Followers

Search Here...

Showing posts with label ராவணன். Show all posts
Showing posts with label ராவணன். Show all posts

Saturday 29 August 2020

'ராவணன் பேசிய பச்சை பொய்' தெரிந்து கொள்ள வேண்டாமா .. சீதையின் புலம்பல்.. தமிழன் 'வால்மீகி' கொடுத்த ராமாயணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சீதா தேவியை மீட்க, வானர சேனையை திரட்டி கொண்டு, இலங்கையை நோக்கி வந்தார் ராமபிரான்

"சார்தூளா" என்ற ஒற்றன், ராவணனிடம் இதை தெரிவிக்க, "சுகா" என்ற ராக்ஷஸ ஒற்றனை மேலும் விவரம் அறிந்து வர அனுப்பினான்.

வானரர்கள் பிடித்து கட்டி வைத்தனர்.

ஐந்தே நாளில், கடலில் பாலம் அமைத்து, இலங்கையை வந்து அடைந்தார் ராமபிரான்.

பிறகு சுகாவை விடுவித்து அனுப்பினார். 




பிறகும், ராவணன், சுகனோடு 'சாரணன்' என்ற மற்றொரு ராக்ஷஸ ஒற்றனை அனுப்பி, வானர வீரர்களின் பலத்தை அறிந்து வர அனுப்பினான்.

வானரர்கள் போல உருவம் மாற்றி கொண்டு, இவர்கள் இருப்பதை கண்டு விபீஷணன் ராமபிரானிடம் தெரிவிக்க, இருவரையும் பிடித்து கட்டினர் வானரர்கள்.

ராமபிரான் இவர்களை விடுவித்து, விபீஷணனையே இவர்களுக்கு முழு படைபலத்தையும் காட்ட சொல்லி, திருப்பி அனுப்பினார்.


'சுக சாரணன்' இருவரும் வானரர்கள் படை பலத்தை ராவணனிடம் பிரமிப்புடன் சொல்ல, சார்தூளா கோபம் அடைகிறான்

எதிரியை போற்றும் படியாக ராவணனிடம் பேசுவதை கண்டித்தான். 

'சுக சாரணன்' இருவரும், அமைதியுடன், 'ராவணனுக்கு வெற்றி உண்டாகட்டும்' என்று சொல்லி விட்டு சபையை விட்டு கிளம்பினர்.

ராவணன், மகோதரன் என்ற ஒரு மந்திரியை பார்த்து, "சிறந்த ஒற்றர்களை" சபைக்கு அழைத்து வர சொன்னான்.

உடனே, தலை சிறந்த ராஜ ஒற்றர்களை, ராவணன் முன் அழைத்து வந்தான் மகோதரன்.

சார்தூலாவின் தலைமையில், அனைத்து ஒற்றர்களையும் ராமபிரானை பற்றி அறிந்து வர அனுப்பினான்.

"ராமனின் திறன் என்ன? ராமனுக்கு பிடித்தமானவர்கள் யார் யார்? 

யாரெல்லாம் ராமனுக்கு நட்பாக இருக்கிறார்கள்? 

ராமன் எப்பொழுது தூங்குவார்? எப்பொழுது விழிப்பார்? 

வேறு என்னவெல்லாம் காரியம் செய்கிறார்? 

என்னவெல்லாம் செய்ய நினைக்கிறார்? 

அனைத்தையும் தெரிந்து கொண்டு என்னிடம் வந்து சொல்ல வேண்டும்" 

என்று உத்தரவு செய்தான்.

மாயாவிகளான இவர்கள் வானர்ர்களோடு கலந்து கொண்டு சுவேல மலையில் இருக்க, கடல் போன்ற வானர சேனையை பார்த்து அச்சம் கொண்டனர்.

விபீஷணன் மீண்டும் இவர்களை கண்டுபிடித்து விட்டார். 

சார்தூளா வானரர்களிடம் மாட்டி கொண்டு விட, இவர்களை வானரர்கள் ரத்தம் வரும் வரை கைகளை மடக்கி குத்தி, முட்டியால் குத்தி, பற்களால் கடித்து உயிர் போகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சுவேல மலையில் இருந்த ராமபிரான், மீண்டும் வானரர்களை தடுத்து, அனைவரையும் விடுவித்தார்.

ராவணனிடம் திரும்பி வந்த சார்தூளவும் மற்ற ஒற்றர்களும், பெரும் மரண பீதியில் இருந்தனர்.


ராவணன் இவர்களின் வெளுத்து போன முகத்தை பார்த்து, மனஉளைச்சலுடன் "ஏன் இப்படி சோர்ந்து இருக்கிறீர்கள்? நீங்களும் எதிரிகளின் கட்டுப்பாட்டில் சிக்கினீர்களா?" 

என்று கேட்டான்.


நடந்த விஷயத்தை சொல்லி, குறிப்பாக 'ஒவ்வொரு வானரனும் எந்த தேவனின் அம்சமாக இருக்கிறார்கள்?' என்று சார்தூளா ராவணனிடம் சொல்கிறான்...

"அரசே! வானர அரசன் சுக்ரீவன், ருக்ஷராஜனின் மகன். 

ஜாம்பவான் கட்கதனின் இளைய மகன். தும்ரா கட்கதனின் மூத்த மகன். 

கேசரி ப்ருஹஸ்பதியின் மகன்.

இலங்கையில் புகுந்து ராக்ஷஸரகள் பலரை கொன்ற ஹனுமான் கேசரியின் மகன்.

சுசேனன் சாஷாத் தர்ம தேவதையின் மகன்.

ததிமுகன் சோம தேவதையின் அம்சமாக தோன்றியவன்.

சுமுகன் மரண தேவதையின் அம்சமாக தோன்றியவன்.

படைத்தளபதியான நீலன் அக்னி தேவனின் அம்சம்.

ஹனுமான் வாயு தேவனின் அம்சம்.

அங்கதன் இந்திரனின் பேரன்.

மைந்தனும் த்விவிதனும் அஸ்வினி குமாரர்களின் அம்சம்.

கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதன் அனைவரும் சூரிய தேவனின் பிள்ளைகள்.

10 கோடிக்கும் மேலான வானரர்கள் போர் செய்ய குவிந்து இருக்கிறார்கள்.




இளமையான வீரனாக இருக்கும் ராமன், தசரதனின் பிள்ளை.

அந்த ராமன் தான் கர, தூஷன, த்ரிசிரர்களை கொன்றார்.

யாருமே அந்த ராமனை எதிர்க்க முடியவில்லை.

விராதா மற்றும் கபந்தன் போன்ற ராக்ஷஸர்களையும் கொன்றவர் இந்த ஸ்ரீராமன்.

ஜனஸ்தானத்தில் இருந்த ஒட்டு மொத்த ராக்ஷஸர்களும் வேரோடு அழிந்து விட்டனர்.

கூடவே இருக்கும் லக்ஷ்மணன் விடும் பாணத்தை இந்திரன் கூட தடுக்க இயலாது."

இப்படி வானரர்கள் அனைவரையும் பற்றி சொல்ல, ராவணன் மனகுழப்பம் அடைந்தான்.

சிறிது நேரம் தன் மந்திரிகளிடம் ஆலோசனை செய்து விட்டு, தன் மாளிகைக்கு சென்றான்.


தனது மாளிகையில், "வித்யுஜிஹ்வா" என்ற மாயாவியை அழைத்து இவ்வாறு பேசினான்,

"சீதையை மாயத்தால் குழப்ப வேண்டும். நீ உடனேயே மாயையால் ராமனின் தலையையும், அவன் கையில் வைத்து இருக்கும் அம்பு, வில்லை கொண்டு வா" என்றான்.

(வித்யுஜிஹ்வம் ச மாயாக்யம் அப்ரவீத் ராக்ஷஸாதிப: ! மோஹயிஷ்யாவஹே சீதாம் மாயயா ஜனகாத்மஜாம் !! 

சிரோ மாயாமயம் க்ருஹ்ய ராகவஸ்ய நிஸாசர! த்வம் மாம் சமுபதிஸ்டஸ்வ மஹச்ச சசரம் தனு:!! - வால்மீகி ராமாயணம்)


வித்யுஜிஹ்வா உடனேயே மாயா ரூபமான ராமனின் தலையும், வில்லும் அம்பும் கொடுக்க, ராவணன் அந்த மாயாவிக்கு தான் அணிந்து இருந்த ஆபரணத்தை பரிசாக கொடுத்து அனுப்பினான்.


பிறகு, 

ராவணன் அசோக வனத்தில் இருக்கும் சீதையை பார்க்க ஆவலுடன் சென்றான்.


அபலையான சீதை தலை குனிந்து நிலத்தை பார்த்து கொண்டே, ராமபிரானின் நினைவிலேயே, பயமுறுத்தும் ராக்ஷஸிகள் சூழ அமர்ந்து இருந்தாள்.

மிகவும் உற்சாகமாக தன்னை பற்றி உயர்வாக சீதையை பார்த்து பேசலானான் ராவணன், 

"சீதா! நான் உன்னிடம் எத்தனை மதுரமாக பேசினாலும், அந்த ராமனை நம்பிக்கொண்டு ஏதோ உளருகிறாய். 

பரிதாபம்! கரண் போன்ற ராக்ஷஸரகளை கொன்ற உன் கணவன் இப்பொழுது போரில் கொல்லப்பட்டு விட்டான்.

உன் நம்பிக்கை அனைத்தும், என்னால் வேர் அறுக்கப்பட்டு சின்னாபின்னம் ஆக்கப்பட்டு விட்டது. 

(கர ஹந்தா ச தே பர்தா ராகவ சமரே ஹத:! சின்னம் தே சர்வதோ மூலே தர்பஸ்தே விஹிதோ மயா!  - வால்மீகி ராமாயணம்)

கலங்கி இருக்கும் சீதா, இனி நீ என்னுடைய மனைவியாக ஆக போகிறாய்.

(வ்யசனே ஆத்மன: சீதே மம பார்யா பவிஷ்யசி  - வால்மீகி ராமாயணம்)

சீதா! முட்டாள்த்தனமான நம்பிக்கையை விடு..  செத்துபோனவனை வைத்து என்ன செய்ய போகிறாய்?

(விஸ்ருஜே மாம் மதிம் மூடே கிம் ம்ருதேன கரிஷ்யசி  - வால்மீகி ராமாயணம்)

ஒழுக்கமானவளே! என் மனைவிகள் அனைவருக்கும் மேலே உன்னை ஆக்கி, பட்டத்து ராணியாக உன்னை ஆக்குகிறேன்.

(பவஸ்ய பத்ரே பார்யானாம் சர்வாசாம் ஈஸ்வரி மம  - வால்மீகி ராமாயணம்)

அல்ப புண்ணியங்கள் கொண்டவளே! மூடத்தனமாக நீ உன்னையே எல்லாம் தெரிந்தவள் என்று நினைத்து கொண்டு இருக்கிறாய்.

(அல்ப புண்யே நிவ்ருத்தார்த்தே மூடே பாண்டிதம் ஆனினி!  - வால்மீகி ராமாயணம்)

சொல்கிறேன் கேள்... உன் கணவன் ராமன் கொடூரமாக கொல்லப்பட்டு விட்டான்.

(ஸ்ருணு பர்த்ரு வதம் சீதே கோரம் வ்ருத்ர வதம் யதா!  - வால்மீகி ராமாயணம்)

இந்த ராமன் சுக்ரீவன் தலைமை ஏற்ற பெரும் படையை கூட்டிக்கொண்டு, என்னை கொல்வதற்கு கடற்கரை பக்கம் போர் புரிய வந்தான்.

(சமாயாத சமுத்ராந்தம் மாம் ஹந்தும் கில ராகவ:!  - வால்மீகி ராமாயணம்)

சூரியன் மறைந்த வேளையில், வடக்கு சமுத்திர கரையில் படைகளுடன் தங்கி இருந்தான்.

பயண களைப்பில் சோர்ந்து இருந்த இவர்கள் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தனர்.

என்னுடைய ஒற்றர் படை அங்கு சென்று இதை கவனித்தனர்.

ப்ரஹஸ்தன் தலைமையில் பெரும் ராக்ஷஸ படை அங்கு சென்றனர்.

(தத் ப்ரஹஸ்த ப்ரணீதேன பலேன மஹதா மம! - வால்மீகி ராமாயணம்)

ராமனின் மொத்த படைகளும் இரவோடு இரவாக அழிக்கப்பட்டது.

ராக்ஷஸர்கள் தங்களிடம் இருந்த பிராணிகளை பிடிக்கும் ஆயுதங்களை கொண்டும், கதையை கொண்டும், சக்கரத்தை கொண்டும், கம்புகளை கொண்டும், கத்தியை கொண்டும், அம்புகளை கொண்டும், கூர்மையான ஆணிகள் பதித்த கதையை கொண்டும், ஏவுகணை போன்ற ஆயுதங்களை கொண்டும் அடியோடு வானர கூட்டத்தை அழித்தனர்.

அந்த சமயத்தில், தூங்கி கொண்டிருந்த ராமனின் அருகில் சென்ற ப்ரஹஸ்தன் தன் கூரிய வாளால் ராமனின் தலையை சீவி விட்டான். அங்கு அவனை எதிர்ப்பதற்கு ஒரு ஆள் இல்லை.

(அத சுப்தஸ்ய ராமஸ்ய ப்ரஹஸ்தேன ப்ரமாதினா! அசக்தம் க்ருத ஹஸ்தேன சிரஸ் சின்னம் மஹாசினா! - வால்மீகி ராமாயணம்)


விபீஷணன் சிறைபிடிக்கப்பட்டான்.

லக்ஷ்மணன் எஞ்சி இருந்த வானர கூட்டத்துடன் விரட்டி அடிக்கப்பட்டான்.

சுக்ரீவன் கழுத்து நொறுக்கப்பட்டு கீழே வீழ்ந்தான்.

ஹனுமான் ராக்ஷஸர்களால் தாடை உடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.

ஜாம்பவான் மண்டி இட்டு காலில் விழுந்தான். அவனை ஈட்டியால் குத்தி மரத்தை சாய்ப்பது போல சாய்த்து விட்டனர்.

மைந்தன், த்விவிதன் இருவரும் வீழ்த்தப்பட்டனர். 

அனைவரும் வெட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் அழுது விழுந்தனர்.

பனசன் பனச மரத்தை போல விழுந்தான்.

தரீமுகன் பலமுறை வெட்டப்பட்டு கீழே விழுந்தான்.

குமுதன் அம்புகளால் வீழ்த்தப்பட்டான். வலியால் கதற கூட முடியாமல் இறந்தான்.

அங்கதன் பல ஆயிரம் அம்புகளால் தாக்கப்பட்டு வீழ்ந்தான்.

வானர கூட்டம் யானைகளால் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

பலர் தேரிலும் குதிரைகளின் கால்களிலும் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

யானைகள் சிங்கத்தால் பின் பக்கத்தில் இருந்து தாக்கப்படுவது போல, ராக்ஷஸர்கள் வானரர்களை தாக்கினர். 

பலர் கடலில் விழுந்து உயிர் விட்டனர்.

பல வானரர்கள் கடற்கரையிலும், மலைகளிலும், மரங்களுக்கு இடையிலும் ராக்ஷஸர்களால் கொல்லப்பட்டனர்.

இப்படி என்னுடைய படைகள் உன் கணவனையும் அவன் படையையும் அழித்து விட்டனர்.

உனக்காக புழுதி படிந்த ரத்தம் ஒழுகும் ராமனின் தலையை கொண்டு வந்து இருக்கிறேன்."

இப்படி சொல்லிக்கொண்டே, அருகில் இருந்த ஒரு ராக்ஷஸியை பார்த்து, 

"வித்யுஜிஹ்வாவை போரிலிருந்து கொண்டு வந்த ராமனின் தலையோடு இங்கு வரச்சொல்" 

என்று கட்டளை இட்டான்.

வித்யுஜிஹ்வா மாயா ரூபமான ராமனின் தலையுடன், ராமபிரான் வைத்து இருக்கும் அம்பு வில்லை காண்பித்தான்.

ராவணன், வித்யுஜிஹ்வாவை பார்த்து, 

"அந்த ராமனின் தலையை சீதைக்கு முன் வை. கடைசி முறையாக அவள் கணவனை பார்த்து கொள்ளட்டும்." என்றான்

(அக்ரத குரு சீதாயா சீக்ரம் தாசரதே சிர:! அவஸ்தாம் பஸ்சிமாம் பர்த்ரு க்ருபனா சாது பஸ்யது!! - வால்மீகி ராமாயணம்)


உடனே வித்யுஜிஹ்வா சீதையின் முன் மாயா ரூபமான ராமபிரான் தலையை வைத்தான்.


ராவணன், மாயா ரூபமான ராமனின் வில்லை சீதையின் முன் வீசிவிட்டு, சீதையை பார்த்து,

"இதோ பார்.. ராமனின் நாண் ஏற்றப்பட்ட வில். இரவோடு இரவாக அந்த மனிதன் கொல்லப்பட்ட பின், ப்ரஹஸ்தன் இதை கொண்டு வந்தான்.

சீதா! நீ எனக்கு வசமாகி விடு."

என்று பேசினான்.

ராமபிரானின் தலையையும், தலை கேசத்தையும், அவர் அணிந்து இருந்த குண்டலம் போன்ற ஆபரணங்களையும், வில்லையும் பார்த்த சீதை, ராவணன் சொன்ன வார்த்தையை நம்பி விட்டாள்.

கதறி அழுத சீதை, நிலை தடுமாறி பேசலானாள். 

"கைகேயி! சந்தோஷமாக இருங்கள். இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய உத்தமர் கொலை செய்யப்பட்டு விட்டார்.

உங்களால் குலமே நாசமாகி விட்டது.

மற்றவர்கள் துயரத்தில் நீங்கள் ஆனந்தப்படுங்கள்.

எந்த விதத்தில் உங்களுக்கு ராமபிரான் துன்பம் செய்தார்?

எதற்காக அவருக்கு மரவுரி அணிந்து வனம் செல்ல செய்தீர்கள்?"

இப்படி சொல்லிக்கொண்டே வேரோடு சாய்க்கப்பட்ட வாழை மரம் போல சீதை மயங்கி விழுந்தாள்.


சிறிது நேரத்தில் தன்னை சுதாரித்து கொண்டு, ராமபிரானின் தலையை முகர்ந்து கொண்டே, புலம்ப ஆரம்பித்தாள்...

"ஐயோ! நான் இறந்து விட்டேன். 

நீண்ட கைகள் உடைய என் நாதா! 

சத்தியத்தை கடைபிடிக்கும் நாயகா! நான் இறந்து விட்டேன்!

ஐயோ! நான் விதவை ஆனேனே! 


மனைவிக்கு முன்னால் கணவன் போவது நியாயமா?

ஒழுக்கத்தில் சிறந்தவரே! என்னை முந்தி கொண்டு நீங்கள் சென்று விட்டீர்களா?

என்னுடைய சோகத்திலிருந்து இனி என்னை மரணம் மட்டுமே மீட்க முடியும்..

ஐயோ! கன்றை இழந்த தாய் பசு போல, என் மாமியார் கௌசல்யா தவிப்பாளே!

உங்களுக்கு நீண்ட ஆயுசு என்று ஜாதகம் கணித்தார்களே!! 

அவர்கள் சொன்ன சொல் பொய் போனதே! இப்படி சிறுவயதோடு உங்கள் வாழ்வு முடிந்து விட்டதே!

எந்த நேரமும் சுதாரிப்புடன் இருக்கும் உங்களையும், காலம் விழுங்கி விட்டதா?

அரசாங்க அறிவு உள்ளவராயிற்றே நீங்கள்.. எப்படி நீங்கள் இப்படி உடலை விட்டு பிரிந்து இருக்க முடியும்?

பெரும் அபாயகரமான சூழ்நிலையிலும் தப்பித்து கொள்ளும் திறன் கொண்டவரல்லவா நீங்கள்?

உங்களை எப்படி இந்த இரவு கொள்ளை கொண்டது?

ஓ தாமரை கண்ணா! என்னை விட்டு பிரிந்து விட்டீர்களே!

எளிமையான என்னை விட்டு விட்டு, பூமியின் மேல் உள்ள ஆசையால் சென்று விட்டீர்களா?

இந்த அற்புதமான வில்லை நான் எத்தனை முறை மலர்களால் பூஜித்து இருப்பேன்.

குறை இல்லாதவரே! நீங்கள் உங்கள் மூதாதையர்களும், என் மாமனார் தசரதர் இருக்கும் லோகத்துக்கு சென்று விட்டீர்களா?

உங்களுடைய ஒழுக்கமான நடத்தையால் நீங்கள் நக்ஷத்திரமாக இருந்து கொண்டு இருக்கிறீர்களா?

ஏன் நீங்கள் என்னை பார்க்க வில்லை? 

என்னிடம் ஏன் பேசவில்லை?

இளமை காலத்தில் உங்களை மணந்த பின், உங்களை தானே நான் தொடர்கிறேன்.

மணமேடையில் என் கை பிடித்து, என்னை ஒருபோதும் விட மாட்டேன் என்று சொன்னீர்களே!

அதை ஞாபகபடுத்தி கொண்டு, உடனே என்னையும் அழைத்து கொள்ளுங்கள்.

(சம்ஸ்ருதம் க்ருஹ்னதா பாணிம் சரிஷ்யாமீதி யத் த்வயா! ஸ்மர தன் மம காகுத்ஸம் நய மாமபி துக்கிதாம்!! - வால்மீகி ராமாயணம்)

என்னை இந்த உலகத்தில் விட்டு விட்டு, வேறு உலகத்துக்கு ஏன் சென்றீர்கள்?

அடைக்கலம் தருபவரே! என்னால் அணைக்கப்பட்ட உங்கள் தேகத்தை, பிராணிகள் எப்படி இழுத்து செல்ல முடியும்?

வேத காரியங்கள் பல செய்தீர்களே. உங்களுக்கு வேத முறைப்படி இறுதி காரியங்கள் ஏன் கிடைக்கவில்லை?

நாம் மூன்று பேரும் வனவாசம் வந்தோம்.

இப்பொழுது லக்ஷ்மணன் மட்டுமே திரும்பி செல்கிறான்.

கௌசல்யா மாதா லக்ஷ்மணனை கேட்பாளே!! 

லக்ஷ்மணன் ராக்ஷஸர்களால் இரவில் நடந்த பேரழிவை சொல்லவேண்டி வருமே!

நான் இந்த ராக்ஷஸர்களிடம் சிக்கி இருப்பதையும், ராமபிரானை விண்ணுலகம் சென்றதையும் கேட்டால், கௌசல்யா மாதாவின் இதயம் சுக்கு நூறாகி விடுமே!!

இவர் எனக்காக கடல் கடந்து வந்தது பலன் அளிக்கவில்லையே!!

இந்த சிறிய சண்டையில் இவர் கொல்லப்பட்டு விட்டாரே!!

மனைவி என்ற பெயரில் நானே மரணமாக வந்து தொலைந்தேனே! 

இதை தெரிந்து கொள்ளாமல் ராகவன் என்னை மணந்து கொண்டு விட்டாரே!

நான் போன ஜென்மத்தில் ஏழைகளுக்கு தானம் செய்வதை நிறுத்தி இருக்கிறேன். அதனால் தான் யாருக்கும் அபயம் தரும் இவருக்கு மனைவியாக இருந்தும், இத்தனை துன்பத்தை அனுபவிக்கிறேன்.

ராவணா! என் உடலையும் ராமபிரானின் உடலோடு வைத்து விடு.

என் கணவனோடு என்னையும் எரித்து விடு. இந்த புண்ணிய காரியத்தையாவது செய்.

என் தலை ராமபிரான் தலையோடு சேரட்டும்.. என் தேகம் ராமபிரானின் தேகத்தோடு சேரட்டும். நான் அந்த உயர்ந்த ஆத்மாவான ராபிரானையே தொடர்கிறேன்!"

இவ்வாறு தன் கணவனின் தலையையும், வில்லையும் பார்த்து பார்த்து புலம்பினாள் சீதை.

இப்படி இவள் அழுது கொண்டு இருக்க, ராக்ஷஸ படையில் இருந்து சிலர் அங்கு வந்து கை குவித்து நின்றனர்.

பிறகு ராவணனை பார்த்து, 

"ப்ரஹஸ்தன் அனைத்து மந்திரிகளுடன் வந்து இருக்கிறார். உங்களை பார்க்க ஆவலாக இருக்கிறார். இது ஒரு அவசர செய்தி. தயவு செய்து உங்கள் அமைச்சர்களை பார்க்க அழைக்கிறோம்" என்றார்கள்.

இதை கேட்ட ராவணன் உடனே அசோக வனத்தை விட்டு, தன் சபையை நோக்கி சென்றான்.

ராவணன் நகர்ந்து போன உடனேயே, அங்கு இருந்த மாயா ரூபமான ராமபிரான் தலையும், வில்லும் மறைந்து போயின.

(அந்தர்தானம் து தச்சீர்ஷம் தச்ச கார் முகம் உத்தமம்! ஜகாம ராவணஸ்யைவ நிர்யான சமன் அந்தரம்!! - வால்மீகி ராமாயணம்)










Saturday 22 August 2020

சீதையை ராவணன் ஏன் நெருங்கவில்லை.. அத்தனை நல்லவனா ராவணன்? ராவணனே இதற்கு காரணம் சொல்கிறான்.. தெரிந்து கொள்வோமே....வால்மீகி ராமாயணம்

ராமர் இல்லாத சமயத்தில், சீதையை கடத்தி சென்றான் ராவணன்

தன்னை ஏற்பதற்காக, சீதைக்கு 1 வருடகால அவகாசம் கொடுத்தான்.

சீதையை ராவணன் ஏன் நெருங்கவில்லை.. அத்தனை நல்லவனா ராவணன்?

ராவணனே இதற்கு காரணம் சொல்கிறான்... தெரிந்து கொள்வோமே....

வால்மீகி ராமாயணம் - யுத்த காண்டம்:




ராமபிரான் வானர படைகளுடன், மகேந்திர மலை, சஹ்ய மலை, மலய மலையை தாண்டி, வேலாவனம் என்ற காட்டை தாண்டி, கடற்கரை அருகில் வந்து விட்டார் (இன்று ராமேஸ்வரம் என்று சொல்கிறோம்).


"கடலை கடந்து இலங்கை வந்து விட்டால் என்ன செய்வது? 

ஒரு வானரன் ஹனுமான் வந்தே இலங்கையை கலங்கடித்து விட்டான். கோடிக்கணக்கான வானரர்கள் உள்ளே நுழைந்தால்? இனி என்ன செய்ய வேண்டும்?"

என்று ராவணன் சபை கூட்டி, மந்திரிகளிடம் ஆலோசனை நடத்தினான்.


ராக்ஷஸர்கள் பலர், படைத்தளபதி ப்ரஹஸ்தா, வஜ்ரதம்ஸ்ட்ரா, நிகும்பன் (கும்பகர்ணன் பிள்ளை) ஆகியோர் ராவணனுக்கு ஆதரவாக பேசினார்கள். 

பிறகு விபீஷணன் பேசினார்.

விபீஷணன் மட்டும் "சீதையை தகுந்த மரியாதையுடன் திருப்பி அனுப்பி விடு" என்றார்.. 

உடனேயே சபையை கலைத்து விட்டு, வெளியே சென்று விட்டான் ராவணன்.


பிறகு ராவணன் அரண்மனைக்கு சென்று மீண்டும் விபீஷணன் சொல்லி பார்த்தார். 

"சீதையை அனுப்ப முடியாது" என்று மீண்டும் நகர்ந்தான்.


அடுத்த நாள், மீண்டும் சபை கூட்டினான் ராவணன்.


ஆறு மாத தூக்கத்துக்கு பின், சபைக்கு வந்து இருந்தான் கும்பகர்ணன்.

கும்பகர்ணன் ராவணன் செய்த இந்த பேடிதனமான காரியத்தை கடுமையாக கண்டித்தான்.. இருந்தாலும் 'ராமரை கொன்று யமலோகம் அனுப்புவேன். கவலைப்படாதே!' என்று சொல்லி அமர்ந்தான்.


ராவணன் ஆத்திரத்தில் இருந்தான்.

பிறகு மஹா பலசாலியான 'மஹாபார்ஷ்வன்' என்ற ஒருவன், ராவணனை பார்த்து கை குவித்து பேசினான்..

"ராமன் ஒரு சிறு பொடியன். அவனுக்கு மரத்தில் இருக்கும் தேன் கூட்டில் உள்ள தேனை கூட எடுக்க முடியாது.

நீங்கள் ஈஸ்வரன். 

ஈஸ்வரனுக்கே யார் ஈஸ்வரனாக முடியும்?

எதிரிகளை ஒடுக்க, சீதையை பலாத்காரம் செய்யுங்கள். 

அவளை அனுபவித்து விடுங்கள். பிறகு ஏற்படும் விளைவுகளை நாம் பார்த்து கொள்ளலாம்.

கும்பகர்ணன், உங்கள் மகன் இந்திரஜித் உங்களுடன் இருக்கும் போது, அந்த இந்திரன் தன் ஆயுதங்களை வீசினாலும் தடுத்து விடுவார்கள்.

சீதை திருப்பி கொடுப்பதோ (தானம்), சமாதானமோ, பேதமோ இங்கு தேவையே இல்லை. தேவைப்பட்டால் போர் செய்வோம்.

நம்மை எதிர்த்து எவன் வந்தாலும், அவன் மீது நம் ஆயுதங்கள் பாயும்"

என்று ராவணனுக்கு சாதகமாக பேசினான்.




மஹாபார்ஷ்வன் பேசிய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து, ராவணன் அவனுக்கு பதில் அளித்தான்.

"மஹாபார்ஷ்வா! நான் சொல்வதை கவனி. இது எனக்கு மட்டுமே இருந்த ரகசியம்.

மஹாபார்ஷ்வ நிபோதம் த்வம் 

ரஹஸ்யம் கிஞ்சித் ஆத்மன: 

- வால்மீகி ராமாயணம்

இது பல காலங்கள் முன் நடந்த ஒரு சம்பவம். நானே அதை உனக்கு சொல்கிறேன்.

சிர வ்ருத்தம் ததாக்யாஸ்தே 

யத் அவாப்தம் மயா புரா

புஞ்சிகஸ்தலா என்று ஒரு தேவ கன்னிகை, சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்ம தேவனை பார்க்க ஆகாய மார்க்கமாக அக்னியை போன்று சென்று கொண்டிருந்தாள்.

பிதாமஹஸ்ய பவனம் 

கச்சந்திம் புஞ்சிகஸ்தலாம் | 

சஞ்சூர்யமானாம் அத்ராக்ஷம் 

ஆகாசோ அக்னி சிகாமிவ ||

அவளை பலாத்காரம் செய்து அனுபவித்தேன்.

கலங்கிய குட்டை போல ஆன அவள், ப்ரம்ம தேவன் இருக்கும் சத்ய லோகத்துக்கு ஓடினாள்.

சா பிரசஹ்ய மயா புக்தோ

க்ருதா விவசனா தத: | 

ஸ்வயம்பு பவனம் ப்ராப்தா

லோலிதா நளினி யதா ||

மஹாத்மாவான ப்ரம்ம தேவன் நடந்ததை அறிந்து கொண்டார்.

என் மீது கோபப்பட்டு என்னை சபித்தார்.

தஸ்ய தச்ச ததா மன்யே

ஞாதம் ஆஸீன் மஹாத்மனா |

அத சங்குபிதோ தேவோ மாம்

இதம் வாக்யம் அப்ரவீத் ||

'இனி எந்த ஒரு பெண்ணையாவது பலாத்காரம் செய்து கெடுக்க நீ முயன்றால், உன் தலை சுக்கு நூறாகி போகட்டும்' என்று சொல்லி விட்டார்.

அத்ய ப்ரப்ருதி யாம் அந்யாம்

பலான் நாரீம் கமிஸ்யாமி |

ததா தே சதகா மூர்கா

பலிஸ்யதி ந சம்சய: ||

இந்த சாபத்தின் பயத்தால் தான், சீதையை பலாத்காரம் செய்யாமல் இன்று வரை இருக்கிறேன்."

இத்யஹம் தஸ்ய சாபஸ்ய

பீத: ப்ரசபம் ஏவ தாம் |

நாரோபயே பலாத் சீதாம்

வைதேகீம் சயனே சுபே ||

என்று பதில் சொன்னான்.


எப்படிப்பட்ட கீழ்த்தரமான புத்தி கொண்ட ராவணன்!! என்று அறிந்து கொள்ளலாம்.

இப்படி, 

கீழ்த்தரமான புத்தி கொண்ட ராவணன், சாபத்துக்கு பயந்து, பிறர் மனைவியான சீதையை விடவும் மனம் இல்லாமல், 'ஒரு வருட காலம் தந்தாவது, சீதையின் மனதை மாற்றி விட வேண்டும்' என்று முயற்சி செய்து கொண்டிருந்தான்.




"பிறர் மனைவியை தொட நினைத்த ராவணனை ஆதரிப்பவன், எத்தனை கீழ்த்தரமானவனாக இருக்க வேண்டும்?" 

என்று நாம் தீர்மானிக்கலாம்.


தன் சொந்த சகோதரனனாலும், பலம் பொருந்தியவனனாலும், செல்வாக்கு மிகுந்தவனனாலும், அரசனே என்றாலும்

பிறர் மனைவியை அபகரித்து வைத்து இருந்த ராவணனை, மீண்டும் 3வது முறையாக சொல்லி பார்த்தார் விபீஷணன்


சபையில் அனைவருக்கு எதிராக எட்டி உதைத்து, 'நீ அந்த ராமனிடமே போ!' என்றான் ராவணன்.

'கீழ்தரமான இவனிடம் இனியும் இருக்க கூடாது' என்று 

விபீஷணன் ராமபிரானை சரண் அடைவோம் என்று முடிவு செய்து கிளம்பினார்.

சாபத்துக்கு பயந்த இந்த பேடி ராவணனை, உயர்த்தி புகழும் சிலரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...

Saturday 14 September 2019

புலஸ்திய ரிஷி, புலஹர் ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... தமிழ் முனி அகத்தியரின் தந்தையல்லவா புலஸ்தியர்..தெரிந்து கொள்வோமே நம் ரிஷிகள் பெருமையை..

புலஸ்திய ரிஷி, புலஹர் ரிஷி
"புலஹ ரிஷியும், புலஸ்திய ரிஷியும்" ப்ரம்மாவால் படைக்கப்பட்ட மானஸ புத்திரர்.
சகோதர்கள்.

பிரம்மாவால் படைக்கப்பட்ட ரிஷிகள் ப்ரம்ம தேவன் இருக்கும் வரை இருக்கிறார்கள்.
தேவைப்படும் போது ஜன, தப லோகங்களில் இருந்து பூலோகம், சொர்க்கலோகம் வருகிறார்கள்.

இருவரும் பூலோகத்தில் ஹிமாலயத்தில் நேபாள தேசத்தில் (Nepal) ஓடும் 'கண்டகி என்ற சக்ர' நதிக்கரையில் கடும் தவம் செய்தனர்.
அங்கேயே ஆசிரமம் அமைத்து வசித்து வந்தனர்.
புலஹர் வசித்த இடமே இப்போது "சாளக்கிராம க்ஷேத்ரம்" (Nepal) என்று சொல்லப்படுகிறது.
இவரின் சிஷயர் தான் "பரத" யோகீசவ்ரர்.
இவரால் தான் நம் நாட்டுக்கு "பரத" கண்டம் என்று பெயர் ஏற்பட்டது.

பாரத வர்ஷத்தில் (இந்திய, ஆப்கான், பாகிஸ்தான், இந்தோனேஷியா வரை) பரத கண்டத்தில் (இந்திய) தான் நாம் வசிக்கிறோம்.

பாரத என்ற சமஸ்கரித சொல்லுக்கு "பரமாத்மாவில் ரமிப்பது" என்று பொருள். பாரத நாட்டுக்கு "இண்டியா" என்று ஏன் இந்த அர்த்தமில்லாத பெயர்  ஏற்பட்டது?. தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்.

பொதுவாக இந்த பாரத வர்ஷத்தில் தான், "தெய்வ சிந்தனை உள்ளவர்கள் அதிகமாக பிறப்பார்கள்" என்பதால் இதற்கு பாரத வர்ஷம் என்று பெயர் ஏற்பட்டது.

புலஹரின் சிஷ்யர் "பரத" யோகீசவ்ரர் மோக்ஷத்திற்காக கடும் தவம் செய்து வந்தார்.
"தன் தவமே மோக்ஷம் கொடுத்து விடும்" என்று நினைத்த இவரை ஒரு மான் வந்து கெடுத்து விட்டது.
மான் குட்டியை வளர்த்து வந்த பரத யோகீஸ்வரர், தன் ஆயுசு முடியும் சமயத்தில், "இனி இந்த மானை யார் காப்பாற்றுவார்களோ!!" என்ற கவலையுடனேயே உயிர் விட, மோக்ஷம் கிடைக்காமல், அடுத்த பிறவி கிடைத்து அதில் மானாகவே பிறந்து விட்டார்.

போன ஜென்மத்தில் யோகீஸ்வரராக இருந்ததால், பூர்வ ஜென்ம நினைவோடு மானாக பிறந்தார்.
தன் குரு புலஹர் என்று அறிந்து இருந்ததால், புலஹர் இருக்கும் சாளக்கிராம க்ஷேத்ரத்துக்கே வந்து, கடைசி வரை அங்கேயே மானாக இருந்து உயிர் விட்டார்.
பின்னர் "ஜட பரத"ராக அவதரித்து, உலக விஷயங்களில் துளியும் தலையிடாமல், மோட்சத்தையே லட்சியமாக கொண்டு வாழ்ந்து மூன்றாவது பிறவியில் மோக்ஷத்தை பெற்றார்.


புலஹர் என்ற ரிஷியை ஆச்ரயித்த பரதரும் மோக்ஷம் பெற்றார் என்று பார்க்கும் போது, ரிஷிகளின் பெருமை நமக்கு புரியும்.

புலஸ்தியர் தன் தவ வலிமையால் பலம் வாய்ந்த "யக்ஷர்கள், ராக்ஷஸர்களை" ஸ்ருஷ்டி செய்தார்.

ஆதிகாலத்தில் இலங்கை ராக்ஷஸர்களால் ஆளப்பட்டது.

முதல் மனுவான ஸ்வாயம்பு மனுவுக்கு தேவஹூதி என்ற மகள் பிறந்தாள்.
தேவஹூதி "கர்தம முனி"யை மணந்தாள்.

புலஹ ரிஷி, தேவஹூதியின் மகள் "ஆகதி"யை மணந்தார். இவர்களுக்கு கர்மசிரேஷ்டன், வனீயான், ஸஹிஷ்ணு என்ற மூன்று புதல்வர்கள் பிறந்தனர்.

புலஸ்திய ரிஷி, தேவஹூதியின் மகள் "ஹவிர்பு"வை மணந்தார்.

புலஹர், புலஸ்திய ரிஷிக்கு கர்தம பிரஜாபதி மாமனார் முறை.

புலஸ்திய ரிஷிக்கு தமிழ்நாடே கடன் பட்டு இருக்கிறது..
ஏன்?
"தமிழ் முனிவர்" என்று கொண்டாடப்பட்டும் 'அகஸ்தியர்' இவருடைய மகன். 
புலஸ்திய ரிஷியை தமிழ்நாடு கொண்டாடாமல் இருக்க முடியுமா?..

புலஸ்தியருக்கு 'அகஸ்தியர்', 'விச்ரவஸ்' என்று இரு புதல்வர்கள்.
இருவருமே தவத்தில் ஆர்வம் உள்ளவர்கள், ரிஷிகள்.

இவர்கள் அனைவரும் கண்டகி நதிக்கரையில் (Nepal) புலஸ்தியரோடு இருந்து தவம் செய்து கொண்டிருந்தனர்.

'த்ருணபந்து' என்ற ராஜரிஷி, தன் மகள் 'இடவிடா'வை புலஸ்திய ரிஷியின் புதல்வர் விச்ரவஸுக்கு மணம் செய்து கொடுத்தார்.
விச்ரவஸுக்கும், இடவிடாவுக்கு பிறந்தவர் தான் "குபேரன்' என்று அழைக்கப்படும் 'வைச்ரவணன்'.

குபேரன் அருள் கிடைத்தால் செல்வம் கொழிக்கும் என்று சொல்வார்கள்.

புலஸ்தியரின் பேரன் குபேரன் என்று அறியும் போது, புலஸ்திய ரிஷியின் வம்ச பெருமை ஓங்குகிறது.

தேவர்களில், தேவர் கூட்டம் மட்டும் தான் உள்ளது என்று நினைக்க கூடாது.
முப்பத்து முக்கோடி தேவர்களில், 'யக்ஷர்கள், கிண்ணரர்கள், கந்தர்வர்கள்' என்று பல பிரிவுகள் உண்டு.

புலஸ்திய ரிஷி தன் பேரன் 'குபேரன்' என்ற வைச்ரவணனை "யக்ஷர்களுக்கு அரசனாக்கினார்".
குபேரன் எளிதாக நினைத்த இடங்களுக்கு சென்று வர, சொர்க்க லோகத்தில் உள்ள விஸ்வகர்மா, குபேரனுக்காக புஷ்பக விமானம் செய்து கொடுத்தார்.

'மால்யவான்' என்ற ராக்ஷஸன் இலங்கையை ஆண்டு கொண்டு இருந்த போது, குபேரன் இவர்களை விரட்டி, இலங்கைக்கு அரசனானான்.
யக்ஷர்கள் குடியேறி இலங்கையை ஆண்டனர்.

எப்படியாவது "ராக்ஷஸர்கள் மீண்டும் இலங்கையை பிடிக்க வேண்டும்" என்று மால்யவான் முயற்சி செய்து கொண்டிருந்தான்.

மால்யவானின் இளைய சகோதரன் "சுமாலி"க்கு "கேகசி" என்ற மகள் இருந்தாள்.

குபேரனின் தந்தை விச்ரவஸ் தவவலிமையுள்ளவர் என்று அறிந்து, அவருக்கு ராக்ஷஸ குலத்தை சேர்ந்த "கேகசி" என்பவளை மணம் செய்து கொடுத்தான் மால்யவான்.
இவர்களுக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற மூன்று பிள்ளைகள் கண்டகி என்ற சக்ர நதி தீரத்தில் பிறந்தனர்.
நேபாள தேசத்தில் (Nepal) பிறந்தவர்கள்.
சிவ பக்தனாக வளர்ந்தார்கள்.

"ராவணன், விபீஷணன், கும்பகர்ணன்" ஆகியோர் புலஸ்திய ரிஷியின் பேரன்கள்
ராவணனுக்கு "பௌலஸ்த்யன்" என்று பெயர்.




"ப்ரம்மத்தை உபாசிப்பவன்" ப்ராம்மணன்.
புலஸ்திய ரிஷியின் மகன் விச்ரவஸ் "ப்ராம்மணன்".
இவருக்கு பிறந்த ராவணன், கும்பகர்ணன் இருவரும் தாய் வழியில் ராக்ஷஸ குணத்தையே பெற்று இருந்தனர்.
விபீஷணன் "ப்ராம்மண குணம்" அதிகம் உள்ளவனாக இருந்தார்.
மூவருமே 4 வேதமும் கற்றவர்கள்.

சிவ பக்தனான ராவணன், ரஜோ குணம் அதிகமுள்ளவனாக இருந்ததால், பூஜை கூட  அனைவரையும் போல பூ, பழங்கள் கொண்டு செய்ய மாட்டான்.

"சிவ பூஜை தன்னை போல யாரும் செய்ய முடியாதபடி இருக்க வேண்டும்" என்று நினைப்பான்.
அதனால், மாய சக்தி உடைய ராவணன், தன் 10 தலையை அறுத்து ரத்த பூஜை செய்வான்.
இன்னும் வேகம் அதிகமாகி, ஹிமாலயத்தையே தன் 20 கைகளால் தூக்கி, தன் சிவபக்தியை, சிவ பெருமானுக்கு காட்டினான்.

சிவபெருமான் தன் நக கட்டைவிரலால் ஒரு அழுத்து அழுத்த, ராவணனின் 20 கைகளும் மலையில் சிக்கி கொள்ள, அது போன்ற திமிர் பிடித்த சிவ பக்தி செய்வதை  நிறுத்தினான்.

மகா பலம் கொண்ட ராக்ஷர்களான ராவணன் குபேரனை இலங்கையில் இருந்து விரட்டி, அவனிடம் இருந்த "புஷ்பக விமானத்தை" (flight) தன்னிடம் வைத்துக்கொண்டான்.

குபேரன் வட பூமியை  ஆண்டு வந்தான். வடக்கு பகுதியில் குபேரன் இருக்கிறார் என்று சொல்வதற்கு காரணம் இது தான்.

விபீஷணன் பரம சாத்வீகனாக இருந்தார்.
இவரால் தான்,
நமக்கு ப்ரம்ம தேவன் வழிபட்டு, ஸ்வாயம்பு மனு வழிபட்டு, பிறகு ஸ்ரீ ராமரே வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீரங்கத்துக்கு கிடைத்தார்.

ராம பட்டாபிஷேகம் நடந்த பின், அயோத்தி விட்டு, ஸ்ரீ ராமரை பிரிய மனமில்லாமல் விபீஷணன் இருந்தார்.
"தானும், ஸ்ரீ ரங்கநாதரும் வேறல்ல"
என்று ஸ்ரீ ராமரே தன் குலதெய்வமான ரங்கநாதரை விபீஷணனுக்கு கொடுத்து, இலங்கை சென்று ஆட்சி செய்ய சொன்னார்.

வரும் வழியில், ஸ்ரீ ரங்கநாதரை சந்தியா வந்தனம் செய்ய கீழே வைத்து விட்டு, தன் பிரார்த்தனையை செய்து முடித்தார்.

ஸ்ரீ ரங்கநாதர் தெற்கு முகமாக படுத்து இருக்க, "இங்கிருந்தே இலங்கையை கடாக்ஷித்து கொண்டு இருப்பேன்" என்று சொல்லி, ஸ்ரீ ரங்கத்திலேயே தங்கி விட்டார்.
"புலஸ்திய ரிஷி" பரம்பரையில் வந்த "விபீஷணன்" நமக்கு ரங்கநாதரை தந்து விட்டார்,
ஸ்ரீ ராமரே வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதர் தமிழ்நாட்டுக்கு கிடைத்து விட்டார்.

ராக்ஷஸனாக இருந்தாலும் விபீஷணன் பெருமாள் பக்தி செய்தார்.

ராவணன், கும்பரகர்ணன் இந்த பிறவியில் ஸ்ரீ ராமரை எதிர்ப்பது போல இருந்தாலும், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மஹாவிஷ்ணுவின் காவலாளிகள், ஜெய விஜயர்கள் என்பதை மறக்க முடியாது..

சிவ பக்தனான அகஸ்தியர், பரமாத்மா நாராயணனே ஸ்ரீ ராமராக அவதாரம் செய்து இருக்கிறார் என்று உணர்ந்து அவரின் தரிசனத்திற்காக காத்து இருந்தார்.
தன் தந்தை தசரதன் கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற, ஸ்ரீ ராமர் அயோத்தி சாம்ராஜ்யத்தை பரதனுக்கு கொடுத்து, 14 வருட வனவாசத்தை ஏற்று சீதை, லக்ஷ்மணனுடன் புறப்பட்டார்.

பாரத பூமியில் பல வனங்களில் சஞ்சரித்து, ஒரு சமயம் அகத்திய முனிவரை தரிசித்தார் ஸ்ரீ ராமர்.

அகத்தியர் ஸ்ரீ ராமரை 'தன் ஆசிரமத்திலேயே தங்கி விட்டு அயோத்தி திரும்பலாம். 12 வருடங்கள் ஆகி விட்டது, இன்னும் 2 வருடங்கள் தானே உள்ளது' என்று சொல்ல,
ஸ்ரீ ராமர் அகத்தியர் வாக்கை மீற கூடாது என்ற மரியாதையின் காரணத்தால், அந்த இரவு அவர் ஆசிரமத்திலேயே தங்கினார்.
மறுநாள் காலை அனுஷ்டானங்களை முடித்து கொண்டு, ஸ்ரீ ராமர், சீதா, லக்ஷ்மணனுடன் அகஸ்தியரை வந்து சேவித்தனர்.

முக்காலமும் உணர்ந்த அகத்தியர், ஸ்ரீ ராம அவதார நோக்கத்தை புரிந்து கொண்டார்.

ஸ்ரீ ராமரை பார்த்து,
"ராமா, என்னிடம் ஏராளமான அபூர்வமான அஸ்திர-சஸ்திரங்கள் உள்ளது. அதை அனைத்தையும் உனக்கு தருகிறேன்.
நான் நேற்று உங்களை இங்கேயே தங்குமாறு சொன்னேன். உங்களுக்கு இந்த இடம் சௌகரியமாக இருக்காது.

இங்கு கோதாவரி நதி கரையில், பஞ்சவடி என்ற ஒரு இடம் உள்ளது. அது உங்களுக்கு மிகவும் ஏற்ற இடமாக இருக்கும்."
என்று சொன்னார்.

"மீதம் உள்ள 2 வருடங்கள் இங்கேயே தங்கலாம் என்று நேற்று தானே சொன்னீர்கள்? இன்று திடீரென்று தனியாக பஞ்சவடியில் தங்கலாம் என்று அனுப்புகிறீர்களே!!"
என்று ஸ்ரீ ராமரும் கேட்கவில்லை, அகத்தியரும் திடீரென்று ஏன் இப்படி மாற்றி சொன்னேன் என்று விளக்கவுமில்லை.

இருவருக்கும் தெரிந்த விஷயம் ரகசியமாகவே வைக்கப்பட்டது.

"ராவண வதம் என்ற அவதார நோக்கத்தை பூர்த்தி செய்ய தான் ஸ்ரீ ராமர் வனவாசம் ஏற்றுள்ளார். 
சீதையை ராவணன் அபகரித்து இலங்கை செல்ல போகிறான். 
பிறர் மனைவியை அபகரித்த பாவத்துக்கு ராவணன் அழிய போகிறான்" என்று ஞான த்ருஷ்டியால் புரிந்து கொண்டார் அகத்தியர்.

ஒரு வருஷ காலம் பஞ்சவடியில் (மகாராஷ்டிரா) ஸ்ரீ ராமர், சீதை வசித்தனர். 
லக்ஷ்மணன் குடில் அமைப்பது, வீடு பெறுக்குவது, காய் கனிகள் கொண்டு வருவது என்று சகல சேவையும் செய்து வந்தார்.

ராவணனின் தங்கை சூர்ப்பனகை சீதையை கொலை செய்ய முயற்சிக்க, அனுஷ்டானத்தில் இருந்த ஸ்ரீ ராமர் லக்ஷ்மணனை காப்பாற்ற சொல்ல, பெண்ணாக இருப்பதால் கொலை செய்யாமல், மூக்கு அறுக்கப்பட, இலங்கைக்கு ஓடி ராவணனிடம் சீதையை எப்படியாவது கவர்ந்து மணம் செய்து கொள்ளுமாறு சொல்ல, ராவணன் போலி சாமியார் போல வந்து தூக்கி சென்று விட்டான்.

தன் அயோத்தி சேனையை அழைத்து கொள்ளாமல், தனி ஒருவனாக, ஸ்ரீ ராமர் பஞ்சவடியில் (மகாராஷ்டிரா) இருந்து தன் தம்பி லக்ஷ்மணனை கூட்டி கொண்டு,
கர்நாடக தேசத்தில் வானரர்களை சிநேகம் செய்து கொண்டு,
கடலை கடந்து,
ராவணனுக்காக நின்ற அனைத்து ராக்ஷஸ கூட்டத்தையும் அழித்து, ராவணன் 10 தலையையும் மண்ணில் சாய்த்து,
இலங்கையை தன் ஆளுமையில் கொண்டு வந்து,
ராவணன் தம்பிக்கு அப்படியே இலங்கையை கொடுத்து, இலங்கை அரசனாக்கி,
சீதையை மீட்டு, அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டு "ராம ராஜ்யத்தை" உலகில் நிறுவினார் பரமாத்மா நாராயணன்.

புலஸ்திய ரிஷி பின்னாளில் விந்திய மலையை (மத்திய பிரதேசம்) தாண்டி தக்ஷிண பாரதத்துக்கு வந்தார்.

அகஸ்தியர் தமிழ் முனிவரனார்.

புலஸ்திய ரிஷியால் குபேரன், தமிழ் முனி என்று பெயர் பெற்ற அகத்தியர் நமக்கு கிடைத்தார்.
விஷ்ணுவின் பக்தர்களான ஜெய விஜயர்கள் சனகாதிகள் சாபத்தால் மூன்று ஜென்மங்கள் பூலோகத்தில் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட,
கண்டகி நதி தீரத்தில் தவம் செய்யும் புலஸ்திய ரிஷியின் மகன் விச்ரவஸ் என்ற ரிஷியை தன் தகப்பனாக தேர்ந்து எடுத்தனர்.

விஷ்ணு பார்ஷதர்கள் "புலஸ்திய ரிஷியின் பரம்பரையில் பிறக்க ஆசைப்பட்டனர்" என்றால் புலஸ்தியர்  பெருமை எத்தகையது என்று உணரலாம்.

அவதாரத்தில் ராக்ஷஸனாக பிறந்தாலும், "விஷ்ணு பார்ஷதர்கள்" ஆயிற்றே ராவணனும், கும்பகர்ணனும்.

சப்த ரிஷிகளில் ஒருவராக இருக்கும் அகஸ்தியர் தன் "தகப்பனாக புலஸ்தியரை தேர்ந்து எடுத்தார்" என்றால் புலஸ்தியர்  பெருமை எத்தகையது என்று உணரலாம்.

பரத யோகீஸ்வரர் "புலஹரின் சிஷயர்" என்ற பெற்றதால் தானே, மோக்ஷம் அவர் முயற்சியால் கிடைக்காமல் போனாலும், இரண்டு ஜென்மங்களிலேயே மோக்ஷத்தை அடைந்தார். 
குரு கிருபை தானே வென்றது.

பெருமை பெற்ற பரத யோகீஸ்வரர் அந்த ஜென்மத்தில் மானை நினைத்து மோக்ஷத்தை நழுவ விட்டாலும்,
குரு அணுகிரஹம் இருந்ததால், மானாக அடுத்த பிறவி எடுத்தும் பூர்வ ஜென்ம ஞாபகத்தோடு இருந்து, புலஹர் ஆசிரமத்திலேயே இருந்தார், பிறகு மூன்றாவது ஜென்மத்தில் மோக்ஷத்தை அடைந்து விட்டார் என்று பார்க்கிறோம்.

ரிஷிகளை உபாசித்து நாசம் போனவன் கிடையாதே...
தன் கிருபையால் குருவாக ரிஷிகள் இருந்து காப்பாற்றி விடுவார்கள் என்று தெரிகிறதே..


புலஸ்திய ரிஷி சத்ய யுகம், த்ரேதா யுகம் தாண்டி, துவாபர யுகத்திலும் பூலோகம் வந்தார்.

மகாபாரத சமயத்தில், தீர்த்த யாத்திரை செல்ல பீஷ்மர் சென்று இருந்த போது, கங்கையின் புத்திரனான பீஷ்மருக்கு "புலஸ்திய" ரிஷி காட்சி கொடுத்தார்.
அவருக்கு புண்ணிய க்ஷேத்ரங்களுக்கு சென்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி வருவதன் புண்ணியங்களை பற்றி விரிவாக சொல்கிறார்.

புலஸ்திய ரிஷி, புஷ்கரத்தை பற்றி சொல்லும் போது,
"புஷ்கரையில் குளித்தால் மறுபிறவி என்ற கடமையில் இருந்து விடுபடுவார்கள். 
குறிப்பாக கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளில் புஷ்கரைக்குச் செல்பவன், நித்தியமான பிரம்மனின் வசிப்பிடத்தை அடைவான்.


ஓ மன்னா {பீஷ்மா}, மதுவைக் கொன்றவனே {மதுசூதனனே} "தேவர்களில் முதன்மையானவன்" என்பது போல, 
புஷ்கரையும் அனைத்துத் தீர்த்தங்களிலும் முதன்மையானது. 

நூறு வருடங்கள் அக்னி ஹோத்திரம் செய்தவனின் தகுதியை, கார்த்திகை மாதம் முழுதும் புஷ்கரையில் தங்கியவன் பெறுகிறான்."
என்று தீர்த்த யாத்திரையின் பலன்களை பீஷ்மருக்கு சொன்னார்.

புலஹர், புலஸ்திய ரிஷியின் பரம்பரையில் வந்த அனைவரும் பாக்கியவான்கள்.

"தேவர்களை, ரிஷிகளை, மக்களை ஸ்ருஷ்டி செய்யும் மகா சக்தி கொண்ட, ரிஷிகள் மூலமாக வந்தவர்கள் நாம்"
என்ற பெருமை நமக்கு வேண்டும்.

"அறிவு இல்லாத, முட்டாள் ஆதாம் ஏவாள் வழியில் வந்த முட்டாள்கள் நாங்கள்" என்று சொல்லிக்கொள்வதை விட ஒரு மனிதனுக்கு அவமானம் வேறு இருக்க முடியுமா..?

நம் ரிஷி பரம்பரையை தெரிந்து கொள்வோம்.
ரிஷிகளின் பெருமையை அறிவோம்.

இவர்களை போல, மேலும் பல ரிஷிகள், சாதுக்கள், மகாத்மாக்கள் இந்த பரம்பரையில் தோன்றி உள்ளனர்.

புலஸ்திய, புலஹ ரிஷிகளின் பெயர்களை ஸ்மரித்து கொண்டே,
'நான் இந்த ரிஷிகளின் கோத்திரத்தில் (வம்சத்தை) பிறந்தவன்'
என்று அபிவாதயே (self intro) சொல்வது ஹிந்துக்களுக்கு வழக்கம்.

இன்று பிராம்மண சமுதாயம் மட்டுமே, தான் எந்த ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் என்று தன்  அடையாளத்தை ஞாபகத்தில் வைத்து இருக்கிறார்கள்.

மற்ற சமுதாய மக்களும், ரிஷி பரம்பரையில் இருந்து வந்தவர்கள் தான்.

ஹிந்துக்கள் அனைவரும் தன் ரிஷி பரம்பரையை அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் எந்த ரிஷியின் பரம்பரையில் இருந்து வந்தோம்?
என்று தெரிந்து கொள்வது மிக அவசியம். கௌரவமும் கூட.


அந்த ரிஷிகளை பற்றி நன்கு தெரிந்து இருக்கவும் வேண்டும்.