Followers

Search Here...

Wednesday 13 November 2019

4000 திவ்ய பிரபந்தத்தில் வேதம் எப்படி அடங்கியது? எந்த காரணத்தால் இப்படி சொன்னார்கள்? தமிழ் மொழியில் சொல்லப்பட்ட 4000த்தை "தமிழ் மறை" என்று ஏன் சொன்னார்கள்?

"பரமாத்மாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற ஆசையுள்ள நமக்கு, வள்ளலாக வந்தார்கள் "ஆழ்வார்கள்"..

கடல் போன்றது "வேதம்'..




வேதம், "பகவானை பற்றி மட்டும் சொல்லவில்லை, உபதேவதைகள் பற்றியும், உலக ஸ்ருஷ்டி ஆரம்பித்து, உலகத்தில் அர்த்தங்களை பெறுவதற்கான அனைத்து கலைகளையும் பற்றி சொல்கிறது..."


"4 வேதங்கள் மட்டும் வேதத்தில் அடக்கம்" என்று நினைத்து விட கூடாது...

"அர்த்தங்களை (wealth) பெறுவதற்கு பல விஷயங்களையும் சொல்கிறது" வேதம்...

  • ஆயுர்வேதம் (medicine)
  • ஸ்தாபத்யம் (engineering)
  • காந்தர்வ வேதம் (music)
  • தனுர் வேதம்(army)
  • சிக்ஷை (expert in phonetics, phonology, pronunciation)
  • கல்பம் (expert in knowing  procedures for Vedic rituals and rituals associated with major life events such as birth, wedding and death in family, as well as discussing the personal conduct and proper duties of an individual in different stages of his life)
  • வியாகரணம் (expert in grammers and linguistic analysis)
  • நிருக்தம் (expert interpretation of words and to help establish the proper meaning of the words)
  • சந்தஸ் (expert in poetic metres)
  • ஜோதிஸம் (expert in knowing Auspicious time for rituals and expert in astrology and astronomy.)
  • ஸ்ம்ருதி,
  • இதிகாசம் (knowledge about history),
  • புராணம் (knowledge about very old history) இவைகளும்,
  • காவியம்,
  • நாடகம்,
  • அலங்காரம்
  • யோகம் (expert in meditation, contemplation and liberation)
  • ஸாங்க்யம் (Expert in consciousness and matter)
  • நியாயம் (Expert in exploring sources of knowledge)
  • சௌகதம்
  • ஆர்ஹதம்
  • மீமாம்ஸா (expert in correct conduct, both ethical and liturgical)
  • பாசுபதம்
  • பாஞ்சராத்ரம் (expert in Agama rules and guiding five observances every day to lord narayana)

என்று பல வேதத்தில் அடக்கம்.

"கடல் போன்ற வேதத்தை ஒருவன் முழுமையாக படித்து, உபதேவதைகள், அர்த்தங்களை (wealth) பற்றி சொல்லும் வேத பாகங்களை தள்ளி விட்டு, குறிப்பாக பரமாத்மாவை பற்றி வேதம் என்ன சொல்கிறது?" என்று தெரிந்து கொள்வதற்கு கலியுகத்தில் நமக்கு ஆயுசு போதாது....

"பரமாத்மாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற ஆசையுள்ள நமக்கு, வள்ளலாக வந்தார்கள் "ஆழ்வார்கள்"..
ஆழ்வார்கள், "வேதத்தின் சாரத்தை, இதிகாச, புராணங்களின் சாரத்தை (essence) நமக்கு 4000 திவ்ய பிரபந்தமாக கொடுத்து விட்டார்கள்."

பகவானை பற்றி அறிய, 'வேதம் முழுவதையும் படிக்க முடியாத நமக்கு, பகவானை பற்றி வேதம் சொல்லும் விஷயத்தை' அப்படியே தமிழில், கொடுத்து விட்டார்கள் ஆழ்வார்கள்.

வேதம் என்ற "பழத்தை" பிழிந்து,
அர்த்தவாதங்கள் சொல்லும் வேத மந்திரங்களை "சக்கை" என்று தள்ளி விட்டு,
பரமாத்மாவை பற்றி மட்டுமே சொல்லும் வேத மந்திரங்களை "சாறு" போல எடுத்து,
4000 திவ்ய ப்ரபந்தமாக "தமிழில்"  நமக்கு சிரமப்படாமல் அருந்தி சுவைப்பதற்கு கொடுத்து விட்டார்கள் ஆழ்வார்கள்.
"பகவானை பற்றி அறிந்து கொள்ள, 
வேதம் முழுக்க படிக்க அவசியமில்லை, 4000 திவ்ய பிரபந்தங்களே போதும்"
என்ற அளவுக்கு தமிழ் மக்களுக்கு பெரும் நிதியாக கொடுத்து விட்டார்களே ஆழ்வார்கள்..

"4000 திவ்ய ப்ரபந்தம் புரிந்து கொண்டால், பகவானை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த ரகசியம் தெரிந்த தமிழன் திவ்ய ப்ரபந்ததை விடுவானா?.. "




பிரபந்தங்கள் தமிழனின் பொக்கிஷமாயிற்றே... தமிழ் மொழியாயிற்றே..

வேதம் "கடல் போன்றது" என்று எடுத்துக்காட்டாக சொல்வதற்கு காரணம் உண்டு..

கடல் தண்ணீரில் "உப்பு" கலந்து இருக்கும்..
பல ஜீவராசிகள் அதை சார்ந்து இருக்கிறது...
மனிதர்களாகிய நமக்கோ, கடல் முழுக்க நீர் இருந்தாலும், அதில் ஒரு சொட்டு நீர் கூட தாகத்தை தணிக்காது...
மனிதனும் நீரை நம்பி தான் வாழ்கிறான்.




மனிதனுக்கு நீர் கொடுப்பதற்காக அந்த கடலின் மேல், மேகங்கள் சென்று, அது தன் சாமர்த்தியத்தால், கடலில் உள்ள உப்பை மட்டும் விலக்கி விட்டு, நல்ல தண்ணீரை மட்டும் உறிஞ்சிக்கொள்கிறது...

கர்ப்பம் தரித்த பெண் போல, கார்மேகமாக நகர்ந்து நகர்ந்து, நம் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் வந்து, அம்ருதம் போன்ற மழையை பொழிந்து நம் தாகத்தை தீர்த்து விடுகிறது...
கடல் நீரில் (வேதம்) உள்ள
உப்பை (அர்த்தவாதங்களை) விலக்கி,
சுவையான நீரை மட்டும் (பகவானை பற்றி மட்டுமே)  எடுக்க தெரிந்த மேகங்கள் போல நமக்கு 'ஆழ்வார்கள்' கிடைத்தார்கள்.

வேதத்தில், சாரம் இல்லாத  சாஸ்திரங்களை விலக்கி, சாரத்தை மட்டும் எடுக்கும் சக்தி நமக்கு கிடையாது..

எம்பெருமான் அருள் பெற்ற, அருள் பெற்றதால் ஞானத்தை அடைந்த
ஆழ்வார்கள்,
12 கருமேகங்களாக நம் தமிழகத்தில் உதித்து,
வேத நாயகனான நாராயணனின் பரத்துவத்தை, குணங்களை சொல்லும் வேத பாகங்களை, "மேகம்" சுத்தமான நீரை மட்டும் உறிஞ்சுவது போல உறிஞ்சி,
நம்மை போன்ற சாமானிய ஜனங்களும் "கோவிந்தனின் நாமத்தை, அவர் மகிமையை, அவர் குணங்களை, அவர் கருணையை அறிந்து கொள்ளும்" படியாக,
"4000 திவ்ய ப்ரபந்தங்கள்" என்ற அம்ருத மழையாக பொழிந்து விட்டனர்..

அதனால்,

  1. பெரியாழ்வார் அருளிய "திருப்பல்லாண்டு, திருமொழி"
  2. ஆண்டாள் அருளிய "திருப்பாவை, நாச்சியார் திருமொழி"
  3. குலசேகராழ்வார் அருளிய "பெருமாள் திருமொழி"
  4. திருமழிசையாழ்வார் அருளிய "திருச்சந்தவிருத்தம்", "நான்முகன் திருவந்தாதி"
  5. தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய "திருமாலை, திருப்பள்ளி எழுச்சி"
  6. திருப்பாணாழ்வார் அருளிய "அமலனாதிபிரான்"
  7. மதுரகவியாழ்வார் அருளிய "கண்ணிநுண்சிறுத்தாம்பு"
  8. திருமங்கையாழ்வார் அருளிய "பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்"
  9. பொய்கை ஆழ்வார் அருளிய "முதல் திருவந்தாதி"
  10. பூதத்தாழ்வார் அருளிய "இரண்டாம் திருவந்தாதி"
  11. பேயாழ்வார் அருளிய "மூன்றாம் திருவந்தாதி"
  12. நம்மாழ்வார் அருளிய "திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி"
    திருவரங்கத்தமுதனார் அருளிய "இராமானுச நூற்றந்தாதி"

ஆகிய 4000த்தில் சொல்லப்பட்டு இருக்கும் அனைத்தும், வேதத்தின் சாரமான "பரமாத்மாவின் குணங்களையே, தத்துவத்தையே பேசுகிறது"...

சர்வ சாஸ்திரங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது.
நம்மாழ்வார் "ரிக், யஜுர், சாம, அதர்வண" ஆகிய 4 வேதங்களின் சாரத்தை பிழிந்து,
"திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி" என்ற "தமிழ் மறை"களாக நமக்கு கொடுத்தார்.

திருமங்கையாழ்வார், "சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஸம்" ஆகிய 6 சாஸ்திரங்களின் சாரமாக,
"பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்" என்ற "தமிழ் சாஸ்திரங்களாக" நமக்கு கொடுத்தார்.




ஆறு சாஸ்திரத்தின் சாரமும், பெரிய திருமொழியில் இருப்பதை நாம் காணலாம். 
திவ்ய தேசம் பற்றி சொல்லும் போது, அந்த திவ்ய தேசத்தில் உள்ள வீதிகளை வர்ணிக்கும் போதே, தான் கற்ற சாஸ்திர ஞானத்தை பிரபந்தத்தில் காட்டி விடுகிறார்.
நாம் உலக விஷயமான சாஸ்திரங்களை கற்றாலும், அதன் மூலமாகவும் நமக்கு மேலும் பகவத் பக்தி ஏற்பட செயது கொள்ள வேண்டும் என்று காட்டுகிறார் திருமங்கையாழ்வார்.

தான் கற்ற 6 சாஸ்திரங்களையும் திருமங்கையாழ்வார், உலக விஷயங்களுக்கு பயன்படுத்தாமல், எம்பெருமானுக்கே பயன்படுத்தினார்.

உலக சாஸ்திரங்களை கற்றாலும், அதன் மூலம் பகவத் பக்தியை உயர்த்தி கொள்ளவே நாம் முயற்சிக்க வேண்டும் என்று காட்டுகிறார்.. திருமங்கையாழ்வார்.

அது போல, 2 இதிகாசங்கள், புராணங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது..

ஸ்ரீ ராமாயணத்தை ராமபிரானை பற்றி அறிய, குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழியே போதுமானது...
வால்மீகி ராமாயணத்தின் சாரமாக, நமக்கு ராமபிரானின் குணத்தை நமக்கு காட்டுகிறார்..

"பாகவதம்" போன்ற சாத்வீக புராணங்களின் சாரமாக, பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் நாச்சியார் போன்றவர்கள் அருளிய பிரபந்தங்களே நமக்கு பகவத் பக்தி அனுபவத்தை கொடுத்து விடுகிறது..

"விஷ்ணு தர்மத்தை" அறிய, தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய திருமாலை, திருப்பள்ளி எழுச்சி போன்றவைகளே அந்த சாரத்தை நமக்கு தந்து விடுகிறது..

இப்படி "மோக்ஷத்துக்கு வழி சொல்லும் புராணங்கள், இதிகாசங்கள், சாஸ்திரங்கள், 4 வேதம் உட்பட அனைத்தும்" 4000 திவ்ய பிரபந்தத்தில் அடங்கி விடுகிறது..

தமிழர்களுக்கு "பொக்கிஷம்" அல்லவா திவ்ய பிரபந்தங்கள்..
அர்த்தங்கள் பொதிந்த, பக்தியை தரக்கூடிய, 'தமிழ் மறை' அல்லவா திவ்ய பிரபந்தங்கள்..

4 வேதங்களையும், புராணங்களையும், சாஸ்திரங்களையும் முழுவதாக படித்து இருந்தவர்களால் தானே, இவையெல்லாம் 4000த்தில் அடங்கி இருப்பதாக சொல்லி இருக்க முடியும்!!..

4000த்தில் இவையாவும் அடங்கி உள்ளது!! என்று சொன்னவர்கள் யார்? என்றும் நாம் கவனிக்க வேண்டாமா?

சர்வ சாஸ்திரங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது என்று  யார் சொன்னார்கள்? 
என்று கவனிக்கும் போது தான், திவ்ய பிரபந்தத்தின் பெருமை நமக்கு புரியும்..

சம்ஸ்க்ரிதம் தெரியாதவன், இதையாவது தெரிந்துகொள்ளட்டும் என்று கொடுக்கப்பட்ட சாதாரண புத்தகம் இல்லையே, 4000 பிரபந்தங்கள்...
வெறுமனே தமிழ் கற்று கொள்வதற்காக, ஏற்பட்ட நூல் இல்லையே 4000 பிரபந்தங்கள்...
சர்வ சாஸ்திரமும், வேதமும், புராணங்கள், இதிகாசங்கள் உட்பட அனைத்தும் கரைகண்ட,
பெரியவாச்சான் பிள்ளை, தேசிகர், ராமானுஜர் போன்ற ஆச்சாரியர்கள் வாக்கியத்தால் நமக்கு 4000த்தின் பெருமை தெரிகிறது..

சர்வ சாஸ்திரமும் கரை கண்ட பெரியவாச்சான் பிள்ளை, போன்ற மகான்கள், கடைசியாக '4000த்தை கையில் எடுக்கும் போது, அதில் உள்ள பிரபந்தங்களோடு வேத சாஸ்திரங்களை, புராண, இதிஹாசங்களை காட்டி விளக்கம் கொடுக்கும் போது, நமக்கு 4000த்தின் பெருமை தெரிகிறது..'

தேசிகர் போன்று சாஸ்திரத்தில் கரை கண்டவர் கிடையாது...
அவர் சம காலத்தில் சிம்மமாக இருந்த மகா பண்டிதர்கள் எல்லாம், இவர் வித்வத்தை பார்த்து பெருமதிப்பு கொண்டிருந்தனர்..

சர்வ சாஸ்திரமும் அறிந்த தேசிகர், கடைசியில் 4000த்தை கையில் எடுத்து வாசிக்க வாசிக்க, "தெளியாத மறை நிலமெல்லாம் தெளிகிறது" என்று சொல்கிறார்..

யார் இப்படி சொல்கிறார்? என்பதை கவனிக்க வேண்டும்..
"தான் கற்ற வேதங்களில், புரியாத சில வாக்கியங்கள், 4000 திவ்ய பிரபந்தத்தை படிப்பதால், புரிந்து விடுகிறது என்று யார் சொல்கிறார்? என்று பார்க்க வேண்டும்..
அப்பொழுது தான், நமக்கு 4000த்தின் மகத்துவம் புரியும்.

"தான் வேத சாஸ்திரம் படித்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள இயலாத இடங்களை கூட 4000 திவ்ய பிரபந்தத்தில் பார்க்கிறேன்" என்று சொல்கிறார் தேசிகர்..

அற்புதமான திவ்ய பிரபந்தத்தை, தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்..

இதன் உண்மையான ஆழ்ந்த அர்த்தங்களை, ஞானத்தில் உயர்ந்த, பரமாத்மாவிடம் திட பக்தி உள்ள, மகான்களிடம் கேட்டு மனதில் உள்வாங்கி, அனுபவிக்க வேண்டும்..  




திவ்ய பிரபந்தங்களே நமக்கு பரமாத்மாவை பற்றிய ஞானத்தை, பக்தியை தரும்.
தமிழனாக பிறந்ததற்கு பெருமை படுவோம்.

வாழ்க 4000 திவ்ய பிரபந்தம்.
வாழ்க ஆழ்வார்கள்.   வாழ்க நாயன்மார்கள். 
வாழ்க நம் பாரத மண்ணில் உதிக்கும் மகான்கள்.



Friday 8 November 2019

சிலை திருட்டு.. தெய்வங்களுக்கு சக்தி இருந்தால் காப்பாற்றி கொண்டு இருக்கலாமே? இது போன்ற பிதற்றல் கேள்விகளை, தெய்வங்கள் எப்படி பார்க்கிறார்கள்? தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஆழ்வார்களுக்குள்ளே வேறுபாடு உண்டா?



"சித்தாந்த" ரீதியில்,
'ஒரு ஆழ்வார் பேசுவதையே, மற்றொரு ஆழ்வாரும் பேசுகிறார்' என்று பார்க்கிறோம்.
ஆழ்வார்களுக்கிடையே சித்தாந்தத்தில் வேற்றுமை கிடையாது..

ஆனால்,
எம்பெருமானை "அனுபவிப்பதில்" ஆழ்வார்களுக்கிடையே வேறுபாடு இருப்பதை காணலாம்.
பொதுவாக எம்பெருமான் நாராயணன் 5 அவதாரங்கள் செய்கிறார்.
1. பரமபதத்தில் பரவாசுதேவன் (வைகுண்ட நாதன் /ஆதி பரமாத்மா)
2. க்ஷீராப்தியில் (பாற்கடலில்) மஹாவிஷ்ணு.
3. பல சமயங்களில் விபவ அவதாரங்கள் (ராம, கிருஷ்ண, நரசிம்ம..முதலிய)
4. அந்தர்யாமியாக (அனைத்திற்குள்ளும் இருப்பவர்)
5. அர்ச்ச (விக்ரஹ) அவதாரம்
முதல் ஆழ்வார்கள், திருமழிசை ஆழ்வார் போன்றவர்கள் வரை, யோகத்தில் இருந்து கொண்டு, எம்பெருமான் நாராயணனை "அந்தர்யாமி"யாக (4) அனுபவித்தார்கள்..

ஸ்வாமி நம்மாழ்வாரோ, எம்பெருமான் நாராயணனின் "பரத்துவத்தை" (1) அனுபவித்தார்.
பரதத்துவ அனுபவத்துடனேயே இருந்ததால் தான், அவருக்கு கோவிலுக்கு சென்று எம்பெருமானை தரிசிக்க கூட அவசியம் ஏற்படவில்லை.
கோவிலுக்கே போகாத ஆழ்வார் இவர் ஒருவர் தானே..
மாறாக ஸ்ரீரங்கம் என்று நினைத்தால், அந்த கோவிலில் உள்ள ஸ்ரீரங்கபெருமாள், இவர் இருக்கும் இடத்துக்கு வந்து காட்சி கொடுப்பார்.
அத்தகைய அனுபவத்திலேயே இருந்தார் நம்மாழ்வார் என்று பார்க்கிறோம்.
பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், நாச்சியார் (ஆண்டாள்) போன்ற அனைவரும் "ராம, கிருஷ்ண, கூர்ம, நரசிம்ம" போன்ற விபவ அவதாரங்களையே (3) அனுபவிப்பவர்களாக இருந்தனர்.
விபவ அவதாரமான "கண்ணனிடம் மட்டுமே பக்தி செய்தாள்" ஆண்டாள்.
அர்ச்சா திருமேனியாக உள்ள ஸ்ரீ ரங்கநாதரிடம் கிருஷ்ண பரமாத்மாவை கண்டாள் ஆண்டாள் நாச்சியார் என்று பார்க்கிறோம்.

சாமானிய ஜனங்களான நாம்,
"ராமரையோ, கிருஷ்ணரையோ பக்தி செய்து, அதே ரூபத்தை கனவிலாவது தரிசிக்க முடியுமா?" என்பது தெரியாது..

திடபக்தி உள்ள மகான்களுக்கு, சாத்தியமாகும் இந்த பகவத் தரிசனம், நமக்கு சாத்தியமாகுமா? என்பது கேள்விக்குறியே !!

தெய்வத்திடம் திடபக்தி இல்லாத நமக்கும், வழி உண்டா? 
ஆழ்வார்களில் நமக்காக நிற்பவர் திருமங்கை ஆழ்வார் ஒருவரே.

திருமங்கை ஆழ்வார் மட்டுமே, "அர்ச்ச" அவதாரத்தையே (5) எம்பெருமானாக அனுபவித்தார்.
அர்ச்ச (விக்ரஹ) அவதாரத்தில் இருக்கும் பெருமாளிடம், ஆண்டாளை  போல விபவ அவதாரத்தை கூட பார்க்கவில்லை, இவர். 
எம்பெருமானே "விக்ரஹ ரூபமாக அவதரித்து இருக்கிறார்" என்றே அனுபவித்தார் திருமங்கை ஆழ்வார்.



நாம் கோவிலுக்கு சென்று,
கோவிலில் உள்ள பெருமாளை எப்படி பார்க்க வேண்டும்? 
எப்படி பக்தி செய்ய வேண்டும்? என்று கேள்விக்கு,
தன் வாழ்க்கையே இதற்கு பதிலாக வாழ்ந்து காட்டி,, 
எம்பெருமானை பார்த்து நாமும் பாடுவதற்கு தன் பாசுரங்களையே கொடுத்து, 
நம் "பக்தியை" வளர்க்க செய்கிறார் திருமங்கை ஆழ்வார்.
சாதாரண மக்களும், எம்பெருமானை எப்படி பக்தி செய்ய வேண்டும்? என்று வழிகாட்டிய திருமங்கை ஆழ்வாருக்கு, ஹிந்துக்கள் பெரும் கடன் பட்டு இருக்கிறோம் அல்லவா..

நாம் எப்படி கோவிலில் உள்ள பெருமாளை பார்த்து பக்தி செய்ய வேண்டும்? 
என்று காட்டுவதற்காகவே, திருமங்கை ஆழ்வார் அவதரித்தார் போலும்.

திருமங்கை ஆழ்வாருக்கு, அர்ச்ச அவதார விக்ரஹங்களே பூரணமான அனுபவத்தை கொடுத்தது.
திருமங்கை ஆழ்வாரை போல கோவில் கோவிலாக சென்று தரிசித்த ஆழ்வார்கள் இல்லை.
கோவில் கோவிலாக சென்று, அங்கு "அர்ச்ச அவதாரமாக உள்ள பெருமாளை பார்ப்பதினாலேயே அவருக்கு ஏற்படும் உகப்பு, வேறு எந்த அனுபவத்திலும் அவருக்கு ஏற்படவில்லை" என்று தெரிகிறது.

திருமங்கை ஆழ்வாரை போல, கோவில் கோவிலாக சென்று எம்பெருமானை நேரில் பார்த்து, பார்த்து, மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் வேறு இல்லை.

தியானத்தில் எம்பெருமானை புருவ மத்தியில் தரிசனம் செய்வதை காட்டிலும், இவருக்கு மட்டும் தான், எம்பெருமானை கோவிலில் சென்று அரச்சா திருமேனியாக பார்த்தால் தான் திருப்தி ஏற்பட்டது.

கோவிலில் இருக்கும் பெருமாள், "அரச்சா (விக்ரஹ) திருமேனி"யாக தான் இருக்கிறார்.
நம்மை போன்ற சாதாரண ஜனங்களுக்கு, "இது கல் சிலை தானே" என்று தோன்றுகிறது.
ஆனால்,
திருமங்கை ஆழ்வாருக்கோ, அர்ச்சா திருமேனியை பார்க்கும் போதே,
"இது நமக்காக எம்பெருமான் செய்த அர்ச்சா (5) அவதாரமாயிற்றே"
என்றே தோன்றுகிறது..

"ஸ்வயம் பகவான் நாராயணன், அர்ச்சா திருமேனியுடன் அவதரித்து உள்ளார்"
என்றே ஆழ்வார்கள், மகான்கள், ஆச்சாரியர்கள் பார்க்கிறார்கள்.
பகவான் ராமராகவும், கிருஷ்ணராகவும் விபவ அவதாரங்கள் (3) செய்த சம காலத்தில் கூட, சில மூடர்கள், நேரில் பரமாத்மாவை பார்த்தும்,
"இவர்கள் மனிதர்கள்" என்று தானே நினைத்தார்கள்..

ராவணன், துரியோதனன், கம்சன் போன்றவர்கள், 'ராமரையும், கிருஷ்ணரையும் "மனிதன்" என்று தானே நினைத்தார்கள்'.
அதே சமயத்தில்,
ரிஷிகள், ஜடாயு, பீஷ்மர் போன்ற உத்தமர்கள், மனிதனாக வந்திருப்பது பகவான் நாராயணன் என்று உணர்ந்து பக்தி செய்து மோக்ஷம் அடைந்தார்களே!!..,
அதே போல,
கோவிலில் அர்ச்சா திருமேனியாக இருக்கும் எம்பெருமானை பார்க்கும் சாமானிய ஜனங்கள்,
"இது சிலை தானே"
என்று பார்த்து ஏமாறுகிறார்கள்.



ராமபிரான் அவதார காலத்தில், அவரை "மனிதன்" என்றே நினைத்தவர்களும் உண்டு.
ஞான கண் கொண்டு பார்த்தவர்கள்
"மனிதனாக சாஷாத் பரப்ரம்மமே அவதரித்து உள்ளார்" என்று புரிந்து கொண்டனர்.
அது போல,
திவ்ய ஞானம் கொண்ட ஆழ்வார்கள்,
கோவிலில் உள்ள "அர்ச்சா திருமேனியை" எம்பெருமானின் அவதாரமாகவே பார்த்தனர்.

நமக்கும் ஆழ்வார்களை போன்று, அத்தகைய உணர்வு ஏற்படும் போது, கோவிலில் உள்ள அரச்சா மூர்த்தியை பார்க்கும் போது
"ஐயோ.. எம்பெருமானை பார்க்க முடியவில்லையே..விக்ரஹ ரூபமாக தானே பார்க்க முடிகிறது"
என்ற எண்ணம் கூட ஏற்படாது..
"அர்ச்சா திருமேனியே பகவானின் ஒரு அவதாரம் தான்" என்று ஆழ்வார்களை போன்று பார்க்க நம் ஆரம்பித்தால்,
அந்த எண்ணமே, பக்திக்கு விதை ஆகி விடும்.

அர்ச்ச அவதாரமாக கோவிலில் வீற்றிருக்கும் பெருமாள், நம் பக்திக்கு ஏற்ப அவர் நம்மிடம் நெருங்குவார்.

அர்ச்சா திருமேனியை "சிலை" என்று பார்த்தால், அவர் விக்ரஹமாகவே உனக்கு தோன்றுவார்.

அதே அர்ச்சா திருமேனியை "பெருமாள்" என்று பார்த்தால், அவர் பெருமாளாகவே உனக்கு தோன்றுவார்.
கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டையில், இஸ்லாமிய சுல்தான்கள் புகுந்து, அங்கிருந்த கோவிலை இடித்து, உற்சவராக இருந்த பெருமாளை டில்லிக்கே எடுத்து கொண்டு சென்று விட்டான்.

"சிலை தானே" என்று பார்த்த அவர்களுக்கு, சிலையாகவே இருந்து விட்டார் பெருமாள்..

சில வருடங்கள் கழித்து, ஸ்ரீ ரங்கத்தில் கிருமிகண்ட சோழனால் ஆபத்து ஏற்பட, ராமானுஜர் அங்கிருந்து புறப்பட்டு, மேல்கோட்டை வந்து சேர்ந்தார்.
"கோவில் உள்ளதே!! மூலவரை காணவில்லையே!! உற்சவரையும் காணவில்லையே!!"
என்று கண்ணீர் விட்டார் ராமானுஜர்..




"சிலை" என்று பார்த்த இஸ்லாமியனுக்கு சிலையாகவே இருந்து விட்ட பெருமாள்,
"தான் எங்கு இருக்கிறேன்?" என்பதை ராமானுஜருக்கு சொப்பனத்தில் காட்டினார்..

இஸ்லாமியர்கள் மேல்கோட்டையில் புகுந்து விட்டனர் என்ற பயத்தில், அங்கிருந்த ஹிந்துக்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாது, மூலவரை குழி தோண்டி புதைத்து விட்டனர்... உற்சவரை மறைப்பதற்குள் எடுத்து சென்று விட்டான்..
ராமானுஜருக்கு தான் மூலவராக இருக்கும் இடத்தையும் காட்டி, டெல்லி சுல்தான் அரண்மனையில் உற்சவராக இருப்பதாக தானே காட்டினார்..

தெய்வ பலத்துடன், தைரியமாக டில்லி சென்று, டில்லி சுல்தானிடம் பெருமாளை திருப்பி தர கேட்க,
ராமானுஜரின் திவ்யமான ரூபத்தை கண்டு எதிர்க்க முடியாமல்,
தன் சேனைகள் பல கோவில்களில் இருந்து கொள்ளையடித்த கோவில் சிலைகளை காட்ட அனுமதித்தான்.

ஆயிரக்கணக்கான கோவில் சிலைகளை கொள்ளை அடித்து வைத்து இருந்த இடத்துக்கு சென்று, "தான் கனவில் கண்ட பெருமாள் இருக்கிறாரா? என்று பார்த்தார், ராமானுஜர்.

"தான் கண்ட பெருமாள் அங்கு இல்லை" என்றதும் ராமானுஜர்,
"வேறு எங்காவது உள்ளதா? யாரிடமாவது கொடுத்து விட்டீர்களா?" என்று கேட்க,
"தன் மகள் அங்கிருந்த ஒரு சிலையை மட்டும் எடுத்து வைத்து இருந்ததாக ஞாபகம்", என்று தன் மகளை அழைத்தான்.
அவன் மகளிடம் தான் கண்ட அதே பெருமாளை கண்ட ராமானுஜர், "வாராய் செல்ல பிள்ளாய்" என்று அழைக்க, சுல்தான் பார்க்க,
அர்ச்ச அவதாரமாக (சிலையாக) இருந்த பெருமாள், அவள் மடியிலிருந்து இறங்கி ஓடி வந்து ராமானுஜரை நோக்கி வந்தது...
இந்த அதிசயத்தை கண்டு பிரமித்து போன இஸ்லாமியனுக்கு, இன்னொரு அதிர்ச்சியாக,
அவன் மகள் தன்னிடம் இருந்த பெருமாளை பதியாக நினைத்து இருந்தாள்...
இவளிடம் மட்டும் பேசி கொண்டு இருந்த பெருமாள், இவள் கூப்பிட்டவுடன் ராமானுஜரை விட்டு இறங்கி "கிடு கிடு வென ஓடி சென்று" அவள் மடியில் போய் அமர்ந்து விட்டது..



"இந்த துலுக்க பெண் செய்த பக்திக்காக, எம்பெருமான அவளிடமும் பேசுகிறார்" என்பதை உணர்ந்த ராமானுஜர், "மேல்கோட்டைக்கு அழைத்து செல்ல வேண்டுமே!! கோவிலில் இருக்க வேண்டிய உற்சவர் அல்லவா இவர்" என்று மீண்டும் அழைக்க, அதே போல விக்ரஹ ரூபத்துடனேயே ஓடி வந்து ராமானுஜர் மடியில் போய் அமர்ந்து விட்டார் பெருமாள்.

இந்த ஆச்சர்யம் ஒரு வித பயத்தை இஸ்லாமிய சுல்தானுக்கு உண்டாக்கியது...
"வந்திருக்கும் சாமியார் மந்திரங்கள் தெரிந்தவர் போல, கல் சிலையை நடக்க வைக்கிறாரே" என்று பயந்தான்...
"அந்த மாய சிலை தன் மகளையும் மாற்றி விட்டதே!!" என்று அச்சம் ஏற்பட, ராமானுஜரை பார்த்து,
"அந்த சிலையை தன் மகள் மீண்டும் கேட்பதற்குள் எடுத்து சென்று விடுங்கள்" என்று அனுமதி அளித்தான்..

மேல்கோட்டை பெருமாளிடம் பக்தி செய்த அவளுக்கும் இடம் கொடுத்து விட்டார் பெருமாள்.
இன்று போய் அந்த உற்சவ பெருமாளை பார்த்தாலும், அவர் திருப்பாதங்களில், துலுக்க நாச்சியாராக அமர்ந்து இருக்கிறாள் அந்த பக்தை.
பகவான், பக்தன் எங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறார் என்பது தெரிகிறது.
"இது சிலை அல்ல, பகவான் அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார் என்று உணர்ந்து  பக்தி இருந்தால், நம்மிடமும் பேசுவார்" என்று திடமாக தெரிகிறது.

"சிலை" என்று பார்க்கும் போது, அர்ச்ச ரூபத்துடன் இருக்கும் எம்பெருமான் சிலையாகவே இருக்கிறார்...
காழ்ப்புணர்ச்சி, தெய்வ நிந்தை செய்யும் சிலரால், சில சமயங்களில் கோவில்கள் இடிக்கப்படுகிறது..
சில சமயம், கோவில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன.
சில சமயம், கோவிலில் உள்ள பெருமாளையே தூக்கி சென்று விடுகின்றனர்..
சிலர், கோவில் விக்ரஹங்களை மீண்டும் பயன்படுத்த முடியாதபடி உடைத்து விடுகின்றனர்.

"கோவிலில் கொள்ளை, கோவில் சிலை திருட பட்டு விட்டது"
போன்ற செய்திகளை பார்த்து விட்டு,
ஹிந்து தர்மத்தின் மீது காழ்ப்புணர்ச்சி, தீராத வெறுப்பு உள்ள ஈனர்கள்,
"சிலையை தெய்வம் என்றாயே!! சக்தி இருந்தால் கொள்ளையை தடுத்து இருக்கலாமே? சிலையையே தூக்கி சென்ற போது, உடைத்த போது உங்கள் தெய்வம் ஒன்றும் செய்ய வில்லையே?"
என்று கேட்கிறார்கள்..
"தெய்வத்தை "மனிதனை போன்று" நினைப்பதால் தான் இவர்களுக்கு வேதத்தில் உள்ள தெய்வங்கள் என்ன நினைக்கிறார்கள்?" என்று புரியவில்லை.

தன் அர்ச்சா (சிலை) திருமேனியை, "சிலை தானே" என்று ஒருவன் எடுத்து சென்று ஒளித்தாலும், உடைத்தாலும் பெருமாளுக்கு ஒரு சேதமும் கிடையாது...

நாத்தீகன், மிலேச்சன், ஆஸ்தீகன் அனைவரையுமே அவர் தானே படைத்தார்..
அப்படி இருக்க,
ஒரு நாதீகனோ, மிலேச்சனோ "சிலை தானே" என்று தன் அர்ச்ச அவதாரத்தை பார்க்கும் போது, சிலையாகவே இருந்து விடுகிறார்..
அவன் 'தன் கழுத்தில் போட்டு இருக்கும் வைர மாலையை கழட்டினால் கூட' அமைதியாக இருக்கிறார்..
"தன் குழந்தைகள் தானே" என்று சிரித்து கொண்டு இருக்கிறார்.

"வைரமாகவும், கல் சிலையாகவும் அகில உலகங்களாகவும் தானே இருப்பதால், தன் அர்ச்ச அவதாரத்தை சேதம் செய்தாலும்" பொறுத்து கொள்கிறார்.
ஆனால்,
பல வருடம் கழிந்தாலும்,
பல ஆயிரம் வருடங்கள் கழிந்தாலும் கூட,
ஒரே ஒரு உண்மையான பக்தன் "இங்கே இருந்த என் பெருமாள் எங்கே?" என்று அழுது கதறினான் என்றால், தன் பக்தன் அழுவதை சகிப்பதில்லை எம்பெருமான்.



மேல்கோட்டைக்குள் புகுந்து, கோவிலை உடைத்து, உற்சவ பெருமாளை பார்த்ததும் "சிலை தானே" என்று நினைத்த இஸ்லாமியனுக்கு சிலையாகவே இருந்து விட்டார். 
அவன் மகள், 'தனக்கு ஒரு விளையாட்டு பொம்மையாக வைத்து கொள்ளலாம்' என்று எடுத்து சென்று, அந்த சிலையுடனேயே பேசி கொண்டு, விளையாட, அர்ச்சா அவதாரமாக உள்ள பெருமாள் அவளிடம் பேச ஆரம்பித்து விட்டார். 
பெருமாள், துலுக்க பெண் என்றா பார்க்கிறார்?
"இவன் என் பக்தனா?" என்று தானே பார்க்கிறார்.

"சிலை" என்று பார்த்த சுல்தானுக்கு "சிலையாகவே இருந்து அவன் கூடவே சென்று விட்ட பெருமாள்",
ராமானுஜர் "எங்கே போய் விட்டார் எம்பெருமாள்?" என்று கதற,
"தான் இருக்கும் இடத்தை காட்டி, ஒரு பெரும் நாடகத்தையே ஆடி, மீண்டும் மேல்கோட்டைக்கே வந்து விட்டாரே.."
18 முறை, தங்கத்தால் ஆன சோம்நாத் கோவிலை இடித்து, தங்கங்களை எல்லாம் கொள்ளை அடித்து, சிவ லிங்கத்தை உடைத்து, முகம்மது கஜினி பெரும் சேதம் விளைவித்தான்...
மூர்த்தியே போய் விட்டது.. கோவிலும் இடிந்து விட்டது...

சிவபெருமான் "தன்னை சிலையாக பார்க்கும் அவனுக்கு சிலையாகவே இருந்து விட்டார்".
தங்கத்தில் ஆசை கொண்ட கொள்ளையன், தங்கத்தை கொள்ளை அடித்தான்.

சிலையை உடைத்து விட்டதால், சிவபெருமான் இல்லாமல் போய் விடுவாரா?

"ஒரு பக்தன் தன் சிவபக்திக்காக  கட்டிய கோவிலை, காலப்போக்கில் பக்தி இல்லாதவன் இடிக்கிறான்" என்று தான் தெய்வங்கள் பார்க்கிறார்கள்.

இந்த அசம்பாவிதங்களை தடுத்து, தான் இருப்பதை மனிதனுக்கு காட்டி, தன் பெருமையை நிலைநாட்டலாமே?"
வேதத்தில் சொல்லப்படும் நம் தெய்வங்களுக்கு, இது அவசியமில்லாதது.. 

"இந்திரன், வருணன், வாயு போன்ற தேவர்கள் கூட, மனிதனுக்கு காட்சி கொடுத்து தான், தன் பெருமை நிலைக்கும் என்று நினைக்கவில்லை" எனும் போது, தேவர்களுக்கும் மேற்பட்ட பெருமாளும், சிவபெருமானும், "மனிதர்களுக்கு தன் தரிசனத்தை வலுக்கட்டாயமாக கொடுத்துத்தான் தன் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்ற அவசியமில்லை". 

தெய்வங்கள் எதிர்பார்ப்பது, உண்மையான ஒரே ஒரு பக்தனை மட்டுமே.

"சோம்நாத் கோவிலை இடித்து விட்டான், அங்கு இருந்த சிவலிங்கத்தையும் உடைத்து விட்டானே..." என்று மனம் குமுறி ஹிந்துக்கள் மனம் கொதித்து, வழி தெரியாமல் அழ, மீண்டும் மீண்டும் கோவில் எழுந்தது...
கதறிய ஹிந்துக்கள் மீண்டும் மீண்டும் சிவபெருமானுக்கு கோவில் எழுப்பினார்கள்...
அதன் பின் வந்த கில்ஜி, லோடி, துக்ளக், முகலாய ஆட்சி வரை கோவில் பல முறை இடிக்கப்பட்டது...
மீண்டும் மீண்டும் ஹிந்துக்களால் கட்டப்பட்டது...

"சக்தி இல்லாத தெய்வ சிலையை உடைப்பேன்!!.. மக்களை கொன்று குவிப்பேன்.."
என்று 1000 வருடங்கள் பாரத தேசத்தை உருட்டி, மிரட்டி பார்த்த கில்ஜி, துக்ளக், லோடி, பாபர், ஒளரங்கசீப் போன்ற முகலாய அந்நியர்கள் அனைவரும் மண்ணோடு மண் ஆகி விட்டனரே!!..
சோம்நாத்தில், இன்றும் புதிய உருவத்துடன், அதே சிவபெருமான் அர்ச்சா ரூபத்துடன் வந்து விட்டாரே? 

சிவன் சொத்தை அபகரித்த இவர்கள் குலமே நாசம் ஆகி போனதே!!..

"ஹிந்து கோவில்களை இடித்து விட்டேன். அங்கு இருந்த வேத ப்ராம்மணர்களை கொன்று விட்டேன்.. ஹிந்துக்கள் மீது மட்டும் அதிக வரி விதிப்பேன்...ஹிந்துக்கள் ஒழிந்தார்கள்.. இனி இவர்கள் ஹிந்துக்களாக வாழ இயலாது" 
என்று 1000 வருடங்கள் ஆதிக்கம் செய்தும், ஒன்றும் ஆகவில்லையே..!!

மனிதனை மனிதன் கேலி செய்தால், தப்பிக்க வழி உண்டு.. 
முட்டாள்கள் தானே, தன்னை விட பலசாலியான தெய்வத்தை கேலி செய்ய துணிவான்..? 
தெய்வத்தை கேலி செய்து, குல நாசம் ஆகாதவன் உலகிலேயே இல்லையே !
நம் பாரத நாட்டின் சரித்திரமே காட்டுகிறதே!! 
சிந்திக்க வேண்டாமா?

"நிறுத்துவோமே ஹிந்து தெய்வங்களின் மீது உமிழப்படும் காழ்ப்புணர்ச்சியை..."

"சக்தி உள்ள ஹிந்து தெய்வங்கள் நமக்கு அனுக்கிரஹம் செய்ய இருக்கும் போது, அந்த தெய்வத்தின்  அனுக்கிரஹம் பெற வழி என்ன?" என்று நினைப்பது தானே புத்திசாலித்தனம்!!



வேதத்தில் சொல்லப்பட்ட தெய்வங்கள் கற்பனை அல்ல..
அவர்கள் நிஜமான தெய்வங்கள்.
"அர்ச்ச அவதாரம்" செய்த எம்பெருமான், அந்த இடங்களில் தன் சாந்நித்யத்துடனேயே இருக்கிறார்.

"கோவிலே இடிக்கப்பட்டாலும், தெய்வ சிலைகளே இடிக்கப்பட்டாலும்" அங்கு தன் சாந்நித்யத்துடனேயே இருக்கிறார்..

"உண்மையான பக்தி நாம் செய்தால், தன்னை மீண்டும் அர்ச்ச அவதார மூர்த்தியாக காட்டி நமக்கு முன் வந்து விடுகிறார்..." என்பதை நாம் மறக்க கூடாது.

எம்பெருமான் நாராயணனை "அந்தர்யாமி"யாக (4) அனுபவிக்கும் திருமழிசை ஆழ்வார், திருக்குடந்தை (கும்பகோணம்) சென்ற போது,
"அர்ச்சா (விக்ரக)" திருமேனியுடன், மூலவராக உள்ள ஆராவமுதனை (சாரங்கபாணி) தரிசிக்க வந்தார்.

பெருமாள் சயன கோலத்தில் படுத்து இருந்தார்.
அர்ச்ச ரூபத்தில் உள்ள பெருமாள், அனைவருக்கும் காட்சி கொடுப்பது போல தான் காட்சி கொடுத்தார்...

"பக்தனான தன்னை கவனிக்கவில்லையோ!!" என்று நினைத்த திருமழிசை ஆழ்வார், பின்வருமாறு பாட,
படுத்து இருந்த பெருமாள், "பக்தன் அழைக்கிறானே" என்றதும், கல் சிலையாக உள்ள பெருமாள், சயன கோலத்துடனேயே கொஞ்சம் எழுந்து (உத்தான சயனம்) அமர்ந்து விட்டார்.

நடந்த கால்கள் நொந்தவோ
....
காவிரிக்கரை குடந்தையுள்,
கிடந்தவாரே எழுந்திருந்து
பேசுவாழி கேசனே
என்று பாசுரம்..
இன்று நாம், கும்பகோணம் சென்று பார்த்தாலும், "சாரங்கபாணி கோவிலில் மூலவர் உத்தான சயனத்தில் (கிடந்தவாரே எழுந்திருந்த)" இருப்பதை காணலாமே!!..
"மூலவரை 'கல்' என்றா பார்த்தார்கள்? 5 வித அவதாரங்களில், நமக்காக பெருமாள் அர்ச்சா அவதாரமாக இருக்கிறார்" என்று தானே பார்த்தார்கள்.

"இந்த அனுபவத்தை, நாமும் நம் மனதில் கொண்டு வந்தால் தானே நமக்கும் பக்தி ஏற்படும்.. 
அப்பொழுதுதானே அர்ச்சா அவதாரத்தில் இருக்கும் பெருமாள், நம்மிடமும் பகவான் பேச முன் வருவார்".

"ஆழ்வார்கள் கண்களுக்கு அர்ச்சா திருமேனி எம்பெருமானாக தோன்றியதால் தானே, அவர்கள் பக்திக்கு பகவான் தலை அசைத்தார்" என்று கண்கூடாக காட்டுகிறதே...

இதே திருமழிசை ஆழ்வார், காஞ்சிபுரம் சென்ற போது, காஞ்சி அரசன் இவரை நாடு கடத்த உத்தரவு இட,
அரச்சா திருமேனியுடன் சயன கோலத்தில் இருந்த யதோக்தகாரி என்ற வேகாசேது பெருமாளை, அர்ச்சா (விக்ரக) ரூபத்துடனேயே "ஓரிருக்கை" என்ற ஊர் வரை கூட்டிக்கொண்டு கிளம்பி சென்று விட்டாரே..
அந்த பெருமாளை பார்த்து,
கணிகண்ணன் போகின்றான், 
காமரு பூங்கச்சி மணிவண்ணா ! கிடக்க வேண்டா ! 
துணிவொன்றிச் செந்நாப் புலவோன்யான் செல்கின்றேன், 
நீயுமுன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்
என்று சொல்லி, கல் சிலையாக உள்ள பெருமாளை நடக்க வைத்து விட்டாரே...

அரசன் மன்னிப்பு கேட்க, பின்னர் "மீண்டும் படுத்துக்கொள்" என்றதும் மீண்டும் வந்து படுத்து கொண்டு விட்டாரே!! பெருமாள்.

அர்ச்சா அவதாரமாக இருந்து கொண்டே பெருமாள், இவர்களிடம் பேசினார் என்றால், "நம் பக்தியை பொறுத்து பகவான் நம்மிடம் பேசுவார்" என்பது தானே இதில் நிரூபணம் ஆகிறது..



உன் பக்தி எந்த அளவு உள்ளதோ, அந்த அளவுக்கு பகவான் பேசுகிறார்..

25% உனக்கு பகவான் மீது நம்பிக்கை இருந்தால், பகவான் உன்னிடம் 25% பழகுகிறார்.
50% உனக்கு பகவான் மீது நம்பிக்கை இருந்தால், பகவான் உன்னிடம் 50% பழகுகிறார்.
100க்கு 100% ஆழ்வார்களை போன்று, மீராவை போன்று, சக்குபாய் போன்று பக்தி செய்தால், நேரில் வந்து பழகுகிறார்.
நம் பக்தியை கொண்டு தானே, இறை அருள் நமக்கு கிடைக்கிறது.

நமக்கும் ஆழ்வார்கள் போன்று, "அர்ச்சா மூர்த்தியே பகவானின் அவதாரம் தான்" என்ற தெளிந்த பக்தி இருந்தால், நம்மிடமும் பெருமாள் அர்ச்ச அவதாரமாகவே இருந்து கொண்டே பேசுவார்.

திருமங்கை ஆழ்வாருக்கு விசேஷமாக "அர்ச்சா திருமேனியையே" பெருமாளின் அவதாரமாக அனுபவிப்பதால், பெருமாளின் திவ்ய காட்சியை கூட இவர் பார்க்க ஆசைப்படவில்லை..
அர்ச்ச அவதாரமே இவருக்கு பகவானாக தெரிவதால், பல இடங்களில் "கண்டு கொண்டேன்" என்று பாடுவதை பாசுரங்களில் கவனிக்கிறோம்..

கதியேல் இல்லை
நின் அருள் அல்லது
எனக்கு நிதியே
திருநீர்மலை நித்திலத் தொத்தே,
பதியே பரவித் தொழும்
தொண்டர் தமக்குக் கதியே 
உனை "கண்டு கொண்டு" உய்ந் தொழிந்தேனே
என்று "பெரிய திருமொழி"யில் திருமங்கை ஆழ்வார் பாடும் போது,
வால்மீகி முனிவருக்கு ஏற்பட்ட தாபத்தை போக்க, அர்ச்ச திருமேனியுடன் திருநீர்மலையில் காட்சி கொடுத்த எம்பெருமானை பார்த்த உகப்பில் "கண்டு கொண்டேன்" என்று பாடுகிறார்.

புருவத்தின் மத்தியில் எம்பெருமான் திவ்ய காட்சி கண்டதை சொல்கிறாரா? இல்லை..
எம்பெருமான் ராமராக தன் விபவ அவதாரத்தை காட்டி தரிசனம் தந்ததை சொல்கிறாரா? இல்லை.
திருமங்கை ஆழ்வார், திருநீர்மலையில், அர்ச்சா திருமேனியுடன் இருக்கும் எம்பெருமானையே தனக்காக அவதரித்த பெருமாளாகவே பார்த்தார்.
சிலையாக தோன்றிய எம்பெருமானை பார்த்ததினால் வந்த உகப்பில் "கண்டு கொண்டேன்" என்று ஆனந்தப்படுகிறார்..

இந்த பாசுரத்தை ஆரம்பிக்கும் போது "கதியேல்" என்ற சொல்லை கொண்டு ஆரம்பிக்கிறார்.

திருநீர்மலை பெருமாளை நேரில் கண்ட திருமங்கை ஆழ்வார், "தனக்கு ஒரு கதி உண்டா? மோக்ஷத்துக்கு கதி (வழி) உண்டா?" என்று தன் மனசாட்சியையே கேட்க.. மனசாட்சியே பதிலாக
"என் திறமையால் எனக்கு மோக்ஷத்துக்கு கதி இல்லை." என்று  சொல்ல,
"எனக்கும் என்று ஒரு கதி (வழி) உண்டாகில், அது உம்முடைய அருளை கொண்டு தான்" என்று எம்பெருமான் அருளை எதிர்பார்த்து,
கதியேல் இல்லை...
நின் அருள் அல்லது
என்று ஆரம்பிக்கிறார் திருமங்கை ஆழ்வார்.
மேலும்,
உலகத்தில் உள்ளவர்கள் பொதுவாக, வயதான காலத்துக்காக தன் பாதுகாப்புக்காக, நிதியை சேர்த்து வைத்து கொள்வார்கள்..
அதே போல,
பரலோக வாழ்க்கைக்காக, புண்ணிய காரியங்களை செய்து புண்ணியம் என்ற நிதியையும் சேர்த்து வைத்து கொள்வார்கள்..

இந்த இரண்டு நிதியுமே அல்பமானவை, நிரந்தரமற்றவை..
சேர்த்த பணம் எல்லாம் ஒருநாள் செல்வழிந்து போய் விடும்..
இல்லை, செல்வம் இருக்கும் இவன் போய் விடுவான்..



புண்ணியம் காக்குமே என்றாலும், கொஞ்ச காலம் சொர்க்க லோகத்தில் இருக்க செய்து விட்டு, "பூலோகத்தில் நீ செய்த புண்ணியங்கள் இன்றுடன் தீர்ந்தது போ" என்று இந்திரனும் கீழே தள்ளி விட்டு விடுவான்..
மீண்டும் பிறக்க வேண்டியது தான்...

இதனை கருத்தில் கொண்டு,
செல்வம் என்ற நிதியையும் தள்ளி,
புண்ணியம் என்ற நிதியையும் தள்ளி விட்டு,
திருமங்கை ஆழ்வார், "எனக்கு இகத்திலும் பரத்திலும் என்றும் அழியாத வைப்பு மா நிதியாக எம்பெருமானே திருநீர்மலையில் இருக்கிறார்" என்று பாடுகிறார்.
எனக்கு நிதியே
திருநீர் மலை நித்திலத்தொத்தே

இங்கு நித்தில தொத்தே என்றால் "பவள கொத்து" என்று அர்த்தம்..

பவளத்திற்கு இயற்கையாகவே ஒரு குளிர்ச்சி உண்டு.
பவள மணி மாலையாக கழுத்தில் போட்டு கொண்டால், உடல் குளிர்ச்சியாகும்..
இங்கு, பவள கொத்து என்று திருநீர்மலை எம்பெருமானையே சொல்லி கொஞ்சுகிறார் திருமங்கை ஆழ்வார்.

குளிர்ச்சி தரும் கருணை கொண்ட திருநீர்மலை பெருமாளை பார்த்ததுமே, 'பெருமாளையே ஒரு பவள மாலை என்ற தன் நிதியாக ஆக்கிக்கொண்டு, தன் கழுத்தில் போட்டு கொண்டு விட வேண்டும்' என்று ஆசை உண்டாகி விட்டது ஆழ்வாருக்கு.

"எனக்கும் கதி உண்டா?" என்று மோக்ஷத்துக்கு வழி தெரியாமல் வந்த தனக்கும், "கதி உண்டு" என்று காட்டி விட்டார் திருநீர்மலை பெருமாள் என்றதும், அடுத்த பதத்தில் "பதியே" என்று சொல்லி, "உன்னை கண்டு கொண்டேன்" என்று சரண் அடைகிறார்..

பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உனை "கண்டு கொண்டு" 
உய்ந் தொழிந்தேனே

ஆழ்வார்கள் பாசுரங்கள் தமிழே தமிழ்...

தமிழை வளர்க்க, பாசுரங்களை புரிந்து கொண்டாலேயே தமிழ் வாழுமே. .



Thursday 7 November 2019

ஆன்மீக சொற்பொழிவு செய்பவர்கள் எப்படி பேச வேண்டும்? தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஆன்மீக சொற்பொழிவு செய்பவர்கள் எப்படி பேச வேண்டும்?



உலகத்தில் உள்ள எதை பற்றியும், நம் எச்சில் வாயால் பேசி விடலாம், பேசலாம்...
ஆனால்,
நம்மை படைத்த பகவானை பற்றி நம் எச்சில் வாயால் பேசலாமோ? பேச முடியுமா?..

சொல்லுக்கும் அப்பாற்பட்டவர் அல்லவா "பகவான்"!
"பரமாத்மாவின் பெருமையை சொல்" என்று சப்த ப்ரம்மமாகிய வேதத்தை கேட்டால்,
"பகவானின் பரத்துவத்தை பற்றி சொல்ல இயலாது" என்று வேதமே  தயங்கி பேசுகிறது...

பகவானின் பெருமையை பற்றி சொல்ல, ஏன் மகான்கள் கூட தயங்கினார்கள்?...
"வாக்கு தூய்மை இல்லை" என்று பெரியாழ்வார், இந்த கேள்விக்கு பதில் சொல்கிறார் என்று கவனிக்க வேண்டும்.
"வாக்கில் தூய்மை இல்லாததால், எம்பெருமான் பெருமையை உரைக்கவும்,
எம்பெருமான் நாமத்தை சொல்லவும் கூட, அஞ்சுகிறேன்"
என்று பெரியாழ்வார் சொல்கிறார்..
யார் இப்படி சொல்கிறார்? என்று இங்கு கவனிக்க வேண்டும்..

பகவானின் பெருமையை நினைக்கும் போது, பெரியாழ்வார் போன்ற ஆழ்வார்கள்,
எம்பெருமான் பெருமையை தன் வாயால் பேச முயற்சித்து, "தன் எச்சில் பேச்சால், எம்பெருமானை  களங்கம் செய்து விடுவோமோ!!"
என்று அஞ்சினார் என்றால், 'நாம் எத்தனை நிதானத்துடன் பேச வேண்டும்' என்று புரியும்.

"எப்பேற்பட்டவர் பெரியாழ்வார்" என்று கவனிக்க வேண்டும்..
யார் இப்படி சொல்கிறார்? என்று கவனிக்க வேண்டும்..
"ஆண்டாளை மகளாக பெற்றவர்" என்ற பெருமையை உடையவர்,
எம்பெருமானை நேரில் தரிசித்து "பல்லாண்டு..." பாடியவர்,
ஆழ்வார்களில் ஒருவர்,
இப்படி அஞ்சினார் என்றால்,
நாம் எத்தனை கவனத்துடன் பகவானை பற்றி பேச வேண்டும், 
என்று கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்..

வாக்குத்தூய்மை இல்லாமையினாலே
மாதவா!! உன்னை வாய்க்கொள்ளமாட்டேன்
என்று பாசுரம்.
இங்கு திருமொழியில் 'பெரியாழ்வார்',
"எம்பெருமான் பெருமையை, தன் எச்சில் வாயால் பேசுவதாவது?
என்று அஞ்சுகிறார்.

"இந்த பாசுரத்தின் கனத்தை (weight) நாம் உள் உணரும் போது தான், 
நாம் பகவானை பற்றி பேசும் போது, எத்தனை கவனத்துடன் பேச வேண்டும்" என்று புரிந்து கொள்ள முடியும்..
"பகவானின் பெருமையை நம்மால் பாட முடியாது, பேச முடியாது.. 
அவர் வாக்குக்கும் அப்பாற்பட்டவர்"
என்று வேதம் சொல்கிறது...

இதே விஷயத்தை மற்ற மதங்கள் கூட சொல்வதை கவனிக்கலாம். அதோடு நின்று விடுகிறது மற்ற மதங்கள்.



சப்த ப்ரம்மமாகிய அதே வேதம்,
"வாக்குக்கு எட்டாதவர் தான் பரமாத்மா, 
மனசுக்கு அப்பாற்பட்டவர் தான் பரமாத்மா..
அதற்காக, 
அவர் பெருமையை பேசாமல், நினைக்காமல் இருந்து விடாதே!!....
வேத சாஸ்திரம் எப்படி எம்பெருமானை பேசுகிறதோ, அது போலவே பேசு!!
புராணங்கள், சாஸ்திரங்கள் எப்படி பரமாத்மாவை காட்டுகிறதோ, அது போலவே நினை!!
நீயாக கற்பனை செய்து!! 
உன் புத்தியை கொண்டு பேசி, 
எம்பெருமான் பெருமையை நீ தாழ்த்தி பேசாதே"
என்று பகவானை பற்றி 'பேசு, நினை' என்ற அனுமதியை நம் அனைவருக்கும் கொடுத்து,
முக்கியமாக உபன்யாசகர்கள், பௌராணிகர்கள், பேச்சாளர்களை பார்த்து ஜாக்கிரதை படுத்துகிறது...

"பகவான் பெருமையை பேச முடியாது... 
இருந்தாலும் சும்மா இருந்து, வீண் பொழுது போக்கி விடாதே!!  
கிடைத்த வாழ்க்கையை வீண் செய்யாதே!
மனித பிறவி கிடைப்பது மிகவும் அரிது!! 
ஆதலால் உன் வாயால் பகவான் பெருமையை எப்பொழுதும் பேசு, 
உன் மனதால் அவரை எப்பொழுதும் நினைத்து கொண்டே இரு" 
என்று வேதம் அனுமதி கொடுக்கிறது.

"வாக்குக்கு அப்பாற்பட்ட பகவானை பேசு என்றால்,எப்படி பேச வேண்டும்?"
என்ற கேள்வி நமக்கு எழலாம்..
"தீது இல்லா மொழிகள் கொண்டு"  பகவானை பேசு
என்று 'தொண்டரடிபொடி ஆழ்வார்' அதற்கு பதில் சொல்கிறார்..

"நம் புத்திக்கு எட்டிய அளவில், 
அருவெறுக்க தக்க உதாரணங்களையும், 
அருவெறுக்க தக்க சொற்களையும், 
கற்பனையான கதைகளையும், 
நமக்கு தெரிந்த படி பிதற்றி, 
'பெருமாளுடைய பெருமையை', 
நம் எச்சில் வாயால் குறைத்து பேசி விட கூடாது..."
என்பதை உணர்த்த,
"தீது இல்லா மொழிகள் கொண்டு, எம்பெருமான் பெருமையை பேசு" 
என்று தொண்டரடிபொடி ஆழ்வார் நமக்கு வழி காட்டுகிறார்..

"வாக்குக்கும், மனதுக்கும் அப்பாற்பட்டவர் பகவான்" என்று உபநிஷத் சொல்லிவிட்டு,
இருந்த போதிலும், "வாக்குக்கு எட்டாத அந்த பரமாத்மாவை பற்றி நீ பேசு", "மனதுக்கு எட்டாத அந்த பரமாத்மாவை பற்றி நீ தியானம் செய்" என்று நம்மை பேச உற்சாகப்படுத்துகிறது..

"வாக்குக்கும், மனதுக்கும் அப்பாற்பட்ட பரமாத்மாவை எப்படி பேச முடியும்? எப்படி தியானிக்க முடியும்?"
இதற்கு ஸ்ரீ கிருஷ்ணரே நமக்கு கீதையில் பதில் சொல்கிறார்.




"பகவானை பற்றி பேசவேண்டும் என்று நீ நினைத்தால், 
உன் சொந்த 'புத்தியால்' பேசாதே!!..
ஆழ்வார்கள் எப்படி பேசி இருக்கிறார்களோ!,
ஆழ்வார்களின் ஸ்ரீ ஸூக்திகளுக்கு எப்படி வ்யாக்யானம் (விளக்க உரை) செய்து இருக்கிறார்களோ!
மகரிஷிகளான வியாசர், வால்மீகி போன்றவர்கள் எப்படி பேசி இருக்கிறார்களோ!!  அது போல பேச கற்றுக்கொள்.

பகவானை பற்றி அறிந்து கொள்ள, ஒரு தகுந்த (ஞான பூர்ணனான) ஆச்சார்யாரிடம் பணிந்து இருந்து கேட்டு, 
அவர் சொன்ன உபதேசங்களை மனதில் வாங்கி கொண்டு, 
அந்த விஷயங்களின் அர்த்தங்களை தான் முதலில் அனுபவித்து, பகவானிடம் தான் முதலில் பிரேமை (அன்பு) கொண்டு,, 
பிறகு, பகவானை பற்றி பேச போகிறோமே என்ற பக்தியுடன் (தெய்வத்திடம் ஆசை), உன்னுடைய மனதை பகவத் அனுபவத்தில் உயர்த்திக்கொண்டு பகவானை பற்றி சொல்வாயானால், உனக்கும் பிரயோஜனம் உண்டு.. கேட்பவருக்கும் பிரயோஜனம் உண்டு.."

தத் வித்தி ப்ரணி  பாதேன 
பரி பிரஷ்னேன சேவையா 
உபதேக்ஷ்யந்தி  தே  ஞானம்
ஞானிநஸ் தத்வ தர்ஷின:
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (Chapter 4:  Sloka 34)

"பகவானை பற்றி அறிந்த ஞான குருவிடம் பணிந்து, குருவுக்கு சேவை செய்து, அவர் உபதேசத்தை பெற்று, அவர் உபதேசத்தை மனதில் உள் வாங்கி கொண்டு, அந்த அர்த்தங்களை தான் முதலில் அனுபவித்து, பிறகு பகவான் மீது களங்கம் ஏற்படாத புண்ணிய சொற்களை கொண்டு, பக்தியுடன் சொல்" 
என்பதை ஸ்ரீகிருஷ்ணா பரமாத்மாவே நமக்கு சொல்லி வழிகாட்டுகிறார்.

"எம்பெருமான் பெருமையை கேட்க வேண்டும்"
என்று ஆசையோடு வரும் பக்தர்கள் அனைவரும், சொல்ல வந்த பௌராணிகரை (உபன்யாசம் செய்பவர்) தானே நம்பி வருகிறார்கள்!!..
ஆன்மீக சொற்பொழிவாளர்கள் நினைத்து பார்க்க வேண்டும்..

எம்பெருமானை பற்றி, பலர் முன்னிலையில் பேசுபவர்கள், ஜாக்கிரதையாக சொல்ல வேண்டாமோ?...

"நம் எச்சில் வாயால், 
எம்பெருமான் பெருமையை குறைத்தோ,
எம்பெருமான் பெருமையை தவறாகவோ,
எம்பெருமானை மரியாதை குறைத்தோ பேசி விட கூடாதே!!"
என்று அச்சம் வேண்டாமா?...

எம்பெருமானை பேசுவதற்காகவே ஏற்பட்ட மங்களமான, பவித்ரமான, உயர்ந்த சொற்களை பயன்படுத்து பேச வேண்டாமா?...

எம்பெருமான் பெருமையை குறைத்து விடாமல், உயர்ந்த சொற்களை கொண்டு பேசினால் தானே, கேட்பவர்களுக்கும் எம்பெருமான் மீது பக்தி உண்டாகும்... 
அப்படித்தானே மஹான்கள் வழி காட்டுகின்றனர்.
"எம்பெருமான் பெருமையை", உயர்ந்த சொற்கள் கொண்டு பேசினால் தானே, நாம் பேசியதற்கே பிரயோஜனம்.
அப்படி பேசினால் தானே,
உபன்யாசம் செய்பவருக்கும், எம்பெருமான் பெருமையை பேசிய ஆத்ம திருப்தி கிடைக்கும்...



பெருமாள் பெருமையை பேசும் போது, "தீது இல்லா மொழிகள் கொண்டு  எம்பெருமான் பெருமையை பேசு"
என்று நம்மை நிதானிக்கிறார் தொண்டரடிபொடி ஆழ்வார்..

மேலும்,
மற்ற மதங்கள் "மனிதர்களால் உருவானவை"...
அவர்கள் உருவாக்கி வழிபடும் தெய்வத்தை,
"உருவாக்கிய மனிதர்களே", கடுமையான பிரச்சாரம் மூலமாகவும், மிரட்டியும், தன் தெய்வத்தை மக்கள் மத்தியில் நிலை நாட்ட முயல்கின்றனர்...
இது போன்ற மதங்கள் பல ஆயிரம் உருவாகி, கால வெள்ளத்தில் அழிந்து விட்டன...

காலம் கணக்கிட முடியாத படி ("சனாதன" என்று சமஸ்கரித சொல்) என்றுமே இருப்பது, சப்த ப்ரம்மாகிய வேதம்..
சப்தத்திலேயே கலந்து இருக்கிறது வேதம்..
அதனால் தான், வேதத்துக்கே "சப்த பிரம்மம்" என்று பெயர்.

வேதத்தை அறிந்து கொண்டு தான் ப்ரம்ம தேவனே,
"ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம்" என்று வரிசையாக படைத்தார்..
உலக ஸ்ருஷ்டி ஆரம்பித்தார்..
"ப்ரம்ம தேவனையும் படைத்து, அவருக்கு வேதத்தையும் சொல்லி கொடுத்தவர்" பரவாசுதேவன் நாராயணன் என்று நம் ஹிந்து தர்மம், பரமாத்மா பரவாசுதேவன் ஆரம்பித்து, உலக சிருஷ்டியை சொல்கிறது...
வேதத்தில் சொல்லப்படும் அனைத்து தெய்வங்களும் நிஜமானவை.
அனைத்து தெய்வங்களுமே நம்மை விட அதிபலசாலிகள்.. நம்மை விட உயர்ந்தவர்கள்.. செய்த புண்ணியங்களால் தேவ பதவிகளை பெற்றவர்கள்..

ப்ரம்மா உட்பட அனைத்து தேவர்களுக்கும், சர்வேஸ்வரன் "பரவாசுதேவன் நாராயணன்".
இதனால் தான்,
மற்ற மதங்களை போல, நம் சனாதன தர்மம் எந்த நிலையிலும் அழியாமலேயே உள்ளது... அழிக்கவும் இயலாதது..

இதனால் தான்,
1000 வருடங்கள் அரேபியர்கள் நுழைந்து இஸ்லாமிய ராஜ்யமே கடுமையாக இந்த பாரத மண்ணில் நடத்தியும்,
200 வருடங்கள் ஐரோப்பிய கிறிஸ்தவ ஆட்சியே கடுமையாக நடத்தியும், இன்றும் பாரத நாடு ஹிந்துக்களால் நிரம்பி உள்ளது...

அது போதாதென்று, உலகத்தில் இன்று எங்கு சென்றாலும்,
ஹிந்து தர்மத்தில் ஈர்க்கப்பட்டு, ராமரையும், கிருஷ்ணரையும் பக்தி செய்பவர்கள் அதிகரிக்கின்றனர்.
எங்கு சென்றாலும் "ஒரு ஹிந்துவை காணலாம்" என்ற அளவுக்கு உலகம் நிரம்ப இன்று இருப்பதை காண முடிகிறது..

மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களை, மனிதர்களே பிரச்சாரம் செய்து காக்க முயற்சிக்கின்றனர்..
ஆனால்,
நம் சனாதன தர்மம் அசைக்கப்படும் போது, தெய்வங்களே தன்னை அவதரித்து கொண்டு காக்கிறது..
இதற்கு அத்தாட்சியே,
1200 வருட அந்நிய ஆதிக்கத்தையும் தாண்டி, இன்றும் ஹிந்து தர்மம் என்று சொல்லப்படும் சனாதன தர்மம் நிற்பதற்கு காரணம்.

சுயமே ஹிந்து தர்மத்தை காக்கும் பொறுப்பை தெய்வங்களே கொண்டுள்ளது நம் தர்மத்தில்..
அப்படி இருக்கும் போது,
'நாம் தெய்வங்களை பற்றி பேசுவதால் தான், எம்பெருமான் நாராயணன் பெருமை, மற்ற தெய்வங்களின் பெருமை உலகில் நிற்கிறது' என்று கர்வபட்டு விட கூடாது...

சுயமே பிரகாசமாக உள்ள சூரியனை, ஒரு அகல் விளக்கு கொண்டு ப்ரகாசப்படுத்தி விட்டதாக,
பௌராணிகர்கள் (ஆன்மீக சொற்பொழிவாளர்கள்) நினைக்க கூடாது... கர்வ பட கூடாது..



ப்ராம்மணன், "சூரியன் உதிக்கும் முன் எழுந்து, ஸ்நானம் செய்து, காயத்ரி மந்திரத்தை தான் ஜபித்ததால் தான், சூரியன் உதிக்கிறார்" என்று நினைத்தால், அது எத்தனை மடத்தனமோ! அத்தனை மூடத்தனம்
"தன் பேச்சால் தான், மக்கள் மனதில் பக்தி நிலைக்கிறது"
என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் நினைப்பதும்..
இந்த கர்வம் கூடவே கூடாது...

ப்ராம்மணன், "காயத்ரி மந்திரம் சொல்லாமல் போனாலும், தேவ தர்ப்பணம் செய்து க்ரஹங்களை, வ்யூஹ மூர்த்தியான பரமாத்மாவை திருப்தி செய்யாமல் போனாலும்"
சூரியன் எப்படியும் "தக தகவென்று உதிக்க" தான் போகிறார்!!

"என்னால் தான் சூரியன் உதிக்கிறார்" என்று நினைக்காமல்,
"தனக்கும் அந்தர்யாமியாக உள்ள, சூரியனுக்கும் அந்தர்யாமியாக உள்ள பரமாத்மாவை, நானும் வழிபட மனித பிறவி கிடைத்ததே"
என்று தனக்கு கிடைத்த பாக்கியத்தை ப்ராம்மணன் நினைத்து பார்த்தால், கர்வம் இல்லாமல் சந்தியா வந்தனம் செய்வான்..
அப்படி கர்வமில்லாமல், ஈஸ்வர பக்தியுடன், சந்தியா வந்தனம் செய்து வாழும் ப்ராம்மணனை, உலகமும் மதிக்குமே...

அது போல,
"நான் பகவானை பற்றி 10 வார்த்தைகள் சொன்னதால் தான், உலகத்தில் பக்தி பிரச்சாரம் ஆகிறது... நாராயணனை எல்லோரும் ஏற்று கொள்கிறார்கள்"
என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் நினைக்க கூடாது...

மாறாக,
"நம்முடைய பிரச்சாரம் தேவையே இல்லை... 
வேதத்தின் நாயகனான எம்பெருமான் அவர் பெருமையாலேயே ப்ரகாசிக்கிறார்.. அத்தகைய பெருமை உடையவர்"
என்றே ஒவ்வொரு ஆன்மீக சொற்பொழிவாளர்களும் நினைக்க வேண்டும்.

"நான் ராமாயண பிரச்சாரம் செய்கிறேன்.. கிருஷ்ணரை பற்றி பிரச்சாரம் செய்கிறேன்..."
என்று தன் அனுபவத்துக்கு தோன்றியபடி,
நாமாக ஒன்றை கற்பனை செய்து கொண்டு,
உலகத்தில் கேட்க தகாத, அருவெறுப்பான சம்பவங்களை சொல்லி,
எம்பெருமானை பற்றி நம் எச்சில் வாயால் பேசினோம் என்றால்,
கேட்கும் ஜனங்கள் ஏளனமாக சிரிக்க போகிறார்களே தவிர,
"ராமாயணம், பாகவதம் கேட்ட பலனாக அவர்களுக்கு தான் பக்தி வந்து விட போகிறதா?... இல்லை சொற்பொழிவு செய்தவருக்கு பக்தி உண்டாக போகிறதா?.."
பகவானை பற்றி பேச அமர்ந்து விட்டு, 
ஏளனமாக, மரியாதை குறைந்த ஈன சொற்களை பயன்படுத்தி பேசும் போது, 
ஆசையாக பகவான் பெருமையை கேட்க வரும் சாதாரண ஜனங்களுக்கு கூட, ரசிக்காதே!!.

"பெருமாளை போய் இப்படி தரம் குறைந்த வார்த்தைகளால் பேசுகிறாயே.. நியாயமா?"
என்று சொற்பொழிவை கேட்பவர்கள் கேள்வி கேட்காததால் தானே, இப்படி தரம் தாழ்ந்த ஆன்மீக சொற்பொழிவுகளும் ஆங்காங்கே நடப்பதை காண்கிறோம்.

"யாரை பற்றி பேசுகிறோம்?"
என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கவனிக்க வேண்டும்...
"ஆழ்வார்கள் எப்படிபட்ட உயர்ந்த பவித்ரமான சொற்களையே பயன்படுத்தி, தன் வாக்கால் பகவானின் பெருமையை தரம் தாழ்த்தி விட கூடாதே என்று பயந்தார்கள்!!"
என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கவனிக்க வேண்டும்...

"நம் சொற்பொழிவினால், நமக்கும் பக்தி உயர வேண்டும்... கேட்பவருக்கும் பக்தி உயர வேண்டுமே"
என்று உயர்ந்த பதங்களை கொண்டே பேச வேண்டும்..

எம்பெருமானை பற்றி நாம் சொல்ல, கேட்பவன் பக்தி உயர்வதை பார்க்க ஆசை பட வேண்டும்..

"ராமரும், கிருஷ்ணரும் நம் தெய்வம், என் பெருமாள், நம் பெருமாள்"
என்று ஹிந்துக்கள் யாவரும் பரம்பரை பரம்பரையாக வளர்ந்து இருக்கிறோம்..

இப்படி வளர்க்கப்பட்ட நாம்,
ஈன சொற்கள் கொண்டு பேசப்படும் இது போன்ற ஆன்மீக சொற்பொழிவை கேட்கும் போது வேதனை படுகிறோம்..

ஹிந்துக்கள் பொதுவாகவே சாத்வீக குணத்துடனேயே இருப்பதால்,
இது போன்ற சொற்பொழிவுகளை அப்போதே திருத்தி கண்டிக்காமல்,
"தன் வரையிலாவது காதில் விழ வேண்டாமே" என்று ஒதுங்கி விடுகின்றனர்...
இது கேட்பவர்களின் குற்றம் அல்ல.. ஆன்மீக சொற்பொழிவாளர்களின் குற்றமே..



ஆன்மீக சொற்பொழி செய்பவர்கள், 
தன் அறிவை காட்டி எம்பெருமான் பெருமையை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை...
"அப்படி பேசினால் தான் கூட்டம் வரும்" என்று நினைப்பதும் தவறு...

"ஆழ்வார்கள்" பாடிய பாசுரங்களை,
அதற்கு விளக்கம் கொடுத்த "பெரியவாச்சான் பிள்ளை. தேசிகர், ராமானுஜர்" போன்ற அவதார புருஷர்கள் பயன்படுத்திய உயர்ந்த சொற்களையே பயன்படுத்தி மக்களுக்கு எளிய தமிழில், 'அவன், இவன்' என்று பகவானை தரம் குறையாமல் பேசி  புரிய வைக்க முடியும்.

நம் எச்சில் வாயால நம் புத்தியை கொண்டு ஏன் எம்பெருமான் பெருமையை குறைக்க வேண்டும்?...

ஆன்மீக சொற்பொழிவாளர்கள்,
ஹிந்துக்களின் பக்தியை உயர்த்த,
தன் பக்தியையும் உயர்த்த,
அவதார புருஷர்கள் பயன்படுத்திய உயர்ந்த சொற்களை கொண்டே பேச வேண்டும்.. மக்கள் மனதில் பக்தியை பெருக்க வேண்டும்..
அப்படி உயர்ந்த சொற்களால் பக்தியை வளர்க்கும் ஆன்மீக பெரியோர்கள் இன்றும் இருக்கிறார்கள். 
அவர்கள் அனைவரையும் ஹிந்துக்களாகிய நாம் கவுரவிக்க வேண்டும். அவர்களை அவர்கள் தர்மத்தில் வாழ முடிந்த உதவிகளை  நாம் செய்ய வேண்டும்.

வாழ்க ஹிந்துக்கள்...
வாழ்க நம் பாரத தேசத்தில் வாழும் அவதார புருஷர்கள்..