Followers

Search Here...

Sunday 30 January 2022

தாண்டகம் என்றால் என்ன? கலியன் என்றால் என்ன? திருமங்கையாழ்வார் பாடிய முதல் பாசுரம் எது? அறிந்து கொள்வோம்.

வடமொழியில் "தண்டகம்" என்ற ஒரு வகையான பாடும் (ஸ்தோத்திர) முறை உண்டு. 

அம்பாள் மேல் ஸ்யாமளா தண்டகம், மஹாலக்ஷ்மி மேல் கோமளா தண்டகம் என்று தண்டகங்கள் உள்ளன.


"தண்டவத் ப்ரணாமம்" என்ற சொல்லே "தண்டம் சமர்ப்பிக்கிறேன்' என்று தமிழில் சொல்லப்படுகிறது.


"தண்டகம்" என்ற வடசொல்லையே "தாண்டகம்" என்றும் "தண்டம்" என்றும் சொல்கிறோம்.


வைஷ்ணவர்கள் பெரியோர்களுக்கு கடிதம் எழுதும் போது, 'நமஸ்கரிக்கிறேன்' என்று எழுதாமல் "தேவரீர் திருவடியில் தண்டம் சமர்ப்பிக்கிறேன்" என்று எழுதுவார்கள்.


தண்டகம் என்றால் மரக்கட்டை என்று அர்த்தம்.

தன்னை ஒரு மரக்கட்டையாக பாவித்து, பெரியவர்கள் காலில் விழுவதால், "தண்டம் சமர்ப்பிக்கிறேன்"  என்று சொல்வார்கள்.

சந்யாசிகளும் தங்கள் கைகளில் "தண்டம்" வைத்து கொண்டிருகிறார்கள். 


ஸ்ரீமத் பாகவதத்தில், அக்ரூரர், பகவான் அவதாரம் செய்து இருக்கிறார் என்று அறிந்ததால், ஆர்வத்தோடு பிருந்தாவனம் வந்த போது, பலராமரோடு கிருஷ்ணரை பார்த்தபோது, மரக்கட்டை போல இருவருடைய கால்களிலும் விழுந்து விட்டார்.

रथात् तूर्णम् अवप्लुत्य स:

अक्रूर: स्‍नेह विह्वल: ।

पपात चरण उपान्ते

दण्डवद् राम-कृष्णयो: ॥

திருமங்கையாழ்வார் திருகுறுந்தாண்டாகம், திருநெடுந்தாண்டாகம் இயற்றி,  பெருமாளின் திருவடியில் தன்னையே தண்டம் போல சமர்பிக்கிறார். 


'நீலன்' என்ற பெயர் கொண்ட இவர், திருவாலி என்ற தேசத்தை சிற்றரசனாக ஆட்சி செய்து வந்தார்.

ஒரு சமயம், குமுதவல்லி என்ற பெண்ணை கண்டு மணந்து கொள்ள ஆசைப்பட்டார்.


அந்த பெண்ணோ, இவர் சம்ஸ்காரம் செய்து கொண்டு வைஷ்ணவனாக ஆக வேண்டும், தினமும் 1000 வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தாள்.

இதை ஏற்று கொண்ட மணந்து கொண்ட திருமங்கை மன்னன், திருநரையூர் எம்பெருமானிடம் வைஷ்ணவனாக சம்ஸ்காரம் பெற்றார்.


பூம்புகார் செல்லும் வழியில், திருமங்கைமடம் என்ற இடத்தில், தினமும் 1000 வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்து வந்த இவர், சொத்தையெல்லாம் இழந்து விட்டார்.


இருந்தாலும் அன்னதானம் செய்வதில் பெரும் ஆர்வம் கொண்டார். 

"அன்னதானம் எந்த காரணம் கொண்டும் நிற்க கூடாது" என்று நினைத்தார்.


ஒரு நிலையில், "கொள்ளை அடித்தாவது அன்னதானம் செய்தே ஆக வேண்டும்" என்று இறங்கி விட்டார். 


இவரை ஆட்கொள்ள நினைத்த வயலாலி மணவாளன், தானே பிராம்மண பையனாக, தாயாரோடு, புது மண தம்பதிகளாக நகைகளை அணிந்து கொண்டு, இவர் சஞ்சரிக்கும் இடமான வேதராஜபுரத்திற்கு வந்தார்கள். 

இவர்கள் அணிந்து இருக்கும் நகைகளை பார்த்த திருமங்கை மன்னன், இவர்களை வழிமறித்து, அனைத்து நகைகளையும் கழட்ட சொல்லி மிரட்டி, ஒரு பெரிய மூட்டையாக கட்டி கொண்டார்.


மிகவும் பலசாலியான இவரால், தான் கட்டிய நகை மூட்டையை தூக்க முடியவில்லை.


அருகில் நின்று கொண்டிருந்த இந்த பிராம்மணன் சிரிக்க, 'இவர் ஏதோ மந்திரம் சொல்லி, இந்த மாயம் செய்கிறார்' என்று நினைத்தார் பரகாலன்.


எவ்வளவு முறை முயன்றும், மூட்டையை தூக்க முடியாமல் போக, உடனே கோபத்தோடு, வாளை உருவி, "ப்ராம்மணரே! நீர் ஏதோ மந்திரம் ஜெபித்து தான் இந்த மாயாஜாலம் செய்கிறீர்கள் என்று அறிகிறேன். உங்களை பார்த்தால், இப்பொழுது தான் மணமாகி இருக்கிறது என்று தெரிகிறது.

இந்த நிலையில் உங்கள் நகைகளை எடுத்து கொள்ள நான் விரும்பவில்லை. சீதனமாக நானே தருகிறேன் எடுத்து கொண்டு செல்லும். ஆனால், நீர் எந்த மந்திரத்தை சொல்லி இந்த மாயம் செய்தீரோ அந்த மந்திரத்தை எனக்கு சொல்லி கொடுத்து விட்டு, பிறகு எடுத்து கொள்ளும்" என்றார்.


அந்த பிராம்மணனோ, "நகையும் உனக்கு கிடையாது. மந்திரமும் கிடையாது" என்றார்.

உடனே வாள் எடுத்து மிரட்டினார். மசியவில்லை அந்த பிராம்மணன்.


மரியாதையோடு, சேவை புத்தியோடு பிறகு கேட்க, ப்ராம்மணனாக வந்த வயலாலி மணவாளன், அவருக்கு திருவஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார். 

இப்படி பெருமாளே, பரகாலனை தடுத்தாட்கொண்டதும், தன் நிஜ ஸ்வரூபம் என்ன? என்று ரகசியத்தை அறிந்து கொண்டார். 

உடனே, 'வாடினேன் வாடி வருந்தினேன்..."என்று முதல் பாசுரத்தை பாட ஆரம்பிக்கிறார்.

முதல் பாசுரத்தை முடிக்கும் போது, திருமங்கையாழ்வார், "கண்டு கொண்டேன் நாராயணன் என்னும் நாமம்' என்று பாடுகிறார். 

திருமங்கையாழ்வார் முதன்முதலாக 'பெரிய திருமொழி' தான் பாடினார் என்பது 'கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமத்தை' என்ற வாக்கியத்தை கொண்டே அறிய முடிகிறது.

வாடினேன் 

வாடி வருந்தினேன் 

மனத்தால்

பெருந்துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன் 

கூடி இளையவர் தம்மோடு

அவர் தரும் கலவியே கருதி ஓடினேன்

ஓடி உய்வதோர் பொருளால்

உணர்வெனும் பெரும் பதம் திரிந்து நாடினேன் 

நாடி நான் கண்டுகொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

- பெரிய திருமொழி.


'சம்சார சக்கரத்தில் உழன்று, சிற்றின்பத்தில் விழுந்திருந்த நான், உய்வதற்கு பெரும் பதம் எங்கு கிடைக்கும் என்று தேடி திரிந்தேன். வயலாலி மணவாளா! உங்கள் கருணையால் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமத்தை' என்று சொல்லி முதல் பாசுரத்தை பாடுகிறார்.

வயலாலி மணவாளனை சாக்ஷாத்காரம் செய்த திருமங்கையாழ்வார், தொடர்ந்து 1000 பாசுரங்கள் பாடினார். நமக்கு பெரிய திருமொழி கிடைத்தது.

கடைசியில், 'இந்த சம்சார உலகத்தில் நான் உழன்றது போதும். பெரிய திருமொழி பாடவே இந்த உலகத்தில் வந்தேன் என்று அறிகிறேன். பதரியில் இருந்து திருபுல்லாணி வரை ஒவ்வொரு திவ்ய தேசமும் கால் நெடுக நடந்து சென்று, மங்களாசாசனம் செய்தேன். திருவரங்கம் போன்ற திவ்ய தேசங்களில் கைங்கர்யமும் செய்து விட்டேன். இனி இந்த சம்சாரத்தில் இருக்க மாட்டேன். வந்த காரியம் முடிந்து விட்டது. எனக்கு வைகுண்டம் கொடுங்கள். என்னை உங்கள் திருவடியில் அழைத்து கொள்ளுங்கள்' என்று பெரிய திருமொழி முடிக்கும் போது கதறி விண்ணப்பம் செய்கிறார்.

முசுகுந்த சக்கரவர்த்தி போன்றோர், பெருமாளிடம் வைகுண்டம் கேட்டும், 'கர்மா இன்னும் தீரவில்லை, இன்னும் 2 யுகம் கழித்து துவாபர யுகத்தில் தான் வைகுண்டம்' என்று சொல்லி விட்டார். 

அதேபோல, பரத யோகீஸ்வரர், பெருமாளிடம் வைகுண்டம் கேட்டும், கர்மாவினால், மானாக பிறந்து, பிறகு ஜடபரதராக பிறந்து,  2 ஜென்மங்கள் கழித்து தான் வைகுண்டம் சென்றார். 


வைகுண்டத்தில் இருக்கும் நித்ய சூரிகளே, 12 ஆழ்வார்களாக அவதரித்தனர். 

கர்மாவுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆழ்வார்கள். அவதார புருஷர்கள்.

இப்படி ஆழ்வார் பெரிய திருமொழி முடிக்கும் போது வைகுண்டம் கேட்டு கதறியும், எம்பெருமானோ, 'அஜாமிளன் என்றால், உடனே பரமபதம் கொடுத்து விடலாம்.

இன்னும் கொஞ்ச நாள் இவர் பூலோகத்தில் இருந்தால், தனக்கு மேலும் சில பிரபந்தம் கிடைக்குமே! மேலும் இவர் பாடுவாரே! இவர் பாடுவது நன்றாக இருக்கிறதே! அதை கேட்டு ஆனந்தபடலாமே" என்று திருவுள்ளம் கொண்டார். 

திருமங்கையாழ்வாருக்கு உடனே பரமபதம் கொடுக்க தயங்கினார் பெருமாள். 

'இன்னும் கர்மா பாக்கி உள்ளது. இப்பொழுது பரமபதம் கிடையாது' என்று முசுகுந்தன், பரத யோகிக்கு சொன்னது போல, ஆழ்வாரிடம் சொல்ல முடியாது,

இனி இவர் இந்த உலகத்தில் ஜீவிக்க வேண்டுமென்றால், இவருக்கு பகவத் அனுபவமே ஆதாரம். 

திருமங்கையாழ்வார் இப்படி ஆர்த்தியோடு வைகுண்டம் கேட்டும், பரமபதம் கொடுக்க தயங்கிய பெருமாள், இவரை மேலும் சில காலம் பூலோகத்தில் இருக்க வைக்க, தானே அவருக்கு சில திவ்யகாட்சிகளை, சில அனுபவங்களை கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். 

இப்படி பெருமாளால் கிடைக்கப்பெற்ற காட்சிகளாலும், அனுபவங்களாலும் உகந்திருந்த திருமங்கையாழ்வார், தொடர்ந்து, திருகுருந்தாண்டாகம், திருநெடுந்தாண்டாகம் என்று பாட ஆரம்பிக்கிறார்.

ஆழ்வாருக்கு ஏற்பட்ட இந்த திவ்ய அனுபவங்களே, அடுத்து அவர் இயற்றிய, திருகுறுந்தாண்டாகம், திருநெடுந்தாண்டாகம், மேலும் திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் போன்ற பாசுரங்களில் காண்கிறோம். 


தானே நாயகியாக ஆகி, விரகத்தில் அழுவதும், சிரிப்பதும், ப்ரணய கோபம் அடைவதும்,

நாயகியான தன் நிலையை கண்டு, தனக்கு பரிந்து கொண்டு தாய் வருந்தி பெருமாளிடம் சொல்லி அழுவதுமாக, பெருமாள் இவருக்கு கொடுத்த அனுபவங்களை பாசுரங்களாக அள்ளி கொடுத்து விட்டார்.

Wednesday 26 January 2022

திருநெடுந்தாண்டாகம் சேவிப்போருக்கு கிடைக்கும் பலன் என்ன? என்று சொல்கிறார், திருமங்கையாழ்வார். பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. மின்னுமா மழைதவழும் மேக வண்ணா..

திருநெடுந்தாண்டாகம் சேவிப்போருக்கு கிடைக்கும் பலன் என்ன? என்று சொல்கிறார், திருமங்கையாழ்வார்.

மின்னும் மா மழை தவழும் மேக வண்ணா.

விண்ணவர்தம் பெருமானே! அருளாய், என்று,

அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த

அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை,

மன்னு மாமணி மாட வேந்தன்

மானவேல் பரகாலன் கலியன் சொன்ன

பன்னிய நூல் தமிழ்மாலை வல்லார் 

தொல்லைப் பழவினையை முதல் அரிய வல்லார் தாமே


மின்னிக்கொண்டு பெரிய மழை கொட்டக்கூடிய மேகம் போன்ற வண்ணம் உடையவரே! (மின்னும் மா மழை தவழும் மேக வண்ணா)

தேவாதி தேவனே (விண்ணவர்தம் பெருமானே!) அருளாய்! என்று முனிவர்களும்,தேவர்களும் துதிக்க (முனிவரோடு அமரர் ஏத்த)

ஹம்சாவதாரம் செய்து வந்து, வேதத்தினுடைய அர்த்தத்தை சொன்ன பெருமானே ! (அன்னமாய் அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை)


பெரிய பெரிய மணிமாடங்களையுடைய திருநாங்கூர் என்ற சாம்ராஜ்யத்துக்கு மன்னனாக இருக்கக்கூடிய, கையில் வேல் வைத்திருக்கும் இந்த பரகாலன், கலியன் என்று புகழ் பெற்றவன் சொன்ன அற்புதமான இந்த தமிழ் நூலை, எந்தெந்த பாக்கியவான்கள் சேவிக்கிறார்களோ (மன்னு மாமணி மாட வேந்தன் மானவேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னிய நூல் தமிழ்மாலை வல்லார்)

அவர்கள் ஜென்ம ஜென்மமாக செய்த கோடி பாவங்களும் பொசுங்கி போகும்.


எத்தனை முறை களை எடுத்தாலும், அது மீண்டும் மீண்டும்  வளரும். அது போல முன்பு செய்த பாபங்கள் பொசுங்கினாலும், பாவம் செய்ய வேண்டும் என்கிற வாசனையால் மீண்டும் பாவம் செய்ய தோன்றும். 

எப்படி மண்ணுக்கடியில் உள்ள அந்த வேர் கிழங்கை வெட்டி எரிந்தால், மீண்டும் களை வளராதோ, அது போல, பாவம் செய்ய 'முதல்' காரணமான அந்த வாசனையும் சேர்ந்து அழிந்து போகும்" (தொல்லைப் பழவினையை 'முதல்' அரிய வல்லார் தாமே)

என்று திருநெடுந்தாண்டாகத்திற்கு பலஸ்ருதியும் தானே சொல்கிறார் திருமங்கையாழ்வார்.

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் திருவடிகளே சரணம்

பரகால நாயகி, ஸ்ரீரங்கநாதரோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள்.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென்

பரகால நாயகி, ஸ்ரீரங்கநாதரோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள்.

உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்து

என் ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே

தெள்ளூரும் இளந்தெங்கின் தேறல் மாந்தி

சேல் உகளும் திருவரங்கம் நம்மூர் என்ன

கள்ளூரும் பைந்துழாய் மாலை யானை

கனவு இடத்தில் யான் காண்பன் 

கண்ட போது,

புள்ளூரும் கள்வா நீ போகேல், என்பன்

என்றாலும் இது நமக்கோர் புலவி தானே?

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி 'வயலாலி மணவாளன்' நினைவாகவே இருக்கிறாள்.





தன் தோழியிடத்தில் சொல்கிறாள்.

"ஒரே பெருமாள் தான், அனைத்து திவ்ய தேசங்களிலும் இருக்கிறார். 

பெருமாள், என்னிடத்தில் எதையும் எதிர்பார்க்கமல் (அவ்யாஜமான) கருணையையும், உறவையும் காட்டி, 

அவருடனேயே இருக்க வேண்டும் என்ற ஆசையை மூட்டி,

சற்று அவரை பிரிந்தாலும், 'எனக்கு தாளவே தாளாது' என்கிற விரக வேதனையையும் கொடுத்து விட்டார்.


விரக வேதனை மற்றவர்களுக்கும் ஏற்பட்டு இருக்கலாம். 

ஆனால், 

என் அளவுக்கு இப்படி ஒரு தாளாத விரக வேதனையை, வேறு யாரும் அனுபவித்து இருக்க முடியாது. 

அப்படி ஒரு விரக வேதனையை 'எனக்கே' கொடுத்து இருக்கிறார்.

பிரிவு என்பது இருவருக்கும் பொது தானே!

ஆனால், இந்த விரகம் எனக்கு மட்டும் ஏற்படுகிறதே தவிர, அவருக்கு கொஞ்சம் கூட ஏற்படுவதாக தெரியவில்லை. 


பெருமாள் திடீரென்று வருகிறார். என்னை கட்டிக்கொள்கிறார். பிறகு என்னை விட்டு விட்டு எங்கோ சென்று விடுகிறார். பிறகு மீண்டும் வருகிறார். கட்டிக்கொள்ள வருகிறார். பிரிகிறார். 

என்னை கட்டிக்கொள்ள வருகிறாரே! தவிர, என்னை பிரியும் போது, இவர் வேதனைப்படுவதாகவே தெரியவில்லை. 

பிரிவு ஏற்படும் போது, இருவருக்குமே விரகம் ஏற்பட்டால் 'சரி அவருக்கும் விரகம் உள்ளது' என்று சற்று சமாளிக்கலாம்.

இங்கோ! மொத்த விரகமும் எனக்கே ஏற்படுகிறது. 

இப்படி விரகம் என்ற நோயை எனக்கே தந்து விட்டு சென்று விடுகிறார் (உள்ளூரும் சிந்தைநோய் 'எனக்கே' தந்து)

இந்த தாள முடியாத விரகத்தால், என் உடல் மெலிந்து, என் வளையல்கள் கையில் நிற்காமல் விழுந்து விடுகிறது. 

நான் வாடி போய், என் அழகும் விரகத்தால் உருக்குலைந்து போய் விடுகிறது. 

இவர் என்னை பிரியும் போது, என்னை விரகத்தில் மூழ்கடித்து, என் வளையையும், என் முகத்தில் இருந்த பொலிவையும் கூட எடுத்து கொண்டு சென்று விடுகிறார். (என் ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே)


ஒரு சமயம், கருட வாகனத்தில் பெருமாள் என் எதிரே வந்தார்.

அப்போது அவர் கழுத்தில் போட்டிருந்த துளசி மாலையில் உள்ள மகரந்த சுகந்தம் என்னை மயக்கி விட்டது.

(கள்ளூரும் பைந்துழாய் மாலை யானை)

மயங்கி அவர் மார்பிலேயே விழுந்தேன். அவரும் என்னை அணைத்து கொண்டார்.

சற்று நேரம் கழித்து, கண் விழித்து அவரை கண்ட போது, (கண்ட போது) "நீங்கள் எந்த ஊர் பெருமாள்? இது எந்த ஊர் துளசி? வைகுண்டத்தில் இருந்து வந்த துளசியா?" என்று கேட்டேன்.

உடனே அவர், 

"இளம் தென்னை மரங்களில் பூத்த பூக்கள், தெளிந்த நீரில் சிந்தி கிடக்க, அதில் உள்ள தேனை குடித்து சேல் மீன்கள், துள்ளி விளையாடும் திருவரங்கம் நம்மூர். இது ஸ்ரீரங்க துளசி" என்றார் (தெள்ளூரும் இளந்தெங்கின் தேறல் மாந்தி சேல் உகளும் திருவரங்கம் நம்மூர் என்ன)

"நீங்கள் எந்த ஊர்?" என்று கேட்டதற்கு, "திருவரங்கம் என் ஊர்" என்று சொல்லாமல், "திருவரங்கம் நம்மூர்" என்று என்னையும் சேர்த்து கொண்டு சொல்கிறாரே! என்று கவனித்தேன். 

பெருமாள் என்னிடம் எத்தனை ப்ரியம் கொண்டுள்ளார்! என்று நினைத்து ஆனந்தம் அடைந்தேன்.

இப்படி சிறிது நேரம் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே, கருடனை ஒரு கையால் பெருமாள் தொட, உடனே அந்த கருடாழ்வார் பெருமாளை தூக்கிக்கொண்டு மேலே சென்று விட்டார்.


"கருட வாகனத்தில் உள்ள கள்வா! என்னை விட்டு போகாதீர்கள்!!" என்று சொல்லியும், கேளாமல் என்னை மீண்டும் விட்டு விட்டு சென்று விட்டார்.

(புள்ளூரும் கள்வா நீ போகேல், என்பன்)


"உங்கள் நினைவாக, அந்த துளசியையாவது தந்து விட்டு போங்கள்!" என்றேன். 

'உனக்கு துளசி பிரசாதத்தை விட, விரகம் என்ற உயர்ந்ததான பிரசாதத்தை தருகிறேன்' என்று சொல்லி, 'விரகத்தை எனக்கே தந்து விட்டு போனார்" என்று பரகால நாயகி தான் படும் விரகத்தை சொல்லி கண்ணீர் வடிக்கிறாள்.

முதலில் வயலாலி மனவாளனாக வந்தார். இப்போது, ஸ்ரீரங்கநாதனாக வந்து ஒரு க்ஷணம் அணைத்து கொண்டார். 

'ஒரு க்ஷணம் தான் என்பதால், நான் நிஜத்தில் பெருமாளின் அணைப்பை அனுபவித்தேனா? அல்லது கனவில் அனுபவித்தேனா?' என்று குழம்பி நிற்கிறேன்.

ஒருவேளை உண்மையிலேயே கிடைத்த தரிசனம் தான், கனவு போல போய்விட்டதோ! என்றும் தெரியவில்லை.

ஒரு க்ஷணம் நான் கண்டு அனுபவித்தது, கனவு போல இருக்கிறதே தவிர, ஆசை தீர அனுபவித்ததாக தெரியவில்லை. 

(கனவு இடத்தில் யான் காண்பன்)

ஒரு வேளை, 'என்னை விட்டு போகாதீர்கள்' என்று சொன்னதற்கு பதில், 'என்னையும் கூட்டி கொண்டு செல்லுங்கள்' என்று சொல்லி இருந்தால் என்னையும் கூட்டிக்கொண்டு சென்று இருப்பாரோ?'  (என்றாலும் இது நமக்கோர் புலவி தானே?) என்று சொல்லி கண்ணீர் விட்டாள்.

இப்படி திடீரென்று வருவதும், திடீரென்று போவதுமாக பெருமாள் இருக்க,  'பெருமாள் எனக்கே விரகத்தை கொடுத்து செல்கிறார்' என்று ஏங்கி நிற்கிறாள் பரகாலநாயகி.

Sunday 23 January 2022

பரகால நாயகி, வயலாலி மணவாளனோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள்... பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. நைவளமொன் றாராயா

பரகால நாயகி, வயலாலி மணவாளனோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள். 

நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா

நாணினார் போல் இறையே 

நயங்கள் பின்னும் செய்வளவில் 

என் மனமும் கண்ணும் ஓடி

எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய 

இப்பால் கைவளையும் மேகலையும் காணேன்

கண்டேன் கனம் மகர குழை இரண்டும் 

நான்கு தோளும்

எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில்? என்றேற்கு

இது வன்றோ எழில் ஆலி, என்றார் தாமே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

தன்னுடைய 'நாயகன்' தான் இவர்! என்று தெரிந்தும், வயலாலி மணவாளன் கோதண்ட ராமராக வந்திருப்பதால், அவரை கண்டு அஞ்சி, பரகாலநாயகி அவரை பார்க்காமல் நின்றாள்.

"பரகால நாயகி தன்னை பார்ப்பாள்" என்று தான் வயலாலி மணவாளன் வீதி உலாவே வந்திருந்தார். 

தன்னை பார்க்காமல் முகத்தை திரும்பி கொண்டு இவள் இருப்பதை பார்த்து விட்டு, 'இந்த கோதண்டம் தான் இவளை தடுக்கிறது போலும். இவள் ஒரு கோபிகையாயிற்றே! கண்ணனாக வந்தால் தானே இவள் நம்மை பார்ப்பாள்" என்று தீர்மானித்து 'இந்த வேஷம் வேண்டாம்!' என்று கோதண்டத்தை வைத்து விட்டு, கண்ணனாக அலங்காரம் செய்து  கொண்டார்.

ராகத்தை, தமிழில் "பண்" என்று அழைக்கிறோம்.

காலையில் மனதில் இன்பம் உண்டாக, "நைவளம்" (கம்பீர நாட்டை) என்ற பண் இசைப்பார்கள்.

நண்பகலில் மனதில் இன்பம் உண்டாக "பாலை" என்ற பண் இசைப்பார்கள்.

மாலையில் மனதில் இன்பம் உண்டாக "ஆம்பல்"  என்ற பண் இசைப்பார்கள்.

இரவில் அச்சம் ஏற்படாமல் இருக்க, "குறிஞ்சி" (ஹரிகாம்போதி) என்ற பண் இசைப்பார்கள்.

அது போல, 

படுமலைப்பாலை (கரகரப்ரியா), காந்தார பஞ்சமம் (கேதார கௌளம்), இந்தளம் (ஆனந்தபைரவி), அரும்பாலை (கல்யாணி), இளிப்பண் (சுத்த தன்யாசி), கொல்லி (சுத்த சாவேரி) போன்று பல ராகங்கள் (பண்) உள்ளன.

ஒவ்வொரு ராகத்துக்கும் அதற்குரிய தேவதைகள் இருக்கிறார்கள்.

கண்ணன் 'வேணுகானம் செய்யலாம்' என்று குழல் எடுத்து விட்டால், உடனேயே அனைத்து தேவதைகளும் 'இன்று நம்மை கூப்பிடுவாரா? நம்மை கூப்பிடுவாரா?' என்று காத்து கொண்டிருப்பார்கள்.  


கண்ணன் பொழுது போவதற்காக பாட மாட்டானாம்.

ஒரு ராகத்தை எடுத்து பாடினால், ஒரு அர்த்ததோடு தான் பாடுவானாம்.

'கல்யாணி' என்று ஒரு கோபிகை. அவளை பார்க்க அன்று கண்ணன் ஆசைப்பட்டால், உடனே "கல்யாணி" என்ற ராகத்தை பாடுவான். 

'வசந்தா' என்று ஒரு கோபிகை. அவளை பார்க்க அன்று கண்ணன் ஆசைப்பட்டால், உடனே "வசந்தா" என்ற ராகத்தை பாடுவான். 


கண்ணன் வேணுகானம் செய்யும் போதே, 'இன்று தன்னை தான் அழைக்கிறான்' என்று அந்தந்த கோபிகைக்கு தெரியுமாம்.

இப்படி வேணுகானம் செய்தே அந்தந்த கோபிகையை அழைக்கும் கண்ணன், "இந்த பரகால நாயகி தன்னை பார்க்காமல் இருக்கிறாளே! இவள் பார்க்கத்தானே நான் வந்துள்ளேன்

என்று நினைத்தார்.

இந்த கோபிகை "நைவளம்" என்ற ராகத்தை மிகவும் விரும்பி கேட்பாள்.

அவளை கடைகண்ணால் பார்த்து கொண்டே, அவளுக்கு மிகவும் பிடித்தமான 'நைவளம்" என்ற ராகத்தை தானே கண்ணனாக இருந்து வேணுகானம் செய்தார். 

வேணுகானம் செய்வதை கேட்ட பரகாலநாயகி (கோபிகை) வந்திருப்பது 'கண்ணன்' என்று அறிந்தும் "பார்க்க கூடாது" என்று கொஞ்சம் ராங்கி செய்தாள்.

'வந்திருப்பது கண்ணன் தானே! பிறகு ஏன் இவளுக்கு இத்தனை ராங்கி?' என்று கேட்டால், 

"முதலிலேயே கண்ணனாக வந்திருக்கலாமே இவர். கோதண்ட ராமனாக வந்து அச்சத்தை கொடுத்தாரே! முதலில் ராங்கி செய்தது இவர் தானே" என்று பரகாலநாயகி திருப்பி கேட்டாள்.


வேணுகானம் இவளை மயக்கினாலும், தலையை கூட ஆட்டக்கூடாது! என்று அழுத்தமாக பெருமாளை பார்க்காமல் நின்று கொண்டிருந்தாள் பரகாலநாயகி


"இவளுக்கு பிடித்தமான ராகத்தை இசைக்கிறேன். கொஞ்சம் சிரிக்கலாம்! யார் குழல் ஊதினார்? என்று தலை நிமிர்ந்தாவது பார்க்கலாம்! குறைந்தபட்சம், ராகத்தை கேட்டு கொஞ்சம் தலையையாவது அசைத்து ரசிக்கலாம்! 

இப்படி எதுவுமே செய்யாமல் அழுத்தமாக இருக்கிறாளே! 

நான் ஒரு ஆண் பிள்ளை. வலிய வந்து நாயகியான இவளை சமாதானம் செய்து பேச வந்தால், விருப்பம் இருந்தும் என்னை பார்க்க மாட்டேன் என்று பிடிவாதமாக நிற்கிறாளே!

(நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா) என்று பெருமாள் தன் முயற்சியில் தோல்வியுற்று சிறிது வெட்கப்பட்டவர் போல நின்று, (நாணினார் போல் இறையே

பிறகு மீண்டும் (பின்னும்) இவளை எப்படியாவது சமாதானம் செய்தே தீர வேண்டும் என்று தீர்மானித்து மேலும் முயற்சிக்கிறார். 

"இப்போது நைவளத்தோடு, சேர்த்து கூடவே அழகான வார்த்தைகளையும் சேர்த்து பெருமாள் வேணுகானம் செய்ய (நயங்கள் செய்வளவில்), திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி தன் நிலையை தானே சொல்கிறாள்.

"இதுவரை இவரை பார்க்க கூடாது என்று பல்லை கடித்து கொண்டு இருந்த பரகாலநாயகியான நான், என்னை அறியாமலேயே என் மனது கண்ணனிடத்தில் ஓடி, என் கண்களும் அவரை நோக்கி ஓட (என் மனமும் கண்ணும் ஓடி), ஒரு காலை ஊன்றி, மற்றோரு காலை மாற்றி வைத்து இருக்கும் அந்த திருவடிக்கீழ் என் அங்கம் படும்படியாக சேவித்தேன். (எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய)

திருவடி ஸ்பரிசித்த ஆனந்தத்தால் தலை நிமிர்ந்தேன்..  

'முன்பு பெருமாள் கிடைக்கவில்லையே!' என்ற விரகத்தில் உடல் மெலிந்து என் கை வளையல் தானாக அவிழ்ந்தது, 

இப்பொழுது, இவரை ஸ்பரிசித்த ஆனந்தத்தால் உடல் பூரிப்பு அடைந்து புஷ்டியாகி விட, நான் அணிந்திருந்த வலையலும், இடுப்பில் அணிந்திருக்கும் ஒட்டியானமும் இப்பொழுது உடல் பூரிப்பினால் உடைந்து தானாக நழுவி விழுந்தது (இப்பால் கைவளையும் மேகலையும் காணேன்)


இப்படி பூரிப்போடு தலை நிமிர்ந்து பார்த்த போது, அவருடைய இரண்டு காதுகளில் மகர குண்டலங்கள் அசைவதை பார்த்ததும் மனம் மயங்கி விட்டது. 

உடனே பெருமாள் என்னிடமுள்ள பிரியத்தால், நான்கு கைகளாலும் என்னை தூக்கி  விட்டார். 

ஒரு கையால் என் நெற்றியில் இருந்த வியர்வையை துடைத்து விட்டு, மறு கையால் என் மார்பை தடவி கொடுத்து, மற்றொரு கையால்  அவிழ்ந்த கேசத்தை முடிந்து விட்டு, நான்காவது கையால் என்னை ஆசுவாசப்படுத்தி தூக்கி, அவர் எதிரே நிற்க வைத்து கொண்டார் (கண்டேன் கனம் மகர குழை இரண்டும் நான்கு தோளும்).

என்ன நடக்கிறது? என்று புரியாத மயக்கத்தில் இருந்து பரகால நாயகியாகிய நான், 

இது எந்த திவ்ய தேசம்? நாம் எங்கு இருக்கிறோம்? எந்த ஊர் பெருமாள் இவர்? என்று நினைத்து, அவரிடமே, 'என்னிடம் இத்தனை ப்ரியம் வைத்துள்ளீர்களே! உங்கள் கோவில் எவ்வளவு தூரம் இருக்கிறது?' (எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில்? என்றேற்கு) என்று கேட்க, 

இந்த ஊர் நம் இருவருக்கும் சொந்த ஊர் ஆயிற்றே! இது தானே திருவாலி திருநகரி திவ்ய தேசம். (இது வன்றோ எழில் ஆலி, என்றார் தாமே) என்றார் பெருமாள். 

இப்படி வயலாலி மணவாளனுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள் பரகால நாயகி. 


Friday 21 January 2022

வருணன் என்றால் என்ன? "இமம் மே வருண..." என்று சந்தியாவந்தனத்தில் உள்ளது. வருண என்ற சொல்லுக்கு ஈடான தமிழ் சொல்லை திருமங்கையாழ்வார் பயன்படுத்துகிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோம்.

சந்தியாவந்தனத்தில், சூரியனுக்கும் ஆத்மாவாக (நமக்கும்) இருக்கும் பரமாத்மாவை பார்த்து, மாலையில் "இமம் மே வருண" என்று சொல்வோம். 

திருமங்கையாழ்வார், 

"அனலுருவாய் பெருமாள் இருக்கிறார்" என்று சொல்லி, பிறகு,

"வருண" என்ற வடசொல்லுக்கு ஈடாக "புனலுருவாய் பெருமாள் இருக்கிறார்" என்கிறார்.

அனல் உருவாய் - என்றால் "அக்னி போன்று பரமாத்மா இருக்கிறார்" என்று அர்த்தம்.

"தீ" எப்பொழுதுமே மேல் நோக்கியே செல்லும். மற்றவர்கள் தொட முடியாதபடி இருக்கும். தீக்கு அருகில் சென்றால் விழுங்கி விடும்.

அது போல, 

பெருமாளும் தேவர்களுக்கெல்லாம் தேவனாக, அவரை எவரும் தொட முடியாதபடி உயர இருக்கிறார். பெருமாள் பக்கத்தில் சென்றால், அப்படியே விழுங்கி விடுவார்.

இப்படி யாருக்கும் எட்டாதபடி அனலுருவாய் இருக்கும் பெருமாள், புனலுருவாயும் இருக்கிறார். 

புனல் உருவாய் - என்றால் "தண்ணீர் போன்று பரமாத்மா இருக்கிறார்" என்று அர்த்தம்.

தண்ணீர் எப்பொழுதுமே கீழ் நோக்கியே செல்லும். மற்றவர்களுக்கு கிடைக்கும்படி நிலத்திற்கு தானே வரும்.

அது போல,

பெருமாள் நிஜத்தில் அனலுருவாய் எங்கோ உயரத்தில் இருந்தாலும், "தானே இறங்கி ராமனாக, கண்ணனாக மனிதனை போன்று அவதாரம் செய்து, கோவிலில் அரச்ச அவதாரம் செய்து, நம்முடன் சமமாக பழகி, தானே வலிய வந்து கிடைக்கிறார்" என்கிறார்.

மாலையில் "இமம் மே வருண..." என்று சொல்லுமிடத்தில், "புனலுருவாய்" என்ற சொல்லின் அர்த்தத்தை நினைத்து சொல்லும் போது, பெருமாள் எத்தனை கருணையோடு நாம் காணும்படியாக கோவிலில், நம் வீட்டில் விக்ரக ரூபமாக அவதரித்து நிற்கிறார் என்பது புரியும்.


"அனலுருவாய்" என்று சொல்லும் போது, பெருமாளின் பர-தத்துவம், கம்பீரம் வெளிப்படுகிறது.

"புனலுருவாய்" என்று சொல்லும் போது, பெருமாளின் கருணை வெளிப்படுகிறது.