Followers

Search Here...

Showing posts with label சீதை. Show all posts
Showing posts with label சீதை. Show all posts

Saturday 5 September 2020

சீதை மருமகளாக எப்படி இருக்கிறாள்? என்று பாருங்கள்... மாமியார் மருமகள் உறவு. சீதா தேவி காட்டுகிறாள்.

கீழ்த்தரமான ராவணன் "ராமர் இறந்து விட்டதாக" சீதையிடம் இரண்டு இடத்தில் சொல்கிறான்.
'அனாதையாகி போன சீதை தன்னை மணக்க வேண்டும்" என்று அழைத்தும் பார்த்தான்.

தாளாத சீதை பலவாறு புலம்புகிறாள். 



'ஐயோ! நான் விதவையாகி விட்டேனே!
என்று கூட புலம்புகிறாள். 

தான் படும் இந்த வேதனை நிலையிலும், ராமபிரானை பெற்ற மாதா கோசலையின் துக்கத்தை நினைத்து சீதை அழுகிறாள்.

'மாமியார் துக்கப்படுவாளே! அவள் மனம் வாடுமே
என்று அந்த துக்கத்திலும் நினைக்கிறாள் உத்தமியான சீதை.

1.
ராமபிரான் கடலை கடந்து, சுவேல மலை அருகில், வானர படைகளுடன் வந்து விட்டார் என்றதும், 'எப்படியாவது சீதையை சம்மதிக்க வைக்க வேண்டும்' என்று நினைத்தான். 

'வித்யுஜிஹ்வா' என்ற மாயாவியை அழைத்து, மாயாரூபமான வெட்டப்பட்ட  ராமபிரான் தலையையும், அவர் வைத்து இருந்த வில்லையும் உருவாக்க சொன்னான்.
வெட்டப்பட்ட மாயா ராமபிரான் தலையை காட்டி, 
"கலங்கி இருக்கும் சீதா, இனி நீ என்னுடைய மனைவியாக ஆக போகிறாய்.
(வ்யசனே ஆத்மன: சீதே மம பார்யா பவிஷ்யசி - வால்மீகி ராமாயணம்)

சொல்கிறேன் கேள்! உன் கணவன் ராமன் கொடூரமாக கொல்லப்பட்டு விட்டான்.
(ஸ்ருணு பர்த்ரு வதம் சீதே கோரம் வ்ருத்ர வதம் யதா! - வால்மீகி ராமாயணம்)" 
என்று பேசி அவளை சம்மதிக்க முயற்சித்தான்...

அப்போது புலம்பி அழும் சீதா தேவி, அந்த நிலையிலும் கூட, தன் மாமியாரை நினைத்து அழுகிறாள்,
"என்னுடைய சோகத்திலிருந்து இனி என்னை மரணம் மட்டுமே மீட்க முடியும்..



ஐயோ! கன்றை இழந்த தாய் பசு போல, என் மாமியார் கௌசல்யா தவிப்பாளே!
(சா ஸ்வஸ்ரூர் மம கௌசல்யா த்வயா புத்ரேன ராகவ! வத்ஸேன் ஏவ யதா தேனுர் விவத்ஸா வத்சலா க்ருதா!! - வால்மீகி ராமாயணம்)
என்று அழுகிறாள்.

சீதையின் மென்மையான குணம் இங்கு நமக்கு தெரிகிறது.

2.
வானர சேனைக்கும், ராக்ஷஸர்களுக்கும் கடுமையான யுத்தம் இரவு பகலாக ஓய்வில்லாமல் நடந்து கொண்டிருந்தது.
இந்திரஜித் போர் புரிய வந்தான்.

இவனை அம்பு மழைகளால் சிதறடித்தார் ராமபிரான்.

மாய போர் புரியும் இந்திரஜித் தன்னை மறைத்து கொண்டு, நாக அஸ்திரத்தை ஏவி, ராமபிரானையும், லக்ஷ்மணரையும் கீழே சாய்த்தான்.

விழுந்த இவர்கள் மீது பல அம்புகளை ஏவினான். 
ரத்த வெள்ளத்தில் கிடந்த ராம லக்ஷ்மணரை பார்த்து, ஹனுமான், சுக்ரீவன், நீலன், மைந்தன், த்விவிதன், சுசேனன், குமுதன், அங்கதன் சூழ்ந்தனர்.
வானர சேனைகள் கண் கலங்கி அழ ஆரம்பித்தனர்.

இப்படி அழுது கொண்டிருந்த வானரர்களை மறைந்து இருந்து பார்த்து கொண்டிருந்த இந்திரஜித், 
இந்த வானரர்களையும் கொன்று விடும் எண்ணத்தில், 
ஒன்பது முறை அம்புகளை 'நீலன்' மீது ஏவினான்.
ஆறு முறை 'மைந்தன், த்விவிதன்' மீது ஏவினான்.
பத்து முறை 'ஹனுமான்' மீது ஏவினான்.
இரண்டு இரண்டு முறை, 'ஜாம்பவான், கவாக்சன், சரபன்' மீது ஏவினான்.
'அங்கதன்' மீது கணக்கில்லா அம்புகளை ஏவினான்.
'எங்கிருந்து அம்புகள் வருகிறது?' 
என்று தெரியாமல் வானரர்கள் நிலை குலைய, 
அட்டகாச சிரிப்புடன், வெகு நேரமாக மூச்சு பேச்சு இல்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் 'ராம லக்ஷ்மணர்கள் இறந்து விட்டார்கள்' என்று தீர்மானித்து, இலங்கை நகரத்துக்குள் சென்று, வெற்றி செய்தியை ராவணனிடம் சொன்னான்.

பெரும் மகிழ்ச்சி அடைந்த ராவணன் தன் மகனை உச்சி முகர்ந்து பாராட்டினான்.

பிறகு, மகனை அனுப்பி விட்டு, அசோக வனத்தில் இருக்கும் ராக்ஷஸிகளை அழைத்தான்.



த்ரிஜடை தலைமையில் அனைவரும் வர, ராவணன் அவர்களை பார்த்து,
"இந்திரஜித்தால் ராம லக்ஷ்மண இருவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று சீதையிடம் சொல். 

அவளை புஷ்பக விமானத்தில் ஏற்றி கொண்டு, ராமனும், லக்ஷ்மணனும் விழுந்து கிடக்கும் இடத்தை காட்டு.

என்னை லட்சியம் செய்யாமல் இருக்கும் சீதை, போர் களத்தில் விழுந்து கிடக்கும் இவர்கள் சடலத்தை பார்க்கட்டும்.
இதை பார்த்த பிறகாவது, சந்தேகமில்லாமல், பயமில்லாமல் நகைகளை அணிந்து அலங்காரம் செய்து கொண்டு என்னை மணக்க தயாராகட்டும்.

மரண காலத்தில் கட்டப்பட்டு கிடக்கும் ராமனையும், லக்ஷ்மணனையும், அகன்ற கண்கள் உடைய சீதை (விசாலக்ஷி) பார்த்து, தன் நம்பிக்கையை இழக்கட்டும். 

இனி யாரும் இவளுக்கு துணை இல்லை என்கிற நிலையில், இவள் என்னிடம் சரண் அடைவாள்"
என்றான்.

ராவணன் சொன்னதை ஏற்று, ராக்ஷஸிகள் சீதையை புஷ்பக விமானத்தில் ஏற்றி கொண்டு, ராமர், லக்ஷ்மணர் விழுந்து கிடக்கும் இடத்தை அடைந்தனர்.

அசைவில்லாமல் கிடக்கும் இவர்களை சூழ்ந்து கொண்டு, வானரர்கள், விபீஷணன் சோகத்தில் இருப்பதை பார்த்து விட்டு, சீதை மயங்கி விழுந்தாள்.

சிறிது நேரத்தில் விழித்த சீதை, பலவாறு புலம்புகிறாள்.

அந்த சமயத்தில் கூட, தன் மாமியாரை நினைத்து அழுகிறாள்,
"காலத்தை யாராலும் வெல்ல முடியாது என்று ஆகிவிட்டதே! வீழ்த்தவே முடியாத என் ராகவனும், அவர் தம்பி லக்ஷ்மணன் கூட போர்க்களத்தில் வீழ்ந்து விட்டார்களே!

ஐயோ! ராகவனும், அவர் தம்பி லக்ஷ்மணனும் வீழ்ந்த சோகத்தை காட்டிலும், 
எப்பொழுதும் தெய்வ சிந்தனையுடன் விரதம் இருக்கும் என் மாமியாரை (கௌசல்யா) நினைத்து என் மனம் வருந்துகிறதே!!"
(ந ஸோசாமி ததா ராமம் லக்ஷ்மணம் ச மஹாபலம்! ந ஆத்மானம் ஜனனீம் வாபி யதா ஸ்வஸ்ரூம் தபஸ்வினீம்!! - வால்மீகி ராமாயணம்)
இந்த வனவாசம் என்ற விரதம் எப்பொழுது முடியுமோ என்று அனுதினமும் நினைத்து கொண்டு இருப்பாளே!

எப்பொழுது நான் ராமனை, லக்ஷ்மணனை, சீதையை பார்ப்பேன்? என்று எங்கள் வருகைக்காக காத்து கிடப்பாளே"
(சா அனுசிந்தயேத் நித்யம் சமாப்த வ்ரதம் ஆகதம்! கதா த்ரஷ்யாமி சீதாம் ச லக்ஷ்மணம் ச ச ராகவம்!! - வால்மீகி ராமாயணம்)
என்று அழ ஆரம்பிக்கிறாள்.

த்ரிஜடை "கவலைப்படாதே! வானர்களை முகத்தில் இன்னும் உற்சாகமும், கோபமும் அடங்கவில்லை. 
உன் கணவன் உயிர் பிரிந்த பின், இப்படி இவர்கள் இருக்க வாய்ப்பில்லை. 
மேலும் திவ்யமான இந்த புஷ்பக விமானம் கணவனை இழந்த பெண்களை சுமந்து பறக்காது..." என்று பல காரணங்களை காட்டி, சீதையை சமாதானம் செய்கிறாள். 

வால்மீகி ராமாயணம் அறிவோம்.

மாமியார் துக்கப்படுவாளே! என்று நினைக்கும் மென்மையான சீதையை போன்ற மருமகளாக இருக்க, அனைத்து பெண்களும் ஆசைப்பட வேண்டும்.

வால்மீகி "வேடுவனாக" இருந்தவர்.
அவர் அவதரித்த ஊர் "அன்பில்".
ராம அவதார காலம் முழுவதும் உத்திர பிரதேசம் சென்று வசித்தார்.

ராம அவதாரம் முடிந்த பிறகும், 'விபீஷணன், வால்மீகி, ஹனுமான்' பூலோகத்தில் இருந்தனர்.

ராம அவதாரம் முடிந்த பின், மீண்டும் தமிழகம் வந்து, "திருநீர்மலை" என்ற இடத்தில் ராம தியானத்தில் இருந்து, முக்தி பெற்றார்.

தமிழன் எழுதிய ராமாயணம் உலகமே படிக்கிறது. 
இது தமிழனுக்கு பெருமை.

Saturday 29 August 2020

'ராவணன் பேசிய பச்சை பொய்' தெரிந்து கொள்ள வேண்டாமா .. சீதையின் புலம்பல்.. தமிழன் 'வால்மீகி' கொடுத்த ராமாயணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சீதா தேவியை மீட்க, வானர சேனையை திரட்டி கொண்டு, இலங்கையை நோக்கி வந்தார் ராமபிரான்

"சார்தூளா" என்ற ஒற்றன், ராவணனிடம் இதை தெரிவிக்க, "சுகா" என்ற ராக்ஷஸ ஒற்றனை மேலும் விவரம் அறிந்து வர அனுப்பினான்.

வானரர்கள் பிடித்து கட்டி வைத்தனர்.

ஐந்தே நாளில், கடலில் பாலம் அமைத்து, இலங்கையை வந்து அடைந்தார் ராமபிரான்.

பிறகு சுகாவை விடுவித்து அனுப்பினார். 




பிறகும், ராவணன், சுகனோடு 'சாரணன்' என்ற மற்றொரு ராக்ஷஸ ஒற்றனை அனுப்பி, வானர வீரர்களின் பலத்தை அறிந்து வர அனுப்பினான்.

வானரர்கள் போல உருவம் மாற்றி கொண்டு, இவர்கள் இருப்பதை கண்டு விபீஷணன் ராமபிரானிடம் தெரிவிக்க, இருவரையும் பிடித்து கட்டினர் வானரர்கள்.

ராமபிரான் இவர்களை விடுவித்து, விபீஷணனையே இவர்களுக்கு முழு படைபலத்தையும் காட்ட சொல்லி, திருப்பி அனுப்பினார்.


'சுக சாரணன்' இருவரும் வானரர்கள் படை பலத்தை ராவணனிடம் பிரமிப்புடன் சொல்ல, சார்தூளா கோபம் அடைகிறான்

எதிரியை போற்றும் படியாக ராவணனிடம் பேசுவதை கண்டித்தான். 

'சுக சாரணன்' இருவரும், அமைதியுடன், 'ராவணனுக்கு வெற்றி உண்டாகட்டும்' என்று சொல்லி விட்டு சபையை விட்டு கிளம்பினர்.

ராவணன், மகோதரன் என்ற ஒரு மந்திரியை பார்த்து, "சிறந்த ஒற்றர்களை" சபைக்கு அழைத்து வர சொன்னான்.

உடனே, தலை சிறந்த ராஜ ஒற்றர்களை, ராவணன் முன் அழைத்து வந்தான் மகோதரன்.

சார்தூலாவின் தலைமையில், அனைத்து ஒற்றர்களையும் ராமபிரானை பற்றி அறிந்து வர அனுப்பினான்.

"ராமனின் திறன் என்ன? ராமனுக்கு பிடித்தமானவர்கள் யார் யார்? 

யாரெல்லாம் ராமனுக்கு நட்பாக இருக்கிறார்கள்? 

ராமன் எப்பொழுது தூங்குவார்? எப்பொழுது விழிப்பார்? 

வேறு என்னவெல்லாம் காரியம் செய்கிறார்? 

என்னவெல்லாம் செய்ய நினைக்கிறார்? 

அனைத்தையும் தெரிந்து கொண்டு என்னிடம் வந்து சொல்ல வேண்டும்" 

என்று உத்தரவு செய்தான்.

மாயாவிகளான இவர்கள் வானர்ர்களோடு கலந்து கொண்டு சுவேல மலையில் இருக்க, கடல் போன்ற வானர சேனையை பார்த்து அச்சம் கொண்டனர்.

விபீஷணன் மீண்டும் இவர்களை கண்டுபிடித்து விட்டார். 

சார்தூளா வானரர்களிடம் மாட்டி கொண்டு விட, இவர்களை வானரர்கள் ரத்தம் வரும் வரை கைகளை மடக்கி குத்தி, முட்டியால் குத்தி, பற்களால் கடித்து உயிர் போகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சுவேல மலையில் இருந்த ராமபிரான், மீண்டும் வானரர்களை தடுத்து, அனைவரையும் விடுவித்தார்.

ராவணனிடம் திரும்பி வந்த சார்தூளவும் மற்ற ஒற்றர்களும், பெரும் மரண பீதியில் இருந்தனர்.


ராவணன் இவர்களின் வெளுத்து போன முகத்தை பார்த்து, மனஉளைச்சலுடன் "ஏன் இப்படி சோர்ந்து இருக்கிறீர்கள்? நீங்களும் எதிரிகளின் கட்டுப்பாட்டில் சிக்கினீர்களா?" 

என்று கேட்டான்.


நடந்த விஷயத்தை சொல்லி, குறிப்பாக 'ஒவ்வொரு வானரனும் எந்த தேவனின் அம்சமாக இருக்கிறார்கள்?' என்று சார்தூளா ராவணனிடம் சொல்கிறான்...

"அரசே! வானர அரசன் சுக்ரீவன், ருக்ஷராஜனின் மகன். 

ஜாம்பவான் கட்கதனின் இளைய மகன். தும்ரா கட்கதனின் மூத்த மகன். 

கேசரி ப்ருஹஸ்பதியின் மகன்.

இலங்கையில் புகுந்து ராக்ஷஸரகள் பலரை கொன்ற ஹனுமான் கேசரியின் மகன்.

சுசேனன் சாஷாத் தர்ம தேவதையின் மகன்.

ததிமுகன் சோம தேவதையின் அம்சமாக தோன்றியவன்.

சுமுகன் மரண தேவதையின் அம்சமாக தோன்றியவன்.

படைத்தளபதியான நீலன் அக்னி தேவனின் அம்சம்.

ஹனுமான் வாயு தேவனின் அம்சம்.

அங்கதன் இந்திரனின் பேரன்.

மைந்தனும் த்விவிதனும் அஸ்வினி குமாரர்களின் அம்சம்.

கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதன் அனைவரும் சூரிய தேவனின் பிள்ளைகள்.

10 கோடிக்கும் மேலான வானரர்கள் போர் செய்ய குவிந்து இருக்கிறார்கள்.




இளமையான வீரனாக இருக்கும் ராமன், தசரதனின் பிள்ளை.

அந்த ராமன் தான் கர, தூஷன, த்ரிசிரர்களை கொன்றார்.

யாருமே அந்த ராமனை எதிர்க்க முடியவில்லை.

விராதா மற்றும் கபந்தன் போன்ற ராக்ஷஸர்களையும் கொன்றவர் இந்த ஸ்ரீராமன்.

ஜனஸ்தானத்தில் இருந்த ஒட்டு மொத்த ராக்ஷஸர்களும் வேரோடு அழிந்து விட்டனர்.

கூடவே இருக்கும் லக்ஷ்மணன் விடும் பாணத்தை இந்திரன் கூட தடுக்க இயலாது."

இப்படி வானரர்கள் அனைவரையும் பற்றி சொல்ல, ராவணன் மனகுழப்பம் அடைந்தான்.

சிறிது நேரம் தன் மந்திரிகளிடம் ஆலோசனை செய்து விட்டு, தன் மாளிகைக்கு சென்றான்.


தனது மாளிகையில், "வித்யுஜிஹ்வா" என்ற மாயாவியை அழைத்து இவ்வாறு பேசினான்,

"சீதையை மாயத்தால் குழப்ப வேண்டும். நீ உடனேயே மாயையால் ராமனின் தலையையும், அவன் கையில் வைத்து இருக்கும் அம்பு, வில்லை கொண்டு வா" என்றான்.

(வித்யுஜிஹ்வம் ச மாயாக்யம் அப்ரவீத் ராக்ஷஸாதிப: ! மோஹயிஷ்யாவஹே சீதாம் மாயயா ஜனகாத்மஜாம் !! 

சிரோ மாயாமயம் க்ருஹ்ய ராகவஸ்ய நிஸாசர! த்வம் மாம் சமுபதிஸ்டஸ்வ மஹச்ச சசரம் தனு:!! - வால்மீகி ராமாயணம்)


வித்யுஜிஹ்வா உடனேயே மாயா ரூபமான ராமனின் தலையும், வில்லும் அம்பும் கொடுக்க, ராவணன் அந்த மாயாவிக்கு தான் அணிந்து இருந்த ஆபரணத்தை பரிசாக கொடுத்து அனுப்பினான்.


பிறகு, 

ராவணன் அசோக வனத்தில் இருக்கும் சீதையை பார்க்க ஆவலுடன் சென்றான்.


அபலையான சீதை தலை குனிந்து நிலத்தை பார்த்து கொண்டே, ராமபிரானின் நினைவிலேயே, பயமுறுத்தும் ராக்ஷஸிகள் சூழ அமர்ந்து இருந்தாள்.

மிகவும் உற்சாகமாக தன்னை பற்றி உயர்வாக சீதையை பார்த்து பேசலானான் ராவணன், 

"சீதா! நான் உன்னிடம் எத்தனை மதுரமாக பேசினாலும், அந்த ராமனை நம்பிக்கொண்டு ஏதோ உளருகிறாய். 

பரிதாபம்! கரண் போன்ற ராக்ஷஸரகளை கொன்ற உன் கணவன் இப்பொழுது போரில் கொல்லப்பட்டு விட்டான்.

உன் நம்பிக்கை அனைத்தும், என்னால் வேர் அறுக்கப்பட்டு சின்னாபின்னம் ஆக்கப்பட்டு விட்டது. 

(கர ஹந்தா ச தே பர்தா ராகவ சமரே ஹத:! சின்னம் தே சர்வதோ மூலே தர்பஸ்தே விஹிதோ மயா!  - வால்மீகி ராமாயணம்)

கலங்கி இருக்கும் சீதா, இனி நீ என்னுடைய மனைவியாக ஆக போகிறாய்.

(வ்யசனே ஆத்மன: சீதே மம பார்யா பவிஷ்யசி  - வால்மீகி ராமாயணம்)

சீதா! முட்டாள்த்தனமான நம்பிக்கையை விடு..  செத்துபோனவனை வைத்து என்ன செய்ய போகிறாய்?

(விஸ்ருஜே மாம் மதிம் மூடே கிம் ம்ருதேன கரிஷ்யசி  - வால்மீகி ராமாயணம்)

ஒழுக்கமானவளே! என் மனைவிகள் அனைவருக்கும் மேலே உன்னை ஆக்கி, பட்டத்து ராணியாக உன்னை ஆக்குகிறேன்.

(பவஸ்ய பத்ரே பார்யானாம் சர்வாசாம் ஈஸ்வரி மம  - வால்மீகி ராமாயணம்)

அல்ப புண்ணியங்கள் கொண்டவளே! மூடத்தனமாக நீ உன்னையே எல்லாம் தெரிந்தவள் என்று நினைத்து கொண்டு இருக்கிறாய்.

(அல்ப புண்யே நிவ்ருத்தார்த்தே மூடே பாண்டிதம் ஆனினி!  - வால்மீகி ராமாயணம்)

சொல்கிறேன் கேள்... உன் கணவன் ராமன் கொடூரமாக கொல்லப்பட்டு விட்டான்.

(ஸ்ருணு பர்த்ரு வதம் சீதே கோரம் வ்ருத்ர வதம் யதா!  - வால்மீகி ராமாயணம்)

இந்த ராமன் சுக்ரீவன் தலைமை ஏற்ற பெரும் படையை கூட்டிக்கொண்டு, என்னை கொல்வதற்கு கடற்கரை பக்கம் போர் புரிய வந்தான்.

(சமாயாத சமுத்ராந்தம் மாம் ஹந்தும் கில ராகவ:!  - வால்மீகி ராமாயணம்)

சூரியன் மறைந்த வேளையில், வடக்கு சமுத்திர கரையில் படைகளுடன் தங்கி இருந்தான்.

பயண களைப்பில் சோர்ந்து இருந்த இவர்கள் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தனர்.

என்னுடைய ஒற்றர் படை அங்கு சென்று இதை கவனித்தனர்.

ப்ரஹஸ்தன் தலைமையில் பெரும் ராக்ஷஸ படை அங்கு சென்றனர்.

(தத் ப்ரஹஸ்த ப்ரணீதேன பலேன மஹதா மம! - வால்மீகி ராமாயணம்)

ராமனின் மொத்த படைகளும் இரவோடு இரவாக அழிக்கப்பட்டது.

ராக்ஷஸர்கள் தங்களிடம் இருந்த பிராணிகளை பிடிக்கும் ஆயுதங்களை கொண்டும், கதையை கொண்டும், சக்கரத்தை கொண்டும், கம்புகளை கொண்டும், கத்தியை கொண்டும், அம்புகளை கொண்டும், கூர்மையான ஆணிகள் பதித்த கதையை கொண்டும், ஏவுகணை போன்ற ஆயுதங்களை கொண்டும் அடியோடு வானர கூட்டத்தை அழித்தனர்.

அந்த சமயத்தில், தூங்கி கொண்டிருந்த ராமனின் அருகில் சென்ற ப்ரஹஸ்தன் தன் கூரிய வாளால் ராமனின் தலையை சீவி விட்டான். அங்கு அவனை எதிர்ப்பதற்கு ஒரு ஆள் இல்லை.

(அத சுப்தஸ்ய ராமஸ்ய ப்ரஹஸ்தேன ப்ரமாதினா! அசக்தம் க்ருத ஹஸ்தேன சிரஸ் சின்னம் மஹாசினா! - வால்மீகி ராமாயணம்)


விபீஷணன் சிறைபிடிக்கப்பட்டான்.

லக்ஷ்மணன் எஞ்சி இருந்த வானர கூட்டத்துடன் விரட்டி அடிக்கப்பட்டான்.

சுக்ரீவன் கழுத்து நொறுக்கப்பட்டு கீழே வீழ்ந்தான்.

ஹனுமான் ராக்ஷஸர்களால் தாடை உடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.

ஜாம்பவான் மண்டி இட்டு காலில் விழுந்தான். அவனை ஈட்டியால் குத்தி மரத்தை சாய்ப்பது போல சாய்த்து விட்டனர்.

மைந்தன், த்விவிதன் இருவரும் வீழ்த்தப்பட்டனர். 

அனைவரும் வெட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் அழுது விழுந்தனர்.

பனசன் பனச மரத்தை போல விழுந்தான்.

தரீமுகன் பலமுறை வெட்டப்பட்டு கீழே விழுந்தான்.

குமுதன் அம்புகளால் வீழ்த்தப்பட்டான். வலியால் கதற கூட முடியாமல் இறந்தான்.

அங்கதன் பல ஆயிரம் அம்புகளால் தாக்கப்பட்டு வீழ்ந்தான்.

வானர கூட்டம் யானைகளால் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

பலர் தேரிலும் குதிரைகளின் கால்களிலும் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

யானைகள் சிங்கத்தால் பின் பக்கத்தில் இருந்து தாக்கப்படுவது போல, ராக்ஷஸர்கள் வானரர்களை தாக்கினர். 

பலர் கடலில் விழுந்து உயிர் விட்டனர்.

பல வானரர்கள் கடற்கரையிலும், மலைகளிலும், மரங்களுக்கு இடையிலும் ராக்ஷஸர்களால் கொல்லப்பட்டனர்.

இப்படி என்னுடைய படைகள் உன் கணவனையும் அவன் படையையும் அழித்து விட்டனர்.

உனக்காக புழுதி படிந்த ரத்தம் ஒழுகும் ராமனின் தலையை கொண்டு வந்து இருக்கிறேன்."

இப்படி சொல்லிக்கொண்டே, அருகில் இருந்த ஒரு ராக்ஷஸியை பார்த்து, 

"வித்யுஜிஹ்வாவை போரிலிருந்து கொண்டு வந்த ராமனின் தலையோடு இங்கு வரச்சொல்" 

என்று கட்டளை இட்டான்.

வித்யுஜிஹ்வா மாயா ரூபமான ராமனின் தலையுடன், ராமபிரான் வைத்து இருக்கும் அம்பு வில்லை காண்பித்தான்.

ராவணன், வித்யுஜிஹ்வாவை பார்த்து, 

"அந்த ராமனின் தலையை சீதைக்கு முன் வை. கடைசி முறையாக அவள் கணவனை பார்த்து கொள்ளட்டும்." என்றான்

(அக்ரத குரு சீதாயா சீக்ரம் தாசரதே சிர:! அவஸ்தாம் பஸ்சிமாம் பர்த்ரு க்ருபனா சாது பஸ்யது!! - வால்மீகி ராமாயணம்)


உடனே வித்யுஜிஹ்வா சீதையின் முன் மாயா ரூபமான ராமபிரான் தலையை வைத்தான்.


ராவணன், மாயா ரூபமான ராமனின் வில்லை சீதையின் முன் வீசிவிட்டு, சீதையை பார்த்து,

"இதோ பார்.. ராமனின் நாண் ஏற்றப்பட்ட வில். இரவோடு இரவாக அந்த மனிதன் கொல்லப்பட்ட பின், ப்ரஹஸ்தன் இதை கொண்டு வந்தான்.

சீதா! நீ எனக்கு வசமாகி விடு."

என்று பேசினான்.

ராமபிரானின் தலையையும், தலை கேசத்தையும், அவர் அணிந்து இருந்த குண்டலம் போன்ற ஆபரணங்களையும், வில்லையும் பார்த்த சீதை, ராவணன் சொன்ன வார்த்தையை நம்பி விட்டாள்.

கதறி அழுத சீதை, நிலை தடுமாறி பேசலானாள். 

"கைகேயி! சந்தோஷமாக இருங்கள். இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய உத்தமர் கொலை செய்யப்பட்டு விட்டார்.

உங்களால் குலமே நாசமாகி விட்டது.

மற்றவர்கள் துயரத்தில் நீங்கள் ஆனந்தப்படுங்கள்.

எந்த விதத்தில் உங்களுக்கு ராமபிரான் துன்பம் செய்தார்?

எதற்காக அவருக்கு மரவுரி அணிந்து வனம் செல்ல செய்தீர்கள்?"

இப்படி சொல்லிக்கொண்டே வேரோடு சாய்க்கப்பட்ட வாழை மரம் போல சீதை மயங்கி விழுந்தாள்.


சிறிது நேரத்தில் தன்னை சுதாரித்து கொண்டு, ராமபிரானின் தலையை முகர்ந்து கொண்டே, புலம்ப ஆரம்பித்தாள்...

"ஐயோ! நான் இறந்து விட்டேன். 

நீண்ட கைகள் உடைய என் நாதா! 

சத்தியத்தை கடைபிடிக்கும் நாயகா! நான் இறந்து விட்டேன்!

ஐயோ! நான் விதவை ஆனேனே! 


மனைவிக்கு முன்னால் கணவன் போவது நியாயமா?

ஒழுக்கத்தில் சிறந்தவரே! என்னை முந்தி கொண்டு நீங்கள் சென்று விட்டீர்களா?

என்னுடைய சோகத்திலிருந்து இனி என்னை மரணம் மட்டுமே மீட்க முடியும்..

ஐயோ! கன்றை இழந்த தாய் பசு போல, என் மாமியார் கௌசல்யா தவிப்பாளே!

உங்களுக்கு நீண்ட ஆயுசு என்று ஜாதகம் கணித்தார்களே!! 

அவர்கள் சொன்ன சொல் பொய் போனதே! இப்படி சிறுவயதோடு உங்கள் வாழ்வு முடிந்து விட்டதே!

எந்த நேரமும் சுதாரிப்புடன் இருக்கும் உங்களையும், காலம் விழுங்கி விட்டதா?

அரசாங்க அறிவு உள்ளவராயிற்றே நீங்கள்.. எப்படி நீங்கள் இப்படி உடலை விட்டு பிரிந்து இருக்க முடியும்?

பெரும் அபாயகரமான சூழ்நிலையிலும் தப்பித்து கொள்ளும் திறன் கொண்டவரல்லவா நீங்கள்?

உங்களை எப்படி இந்த இரவு கொள்ளை கொண்டது?

ஓ தாமரை கண்ணா! என்னை விட்டு பிரிந்து விட்டீர்களே!

எளிமையான என்னை விட்டு விட்டு, பூமியின் மேல் உள்ள ஆசையால் சென்று விட்டீர்களா?

இந்த அற்புதமான வில்லை நான் எத்தனை முறை மலர்களால் பூஜித்து இருப்பேன்.

குறை இல்லாதவரே! நீங்கள் உங்கள் மூதாதையர்களும், என் மாமனார் தசரதர் இருக்கும் லோகத்துக்கு சென்று விட்டீர்களா?

உங்களுடைய ஒழுக்கமான நடத்தையால் நீங்கள் நக்ஷத்திரமாக இருந்து கொண்டு இருக்கிறீர்களா?

ஏன் நீங்கள் என்னை பார்க்க வில்லை? 

என்னிடம் ஏன் பேசவில்லை?

இளமை காலத்தில் உங்களை மணந்த பின், உங்களை தானே நான் தொடர்கிறேன்.

மணமேடையில் என் கை பிடித்து, என்னை ஒருபோதும் விட மாட்டேன் என்று சொன்னீர்களே!

அதை ஞாபகபடுத்தி கொண்டு, உடனே என்னையும் அழைத்து கொள்ளுங்கள்.

(சம்ஸ்ருதம் க்ருஹ்னதா பாணிம் சரிஷ்யாமீதி யத் த்வயா! ஸ்மர தன் மம காகுத்ஸம் நய மாமபி துக்கிதாம்!! - வால்மீகி ராமாயணம்)

என்னை இந்த உலகத்தில் விட்டு விட்டு, வேறு உலகத்துக்கு ஏன் சென்றீர்கள்?

அடைக்கலம் தருபவரே! என்னால் அணைக்கப்பட்ட உங்கள் தேகத்தை, பிராணிகள் எப்படி இழுத்து செல்ல முடியும்?

வேத காரியங்கள் பல செய்தீர்களே. உங்களுக்கு வேத முறைப்படி இறுதி காரியங்கள் ஏன் கிடைக்கவில்லை?

நாம் மூன்று பேரும் வனவாசம் வந்தோம்.

இப்பொழுது லக்ஷ்மணன் மட்டுமே திரும்பி செல்கிறான்.

கௌசல்யா மாதா லக்ஷ்மணனை கேட்பாளே!! 

லக்ஷ்மணன் ராக்ஷஸர்களால் இரவில் நடந்த பேரழிவை சொல்லவேண்டி வருமே!

நான் இந்த ராக்ஷஸர்களிடம் சிக்கி இருப்பதையும், ராமபிரானை விண்ணுலகம் சென்றதையும் கேட்டால், கௌசல்யா மாதாவின் இதயம் சுக்கு நூறாகி விடுமே!!

இவர் எனக்காக கடல் கடந்து வந்தது பலன் அளிக்கவில்லையே!!

இந்த சிறிய சண்டையில் இவர் கொல்லப்பட்டு விட்டாரே!!

மனைவி என்ற பெயரில் நானே மரணமாக வந்து தொலைந்தேனே! 

இதை தெரிந்து கொள்ளாமல் ராகவன் என்னை மணந்து கொண்டு விட்டாரே!

நான் போன ஜென்மத்தில் ஏழைகளுக்கு தானம் செய்வதை நிறுத்தி இருக்கிறேன். அதனால் தான் யாருக்கும் அபயம் தரும் இவருக்கு மனைவியாக இருந்தும், இத்தனை துன்பத்தை அனுபவிக்கிறேன்.

ராவணா! என் உடலையும் ராமபிரானின் உடலோடு வைத்து விடு.

என் கணவனோடு என்னையும் எரித்து விடு. இந்த புண்ணிய காரியத்தையாவது செய்.

என் தலை ராமபிரான் தலையோடு சேரட்டும்.. என் தேகம் ராமபிரானின் தேகத்தோடு சேரட்டும். நான் அந்த உயர்ந்த ஆத்மாவான ராபிரானையே தொடர்கிறேன்!"

இவ்வாறு தன் கணவனின் தலையையும், வில்லையும் பார்த்து பார்த்து புலம்பினாள் சீதை.

இப்படி இவள் அழுது கொண்டு இருக்க, ராக்ஷஸ படையில் இருந்து சிலர் அங்கு வந்து கை குவித்து நின்றனர்.

பிறகு ராவணனை பார்த்து, 

"ப்ரஹஸ்தன் அனைத்து மந்திரிகளுடன் வந்து இருக்கிறார். உங்களை பார்க்க ஆவலாக இருக்கிறார். இது ஒரு அவசர செய்தி. தயவு செய்து உங்கள் அமைச்சர்களை பார்க்க அழைக்கிறோம்" என்றார்கள்.

இதை கேட்ட ராவணன் உடனே அசோக வனத்தை விட்டு, தன் சபையை நோக்கி சென்றான்.

ராவணன் நகர்ந்து போன உடனேயே, அங்கு இருந்த மாயா ரூபமான ராமபிரான் தலையும், வில்லும் மறைந்து போயின.

(அந்தர்தானம் து தச்சீர்ஷம் தச்ச கார் முகம் உத்தமம்! ஜகாம ராவணஸ்யைவ நிர்யான சமன் அந்தரம்!! - வால்மீகி ராமாயணம்)










Saturday 22 August 2020

சீதையை ராவணன் ஏன் நெருங்கவில்லை.. அத்தனை நல்லவனா ராவணன்? ராவணனே இதற்கு காரணம் சொல்கிறான்.. தெரிந்து கொள்வோமே....வால்மீகி ராமாயணம்

ராமர் இல்லாத சமயத்தில், சீதையை கடத்தி சென்றான் ராவணன்

தன்னை ஏற்பதற்காக, சீதைக்கு 1 வருடகால அவகாசம் கொடுத்தான்.

சீதையை ராவணன் ஏன் நெருங்கவில்லை.. அத்தனை நல்லவனா ராவணன்?

ராவணனே இதற்கு காரணம் சொல்கிறான்... தெரிந்து கொள்வோமே....

வால்மீகி ராமாயணம் - யுத்த காண்டம்:




ராமபிரான் வானர படைகளுடன், மகேந்திர மலை, சஹ்ய மலை, மலய மலையை தாண்டி, வேலாவனம் என்ற காட்டை தாண்டி, கடற்கரை அருகில் வந்து விட்டார் (இன்று ராமேஸ்வரம் என்று சொல்கிறோம்).


"கடலை கடந்து இலங்கை வந்து விட்டால் என்ன செய்வது? 

ஒரு வானரன் ஹனுமான் வந்தே இலங்கையை கலங்கடித்து விட்டான். கோடிக்கணக்கான வானரர்கள் உள்ளே நுழைந்தால்? இனி என்ன செய்ய வேண்டும்?"

என்று ராவணன் சபை கூட்டி, மந்திரிகளிடம் ஆலோசனை நடத்தினான்.


ராக்ஷஸர்கள் பலர், படைத்தளபதி ப்ரஹஸ்தா, வஜ்ரதம்ஸ்ட்ரா, நிகும்பன் (கும்பகர்ணன் பிள்ளை) ஆகியோர் ராவணனுக்கு ஆதரவாக பேசினார்கள். 

பிறகு விபீஷணன் பேசினார்.

விபீஷணன் மட்டும் "சீதையை தகுந்த மரியாதையுடன் திருப்பி அனுப்பி விடு" என்றார்.. 

உடனேயே சபையை கலைத்து விட்டு, வெளியே சென்று விட்டான் ராவணன்.


பிறகு ராவணன் அரண்மனைக்கு சென்று மீண்டும் விபீஷணன் சொல்லி பார்த்தார். 

"சீதையை அனுப்ப முடியாது" என்று மீண்டும் நகர்ந்தான்.


அடுத்த நாள், மீண்டும் சபை கூட்டினான் ராவணன்.


ஆறு மாத தூக்கத்துக்கு பின், சபைக்கு வந்து இருந்தான் கும்பகர்ணன்.

கும்பகர்ணன் ராவணன் செய்த இந்த பேடிதனமான காரியத்தை கடுமையாக கண்டித்தான்.. இருந்தாலும் 'ராமரை கொன்று யமலோகம் அனுப்புவேன். கவலைப்படாதே!' என்று சொல்லி அமர்ந்தான்.


ராவணன் ஆத்திரத்தில் இருந்தான்.

பிறகு மஹா பலசாலியான 'மஹாபார்ஷ்வன்' என்ற ஒருவன், ராவணனை பார்த்து கை குவித்து பேசினான்..

"ராமன் ஒரு சிறு பொடியன். அவனுக்கு மரத்தில் இருக்கும் தேன் கூட்டில் உள்ள தேனை கூட எடுக்க முடியாது.

நீங்கள் ஈஸ்வரன். 

ஈஸ்வரனுக்கே யார் ஈஸ்வரனாக முடியும்?

எதிரிகளை ஒடுக்க, சீதையை பலாத்காரம் செய்யுங்கள். 

அவளை அனுபவித்து விடுங்கள். பிறகு ஏற்படும் விளைவுகளை நாம் பார்த்து கொள்ளலாம்.

கும்பகர்ணன், உங்கள் மகன் இந்திரஜித் உங்களுடன் இருக்கும் போது, அந்த இந்திரன் தன் ஆயுதங்களை வீசினாலும் தடுத்து விடுவார்கள்.

சீதை திருப்பி கொடுப்பதோ (தானம்), சமாதானமோ, பேதமோ இங்கு தேவையே இல்லை. தேவைப்பட்டால் போர் செய்வோம்.

நம்மை எதிர்த்து எவன் வந்தாலும், அவன் மீது நம் ஆயுதங்கள் பாயும்"

என்று ராவணனுக்கு சாதகமாக பேசினான்.




மஹாபார்ஷ்வன் பேசிய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து, ராவணன் அவனுக்கு பதில் அளித்தான்.

"மஹாபார்ஷ்வா! நான் சொல்வதை கவனி. இது எனக்கு மட்டுமே இருந்த ரகசியம்.

மஹாபார்ஷ்வ நிபோதம் த்வம் 

ரஹஸ்யம் கிஞ்சித் ஆத்மன: 

- வால்மீகி ராமாயணம்

இது பல காலங்கள் முன் நடந்த ஒரு சம்பவம். நானே அதை உனக்கு சொல்கிறேன்.

சிர வ்ருத்தம் ததாக்யாஸ்தே 

யத் அவாப்தம் மயா புரா

புஞ்சிகஸ்தலா என்று ஒரு தேவ கன்னிகை, சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்ம தேவனை பார்க்க ஆகாய மார்க்கமாக அக்னியை போன்று சென்று கொண்டிருந்தாள்.

பிதாமஹஸ்ய பவனம் 

கச்சந்திம் புஞ்சிகஸ்தலாம் | 

சஞ்சூர்யமானாம் அத்ராக்ஷம் 

ஆகாசோ அக்னி சிகாமிவ ||

அவளை பலாத்காரம் செய்து அனுபவித்தேன்.

கலங்கிய குட்டை போல ஆன அவள், ப்ரம்ம தேவன் இருக்கும் சத்ய லோகத்துக்கு ஓடினாள்.

சா பிரசஹ்ய மயா புக்தோ

க்ருதா விவசனா தத: | 

ஸ்வயம்பு பவனம் ப்ராப்தா

லோலிதா நளினி யதா ||

மஹாத்மாவான ப்ரம்ம தேவன் நடந்ததை அறிந்து கொண்டார்.

என் மீது கோபப்பட்டு என்னை சபித்தார்.

தஸ்ய தச்ச ததா மன்யே

ஞாதம் ஆஸீன் மஹாத்மனா |

அத சங்குபிதோ தேவோ மாம்

இதம் வாக்யம் அப்ரவீத் ||

'இனி எந்த ஒரு பெண்ணையாவது பலாத்காரம் செய்து கெடுக்க நீ முயன்றால், உன் தலை சுக்கு நூறாகி போகட்டும்' என்று சொல்லி விட்டார்.

அத்ய ப்ரப்ருதி யாம் அந்யாம்

பலான் நாரீம் கமிஸ்யாமி |

ததா தே சதகா மூர்கா

பலிஸ்யதி ந சம்சய: ||

இந்த சாபத்தின் பயத்தால் தான், சீதையை பலாத்காரம் செய்யாமல் இன்று வரை இருக்கிறேன்."

இத்யஹம் தஸ்ய சாபஸ்ய

பீத: ப்ரசபம் ஏவ தாம் |

நாரோபயே பலாத் சீதாம்

வைதேகீம் சயனே சுபே ||

என்று பதில் சொன்னான்.


எப்படிப்பட்ட கீழ்த்தரமான புத்தி கொண்ட ராவணன்!! என்று அறிந்து கொள்ளலாம்.

இப்படி, 

கீழ்த்தரமான புத்தி கொண்ட ராவணன், சாபத்துக்கு பயந்து, பிறர் மனைவியான சீதையை விடவும் மனம் இல்லாமல், 'ஒரு வருட காலம் தந்தாவது, சீதையின் மனதை மாற்றி விட வேண்டும்' என்று முயற்சி செய்து கொண்டிருந்தான்.




"பிறர் மனைவியை தொட நினைத்த ராவணனை ஆதரிப்பவன், எத்தனை கீழ்த்தரமானவனாக இருக்க வேண்டும்?" 

என்று நாம் தீர்மானிக்கலாம்.


தன் சொந்த சகோதரனனாலும், பலம் பொருந்தியவனனாலும், செல்வாக்கு மிகுந்தவனனாலும், அரசனே என்றாலும்

பிறர் மனைவியை அபகரித்து வைத்து இருந்த ராவணனை, மீண்டும் 3வது முறையாக சொல்லி பார்த்தார் விபீஷணன்


சபையில் அனைவருக்கு எதிராக எட்டி உதைத்து, 'நீ அந்த ராமனிடமே போ!' என்றான் ராவணன்.

'கீழ்தரமான இவனிடம் இனியும் இருக்க கூடாது' என்று 

விபீஷணன் ராமபிரானை சரண் அடைவோம் என்று முடிவு செய்து கிளம்பினார்.

சாபத்துக்கு பயந்த இந்த பேடி ராவணனை, உயர்த்தி புகழும் சிலரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...

Tuesday 27 March 2018

அக்னி பிரவேசம் செய்த போது, தேவி சீதை என்ன நினைத்தாள்? ராமபிரான் என்ன நினைத்தார்? லக்ஷ்மணன், ஹனுமான் என்ன நினைத்தார்கள்?. சீதையின் உண்மை நிலை என்ன? யாரிடமும் கடிந்து பேசாத ஸ்ரீ ராமர், சீதையை பார்த்து ஏன் கடிந்து பேசினார்?

ராவணன், சீதையை அபகரித்து இலங்கைக்கு கொண்டு சென்று விட்டான்.
அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை, "ஸ்ரீராமர் வந்து காப்பாற்றுவார்" என்று பத்து மாதங்கள் காத்திருந்தாள்.
சீதையை மீட்க,
பெரும் வானர படை திரட்டி, கடலில் சேது அமைத்து,
பெரும் போர் செய்து,  ராவணன் 10 தலையையும் கீழே சாய்த்து,
விபீஷணனை இலங்கை அரசனாக்கி,
மகிழ்ச்சியுடன் விபீஷணனை பார்த்து,
சீதையை தன்னிடம், அழைத்து வர சொன்னார் ஸ்ரீ ராமர்.




சீதையை சகல மரியாதையுடன், மூடு பல்லக்கில் அழைத்து வந்தார் விபீஷணன்.

"எந்த சீதைக்காக, தங்கள் உயிரை கூட தியாகம் செய்ய தயாராக இருந்தார்களோ! அந்த சீதையை, வானரர்கள் தரிசனம் செய்ய வேண்டும்"
என்று ஆசைப்பட்ட ஸ்ரீ ராமர், சீதையை பல்லக்கை விட்டு இறங்கி, வானரர்கள் பார்க்க நடந்து வர சொன்னார்.

க்ஷத்ரிய பெண்ணான சீதை, ராவணனை கூட கண்டு அஞ்சாத வீரமிக்கவள், என்ன காரணத்தாலோ, 'திடீரென்று, தன் முகத்தை தன் புடவையால் மூடி கொண்டு, முகத்தை காட்டிக்கொள்ள பிரியப்படாமல், தலை குனிந்து கொண்டே', வானரர்களுக்கு இடையே நடந்து, ராமபிரான் அருகில் வந்து நின்றாள்.

தன் உயிருக்கு உயிரான சீதையை மீட்க, இலங்கை வரை படையை திரட்டிக்கொண்டு சென்று, ராவணனை கொன்று, 'தன் பத்னியான சீதையை ஆசையுடன் அழைத்து வர சொன்ன ஸ்ரீ ராமர்'தலை குனிந்து கொண்டே தன் அருகில் வந்து நிற்கும் சீதையை கவனித்ததும்,
அவளை பார்க்க கூட செய்யாமல், எங்கோ பார்த்து கொண்டு, யாருமே எதிர்பார்க்காத கடும் சொற்களை பேசினார்.

இந்த கடும் சொற்களை கேட்ட சீதை, துளியும் பயம் இல்லாமல், லக்ஷ்மணரை பார்த்து,
"லக்ஷ்மணா! எனக்கு இங்கேயே அக்னியை மூட்டு, நான் அக்னி பிரவேஷம் செய்கிறேன்." என்றாள்.

"அக்னியை மூட்டுவதா? வேண்டாமா?" என்ற நிலையில், லக்ஷ்மணன் ராமபிரானை பார்க்க, ஸ்ரீ ராமர் முகத்தில் சம்மதம் தெரிந்தது. உடனே அக்னி மூட்டிவிட்டார்.

ஸ்ரீ ராமருக்காக 'சீதையை தேடி இலங்கை சென்று பார்த்த' ஆஞ்சநேயரும் இங்கு நடக்கும் நிகழ்வை கண்டு துக்கப்படவில்லை.

வெளியோட்டமாக பார்க்கும் போது, யாரிடமும் கடிந்து பேசாத ஸ்ரீ ராமர், சீதையை பார்த்து ஏன் இப்படி பேசினார்? என்று தோன்றும்.

ராமபிரான் கடிந்து பேசியதே ஆச்சர்யம்! 
அதற்கு சீதை பதிலாக "நான் அக்னி பிரவேசம் செய்து என்னை நிரூபிக்கிறேன்" என்று சொன்னதும் ஆச்சர்யம்.
இதை கண்டு, பதட்டம் அடையாத லக்ஷ்மணரும், ஹனுமனும் கூட ஆச்சர்யமே !!

நடப்பது அநியாயம் போல தோன்றும் இந்த நிகழ்வில், ஏன் ஹனுமனும், லக்ஷ்மணனும் அமைதியாக இருந்தனர்? என்றும் கேள்விகள் தோன்றும்.

ஸ்ரீ ராமரும், சீதையும் திவ்ய தம்பதிகள்.

சாதாரண தம்பதிகளுக்கும், திவ்ய தம்பதிக்கும் பல வித்யாசம் உண்டு.

சாதாரண உலக தம்பதிகளுக்கு, மற்றவர் என்ன சொல்ல நினைக்கிறார்? என்ன ஆசைப்படுகிறார்? என்பதை சொன்னால் தான், புரிந்து கொள்ள முடியும்.

திவ்ய தம்பதிகளுக்கு, தன் கணவன் என்ன சொல்ல நினைக்கிறார்? தன் மனைவி என்ன சொல்ல நினைக்கிறாள்? என்ன ஆசைப்படுகிறார்? என்பதை  அவர்கள் குறிப்பு அறிந்தே புரிந்து கொள்ள முடியும்.
திவ்ய தம்பதிகள் தன் தேவைகளுக்கு பேச கூட அவசியமில்லாமல் இருப்பர். 
திவ்ய தம்பதிகள் பேசினால், பேசுவதற்கு ஆசை பட்டு தான் பேசுவார்களே தவிர, தேவைக்கு பேசக்கூட அவசியமில்லாமல் இருப்பார்கள்...

ஸ்ரீ ராமரும், சீதையும் திவ்ய தம்பதிகள் என்பதை நாம் மறக்க கூடாது.

நம்மை போன்ற சாதாரண தம்பதிகள் என்ற பார்வையில் பார்த்தாலே, அது நமக்கு பாவத்தை தரும்.
இவர்கள் சாக்ஷாத் அந்த 'விஷ்ணுவும், லட்சுமியும்' என்ற உணர்வில் பார்க்க வேண்டும்.

உண்மையில் என்ன நிகழ்ந்தது?
ஸ்ரீ ராமர், ராவணனை கொன்ற பின், விபீஷணனை பார்த்து சீதையை சகல மரியாதையுடன் அழைத்துவர சொன்னார்.

சுக்ரீவனும் அவனுடைய சேனைகளும், சீதையை பார்த்தது கூட இல்லை. ஆனால், சீதைக்காக தங்கள் உயிரை கூட விட துணிந்து போர் செய்தனர்.
யாருக்காக தன் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருந்தார்களோ! அந்த சீதையின் தரிசனம் இவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கருணை கொண்டார் ஸ்ரீராமர்.

இதன் காரணமாக, சீதையை ஸ்நானம் செய்து, சர்வ ஆபரணத்துடன் சேனைகளுக்கு நடுவே நடத்தி அழைத்து வருமாறு சொன்னார்.

பத்து மாதம் சிறையில் இருந்த சீதையை, விபீஷணன் தன் மனைவியை முன்னிட்டு, "ஸ்ரீ ராமர் தங்களை பார்க்க ஆவலாக, அழைப்பதாக" சொன்னார்.

இந்த ஒரு சொல்லுக்காக காத்திருந்த சீதை, உடனே சந்தோசத்துடன் கிளம்ப தயாரானாள்.

ஸ்ரீ ராமர், "சீதையை ஸ்நானம் செய்து, சர்வ ஆபரணத்துடன் அழைத்து வருமாறு" சொன்னதாக சொல்ல,
பணிப்பெண்களும், விபீஷணனின் பத்னியும், சீதைக்கு ஸ்நானம், அலங்காரம் செய்து, மூடு பல்லக்கில், மகாராணி சீதையை சர்வ மரியாதையுடன் அழைத்துக் கொண்டு, ஸ்ரீ ராமரை நோக்கி வந்தனர்.

வானர சேனைகள், சீதையை காண முடியாமல், மூடு பல்லக்கை ஆச்சர்யமாக பார்த்தனர்.




வானர படைகளின் "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற கோஷம் விண்ணை முட்டியது.

'வானரர்கள் யாருக்காக தன் உயிரையும் துறக்க துணிந்தார்களோ! அவர்களுக்கு சீதையின் தரிசனம் கிடைக்க வேண்டும்' என்று எண்ணினார் ஸ்ரீ ராமர்.




உடனே, ஸ்ரீ ராமர், வானரர்கள் சீதா தேவியை பார்க்க வேண்டும் என்ற கருணையால், மூடு பல்லக்கு இல்லாமல், சீதையை சகல மரியாதையுடன் நடத்தி அழைத்து வருமாறு சொன்னார்.

கம்பீரமான, தாயுள்ளம் கொண்ட சீதை, மகிழ்ச்சியுடன் பெரும் சேனைக்கு நடுவே ஸ்ரீ ராமரை நோக்கி நடக்கலானாள்.

'தனக்காக பெரும் படையை திரட்டி, ஜெயராமனாக இருக்கும் ஸ்ரீராமரை காணப்போகிறோம்' என்று ஆனந்தப்பட்டாள் சீதை.

பெரும் வானர படை வீரர்களை கண்டு, ஸ்ரீ ராமருக்கும், தனக்கும் கிடைத்த குழந்தைகள் போல நினைத்தாள், சீதை.
தாயுள்ளதோடு அனைவரையும் கண்டாள்.

சீதையை கண்டதும், பேரிரைச்சல் உண்டானது.
வானர்கள்,
"இதோ சீதா மாதா...",
"ஆஹா... இவள்தான் சீதா தேவியோ !",
"சீதா ராம் கீ ஜெய்"
என்று எங்கும் பேரிரைச்சல் உண்டானது.

மூடு பல்லக்கில் வரும் வரை மனம் சஞ்சலம் அடையாமல், ஸ்ரீ ராமரை அடையப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தாள் சீதை.

மூடு பல்லக்கில் இருந்து இறங்கி, வானர படைகளின் பேரிரைச்சல் நடுவில் நடக்கும் போது, சீதைக்கு திடீரென்று மனம் சஞ்சலம் அடைந்தது. பெரும் துக்கம் சூழ்ந்தது.

தன்னை வெளிக்காட்டி கொள்ள விரும்பாத சீதை, உடனே தன் புடவை தலைப்பு கொண்டு, தன் முகத்தை முழுவதுமாக மூடி, அவமானத்தால் கூனி குறுகி நடந்து வந்து, ஸ்ரீ ராமர் முன் நின்றாள்.

சீதையின் நிலை என்ன? என்ன துக்கத்தை அடைந்தாள் சீதை?

கற்புக்கரசியான சீதை, தான் களங்கப் படாதவளாக இருந்தாலும், 
பத்து மாதங்கள் ஒருவன் பிடியில் அகப்பட்டதையும், 
அதனால் உலகம் தன்னையும், ஸ்ரீ ராமரையும் கேட்கப் போகும் கேள்விக்கும், 
அதனால் ஸ்ரீ ராமருக்கு உண்டாக போகும் தர்ம சங்கடத்திற்கு தான் காரணமாகிவிட்டோமே!!
என்று தன்னை தானே வெறுத்தாள்.

"இப்படி ஒரு நிலையை ஸ்ரீ ராமருக்கு தந்து விட்டோமே!!" என்று சொல்லமுடியாத துக்கம் அடைந்தாள்.
"இப்பொழுதே அக்னிப்ரேவேசம் செய்து பிராண தியாகம் செய்து விடலாமா?" என்று எண்ணினாள்.
"இருந்தாலும் ஸ்ரீ ராமர் மனம் தெரியாமல் தானாக முடிவு செய்யக் கூடாது" என்ற மனசஞ்சலத்தோடு ஸ்ரீ ராமரை நோக்கி நடந்தாள்.

ஸ்ரீ ராமரும், சீதையும், மனம் ஒத்த திவ்ய தம்பதிகள்.
சாக்ஷாத் நாராயணனும் லக்ஷ்மியும் ஆவார்கள்.
பேசிக்கொள்ளாமலேயே,  இருவருக்கும் மற்றவர் என்ன நினைக்கிறார்? என்ன ஆசைப்படுகிறார்? என்று தெரியும்.

சமாதானமே செய்யமுடியாத சோகத்துடன் வரும் சீதையின் மன சஞ்சலத்தை அறிந்து கொண்டார் ஸ்ரீராமர்.

தன்னை இந்த உலகிற்கு கொடியவனாக காட்டி கொண்டாலும் பரவாயில்லை, ஆனால் 'சீதையை யாரும் குறை சொல்ல கூடாது' என்று எண்ணினார்.

உடனே, சீதையின் முகத்தையும் பாராமல்,
"சீதை, உன்னை காப்பாற்றியது, என்னுடைய கடமை.
நானும் ஒரு புருஷன் என்று நிருபித்தேன்.
உன்னிடம் மீண்டும் வாழவேண்டும் என்றில்லை.
நீ வாழ்வதோ! உயிரை போக்கி கொள்வதோ! உன் இஷ்டம்.
நீ வாழவேண்டும் என்றால், கவலை படாதே. நான் உன்னை வாழ வைக்கிறேன்.
உன்னை தாயை போன்று, என் தம்பிகள் உன்னை காப்பாற்றுவார்கள்.
அயோத்யாவிலேயே நீ வாழலாம். 
இல்லை என்றால், கிஷ்கிந்தையில் நீ வாழலாம்.
சுக்ரீவனும் உன்னை தாயை போல காப்பாற்றுவான்.
இல்லை என்றால், இங்கேயே வாழலாம்.
விபிஷணன் உன்னை காப்பாற்றுவான்.
எதுவும் பிடிக்க வில்லை என்றால், நீ எங்கு வேண்டுமானாலும் வாழ். 
நான் உன்னை வாழ வைக்கிறேன்."
என்றார்.

சீதைக்காகவே 1000 மைல் நடந்து,
சீதைக்காகவே படைகளை  திரட்டி, 
சீதைக்காவவே கடலில் பாலம் அமைத்து, 
சீதைக்காகவே ராக்ஷஸர்களுடன் போர் செய்து,
சீதைக்காகவே ராவணனை கொன்று,
சீதையை மீட்ட பின், ராமபிரான் இப்படி கடுமையாக பேசியது, அங்கு கூடி இருந்த சுக்ரீவன் போன்றவர்களுக்கே திகைப்பை ஊட்டியது.




ஆனால், இந்த கடுஞ் சொற்கள், சீதைக்கு மன சமாதானமாக இருந்தது.
இதை ஒரு வாய்ப்பாக எடுத்து, லக்ஷ்மணனை பார்த்து சீதை கட்டளை இட்டாள்,
"லக்ஷ்மணா, இந்த இடத்திலேயே எனக்கு அக்னியை மூட்டு, நான் அக்னி பிரவேசம் செய்யப்போகிறேன்.
நான் பதிவ்ரதை!! என்பது உண்மையானால், 
ஸ்ரீ ராமரும் ஏக பத்னிவ்ரதன்!! என்பது உண்மையானால், 
இந்த அக்னி என்னை பாதுகாக்கட்டும்" 
என்றாள்.

லக்ஷ்மணன், ஸ்ரீ ராமர் முகத்தை பார்த்தார். 
ஸ்ரீ ராமர்  முகத்தில் சம்மதம் தெரிந்தது. தைரியமாக சிதை மூட்டினார்.

அருகில்,
ஆஞ்சநேயர் எந்த ஒரு மன சஞ்சலமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தார்.

லக்ஷ்மனின் நிலை என்ன? ஆஞ்சநேயர் நிலை என்ன?

லக்ஷ்மணன், ஸ்ரீ ராமரை நன்கு உணர்ந்தவர்.
ஸ்ரீராமர், எந்த ஒரு நிலையிலும் நீதி தவறாதவர், குற்றமற்றவர், நிதானமனாவர், தர்மம் தெரிந்தவர், சர்வ நல்ல குணங்களும் உள்ளவர் என்று நன்கு உணர்ந்தவர் லக்ஷ்மணன்.

இப்படிப்பட்ட "ஸ்ரீஅண்ணாவுக்கு சம்மதம் என்றால், அதுவே சாஸ்த்ரம்.
மறு கேள்வி இல்லை." என்று நினைத்தார்.
இது லக்ஷ்மணனின் நிலை.

ஆஞ்சனேயர், "சீதைக்கு அக்னியால் ஒன்றும் ஆகாது" என்று திடமாக முடிவு செய்திருந்தார்.
தான் இலங்கையை நெருப்பால் பொசுக்கிய போது, சீதை செய்த சபதம் அவருக்கு ஞாபகம் வந்தது.

"நான் பதிவ்ரதை என்பது உண்மையானால், இந்த அக்னி, ஹனுமனை சுடாமல், குளிர்ச்சி கொடுக்கட்டும்" என்றாள் சீதை .

"சீதையின் கற்பிற்கு தானே சாட்சி" என்பதாலும்,
சீதை இப்பொழுது செய்த சபதத்தில்,
"நான் பதிவ்ரதை என்பது உண்மையானால்,
ஸ்ரீ ராமர் ஏக பத்னிவ்ரதன் என்பது உண்மையானால், 
இந்த அக்னி என்னை பாதுகாக்கட்டும்"
என்று சொன்னதால், துளியும் கவலை இல்லாமல், அமைதியாக
இருந்தார், ஹனுமார்.
சீதை உடனே அக்னி பிரவேசம் செய்தாள்.
புகைக்கு உள்ளே சென்று வெளியே வருவது போல, சீதை தன் நெற்றியில் வியர்வை கூட இல்லாமல், வெளியே வந்தாள்.
அக்னி பிரவேசம் செய்து வெளி வந்ததால், சீதை "தன் கற்பை நிரூபித்த திருப்தி அடைந்தாள்".
இப்பொழுது சீதையின் மனோநிலை, சமாதானம் அடைந்தது.

"தன்னை சேர்த்து கொண்டால், தேசத்தின் அரசனான ஸ்ரீ ராமரை இந்த உலகம் என்ன கேட்குமோ? என்ற சங்கடம் நீங்கி, நிம்மதி அடைந்து இருந்தாள் சீதை.

தன் நிலையை உணர்ந்து, வெளி உலகத்திற்கு தன்னை கோபக்காரனாக காட்டினாலும், ஸ்ரீ ராமரின் அனுக்ரஹத்தை எண்ணி உருகினாள்.

சீதையை கோபமாக பேசியது ஸ்ரீராமரின் நோக்கம் அல்ல.
அக்னி பிரவேசம் செய்த பின், மன சஞ்சலம் இல்லாமல் இருந்தாள் சீதை.
உற்சாகத்துடன் ஸ்ரீ ராமர் அருகில் நின்றாள்.
மனதில் குறை அகன்று இருந்த சீதையை கண்டு, ஸ்ரீ ராமர், மகிழ்ச்சியுடன் சீதையை அருகில் அமர செய்து, சீதா ராம தம்பதிகளாய் காட்சி கொடுத்தனர்.

சற்று முன் ராமபிரான் காட்டிய கோபமும், அக்னி பிரவேசம் செய்த பின், சீதையை மகிழ்ச்சியுடன் சேர்த்து கொண்ட காரணத்தையும் புரிந்து கொள்ள, 
சீதையின் நிலை எவ்வாறு இருந்தது என்று நம்மால் பார்க்க முடிந்தால் மட்டுமே, "ராமபிரானின் இதயத்தை" புரிந்து கொள்ள முடியும். 


வாழ்க திவ்ய தம்பதிகள் புகழ்.  வாழ்க சீதா ராம புகழ்.
வாழ்க அயோத்தியா. 




Wednesday 27 December 2017

மஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே.. சீதை பிறந்த ஊர் அல்லவா

மஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal எப்படி இருந்தது?




"விராட தேசம், மல்ல தேசம், விதேஹ (மிதிலா) தேசம்" 
ஆகிய தேசங்கள், இன்று "நேபால்" என்று அழைக்கப்படுகிறது.

ராமாயண காலத்தில், 
மிதிலை நகரில், சீதை அவதரித்தாள். 
"ஜனக மன்னர்" ஆட்சி புரிந்தார்.
மஹாபாரத சமயத்தில்,
"விராட தேசம், மல்ல தேசம், விதேஹ (மிதிலா) தேசம்" 
பாண்டவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தனர்.
"துருபதனை" படைதலைவனாக தொடர்ந்து இவர்கள் படையை செலுத்தினர்.

"மல்ல தேசம்" கங்கை நதி ஓரம் அமையப்பட்ட ஒரு நகரம். 
இது விராட தேசத்துக்கு, விதேஹ தேசத்துக்கு நடுவே இருந்தது.

பாண்டவர்கள் 13 வருட வனவாசத்தில், கடைசி 1 வருடம் அஃயாத வாசம் விராட தேசத்தில் இருந்தனர்.



"யுதிஷ்டிரர்" விராட ராஜாவுக்கு உதவியாளனாக, 
"பீமன்" சமையல்காரனாக, 
"அர்ஜுனன்" நர்த்தனம் சொல்லிக்கொடுக்கும் பேடியாக, 
"திரௌபதி" விராட ராணிக்கு 'மாலினி' என்ற பெயரில் வேலைக்காரியாகவும், 
"நகுலன் மற்றும் சகாதேவன்" குதிரை லாயத்தை பார்க்கும் பணியிலும் 
மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.


விராட அரசனின் தளபதி "கீசகன்", திரௌபதியிடம் தவறாக நெருங்க எண்ணினான். 
இதனை திரௌபதி பீமனிடம் சொல்ல,
கீசகன் தலையை ஓங்கி அடித்து, அவன் தலையை வயிற்றுக்குள் தள்ளி, 
ஒரு பந்து போல ஆக்கி கொன்று விட்டான்.

விராட தேச படை தலைவன் கீசகன், த்ரிகர்த தேச (பஞ்சாப்) அரசன் "சுசர்மனை" பலமுறை தோற்கடித்து இருக்கிறான்.

கீசகன் கொடூரமாக இறந்ததை கேள்விப்பட்டு, சந்தேகம் கொண்டான் த்ரிகர்த தேச அரசன் "சுசர்மன்".

இப்படி ஒரு பலம், பீமன் போன்றவர்களுக்கு தான் உண்டு, என்று உணர்ந்த சுசர்மன், துரியோதனனை உடனே விராட தேசத்தை நோக்கி படை எடுக்குமாறு கூறினான்.




குரு தேச "இளவரசன் துரியோதனன்", "கர்ணன்", த்ரிகர்த தேச அரசன் "சுசர்மன்" அனைவரும் விராட தேசத்தை முற்றுகை இட்டனர்.

விராட அரசன், தன் மகன் "உத்தர" குமாரனை தலைமை ஏற்று, துரியோதனின் படையை எதிர்க்க சொன்னார். 

பயந்து போன உத்தர குமாரன், செய்வதறியாது திகைத்தான். 
'அர்ஜுனன்' சமாதானம் செய்து, தான் துணை வருவதாக தைரியம் சொல்லி, போருக்கு தயாரானான்.
விராட தேச படையுடன், அர்ஜுனன் ஒருவனாக சென்று அனைவரையும் தோற்கடித்தான்.

ஒரு வருடம் தங்கி இருந்தது பாண்டவர்கள் என்று அறிந்து பயந்தான் விராட அரசன்.
தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டான்.
யுதிஷ்டிரர் நட்பு கரம் நீட்டினார். 
விராட அரசன் தன் மகள் 'உத்தரா'வை அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்கு மணம் செய்து வைத்தார்.

விராட தேச (Nepal) படைகள், பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.

மஹா பாரத போரில், முதல் நாள் போரில், 
விராட அரசன் புதல்வன் "உத்தர" குமாரன் வீரமாக போரிட்டான்.
மாத்ர தேச (Pakistan) அரசர் "சல்யனால்" அதே நாளில் கொல்லப்பட்டான்.



உயிரை பற்றி கவலைப்படாமல் "உத்தர" குமாரன் வீரமாக போரிட்ட வீரத்திற்கு தலை வணங்கினார்சல்லியன்.

உத்தர குமாரன் இறந்ததை கண்டு ஆத்திரத்துடன் சல்லியனை நோக்கி பாய்ந்தான், அவன் சகோதரன் "ஸ்வேத" குமாரன். 
இதனை கண்ட பீஷ்மர், "ஸ்வேத" குமாரனை போருக்கு அழைத்தார். பீஷ்மருடன் போர் செய்து வீர மரணம் எய்தான்..

முதல் நாள் போரிலேயே இத்தனை உயிர் இழப்பு, யுதிஷ்டிரரை கலங்க செய்தது.
"வெற்றி துரியோதனன் பக்கம் நிச்சயம்" என்று சொல்ல ஆரம்பித்தார்.

ஸ்ரீ கிருஷ்ணர் தைரியம் ஊட்டி, மனம் தளரவிடாமல் தைரியம் சொன்னார்.

விராட அரசனை, 15ஆம் நாள் போரில் "துரோணர்" கொன்றார்.

பாண்டவர்கள் பக்கம் நின்று போர் செய்த அரசர்கள், பாண்டவர்கள் வெற்றிக்கு துணை நினறனர்.  பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். தர்மத்தை நிலை நிறுத்தினர்.

உலக க்ஷத்ரியர்கள் அனைவரும் பாண்டவர் பக்கமும், துரியோதனன் பக்கமும் நின்று போரிட்டு உயிரை விட்டனர்.


யுதிஷ்டிரர் உலகத்துக்கே சக்ரவர்த்தியானார்.


மஹாபாரத போர் முடிந்து, 
3000 வருடங்களுக்கு பிறகு "சித்தார்த்தன்" என்ற பெயரில் நேபாள தேசத்தின் இளவரசனாக"கௌதம புத்தர்", லும்பினி (Lumbini) என்ற நகரில் நேபாள தேசத்தில் பிறந்தார்.
மகத தேசத்தில் (பீஹார் (bihar)) உள்ள "போத் கயா" என்ற ஊரில், புத்தர் ஞானம் அடைந்தார் என்று அவரின் சரித்திரம் சொல்கிறது.