Followers

Search Here...

Tuesday 4 February 2020

பாசுரம் (அர்த்தம்) - சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் - பெரியாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். வைஷ்ணவன் ஏன் சிவன் கோவிலுக்கு வருவதில்லை? தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பாசுரம்

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய்
உலகு தன்னை வாழநின்ற நம்பீ! 
தாமோதரா! சதிரா!
என்னையும், என் உடைமையையும்
உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் 
இனி என்திருக்குறிப்பே
-- திருமொழி (பெரியாழ்வார்)

பெரியாழ்வார், திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளை பார்த்து பேசுகிறார்.




"உலகமெல்லாம் வாழும்படியாக, திருமலையில் வீற்று இருக்கும் திருவேங்கடமுடையானே !!
கற்புள்ள (பதிவ்ரதை) ஒரு பெண், 'தன் கணவனே கண் கண்ட தெய்வம்' என்று இருப்பாள், 'மனதாலும் வேறு ஒரு ஆணை ஏறெடுத்தும் பார்க்காமல்' இருப்பாள்.
அது மட்டுமில்லாது,
பிற ஆண்கள் தன்னை பார்க்க நேர்ந்தாலும், 'இவள் வேறொருவனுக்கு சொந்தமானவள்' என்று உணர, கழுத்தில் தாலியும், காலில் மெட்டியும், நெற்றி உச்சியில் குங்குமமும் அணிந்து கொள்கிறாள்.
ஒரு பதிவிரதையான பெண், எப்படி தன்னையும் (மனது), தன் உடைமையையும் (உடல்), தன் கணவனுக்கே!! என்று ஒழுக்கத்துடன் இருக்கிறாளோ,
அது போல,
பெருமாளே!! ப்ரம்ம தேவன் முதல் என் வரை அனைவரையும் படைத்தவர் தாங்கள்.
நான் உங்களுடைய சம்பந்தம் உடையவன். உங்களை சேர்ந்தவன். 
எப்படி ஒரு பதிவ்ரதை, 
மனதாலும் கணவனையே நினைத்து கொண்டிருப்பாளோ, 
மற்றவர்கள் பார்த்தாலும் இவள் மணமானவள் என்று அறிந்து கொள்ள தன் கணவன் கட்டிய தாலியை அணிந்து கொண்டே இருப்பாளோ,
அது போல,
நானும் என் மனதில் உங்களுக்கு மட்டுமே இடம் கொடுத்து,
உங்கள் சக்கரத்தையும், சங்கையும் என் உடைமையான இந்த உடலில் முத்திரை இட்டு கொண்டு, 
உங்கள் பாதுகையையே என் நெற்றி திலகமாக இட்டு கொண்டு, 
துளசி மாலை அணிந்து கொண்டு,
'ஒரு ஸதி (மனைவி), தன் பதி தன்னை காப்பார்' என்ற இருப்பது போல, 'ஸதியான நான், நாயகனான உங்கள் அருளையே நோக்கி, உங்களுக்கே ஆட்பட்டு இருப்பேன்... இது என் முடிவே" என்கிறார்.

இதையே,
என்னையும் என் உடைமையையும்
உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனி என்திருக்குறிப்பே
என்கிறார் பெரியாழ்வார்.

இங்கு,
'என்னை' என்று தன் ஆத்மாவை குறிப்பிடுகிறார்.
'உடைமை' என்று தன் உடலை குறிப்பிடுகிறார்.

'ஒரு பதிவ்ரதையின் (கற்புக்கரசி) நிலையே வைஷ்ணவனின் நிலையும்' என்று காட்டுகிறார் பெரியாழ்வார்.

மனதால் கூட அந்நிய புருஷனை நினைக்க மாட்டாள் - ஒரு பதிவிரதை.

பாரத மண்ணில் மட்டுமே அத்தகைய பதிவ்ரதைகள் இன்றும் உள்ளனர்.







ஒரு பதிவ்ரதையை பார்த்து,
"இது என்ன அநியாயம்... உன் புருஷனை மட்டுமே நினைக்கிறாய்!!
உன் புருஷனை போலவே பக்கத்து வீட்டு புருஷனும் நல்லவன் தான்.. 
ஏன் நீ அந்த புருஷனை பார்க்காமல் இருக்கிறாய்?"
என்று ஒழுக்கமுள்ள ஒருவன் கேட்பானா??...
'ஒழுக்ககேட்டின்' மொத்த உருவமான ராவணன்,
பிராம்மண ரிஷி குலத்தில் பிறந்தவனாக இருந்தும்,
ஒழுக்கமே உருவான தன் தம்பி விபீஷணன் இருந்தும்,
பேடித்தனமாக ராமபிரானை அப்புறப்படுத்தி விட்டு,
சீதையை தூக்கி வந்து விட்டு,
"ராமனை நினைத்து கொண்டு இருக்கிறாயே!! 
அவனை விட பராக்ரமும், குபேர செல்வமும், அழகும் கொண்ட என்னை ஏற்றுக்கொள்" என்று வெட்கமில்லாமல் கேட்டான்.
மஹா மட்டமான ராவணனை, ஏறெடுத்தும் பார்க்க விரும்பாத சீதை, "விலங்குக்கு சமமானமான இவன் புல் திங்கட்டும்" என்று அவன் எதிரில் ஒரு புல்லை பிடுங்கி போட்டாள் என்று பார்க்கிறோம்.

பக்தியில் பதிவ்ரதைகளின் தர்மமே தலை சிறந்தது.
அதுவே வைஷ்ணவ சித்தாந்தம் கூட.

ஏன் ஒரு தீவிர வைஷ்ணவன் சிவன் கோவிலுக்கு வருவதில்லை? 
சிவன் மட்டும் தெய்வமில்லையா? சிவ த்வேஷமா?
என்று சில அறிவு குறைந்தவர்கள் கேட்பார்கள்.

'வீண் பிடிவாதத்தால் சிவன் கோவிலுக்கு வர மாட்டேன்' என்று வைஷ்ணவன் சொல்வதில்லை.
ஒரு வைஷ்ணவன் 'வேறு கோவிக்குக்கு போகாமல் இருப்பதற்கு த்வேஷம் காரணமில்லை'.
ஒரு வைஷ்ணவன் 'வேறு கோவிக்குக்கு போகாமல் இருப்பதற்கு பதிவ்ரதா தர்மமே காரணம்'.

ஒரு பதிவிரதை வேறு ஒரு புருஷனை பார்க்க கூசுவது போல,
வைஷ்ணவன் இன்னொரு தெய்வத்தை பற்றி பேச்சு காதில் விழும்போது கூசி நிற்கிறான்.
இதற்கு, த்வேஷம் காரணமில்லை. பதிவ்ரதா தர்மமே காரணம்

ஒரு பதிவிரதையை பார்த்து, இன்னொரு புருஷனை பற்றி என்ன புகழ்ந்து சொன்னாலும் எடுபடாதது போல, 
உண்மையான வைஷ்ணவன் வேறு தெய்வங்களை மனதாலும் நினைப்பதில்லை. 

ஒரு பதிவ்ரதைக்கு எப்படி கணவன் மட்டுமே உலகமோ,
அது போல,
வைஷ்ணவனுக்கு பெருமாள் மட்டுமே உலகம். 

ஒரு பதிவ்ரதை, எப்படி மற்ற புருஷர்களை தன் கணவன் இடத்தில் வைத்து பார்க்க ஆசைப்படமாட்டாளோ, அது போல, 
வைஷ்ணவன், பெருமாளை தன் மனதில் இருந்து இறக்கி விட்டு, வேறு ஒரு தெய்வத்தை ஏற்று கொள்ள மாட்டான்.

பதிவிரதைகள், 'மற்ற புருஷர்களை பற்றி தவறாகவோ, நல்லதாகவோ கூட பேச தயங்குவார்கள். தனக்கு சம்பந்தமில்லாத விஷயம்' 
என்று தன் கணவனை பற்றியே நினைத்து கொண்டிருப்பார்கள்.
அது போல,
வைஷ்ணவனும், மற்ற தெய்வங்களை பற்றி உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசுவது கிடையாது.

ராவணனை போன்ற ஒழுக்ககேடானவன், ராமபிரான் இடத்தில் தன்னை ஸ்தாபிக்க நினைத்தால், ஒப்பீடு செய்ய துணிந்தால்,
இதை கேட்க முடியாத ஆத்திரத்தில், சில சமயங்களில் பதிவிரதைகளும் பிற புருஷனை தாழ்த்தி பேசும்படியாக நேருகிறது.
அது போல,
வைஷ்ணவனிடம் சென்று பிற தெய்வத்தை பற்றி ஒப்பீடு செய்யும் போது, கூசி நிற்கும் வைஷ்ணவன், 'தன் பெருமாளோடு வேறு ஒரு தெய்வத்தை பேசுகிறானே!' என்று ஆத்திரப்பட்டு, தான் பெருமாளை சேர்ந்தவன் என்று பாடம் புகட்ட, அந்நிய தெய்வத்தை குறை சொல்லும்படியாக நேர்ந்து விடுகிறது.

அவரவர் இஷ்ட தெய்வங்களே, அவரவர்களுக்கு நாயகன்.
அதுவே உண்மையான பக்தி.
அதுவே உண்மையான திட பக்தி.




பத்வரதா தர்மமான வைஷ்ணவ தர்மத்தில், 'ஹனுமானுக்கு' உயர்ந்த ஸ்தானம் கொடுக்கப்பட்டு உள்ளது..

வைஷ்ணவர்கள், பெருமாளை வணங்குகிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.
சைவர்கள், சிவபெருமானை வணங்குகிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.
ஹனுமானுடைய பக்தி பதிவிரதை தர்மத்தில் மிக சிறந்தது.
பரமபதத்தை விட்டு, நாராயணன் ராமபிரானாக பூலோகத்தில் அவதரித்தார்.
அதே நாராயணன், ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்த போதும், 
ஹனுமான் 'ஸ்ரீ கிருஷ்ணரை ராமபிரான் இடத்தில்  ஏற்றுக்கொள்ளவில்லை'.
அது மட்டுமா!!

ராமபிரானே "நான் சாக்ஷாத் நாராயணன். வைகுண்டம் புறப்பட போகிறேன்.. வருகிறாயா?" என்று கேட்டதற்கு,
"நாராயணனே இவருக்கு அந்நிய புருஷனாக தோன்ற, நான் ராமபிரானின் தியானத்திலேயே பூலோகத்தில் இருக்கிறேன். வைகுண்டம் கூட வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்.

கணவன்,
வீட்டில் ஒரு விதமான ஆடை அணிந்து கொண்டும்,
வேலைக்கு செல்லும் போது அதற்கான ஆடைகள் அணிந்து கொண்டும் இருப்பான்.
எந்த ரூபத்தில் இருந்தாலும், மனைவிக்கு அவன் கணவன் தானே!!..
ஒரு வைஷ்ணவன் இப்படி தான் பெருமாளை பார்க்கிறான்..

தன் பெருமாள் தான் , ஸ்ரீரங்கத்தில் ஒரு ரூபத்தில், திருப்பதியில் ஒரு ரூபத்தில், தன் வீட்டில் சின்ன விக்கிரக ரூபத்தில், நாராயணனே ராமராக, கிருஷ்ணராக, நரசிம்மமாக, பரசுராமராக இருக்கிறார்
என்று அனைத்து ரூபத்தையும் சேவிக்கிறான் வைஷ்ணவன்.

ஆஞ்சநேயர் 'வைஷ்ணவர்களில் உத்தம வைஷ்ணவர்'.

சில மனைவிகள், ஆபிஸ்க்கு ஏற்ற அலங்காரத்தில் கணவன் இருந்தால், அவன் பக்கமே திரும்ப மாட்டாள். அவர் ஏதோ வேலையாக இருக்கிறார் என்று இருந்து விடுவாள்.
வீட்டில் சாதாரண உடையுடன் இருக்கும் போது மட்டுமே உரிமையுடன் பேசுவாள்.
அது போல,
'ராமபிரான் தான் கண்ணன், அவரே தான் நாராயணன்' என்று தெரிந்தாலும், ஹனுமான், பெருமாள்  ராமபிரானாக வந்தால் தான் ஏற்று கொள்வார்.

இந்த 'திட பக்தியின் காரணமாகவே, வானர ஜாதியில் பிறந்தாலும், வைஷ்ணவர்கள் இவரை ஜாதி பார்க்காமல் வைஷ்ணவர்களில் உத்தமர்' என்று கொண்டாடுகின்றனர்.

ஒரு வைஷ்ணவன்,
உடைமையான தன் உடலில் கோபியும், தோள்களில் சங்கு சக்கர முத்திரை இட்டு கொள்வதற்கு காரணம், இந்த பதிவ்ரதா தர்மமே!!

உடலில் வைஷ்ணவன் போல திருமண் காப்பு இட்டு கொண்டு, 
மனதில் வேறு தெய்வ சிந்தனை இருப்பது என்பது,
தாலி கட்டி கொண்டு, மனதில் வேறு ஒரு புருஷனை நினைப்பது எப்படியோ அது போன்றாகும்..

ஆதலால் தான், பெரியாழ்வார்
"எனக்கும்" "என் உடைமைக்கும்" என்று மனதையும், உடலையும் சொல்லி, 'இந்த இரண்டிலுமே பெருமாளின் சக்கரத்தை ஒற்றிக்கொண்டு இருக்கிறேன்' என்று திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளிடம் ஆத்ம சமர்ப்பணம் பூரணமாக செய்கிறார்.

பெருமாளின் சொத்தான நாம்,
ஜென்ம ஜென்மங்களாக பிறந்து இறந்து கொண்டு இருந்தாலும்,
இன்றுவரை மோக்ஷம் அடைய வேண்டும் என்ற நினைவே இல்லாமல்,
பெருமாளிடம் பக்தியே செய்யாமல்,
அவர் பக்கமே திரும்பி பார்க்காமல்,
எங்கோ பரதேசி போல அலைந்து கொண்டிருந்த போது,
ஒரு நாள், நம்மை எதிர்பாராவிதமாக திருமலைக்கு வர செய்து, தடுத்து நிறுத்தி, தன் திருவடியை காட்டி,
"நீ என்னை சேர்ந்தவன். எனக்கு ஆட்பட்டவன் நீ"
என்று "தான் இருப்பதை" புரிய வைத்து, தன்  சாமர்த்தியத்தால் எம்பெருமான் நம்மை பிடித்து விடுகிறார்.
பெருமாளின் இந்த சாமர்த்தியத்தை எண்ணி "சதிரா" என்று அழைக்கிறார், பெரியாழ்வார்.

"சதிரா" என்றால் சாமர்த்தியசாலி என்று பொருள்.

"தாமோதரா! சதிரா!"
என்று பெருமாளை அழைக்கிறார்.

நலகூபுர, மணிக்ரீவ என்ற தேவர்கள் சாபத்தால் மரமாக போய் விட்டார்கள்.
தான் தேவன் என்பதை மறந்து, மரமாகவே இருந்து கொண்டிருந்தார்கள்.
'தான் யார்?' என்று தெரியாமலேயே, இவர்கள் இருந்து கொண்டு இருக்க,

இவர்களை, உரலை இழுப்பது போல,
தாமோதர கண்ணன், தன் சாமர்த்தியத்தால் மரத்தை சாய்க்க,
"தேவர்கள் வெளிப்பட்டு, தான் யார் என்ற உண்மையை உணர்ந்து", தேவலோகம் சென்றனர்.

இப்படி 'தான் யார்?' என்று தெரியாமலேயே,
யார் யாரையோ எஜமானன் என்றும்,
யார் யாரையோ தெய்வம் என்றும்,
நம்பி அலைந்து கொண்டிருக்கும் நம்மையும்,
அந்த தாமோதரன் தன் சாமர்த்தியத்தால் வளைத்து பிடித்து, தன் அருகில் வைத்து கொண்டு, மோக்ஷ வரை தந்து விடுவார் என்பதால்,
"தாமோதரா சதிரா" என்று திருமலையப்பனை அழைக்கிறார்.


Monday 3 February 2020

பாசுரம் (அர்த்தம்) - எம்மனா! என் குல தெய்வமே! என்னுடைய நாயகனே! - பெரியாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பாசுரம் (அர்த்தம்) : திருப்பதி பெருமாள்

எம்மனா!!
என் குல தெய்வமே!!
என்னுடைய நாயகனே!!
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை
இவ்வுலகினில் யார் பெறுவார்?
-- திருமொழி (பெரியாழ்வார்)




பெரியாழ்வார், திருமலையில் உள்ள ஸ்ரீனிவாசபெருமாளை 3 அழகான பெயர்கள் சொல்லி கூப்பிடுகிறார்...
முதலில்,
  • "எம்மனா!!" என்று கூப்பிடுகிறார்.
பிறகு,
  • "என் குலதெய்வமே!!" என்று கூப்பிடுகிறார்.
பிறகு
  • "என்னுடைய நாயகனே!!" என்று உரிமையுடன் கூப்பிடுகிறார்.

இந்த 3 நாமங்களின் உள் அர்த்தம் தெரியாமல் போனாலும், இந்த சொற்களே இனிக்கிறது...

அர்த்தம் தெரிந்து கொண்டால், தினமும் இந்த 3 நாமத்தை திரும்ப திரும்ப சொல்ல ஆசை வந்து விடும் நமக்கு.
'பெரியவாச்சான் பிள்ளை (உபேயம், உபாயம், பர தெய்வமாக),
ஆளவந்தார் (ஞான விரோதி, ஆஸ்ரய விரோதி, மோக்ஷ விரோதி), 
உடையவர் ஸ்ரீராமானுஜர் (தேக அபிமானம் கழிந்து, அன்ய ஷேசத்துவம் கழிந்து, ஸ்வஸ் ஸ்தாதந்திரியமும் கழிந்து)
போன்ற ஆச்சார்யர்கள் 'இந்த மூன்று சொற்களின் (எம்மனா, என் குலதெய்வமே, என்னுடைய நாயகனே) அர்த்தத்தை பலவாறு ரசிக்கிறார்கள்' என்றும் பார்க்கிறோம்.

மரணத்தை ஒருவன் பார்த்தாலேயே "உடல் வேறு ஆத்மா வேறு" என்ற ஞானம் (அறிவு) கொஞ்சம் பகுத்தறிவு உள்ளவனுக்கும் வந்து விடும்.
ஆதலால்,
"உடல் வேறு ஆத்மா வேறு" என்று நினைப்பது மட்டுமே உண்மையான ஞானம் என்று நினைக்கக்கூடாது.. அது மட்டுமே ஞானம் இல்லை.

"நான் ஜீவன் (ஆத்மா)! நான் பகவானுடைய தாஸன்!"
என்று நினைப்பதே 'உண்மையான ஞானம்' என்கிறார்கள் நம் ஆச்சார்யர்கள்.

"உடல் நானில்லை, ஜீவனே நான். ஜீவனாகிய நான் ஒரு தனித்த பொருள்" என்று பகவானை விலக்கி விட்டு,
"தான் ஆத்மா, தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து கொள்வதே உண்மையான ஞானத்துக்கு விரோதம் தான்.
இப்படி நினைப்பதே "ஞான விரோதம்" என்கிறார்கள் நம் ஆச்சாரியர்கள். (அத்வைதம்)

(அத்வைதம் என்ன சொல்கிறது? விஷிஸ்டாத்வைதம் என்ன சொல்கிறது?) மேலும் அறிய இங்கே படிக்கவும்.

"எம்மனா" (எம்பெருமான்) என்ற சொல்லுக்கு
"உடல் நானில்லை, ஜீவனே (ஆத்மா) நான். ஜீவனாகிய நான் ஒரு தனித்த பொருள் இல்லை. நான் சுதந்திரமானவன் இல்லை. நான் பகவானின் தாஸன்"
என்று அர்த்தம் காட்டுகிறார்கள், நம் ஆச்சாரியர்கள். (விசேஷ அத்வைதம்)

ஆதலால்,
"எம்மனா" (எம்பெருமான்) என்று சொல்லும் போதே,
நமக்கு "ஞான விரோதமான அத்வைத புத்தி ஒழிந்து விடும்" என்கிறார்.




அது போல,
"என் குலதெய்வமே" என்று சொல்லும்போதே,
நமக்கு "ஆஸ்ரய விரோதமான புத்தி ஒழிந்து விடும். பெருமாளை ஆஸ்ரயிக்க வேண்டும் என்ற புத்தி ஏற்படும்" என்கிறார்.
அது போல,
"என்னுடைய நாயகனே" என்று சொல்லும்போதே,
நமக்கு "மோக்ஷ விரோதமான புத்தி ஒழிந்து விடும். வெறும் சுதந்திரம் (விடுதலை) மட்டும் பெறாமல், வைகுண்டம் (வீடு) என்ற நம் சொந்த வீட்டுக்கு (மோக்ஷம்) போக வேண்டும் என்ற புத்தி ஏற்படும்" என்கிறார்.




மேலும்
நாம் இந்த பிறவியில் அடைய வேண்டியது (உபேயம்) எது?
(What should we achieve?)
என்ற கேள்விக்கு,

"எம்மனா" (எம்பெருமான்) என்று சொல் மூலம்,
"நாம் அடைய வேண்டியவர் (உபேயம்), நம்முடைய பகவான் நாராயணனே"
என்ற தெளிவு ஏற்படுத்துகிறார், பெரியாழ்வார்.
"எம்மனா" என்ற சொல்லுக்கு "நான் அவருடையவன். அவருடைய சொத்து" என்று பொருள்.

நாம் அடைய வேண்டியது ("உபேயம்") யார் என்று தெரிந்து விட்டது.சரி...
ஆனால்,
பெருமாளை அடைய வேண்டிய வழி (உபாயம்) என்ன?
என்ற அடுத்த கேள்விக்கு,

"என் குலதெய்வமே" என்ற சொல் மூலம்,
"நாம் பெருமாளை அடைய வேண்டிய வழி (உபாயம்), அவரையே நம் குல தெய்வமாக கொள்வது தான்"
என்ற தெளிவை நமக்கு ஏற்படுத்துகிறார் பெரியாழ்வார்.

"பெருமாளை குலதெய்வமாக நீ ஆக்கிக்கொண்டால், 
நீ மட்டுமல்ல, உன் பரம்பரையில் பிறந்த அனைவருமே, 
அவர்கள் பிறவியில் அடைய வேண்டியதான (உபேயம்) பெருமாளை அடைந்து விடுவார்கள்"
என்கிறார் பெரியாழ்வார்.
"குலதெய்வமாக வெங்கடேசபெருமாளே அமைந்தவர்களுக்கு, வைகுண்டம் போகும் வழியையும் காட்டி, அடையும் லட்சியமாகவும் பெருமாளே இருந்து, மோக்ஷம் வரை துணையாகவே இருக்கிறார்" என்கிறார் பெரியாழ்வார்.

"யாருக்கு குலதெய்வமாக வெங்கடேசபெருமாள் அமைந்தாரோ!, அவர்களே பாக்கியவான்" என்கிறார் பெரியாழ்வார்.
மஹாபாரதத்தில் திரௌபதி "கோவிந்தா..." என்று தன் குலதெய்வமாக பெருமாளை வரித்து கொண்டதற்காக, அவளுடைய பேரன் பரிக்ஷித் கர்ப்பத்திலேயே அழிய வேண்டும் என்று அஸ்வத்தாமன் நினைத்தும், திரௌபதி என்ற பக்தைக்காக அவள் குலத்தை அழிய விடாமல் ரக்ஷித்தார் பெருமாள்.

குலதெய்வமாக இருந்து, நாமும் நம் பரம்பரையும், மோக்ஷம் போகும் வரை, நம் கூட இருந்தே ரக்ஷிக்கிறார்.

"என்னுடைய நாயகனே" என்ற சொல் மூலம், "பரதெய்வம் நாராயணனே"
என்ற தெளிவு ஏற்படுத்துகிறார் பெரியாழ்வார்.

உலகத்தில்,
சிலருக்கு இஷ்ட தெய்வமாக (உபேயமாக) "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார்.
அவர்கள் பெருமாளை "எம்மனா" (எம்பெருமான்) என்கிறார்கள்.

இன்னும் சிலருக்கு குல தெய்வமாக (உபாயமாக) "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார். 
அவர்கள் பெருமாளை "என் குல தெய்வமே" என்கிறார்கள்.

சிலருக்கு பர தெய்வமாக "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார். அவர்கள் பெருமாளை  "என்னுடைய நாயகனே" என்கிறார்கள்.

"தனக்கோ உபேயமாகவும் (இஷ்டதெய்வம்), உபாயமாகவும் (குலதெய்வம்), பரதெய்வமாகவும், 
மூன்று சம்பந்தத்துடன் பெருமாள் இருக்கிறாரே!"
என்ற பெருமிதமடைந்து பாடுகிறார் பெரியாழ்வார்,




பரதெய்வமாக இருக்கும் நாராயணனே, தனக்கு குலதெய்வமாகவும் இருக்கிறார். தனக்கு இஷ்டதெய்வமாகவும் இருக்கிறார்.
பெருமாள், 
என்னையும், என் பரம்பரையையும் ரக்ஷிக்கிறார் என்கிற போது,
என்னை பற்றியும் எனக்கு கவலையில்லாமல்
என் குடும்பத்தை பற்றியும் கவலையில்லாமல்
என்னை உங்கள் திருவடியை ஆச்ரயித்து கொண்டு இருக்குமாறு செய்து கொண்டு, நீங்கள் என்னை சுகமாக வைத்துக்கொண்டு, ரக்ஷிக்கிறீர்களே !!
உம்மிடத்தில் எனக்கு பரிபூரணமான ப்ரேமை உண்டாகும் படி செய்து, எப்பொழுதும் உங்கள் தொண்டுக்காகவே என்னை ஆக்கி,
என்னை வெளி உலக காரியங்களில் இங்கும் அங்கும் போக விடாமல் தடுத்து,
நீங்கள் என்னை பரிபாலிக்கும் அழகும்,
உங்கள் கருணைக்கு பாத்திரமாக இருக்கும் என் நிலையும்,
எனக்கு கிடைத்த நன்மையை (பாக்கியத்தை) போல, இவ்வுலகினில் யார் பெறுவார்? 
என்று என்கிறார் பெரியாழ்வார்.
அதையே,
நின்னுள் உள்ளேனாய்ப் பெற்ற நன்மை
இவ்வுலகினில் யார் பெறுவார்?
என்று பெருமிதம் அடைகிறார்.

நாமும் வெங்கடேச பெருமாளை, பரதெய்வமாகவும், குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் கொள்வோம்.
சர்வ மங்களத்தையும் திருப்பதி பெருமாளே, நமக்கும் நம் பரம்பரைக்கும் அருள்வார். 


குருவே துணை !



Saturday 1 February 2020

பாசுரம் (அர்த்தம்) - திருவுக்கும் திருவாகிய செல்வா - திருமங்கை ஆழ்வார் தேவாதிராஜ பெருமாளை (தேரழுந்தூர்) பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருமங்கையாழ்வார் தேர்அழுந்தூரில் உள்ள தேவாதிராஜ பெருமாளை மங்களாசாசனம் செய்து, தன்னை காப்பாற்றுமாறு சரணடைகிறார்.

திருமங்கை ஆழ்வார் "அர்ச்சா திருமேனியையே" பெருமாளின் அவதாரமாக அனுபவிப்பவர்.





அற்புதமான பாசுரம்..
அனைவரும் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டிய பாசுரம். .

திருவுக்கும் திருவாகிய செல்வா!!
தெய்வத்துக்கு அரசே!!
செய்ய கண்ணா!!
உருவச் செஞ்சுடராழி வல்லானே!!
உலகுண்டவொரு வா!!
திருமார்பா!!
ஒருவற்காற்றி உய்யும் வகையென்றால்
உடன் நின்று ஐவர் 
என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட!!
அஞ்சி!! நின்னடைந்தேன்!!
அழுந்தூர் மேல்திசை நின்ற
அம்மானே!!
-- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)

பாசுரத்தின் அர்த்தம் :

மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் யாருக்கு கிடைக்கிறதோ!! அவர்களுக்கு குறைவில்லாத செல்வம் கிடைக்கிறது.
எல்லோருக்கும் மங்களம் கொடுப்பவள் மஹாலக்ஷ்மி.

செல்வம் மட்டுமல்ல,
உலகில் நாம் காணும் அழகும், பொலிவும், அனைத்து மங்களமும் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷமே..

நமக்கு சர்வ மங்களத்தை தரும், திருவாகிய மஹாலக்ஷ்மி தனக்கு மங்களம் கிடைக்க, திருவாகிய நாராயணனை சரணடைந்து அவருக்கு பாத சேவை செய்து கொண்டிருக்கிறாள்.
திருவாகிய மஹாலக்ஷ்மியே தனக்கு வேண்டிய செல்வத்தை, அழகை, தன் பதியான திருவாகிய திருமாலிடம் பெறுகிறாளே !! பெருமாளே "செல்வமாக" இருக்கிறாரே!!
என்று பெருமாளின் பெருமையை நினைத்து திருமங்கையாழ்வார்
'திருவுக்கும் திருவாகிய செல்வா' என்கிறார்.
அழகுக்கெல்லாம் அழகர்,
பொலிவுக்கெல்லாம் பொலிவு உடையவர்,
செல்வதுக்கெல்லாம் செல்வமாக இருப்பவர்,
சர்வ மங்களத்துக்கும் மங்களத்தை தருபவர்,
மகாலட்சுமிக்கு பதியாக இருப்பவர்,
தானே பெரும் நிதியாக (செல்வமாக) இருப்பவர், 
எம்பெருமான் நாராயணன்.

அப்படிப்பட்ட பெருமைமிகுந்த பெருமாள் தன் எதிரே நின்று, திரு அழுந்தூர் என்ற திவ்ய தேசத்தில் தேவாதிதேவனாக காட்சி கொடுக்க, 'எனக்கு நிதியே' என்று கொஞ்சுவதை போல, "திருவுக்கும் திருவாகிய செல்வா' என்கிறார் திருமங்கையாழ்வார்.

மேலும்,
"தெய்வத்துக்கு அரசே" என்ற பதத்தை கொண்டு, தெய்வத்துக்கும் தெய்வமாக (தேவாதிராஜன்) பெருமாள் இருக்கிறார் என்று பூரிக்கிறார்.

தேவர்களுக்கு இந்திரன் (தலைவன்) யார்?
இந்திரன் (தலைவன்/அரசன்) என்ற சொல் யாரை குறிக்கிறது?
என்ற கேள்வியை 'இந்திர ப்ராணாதி கரணம்' என்ற வேதாந்தத்தில் ஒரு கேள்வியாக கேட்டு, அதற்கு பதில் சொல்கிறது.







"இந்திரன் யார்?" என்று இப்படி கேள்வி கேட்டு, இந்திரன் என்ற பெயரில் பலர் உள்ளார்களே!!.. என்று கேள்வி கேட்டு, முடிவும் சொல்கிறது...

மனிதர்களுக்கு (நரன்) தலைவனை "நரேந்திரன்" என்று சொல்வார்கள்.
தேவர்களுக்கு தலைவனை "தேவேந்திரன்" என்று சொல்வார்கள்.
சுரர்களுக்கு தலைவனை "சுரேந்திரன்' என்று சொல்வார்கள்.
மிருகங்களுக்கு தலைவனை "ம்ருகேந்திரன்" என்று சொல்வார்கள்.
யார் அனைவருக்கும் தலைவனோ அவரையே "இந்திரன்" என்று சொல்வார்கள்.

'இவர் இவருக்கு தலைவன், இவருக்கு இவர் தலைவனில்லை' என்று இல்லாமல்,
'நரன், தேவன்...' என்று விசேஷம் இல்லாமல், அனைவருக்கும் தலைவனாக இருக்கும் நாராயணனே 'இந்திரன்' என்று முடிக்கிறது வேதாந்தம்.
உப தெய்வங்களான இந்திரன், ப்ரம்மா, ருத்ரன், மனு போன்றவர்களுக்கெல்லாம் "அரசர்" என்ற பெருமையுடைய பரம்பொருள் அல்லவா, என் கண் முன்னே இருக்கிறார்!!
என்றதும்,
திரு அழுந்தூர் தேவாதிராஜ பெருமாளை பார்த்து
"தெய்வத்துக்கு அரசே"
என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.

தேவேந்திரனுக்கு மட்டும் அரசனல்ல (தேவராஜன் மட்டுமல்ல),
உலகில் தெய்வங்கள் என்று இருக்கும் அனைவருக்கும் அரசனாக இருக்கிறார் என்பதால்,
இந்த பெருமாளுக்கு "தேவாதிராஜன்" என்று பெயர் கொடுத்தார்.

மேலும்,
செய்ய கண்ணா!
உருவச் செஞ்சுடராழி வல்லானே!
உலகுண்ட ஒருவா!
திருமார்பா!
என்றெல்லாம் உங்களை எப்பொழுதும் பாடி மகிழ ஆசைப்படுகிறேன்!!
ஆனாலும், 
'என்னை பக்தி செய்ய விடாமல், என் கூடவே பிறந்த 5 சத்ருக்கள் உங்களிடம் நேரம் செலவழிக்கவே விடாமல் தடுக்கிறார்களே!!'
என்று புகார் சொல்கிறார்.

ருக்மிணி ஸ்ரீ கிருஷ்ணரை மணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாள்.
ஆனால்,
இவளுடன் கூட பிறந்த 5 சகோதரர்களான 'ருக்மி, ருக்மரதன், ருக்மபாஹு, ருக்மகேசன், ருக்மமாலி' ஆகிய ஐவருமே ருக்மிணியை, ஸ்ரீ கிருஷ்ணரிடம் சேர விடாமல் தடுத்தார்கள்.

5 பேரையும் அடக்கி, ருக்மிணி ஆசைப்பட்டது போலவே, வந்து மணந்து கொண்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.
இந்த
அது போல,
'தன்னுடன் பிறந்த 'கண், காது, மூக்கு, நாக்கு, தோல்' என்ற இந்த 5 சத்ருக்கள், பெருமாளிடம் நேரம் செலவிடவே அனுமதிப்பதில்லை' 
என்று தன் குறையை பெருமாளிடம் சொல்லி, 
'இந்த சத்ருக்களிடமிருந்து மீட்டு, தன்னிடம் சேர்த்து கொள்ள வேண்டும்' என்று ப்ரார்திக்கிறார்.

பெருமாளை கொஞ்சம் பார்ப்போம் என்று கோவில் சந்நிதி முன் நின்றால் கூட, 'கண்' பெருமாளை பார்க்காமல் அங்குமிங்கும் பார்க்கிறது...
சரி, ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி உபன்யாசம் கேட்கலாம் என்று உட்கார்ந்தால், 'காது' உபன்யாசத்தை கேட்க மறுத்து, ஏதேதோ கேட்க ஆசைப்படுகிறது...

"இப்படி என்னுடன் பிறந்த இந்த ஐவருமே, ருக்மிணி பிராட்டிக்கு அமைந்த சகோதரர்களை போல, கிருஷ்ண பக்தி செய்ய தடுக்கிறார்களே!!
இவர்கள் கொஞ்சம் கூட ஓயாமல் (no rest/ஒழியாது) என்னை பக்தி செய்ய விடாமல் தடுக்கிறார்களே!!"
என்று தன் உடன் பிறந்த இந்த ஐவரை பற்றி புகார் சொல்வது போல,
"உடன் நின்று ஐவர்
என்னுள் புகுந்து ஒழியாது" என்கிறார்.

"இப்படி என்னை பெருமாளிடம் பக்தி செய்ய விடாமல், இந்த கண்ணும், காதும், நாக்கும், மூக்கும், தோலும் என்னை
அருவித் தின்றிட, இவர்களிடமிருந்து என்னை நான் விடுவிக்க சக்தி இல்லாமல், உன்னிடம் பக்தி செய்ய முடியாமலேயே இருந்து விடுவேனா!! என்று அஞ்சி,
திருஅழுந்தூர் மேல்திசை நின்ற
அம்மானே (எம்பெருமானே), உன்னிடம் ருக்மிணி பிராட்டி சரண் அடைந்தது போல நின்னடைந்தேன்"
என்று பாடுகிறார் ஆழ்வார்.




உபரிஜரவசு என்ற அரசன் தன் ஆகாய விமானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது, அவன் ஆகாய தேர், இந்த ஊரில் நின்று போக, அவருடைய தேர் இங்கு அழுந்தியதால், இந்த ஊருக்கு தேர் அழுந்தூர் என்ற பெயர் ஏற்பட்டது..

உபரிஜரவசுவுக்கு, பெருமாள் கண்ணனாக நின்று கொண்டு, ஒரு கையால் பசுவை (ஆ) கட்டிக்கொண்டு (மருவி) காட்சி கொடுத்ததால், இந்த பெருமாளுக்கு ஆமருவியப்பன் என்று பெயர்.
மயிலாடுதுறை அடுத்து உள்ளது தேரழுந்தூர் என்ற இந்த திவ்யதேசம்.
மூலவர் பெயர் : தேவாதிராஜன்
உத்சவர் : ஆமருவியப்பன்


Thursday 30 January 2020

தெய்வ பக்தியின் மூன்று நிலைகள் என்ன?... தெய்வத்திடம் காதல் கொண்டு ஆழ்வார்கள் பாடுகிறார்கள் என்று பார்க்கிறோம்... ஆழ்வார்கள் நிலை என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா... ஹிந்துக்கள்.

தெய்வ பக்தியின் மூன்று நிலைகள் என்ன? 
தெரிந்து கொள்வோமே !!

1. காம்யார்த்தமான பக்தி:

  • உலக ஆசை உடையவர்கள். 
  • தெய்வம் தனக்கு அணுகிரஹம் செய்யும் என்று உணர்நதவர்கள். 
  • தெய்வத்திடம் பக்தி செய்து, விரதம் இருந்து, தெய்வ அணுகிரஹத்தால் தன் உலக ஆசைகளை பூர்த்தி செய்து கொள்பவர்கள்.




கோவிலுக்கு செல்வது, 
தெய்வ விக்ரஹங்களை சிலையாக பார்க்காமல் பெருமாளாக பார்ப்பது, 
விரதம் இருப்பது, 
மந்திரங்கள் ஜபிப்பது போன்றவை செய்கிறார்கள்

2. சாதனா பக்தி:

  • உலக ஆசை குறைந்து இருப்பவர்கள்.
  • தெய்வத்தின் அருளை அனுபவத்தில் உணர்நதவர்கள்.
  • உலக ஆசைகளை தெய்வத்திடம் பிரார்த்திப்பதை விட, அந்த தெய்வத்தை பற்றி, நன்கு புரிந்து கொள்ளவே ஆர்வம் மிக்கவர்கள். 
  • அதற்கு தேவையான சாதனைகளை செய்பவர்கள்.




கோவிலின் தத்துவத்தை அறிய முயல்பவர்கள்,
மந்திரங்களின் ஆழ்ந்த அர்த்தத்தை அறிந்து கொள்ள முயல்பபவர்கள்,
தெய்வத்தின் புராண சரித்திரங்கள், குணங்கள் போன்றவற்றில் ஆழ்ந்து உணருபவர்கள்,
தெய்வத்தை பற்றி அறிய தனி மனித ஒழுக்கம் என்று உணர்நதவர்கள்,
தியானம் யோகம் செய்து புலன்களை கட்டுப்படுத்தி வைத்து இருப்பவர்கள்.

ராமானுஜர் "திருவஷ்டாக்ஷர மந்திரத்தின் பொருள் அறிய", தான் யதிராஜராக இருந்த போதும்,
'ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூர் வரை' நடந்து சென்றும், 'திருக்கோஷ்டியூர் நம்பி' அதன் அர்த்தத்தை தகுதி இல்லாதவர்க்கு சொல்லி விட கூடாதே என்று தயங்கி மறுத்தார்.




ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை.
17 முறை தொடர்ந்து ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார்.
இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி அர்த்தத்தை சொல்ல தயங்கி மறுத்தார்.

அந்த பாதயாத்திரையின் பலன் 18வது சந்திப்பில் கிடைத்தது. 
உண்மையான ஆர்வமும்,
அலுப்பு அடையாமல்,
தன் மீது கோபமும் இல்லாமல் இருக்கும் ராமனுஜரே, மந்திரத்தின் பொருளை அறிய தகுதி ஆனவர்,
என்று அறிந்து, அர்த்த விஷேஷத்தை போதித்தார்.

சாதனா பக்தியில், எப்படி ஒரு பக்தன் இருப்பான்? என்று தன் சரித்திரத்திலேயே காண்பித்தார் ஸ்ரீ ராமானுஜர்.
ஞானத்தில் பூர்ணரான ராமானுஜர், 'நாதீகனும், காம்யார்த்த பக்தி செய்பவனும் கூட, பரமபதம் இதே ஜென்மத்தில் அடைந்து விட வேண்டும்' என்ற பரந்த நோக்கில், தான் கஷ்டப்பட்டு பெற்ற உபதேசத்தை இலவசமாக அனைவருக்கும் கிடைக்கும் படியாக கொடுத்து விட்டார்.

3. ஞான பக்தி :

  • உலக வாழ்க்கையை மதிக்காதவர்கள். 
  • செல்வம் சேர்ந்தாலும், ஏழையானாலும் குறைபட்டு கொள்ளாதவர்கள்.
  • இந்த ஆத்மா எப்பொழுது இந்த உடலை விட்டு, பரந்தாமனை அடையுமோ என்று தவிப்பவர்கள்.




ஜீவனாகிய தன்னை பெண்ணாகவும்,
பரமாத்மா நாராயணனே தன் புருஷனாகவும்,
"தன் கணவனிடம் சேரும் காலம் எப்பொழுதோ!!"
என்று பரமபதத்தையே எதிர்பார்த்து, தெய்வத்திடம் விரக தாபத்தில் இருப்பவர்கள்.
(ஆழ்வார்கள் இந்த நிலையிலேயே இருந்தனர்) 
ஆழ்வார்கள் தன்னை காதலியாகவும், பெருமாளை காதலானாகவும் கதறி அழுது பாடும் பாசுரங்கள், இவர்களின் ஞான பக்தி நிலையை நமக்கு காட்டுகிறது.

இந்த அனுபவத்தில் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை, நாத்தீகன் மட்டுமல்ல, காம்யார்த்தமான பக்தி செய்பவனும், சாதனா பக்தி செய்பவன் கூட படித்தாலும், "ஆழ்வார்கள் எந்த நிலையில் இப்படி பாடினார்கள்!!" என்று புரிந்து கொள்ள முடியாமல், "இது ஏதோ உலகத்தில் காணும் காதல் பாடல்" என்றே நினைப்பார்கள்.


இதன் காரணமாகவோ என்னவோ!! வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில், ஆழ்வார்கள் பாசுரங்களை, அதன் அர்த்தத்தை விஷ்ணு சஹஸ்ரநாமம் போல, அனைவருக்கும் தராமல், ஞானத்தின் தகுதி பார்த்தே பகிர்ந்துள்ளனர் என்று தெரிகிறது..

நமக்கு ஞான பக்தி இல்லாமல் போனாலும், ஆழ்வார்கள் நிலை வராது போனாலும்,
குறைந்தபட்சம் நாதீகர்களாகவாவது வாழாமல், காம்யார்த்த பக்தியாவது செய்து கொண்டு, தெய்வ அணுகிரஹத்தால், குருவின் துணையால், மேலும் மேலும் ஆன்மீக வளர்ச்சி நோக்கி செல்வோம்.

வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஹிந்து தர்மம்.






ஸ்ரீ முஷ்ணம் - வராஹ பெருமாள்.. தண்டகாரண்யம் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது? ஸ்ரீமுஷ்ணம் வராக பெருமாள் அவதாரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா ஹிந்துக்கள்....

 




க்ஷீராப்தியில் ஸ்ரீமந்நாராயணனுக்கு வாயில் காப்பாளர்களான இருக்கும் ஜெய விஜயர்கள்,
சனகாதி முனிவர்களின் சாபத்தால், பூலோகத்தில் அவதரித்தார்கள்.
முதல் பிறவியில், ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷனாக பிறந்தார்கள்.

பெருமாள், வராஹ மூர்த்தியாக அவதாரம் செய்து, ஹிரண்யாக்ஷனை சம்ஹாரம் செய்தார்.

இந்த ஹிரண்யாக்ஷனுக்கு "ஜில்லிகா" என்று ஒரு பெண் இருந்தாள்.

"ஜில்லிகா" என்றால் 'குளவி' என்று தமிழில் அர்த்தம்.
குளவி போன்று யாரை கண்டாலும் கொட்டும் குணம் கொண்டவள்.
அசுர பெண்ணான இவளும், உணவு உண்ணாமல், பல காலங்கள் ப்ரம்ம தேவனை நோக்கி தவம் செய்தாள்.

அசுரர்கள், தேவர்கள், மனிதர்கள், ரிஷிகள் அனைவரையும் படைத்தவர் 'ப்ரம்மா'.
வேதம் இவரை நமக்கு 'தாத்தா' (பிதாமகர்) என்று உறவுமுறை சொல்லி  அழைக்கிறது.

ப்ரம்மாவை படைத்தவர் 'நாராயணன்'.
ஆதலால் பெருமாளை நமக்கு  "கொள்ளு தாத்தா" (ப்ரபிதாமகர்) என்று சொந்தம் காட்டி அழைக்கிறது..

நாராயணன், பொதுவாக 'நாம் கேட்பதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு தந்து விடுவதில்லை'.
'இந்த வரத்தால், கேட்பவனுக்கு நலமா? உலகுக்கு நன்மையா?' என்று பார்த்து தான் கொடுப்பார்.

பெருமாள், "நமக்கு எது நன்மையோ, அதை மட்டுமே தருவார், தீயதை கேட்டாலும் தரமாட்டார்" என்பதையே ஆண்டாளும்
"ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்"
என்று திருப்பாவையில் பாடுகிறாள் என்று கவனிக்கிறோம்.

இதனாலேயே, துர்குணம் கொண்டவர்கள், தாங்கள் செய்த கர்மாவுக்கு கண்ணை மூடிக்கொண்டு பலன் தரும் பிரம்மாவை, சிவபெருமானை, தேவர்களையே தேர்ந்தெடுத்தனர்.
'கர்மாவுக்கு பலன் கொடுக்கிறோம்' என்று கண்ணை மூடிக்கொண்டு இவர்கள் வரம் கொடுத்து விடுவதால்,
பல சமயங்களில் உலகமே கஷ்டப்பட்டது. 
அதுமட்டுமில்லாமல்,
'பஸ்மாசுரன் போன்றவர்களுக்கு வரம் கொடுத்து விட்டு, சிவபெருமானே திண்டாடினார்' என்றும் பார்க்கிறோம்.

இவர்கள் கொடுக்கும் இந்த வரங்களால், உலகம் கஷ்டப்படும் போது, நல்லவர்கள் துன்பப்படும் போது, ஒவ்வொரு முறையும் பெருமாள் வந்து காப்பாற்ற வேண்டியதாகி விடும்.
ஹிரண்யாக்ஷனின் மகளான 'ஜில்லிகா' கடுமையான தவம் செய்து கொண்டிருக்க, அவள் தவத்திற்கு கட்டுப்பட்டு, ப்ரம்ம தேவன் ப்ரத்யக்ஷமானார்...

அவளிடம் "என்ன வரம் வேண்டும்?" என்று ப்ரம்ம தேவன் கேட்க,
அவள், "உலகத்தில் உள்ள அனைத்து ப்ராம்மணர்களையும் ஒழிக்கும் படியாக ஒரு புத்ரன் எனக்கு வேண்டும்"
என்று கேட்டு விட்டாள்.

"பெருமாள் பார்த்து கொள்வார்" என்ற தைரியத்தில், வழக்கம் போல, ப்ரம்ம தேவன் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி மறைந்து விட்டார்.

அவளுக்கு "தண்டகன்" என்ற மகா அரக்கன் பிறந்தான்.
இவன் காட்டு பிரதேசமாக இருந்த கோதாவரி முதல் காவிரி நதி வரை உள்ள வன பகுதியில் சஞ்சரித்து கொண்டு இருந்தான்.

கோதாவரி நதி மஹாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா வரை சென்று கடலில் சேருகிறது.
காவிரி நதி கர்நாடக, தமிழ்நாடு சென்று கடலில் சேருகிறது.




கோதாவரி முதல் காவிரி வரை உள்ள வன பகுதிக்கு தான்,  "தண்டகாரண்யம்" என்று பெயர் ஏற்பட்டது.

தண்டகன் என்ற இந்த ராக்ஷசன் பயங்கரமாக சப்தம் செய்து கொண்டு, அங்கு தவத்தில் ஆழ்ந்து இருக்கும் முனிவர்களை அப்படியே நாவல் பழத்தை விழுங்குவது போல விழுங்கி, அதன் கொட்டையை துப்புவது போல, அவர்களின் எலும்பை துப்பி விடுவான்.
க்ருத யுகத்தில் ஆரம்பித்து, அடுத்த யுகமான த்ரேதா யுகம் வரை இந்த "தண்டகாரண்யம்" மனிதர்கள் வாழ முடியாத படி, நர மாமிசமாக விழுங்கி விடும் ராக்ஷஸர்கள் நடமாடும் பயங்கரமான வனமாக இருந்தது.

த்ரேதா யுகத்தில், ராமபிரான் 14 வருடம் வனவாசமாக வந்த போது, ராக்ஷசர்கள் நடமாடும் பயங்கரமான 'தண்டகாரண்யத்தில்' நுழைந்தார் என்று அறிகிறோம்.

ராக்ஷசர்கள் ஒழிக்கப்பட்டு, மனிதர்கள் வாழும் படியாக செய்தார் ராமபிரான்.

தண்டகனின் அட்டகாசத்தால் வேத ப்ராம்மணர்களான முனிவர்கள் பெரிதும் துக்கப்பட்டனர்.

இருந்தாலும் சில வேத ப்ராம்மணர்கள், இப்படியே போய் கொண்டிருந்தால், சந்தியா வந்தனம் செய்ய கூட ஆள் இல்லாமல் போய் விடுமே என்ற கவலையில்,
நித்யபுஷ்கரணி என்ற தாமரை தடாகத்தில் ஹிரண்யாக்ஷனை வதம் செய்த "வராஹ பெருமாளை" குறித்து தவம் செய்ய ஆரம்பித்தனர்.

இவர்கள் இப்படி சங்கல்பம் செய்து கொண்டு, ஒரு அரச மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு "வேத மந்திரங்களை" ஓத ஆரம்பிக்க, 'பெருமாளே தானும் ஒரு வேத ப்ராம்மணனாக வந்து' இவர்களுடன் வந்து அமர்ந்து கொண்டு விட்டார்.

வேத மந்திரங்கள் இந்த இடத்தில் ஒலிப்பதை கேட்டதும், மகா கோபம் கொண்ட தண்டகன், பெரிய சூலத்தை எடுத்துக்கொண்டு, கர்ஜனை செய்து கொண்டு, இவர்களை நோக்கி பாய்ந்து வர,
மரண பயத்தால், அங்கு இருந்த வேத ப்ராம்மணர்கள் அங்கும் இங்கும் ஓடி ஒளிய ஆரம்பித்தனர்.

கருநீல வண்ணத்துடன், தாமரை போன்ற கண்களையுடைய இந்த ஒரு ப்ராம்மணன் மட்டும், பிரசன்னமாக அங்கேயே உட்கார்ந்து இருந்தார்.

ஓடி வந்த தண்டகன், "கொஞ்சம் கூட பதட்டமோ, பயமோ இந்த ப்ராம்மணனிடம் இல்லையே!! மேலும் கோபம் கூட இல்லாமல், மிகவும் சாந்தமாக முக மலர்ச்சியுடன் இருக்கிறாரே!! இது எப்படி சாத்தியம்?" என்று இந்த ப்ராம்மணனை பார்த்து அதிசயித்தான்.
கொலை செய்து விழுங்குவதை காட்டிலும், முதலில் இதன் காரணத்தை அறிந்து கொள்ள ஆவல் உண்டாக, அந்த ப்ராம்மணன் அருகில் வந்து,
"ஒய் ப்ராம்மணரே !! என்னை கண்டு உமக்கு பயமில்லையா?..
இவ்வளவு பேரும் நான் வரப்போவதை கண்டு ஓடினார்கள் அல்லவா... நீ மட்டும் இங்கேயே உடகார்ந்து கொண்டு இருக்கிறாய்?!!
நான் யார் தெரியுமா?.. 
தண்டகன் என்று பெயர் எனக்கு.
உலகத்திலே ஒரு ப்ராம்மணன் கூட இருக்க கூடாது என்ற சங்கல்பத்துடன் பிறந்தவன் நான்." 
என்று சொல்ல,

பிராம்மணனாக வந்த பெருமாள் அவனிடம் பேசலானார்.
"இப்பொழுது ஓடி ஒளிந்த ப்ராம்மணர்கள் எல்லோரும் தரித்திர ப்ராம்மணர்கள். ஒன்றும் இல்லாதவர்கள்.
அதனால் உன்னை கண்டு பயந்து விட்டார்கள்.

நான் சீமானாகிய ப்ராம்மணன். நான் ஸ்ரீமான், செல்வ செழிப்பு மிக்கவன் என்பதால் தைரியமாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன்" 
என்று பதில் சொன்னார்.

இப்படி ஒரு பதிலை கேட்டதும், தண்டகன் தனக்குள்ளேயே ஆலோசித்தான்...
"இவர் என்ன இப்படி சொல்கிறார்.
யார் ஸ்ரீமானோ அவனுக்கு தானே பயம் ஏற்படும்!!
ஏழை ப்ராம்மணன் யாருக்குமே பயப்பட வேண்டிய அவசியம் இல்லையே!! ஒன்றுமே இல்லாதவனிடம் அடித்து பிடுங்கினாலும் அவனிடம் ஒன்றுமே இருக்காதே!!
இவர் ஸ்ரீமான் என்றால், இவர் தானே என்னை பார்த்து நியாயமாக பயப்பட்டு இருக்க வேண்டும். 
பார்ப்பதற்கும் இவர் பெரிய பணக்காரன் போல தான் இருக்கிறார். பெரும் பொழிவுடன் தான் இருக்கிறார்."
என்று நினைத்து கொண்டே, அந்த ப்ராம்மணனை பார்த்து,
"உன்னை பார்த்தால் சீமானை போல தான் இருக்கிறாய். அப்படி என்ன பெரும் சொத்து உன்னிடம் இருக்கிறது என்று சொல்"
என்று கேட்க, ப்ராம்மணனாக இருக்கும் பெருமாள்,
"ப்ராம்மணனிடம் என்ன சொத்து இருக்கிறது என்று கேட்கிறாயே...
இதை கேட்கவும் வேண்டுமா?...
வேதம் தான் ப்ராம்மணனின் சொத்து.
வேதம் அறியாததாலேயே இவர்களை தரித்திர ப்ராம்மணன் என்று சொன்னேன்.
வேதம் என்ற முழுமையான சொத்து இவர்களிடம் இல்லாததாலேயே இவர்கள் உன்னை கண்டு ஓடுகிறார்கள்.
மேலும், 
இந்த சொத்தை மட்டும், நீ என் அனுமதி இல்லாமல் திருடவே முடியாது..







வேதம் என்ற சொத்து என் வாக்கிலேயே இருப்பதால், நாங்கள் எங்கு சென்றாலும் வாழ இயலும். 'வித்வான் சர்வத்ர பூஜ்யதே'"
என்று சொல்ல,
தண்டகன், "அப்படியென்றால் வேதம் என்ற சொத்தை (ஸ்ரீ), நான் உன்னிடமிருந்து கைப்பற்றி (முஷ்ணா) விடுகிறேன்.
உம்முடைய பொலிவுக்கு காரணம் இந்த வேதம் தான் காரணம் என்று அறிகிறேன்"
என்று மிரட்ட,
"அது உன்னால் ஆகாது.. 
ப்ராம்மணர்கள் ஒதும் வேதத்தை மத்ஸ்ய ரூபத்தில் விஷ்ணுவே காத்து கொண்டு இருக்கிறார்." என்று இவர் சொல்ல,
"அந்த விஷ்ணுவின் இதயத்தில் வேதம் ஒளிந்து இருந்தாலும் அதை நான் கைப்பற்றி விடுவேன்"
என்று தண்டகன் சொல்லி,
'ப்ராம்மணர்களை வேதத்தை விட்டு விட செய்தாலேயே, ப்ராம்மணன் ஒழிந்து விடுவான்' என்பதால், 'அந்த வேதத்தை அழிக்க வேண்டும்' என்று தீர்மானித்து கொண்டான்.

"ப்ராம்மணர்கள் வேத படிக்க கூடாது...
வேதம் என்று இருப்பதே ப்ராம்மணனுக்கு மறந்து போக வேண்டும்"
என்றே சங்கல்பித்து கொண்டு, அதற்காக கடுமையான தவம் செய்ய ஆரம்பித்தான் தண்டகன்.

இவன் செய்த கோரமான தவத்தின் பலனால், ப்ராம்மணனுக்கு வேதம் கற்று கொள்ளும் ஆர்வம் குறைந்தது.
உண்மையான வேத ப்ராம்மணர்களை கண்ணால் காண்பதே அரிதாகி போனது.
"தரித்திர ப்ராம்மணனாகி" போன இவர்கள்,
தன் தகப்பனுக்கு சொல்ல வேண்டிய தர்ப்பண மந்திரமும் கூட தெரியாமல்,
அமாவாசை தர்ப்பண மந்திரமும் தெரியாமல்,
காயத்ரி மந்திரமும் ஜபம் செய்யாமல்,
சந்தியா வந்தனம் கூட தெரியாது என்ற நிலைக்கு சென்று விட்டனர்.

இப்படி வேதத்தை விட்ட இவர்கள், நாதீகர்களாகவும், மிலேச்சனாகவும், வேதத்துக்கு எதிரான பாஷண்டிகளாக ஆகி நிற்க,
"தான் செய்த தவம் பலித்ததே!! ப்ராம்மணன் ஒழிந்தானே!! "
என்று பெரும் ஆனந்தம் அடைந்தான் தண்டகன்.
தனக்கே சபாஷ் போட்டுக்கொண்டான்.

இன்றைய தேதியில், ப்ராம்மணர்கள்,
"இங்கிலீஷ் படிப்பு, ஜெர்மன், பிரெஞ்ச் மொழி கூட படிப்பேன், ஆனால் தப்பித்தவறி கூட வேதத்தை படிக்க மாட்டேன்"
என்று தரித்திர ப்ராம்மணர்களாக ஆகி, யார் யாருக்கோ கால் பிடித்து கொண்டுள்ளனர்.
வேதத்தை படிக்க ஒரு ப்ராம்மணன் தயாரில்லை.
இந்த கலியில், தண்டகன் போல யார் தவம் செய்தார்களோ!!
என்று தோன்றுகிறது.

தண்டகன்
"சபாஷ்... அக்ரஹாரம் ஒன்று கூட இல்லாமல் அடியோடு ஒழித்து விட்டேன்...
வைதீக ப்ராம்மணன் எல்லோரும் ஒழிந்தார்கள்..
ப்ராம்மணன் எல்லோரும் லௌகீக ப்ராம்மணனாக ஆகி, வேதத்தை விட்டு விட்டான்.
வேதம் ஒழிந்தது..
இனி இந்த நாராயணன் என்ன செய்து விடுவான்? என்று பார்க்கிறேன்"
என்று பூரித்து போனான்.
பொறுக்க முடியாத இந்திரன், "வேத மந்திரங்கள் சொல்லும் ப்ராம்மணர்கள் இல்லாமல் செய்து விட்டானே!!" என்று தன் வஜ்ராயுதத்தை எடுத்து கொண்டு இவன் மேல் வீச, இந்திரனை அடக்கி, அவர்  சக்தியையை கைப்பற்றி (முஷ்ணம்) விட்டான் தண்டகன்.

இப்படியே யமன், வாயு, அக்னி என்று தேவர்கள் அனைவரும் ஒவ்வொன்றாக இவனை ஒழிக்க வர, அனைவரையும் ஒடுக்கி, அவர்கள் சக்தியை அபகரித்து, அனைவரையும் தோற்கடித்து விட்டான் தண்டகன்.

பூதேவர்களான ப்ராம்மணனும் ஒழிந்தார்கள், 
சொர்க்க லோகத்தில் உள்ள தேவர்களும் ஒழிந்தார்கள் 
என்றதும் பெரும் வெற்றி பெற்றான் தண்டகன்.

இந்த நிலையில்,
வேதம் மறைந்ததால், எங்குமே யாகங்கள் நடப்பது நின்று போனது.. கோவிலில் பூஜைகள் நின்று போனது..
இந்திரன், வாயு, அக்னி போன்ற தெய்வ வழிபாடுகள் நின்று போனதால்,
இவர்களுக்கு கட்டுப்பட்டு இருந்த பஞ்ச பூதங்கள் தாறுமாறாக போக ஆரம்பிக்க,
ஒரு இடத்தில் மழையே இல்லாமல் பெரும் வறட்சி உண்டானது..
நதிகள் வறண்டு போனது..
ஒரு இடத்தில் கடுமையான வெயில் ஏற்பட்டு, வாழ முடியாத நிலையில் உலகம் தவித்தது..
உலக ஜனங்கள் தரித்திர நிலைக்கு தள்ளப்பட்டனர்.. எங்கும் பஞ்சம் உண்டானது.
பஞ்சம் ஏற்பட்டதால், 
மாமிசம் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டு, ஒரு மனிதன் இன்னொரு மனிதனையே சாப்பிடும் அளவுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டு ..
உலகம் முழுவதுமே தாறுமாறாக போய் விட்டது




பஸ்மாசுரன், "சிவபெருமான் கொடுத்த வரத்தை கொண்டு, சிவபெருமானையே பஸ்பமாக்க நினைக்க, வஞ்சகனை வஞ்சகனாயாலேயே கொன்றார் பெருமாள்".
அது போல,
தண்டகன் செய்த இந்த காரியத்தை அவன் வழியிலேயே சென்று சரி செய்ய சங்கல்பித்தார்.

வராக பெருமாள், அதே பழைய பிராம்மண ரூபத்தை எடுத்துக்கொண்டு, தண்டகன் எதிரே வந்தார்.

"தண்டகா... தபசு செய்து வேதத்தையெல்லாம் அபகரித்து விட்டாயா?
சௌக்கியமாக இருக்கிறாயா?"
என்று பெருமாள் கேட்க,
தண்டகன்
"அனைத்து ப்ராம்மணனிடமிருந்தும் வேதத்தை அபகரித்து விட்டேன். உம்மிடத்தில் உள்ள வேதத்தை மட்டும் இன்னும் அபகரிக்க வில்லை."
என்றான்.
"ஏன்... என்னை மட்டும் விட்டுவிட்டாய்?" 
என்று பெருமாள் கேட்க,
"நீர் என் நண்பனாக ஆகிவிட்டீர்.. இதை சொல்லிக்கொடுத்ததே நீர் தானே.  அதனால் உம்மை மட்டும் விட்டு வைத்திருக்கிறேன் !
அனைத்து ப்ராம்மர்களின் வேதமும் இப்பொழுது என் கையில்.."
என்றான்.

"இந்த வேதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்து விடப்போகிறாய்?"
என்று பெருமாள் கேட்க,
"வேதம் யாரிடம் உள்ளதோ அவர்களிடம் பெரும் சொத்து உள்ளது அல்லவா.. நானே பெரும் ஸ்ரீமானாக ஆகி விட்டேன் !"
என்றான்.

"அட பைத்தியங்கக்காரா!!  உலகத்தில் உள்ள ப்ராம்மணர்களை இத்தனை எளிதாக ஒழித்து விட முடியுமா? 
உண்மையில் உன் சாமர்த்தியத்தால், இவர்களிடமிருந்து வேதத்தை கைப்பற்றவில்லை. இவர்கள் ஏற்கனவே தரித்திர பிராம்மணர்கள்.
இவர்கள் வேத மந்திரங்களை கூட தவறாக உச்சரித்து சொன்னவர்கள்.

உண்மையில், நீ தப்பான வேதத்தை கைப்பற்றி வைத்து கொண்டிருக்கிறாய்.
நீ இந்த வேதத்தை படித்தால், நீயும் ஒழிந்து போய் விடுவாய்."
என்று பெருமாள் பேச,
"அப்படியா.... ஆஹா.. எனக்கு தெரியாதே ஸ்வாமி !!"
என்று தண்டகன் பதற,
"கவலைப்படாதே... உன் வேதத்தை என்னிடம் கொடு. நான் அதை திருத்தி கொடுக்கிறேன்..." என்றார் பெருமாள்.
உடனே,
தண்டகன், அம்ருத கலசத்தை அசுரர்கள், மோகினியாக வந்த பெருமாளிடம் அப்படியே கொடுத்ததை போல, தான் அபகரித்த வேதத்தை பெருமாளிடம் கொடுத்து விட்டான்.

வேதத்தை வாங்கிக்கொண்ட பெருமாள், பட்டென்று மறைந்து விட்டார்.
வராஹ பெருமாளாக சுயமாக ஆவிர்பவித்து நின்றார்.
தண்டகன் வேதத்தை இழந்து நின்றான். 
மீண்டும் வேத ஒலி உலகெங்கும் ஒலிக்க ஆரம்பித்தது.

தண்டகனால் கைப்பற்ற பட்ட வேதம் என்ற சொத்தை (ஸ்ரீ), 
வராக பெருமாள் தானே சென்று கைப்பற்றியதால் (முஷ்ணம்),
இந்த திவ்ய தேசத்துக்கு "ஸ்ரீ முஷ்ணம்" என்ற பெயர் ஏற்பட்டது.
க்ருத யுகத்தில் நடந்த சம்பவம். தமிழகத்தில் நடந்த சம்பவம்.
இன்று, ஸ்ரீ முஷ்ணம் சென்றால், அதே வராஹ பெருமாளை, சுயமாக ஆவிர்பவித்த பெருமாளை, தரிசிக்கலாம்.

இந்த திவ்ய தேசத்தில், வராஹ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி கொடுக்கிறார்.
இந்த பெருமாளை சேவித்தால், நல்ல கல்வி ஞானம் உண்டாகும்.
மற்ற உலக பலன்களும் கிடைக்கும்.





'வராஹ அவதாரம்' பற்றி, 'சிவபெருமான் அவதாரம்' பற்றி தெரிந்து கொள்ள... இங்கே படிக்கவும்.


வாழ்க ஹிந்துக்கள்...
வாழ்க ஹிந்து தர்மம்...