Followers

Search Here...

Monday 3 February 2020

பாசுரம் (அர்த்தம்) - எம்மனா! என் குல தெய்வமே! என்னுடைய நாயகனே! - பெரியாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பாசுரம் (அர்த்தம்) : திருப்பதி பெருமாள்

எம்மனா!!
என் குல தெய்வமே!!
என்னுடைய நாயகனே!!
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை
இவ்வுலகினில் யார் பெறுவார்?
-- திருமொழி (பெரியாழ்வார்)




பெரியாழ்வார், திருமலையில் உள்ள ஸ்ரீனிவாசபெருமாளை 3 அழகான பெயர்கள் சொல்லி கூப்பிடுகிறார்...
முதலில்,
  • "எம்மனா!!" என்று கூப்பிடுகிறார்.
பிறகு,
  • "என் குலதெய்வமே!!" என்று கூப்பிடுகிறார்.
பிறகு
  • "என்னுடைய நாயகனே!!" என்று உரிமையுடன் கூப்பிடுகிறார்.

இந்த 3 நாமங்களின் உள் அர்த்தம் தெரியாமல் போனாலும், இந்த சொற்களே இனிக்கிறது...

அர்த்தம் தெரிந்து கொண்டால், தினமும் இந்த 3 நாமத்தை திரும்ப திரும்ப சொல்ல ஆசை வந்து விடும் நமக்கு.
'பெரியவாச்சான் பிள்ளை (உபேயம், உபாயம், பர தெய்வமாக),
ஆளவந்தார் (ஞான விரோதி, ஆஸ்ரய விரோதி, மோக்ஷ விரோதி), 
உடையவர் ஸ்ரீராமானுஜர் (தேக அபிமானம் கழிந்து, அன்ய ஷேசத்துவம் கழிந்து, ஸ்வஸ் ஸ்தாதந்திரியமும் கழிந்து)
போன்ற ஆச்சார்யர்கள் 'இந்த மூன்று சொற்களின் (எம்மனா, என் குலதெய்வமே, என்னுடைய நாயகனே) அர்த்தத்தை பலவாறு ரசிக்கிறார்கள்' என்றும் பார்க்கிறோம்.

மரணத்தை ஒருவன் பார்த்தாலேயே "உடல் வேறு ஆத்மா வேறு" என்ற ஞானம் (அறிவு) கொஞ்சம் பகுத்தறிவு உள்ளவனுக்கும் வந்து விடும்.
ஆதலால்,
"உடல் வேறு ஆத்மா வேறு" என்று நினைப்பது மட்டுமே உண்மையான ஞானம் என்று நினைக்கக்கூடாது.. அது மட்டுமே ஞானம் இல்லை.

"நான் ஜீவன் (ஆத்மா)! நான் பகவானுடைய தாஸன்!"
என்று நினைப்பதே 'உண்மையான ஞானம்' என்கிறார்கள் நம் ஆச்சார்யர்கள்.

"உடல் நானில்லை, ஜீவனே நான். ஜீவனாகிய நான் ஒரு தனித்த பொருள்" என்று பகவானை விலக்கி விட்டு,
"தான் ஆத்மா, தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து கொள்வதே உண்மையான ஞானத்துக்கு விரோதம் தான்.
இப்படி நினைப்பதே "ஞான விரோதம்" என்கிறார்கள் நம் ஆச்சாரியர்கள். (அத்வைதம்)

(அத்வைதம் என்ன சொல்கிறது? விஷிஸ்டாத்வைதம் என்ன சொல்கிறது?) மேலும் அறிய இங்கே படிக்கவும்.

"எம்மனா" (எம்பெருமான்) என்ற சொல்லுக்கு
"உடல் நானில்லை, ஜீவனே (ஆத்மா) நான். ஜீவனாகிய நான் ஒரு தனித்த பொருள் இல்லை. நான் சுதந்திரமானவன் இல்லை. நான் பகவானின் தாஸன்"
என்று அர்த்தம் காட்டுகிறார்கள், நம் ஆச்சாரியர்கள். (விசேஷ அத்வைதம்)

ஆதலால்,
"எம்மனா" (எம்பெருமான்) என்று சொல்லும் போதே,
நமக்கு "ஞான விரோதமான அத்வைத புத்தி ஒழிந்து விடும்" என்கிறார்.




அது போல,
"என் குலதெய்வமே" என்று சொல்லும்போதே,
நமக்கு "ஆஸ்ரய விரோதமான புத்தி ஒழிந்து விடும். பெருமாளை ஆஸ்ரயிக்க வேண்டும் என்ற புத்தி ஏற்படும்" என்கிறார்.
அது போல,
"என்னுடைய நாயகனே" என்று சொல்லும்போதே,
நமக்கு "மோக்ஷ விரோதமான புத்தி ஒழிந்து விடும். வெறும் சுதந்திரம் (விடுதலை) மட்டும் பெறாமல், வைகுண்டம் (வீடு) என்ற நம் சொந்த வீட்டுக்கு (மோக்ஷம்) போக வேண்டும் என்ற புத்தி ஏற்படும்" என்கிறார்.




மேலும்
நாம் இந்த பிறவியில் அடைய வேண்டியது (உபேயம்) எது?
(What should we achieve?)
என்ற கேள்விக்கு,

"எம்மனா" (எம்பெருமான்) என்று சொல் மூலம்,
"நாம் அடைய வேண்டியவர் (உபேயம்), நம்முடைய பகவான் நாராயணனே"
என்ற தெளிவு ஏற்படுத்துகிறார், பெரியாழ்வார்.
"எம்மனா" என்ற சொல்லுக்கு "நான் அவருடையவன். அவருடைய சொத்து" என்று பொருள்.

நாம் அடைய வேண்டியது ("உபேயம்") யார் என்று தெரிந்து விட்டது.சரி...
ஆனால்,
பெருமாளை அடைய வேண்டிய வழி (உபாயம்) என்ன?
என்ற அடுத்த கேள்விக்கு,

"என் குலதெய்வமே" என்ற சொல் மூலம்,
"நாம் பெருமாளை அடைய வேண்டிய வழி (உபாயம்), அவரையே நம் குல தெய்வமாக கொள்வது தான்"
என்ற தெளிவை நமக்கு ஏற்படுத்துகிறார் பெரியாழ்வார்.

"பெருமாளை குலதெய்வமாக நீ ஆக்கிக்கொண்டால், 
நீ மட்டுமல்ல, உன் பரம்பரையில் பிறந்த அனைவருமே, 
அவர்கள் பிறவியில் அடைய வேண்டியதான (உபேயம்) பெருமாளை அடைந்து விடுவார்கள்"
என்கிறார் பெரியாழ்வார்.
"குலதெய்வமாக வெங்கடேசபெருமாளே அமைந்தவர்களுக்கு, வைகுண்டம் போகும் வழியையும் காட்டி, அடையும் லட்சியமாகவும் பெருமாளே இருந்து, மோக்ஷம் வரை துணையாகவே இருக்கிறார்" என்கிறார் பெரியாழ்வார்.

"யாருக்கு குலதெய்வமாக வெங்கடேசபெருமாள் அமைந்தாரோ!, அவர்களே பாக்கியவான்" என்கிறார் பெரியாழ்வார்.
மஹாபாரதத்தில் திரௌபதி "கோவிந்தா..." என்று தன் குலதெய்வமாக பெருமாளை வரித்து கொண்டதற்காக, அவளுடைய பேரன் பரிக்ஷித் கர்ப்பத்திலேயே அழிய வேண்டும் என்று அஸ்வத்தாமன் நினைத்தும், திரௌபதி என்ற பக்தைக்காக அவள் குலத்தை அழிய விடாமல் ரக்ஷித்தார் பெருமாள்.

குலதெய்வமாக இருந்து, நாமும் நம் பரம்பரையும், மோக்ஷம் போகும் வரை, நம் கூட இருந்தே ரக்ஷிக்கிறார்.

"என்னுடைய நாயகனே" என்ற சொல் மூலம், "பரதெய்வம் நாராயணனே"
என்ற தெளிவு ஏற்படுத்துகிறார் பெரியாழ்வார்.

உலகத்தில்,
சிலருக்கு இஷ்ட தெய்வமாக (உபேயமாக) "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார்.
அவர்கள் பெருமாளை "எம்மனா" (எம்பெருமான்) என்கிறார்கள்.

இன்னும் சிலருக்கு குல தெய்வமாக (உபாயமாக) "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார். 
அவர்கள் பெருமாளை "என் குல தெய்வமே" என்கிறார்கள்.

சிலருக்கு பர தெய்வமாக "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார். அவர்கள் பெருமாளை  "என்னுடைய நாயகனே" என்கிறார்கள்.

"தனக்கோ உபேயமாகவும் (இஷ்டதெய்வம்), உபாயமாகவும் (குலதெய்வம்), பரதெய்வமாகவும், 
மூன்று சம்பந்தத்துடன் பெருமாள் இருக்கிறாரே!"
என்ற பெருமிதமடைந்து பாடுகிறார் பெரியாழ்வார்,




பரதெய்வமாக இருக்கும் நாராயணனே, தனக்கு குலதெய்வமாகவும் இருக்கிறார். தனக்கு இஷ்டதெய்வமாகவும் இருக்கிறார்.
பெருமாள், 
என்னையும், என் பரம்பரையையும் ரக்ஷிக்கிறார் என்கிற போது,
என்னை பற்றியும் எனக்கு கவலையில்லாமல்
என் குடும்பத்தை பற்றியும் கவலையில்லாமல்
என்னை உங்கள் திருவடியை ஆச்ரயித்து கொண்டு இருக்குமாறு செய்து கொண்டு, நீங்கள் என்னை சுகமாக வைத்துக்கொண்டு, ரக்ஷிக்கிறீர்களே !!
உம்மிடத்தில் எனக்கு பரிபூரணமான ப்ரேமை உண்டாகும் படி செய்து, எப்பொழுதும் உங்கள் தொண்டுக்காகவே என்னை ஆக்கி,
என்னை வெளி உலக காரியங்களில் இங்கும் அங்கும் போக விடாமல் தடுத்து,
நீங்கள் என்னை பரிபாலிக்கும் அழகும்,
உங்கள் கருணைக்கு பாத்திரமாக இருக்கும் என் நிலையும்,
எனக்கு கிடைத்த நன்மையை (பாக்கியத்தை) போல, இவ்வுலகினில் யார் பெறுவார்? 
என்று என்கிறார் பெரியாழ்வார்.
அதையே,
நின்னுள் உள்ளேனாய்ப் பெற்ற நன்மை
இவ்வுலகினில் யார் பெறுவார்?
என்று பெருமிதம் அடைகிறார்.

நாமும் வெங்கடேச பெருமாளை, பரதெய்வமாகவும், குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் கொள்வோம்.
சர்வ மங்களத்தையும் திருப்பதி பெருமாளே, நமக்கும் நம் பரம்பரைக்கும் அருள்வார். 


குருவே துணை !



Saturday 1 February 2020

பாசுரம் (அர்த்தம்) - திருவுக்கும் திருவாகிய செல்வா - திருமங்கை ஆழ்வார் தேவாதிராஜ பெருமாளை (தேரழுந்தூர்) பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருமங்கையாழ்வார் தேர்அழுந்தூரில் உள்ள தேவாதிராஜ பெருமாளை மங்களாசாசனம் செய்து, தன்னை காப்பாற்றுமாறு சரணடைகிறார்.

திருமங்கை ஆழ்வார் "அர்ச்சா திருமேனியையே" பெருமாளின் அவதாரமாக அனுபவிப்பவர்.





அற்புதமான பாசுரம்..
அனைவரும் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டிய பாசுரம். .

திருவுக்கும் திருவாகிய செல்வா!!
தெய்வத்துக்கு அரசே!!
செய்ய கண்ணா!!
உருவச் செஞ்சுடராழி வல்லானே!!
உலகுண்டவொரு வா!!
திருமார்பா!!
ஒருவற்காற்றி உய்யும் வகையென்றால்
உடன் நின்று ஐவர் 
என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட!!
அஞ்சி!! நின்னடைந்தேன்!!
அழுந்தூர் மேல்திசை நின்ற
அம்மானே!!
-- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)

பாசுரத்தின் அர்த்தம் :

மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் யாருக்கு கிடைக்கிறதோ!! அவர்களுக்கு குறைவில்லாத செல்வம் கிடைக்கிறது.
எல்லோருக்கும் மங்களம் கொடுப்பவள் மஹாலக்ஷ்மி.

செல்வம் மட்டுமல்ல,
உலகில் நாம் காணும் அழகும், பொலிவும், அனைத்து மங்களமும் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷமே..

நமக்கு சர்வ மங்களத்தை தரும், திருவாகிய மஹாலக்ஷ்மி தனக்கு மங்களம் கிடைக்க, திருவாகிய நாராயணனை சரணடைந்து அவருக்கு பாத சேவை செய்து கொண்டிருக்கிறாள்.
திருவாகிய மஹாலக்ஷ்மியே தனக்கு வேண்டிய செல்வத்தை, அழகை, தன் பதியான திருவாகிய திருமாலிடம் பெறுகிறாளே !! பெருமாளே "செல்வமாக" இருக்கிறாரே!!
என்று பெருமாளின் பெருமையை நினைத்து திருமங்கையாழ்வார்
'திருவுக்கும் திருவாகிய செல்வா' என்கிறார்.
அழகுக்கெல்லாம் அழகர்,
பொலிவுக்கெல்லாம் பொலிவு உடையவர்,
செல்வதுக்கெல்லாம் செல்வமாக இருப்பவர்,
சர்வ மங்களத்துக்கும் மங்களத்தை தருபவர்,
மகாலட்சுமிக்கு பதியாக இருப்பவர்,
தானே பெரும் நிதியாக (செல்வமாக) இருப்பவர், 
எம்பெருமான் நாராயணன்.

அப்படிப்பட்ட பெருமைமிகுந்த பெருமாள் தன் எதிரே நின்று, திரு அழுந்தூர் என்ற திவ்ய தேசத்தில் தேவாதிதேவனாக காட்சி கொடுக்க, 'எனக்கு நிதியே' என்று கொஞ்சுவதை போல, "திருவுக்கும் திருவாகிய செல்வா' என்கிறார் திருமங்கையாழ்வார்.

மேலும்,
"தெய்வத்துக்கு அரசே" என்ற பதத்தை கொண்டு, தெய்வத்துக்கும் தெய்வமாக (தேவாதிராஜன்) பெருமாள் இருக்கிறார் என்று பூரிக்கிறார்.

தேவர்களுக்கு இந்திரன் (தலைவன்) யார்?
இந்திரன் (தலைவன்/அரசன்) என்ற சொல் யாரை குறிக்கிறது?
என்ற கேள்வியை 'இந்திர ப்ராணாதி கரணம்' என்ற வேதாந்தத்தில் ஒரு கேள்வியாக கேட்டு, அதற்கு பதில் சொல்கிறது.







"இந்திரன் யார்?" என்று இப்படி கேள்வி கேட்டு, இந்திரன் என்ற பெயரில் பலர் உள்ளார்களே!!.. என்று கேள்வி கேட்டு, முடிவும் சொல்கிறது...

மனிதர்களுக்கு (நரன்) தலைவனை "நரேந்திரன்" என்று சொல்வார்கள்.
தேவர்களுக்கு தலைவனை "தேவேந்திரன்" என்று சொல்வார்கள்.
சுரர்களுக்கு தலைவனை "சுரேந்திரன்' என்று சொல்வார்கள்.
மிருகங்களுக்கு தலைவனை "ம்ருகேந்திரன்" என்று சொல்வார்கள்.
யார் அனைவருக்கும் தலைவனோ அவரையே "இந்திரன்" என்று சொல்வார்கள்.

'இவர் இவருக்கு தலைவன், இவருக்கு இவர் தலைவனில்லை' என்று இல்லாமல்,
'நரன், தேவன்...' என்று விசேஷம் இல்லாமல், அனைவருக்கும் தலைவனாக இருக்கும் நாராயணனே 'இந்திரன்' என்று முடிக்கிறது வேதாந்தம்.
உப தெய்வங்களான இந்திரன், ப்ரம்மா, ருத்ரன், மனு போன்றவர்களுக்கெல்லாம் "அரசர்" என்ற பெருமையுடைய பரம்பொருள் அல்லவா, என் கண் முன்னே இருக்கிறார்!!
என்றதும்,
திரு அழுந்தூர் தேவாதிராஜ பெருமாளை பார்த்து
"தெய்வத்துக்கு அரசே"
என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.

தேவேந்திரனுக்கு மட்டும் அரசனல்ல (தேவராஜன் மட்டுமல்ல),
உலகில் தெய்வங்கள் என்று இருக்கும் அனைவருக்கும் அரசனாக இருக்கிறார் என்பதால்,
இந்த பெருமாளுக்கு "தேவாதிராஜன்" என்று பெயர் கொடுத்தார்.

மேலும்,
செய்ய கண்ணா!
உருவச் செஞ்சுடராழி வல்லானே!
உலகுண்ட ஒருவா!
திருமார்பா!
என்றெல்லாம் உங்களை எப்பொழுதும் பாடி மகிழ ஆசைப்படுகிறேன்!!
ஆனாலும், 
'என்னை பக்தி செய்ய விடாமல், என் கூடவே பிறந்த 5 சத்ருக்கள் உங்களிடம் நேரம் செலவழிக்கவே விடாமல் தடுக்கிறார்களே!!'
என்று புகார் சொல்கிறார்.

ருக்மிணி ஸ்ரீ கிருஷ்ணரை மணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாள்.
ஆனால்,
இவளுடன் கூட பிறந்த 5 சகோதரர்களான 'ருக்மி, ருக்மரதன், ருக்மபாஹு, ருக்மகேசன், ருக்மமாலி' ஆகிய ஐவருமே ருக்மிணியை, ஸ்ரீ கிருஷ்ணரிடம் சேர விடாமல் தடுத்தார்கள்.

5 பேரையும் அடக்கி, ருக்மிணி ஆசைப்பட்டது போலவே, வந்து மணந்து கொண்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.
இந்த
அது போல,
'தன்னுடன் பிறந்த 'கண், காது, மூக்கு, நாக்கு, தோல்' என்ற இந்த 5 சத்ருக்கள், பெருமாளிடம் நேரம் செலவிடவே அனுமதிப்பதில்லை' 
என்று தன் குறையை பெருமாளிடம் சொல்லி, 
'இந்த சத்ருக்களிடமிருந்து மீட்டு, தன்னிடம் சேர்த்து கொள்ள வேண்டும்' என்று ப்ரார்திக்கிறார்.

பெருமாளை கொஞ்சம் பார்ப்போம் என்று கோவில் சந்நிதி முன் நின்றால் கூட, 'கண்' பெருமாளை பார்க்காமல் அங்குமிங்கும் பார்க்கிறது...
சரி, ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி உபன்யாசம் கேட்கலாம் என்று உட்கார்ந்தால், 'காது' உபன்யாசத்தை கேட்க மறுத்து, ஏதேதோ கேட்க ஆசைப்படுகிறது...

"இப்படி என்னுடன் பிறந்த இந்த ஐவருமே, ருக்மிணி பிராட்டிக்கு அமைந்த சகோதரர்களை போல, கிருஷ்ண பக்தி செய்ய தடுக்கிறார்களே!!
இவர்கள் கொஞ்சம் கூட ஓயாமல் (no rest/ஒழியாது) என்னை பக்தி செய்ய விடாமல் தடுக்கிறார்களே!!"
என்று தன் உடன் பிறந்த இந்த ஐவரை பற்றி புகார் சொல்வது போல,
"உடன் நின்று ஐவர்
என்னுள் புகுந்து ஒழியாது" என்கிறார்.

"இப்படி என்னை பெருமாளிடம் பக்தி செய்ய விடாமல், இந்த கண்ணும், காதும், நாக்கும், மூக்கும், தோலும் என்னை
அருவித் தின்றிட, இவர்களிடமிருந்து என்னை நான் விடுவிக்க சக்தி இல்லாமல், உன்னிடம் பக்தி செய்ய முடியாமலேயே இருந்து விடுவேனா!! என்று அஞ்சி,
திருஅழுந்தூர் மேல்திசை நின்ற
அம்மானே (எம்பெருமானே), உன்னிடம் ருக்மிணி பிராட்டி சரண் அடைந்தது போல நின்னடைந்தேன்"
என்று பாடுகிறார் ஆழ்வார்.




உபரிஜரவசு என்ற அரசன் தன் ஆகாய விமானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது, அவன் ஆகாய தேர், இந்த ஊரில் நின்று போக, அவருடைய தேர் இங்கு அழுந்தியதால், இந்த ஊருக்கு தேர் அழுந்தூர் என்ற பெயர் ஏற்பட்டது..

உபரிஜரவசுவுக்கு, பெருமாள் கண்ணனாக நின்று கொண்டு, ஒரு கையால் பசுவை (ஆ) கட்டிக்கொண்டு (மருவி) காட்சி கொடுத்ததால், இந்த பெருமாளுக்கு ஆமருவியப்பன் என்று பெயர்.
மயிலாடுதுறை அடுத்து உள்ளது தேரழுந்தூர் என்ற இந்த திவ்யதேசம்.
மூலவர் பெயர் : தேவாதிராஜன்
உத்சவர் : ஆமருவியப்பன்