Followers

Search Here...

Saturday 22 February 2020

பாசுரம் (அர்த்தம்) - அலங்கெழு தடக்கை ஆயன் - திருமங்கையாழ்வார் திருபுட்குழி, திருநீர்மலை, திருவிடந்தை பெருமாளை சேர்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற் கழியுமால் என் உள்ளம் என்னும்,
புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் !!
போதுமோ நீர்மலைக் கென்னும் !!
குலங்கெழு கொல்லி கோமள வல்லி
கொடியிடை நெடுமழைக் கண்ணி !
இலங்கெழில் தோளிக்
என் நினைந்து இருந்தாய்?
இடவெந்தை எந்தை பிரானே.
-- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)




இங்கு ஒரு திவ்ய தேசத்தோடு இன்னொரு திவ்ய தேசத்தை சேர்த்து கொண்டு பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

திருமங்கையாழ்வாரே  பரகால நாயகி என்ற பெண்ணாகி, தன் நாயகனான பெருமாளிடம் தீராத காதல் கொண்டு, தன் நாயகன் உகந்து இருக்கும் திவ்ய தேசங்களுக்கு சென்று தரிசிக்கலாமா என்று தன் தாயிடமே கேட்க துணிகிறாளாம்.
பெருமாளிடம் ஏற்பட்ட தீராத காதலால், இந்த பரகால நாயகிக்கு,
அவளுடைய காதலன் இருக்கும் இடம் கூட இனிக்கிறது.
அவளுடைய காதலன் இருக்கும் ஊர் கூட இனிக்கிறது.

ஆழ்வாருக்கு ஏற்பட்ட இதே அனுபவத்தை ஆண்டாளும் சொல்கிறாள் என்று பார்க்கிறோம்.

ஆண்டாள், பெருமாளிடம் காதல் கொண்டு, 'பெருமாளின் கோவில் வாசல் கதவில் கூட தனக்கு நேசம் உண்டு' என்று சொல்கிறாள்.
ஆண்டாள், திருப்பாவையில் "நிலைக் கதவம்" (கதவு) என்று வெறுமனே சொல்லாமல்,
"நேய நிலைக் கதவம்" (நேசமுள்ள கதவு) என்று குறிப்பிட்டு சொல்கிறாள் என்று கவனிக்கிறோம்.

பெருமாளின் சம்பந்தம், ஒரு ஜட பொருளின் மேல் ஏற்பட்டால் கூட, அதில் கூட நேசம் உண்டாகி விடுமாம் உண்மையான வைஷ்ணவனுக்கு.

"கோவிலை பூட்டி, பெருமாள் தரிசனம் இப்போது இல்லை" என்று சொன்னாலும்,
ஸ்ரீ ரங்கத்தில் உள்ள பக்தர்கள் "சரி.. கோவில் நடை திறந்த பிறகு பெருமாளை பார்த்து கொள்ளலாம்" என்று நகர மாட்டார்களாம்.
மாறாக,
பெருமாளுக்கு சம்பந்தப்பட்ட அந்த பூட்டிய கதவையே ஆசையோடு பார்த்துக்கொண்டு, அதன் அருகிலேயே உட்கார்ந்து இருப்பார்களாம் உண்மையான பக்தர்கள்.
இப்படிப்பட்ட வைஷ்ணவர்களுக்கு, பெருமாள் சம்பந்தப்பட்ட கதவு கூட "நேய நிலைக் கதவாக" தோன்றுமாம்.

பெருமாளிடம் பக்தி கொண்டவர்களுக்கு,
கோவில் கதவை பார்க்கும் போதே, இவர்களுக்கு ஒரு நேசம் உண்டாகுமாம்..
கோவில் கதவை பார்க்கும் போதே, இவர்களுக்கு பெருமாளின் நினைவே ஏற்படுத்துமாம்.

இப்படி காதல் கொண்டு நிற்கும் இந்த பரகால நாயகி (திருமங்கையாழ்வார்),
  • இப்பொழுது தன் நாயகன் எங்கு இருப்பார்?
  • திருபுட்குழியில் இருக்கிறாரோ?
  • அல்லது,
  • திருநீர்மலைக்கு சென்று இருக்கிறாரோ?
  • அங்கு சென்று கொஞ்சம் அவரை பார்க்கலாமா?
என்று தன் தாயிடமே துணிந்து வெட்கத்தை விட்டு கேட்கிறாளாம்.







இங்கு திருபுட்குழியை பற்றி சொல்லும் போது,
"புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்" என்று வர்ணிக்கிறார்.
இன்று கூட, திருபுட்குழி என்ற திவ்ய தேசம் வயல் சூழ்ந்து, தண்ணீர் நிறைந்த சோலையாக தான் இன்று வரை உள்ளது.

"புலங்கெழு பொருநீர்" என்ற சொல்லுக்கு 2 அர்த்தங்களை நமக்கு காட்டுகிறார் பெரியவாச்சான் பிள்ளை.

முதல் அர்த்தம்:
  • புலம் என்றால் வயல்
  • வயல்கள் நிறைந்து தண்ணீர் சூழ்ந்த, பசுஞ்சோலையாக இருக்கிறது "திருப்புட்குழி" என்று ஒரு அர்த்தம்.
விசேஷ அர்த்தம்:
  • புலம் என்றால் புலன் என்றும் அர்த்தம் உண்டு.
  • திருப்புட்குழியில் உள்ள விஜயராகவ பெருமாளை பார்த்தாலே, நமது 5 புலன்களும் புஷ்டியாகி ஆரோக்கியத்தை அள்ளி தரும் என்று இன்னொரு அர்த்தம்.
இந்த பரகால நாயகி, பெருமாளிடம் தனக்கு ஏற்பட்ட அடக்கமுடியாத காதலால், தன் அருகில் அவள் தாய் இருப்பதை அறிந்தும், பயப்படாமல் "கலப்பை போன்ற உறுதியான கைகளுடைய, யாதவ குலத்தில் உதித்த  என் நாயகன், தன்னுடைய சிவந்த உதட்டில் இலையினால் செய்யப்பட்ட சிறு ஊதுகுழல் கொண்டு நிற்க, 
இந்த காட்சி என் மனதை விட்டு அகலாமல், என் நெஞ்சம் அவர் நினைவாகவே இருக்கிறது. (அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற் கழியுமால் என் உள்ளம்).
 என் நாயகனை திருப்புட்குழி சென்று நான் காணலாமா? (புலங்கெழு பொருநீர்ப் புட்குழி)
திருநீர்மலை சென்று காணலாமா? (போதுமோ நீர்மலை)"
என்று தைரியமாக வெட்கத்தை விட்டு கேட்கிறாளாம்.

கூச்சத்தை விட்டு இந்த பரகால நாயகி கேட்கிறாள் என்பதால் "பாடும்" என்ற பதத்தை பயன்படுத்துகிறார் ஆழ்வார். - "புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்"

உலகம் என்ன நினைக்குமோ! என்ற கூச்சப்படாமல்,
பக்தன் பெருமாளிடம் தைரியமாக பக்தி செய்கிறான் என்பதையே இங்கு ஆழ்வார், தன்னை பரகால நாயகியாகவும், பெருமாளை நாயகனாகவும் ஆக்கிக்கொண்டு பாடுகிறார்.
ஸ்ரீ கிருஷ்ண அவதார சமயத்தில், ருக்மிணி தேவி 'சிசுபாலனுக்கு தன் அண்ணன் ருக்மி, தன்னை மணம் செய்து கொடுக்க முயற்சிக்கிறான்' என்றதும், பெரும் தாபத்தை அடைந்த ருக்மிணி, வெட்கத்தை விட்டு, துணிந்து ஸ்ரீ கிருஷ்ணருக்கு "காதல் கடிதம்" கொடுத்து அனுப்பி விட்டாள் என்று பார்க்கிறோம்.
ஸ்ரீ கிருஷ்ணர் "என்ன இப்படி தைரியமாக எழுதி இருக்கிறாளே ருக்மிணி?" என்று தன்னை தவறாக நினைத்து விடுவாரோ என்று, அவளே "மணந்தால் உங்களை தான் மணப்பேன் என்று எனக்கு ஏற்பட்ட தவிப்பால் தான் இப்படி துணிந்து எழுதி விட்டேனே தவிர, ருக்மிணி இப்படி வேறு ஒரு புருஷனுக்கு வெட்கத்தை விட்டு கடிதம் எழுதுவாளோ என்று கூட நினைத்து விட வேண்டாம்"
என்று தன் தாபத்தின் காரணத்தை சொல்கிறாள்.

பரகால நாயகி, தன் தாயிடத்தில் வெட்கத்தை விட்டு,
"தன் நாயகனை பார்க்க, திருப்புட்குழி போகட்டுமா? 
திருநீர்மலை போகட்டுமா?" என்று கேட்க,

இப்படி வெட்கத்தை விட்டு, தாயான தன்னிடமே "தன் காதலனிடம் செல்லலாமா?" என்று கேட்க,
தன் மகள் பரகால நாயகி (திருமங்கை ஆழ்வார்) படும் தாபத்தை  கண்டு, அவள் தாயே, தன் மகளுக்காக திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமானிடம் சென்று முறையிடுகிறாள்.

திருமங்கைஆழ்வார், தன்னையே தாயாகவும் மகளாகவும் பாவித்துக் கொண்டு,
மகள் படும் பாட்டைத் தாய் முறையிடுவது போல எம்பெருமானிடம்
முறையிடுகிறார்
"எம்பெருமானே! 
என் மகள் உங்கள் மீது காதல் பித்துப் பிடித்து அலைகிறாள். 
அழகு பொருந்திய தடக்கைகள் (தோள்) கொண்ட ஆயனாக வந்த கண்ணபிரானின் ஆம்பல் நிற வாயைச் சுவைக்கவே என்னுள்ளம் அழிகிறதென்கிறாள். 
திவ்ய தேசத்து எம்பெருமானின் பேரழகையெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்கிறாள். 
பல திவ்ய தேசத்து எம்பெருமான்களை நினைத்துப் பார்க்கிறாள். 
திடீரென அவளுக்கு புட்குழியெம்பெருமானின் நினைவு வருகிறது. 
திருப்புட்குழி எம்பெருமானை வாயாரப் பாடுகிறாள்! 
அக்கணமே, 
திருநீர் மலை எம்பெருமானின் நினைவு வருகிறது. 
திருநீர்மலைக்குப் போக மாட்டேனோ? என்று பொருமுகிறாள். 

கொல்லிமலைப்பாவை போன்றல்லவா இவள் இருக்கிறாள். 
கோமள வதனமும், கொடியிடையும், மழைமேகம்
போன்ற கூந்தலில் அழகிய மலர்களைச் சூடி, எழில்கொஞ்சும் தோள்களைக்
கொண்டு கொல்லியம் பாவை போன்ற பேரழகுபொருந்திய இவள் பொருட்டு,
நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?"என்று தன் மகள் பொருட்டு தாயொருத்தி கேட்பது போல் திருமங்கை ஆழ்வார்  கேட்டு மங்களாசாசனம் செய்கிறார்.




நாராயணன் மட்டுமே ஆண். 
அவர் முன் நாம் அனைவருமே பெண் தான்.

ஒரு பெண்ணுக்கு எப்படி பிறந்து வீடு, புகுந்த வீடு உண்டோ,
அது போல,
நமக்கு புகுந்த வீடு, வைகுண்டமே!
நமது நாதன் நாராயணனே! 

இங்கு, பரகால நாயகி என்ற பெண்ணாக ஆகி, ஆழ்வார், "நாராயணனை அடைவதே நமக்கு லட்சியமாக இருக்க்க வேண்டும்" என்று காட்டுகிறார்.

நமது பக்தியின் நிலையை கண்டு, தாயை போல ஒரு ஆத்ம குரு வந்து, நமக்காக பெருமாளிடம் பிரார்த்தித்து பெருமாளிடம் நம்மை சேர்கிறார் என்று காட்டுகிறார்.

மூன்று பக்தி நிலைகள் என்ன? என்று தெரிந்து கொள்ள...





Friday 14 February 2020

பாசுரம் (அர்த்தம்) - அத்தியூரான் புள்ளையூர்வான் - பூதத்தாழ்வார் காஞ்சி அத்திவரதரை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அத்தியூரான்! 
புள்ளையூர்வான்!
அணிமணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான்!
முத்தீ மறையாவான்!
மாகடல் நஞ்சுண்டான்றனக்கும் இறையாவான்!
எங்கள் பிரான்!
-- இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாழ்வார்)
காஞ்சி அத்திவரதரை, 'பூதத்தாழ்வார் மங்களாசாசனம்' செய்து பாடுகிறார்.




கஜேந்திரன் (ஹஸ்தி) என்ற யானையின் சரீரமே மலையாகி, அந்த சிறு மலையில் (கிரி) வீற்று இருக்கும், அத்திவரத பெருமாளே!  - (அத்தியூரான்)

கருட வாகனத்தில் வருபவரே! - (புள்ளையூர்வான்)

தொடுத்து வைத்தது போல மாணிக்கங்கள் ஆயிரம் தலைகளிலும் ஜொலிக்க, படமெடுக்கும் ஆதிசேஷன் மேல், துயில் கொண்டிருக்கும் பெருமாளே! - (அணிமணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான்)
என்று பெருமாளை கூப்பிடுகிறார் பூதத்தாழ்வார்.

அடுத்து "முத்தீ மறை ஆவான்" என்று கூப்பிடுகிறார் ஆழ்வார்.
'முத்தீ' என்ற பதத்துக்கு, 2 அர்த்தங்களை சொல்கிறார், சேங்கனூரில் அவதரித்த  ஆச்சாரியார் பெரியவாச்சான் பிள்ளை.
முதல் அர்த்தம் : மூன்று தீ (முத்தீ)
இரண்டாவது அர்த்தம் : முக்தி/மோக்ஷம் (முத்தீ)
வேதத்தை, தமிழில் 'மறை' என்று சொல்கிறார்கள்.
காரணம்,
வாக்குக்கு எட்டாத பரப்ரம்மத்தை பற்றி நேரிடையாக பேச, வேதமே தயங்குவதால், பரப்ரம்மமான நாராயணனை மறைத்து மறைத்து பேசுகிறது.
இப்படி மறைத்து பேசுவதாலேயே, தமிழர்கள், வேதத்தை அழகாக "மறை நூல்" என்று சொல்கிறார்கள்.




வேதத்தை பற்றிய ஆழ்ந்த அறிவு உடையவர்களாக தமிழர்கள் இருந்ததால் தானே, வேதத்துக்கு ஈடான தமிழ் சொல்லை பயன்படுத்தினர் என்று பார்க்கிறோம்.

வேதம் வெளியோட்டமாக 'இந்திரன், வருணன், அக்னி' என்று சொல்லி ஸ்துதி செய்கிறது.
அஞானி, வேதம் பல தெய்வங்களை சொல்கிறது என்று நினைக்கிறான்.
இந்திரன் என்ற தேவனை நினைக்கிறான்.
அக்னி என்ற தேவனை நினைக்கிறான்.

வெளிப்படையாக வேறு அர்த்தத்தை காட்டும் வேதம்,
வாக்கும் எட்டாத பரப்ரம்மமான நாராயணனை நேரிடையாக ஸ்துதி செய்ய பயப்படுகிறது.
அதே சமயம்,
ஒரே பரமாத்மாவை தான் இப்படி பல வித பெயர்களை கொண்டு அழைக்கிறேன் என்றும் வேதமே சொல்கிறது.

'இந்திராய ஸ்வாஹா' என்று சொல்லும் போது, உண்மையில் வேதம், இந்திர பதவியில் உள்ள தேவனை குறிப்பிடவில்லை.
மாறாக,
அந்த விராட் புருஷனான பரமாத்மாவின் கைகளே 'இந்திரன்' என்று பூஜிக்கிறது.
'சோமாய ஸ்வாஹா' என்று சொல்லும் போது, பெருமாளின் இதயத்தை பூஜிக்கிறது.

இப்படி வேத மந்திரங்கள் அனைத்துமே, நாராயணனுக்கு ஒரு அங்க பூஜையாக தான் இருக்கிறது என்ற ரகசியத்தை ஞானிகளே அறிந்து கொள்கிறார்கள்.

ஆதலால் தான்,
வேதம், அஞானிக்கு கர்ம காண்டமாகவும், 
வேதம், ஞானிக்கு ஞான காண்டமாகவும் தெரிகிறது.

வெளியோட்டமாக பார்த்தால்,
வேதம் 'யாகம் செய்! யோகம் செய்!' என்று கர்ம காண்டம் போல தெரியும்.
அதே வேதம்,
ஞானிகளுக்கு பிரம்மமாகிய பரமாத்மாவை அடைய வழிகாட்டுவதாக தோன்றுகிறது.
"மூத்தீ மறையாவான்" என்ற சொல்லுக்கு முதல் அர்த்தம்:

  • மூன்று அக்னி (முத்தீ) (லௌகீகாக்னி, ஒளபாசனாக்னி, ஸ்ரௌதாக்னி) வளர்த்து, கர்ம காண்டமாக யாகம் செய்து, வேதங்களால் யஞ்ய நாராயணனனாக புகழப்படும் பெருமாளே! என்பது சாமானிய அர்த்தம்.





"மூத்தீ மறையாவான்" என்ற சொல்லுக்கு இன்னொரு அர்த்தம்:

  • வேதமே (மறை), உண்மையில் நாராயணனுக்கு செய்யும் அங்க பூஜை தான். சகல தேவதைகளும் அவர் அங்கங்களே! இந்த ஞானத்தோடு வேதத்தை உச்சரித்தாலேயே, வேதத்தை கேட்டாலேயே, அதன் பலனாக நமக்கு மோக்ஷத்தை (முக்தி) கொடுக்கும் பெருமாளே!! என்பது மற்றொரு அர்த்தம்.


ப்ரம்ம தேவன் போன்ற ஞானிகளும், வேத மந்திரங்களை நாராயணின் அங்க பூஜையாக செய்து, மோக்ஷம் அடைகின்றனர் - (மூத்தீ மறையாவான்).
உலக ஆசைகள் உள்ள சாமானிய ஜனங்களும், வேத மந்திரங்கள் சொல்லி மூன்று காலங்களில் யாக தீ வளர்த்து உம்மையே பூஜிக்கின்றனர் - (மூத்தீ மறையாவான்)
என்று பூதத்தாழ்வார், அத்தி வரதரை மங்களாசாஸனம் செய்கிறார்.  
விஷ்ணுவின் பரத்துவத்தை அறிந்தவரும், 
எப்பொழுதும் தாரக மந்திரம் (ராம) ஜபிப்பவரும், 
ஞான ஸ்வரூபனும்,
பாற்கடலிலிருந்து கிடைத்த நஞ்சினை உண்ட சிவபெருமானுக்கு, அந்தர்யாமியாக இருக்கும் எம்பெருமான், 
அத்திகிரியில் எழந்தருளியிருக்கிறாரே!! 
(மாகடல் நஞ்சுண்டான்றனக்கும் இறையாவான் எங்கள் பிரான்)
என்று, காஞ்சி வரதராஜ பெருமாளை, மங்களாசாசனம் செய்கிறார் பூதத்தாழ்வார்.


பாசுரம் (அர்த்தம்) - இசைந்த அரவமும், வெற்பும், கடலும் - பேயாழ்வார் சொன்ன வண்ணம் செய்த பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இசைந்த அரவமும், வெற்பும், கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப!
அசைந்து கடைந்த வருத்தமோ?
கச்சி வெஃ காவில் கிடந்திருந்து
நின்றதுவும் அங்கு?
--  மூன்றாம் திருவந்தாதி (பேயாழ்வார்) 
'தன் பர்த்தாவான "ப்ரம்ம தேவனின்" யாகத்தை அழிக்க, 
நதி ரூபமாக அதி வேகத்துடன் வந்த வேகவதியை (சரஸ்வதி தேவி) தடுப்பதற்காக, 
பெருமாளே ஒரு பெரிய அணை போல, காஞ்சியில் உள்ள திருவெஃ காவில், படுத்துக்கொண்டார்' 
என்பது புராண காலத்தில் நடந்த சரித்திரம்.







இந்த பெருமாளுக்கு தான் "யதோத்தகாரி" என்றும் "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" என்று பெயர்.
காஞ்சியில் உள்ள இந்த திவ்ய தேசத்துக்கு "திருவெஃ கா" என்று பெயர்.
'பெருமாள் இங்கு அணை போல படுத்துக்கொண்டது, வேகவதியை தடுப்பதற்காக தான்' என்ற போதிலும்,
'பெருமாள் படுத்துக்கொண்டதற்கான காரணம் வேறோ?'
என்று கேட்கிறார் பேயாழ்வார்.
பெருமாளை பார்த்து கேட்கிறார்,
"முன்பு ஒரு சமயம், 
பாற்கடலை கடைந்து தேவர்கள் அம்ருதம் எடுத்து கொள்ள, 
பாற்கடலை கடைவதற்கு, 
தகுதியான (இசைந்த) மந்திர மலையையே (வெற்பும்) மத்தாக ஆக்கி, 
தகுதியான (இசைந்த) வாசுகி என்ற பாம்பையே (அரவமும்) கயிறாக்கி, 
நீங்களே க்ஷீராப்தியில் கடைந்தீர்களே (பசைந்து)

தேவர்களுக்காக நீங்களே அம்ருதம் கடைந்தீர்களே ! 
விஷம் வந்ததும், தேவர்களும், அசுரர்களும் பாதியில் விட்டு விட்டு ஓடிய பிறகும், அந்த வாசுகியின்  தலையையும், வாலையும் பற்றி கொண்டு, நீரே கடைந்தீரே ! 

ஆயிரம் தலைகளுடன் நீரே அந்த மலையின் கொடு முடியை பிடித்துக்கொண்டு இருந்தீரே ! 

முதுகை கொடுத்து மலையை நீரே கிளப்பி கொண்டு, தாங்கி கொண்டு இருந்தீரே !
அவ்வளவும் நீரே செய்து விட்டு, 
கடைசியில் கிடைத்த அம்ருதத்தை ((அங்கு அமுது படுப்ப) அப்படியே அவர்களுக்கு கொடுத்து விட்டு, 
அங்கு க்ஷீராப்தியில் ஓய்வில்லாமல் நின்று வேலை செய்ததால் (நின்றதுவும் அங்கு) ஏற்பட்ட களைப்பினால், 
காஞ்சியில் உள்ள இந்த திரு வெஃகாவில் வந்து இளைப்பாறுகிறீரோ? (அசைந்து கடைந்த வருத்தமோ)"
என்று பேயாழ்வார், திருவெஃகாவில் உள்ள யதோத்தகாரி பெருமாளை பார்த்து கேட்பது போல, நமக்கு பாசுரத்தை தருகிறார்.
திருவெஃகாவில் உள்ள யதோத்தகாரி என்ற சொன்ன வண்ணம் செய்த பெருமாள், காஞ்சி வரதராஜனுக்கும் (அத்தி வரதர்) முன்பே தோன்றிய அர்ச்சா அவதாரம். 

அருமையான பாசுரம்.
திவ்ய தேசத்தில் நாம் பாடவேண்டிய பாசுரம்.






Thursday 13 February 2020

மஹாலக்ஷ்மி யாரிடம் தங்குவாள்? யாரை விட்டு விலகுவாள்? தெரிந்து கொள்வோமே...

ஸ்ரீ கிருஷ்ணர், துவாரகை என்ற ஆச்சரியமான நகரத்தை உருவாக்கி, ராஜ்யம் செய்து கொண்டிருந்தார்.
சத்யபாமாவுக்கு, அவள் அரண்மனையில் செல்வங்கள் கொட்டி இருந்தாலும், 'போதவில்லையே!' என்று எப்பொழுதும் குறைப்பட்டு கொண்டாள்.
"இன்னும் கொஞ்சம் செல்வம் சேர்ந்தால் நன்றாக இருக்குமே!!" என்று கூட தோன்றியது.




சாஷாத் நாராயணனின் அவதாரமான கிருஷ்ணனுக்கு மனைவியாக இருந்தும், 
பெரிய அரண்மனையில் இருந்தும், 
'சத்யபாமா' இப்படி குறைபட்டு கொண்டாள்.
மஹாலக்ஷ்மியே ருக்மிணி தேவியாக அவதரித்து இருந்தும்,
'ருக்மிணி அனுக்கிரகம் தனக்கு வேண்டாம்' என்று நினைத்தாள்.

'ருக்மிணியின் அரண்மனையில் செல்வங்கள் நிறைந்து இருப்பது போல, தன்னிடம் இல்லையே!!'
என்று அசூயைபட்டாள் சத்யபாமா.
ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து, "மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாள்.

சத்யபாமாவிடம் கிருஷ்ணரும்,
"சரி, அப்படியென்றால் மஹாலக்ஷ்மியை ஸ்தோத்திரம் செய்து அவள் கடாக்ஷம் பெறுவோம்"
என்று, பரப்ரம்மமாகிய ஸ்ரீ கிருஷ்ணரே, க்ஷீராப்தியில் இருக்கும் மஹாலக்ஷ்மியை ஸ்தோத்திரம் செய்து தரிசனம் தர பிரார்த்தித்தார்.

கிருஷ்ண பரமாத்மா கூப்பிட்டும், மஹாலக்ஷ்மி வராமல் இருப்பாளா?...

தாமரை பூவின் மேல் அமர்ந்தபடி, இரண்டு கைகளிலும் தாமரை மலரை வைத்துக்கொண்டு,
மஹாலட்சுமி காட்சி தந்தாள்.
சாமானிய மனிதனை போல லட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி விட்டு, கிருஷ்ண பரமாத்மா, ச்ரத்தையுடன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நிற்க... சத்யபாமாவும் ஸ்ரீகிருஷ்ணருடன் சேர்ந்து வணங்கினாள்.

ஸ்ரீ கிருஷ்ணர் நாராயணனின் அவதாரம் தானே!!
அவரின் பத்னி தானே மஹாலக்ஷ்மி!!
மஹாலக்ஷ்மிக்கு ஸ்ரீ கிருஷ்ணர் நாராயணன் என்று தெரியாதா?
கிருஷ்ண பரமாத்மா, எதற்கு வணங்கினார்?... என்ற கேள்வி நமக்கு எழலாம்.

ஒரு சமயம் அர்ஜுனனை வைகுண்டமே அழைத்து கொண்டு சென்று விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.
பரவாசுதேவன் நாராயணனை, ஸ்ரீ கிருஷ்ணர் நமஸ்கரித்தார்.
ஏன் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னையே நமஸ்கரித்தார்? 
ஸ்ரீ கிருஷ்ணர் நமஸ்கரிக்கவில்லையென்றால், தனக்கு பின்னால் நிற்கும் அர்ஜுனன் மரம் போல நிற்பான் என்று, தானே நமஸ்கரிக்க, அர்ஜுனனும் பரவாசுதேவனை நமஸ்கரித்தான்.

ராமபிரான், தன் அர்ச்ச அவதாரமான ஸ்ரீரங்கநாதரை வணங்கியதும் இதன் காரணமே...

நாம் அவரிடம் எப்படி பழக வேண்டும்? என்பதையும் தானே காட்டுகிறார்.

அதுபோல, இப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணர், மஹாலக்ஷ்மியை பார்த்து கை குவித்துக்கொண்டு,
"அம்மா.... நீ ஒரு இடத்தில் ஸ்திரமாக இருக்கமாட்டேன் என்று இருக்கிறாயே!!
திடீரென ஒருவனை கோடீஸ்வரனாக செய்துவிடுகிறாய்..
திடீரென ஒருவனை தரித்திரனாக செய்துவிடுகிறாய்...
ஒரு இடத்தில் இல்லாமல் ஓடி ஓடி போய் விடுகிறாயே!!
ஒரே இடத்தில் ஸ்திரமாக நீ இருக்க கூடாதா?"
என்று கிருஷ்ண பரமாத்மா கேட்க,

உடனே ஸ்ரீதேவி சொல்கிறாள்,
"நான் ஒருவனிடம் வருவதற்கு காரணம் இருக்கிறது..
எதற்காக நான் ஒருவனிடம் வருகிறேன் என்று சொல்கிறேன்..

நான் வந்தால், 'தான தர்மம் செய்வானே!' என்பதற்காக வருகிறேன்.
இப்படி ஆசையோடு நான் வந்த பிறகு, இவன் என்ன செய்கிறான் தெரியுமா?




முதலிலாவது கொஞ்சம் தான தர்மம் செய்து கொண்டிருந்தவன்,
நான் செல்வங்களை அள்ளி கொடுத்த பின், கொஞ்சம் செய்து கொண்டிருந்த தான தர்மத்தையும் விட்டு விடுகிறான்.
அது மட்டுமல்ல, 
என் கடாக்ஷத்தால் கிடைக்கும் செல்வங்களை கொண்டு,
எவர்கள்  'சூதாடு'கிறார்களோ!
எவர்கள்  'மது பானம்' அருந்துகிறார்களோ!
எவர்கள்  'ஜீவ ஹிம்சை' செய்கிறார்களோ!
இவர்கள் வீட்டில் நான் தங்குவதில் எனக்கு பிரியமில்லை.
மேலும்,
எவன் 'வேசி வீட்டுக்கு' செல்கிறானோ!
எவர்கள் 'பொய் சாட்சி' சொல்கிறார்களோ!
எவர்கள் 'பேராசையுடன்' இருக்கிறார்களோ!
எவர்கள் 'லோபியாக' (கஞ்சன்) இருக்கிறார்களோ!
இவர்களிடத்தில் நான் இருப்பதை விரும்ப மாட்டேன்.




மேலும்,
எவர்கள் பிறருடைய சொத்தை அபகரிக்க நீதிமன்றத்திலேயே நேரத்தை செலவழிக்கிறார்களோ!
எவர்கள் மற்றவர்களை பார்த்து அசூயை (பொறாமை) படுகிறார்களோ!
அவர்களிடத்திலும் நான் இருப்பதை விரும்பாமல் சென்று விடுவேன்.
மேலும்,
எவர்கள் பிறருடைய ஏழ்மையை பார்த்து சந்தோஷப்படுகிறார்களோ!
எவர்கள் தன்னிடம் உள்ள செல்வங்களை நினைத்து கர்வப்பட்டு கொள்கிறார்களோ!
எவர்கள் தற்புகழ்ச்சியே செய்து கொள்கிறார்களோ!
அவர்களிடத்தில் இருந்தும் நான் சென்று விடுகிறேன்.

தானம் வாங்க தகுதி இல்லாதவனுக்கு யார் அள்ளி கொடுகிறார்களோ!
யாருக்கு தானம் கொடுப்பது நியாயமோ அவர்களுக்கு தானம் கொடுக்காமல் யார் தள்ளுகிறார்களோ!
சாதுக்கள், மகாத்மாக்கள் விஷயத்தில் யார் தர்மம் செய்யவில்லையோ!
தெய்வங்கள் விஷயத்தில் யார் தர்மம் செய்யவில்லையோ!
தர்மங்கள் விஷயத்தில் யார் தர்மம் செய்யவில்லையோ!
அவர்கள் வீட்டில் நான் தங்குவதில்லை.

மேலும்,
எவர்கள் சோம்பேறிகளோ!
எவர்கள் நாதீகர்களோ!
எவர்கள் தன் ஆசாரத்தை, தர்மத்தை செய்வதில்லையோ!
அவர்கள் வீட்டில் நான் தங்குவதில்லை.
மேலும்,
விசேஷமாக சொல்கிறேன்...
யார் விஷ்ணுவிடம் குறிப்பாக த்வேஷம் காட்டுகிறார்களோ!
யார் விஷ்ணுவின் அடியார்களை கிண்டல், கேலி என்று த்வேஷிக்கிறார்களோ!
அவர்களை விட்டு உடனேயே விலகி விடுவேன்."
என்று மஹாலக்ஷ்மி சொன்னாள்.
செல்வமே இல்லாமல், ஏழையாக இருந்தும், மஹாலக்ஷ்மி சாநித்யம் இருந்ததால், குசேலன் ஏழ்மை நிலையிலும் ஒரு குறையும் தோன்றாமல், நிம்மதியாக இருந்தார்.




சத்யபாமா "ருக்மிணி கடாக்ஷம் வேண்டாம்' என்று நினைத்ததால், 
செல்வம் குவிந்து கிடந்தும், ஸ்ரீ கிருஷ்ணரே கணவனாக அமைந்தும், போதவில்லையே என்ற மனகுறையுடன் இருந்தாள் சத்யபாமா.
இது மஹாபாரதத்தில் நடந்த சம்பவம்.

சத்யபாமா "ருக்மிணி கடாக்ஷம் வேண்டாம்' என்று நினைத்ததால், விஷ்ணுவின் பக்தையை வெறுத்ததால், சத்யபாமாவுக்கே இப்படி மனக்குறை ஏற்பட்டது என்று கவனிக்க வேண்டும்.

மஹாலக்ஷ்மி தாயார் இப்படி சொல்ல, ஸ்ரீ கிருஷ்ணர் பேசினார்..
"அம்மா... நீ இப்பொழுது என்ன காரணத்தால் நீ ஒருவன் வீட்டில் நிலையாக இருப்பதில்லை என்று சொன்னாய்.
இனி,
நீ எந்த வீட்டில் ஸ்திரமாக இருப்பாய் என்றும் சொல்ல வேண்டும்"
என்று கிருஷ்ண பரமாத்மா கேட்க,
மஹாலக்ஷ்மி சொல்ல ஆரம்பித்தாள்...
"எவனிடத்தில் நன்னடத்தை இருக்கிறதோ!
எந்த வீட்டில் தான தர்மங்கள் நடக்கிறதோ!
எந்த வீட்டில் சாதுக்களுக்கு மரியாதை இருக்கிறதோ!
அந்த வீட்டில் நான் சாஸ்வதமாக இருப்பேன்.

எந்த வீடு பசுஞ்சாணியால் மெழுக்கப்பட்டு, வாசலில் அலங்காரமாக கோலங்கள் போட்டு, சுத்தமாக இருக்கிறதோ!
எந்த வீட்டில் துளசி செடியோ, வில்வ மரமோ இருக்கிறதோ!
அந்த வீட்டில் நான் இருக்க ஆசைப்படுவேன்.

எந்த வீட்டில் சுமங்கலியான பெண்கள் நிறைய இருக்கிறார்களோ!
அந்த சுமங்கலியாக இருக்கும் பெண்கள், எந்த வீட்டில் மாலை வேளையில் முத்து போல அழகான தீபம் ஏற்றி வைக்கிறார்களோ!
அந்த வீட்டில் நான் இருப்பேன்.
எந்த வீட்டில் பகவானை ஆராதனை செய்யும் மணி ஓசை தினமும் கேட்கிறதோ!
எந்த வீட்டில் என் பதியான விஷ்ணுவுக்கு பூஜை தினமும் நடக்கிறதோ!
எந்த வீட்டில் வைஷ்ணவனுக்கு அன்ன தானம் நடக்கிறதோ!
அந்த வீட்டில் நான் இருப்பேன்.
எந்த வீட்டில் வேத மந்திரங்கள் சொல்லப்படுகிறதோ!
எந்த வீட்டில் ஸ்தோத்திர பாடங்கள் நடக்கிறதோ!
எந்த வீட்டில் அங்கு உள்ளவர்கள் யாரிடத்திலும் விநயமாகவும், அன்புடனும் பழகுகிறார்களோ!
அந்த வீட்டில் நான் இருப்பேன்.

எந்த வீட்டில் இருப்பவர்கள் மற்ற சொந்தங்களை பார்த்து பொறாமை, அசூயை அடையாமல் இருக்கிறார்களோ!
எந்த வீட்டில் ஒருவருக்கு ஒருவர் ப்ரேமையுடன் (அன்புடன்) இருக்கிறார்களோ!
அந்த வீட்டில் நான் இருப்பேன்.

எந்த வீட்டில், ஒரே கூச்சலும், சண்டையும், துக்கமும், அழுகையும், ஒப்பாரியும் இருக்கிறதோ!
அந்த வீட்டில் எனக்கு இருக்க பிடிக்காது. உடனேயே சென்று விடுவேன்.

சுருக்கமாக சொல்கிறேன்...
எந்த வீட்டில் தினசரி விஷ்ணு பூஜை நடக்கிறதோ!
அந்த வீட்டில் நான் மிகவும் சமதோஷமாக வாசம் செய்கிறேன்"
என்று மஹாலக்ஷ்மி சொல்லி அணுகரஹம் செய்து விட்டு மறைந்தாள்.




"மஹாலக்ஷ்மி யாரிடம் தங்குவாள்? யாரை விட்டு விலகுவாள்?"
என்பதை, மஹாலக்ஷ்மியின் திருவாயாலேயே, கிருஷ்ணரும், சத்யபாமாவும் கேட்ட பின்,
ஸ்ரீ கிருஷ்ணர், சத்யபாமாவை பார்த்து,
"கேட்டாயா சத்யபாமா! மஹாலக்ஷ்மி சொன்னது போல நாமும் நடக்க வேண்டும்.
அப்பொழுது தான் நமக்கும் நிறைந்த செல்வம் உண்டாகும்"
என்று உபதேசித்தார்.

சத்யபாமாவுக்கு, ருக்மிணி தேவி குறையே இல்லாமல் இருப்பதற்கு காரணம் புரிந்தது.
ருக்மிணியிடம் இருந்த பொறாமையை விலக்கி கொண்டாள், சத்யபாமா.


Wednesday 5 February 2020

பாசுரம் (அர்த்தம்) - தாயே தந்தை என்றும் - திருமங்கையாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருப்பதியில் ஸ்ரீனிவாசபெருமாள், 'நமக்காகவே எப்பொழுதும் நின்று கொண்டே காத்துக்கொண்டிருக்க',

நாமோ, "நேரம் கிடைக்கவில்லை, தலை போகிற காரியம் இருக்கிறது" என்று திருமலை போகாமல் இருப்பதற்கு, காரணங்கள் சொல்லி கொண்டு இருக்கிறோம்.




திருமலையப்பனிடம் கொஞ்சம் தலையை காண்பித்து விட்டு வந்தாலும், தலை போகும் காரியத்தையும் சாதிக்க வைத்துவிடுவாரே!!
தலையும் போகாமலும் காப்பாற்றி விடுவாரே பெருமாள் !!

அல்ப பலன் முதல் மோக்ஷம் வரை தர, சங்கல்பம் செய்து, அர்ச்ச அவதாரம் எடுத்த திருமலையப்பனை காண்பதை விட, வேறு என்ன சாதனை நாம் செய்ய வேண்டும்?

"வாழ்நாள் முழுவதும், ஏதேதோ காரணத்தை சொல்லிக்கொண்டே, கோவிலுக்கு போகாமல், பெருமாளை சரணம் அடையாமல் இருக்கும் நம்மை போன்றவர்கள்,
எதிர்பாராவிதமாக ஒரு நாள் திருமலையப்பனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டால், பெருமாளிடம் என்ன சொல்லி சரணாகதி செய்ய வேண்டும்?"
என்று திருமங்கையாழ்வாரே, பாசுரம் மூலமாக, நமக்கு சொல்லி தருகிறார்.

தாயே தந்தை என்றும்,
தாரமே, கிளை மக்கள் என்றும்,
நோயே பட்டு ஒழிந்தேன் !!
நுன்னை காண்பது ஓர் ஆசையினால்,
வேயேய் பூம்பொழில் சூழ்,
விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்து அடைந்தேன்,
நல்கி ஆள் என்னை கொண்டருளே !!
-- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)

நாம் பிறந்தநாளாக, நம்மை காண்பதற்கு, திருமலையில் அரச்சா திருமேனியுடன் ஸ்ரீனிவாச பெருமாள் காத்து கொண்டு இருக்கிறார்.

பல காரணங்கள் சொல்லி, வராமல் இருக்கும் நாம், ஒருநாள் திடீரென்று திருமலைக்கு வருமாறு நேர்ந்து விட,
பக்தன், 'ஏன் இத்தனை தாமதமாக வந்தேன் என்று பெருமாளிடம் பேசுவது போல' இந்த பாசுரத்தை திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

பெருமாள், பக்தனிடம்,
"நல்ல இளமையான பால்ய வயதிலேயே, உடம்பில் தெம்பு இருக்கும் போதே, திருமலை ஏறி வந்து இருக்கலாமே?"
என்று கேட்க,
பக்தன் உண்மையை சொன்னான்..
'பாசம் என்ற நோய் (மாயை) தன்னை தொற்றியதால், பெருமாளை பார்க்க இத்தனை வருடங்கள் ஆகி விட்டது' என்று சொல்லும்படியாக பாசுரம் அமைந்துள்ளது.

பெருமாளை பார்த்து,
"வாஸ்தவம் தான். இளமையான வயதிலேயே வந்திருக்கலாம்!!.
ஆனால்,
 எனக்கு வயதான அப்பா அம்மா.
நான் தான் அவர்களை பார்த்து கொள்ள வேண்டும்.
என் மனைவி ஒழுங்காக பார்த்து கொள்ள மாட்டாள்.




ஒரு சமயம், என் அப்பாவுக்கு உடம்பு முடியாமல் போய் விடும்.
ஒரு சமயம், என் அம்மாவுக்கு உடம்பு முடியாமல் போய் விடும்.
இப்படியே அந்த சமயங்களில், 
நான் திருப்பதி வர முடியாமல் போய் விட்டது.
பிறகு, 
பெற்றோர்கள் பரமபதம் அடைந்த பின், திருப்பதி கிளம்பலாம் என்றால், 'குடும்ப பொறுப்பு' வந்துவிட்டது.
குழந்தைகள், அம்மாவிடம் கூட போகாமல், "அப்பா.. அப்பா..." என்று எப்பொழுதும் என்னையே சுற்றி சுற்றி வருகின்றனர்.




நான் குழந்தைகளை பார்த்து கொள்ளவில்லையென்றால், என் மனைவி 'உங்களை கட்டிக்கொண்டு இப்படி மாரடிக்கிறேனே' என்று என்னை திட்டுகிறாள்.
இப்படிப்பட்ட நிலையில் நான் எப்படி திருப்பதி வருவது?

உங்களுக்கு நேரம் ஒதுக்கி உங்களை தரிசிக்க முடியாமல், எனக்கு ஏதாவது வியாதி வந்துகொண்டே இருக்கிறது.

அப்படி என்ன வியாதி உனக்கு என்று கேட்கிறீர்களா?? 
பிறந்தது முதல், 
அப்பா என்ற ஒரு வியாதி, 
அம்மா என்ற ஒரு வியாதி, 
மனைவி என்ற ஒரு வியாதி, 
பிள்ளைகள் என்று ஒரு வியாதி.
இப்படி பலவிதமான 'பாசம் என்ற வியாதிகளை' காரணம் சொல்லி சொல்லி, இப்பொழுது எனக்கு வயதும் ஆகிவிட்டது.
'திருமலை போகவேண்டும்' என்ற நினைவு மட்டும் எப்பொழுதும் இருக்கிறது.

'கடமையை செய்து முடிக்க வேண்டும்.
கடமையை செய்து முடிக்க வேண்டும்'
என்று சொல்லிக்கொண்டே இவ்வளவு நாள் காரணங்கள் சொல்லி உங்களிடமிருந்து தப்பித்தேன்.

உண்மையில் கடமை காரணமா?
என் பக்தி குறைவு காரணமா?
ஸ்ரீனிவாசா, உங்களுக்கு உண்மை தெரியுமே!!

'கடமை கடமை' என்ற போர்வை போர்த்திக்கொண்டு நான் உங்களை இது நாள் வரை ஏமாற்றினேன்.

இன்று, 
எல்லாவற்றையும் எப்படியோ விட்டு விட்டு, உங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையால், ஒரு வழியாக ஓடி வந்து விட்டேன்.
இங்கு வந்து, இந்த திருமலையை பார்த்தால், 
எத்தனை குளிர்ச்சியாக இருக்கிறது?
ஏழு மலைகளும் எத்தனை அழகாக இருக்கிறது?
இத்தனை ஆச்சர்யமான திருமலையில், ஒரு நாய் புகுந்து விட்டதே?

'நாய் புகுந்து விட்டதே!! சீ சீ.. ஓடு' 
என்று சொல்லி துரத்தி விடாமல், அந்த நாய்க்கும் கொஞ்சம் எச்சில் இலையை போடுவது போல, எப்படியோ திருமலைக்குள் புகுந்து விட்ட என்னையும், ஸ்ரீனிவாச பெருமாளே!! நீங்கள் அழைத்து அருள் செய்ய வேண்டும்."
என்கிறார் திருமங்கையாழ்வார்.

இதையே
திருவேங்கடவா
நாயேன் வந்து அடைந்தேன்,
நல்கி ஆள் என்னை கொண்டருளே !!
என்கிறார்.

பிறந்தது முதல் பெருமாள் பக்கமே போகாமல்,
தாய், தந்தை, மனைவி, மக்கள் என்று பலரிடம் பாசம் வைத்து,
ஒரு நாள் கூட,
நாராயணன் மீது பாசம் வைக்காமல்,
பெருமாள் கோவிலில் கூட கால் வைக்காமல் இருந்து விட்டு,
திடீரென்று ஒரு நாள்,
திருமலைக்கு வந்து 
"நாராயணா அருள் செய்ய வேண்டும் (நல்கி ஆள் என்னை கொண்டருளே)" என்று கேட்டால்,
"இது என்ன நியாயம்?!!
கொஞ்சம் கூட மதிக்காத இவனுக்கு ஏன் பெருமாள் அருள் செய்ய வேண்டும்?"




பெரியவாச்சான் பிள்ளை போன்ற ஆச்சாரியர்கள் இதற்கு விளக்கம் கொடுக்கும் போது,
"நமக்கு தாய் தந்தை மனைவி மக்கள் மேல் பாசம் என்ற நோய் உள்ளது போல,
பெருமாளுக்கு தன் அம்சமான 'ஜீவனிடம் அளவுகடந்த பாசம்' என்ற நோய் எப்பொழுதும் உண்டு.
பரமபதத்தை விட்டு, நாராயணன் திருமலைக்கு வந்து நிற்பதே, நம்மை எல்லாம் எப்படியாவது திருமலைக்கு வரச்செய்து, தன் தரிசனத்தை கொடுத்து, மோக்ஷம்  கொடுத்து அருள வேண்டும் என்பதற்காக தான்.

ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தை காட்டி, பல காரணங்கள் சொல்லி பெருமாளிடம் வராத ஜீவனையும், பெருமாள் உகப்புடன் ஏற்று அருள் செய்வார் என்று காட்டுகிறார்.

திருமலைக்கு சென்று பெருமாளை தரிசிப்போம்.