உன் மூத்த மகன் 'ராமனை' என்னுடன் அழைத்து கொண்டு போய், யாகம் பூர்த்தி ஆனவுடன் திருப்பி உன்னிடமே கொண்டு வந்து விடுகிறேன்."
என்று சொல்லி முடித்தார்.

ராமன் என்ற பெயரை விஸ்வாமித்ரர் சொன்ன பிறகு, தசரதன் அதற்கு பிறகு அவர் சொன்னதை கவனித்தாரா? என்று கூட தெரியவில்லை.

"ஆகா ! காத்துக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு சேவை செய்ய ராமனை உடனே அனுப்புகிறேன்" என்று சந்தோஷமாக சொல்ல வேண்டாமோ?

"இந்த ராக்ஷஸர்களை நீங்களே சபித்து விடலாமே !
உலக நன்மைக்காக யாகம் செய்கிறீர்கள்.
நர மாமிசம் சாப்பிடும் இந்த ராக்ஷர்களை சபிப்பதும் கூட உலக நன்மை தானே?
உங்கள் தவ சக்தியால், வரும் ராக்ஷஸர்களை ஒவ்வொருத்தராகவோ, மொத்தமாகவோ பொசுக்கி விடலாமே?"
என்றார் தசரதர்.

"சபிப்பது பற்றி என்னை விட யாருக்கு தெரியும், தசரதா?
கோபப்பட்டு சபிப்பதில் எனக்கு இஷ்டமில்லை.
பொறுமையாகவே நான் இருக்கிறேன்.
எவ்வளவுக்கெவ்வளவு நான் பொறுமையை கடைபிடிக்கிறேனோ, அதை பார்த்து மற்றவர்கள் எனக்கு சக்தி இல்லையோ என்று நினைக்கின்றனர்.

கோபம் ஏற்படுவதால் பல தோஷங்கள் ஏற்படுகிறது.
கோபத்தை கட்டுப்படுத்தி, பொறுமையை கடைபிடிப்பதால், ஒரே ஒரு தோஷம் மட்டுமே ஏற்படுகிறது.

கோபத்தினால் பகை, அடிதடி, கொலை, என்று பல தோஷங்கள் ஏற்படுகிறது.

கோபத்தை அடக்கி பொறுமையை கடைபிடித்தால், ஒரே ஒரு தோஷம் மட்டுமே ஏற்படுகிறது.

அந்த தோஷம் எதுவென்றால், கோபமே இல்லாமல் பொறுமை காக்கும் கணவனை, 'அவன் பத்தினி கூட மதிக்க மாட்டாள்', என்பது தான்.

கோபமே கொள்ளாமல், பொறுமை காப்பவனிடம் ஏற்படும் ஒரே தோஷம் "உலகம் இவனை மதிக்காது" என்பது மட்டுமே.

கோபத்தினால் பல தோஷங்களை ஏற்றுக்கொள்வதற்கு பதில், 'மற்றவர்கள் மதிக்காமல் போனால் போகட்டுமே' என்று ஒரே ஒரு தோஷத்தை ஏற்றுக்கொண்டதால், பொறுமையை கடைபிடிக்கிறேன்.

அதுவும் தவிர,
'ப்ராம்மணனுக்கு' பொறுமையே லக்ஷணம்.
'க்ஷத்ரியனுக்கு' வீரமும், அதர்மம் செய்பவர்கள் மீது கோபமும் லக்ஷணம்.

நான் ப்ராம்மண தர்மத்தின் படி, பொறுமையை கடைபிடிக்கிறேன்.

நாங்கள் செய்யும் தவம், உலக நன்மையை நோக்கியே தவிர, சபிப்பதற்காக இல்லையே !

கோரமான தபசு செய்து, அதன் சக்தியை வேறொரு நல்ல காரியங்களுக்கு பிரயோகம் செய்ய இருக்கும் போது, அதை சபித்து விரயம் செய்ய விரும்பவில்லை.

நான் பொறுமையாக இருப்பதை பார்த்து, ராக்ஷசர்கள் 'எனக்கு சக்தி இல்லை' என்று நினைத்து அட்டகாசம் செய்கின்றனர்.

இந்த ராக்ஷர்களை சபித்து அழிக்கும் சக்தி இருந்தும், நான் ஏன் உன்னிடம் வந்து உதவி கேட்கிறேன்? என்று நினைத்தாய் என்றால், அதற்கு காரணம் உள்ளது.

யாகம் செய்வது உலக நன்மைக்காக.
அந்த பிரதேசமும் உன் ராஜ்யமாக உள்ளது.

உன் ராஜ்ஜியத்தில் 'ராக்ஷசர்கள் நடமாடும் இடமும் இருக்கிறது' என்பதை நீ கவனிக்க வேண்டாமா?

தேவர்களுக்கு அசுரர்களால் ஆபத்து என்றவுடன், சொர்க்க லோகம் சென்று உதவி செய்கிறாய்.
இந்த மனுஷ்ய லோகத்தில், உன் ராஜ்யத்தில், ராக்ஷஸர்கள் ரிஷிகளை நர மாமிசமாகவே அடித்து சாப்பிட்டு விடுகின்றனர்.

துஷ்டர்களை நிக்ரஹம் செய்வதும் (தீயவர்களை அடக்குவதும்),
சிஷ்டர்களை பரிபாலனம் செய்வதும் (நல்லவர்களை காப்பதும்) ஒரு அரசனின் கடமை.

உன் கடமையை நினைவு மூட்ட வந்தேனே தவிர, புகார் சொல்வதற்கு வரவில்லை.

ராக்ஷஸர்களை அடக்கி, ரிஷிகளை காக்க வேண்டியது உன் கடமை.

அந்த கடமையை நிறைவேற்ற நீ ராமனை என்னுடன் அனுப்பு. ராமனே இந்த காரியத்தை செய்யத்தக்கவன்.
உன் மகன் ராமன் உனக்கு எத்தனை அருமை என்று எனக்கு தெரியாதா!
பலவித ஷ்ரேயசை ராமனுக்கு செய்து அனுப்புவேன். என்னுடன் அனுப்பு."
என்றார் விஸ்வாமித்ரர்.


தசரதர் பதில் சொல்லாமல் இருந்தார். மேலும் நினைத்தார்,
"இவர் ஆஸ்ரமத்தில் என்ன சௌகரியம் இருந்து விட போகிறது?

நான் என் குழந்தையை வேளை தவறாமல் பார்த்து பார்த்து பாலும் பழமும் கொடுத்து, தாலாட்டி லாலனை செய்கிறேன்.

ஒரு வசதியும் இல்லாமல், இவர் என் குழந்தையை காட்டுக்கு அழைத்து கொண்டு போகிறேன் என்று சொல்கிறாரே?
அது மட்டுமில்லாமல், என் குழந்தையை ராக்ஷசர்களிடம் சண்டைக்கு அனுப்புவேன் என்று வேறு சொல்கிறாரே?

என் குமாரனுக்கு இவர் என்ன ஷ்ரேயஸ் (நன்மை) செய்து விட போகிறார்?
எனக்கு இல்லாத அக்கரை இவருக்கு இருக்கப்போகிறதா?"
என்று நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்தார்.

தசரதன் பேசாமல் இருப்பதை பார்த்து, விஸ்வாமித்ரர்,
"இவன் என் குழந்தை. இவனுக்கு ஒன்றும் தெரியாது என்று நீ நினைக்கலாம்.
இந்த ராக்ஷசர்களை ராமன் எதிர்க்க முடியுமா? என்று நீ யோசிக்கிறாய்.
நான் சத்தியமாக சொல்கிறேன், ராக்ஷசர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்.
அப்பேர்ப்பட்ட சக்தியுள்ளவன் உன் மகன். நீ கவலையே படவேண்டாம்"
என்றார் விஸ்வாமித்ரர்.

விஸ்வாமித்ரர் சொல்வது கொஞ்சம் கூட தசரதனுக்கு புரியவில்லை.

தசரதன் பார்வைக்கு 12 வயது ஸ்ரீ ராமன் குழந்தையாகவே தெரிந்தார்.

"ஸ்வாமி, என் குழந்தையை பற்றி உங்களுக்கு தெரியாது போல இருக்கிறது.
என் குழந்தை சாயங்காலம் விளையாடி கொண்டிருப்பான். விளையாடி விட்டு, அரண்மனைக்குள் வரும் போது, உள்ளே வரும் பாதை சிறிது வெளிச்சம் குறைவாக இருக்கும்.
இருட்டாக உள்ளதே என்று உள்ளே வர பயந்துகொண்டு, வாசலில் நின்று கொண்டே, 'அம்மா, அம்மா..' என்று துணைக்கு அழைப்பான் என் குழந்தை.
அவன் தாயார் வந்து கூட்டி கொண்டு உள்ளே செல்வாள்.
என் குழந்தையை பற்றி எனக்கு தெரியாதா?, ஸ்வாமி.
நீங்கள் ராக்ஷஸர்கள் முன் சண்டைக்கு கூட்டி சென்றால், பயப்படுவான், ஸ்வாமி"
என்றார்.

விஸ்வாமித்ரர், தசரதனை பார்த்து,
"தசரதா ! நம் குழந்தை தானே, நம் குழந்தை தானே என்று பார்க்காதே.
நீ ராமனை 'என் குழந்தை' என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறாய்.
குழந்தை என்று பார்த்தால், உனக்கு குழந்தையாக தான் தெரிவான்.
வேறு த்ருஷ்டியால் பார்த்தால் தான், ராமனின் பெருமை புரியும்.

'குழந்தையாக இருந்து உன்னை சுகப்படுத்த வேண்டும்'
என்று ராமன் சங்கல்பித்ததால் தான், உனக்கு அப்படி ஒரு அனுபவம் தோன்றுகிறது.

அப்படியே ஒன்றும் தெரியாத குழந்தை என்றாலும், எத்தனை நாள் இப்படியே வீட்டுக்குள் பூட்டி வைப்பாய்?

குழந்தைகளை நாலு பேருடன் பழக விட வேண்டும்.
துணிந்து வெளி உலகத்தை பார்க்க அனுப்ப வேண்டும்.
நாலு இடத்துக்கு போனால் தான் அந்த குழந்தைக்கும் சாமர்த்தியம் வருமே தவிர, வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்தால், மகா மக்காக ஆகி, நம் காலையே சுற்றிக்கொண்டு இருப்பான்.

உன் குழந்தை என்று நீ பார்த்தாலும், நீ அவனுக்கு வில் ஆயுதம் கற்று கொடுத்துள்ளாய். கல்வி மட்டும் போதுமா?
அதை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்தினால் தானே கல்வியின் பயனை அவன் அனுபவிப்பான்.
ராமனை என்னோடு அனுப்பு.

மேலும்,
தசரதா ! உன் பிள்ளையை பற்றி உனக்கு தெரியாது. எனக்கு தெரியும்.

ஜடா முடியுடன் இருக்கும் நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, ரத்ன கிரீடம் அணிந்து இருக்கும் நீ புரிந்து கொள்ள முடியாது.

ஞான யஞ்யம் செய்ய கூடிய நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, புத்ர காமேஷ்டி யாகம் செய்யும் நீ புரிந்து கொள்ள முடியாது.

காய்ந்த இலைகளை உண்டு, தவம் செய்யும் நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, ராஜ போஜனம் செய்யும் நீ புரிந்து கொள்ள முடியாது.

தர்பாஸனத்தில் அமர்ந்திருக்கும் நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் நீ புரிந்து கொள்ள முடியாது.

ஒரு குருவை உயர்ந்த ஆசனம் கொடுத்து, அவருக்கு கீழே அமர்ந்து உபதேசம் கேட்க வேண்டியிருக்க, வசிஷ்டர் போன்ற குருவை கீழே ஆசனம் கொடுத்து அமர செய்து, அவரை விட உயர்ந்த ஆசனத்தில் ராஜா என்று உட்கார்ந்திருக்கும் நீ புரிந்து கொள்ள முடியாது.

ராஜ யோகியான நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, ராஜ போகியான நீ புரிந்து கொள்ள முடியாது.

உன் நிலை வேறு, என் நிலை வேறு.

நீ ஊனக் கண்ணால் பார்க்கிறாய். நான் ஞான கண்ணால் (சாஸ்திர அறிவை கொண்டு) பார்க்கிறேன்.
வேதத்தின் பிரமாணத்தை கொண்டு, உன் பிள்ளை 'ராமன்' பரமாத்மா என்று தெரிந்து கொண்டேன்.
வேதமே வழிபடும் பரமபுருஷன் தான் உன் மகனாக பிறந்து இருக்கிறான் என்றும் அறிகிறேன்.

உன்னை பொறுத்தவரை, மிகவும் அழகாக இருக்கிறான் என்பதால், "ராமன்" என்று பெயர் வைத்தோம் என்று நினைத்து இருப்பாய்.

யோகிகள் எந்த பரப்ரம்மத்தை நோக்கி ரமிக்கிறார்களோ அந்த பரப்ரம்மம் தான் 'ராமனாக' அவதரித்து உள்ளார் என்று தெரிந்து கொள்.

இந்த ராமன், யோகிகளை ரமிக்க செய்கிறான் என்பது உன் சபையை பார்த்தாலே நீ புரிந்து கொள்ளலாம்.

போரில் புறமுதுகிட்டு ஓடாத, போர் திறன் மிக்கவன் ராமன் என்று உணர்த்த 'சத்ய பராக்ரமன்' என்று பெயர் வைத்து இருப்பாய்.

ஸ்ருஷ்டி (படைத்தல்),
ஸ்திதி (காத்தல்),
சம்ஹாரம் (அழித்தல்)
என்ற மூன்றும், உலகில் எப்பொழுதும் சத்தியமாக நிகழ்ந்து கொண்டே இருக்க செய்யும், பராக்ரமம் (திறமை) மிகுந்த பரம்பொருள், ராமனாக பிறந்ததால் தான், இவனுக்கு 'சத்ய பராக்ரமன்' என்றும் பெயர் உள்ளது என்று நீ அறிய மாட்டாய்.

இந்த ராமனின் பெருமையை நீங்கள் மட்டும் தான் அறிவீரோ? என்று நீ நினைத்தால், சொல்கிறேன் கேள்.
உன் சபையில் குலகுருவாக இருக்கும் 'வஷிஷ்டருக்கும்' இது தெரியும்.

தசரதா ! உன் குலகுருவாக இருக்கும் வஷிஷ்டருக்கும், எனக்கும் மட்டும் தான் தெரியும் என்று நினைத்து விடாதே.
உன் சபையில் குழுமி இருக்கும் அனைத்து ரிஷிகளுக்கும் தெரியும், ராமன் பரப்ரம்மம் என்று.

மேலும் கேள் தசரதா.
பொதுவாக, ரிஷிகள் காடுகளில் தவம் செய்து கொண்டிருப்பவர்கள் தானே?
இவர்கள் ஏன் உன் அரண்மனையில் இருக்கிறார்கள் என்று எப்பொழுதாவது யோசித்து பார்த்தாயா?




தவம் செய்ய ஏற்ற இடமா அரண்மனை?
ஒரு காலத்தில் தபோவனத்தில் கால் பதிந்த இந்த ரிஷிகள், இன்று தபோவனத்தை மறந்து, உன் அரண்மனையே கதி என்று இங்கேயே இருக்கின்றனர்.

உன் அரண்மனைக்கு வந்தால், நீ ராஜ போஜனம் ஏற்பாடு செய்து கொடுப்பாய், வயிறார உணவு கிடைக்கும் என்று இந்த ரிஷிகள் வரவில்லையே.
இங்கு வந்தும் தவத்திலேயே இருக்கிறார்கள்.
நீ கொடுக்கும் ராஜ போஜனத்தை இவர்கள் எதிர்பார்க்கவில்லையே?
தாங்கள் கொண்டு வந்த காய்ந்த இலைகளை கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டு, எப்பொழுது பார்த்தாலும் உன் தர்பாரில் வந்து அமர்ந்து கொண்டு உள்ளனரே?

உன் தர்பாரில் உட்கார்ந்து இருக்கும் இந்த ரிஷிகள், உன் சபைக்கு கொண்டு வரப்படும், விவாதங்கள் எதிலும் ஈடுபடுவதில்லை.
எப்பொழுதும் கண்ணை மூடி பரப்ரம்மத்தை தியானித்து கொண்டே அமர்ந்து இருக்கின்றனர்.
நீ என்ன தீர்ப்பு வழங்கினாய்? என்ன நடந்தது? என்று கூட இவர்கள் கவனிப்பதில்லை.

நீ போடும் ராஜ போஜனம் எதையும் இவர்கள் சாப்பிடுவதில்லை.
சபையில் நடக்கும் எந்த விஷயத்திலும் இவர்கள் கலந்து கொள்வதும் இல்லை.
கண்ணை மூடிக்கொண்டு எப்பொழுதும் ஜபம் செய்து கொண்டு, கண்களில் நீர் வடிய, உன் சபையில் உட்கார்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

புஷ்டியான சரீரமில்லாமல், இளைத்த உடம்புடன், வறண்ட வாயுடன், கண்களில் இருந்து கண்ணீரும், ஒட்டிய வயிருடன், இடுப்பில் மரவுரி அணிந்து, அடிக்கடி ஆனந்த கண்ணீர் விட்டு கொண்டு, உன் சபையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்களே இவர்கள்.
எந்த சுகத்தை அனுபவிக்க இவர்கள் இங்கு வந்து அமர்ந்து இருக்கிறார்கள்? என்று எப்பொழுதாவது நினைத்தது உண்டா, தசரதா?

அவர்கள் எந்த சுகத்தை அனுபவிக்க இங்கு இருக்கிறார்கள்? என்பதை நீ அறிந்து கொண்டாலே, என்ன காரணம் என்று புரிந்து கொண்டு விடலாம்.

சபையில், நீ சில சமயம் "ராமா" என்று கூப்பிடும் போது, உன் மகன் ராமன் ஓடி வந்து "அப்பா" என்று வந்து உன் முன் நிற்கும் போதும் மட்டும், இந்த ரிஷிகள் கண்களை திறந்து ராமனை பார்க்கின்றனர்.
கல்ப காலமாய் காட்டில் தவம் செய்தாலும், தரிசனம் கொடுக்க வராத பகவான், 'தசரதன் கூப்பிட்டான்' என்றவுடன், அடுத்த நொடி தரிசனம் கொடுப்பதை அறிந்து, உன்னுடன் சேர்ந்து கொண்டு தாங்களும் பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டு, உன் சபையில் வந்து அமர்ந்துள்ளனர்.

உன் புத்திரனை பார்ப்பதற்காகவே இந்த ரிஷிகள் வந்து அமர்ந்திருக்கும் போதே தெரியவில்லையா, இவன் பரப்ரம்மம் என்று.

ஒரு சாதாரண ராஜகுமாரனை பார்ப்பதற்கா இத்தனை ரிஷிகள் உன் சபையில் அமர்ந்து இருக்கிறார்கள்?
வேறு தேசங்களில் ராஜ்குமாரர்கள் இல்லையா? அங்கு போகலாமே இந்த ரிஷிகள் !

இந்த ரிஷிகள் ஏன் இங்கு வந்து அமர ஆர்வம் காட்டுகின்றனர்? என்று நீ நிதானமாக யோசித்தாலே, உனக்கு உண்மை விளங்கும்.

சாதுக்களான ரிஷிகள் எப்பொழுதும் பரமாத்மாவை தரிசிக்கவே விரும்புவார்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.
இந்த சாதுக்கள் உன் மகன் ராமனை பார்க்கவே இங்கு அமர்ந்துள்ளனர் என்று நீ புரிந்து கொள்ளும் போது, உன் மகன் பரப்ரம்மம் என்று உனக்கு புரியும்"
என்று சொன்னார் விஸ்வாமித்ரர்.


விஸ்வாமித்ரர் சொல்வதையெல்லாம் கேட்டு, தசரதர் மூர்ச்சையாகிவிட்டார்.

பக்கத்தில் இருந்த சேவகர்கள் பன்னீர் தெளித்து, விசிறி விட்டு தசரதரை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

தசரதர் உடல் தளர்ச்சியால் மூர்ச்சை ஆகவில்லை.
ராமனை கேட்கிறாரே என்ற சோகத்தில் மூர்ச்சை ஆகி இருந்தார்.

விஸ்வாமித்ரருக்கு என்ன சொல்லி இந்த சங்கடத்தில் இருந்து தப்பிக்கலாம்? என்று யோசித்து கொண்டிருந்தார்.
திடீரென்று ஒரு மனதில் ஒரு பதில் கிடைக்க, இதை வைத்து சமாளித்து விடலாம் என்று எண்ணி, உடனே எழுந்து கொண்டு,
"ஸ்வாமி, இன்னும் என் குழந்தைக்கு வயதாகவில்லை.
எந்த காரியத்தை செய்ய வேண்டுமென்றாலும், அதற்கு தகுந்த வயது உள்ளவனா? என்று பார்க்க வேண்டி இருக்கிறது. 

வாலிபனாக ஆகும் வரை, 'இவன் இன்னாரது பிள்ளை' என்று தகப்பனை வைத்து தானே அடையாளம் காட்டுவார்கள்.

என் குழந்தைக்கு 12 வயது தான் ஆகிறது.
அவனாக ஒரு காரியத்தை செய்யும் அளவுக்கு வயது இல்லை, ஸ்வாமி.
இன்னும் 16 வயது கூட ஆகவில்லையே ஸ்வாமி, என் பையனுக்கு.

அப்படியே 12 வயது குழந்தையை அழைத்தாலும், அங்கே நாடகம், விளையாட்டு நடக்கிறது என்றா அழைக்கிறீர்கள்? யுத்தத்திற்கு அழைக்கிறீர்களே !!

அப்படியே யுத்தம் என்றாலும் அவன் வயதில் ஒரு விளையாட்டு யுத்தம் அழைத்தாலும் பரவாயில்லை. ராக்ஷசர்களோடு யுத்தம் என்று சொல்கிறீர்களே?

அப்படிப்பட்ட முரட்டு தனமான யுத்தத்திற்கு நான் குழந்தை பெறவில்லையே !!

யுத்தத்திற்காகவே என் குழந்தையை பெற்று இருந்தால், அவனுக்கு "வீரபாகு, மகாபாகு, சத்ருஞ்ஜெயன்" என்றல்லவா பெயர் வைத்து இருப்பேன்.

'அழகாக இருக்கிறான்' என் குழந்தை என்று 'ராமன்' என்றல்லவா பெயர் வைத்து இருக்கிறேன்.

அழகாக இருக்கும் என் குழந்தையை பார்த்து சந்தோஷப்படாமல், இப்படி யுத்தத்திற்கு அழைக்கிறீர்களே?

ஒரு வேளை, ராமன் ராமன் என்று தவறி இங்கு வந்து விட்டீரோ?
கையில் கோடாரியுடன் சண்டைக்காகவே இன்னொரு ராமன் அலைந்து கொண்டு இருக்கிறார். நீங்கள் அவரை பார்க்க வந்து, தவறி இங்கு வந்து விட்டீர்களோ?
இவன் 'தசரதராமன்' ஸ்வாமி. நீங்கள் தேடி வந்தது 'பரசுராமர்' என்று நினைக்கிறேன்.

என் குழந்தை ராமன் "தாமரை போன்ற கண்கள்" (ராஜீவ லோசனன்) உடையவன் ஸ்வாமி.

இதன் காரணமாகவே ராக்ஷசர்களோடு யுத்தம் செய்யும் தகுதி என் குழந்தைக்கு இல்லை."
என்று சொல்லி முடித்து விட்டார்.

பொதுவாக "தாமரை கண்ணன்" என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் கவிஞர்களுக்கு மனதில் உதிக்கும்.

தசரதன், விஸ்வாமித்ரரை பார்த்து
"தாமரை எப்படி மலர்ந்து இருக்குமோ, அதுபோல, மலர்ந்த கண்களை உடையவன் என் குழந்தை.
தாமரை எப்படி அழகாக இருக்குமோ, அதுபோல அழகான கண்களை உடையவன் என் குழந்தை.
தாமரை எப்படி குளிர்ச்சியாக (ஆர்த்ரம்) இருக்குமோ, அதுபோல குளிர்ச்சியான கண்களை உடையவன் என் குழந்தை.
தாமரையின் ஓரத்தில் எப்படி சிவப்பு இருக்குமோ, அதுபோல என் குழந்தையின் கண்களின் ஓரத்தில் சிவப்பாக இருக்கும்.
தாமரை பார்த்து எப்படி வண்டுகள் மொய்க்குமோ, அதுபோல அனைவரையும் ஆகர்ஷிக்கும் அன்பு நிறைந்த கண்களை உடையவன் என் குழந்தை."
என்ற பொதுவான அர்த்தத்தில் சொல்லவில்லையாம்.

மாறாக,
தசரதன், விஸ்வாமித்ரரை பார்த்து,
"ஸ்வாமி, தாமரையானது சாயங்காலம் ஆனது என்றால், கூம்பி விடும்.
ராத்திரியில் தாமரை மலர்ந்து இருக்காதே.
என் குழந்தை ராமன் "தாமரை போன்ற கண்கள்" உடையவன் ஸ்வாமி.
என் மகன், காலை வேளையில், வெளியே சென்று விளையாடி, சாயங்காலம் வருவான்.
அவன் தின்பதற்கு கொஞ்சம் பட்சணம் செய்து கொடுத்து சாப்பிட சொல்லி, கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்த்தால், அங்கேயே சாய்ந்து கொண்டு தூங்கி கொண்டு இருப்பான்.
அவன் தாய், கௌசல்யா அவனை ஆசையோடு உள்ளே அழைத்து கொண்டு, சூரியன் மறைந்து இரவு வருவதற்குள் தூங்க பண்ணி விடுவாள், ஸ்வாமி.

நீங்கள் யுத்தம் செய்ய சொல்வதோ, ராக்ஷஷர்களுடன்.
அவர்களோ ராத்திரியில் தான் சண்டைக்கு வருவார்கள்.
விடியும் வரை சண்டை செய்வார்களே?
என் குழந்தையோ தாமரை கூம்பி விடுவது போல, தூங்கி போய் விடுவானே, ஸ்வாமி?

இதன் காரணமாகவே, யுத்தம் செய்ய என் குழந்தைக்கு யோக்கியதை இல்லை, ஸ்வாமி"
என்று சொல்லி, தன் மகன்  யுத்தத்திற்கு லாயக்கு இல்லை என்று முடித்து விட்டார் தசரதன்.

விஸ்வாமித்ரர் மனதுக்குள் நினைத்தார்,
"இவனிடத்தில் போய் வேதாந்த ரகசியத்தை இத்தனை மணிநேரம் பேசினேனே!!
பரப்ரம்மம் தான் உனக்கு ராமனாக வந்து இருக்கிறார் என்று வெளிப்படையாக நானே சொன்ன பிறகும், ஒரே அடியாக, என் குழந்தைக்கு யுத்தம் செய்ய யோக்கியதை இல்லை என்று சொல்லி முடித்து விட்டானே!!

வேதாந்த ரகசியத்தை விருப்பம் இல்லாதவனிடம், கேட்கும் பக்குவம் இல்லாதவனிடம் சொல்ல கூடாது என்ற பொழுதும், இவனுக்கு போய் சொல்லி நேரத்தை வீணடித்து விட்டேனே!!"
என்று மனதுக்குள் நினைத்தார்.

ராமனை தன்னுடன் கூட்டி கொண்டு செல்ல முடியாததை காட்டிலும், இத்தனை நேரம் இவனுக்கு செய்த உபதேசம் வீண்  போனதே என்று 'பொறுமையே ப்ராம்மணனுக்கு பூஷணம்' என்று சொன்ன விஸ்வாமித்ரர், யாகத்தில் பூர்ணஆஹுதி விடும் போது வெளிப்படும் அக்னியை போல கோபத்தை வரவழைத்து கொண்டார்.

இவரின் கோபத்தை கண்டு, சூரியன் தன் கிரணங்களை குறைத்து கொண்டான்.
வாயு பகவான் காற்றை மந்தமாக்கினான். தேவர்கள் பயந்ததால், பஞ்ச பூதங்களும் தன் சக்தியை குறைத்து கொண்டது. உலகமே மந்தமாகி, இவர் கோபத்தின் விளைவு என்ன ஆகுமோ? என்று பயந்தது.

விஸ்வாமித்ரரின் கோபத்தை கவனித்த வசிஷ்டர், இவரை நன்கு அறிந்தவர்.

ஒரு சமயம், விஸ்வாமித்ரர் அரசனாக (க்ஷத்ரியன்) இருந்த போது, வஷிஸ்டரிடம் கோபம் கொண்டு, 'நானும் ப்ரம்ம ரிஷி ஆவேன், நானும் பிராம்மணன் ஆவேன்' என்று சபதம் செய்தார்.
சபதம் செய்தது மட்டுமில்லை, கடும் தவம் செய்து, காமத்தையும், கோபத்தையும் க்ஷத்ரியனாக இருந்ததால் பல தடவை அடக்க முடியாமல் போனாலும், விடா முயற்சியால் மீண்டும் மீண்டும் தவம் செய்து, கடைசியில் காமத்தையும், கோபத்தையும் ஜெயித்து, பிராம்மணன் ஆகி, மேலும் கடும் தவம் செய்து தேவர்கள், ப்ரம்மா உட்பட ப்ரத்யக்ஷம் ஆகி, "நீ ப்ரம்ம ரிஷி" என்று சொல்லிய பின்பும், ஒப்புக்கொள்ளாமல், வசிஷ்டர் வாயால் இறுதியில் "நீ ப்ரம்ம ரிஷி" என்று பெயர் வாங்கி தன் சபதத்தை நிறைவேற்றி கொண்டார்.

ஒரு ப்ரம்ம ரிஷி ஆவதற்கே விஸ்வாமித்ரருக்கு அத்தனை விடா முயற்சி இருந்தது என்றால், பரப்ரம்மம் ராமனாக அவதரித்துள்ள நிலையில், தசரதனால் தனக்கு ராமன் கிடைக்கவில்லை என்று சொன்னால், இவருக்கு எத்தனை கோபம் வருமோ? என்று வசிஷ்டரே சிறுது கலங்கி விட்டார்.

விஸ்வாமித்ரர் ஒரு மணி நேரம் ஞானத்தை உபதேசம் செய்தும், தசரதன் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்று உணர்ந்த வசிஷ்டர், தசரதனை பார்த்து,
"விஸ்வாமித்ரர் சொன்னது போல, உன் மகன் ராமன் 'பரப்ரம்மம்' தான். சர்வ வல்லமை உடையவன் தான்."
என்று தன் பங்குக்கு ஒரு மணி நேரம் ராமனின் பெருமையை சொல்லவில்லை. சொன்னாலும் தசரதனுக்கு புரியாது.
அதற்கு பதில், விஸ்வாமித்ரரின் பெருமையை தசரதனுக்கு சொல்லலாம் என்று தீர்மானித்தார்.

மகா புத்திசாலியான வசிஷ்டர், தசரதனிடம் "ராமனின் அவதாரத்தை, பெருமையை" சொல்லி ஒன்றும் நடக்காது என்று புரிந்து கொண்டார்.

விஸ்வாமித்ரர் "பரபிரம்மமே ராமனாக அவதரித்து உள்ளார்" என்று ஞானத்தோடு பார்த்து சொல்கிறார்.
தசரதனோ, "ராமன் என் குழந்தை" என்று பாசத்தோடு (ப்ரேமையோடு) பார்க்கிறான்.

பொதுவாக, தெய்வத்திடம் ஏற்படும் ப்ரேமையை, ஞான உபதேத்தால் வீழ்த்தவே முடியாது.
பிரேமை தான் ஜெயிக்கும்.

இங்கு இத்தனை மணி நேரம் விஸ்வாமித்ரர் செய்த ஞான உபதேசம், தசரதனின் ராம பிரேமையால் தோற்று நின்றது.

இப்பொழுது விஸ்வாமித்ரருடன் ராமனை அழைத்து செல்ல வைக்க, அந்த அன்பின் வழியிலேயே சென்றால் தான், தசரதன் அனுப்ப சம்மதிப்பான் என்று உணர்ந்த வசிஷ்டர், உடனே தசரதனை பார்த்து,
"தசரதா ! உன் குழந்தைக்கு ஒரு ஆபத்தும் வராது.
விஸ்வாமித்ரர் எப்பேர்ப்பட்ட மகாத்மா தெரியுமா?
எனக்கு ஒரு யோக்கியதை உண்டு .
உனக்கு ஒரு யோக்கியதை உண்டு.
நான் ப்ரம்ம ரிஷி, நீ ராஜ ரிஷி.
அவரோ இரண்டு யோக்கியதையும் உடையவர். இவர் முதலில் ராஜரிஷியாகி இருந்து, ப்ரம்ம ரிஷி ஆனவர்.

அவரிடத்தில் உலகில் உள்ள  ஏராளமான அஸ்திர, சஸ்திரங்கள் இருக்கிறது.
தானாகவே கண்டுபிடித்த அஸ்திர, சஸ்திரங்களும் இவரிடத்தில் இருக்கிறது.

ப்ரம்ம ரிஷியாகி போனதால், இவையெல்லாம் இவருக்கு பிரயோஜனம் இல்லை.

இவை அனைத்தையும் உன் பிள்ளைக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
இப்படி பலவித ஷ்ரேயஸ்களை ராமனுக்கு செய்வார்.
ஒரு ஆபத்தும் ஏற்படாது. விஸ்வாமித்ரருடன் அனுப்பு"
என்றவுடன்,
தசரதன் சந்தோஷமடைந்தார்.

"விஸ்வாமித்ர ரிஷிக்கு என் குழந்தை மேல் எத்தனை கிருபை இருந்தால், அத்தனையும் என் குழந்தைக்கு கொடுக்க நினைப்பார்.
நான் அனுப்பாமல் இருந்து இருந்தால், என் குழந்தைக்கு எத்தனை பெரிய நஷ்டம் இது."
என்று நினைத்து, விஸ்வாமித்ர ரிஷியுடன் அனுப்ப சம்மதத்துடன் "ராமா" என்று அழைக்க, இந்த விவாதத்தை கேட்டு கொண்டிருந்த ராமன், கூடவே லக்ஷ்மணனுடன் வில்லும், அம்புமாக தயாராக வந்து நின்றனர்.
தசரதன் இரண்டு குழந்தைகளையும் விஸ்வாமித்ரரிடம் ஒப்படைத்தார்.

தன் வந்த காரியம் நிறைவேறிய சந்தோஷத்தில், இனி ஒரு நொடி இருந்தாலும், திடீரென்று மனம் மாறி, "அனுப்ப மாட்டேன். சுமந்திரா, உடனே சென்று ராம லக்ஷ்மணர்களை அழைத்து கொண்டு வா" என்று தசரதன் சொல்லி விடுவானோ, என்று உடனேயே அங்கிருந்து ராம லக்ஷ்மணர்களை கூட்டிக்கொண்டு வெகு தூரம் சென்று விட்டார்.
ராம லக்ஷ்மணர்கள் கையில் வில், அம்புடன் இவர் பின்னால் ஓட, வேக வேகமாக நடந்தார்.


சரயு நதி வரை நிற்காமல் வேகமாக நடந்த விஸ்வாமித்ரர் அங்கு வந்த பின் தான் கொஞ்சம் நின்றாராம்.
மேலும் சித்தாஸ்ரமம் நோக்கி வேகமாக நடக்க ஆரம்பிக்க, பரப்ரம்மமே ராமனாக தன்னை பின் தொடர்ந்து வருவதை மறந்து விடுவாரா விஸ்வாமித்ரர்?
இவர்கள் நடந்து போவதை பார்த்தால், பரமேஸ்வரன் முன்னே நடக்க, பின்னால் முருகனும், விநாயகரும் செல்வது போல இருந்தது என்கிறார், வால்மீகி பகவான்.

நீருண்ட மேகம் போல, மரகத மணியை போல இருக்கும் ராமரும், வைடூரிய மணியை போல ஜொலிக்கும் லக்ஷ்மணனும், தன் பின்னால் ராஜ அலங்காரத்துடன் கையில் வில், அம்புடன் வருவதை எண்ணி, தனக்கு கிடைத்த பாக்கியத்தை நினைத்தார்.

வேகமாக நடந்து கொண்டே, அவ்வப்போது விஸ்வாமித்ரர் ராம, லக்ஷ்மண தொடர்ந்து வரும் அழகை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே நடந்தார்.

வெளியில் பார்ப்பதற்கு விஸ்வாமித்ரர் கம்பீரமான ரிஷியாக தெரிந்தாலும்,  'பரபிரம்மம்' தன் பின்னால் வருகிறதே என்று எண்ணி பரவசம் அடைந்தார்.
விஸ்வாமித்ரர் கண்களில் நீர் வழிய, தன் மனதுக்குள் நினைத்தார்,
"இது எனக்கு கிடைக்க கூடிய நிதியா? தன் தகப்பனாரை விட்டு, இப்படி என் பின்னால் ஓடி வருகிறார்களே இருவரும் !

நான் சம்பாதித்த ஞானத்தை (அறிவு) கொண்டு, பகவானை பிடித்து விடலாம் என்றல்லவா நினைத்தேன்.

என் சாமர்த்தியத்தால் பேசி, ராமரை பிடித்து விடலாம் என்று நினைத்தேனே !

பகவானை, நான் பயின்ற ஞானத்தால் அடைய முடியாது என்று தசரதன் சபையிலேயே உணர்ந்து கொண்டேன்.
என் சாமர்த்தியம் ஒன்று கூட அங்கு செல்லுபடியாகவில்லையே !
கடைசியில் குருவான வசிஷ்டர் செய்த சிபாரிசு தானே ஜெயித்தது.

எந்த அறிவை கொண்டும், பகவானை பிடித்து விட முடியாது என்று உணர்ந்தேன்.

வசிஷ்டர் சொன்ன ஒரு சொல்லுக்கு, இப்படி ராமனாக அவதரித்த பரப்ரம்மம் என் பின்னால் ஓடி வருகிறாரே?

மேலும், 'உன் முயற்சியால் என்னை பிடிக்க முடியாது' என்று முதலில் நிரூபித்து,
பின், தானே என்னுடன் வருவதற்கு ஆசைப்பட்டு, தசரதன் மனது மாறும்படியாக செய்து, இப்படி என் பின்னால் ஓடி வருகிறாரே!!

'எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவனாக, மனதில் எப்பொழுதும் பகவத் தியானமே செய்து கொண்டிருப்பவனாக, சாதுக்களாக இருக்கும் மகாத்மாக்கள் பாத தூளி என் தலை மேல் விழாதா? என்று அவர்களை தொடர்ந்து கொண்டு, அவர்கள் பின்னால் நான் ஒடுகிறேன்'
என்று பகவான் சொல்லும் சாஸ்திரம், இன்று நிரூபணம் ஆகிறதே?"
என்று நினைத்து, தனக்கு கிடைத்த அணுகிரஹத்தை நினைத்து மேனி சிலிர்த்து ஆனந்த கண்ணீருடன், அவ்வப்போது திரும்பி திரும்பி ராம லக்ஷ்மண சகோதரர்களை பார்த்து கொண்டே, நடந்து கொண்டு இருந்தார்.

ராமருடன் இப்படியே சில மணி நேரம் நடந்து வர வர  விஸ்வாமித்ரரின் ஸ்வபாவம் மாற தொடங்கியது.

ராமர் தன்னோடு அருகிலேயே வர வர, விஸ்வாமித்ரர் இது வரை சபையில் பேசிய "ராம ப்ரபாவம், வேதாந்த தத்துவங்கள்' எல்லாம் காணாமல் போய், பிரேமை (அன்பு) அதிகமானது".

'நம் பையன், நம் குழந்தை' என்ற எண்ணம் உருவாகி, அடிக்கடி திரும்பி பார்த்து, ராமரின் தலையை வருடி விட்டார்.
வேர்வையை தன் மரவுரியால் துடைத்து விட்டார்.

மேலும் ராமனை பார்த்து,
"குழந்தாய், நடந்து நடந்து கால் வலிக்கிறதோ?
நான் வேண்டுமென்றால் கை கால் பிடித்து விடட்டுமா?
களைப்பாக இருந்தால், நாம் இங்கேயே தங்கி விட்டு, பின்னர்  செல்லலாமா?
உனக்கு பசிக்கிறதா? காலையில் அரசவையில் சாப்பிட்டது தானே. நேரம் ஆகிவிட்டதே?"
என்றெல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டார் ஞானியான விஸ்வாமித்ரர்.

ராமரோ, "அதெல்லாம் ஒன்றும் இல்லையே" என்று சொல்லியும், ராம லக்ஷ்மணர்களுக்கு பசிக்குமோ, களைத்து இருப்பாரோ, தூக்கம் வருமோ என்று தானே நினைக்க ஆரம்பித்து விட்டார் விஸ்வாமித்ரர்.

'ஆமாம் பசிக்கிறது' என்று சொன்னால் கூட, இவரிடம் கொடுப்பதற்கு போஜனம் ஏதும் இல்லை.
ஆனாலும் விஸ்வாமித்ரரிடம்,
பசியே வராமல் இருக்க,
தேவைப்பட்டால் மட்டும் தூக்கம் வர,
களைப்பே அடையாமல் இருக்க
சக்தி வாய்ந்த 'பலை அபலை' என்ற இரு மந்திரங்கள் அவரிடம் ஸித்தியாகி இருந்தது.

ராமருக்கு லக்ஷ்மணருக்கும் தான் ஸித்தியாக்கி வைத்திருந்த இந்த பலை-அதிபலை என்ற மந்திரத்தை உபதேசம் செய்து விட்டார் விஸ்வாமித்ரர்.

உபதேசம் செய்த பின், விஸ்வாமித்ரர் பெரிதும் நிம்மதி அடைந்தார்.

தன் மந்திர உபதேசத்தால், ராமன் பலம் பெற்றான் என்று எப்படி  நினைத்தார் விஸ்வாமித்ரர்? என்று நமக்கு தோன்றலாம்.

இப்படி ஒரு எண்ணம் எப்படி விஸ்வாமித்ரரிடம் வந்தது? என்றும் நமக்கு தோன்றலாம்.

சற்று முன் தான், இவர் தசரதனிடம் மணிக்கணக்கில் சபையில்
'வேதத்தின் பிரமாணத்தை கொண்டு, உன் பிள்ளை 'ராமன்' பரமாத்மா என்று தெரிந்து கொண்டேன். அவனை குழந்தை குழந்தை என்று பார்க்காதே'
என்றெல்லாம் பேசி ராமனை அழைத்து வந்தார் விஸ்வாமித்ரர் என்று பார்க்கிறோம்.


பகவான் என்று சொல்லிவிட்டு, அவருக்கு இவர் மந்திர உபதேசம் செய்து பலம் கிடைக்கட்டும் என்று எப்படி நினைத்தார்? என்று நமக்கு தோன்றலாம்.

வேதத்தில் "விஷ்ணுவின் பலத்தால் தான் இந்த உலகமே தரிக்கப்பட்டுள்ளது" என்று விஷ்ணுவின் பலத்தை சொல்கிறது.

வேத ப்ராமணமாக ராமன் அவதார புருஷன் என்று தெரிந்த விஸ்வாமித்ரருக்கு, விஷ்ணுவின் பலம் தெரியாமல் இருக்குமா?

மகா பலசாலியான விஷ்ணு அவதாரமான ராமருக்கு, இவர் உபதேசித்த "பலை அதிபலை" என்ற இரு மந்திரத்தால் தான் பலம் அதிகரித்தது என்று எப்படி விஸ்வாமித்ரர் திடீரென்று நினைத்தார்? என்று நமக்கு தோன்றலாம்.

சற்று முன் சபையில் இவர் பேசியதற்கும், இப்பொழுது இவர் பேசுவதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே?

விஸ்வாமித்திரரின் செயலில் ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கு காரணம் உண்டு.

பொதுவாக ஆரம்பத்தில் "பகவானே, என்னை காப்பாற்று !!"
என்று தனக்காக அழுவான் அஞானியான பக்தன்.

அஞானியான பக்தனுக்கும்  பகவான் அணுகிரஹம் செய்கிறார்.

பகவானின் அணுகிரஹத்தை அனுபவித்த இவன், பகவான் தன் கையில் கிடைத்தவுடன், "என்னை காப்பாற்று" என்று ஆரம்பத்தில் சொன்னவன், அன்பின் காரணமாக, "பகவானை நாம் காப்பாற்ற வேண்டுமே" என்று நினைக்க ஆரம்பித்து விடுவான்.

"என்னை காப்பாற்று" என்று சொல்லும் பக்தன், பகவானை "சர்வேஸ்வரன், சர்வ வல்லமை கொண்டவன்" என்று நினைக்கிறான்.

பகவான் தன்னை வெளிக்காட்ட வெளிக்காட்ட, தன் அருகே இருப்பதை உணரும் பக்தன்,
'யாருக்கும் கிடைக்காதவர் தனக்கு கிடைத்து விட்டாரே! அவரை நாம் தானே பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மை விட்டால் யார் பார்த்து கொள்வார்கள்?'
என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்து விடுவான்.
இதற்கு பெயர் தான் பிரேமை (அன்பு).

இந்த பிரேமை (அன்பு) அதிகமாகி அதிகமாகி, "பகவான் என்னை காப்பாற்ற வேண்டும்" என்று வந்தவன், அன்பின் காரணமாக, "பகவானை தான் காப்பாற்ற வேண்டும். அவரை தீயவர்கள் நெருங்காமல் பார்த்து கொள்ள வேண்டுமே!!" என்று நினைக்க ஆரம்பித்து விடுவான் பிரேம பக்தன்.

ராமரை மகனாக பெற்ற தசரத மகாராஜனின் பிரேம நிலை, விஸ்வாமித்ரருக்கு புரிந்தது.

இந்த அன்புக்கு அடிப்படை எது?
ஞானம் (அறிவு).

தெளிந்த அறிவு உடைய ஞானியின் அருகில், பகவான் வந்து விட்டால், பிரேம பக்தி ஆரம்பிக்கிறது.
இந்த பிரேமை என்ற அனுபவம், ஞானத்தை விட உயர்ந்தது.

விஸ்வாமித்ரர் மஹா ஞானி.
ராமர் 'பரமாத்மா' என்று நன்கு அறிந்தவர்.
சர்வ வல்லமை கொண்டவர் 'ராமர்' என்றும் அறிந்தவர்.

இப்பேர்ப்பட்ட இந்த ஞானியிடம், பகவான் ராமர் அருகில் வந்ததும், வேதாந்த தத்துவங்கள் மறந்து, ஒரு அஞானியை போல, தான் உபதேசித்த மந்திரத்தால் ராமனுக்கு பலம் என்று நினைக்கவில்லை.
மாறாக,
தான் சம்பாதித்த இந்த மந்திரத்தை அவரிடம் சமர்ப்பணம் செய்து, ராமருக்கு தன்னிடம் இருந்ததை சமர்ப்பித்து, "மங்களாசாஸனம்" செய்தார் விஸ்வாமித்ரர்.

பகவானுக்கு அஞானி தன்னிடம் பக்தி செய்வது ஆச்சரியமாக இருக்காது.
ஒரு ஞானி தன்னிடம் பக்தி செய்வதை பெருமையாக கருதுகிறார்.

விஸ்வாமித்திரர் மந்திர உபதேசமாக தனக்கு செய்யும் பூஜையை ஆசையுடன் ஏற்று கொண்டார்.

ராத்திரி பொழுதை அந்த சரயு நதி கரையிலேயே தங்கி, அதற்கு பின் சித்தாஸ்ரமம் சென்றார்.
தாடகை வதம் செய்து, யாகம் இனிதாக நடக்க செய்து, அங்கிருந்து மிதலா (நேபால்) சென்று அங்கு சிவதனுஷை நாண் ஏற்றி, வில்லை முறித்து தன் பலத்தை காட்டி, சீதையை தன் தகப்பனார் தசரதன் சம்மதத்துடன் ஏற்றுக்கொண்டு, சீதா ராம தம்பதிகளாக அயோத்தியா திரும்பினர், திவ்ய தம்பதிகள்.
ஜெய் ஸ்ரீ ராம். ஸ்ரீ ராமஜெயம்.