Followers

Search Here...

Showing posts with label சொன்ன வண்ணம். Show all posts
Showing posts with label சொன்ன வண்ணம். Show all posts

Friday 14 February 2020

பாசுரம் (அர்த்தம்) - இசைந்த அரவமும், வெற்பும், கடலும் - பேயாழ்வார் சொன்ன வண்ணம் செய்த பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இசைந்த அரவமும், வெற்பும், கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப!
அசைந்து கடைந்த வருத்தமோ?
கச்சி வெஃ காவில் கிடந்திருந்து
நின்றதுவும் அங்கு?
--  மூன்றாம் திருவந்தாதி (பேயாழ்வார்) 
'தன் பர்த்தாவான "ப்ரம்ம தேவனின்" யாகத்தை அழிக்க, 
நதி ரூபமாக அதி வேகத்துடன் வந்த வேகவதியை (சரஸ்வதி தேவி) தடுப்பதற்காக, 
பெருமாளே ஒரு பெரிய அணை போல, காஞ்சியில் உள்ள திருவெஃ காவில், படுத்துக்கொண்டார்' 
என்பது புராண காலத்தில் நடந்த சரித்திரம்.







இந்த பெருமாளுக்கு தான் "யதோத்தகாரி" என்றும் "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" என்று பெயர்.
காஞ்சியில் உள்ள இந்த திவ்ய தேசத்துக்கு "திருவெஃ கா" என்று பெயர்.
'பெருமாள் இங்கு அணை போல படுத்துக்கொண்டது, வேகவதியை தடுப்பதற்காக தான்' என்ற போதிலும்,
'பெருமாள் படுத்துக்கொண்டதற்கான காரணம் வேறோ?'
என்று கேட்கிறார் பேயாழ்வார்.
பெருமாளை பார்த்து கேட்கிறார்,
"முன்பு ஒரு சமயம், 
பாற்கடலை கடைந்து தேவர்கள் அம்ருதம் எடுத்து கொள்ள, 
பாற்கடலை கடைவதற்கு, 
தகுதியான (இசைந்த) மந்திர மலையையே (வெற்பும்) மத்தாக ஆக்கி, 
தகுதியான (இசைந்த) வாசுகி என்ற பாம்பையே (அரவமும்) கயிறாக்கி, 
நீங்களே க்ஷீராப்தியில் கடைந்தீர்களே (பசைந்து)

தேவர்களுக்காக நீங்களே அம்ருதம் கடைந்தீர்களே ! 
விஷம் வந்ததும், தேவர்களும், அசுரர்களும் பாதியில் விட்டு விட்டு ஓடிய பிறகும், அந்த வாசுகியின்  தலையையும், வாலையும் பற்றி கொண்டு, நீரே கடைந்தீரே ! 

ஆயிரம் தலைகளுடன் நீரே அந்த மலையின் கொடு முடியை பிடித்துக்கொண்டு இருந்தீரே ! 

முதுகை கொடுத்து மலையை நீரே கிளப்பி கொண்டு, தாங்கி கொண்டு இருந்தீரே !
அவ்வளவும் நீரே செய்து விட்டு, 
கடைசியில் கிடைத்த அம்ருதத்தை ((அங்கு அமுது படுப்ப) அப்படியே அவர்களுக்கு கொடுத்து விட்டு, 
அங்கு க்ஷீராப்தியில் ஓய்வில்லாமல் நின்று வேலை செய்ததால் (நின்றதுவும் அங்கு) ஏற்பட்ட களைப்பினால், 
காஞ்சியில் உள்ள இந்த திரு வெஃகாவில் வந்து இளைப்பாறுகிறீரோ? (அசைந்து கடைந்த வருத்தமோ)"
என்று பேயாழ்வார், திருவெஃகாவில் உள்ள யதோத்தகாரி பெருமாளை பார்த்து கேட்பது போல, நமக்கு பாசுரத்தை தருகிறார்.
திருவெஃகாவில் உள்ள யதோத்தகாரி என்ற சொன்ன வண்ணம் செய்த பெருமாள், காஞ்சி வரதராஜனுக்கும் (அத்தி வரதர்) முன்பே தோன்றிய அர்ச்சா அவதாரம். 

அருமையான பாசுரம்.
திவ்ய தேசத்தில் நாம் பாடவேண்டிய பாசுரம்.