Followers

Search Here...

Showing posts with label பாசுரம். Show all posts
Showing posts with label பாசுரம். Show all posts

Tuesday 7 June 2022

கவலைகள் தீர வழி என்ன? தெய்வம் நம்மை பார்க்க, என்ன செய்ய வேண்டும்?.. திருமங்கையாழ்வார் சொல்கிறார்... அறிவோம்..

மனசு, வாக்கு, காயம் - நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் இவை.

இந்த மூன்றையும் நமக்கு கொடுத்த எம்பெருமான் நாராயணன்,'இந்த மூன்றினாலும் தன்னை ஆட்படுத்தி கொள்கிறானா?' என்று பார்க்கிறார்.

மனசு:

எப்பொழுதும் தன்னை மனதில் தியானித்து (நினைத்து) கொண்டே இருக்கிறானா? என்று பார்க்கிறார் பகவான்.

வாக்கு:

எப்பொழுதும் தன்னை பற்றியே பேசிக்கொண்டே இருக்கிறானா? என்று பார்க்கிறார் பகவான்.

காயம்:

சரீரத்தால் எப்பொழுதும் தனக்கு தொண்டு செய்து கொண்டே இருக்கிறானா? என்று பார்க்கிறார் பகவான்.

மனசு, காயம், வாக்கு இந்த மூன்றும் ஒழுங்காக தானே நமக்கு இருக்கிறது. 

இவை ஒழுங்காக இருக்குமாறு செய்த தன்னை நன்றியுடன் பார்க்கிறானா என்று எதிர்பார்க்கிறார் பகவான். 

இவை மூன்றும் ஒழுங்காக இல்லாத போது, எத்தனை கஷ்டங்களை ஜனங்கள் அனுபவிக்கிறார்கள்? என்று உலகத்தை பார்த்தாலேயே நமக்கு புரிந்து விடுமே!


காயம்:

கை கால்கள் இழுத்து, முடமாகி படுத்து கிடந்தோமானால், பகவானுக்கும், பாகவதர்களுக்கும் கைங்கர்யம் செய்ய முடியுமா?

நமக்கோ, கை கால்களை நன்றாக தானே பகவான் கொடுத்து இருக்கிறார்!

மனசு:

மனசு பித்து பிடித்து போய் விட்டால், பகவானை பற்றி சொல்ல முடியுமா?, பகவானை பற்றி கேட்கவும் முடியுமா?

நமக்கோ, மனசை நன்றாக தானே பகவான் வைத்து இருக்கிறார்

வாக்கு:

வாக்கு சிலருக்கு குளறிபோய் விடுகிறது. 

சிலர் பிறக்கும் போதே ஊமையாக பிறக்கிறார்கள். 

சிலருக்கு ரத்த கொதிப்பு உண்டாகி திடீரென்று பேச்சு நின்று விடுகிறது. 

வாக்கு போய் விட்டால், பகவந்நாமா சொல்ல முடியுமா?

நமக்கோ, வாக்கையும் நன்றாக தானே பகவான் கொடுத்து இருக்கிறார்.


இந்த மூன்றும் சரியாக இல்லாத போது, எத்தனை துன்பத்தை அனுபவிக்கிறார்கள்? என்று உலகத்தில் தினம் தினம் பார்க்கிறோமே!


வாக்கும், மனசும், காயமும் இன்று வரை நமக்கு ஸ்வாதீனமாக தானே இருக்கிறது? 

இதை கொடுத்தவரிடம் நமக்கு ஒரு நன்றி வேண்டாமா?


சரீரம்:

சரீரம் நன்றாக இருக்கும் போது, கண்ட இடத்துக்கெல்லாம் ஓடி சென்று பார்க்கிறோமே! ஓடி ஓடி சத்சங்கம் வரக்கூடாதா?

வாக்கு:

வாக்கு நன்றாக இருக்கும் போது, ஓயாமல் வம்பு பேசி கொண்டு, பிறரை நிந்தை செய்து கொண்டு, தற்புகழ்ச்சி செய்து கொண்டே இருக்கிறோமே! ஹரி நாமம் சொல்ல கூடாதா?

மனசு:

மனசு நன்றாக இருக்கும் போது, எதை எதையோ நினைக்கிறோமே! எதை எதையோ நினைத்து ஆசைப்படுகிறோமே! பெருமாளையே எப்பொழுதும் நினைத்து கொண்டு இருக்க கூடாதா? அவரை அடைய ஆசை படக்கூடாதா?

ஊமையாக பகவான் நம்மை படைக்கவில்லையே! 

அடிக்கடி உட்காரும் போதும், நடக்கும் போதும், எழுந்திருக்கும் போதும், சாப்பிடும் போதும், துயர் வரும் போதும், துயர் இல்லாத போதும், "நாராயணா" என்று எளிமையான நாமத்தை சொல்லக்கூடாதா?


'இந்த மூன்றையும் பகவானுக்கு ஆட்படுத்துவதே எனது லட்சியம்' என்று இருக்க வேண்டாமா?


உலகத்தில் எப்பொழுது நாம் பிறந்தோமோ! 

உடலால் உலக காரியங்கள் செய்து தான் ஆக வேண்டும், 

மனதால் உலக விஷயங்களை நினைத்து தான் ஆக வேண்டும்,

வாக்கால், உலக விஷயங்களை பேசி தான் ஆக வேண்டும்.


உலக விஷயங்களை தவிர்க்க முடியாது என்பது உண்மையானாலும், அதில் ஒரு கட்டுப்பாடு வைத்து கொள்ள வேண்டாமா?

வாக்கு:

இதை பேசலாம். இதை பேச கூடாது. 

பிறர் மனம் புண்படும்படி பேச வேண்டாமே! 

அடுத்தவர் குறையை பேச வேண்டாமே! 

பொய் பேச வேண்டாமே!

சத்தியத்தையே பேசுவோமே!

அடுத்தவருக்கு நன்மை உண்டாகும் படி பேசுவோமே!

பகவானை பற்றி பேசலாமே!

இப்படி நாம் வாக்கை கட்டுபடுத்தினால், அது தானே, வாக்கால் செய்யப்படும் "தவம்" என்று சொல்லப்படுகிறது.

மனசு:

பிறர் கெடவேண்டும் என்று நினைக்காமல் இருக்கலாமே!

உலகத்தில் எல்லோருமே சௌக்யமாக இருக்க வேண்டும் என்று நினைக்கலாமே.

மனதால் பகவானை தியானம் செய்வது சிறந்தது. பகவானை மனதால் நினைக்கலாமே! 

இப்படி நாம் மனதை கட்டுபடுத்தினால், அது தானே, மனதால் செய்யப்படும் "தவம்" என்று சொல்லப்படுகிறது.


மனசு, வாக்கு, காயம் இந்த மூன்றையும் பகவான் நம் அனைவருக்கும் கொடுத்து இருக்கிறாரே!

இவையெல்லாம் நமக்கு உபயோகப்படும்படியாக, தாறுமாறாக போகாமல், பகவான் கொடுத்து இருக்கிறாரே! நமக்கு நன்றி உணர்ச்சி வேண்டாமா?

இதை அவருக்கு அர்ப்பணம் செய்வது தானே, நாம் பகவானுக்கு செய்யும் நன்றி


அப்படி பகவானுக்கு அர்ப்பணம் செய்யாமல், வாக்கு, மனசு, காயம் அனைத்தையும் உலக விஷயங்களுக்கே உபயோகம் செய்தால்,"நன்றிகெட்ட இவனை சுமப்பது வீண்" என்று பாரமாக நினைப்பாளே பூமா தேவி தாயார்.


பிரளயகாலத்தில் சரீரம், வாக்கு, மனசு இல்லாமல் இருளில் (தமஸ்) கிடந்த நம்மை,

உலகத்தை படைத்து, தூங்கும் குழந்தையை தாய் எழுப்பி பால் கொடுப்பது போல, நம்மை எழுப்பி, வாக்கு, சரீரம், மனசு கொடுத்தாரே!


சரீரத்தில் கண்ணை கொடுத்து, காதை கொடுத்து, மூக்கு கொடுத்து, நாக்கு கொடுத்து, எழுப்பி விட்டார்.

இப்படி ஒரு உதவி செய்த பிறகும், நன்றி கெட்டு பகவானை பார்க்காமல், இருக்கலாமா? 


நன்றி உடையவன், 

காதினால் பகவானை பற்றி கேட்க வேண்டும்,

வாயால் அவர் நாமத்தை சொல்ல வேண்டும்

மூக்கினால், அவர் மேனியில் பட்ட துளசியை முகர வேண்டும்.

நாக்கினால் அவருக்கு காண்பித்த பிரசாதத்தையே சாப்பிட வேண்டும்.

கைகளாலே அவருக்கு தொண்டு செய்ய வேண்டும்.

கால்களாலே அவர் இருக்கும் திவ்ய தேசம் தேசமாக செல்ல வேண்டும்.

மனதால், அவரையே தியானம் செய்ய வேண்டும்.


பொதுவாக மனசும், வாக்கும், காயம் மூன்றும் நன்றாக இருந்தாலும், நமக்கு பல சங்கடங்கள் கொடுத்து கொண்டே இருக்கும்.

காயம்:

சரீரம் அடிக்கடி நமக்கு தொந்தரவு கொடுத்து கொண்டே இருக்கும்.

பலவிதமான வியாதிகள் வந்து கொண்டே இருக்கும்.

முடியாத நிலை, தள்ளாமை போன்ற சங்கடங்கள் சரீரத்துக்கு வரும்.

மனசு:

சந்தேகம், எதிலும் ஈடுபாடு இல்லாத தன்மை (அஸ்ரத்தை), உற்சாகமின்மை இவையெல்லாம் மனசுக்கு வரும் சங்கடங்கள்.

வாக்கு:

வம்பு பேச துள்ளும். ஆனால் பகவந்நாமம் சொல்ல சொன்னால் தூக்கம் வரும், இவை மனசுக்கு வரும் சங்கடங்கள்.

இந்த மூன்றும் நன்றாக இருந்தாலும், அதை கட்டுப்படுத்துவது என்பது நம்மால் ஆகாத காரியம்.


'பகவான் தான் நமக்கு சரீரம் கொடுத்தார், மனசு கொடுத்தார், வாக்கு கொடுத்தார்.

அவரிடம் இந்த மூன்றையும் அர்ப்பணிக்க வேண்டும்' என்று நன்றி உணர்ச்சி நமக்கு இருந்தாலும், 'அர்ப்பணிக்க முடியவில்லையே!' என்று பக்தன் வருத்தப்படுகிறான்.

இப்படி கவலைப்படும் பக்தனின் நிலையை பார்த்த

திருமங்கையாழ்வார், "கட்டுப்படுத்தும் அந்த வேலையை பகவானிடம் கொடு" என்கிறார்.


"எம்பெருமானே! உனக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று தானே இந்த சரீரத்தை பெற்றேன். நீயும் கொடுத்தாய்.

நீ கொடுத்த இந்த சரீரம், இந்த வாக்கு, இந்த மனசு உங்களுக்கு உபயோக பட வேண்டும்.

இது தான் என்னுடைய பிரார்த்தனையும் கூட.

இந்த மூன்றினாலும் தொண்டு செய்ய (தொண்டு எல்லாம்) வேண்டி கொண்டு (பரவி) உங்கள் உத்தரவுக்காக (நின்னை) நிற்கிறேன்.

'என்னை தொழுது கொண்டு, அடி பணிந்து (தொழுது அடி பணியுமாறு) இந்த கைங்கர்யத்தை "செய்" என்று நீங்கள் ஒருமுறை சொல்லி நியமித்து விட்டால், யாருக்கும் கட்டுப்படாத இந்த மூன்றும், கட்டுப்பட்டு உங்களுக்கு வேலை செய்யுமே!' என்கிறார் திருமங்கையாழ்வார்.


வைகுண்டத்திலும் நித்யசூரிகள் உங்களுக்கு கைங்கர்யமே செய்கிறார்கள். 

மோக்ஷம் அடைந்தவர்களே உங்களுக்கு கைங்கர்யம் செய்யும் போது, உலகத்தில் பிறந்துள்ள நாம் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யாமல் இருக்கலாமா?


மனசு, காயம், வாக்கு மூன்றினாலும் நாம் கைங்கர்யம் செய்வதற்காக தான் கோவில் கோவிலாக அரச்சா மூர்த்தியாக பெருமாள் வீற்று இருக்கிறார்.


நம் சார்பாக ஆழ்வார் சொல்கிறார்,

"உலகத்தில் பிறந்தநாளாக, உங்களுக்கே வாக்கு, மனசு, காயத்தால் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற நன்றியோடு தான் இருக்கிறேன்.


இந்த சரீரத்தை கொடுத்த உங்களை தரிசிக்க, அருகில் இருக்கும் கோவிலுக்கு தினமும் செல்வோமே! என்று ஆசைப்படுவேன்.


அங்கு சென்று, கூட்டலாம், கோலம் போடலாம், ஒட்டடை அடிக்கலாம், புற்களை செதுக்கலாம், பூந்தோட்டம் போடலாம் என்று ஆசைப்படுவேன்.


சரி, இப்படி கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு தொண்டு செய்வோமே! என்று நினைத்தால், அப்புறம் குடும்பம் என்னாவது? என்று நினைவு வருகிறது.


கணவனாக இருந்தால், வீட்டில் மனைவிக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்கிறது.

மனைவியாக இருந்தால், வீட்டில் கணவனுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்கிறது.

பிள்ளையாக இருந்தால், வீட்டில் இருக்கும் அப்பா அம்மாவுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்கிறது.

அப்பா அம்மாவாக இருந்தால், வீட்டில் பிள்ளைகளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்கிறது.

இவர்கள் எல்லோருக்கும் தொண்டு செய்த பிறகு, நேரம் கிடைத்தால் தானே, பகவானுக்கும், பாகவதர்களுக்கும் (அடியார்கள்) தொண்டு செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.


பகவானை பார்க்க கோவிலுக்கு செல்வோம், தொண்டு செய்வோம் என்று நினைத்தால், இவர்கள் எல்லோரும் வீட்டில் இருந்து கொண்டு என் தொண்டை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்களே!


ஒரு வயசான கிழம், நான் வெந்நீர்போட்டு தருவேனா? என்று காத்து கிடக்கிறது.

மற்றொன்று மனம் பித்து பிடித்து என் தயவை நம்பியே வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

மற்றோன்று, மனம், வாக்கு, சரீரம் மூன்றும் ஒழுங்காக இருந்தும், ஒரு காரியமும் செய்யாமல், நான் செய்து தருவேன் என்று காத்து கொண்டு இருக்கிறது.

இப்படி தானே குடும்பம் இருக்கும். இவர்களுக்கு தேவையான தொண்டை செய்ய தானே வேண்டும். 

ஏகப்பட்ட குடும்ப கவலைகள் வேறு சேர்ந்து விடுகிறது.

இத்தனைக்கும் மத்தியில் 'பகவான் தானே நமக்கு வாக்கு, மனசு, சரீரம் கொடுத்து நன்றாக செயல்படும்படி வைத்து இருக்கிறார்' என்ற நன்றி உணர்ச்சி ஏற்பட்டு, எப்படியோ நேரத்தை ஒதுக்கி ஓடி கோவிலுக்கு வந்து, ஒரு விளக்கு மட்டும் ஏற்றுவேன். கோவிலில் உங்ககளை ஒழுங்காக தரிசித்தேனா? என்று கூட தெரியாது... உடனே திரும்பும் படியாக என் நிலைமை உள்ளதே! என்று பக்தன் தவிக்கிறான்..


மனசை கொடுத்து, சரீரம் கொடுத்து, வாக்கை கொடுத்தும், பகவானுக்கு நன்றி செய்யாமல் இருப்பவர்களை பூமாதேவி "பாரம்" என்று நினைக்கிறாள்.

பகவானுக்கு இந்த மூன்றையும் ஆட்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும், குடும்ப பாரம் சுமக்கும் பக்தனால் முடியவில்லையே! என்று பகவான் பார்க்கிறார்.


"இவனுக்கு சம்சாரத்தில் எத்தனை பொறுப்பு, சங்கடங்கள் உள்ளது. எத்தனை சரீர சங்கடங்கள், மன சங்கடங்கள்.

இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில், எப்படியோ தப்பித்து, என் கோவிலுக்கு வந்து, ஒரு நிமிடம் வந்து நின்று விட்டானே!" என்று பெருமாள், நம்மை பார்த்து விடுவாராம் (கண்டு).


இருக்கும் குடும்ப வேலைகளில், கோவிலுக்கு வந்து இவன் ஒரு நிமிடம் பெருமாள் முன் நின்றானேவொழிய, இவன் பெருமாளை ஒழுங்காக பார்க்கவில்லையாம். 

ஆனால், பெருமாள் இந்த பக்தனை பார்த்து (கண்டு) விடுவாராம்.


"இத்தனை கஷ்டத்திலும், தவறாமல் எனக்கு ஒரு தீபம் ஏற்ற நேரம் ஒதுக்கி வருகிறானே! 

இவனுக்கு இருக்கும் கஷ்டங்களை, குடும்ப சூழ்நிலையை சரி செய்து கொடுத்தால், இன்னும் உற்சாகமாக நமக்கு கைங்கர்யம் செய்ய காலையும் வருவான், மாலையும் வருவான். என்னையே சுற்றிக்கொண்டு இருப்பானே!" என்று எம்பெருமான் நினைப்பாராம்.


"இவனுடைய 'யோக க்ஷேமத்தை' நாம் பார்த்து கொண்டால், இவன் 'அனன்யா சிந்தையோ மாம்' என்றபடி நிம்மதியாக எனக்கு தொண்டுசெய்து கொண்டிருப்பானே!" என்று எம்பெருமான் நினைப்பாராம்.


"பெருமாள் நம்மை பார்த்து விட்டால், பக்தனுக்கு இருந்த கவலைகள் எல்லாம் தானாக விலகுமே. 

'நான் பார்த்து கொள்கிறேன்.. நீ கோவிலுக்கு போய் வா' என்று சொல்லும்படியாக அனுகூலம் செய்து விடுவாரே.

'உடல் சரியில்லை' என்று படுத்து கிடந்தவர்கள், 'இப்பொழுது பரவாயில்லை' என்று சொல்லி அனுகூலமாக ஆகி விடுவார்களே!

குடும்ப கஷ்டங்கள் தானாக தொலையுமே! (தான் கவலை தீர்ப்பான்)"

என்று திருமங்கையாழ்வார் சொல்கிறார்.


நம் குடும்ப, மன கஷ்டங்கள் தீர, நன்றி உணர்ச்சியை மட்டுமே, எம்பெருமான் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.


"வாக்கு, மனம், காயம் இதை கொடுத்த எம்பெருமானுக்கு, இதை ஆட்படுத்த ஆசையும், நன்றி உணர்ச்சியுமே நமக்கு இருக்க வேண்டும்" என்று குருநாதரை பிரார்த்திப்போம்.

தொண்டெல்லாம் பரவி நின்னை தொழுது அடி பணியுமாறு

'கண்டு' தான் கவலை தீர்ப்பான் 

- திருமங்கையாழ்separatorவார்



Sunday 8 May 2022

சம்சாரிகள் எப்படி பேசுவார்கள்? வேதாந்த தேசிகர் என்ன சொல்கிறார்? குலசேகர ஆழ்வார் என்ன சொல்கிறார்? அறிவோம்...பேய ரேயெனக் கியாவரும் யானுமோர்... பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்

சம்சாரிகள் எப்படி பேசுவார்கள்? வேதாந்த தேசிகர் என்ன சொல்கிறார்? குலசேகர ஆழ்வார் என்ன சொல்கிறார்? அறிவோம்...

ஹரிபக்தி செய்யாதவர்களை "ஸம்சாரிகள்" என்று சொல்கிறாகள்

"ஹரி பக்தியில் ஈடுபட நினைப்பவன், சம்சாரிகளிடம் பேசவே கூடாது" என்று வேதாந்த தேசிகர் எச்சரிக்கிறார். 

ஏன்?

மீறி பேசினால், சம்சாரிகள் பேசும் பேச்சை கேட்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார்.


சம்சாரிகள் எப்படி பேசுவார்கள்?

  • தன்னை பற்றி நல்லதாக பேசுவார்கள்
  • பிறரை பற்றி தோஷம் சொல்வார்கள்.
  • தெய்வத்தை குறை சொல்வார்கள்.
  • ஹரி பக்தி செய்யும் பாகவதர்களை திட்டுவார்கள்.

வரம் ஹுதுவஹ ஜ்வாலா 

பஞ்சராந்தர்வ்ய வஸ்திதி:

ந சௌரி சிந்தா விமுக ஜன சம்வாசவை ரசம்

वरम् हुतवह-ज्वाला पंजरंतरव्य वस्थिति:

न शौरी चिंता विमुक जन संवासवै रसम्

என்று சாஸ்திரம் சொல்கிறது.

வந்திருப்பது பாகவதன் என்றால், கதவை திறந்து வைத்திருக்கலாம்.

'சம்சாரிகள் வந்தால், அவர்கள் பேச்சிலிருந்து தப்பிக்க, நான்கு புறமும் நெருப்பு மூட்டியோ, அல்லது நெருப்பு போல வெயில் அடித்தாலும், கதவை மூடிக்கொண்டு புழுக்கத்தில் கூட இருக்கலாம். 

ஆனால் ஹரி பக்தி செய்யும் பாகவதன், ஒருக்காலும் சம்சாரிகளோடு பேச கூடாது'

என்று வேதாந்த தேசிகர் சொல்கிறார். (ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம்)

சம்சாரிகளிடம் விலகியே இருக்க ஆசைப்படும் குலசேகர ஆழ்வார்,  'சம்சாரிகளுக்கு என்னை கண்டால் பைத்தியம் போல தெரிகிறது, எனக்கு அவர்களை பார்த்தால் பைத்தியமாக தெரிகிறது' என்று பாடுகிறார்.

பேயரே எனக்கு யாவரும்

யானும் ஓர் பேயனே

எவர்க்கும் இது பேசி

என் ஆயனே அரங்கா!

என்று அழைக்கின்றேன்

பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே

- பெருமாள் திருமொழி

என்னை.பொறுத்தியவரையில் ஹரிபக்தி செய்யாத சம்சாரிகளை கண்டால், பைத்தியம் போல தெரிகிறது (பேயரே எனக்கு யாவரும்).

எப்பொழுதும் யாரை பார்த்தாலும் பெருமாளை பற்றியே பேசி (எவர்க்கும் இது பேசி) கொண்டு, நானும் ஒரு பைத்தியம் போல (யானும் ஓர் பேயனே) இருக்கிறேன். 

"என் கண்ணா! அரங்கா!" (என் ஆயனே அரங்கா!) என்று கதறி அழைக்கின்றேன். ஒரு பைத்தியம் போல எம்பெருமானே கதி என்று சரணடைந்து கிடக்கிறேன் (பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே),

என்று தன் (பாகவதனின்) நிலையை சொல்கிறார்.


Sunday 30 January 2022

தாண்டகம் என்றால் என்ன? கலியன் என்றால் என்ன? திருமங்கையாழ்வார் பாடிய முதல் பாசுரம் எது? அறிந்து கொள்வோம்.

வடமொழியில் "தண்டகம்" என்ற ஒரு வகையான பாடும் (ஸ்தோத்திர) முறை உண்டு. 

அம்பாள் மேல் ஸ்யாமளா தண்டகம், மஹாலக்ஷ்மி மேல் கோமளா தண்டகம் என்று தண்டகங்கள் உள்ளன.


"தண்டவத் ப்ரணாமம்" என்ற சொல்லே "தண்டம் சமர்ப்பிக்கிறேன்' என்று தமிழில் சொல்லப்படுகிறது.


"தண்டகம்" என்ற வடசொல்லையே "தாண்டகம்" என்றும் "தண்டம்" என்றும் சொல்கிறோம்.


வைஷ்ணவர்கள் பெரியோர்களுக்கு கடிதம் எழுதும் போது, 'நமஸ்கரிக்கிறேன்' என்று எழுதாமல் "தேவரீர் திருவடியில் தண்டம் சமர்ப்பிக்கிறேன்" என்று எழுதுவார்கள்.


தண்டகம் என்றால் மரக்கட்டை என்று அர்த்தம்.

தன்னை ஒரு மரக்கட்டையாக பாவித்து, பெரியவர்கள் காலில் விழுவதால், "தண்டம் சமர்ப்பிக்கிறேன்"  என்று சொல்வார்கள்.

சந்யாசிகளும் தங்கள் கைகளில் "தண்டம்" வைத்து கொண்டிருகிறார்கள். 


ஸ்ரீமத் பாகவதத்தில், அக்ரூரர், பகவான் அவதாரம் செய்து இருக்கிறார் என்று அறிந்ததால், ஆர்வத்தோடு பிருந்தாவனம் வந்த போது, பலராமரோடு கிருஷ்ணரை பார்த்தபோது, மரக்கட்டை போல இருவருடைய கால்களிலும் விழுந்து விட்டார்.

रथात् तूर्णम् अवप्लुत्य स:

अक्रूर: स्‍नेह विह्वल: ।

पपात चरण उपान्ते

दण्डवद् राम-कृष्णयो: ॥

திருமங்கையாழ்வார் திருகுறுந்தாண்டாகம், திருநெடுந்தாண்டாகம் இயற்றி,  பெருமாளின் திருவடியில் தன்னையே தண்டம் போல சமர்பிக்கிறார். 


'நீலன்' என்ற பெயர் கொண்ட இவர், திருவாலி என்ற தேசத்தை சிற்றரசனாக ஆட்சி செய்து வந்தார்.

ஒரு சமயம், குமுதவல்லி என்ற பெண்ணை கண்டு மணந்து கொள்ள ஆசைப்பட்டார்.


அந்த பெண்ணோ, இவர் சம்ஸ்காரம் செய்து கொண்டு வைஷ்ணவனாக ஆக வேண்டும், தினமும் 1000 வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தாள்.

இதை ஏற்று கொண்ட மணந்து கொண்ட திருமங்கை மன்னன், திருநரையூர் எம்பெருமானிடம் வைஷ்ணவனாக சம்ஸ்காரம் பெற்றார்.


பூம்புகார் செல்லும் வழியில், திருமங்கைமடம் என்ற இடத்தில், தினமும் 1000 வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்து வந்த இவர், சொத்தையெல்லாம் இழந்து விட்டார்.


இருந்தாலும் அன்னதானம் செய்வதில் பெரும் ஆர்வம் கொண்டார். 

"அன்னதானம் எந்த காரணம் கொண்டும் நிற்க கூடாது" என்று நினைத்தார்.


ஒரு நிலையில், "கொள்ளை அடித்தாவது அன்னதானம் செய்தே ஆக வேண்டும்" என்று இறங்கி விட்டார். 


இவரை ஆட்கொள்ள நினைத்த வயலாலி மணவாளன், தானே பிராம்மண பையனாக, தாயாரோடு, புது மண தம்பதிகளாக நகைகளை அணிந்து கொண்டு, இவர் சஞ்சரிக்கும் இடமான வேதராஜபுரத்திற்கு வந்தார்கள். 

இவர்கள் அணிந்து இருக்கும் நகைகளை பார்த்த திருமங்கை மன்னன், இவர்களை வழிமறித்து, அனைத்து நகைகளையும் கழட்ட சொல்லி மிரட்டி, ஒரு பெரிய மூட்டையாக கட்டி கொண்டார்.


மிகவும் பலசாலியான இவரால், தான் கட்டிய நகை மூட்டையை தூக்க முடியவில்லை.


அருகில் நின்று கொண்டிருந்த இந்த பிராம்மணன் சிரிக்க, 'இவர் ஏதோ மந்திரம் சொல்லி, இந்த மாயம் செய்கிறார்' என்று நினைத்தார் பரகாலன்.


எவ்வளவு முறை முயன்றும், மூட்டையை தூக்க முடியாமல் போக, உடனே கோபத்தோடு, வாளை உருவி, "ப்ராம்மணரே! நீர் ஏதோ மந்திரம் ஜெபித்து தான் இந்த மாயாஜாலம் செய்கிறீர்கள் என்று அறிகிறேன். உங்களை பார்த்தால், இப்பொழுது தான் மணமாகி இருக்கிறது என்று தெரிகிறது.

இந்த நிலையில் உங்கள் நகைகளை எடுத்து கொள்ள நான் விரும்பவில்லை. சீதனமாக நானே தருகிறேன் எடுத்து கொண்டு செல்லும். ஆனால், நீர் எந்த மந்திரத்தை சொல்லி இந்த மாயம் செய்தீரோ அந்த மந்திரத்தை எனக்கு சொல்லி கொடுத்து விட்டு, பிறகு எடுத்து கொள்ளும்" என்றார்.


அந்த பிராம்மணனோ, "நகையும் உனக்கு கிடையாது. மந்திரமும் கிடையாது" என்றார்.

உடனே வாள் எடுத்து மிரட்டினார். மசியவில்லை அந்த பிராம்மணன்.


மரியாதையோடு, சேவை புத்தியோடு பிறகு கேட்க, ப்ராம்மணனாக வந்த வயலாலி மணவாளன், அவருக்கு திருவஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார். 

இப்படி பெருமாளே, பரகாலனை தடுத்தாட்கொண்டதும், தன் நிஜ ஸ்வரூபம் என்ன? என்று ரகசியத்தை அறிந்து கொண்டார். 

உடனே, 'வாடினேன் வாடி வருந்தினேன்..."என்று முதல் பாசுரத்தை பாட ஆரம்பிக்கிறார்.

முதல் பாசுரத்தை முடிக்கும் போது, திருமங்கையாழ்வார், "கண்டு கொண்டேன் நாராயணன் என்னும் நாமம்' என்று பாடுகிறார். 

திருமங்கையாழ்வார் முதன்முதலாக 'பெரிய திருமொழி' தான் பாடினார் என்பது 'கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமத்தை' என்ற வாக்கியத்தை கொண்டே அறிய முடிகிறது.

வாடினேன் 

வாடி வருந்தினேன் 

மனத்தால்

பெருந்துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன் 

கூடி இளையவர் தம்மோடு

அவர் தரும் கலவியே கருதி ஓடினேன்

ஓடி உய்வதோர் பொருளால்

உணர்வெனும் பெரும் பதம் திரிந்து நாடினேன் 

நாடி நான் கண்டுகொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

- பெரிய திருமொழி.


'சம்சார சக்கரத்தில் உழன்று, சிற்றின்பத்தில் விழுந்திருந்த நான், உய்வதற்கு பெரும் பதம் எங்கு கிடைக்கும் என்று தேடி திரிந்தேன். வயலாலி மணவாளா! உங்கள் கருணையால் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமத்தை' என்று சொல்லி முதல் பாசுரத்தை பாடுகிறார்.

வயலாலி மணவாளனை சாக்ஷாத்காரம் செய்த திருமங்கையாழ்வார், தொடர்ந்து 1000 பாசுரங்கள் பாடினார். நமக்கு பெரிய திருமொழி கிடைத்தது.

கடைசியில், 'இந்த சம்சார உலகத்தில் நான் உழன்றது போதும். பெரிய திருமொழி பாடவே இந்த உலகத்தில் வந்தேன் என்று அறிகிறேன். பதரியில் இருந்து திருபுல்லாணி வரை ஒவ்வொரு திவ்ய தேசமும் கால் நெடுக நடந்து சென்று, மங்களாசாசனம் செய்தேன். திருவரங்கம் போன்ற திவ்ய தேசங்களில் கைங்கர்யமும் செய்து விட்டேன். இனி இந்த சம்சாரத்தில் இருக்க மாட்டேன். வந்த காரியம் முடிந்து விட்டது. எனக்கு வைகுண்டம் கொடுங்கள். என்னை உங்கள் திருவடியில் அழைத்து கொள்ளுங்கள்' என்று பெரிய திருமொழி முடிக்கும் போது கதறி விண்ணப்பம் செய்கிறார்.

முசுகுந்த சக்கரவர்த்தி போன்றோர், பெருமாளிடம் வைகுண்டம் கேட்டும், 'கர்மா இன்னும் தீரவில்லை, இன்னும் 2 யுகம் கழித்து துவாபர யுகத்தில் தான் வைகுண்டம்' என்று சொல்லி விட்டார். 

அதேபோல, பரத யோகீஸ்வரர், பெருமாளிடம் வைகுண்டம் கேட்டும், கர்மாவினால், மானாக பிறந்து, பிறகு ஜடபரதராக பிறந்து,  2 ஜென்மங்கள் கழித்து தான் வைகுண்டம் சென்றார். 


வைகுண்டத்தில் இருக்கும் நித்ய சூரிகளே, 12 ஆழ்வார்களாக அவதரித்தனர். 

கர்மாவுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆழ்வார்கள். அவதார புருஷர்கள்.

இப்படி ஆழ்வார் பெரிய திருமொழி முடிக்கும் போது வைகுண்டம் கேட்டு கதறியும், எம்பெருமானோ, 'அஜாமிளன் என்றால், உடனே பரமபதம் கொடுத்து விடலாம்.

இன்னும் கொஞ்ச நாள் இவர் பூலோகத்தில் இருந்தால், தனக்கு மேலும் சில பிரபந்தம் கிடைக்குமே! மேலும் இவர் பாடுவாரே! இவர் பாடுவது நன்றாக இருக்கிறதே! அதை கேட்டு ஆனந்தபடலாமே" என்று திருவுள்ளம் கொண்டார். 

திருமங்கையாழ்வாருக்கு உடனே பரமபதம் கொடுக்க தயங்கினார் பெருமாள். 

'இன்னும் கர்மா பாக்கி உள்ளது. இப்பொழுது பரமபதம் கிடையாது' என்று முசுகுந்தன், பரத யோகிக்கு சொன்னது போல, ஆழ்வாரிடம் சொல்ல முடியாது,

இனி இவர் இந்த உலகத்தில் ஜீவிக்க வேண்டுமென்றால், இவருக்கு பகவத் அனுபவமே ஆதாரம். 

திருமங்கையாழ்வார் இப்படி ஆர்த்தியோடு வைகுண்டம் கேட்டும், பரமபதம் கொடுக்க தயங்கிய பெருமாள், இவரை மேலும் சில காலம் பூலோகத்தில் இருக்க வைக்க, தானே அவருக்கு சில திவ்யகாட்சிகளை, சில அனுபவங்களை கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். 

இப்படி பெருமாளால் கிடைக்கப்பெற்ற காட்சிகளாலும், அனுபவங்களாலும் உகந்திருந்த திருமங்கையாழ்வார், தொடர்ந்து, திருகுருந்தாண்டாகம், திருநெடுந்தாண்டாகம் என்று பாட ஆரம்பிக்கிறார்.

ஆழ்வாருக்கு ஏற்பட்ட இந்த திவ்ய அனுபவங்களே, அடுத்து அவர் இயற்றிய, திருகுறுந்தாண்டாகம், திருநெடுந்தாண்டாகம், மேலும் திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் போன்ற பாசுரங்களில் காண்கிறோம். 


தானே நாயகியாக ஆகி, விரகத்தில் அழுவதும், சிரிப்பதும், ப்ரணய கோபம் அடைவதும்,

நாயகியான தன் நிலையை கண்டு, தனக்கு பரிந்து கொண்டு தாய் வருந்தி பெருமாளிடம் சொல்லி அழுவதுமாக, பெருமாள் இவருக்கு கொடுத்த அனுபவங்களை பாசுரங்களாக அள்ளி கொடுத்து விட்டார்.

Wednesday 26 January 2022

திருநெடுந்தாண்டாகம் சேவிப்போருக்கு கிடைக்கும் பலன் என்ன? என்று சொல்கிறார், திருமங்கையாழ்வார். பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. மின்னுமா மழைதவழும் மேக வண்ணா..

திருநெடுந்தாண்டாகம் சேவிப்போருக்கு கிடைக்கும் பலன் என்ன? என்று சொல்கிறார், திருமங்கையாழ்வார்.

மின்னும் மா மழை தவழும் மேக வண்ணா.

விண்ணவர்தம் பெருமானே! அருளாய், என்று,

அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த

அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை,

மன்னு மாமணி மாட வேந்தன்

மானவேல் பரகாலன் கலியன் சொன்ன

பன்னிய நூல் தமிழ்மாலை வல்லார் 

தொல்லைப் பழவினையை முதல் அரிய வல்லார் தாமே


மின்னிக்கொண்டு பெரிய மழை கொட்டக்கூடிய மேகம் போன்ற வண்ணம் உடையவரே! (மின்னும் மா மழை தவழும் மேக வண்ணா)

தேவாதி தேவனே (விண்ணவர்தம் பெருமானே!) அருளாய்! என்று முனிவர்களும்,தேவர்களும் துதிக்க (முனிவரோடு அமரர் ஏத்த)

ஹம்சாவதாரம் செய்து வந்து, வேதத்தினுடைய அர்த்தத்தை சொன்ன பெருமானே ! (அன்னமாய் அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை)


பெரிய பெரிய மணிமாடங்களையுடைய திருநாங்கூர் என்ற சாம்ராஜ்யத்துக்கு மன்னனாக இருக்கக்கூடிய, கையில் வேல் வைத்திருக்கும் இந்த பரகாலன், கலியன் என்று புகழ் பெற்றவன் சொன்ன அற்புதமான இந்த தமிழ் நூலை, எந்தெந்த பாக்கியவான்கள் சேவிக்கிறார்களோ (மன்னு மாமணி மாட வேந்தன் மானவேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னிய நூல் தமிழ்மாலை வல்லார்)

அவர்கள் ஜென்ம ஜென்மமாக செய்த கோடி பாவங்களும் பொசுங்கி போகும்.


எத்தனை முறை களை எடுத்தாலும், அது மீண்டும் மீண்டும்  வளரும். அது போல முன்பு செய்த பாபங்கள் பொசுங்கினாலும், பாவம் செய்ய வேண்டும் என்கிற வாசனையால் மீண்டும் பாவம் செய்ய தோன்றும். 

எப்படி மண்ணுக்கடியில் உள்ள அந்த வேர் கிழங்கை வெட்டி எரிந்தால், மீண்டும் களை வளராதோ, அது போல, பாவம் செய்ய 'முதல்' காரணமான அந்த வாசனையும் சேர்ந்து அழிந்து போகும்" (தொல்லைப் பழவினையை 'முதல்' அரிய வல்லார் தாமே)

என்று திருநெடுந்தாண்டாகத்திற்கு பலஸ்ருதியும் தானே சொல்கிறார் திருமங்கையாழ்வார்.

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் திருவடிகளே சரணம்

பரகால நாயகி, ஸ்ரீரங்கநாதரோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள்.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென்

பரகால நாயகி, ஸ்ரீரங்கநாதரோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள்.

உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்து

என் ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே

தெள்ளூரும் இளந்தெங்கின் தேறல் மாந்தி

சேல் உகளும் திருவரங்கம் நம்மூர் என்ன

கள்ளூரும் பைந்துழாய் மாலை யானை

கனவு இடத்தில் யான் காண்பன் 

கண்ட போது,

புள்ளூரும் கள்வா நீ போகேல், என்பன்

என்றாலும் இது நமக்கோர் புலவி தானே?

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி 'வயலாலி மணவாளன்' நினைவாகவே இருக்கிறாள்.





தன் தோழியிடத்தில் சொல்கிறாள்.

"ஒரே பெருமாள் தான், அனைத்து திவ்ய தேசங்களிலும் இருக்கிறார். 

பெருமாள், என்னிடத்தில் எதையும் எதிர்பார்க்கமல் (அவ்யாஜமான) கருணையையும், உறவையும் காட்டி, 

அவருடனேயே இருக்க வேண்டும் என்ற ஆசையை மூட்டி,

சற்று அவரை பிரிந்தாலும், 'எனக்கு தாளவே தாளாது' என்கிற விரக வேதனையையும் கொடுத்து விட்டார்.


விரக வேதனை மற்றவர்களுக்கும் ஏற்பட்டு இருக்கலாம். 

ஆனால், 

என் அளவுக்கு இப்படி ஒரு தாளாத விரக வேதனையை, வேறு யாரும் அனுபவித்து இருக்க முடியாது. 

அப்படி ஒரு விரக வேதனையை 'எனக்கே' கொடுத்து இருக்கிறார்.

பிரிவு என்பது இருவருக்கும் பொது தானே!

ஆனால், இந்த விரகம் எனக்கு மட்டும் ஏற்படுகிறதே தவிர, அவருக்கு கொஞ்சம் கூட ஏற்படுவதாக தெரியவில்லை. 


பெருமாள் திடீரென்று வருகிறார். என்னை கட்டிக்கொள்கிறார். பிறகு என்னை விட்டு விட்டு எங்கோ சென்று விடுகிறார். பிறகு மீண்டும் வருகிறார். கட்டிக்கொள்ள வருகிறார். பிரிகிறார். 

என்னை கட்டிக்கொள்ள வருகிறாரே! தவிர, என்னை பிரியும் போது, இவர் வேதனைப்படுவதாகவே தெரியவில்லை. 

பிரிவு ஏற்படும் போது, இருவருக்குமே விரகம் ஏற்பட்டால் 'சரி அவருக்கும் விரகம் உள்ளது' என்று சற்று சமாளிக்கலாம்.

இங்கோ! மொத்த விரகமும் எனக்கே ஏற்படுகிறது. 

இப்படி விரகம் என்ற நோயை எனக்கே தந்து விட்டு சென்று விடுகிறார் (உள்ளூரும் சிந்தைநோய் 'எனக்கே' தந்து)

இந்த தாள முடியாத விரகத்தால், என் உடல் மெலிந்து, என் வளையல்கள் கையில் நிற்காமல் விழுந்து விடுகிறது. 

நான் வாடி போய், என் அழகும் விரகத்தால் உருக்குலைந்து போய் விடுகிறது. 

இவர் என்னை பிரியும் போது, என்னை விரகத்தில் மூழ்கடித்து, என் வளையையும், என் முகத்தில் இருந்த பொலிவையும் கூட எடுத்து கொண்டு சென்று விடுகிறார். (என் ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே)


ஒரு சமயம், கருட வாகனத்தில் பெருமாள் என் எதிரே வந்தார்.

அப்போது அவர் கழுத்தில் போட்டிருந்த துளசி மாலையில் உள்ள மகரந்த சுகந்தம் என்னை மயக்கி விட்டது.

(கள்ளூரும் பைந்துழாய் மாலை யானை)

மயங்கி அவர் மார்பிலேயே விழுந்தேன். அவரும் என்னை அணைத்து கொண்டார்.

சற்று நேரம் கழித்து, கண் விழித்து அவரை கண்ட போது, (கண்ட போது) "நீங்கள் எந்த ஊர் பெருமாள்? இது எந்த ஊர் துளசி? வைகுண்டத்தில் இருந்து வந்த துளசியா?" என்று கேட்டேன்.

உடனே அவர், 

"இளம் தென்னை மரங்களில் பூத்த பூக்கள், தெளிந்த நீரில் சிந்தி கிடக்க, அதில் உள்ள தேனை குடித்து சேல் மீன்கள், துள்ளி விளையாடும் திருவரங்கம் நம்மூர். இது ஸ்ரீரங்க துளசி" என்றார் (தெள்ளூரும் இளந்தெங்கின் தேறல் மாந்தி சேல் உகளும் திருவரங்கம் நம்மூர் என்ன)

"நீங்கள் எந்த ஊர்?" என்று கேட்டதற்கு, "திருவரங்கம் என் ஊர்" என்று சொல்லாமல், "திருவரங்கம் நம்மூர்" என்று என்னையும் சேர்த்து கொண்டு சொல்கிறாரே! என்று கவனித்தேன். 

பெருமாள் என்னிடம் எத்தனை ப்ரியம் கொண்டுள்ளார்! என்று நினைத்து ஆனந்தம் அடைந்தேன்.

இப்படி சிறிது நேரம் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே, கருடனை ஒரு கையால் பெருமாள் தொட, உடனே அந்த கருடாழ்வார் பெருமாளை தூக்கிக்கொண்டு மேலே சென்று விட்டார்.


"கருட வாகனத்தில் உள்ள கள்வா! என்னை விட்டு போகாதீர்கள்!!" என்று சொல்லியும், கேளாமல் என்னை மீண்டும் விட்டு விட்டு சென்று விட்டார்.

(புள்ளூரும் கள்வா நீ போகேல், என்பன்)


"உங்கள் நினைவாக, அந்த துளசியையாவது தந்து விட்டு போங்கள்!" என்றேன். 

'உனக்கு துளசி பிரசாதத்தை விட, விரகம் என்ற உயர்ந்ததான பிரசாதத்தை தருகிறேன்' என்று சொல்லி, 'விரகத்தை எனக்கே தந்து விட்டு போனார்" என்று பரகால நாயகி தான் படும் விரகத்தை சொல்லி கண்ணீர் வடிக்கிறாள்.

முதலில் வயலாலி மனவாளனாக வந்தார். இப்போது, ஸ்ரீரங்கநாதனாக வந்து ஒரு க்ஷணம் அணைத்து கொண்டார். 

'ஒரு க்ஷணம் தான் என்பதால், நான் நிஜத்தில் பெருமாளின் அணைப்பை அனுபவித்தேனா? அல்லது கனவில் அனுபவித்தேனா?' என்று குழம்பி நிற்கிறேன்.

ஒருவேளை உண்மையிலேயே கிடைத்த தரிசனம் தான், கனவு போல போய்விட்டதோ! என்றும் தெரியவில்லை.

ஒரு க்ஷணம் நான் கண்டு அனுபவித்தது, கனவு போல இருக்கிறதே தவிர, ஆசை தீர அனுபவித்ததாக தெரியவில்லை. 

(கனவு இடத்தில் யான் காண்பன்)

ஒரு வேளை, 'என்னை விட்டு போகாதீர்கள்' என்று சொன்னதற்கு பதில், 'என்னையும் கூட்டி கொண்டு செல்லுங்கள்' என்று சொல்லி இருந்தால் என்னையும் கூட்டிக்கொண்டு சென்று இருப்பாரோ?'  (என்றாலும் இது நமக்கோர் புலவி தானே?) என்று சொல்லி கண்ணீர் விட்டாள்.

இப்படி திடீரென்று வருவதும், திடீரென்று போவதுமாக பெருமாள் இருக்க,  'பெருமாள் எனக்கே விரகத்தை கொடுத்து செல்கிறார்' என்று ஏங்கி நிற்கிறாள் பரகாலநாயகி.

Tuesday 18 January 2022

நாரையை திருக்கண்ணபுரத்துக்கு தூது அனுப்புகிறாள் பரகால நாயகி. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம். செங்கால மடநாராய் இன்றே சென்று...

பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

செங்கால மடநாராய்

இன்றே சென்று

திருக்கண்ணபுரம் புக்கு

என் செங்கண் மாலுக்கு

என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்

இது ஒப்பது எமக்கு இன்பமில்லை

நாளும் பைங்கான மீதெல்லாம் உனதேயாக

பழனமீன் கவர்ந்து உண்ண தருவன்

தந்தால் இங்கே வந்து இனிதிருந்து 

உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் 

இனிது இன்பம் எய்தலாமே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

கொக்கில் ஒரு இனம் 'நாரை'. வெண்மையாக இருக்கும் நாரைக்கு கால் சிவப்பாக இருக்கும்.

ஒருநாள், மோகமுள்ள பக்ஷி ஒன்று (மடநாராய்) திருக்கண்ணபுரம் நோக்கி பறந்து சென்று கொண்டிருப்பதை பார்க்கிறாள் பரகால நாயகி.

அது உணவுக்காக கடலை நோக்கி தான் செல்கிறது என்று அறிந்து கொண்டாள்.


"திருக்கண்ணபுரத்தில் ஒப்பிலியப்பன் நிற்கிறாரே! அவரிடம் தனக்காக தூது செல்ல, அந்த நாரையை அழைக்கலாமா?" என்று நினைத்தாள் பரகால நாயகி.

"சிவந்த கால்களையுடைய நாரையே! நீ கடலுக்கு சென்று மீன் தேட வேண்டாம். 

நீ அதற்கு பதில் இன்றே திருக்கண்ணபுரம் செல்லேன்!

அங்கு மீன் போன்ற கண்களை உடைய சவுரிராஜன் இருக்கிறார். என் சித்தத்தை மயக்கிய செங்கண் மாலுக்கு, என் காதலருக்கு, என் துணைவருக்கு, 'இப்படி ஒருவள் உங்களுக்காக தவித்து, காத்து இருக்கிறாள்' என்று சொல்வாயாகில், அதை விட ஒரு பேருதவி ஒன்றும் இருக்க முடியாது. அதை விட பேரின்பம் ஒன்று கிடையாது எனக்கு" (செங்கால மடநாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பமில்லை) என்றாள் பரகாலநாயகி

"நான் எனக்கு உணவான மீனை சாப்பிடுவதற்காக கடலுக்கு செல்லும் போது, உனக்கு தூது செல்லுமாறு அழைக்கிறாயே! உனக்கு உதவி செய்தாலும், அங்கே எனக்கு யார் சாப்பிட கொடுப்பார்கள்?" என்று நாரை கேட்க,

"கவலையே படாதே! நீ அவரிடம் என்னை பற்றி சொல்லிவிட்டு, திரும்பி இங்கே வா. பெருமாளிடம் தூது சென்ற நீ, எனக்கு உறவினன் ஆகிறாய்! 

உனக்காக  சோலையாக இருக்கும் என்னுடைய தோட்டம் முழுக்க திறந்து விடுகிறேன். தோட்டம் முழுவதும் உனக்குத்தான். உனக்கு விருந்து வைக்கிறேன்.

அதில் உள்ள பெரிய குளத்தில் துள்ளி விளையாடும் மீன்களை நானே உனக்கு உண்ண தருவேன். உங்களை விரட்டவே மாட்டேன் (நாளும் பைங்கான மீதெல்லாம் உனதேயாக பழனமீன் கவர்ந்து உண்ண தருவன்)


நீ மட்டுமல்ல, உன்னோடு உன் காதலியான பெண் நாரையையும் அழைத்து கொண்டு வா. 

இந்த பெரிய தோட்டத்திலேயே நீங்கள் இருவரும் விளையாடி மகிழலாம்.

(தந்தால் இங்கே வந்து இனிதிருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே)

என்று நாரையிடம் தூது விடுகிறாள் பரகாலநாயகி.

திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி, நீயும் உன் பேடையும் என்று நாரையையும், முந்தைய பாசுரத்தில் இதே போல வண்டையும் சொல்கிறார். 

ஆசாரியனையும், அவருடைய தர்ம பத்னியையும் சொல்கிறார் என்பது தத்துவம்.

ஆசாரியன் தான், நமக்காக 'பெருமாளிடம் சென்று சிபாரிசு செய்கிறார்'. 

அப்படி பேருதவி செய்த குருவுக்கு, நாம் என்ன பதில் செய்து விட முடியும்?

தனக்காக தூது சென்று, பெருமாளிடம் நம்மை பற்றி சொன்ன நாரைக்கு தன் இடத்தையே கொடுத்து, அவருக்கு பிடித்த உணவை கொடுப்பது போல, குருவுக்கும், அவர் தர்ம பத்னிக்கும் சேவை செய்யவேண்டும் என்பதே தாத்பரியம்.

Sunday 16 January 2022

சிறு வண்டை தூது விடுகிறாள் பரகாலநாயகி. தேமருவு பொழிலிடத்து... பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்

பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

தேன் மருவு பொழில் இடத்து மலர்ந்த போது

தேன் அதனை வாய்மடுத்து

உன் பெடையும் நீயும்,

பூமருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த

அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,

ஆமருவி நிரை மேய்த்த அமரர் கோமான்

அணியழுந்தூர் நின்றானுக்கு 

இன்றே சென்று,

நீ மருவி 

அஞ்சாதே நின்று 

ஓர் மாது நின் நயந்தாள் 

என்று இறையே இயம்பி காணே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையழ்வார்)

பரகால நாயகியை ஆட்கொண்ட பிறகு, 'ஸ்ரீரங்கம் செல்கிறேன்' என்று சொல்லி விட்டு சென்று விட்டார் பெருமாள். 

பரகால நாயகி, 'வருவாரா?' என்று காத்து கிடக்கிறாள். 

வெகு நாட்கள் ஆகி விட்டது. 'என்னை மறந்து விட்டாரா?' என்று நினைக்கிறாள்.

தன் காதலனோடு சேர முடியாமல் தவிக்கும் பரகால நாயகி, ஒருசமயம் நந்தவனத்தில் (பொழில் இடத்து) தேன் நிரம்பி இருக்கும் (தேன் மருவு) மலர்ந்த பூக்களில் உள்ள (மலர்ந்த போது) தேனை வாய் முழுவதும் எடுத்து ஒரு ஆண் வண்டு தன் காதலியியுடன் சேர்ந்து குடிப்பதை பார்க்கிறாள் (தேன் அதனை வாய்மடுத்து).

தன் காதலனோடு சேர்ந்து தேன் குடித்து, அந்த பூவின் இதழ்களிலேயே படுத்து விளையாடும், ஆண் வண்டையும், அதன் காதலியையும் பார்த்து, தனக்காக தூது செல்லுமாறு கேட்கிறாள் பரகால நாயகி.

"பூக்களின் இதழில் உன் பேடையோடு விளையாடி, புள்ளிகள் ஏற்பட்டு இருக்கும் வண்டே! 

எம்பெருமாள் இங்கு இல்லை. எம்பெருமானிடம் என்னை பற்றி சொல்லேன்! 

என்னை அவருடன் சேர்க்க, எனக்காக தூது செல்வாயா? 

நீ எனக்கு இந்த உதவி செய்தால், உன்னுடைய ஆறு சிறு கால்களிலும் விழுந்து தொழுவேன் (உன் பெடையும் நீயும், பூமருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை)

மேலும்,

திருவரங்கம் செல்கிறேன்! என்று சொல்லி சென்றவர். தேவாதிதேவனான அவர், இப்பொழுது (மாயவரம் அருகில்) தேரழுந்தூர் என்ற திவ்ய தேசத்தில் இருக்கிறார் என்று கேள்வி படுகிறேன்.' என்றாள்.

அந்த ஜோடி வண்டு, "உன்னையும் அவரோடு சேர்த்து வைக்கிறேன். அவர் அடையாளம் சொல்லேன்" என்று கேட்க,

"முப்பத்து முக்கோடி தேவர்களையும் மேய்க்கும் என் நாதன், 

பிருந்தாவனத்தில் மேய்த்தது போதாதென்று, யமுனா நதியில் மேய்த்தது போதாதென்று, 

அந்த பசு மாடுகளை எல்லாம் கூட்டிக்கொண்டு, காவிரி தீரத்தில் வந்து மாடு மேய்க்க ஆசைப்பட்டு, அங்கு சென்று இருப்பதாக கேள்விப்படுகிறேன்" என்றாள் பரகால நாயகி.

'மாடு மேய்ப்பதில் ஏன் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது?' என்று வண்டு கேட்க,





"தேவர்களுக்கு அம்ருதம் கிடைக்க கூர்ம அவதாரம் செய்து முதுகை கொடுத்தார். அசுரர்கள் அம்ருதத்தை தூக்கி சென்று விட, அவர்களுக்காக மோகினி வேடம் போட்டு அம்ருதத்தை வாங்கி தந்தார். 

"தன்னிடம் என்ன கிடைக்கும் என்று பார்த்தார்களே தவிர, தனக்கு பெருமாள் தான் வேண்டும் என்று கேட்பவர்கள் குறைச்சல் தானே என்று நினைத்த இவர், தேவர்களை மேய்த்ததோடு, மாடுகளையும் மேய்க்கலாம் என்று வர, இந்த மாடுகளோ, தனக்கு போட்ட புல்லையும் உண்ணாமல், பெருமாள் திருவடியே போதுமென்று, இவர் பாதத்தையே நக்கி கொடுக்க, "பெருமாள் தான் வேண்டும்" என்று நினைக்கும் மாட்டின் மீது இவருக்கு பிரியம் ஏற்பட்டுவிட்டது' என்றாள்.

'அவர் அடையாளம் என்ன?' என்று வண்டு கேட்க,

"பசுமாட்டை தனக்கு பின்னால் நிறுத்தி கொண்டு, அதன் மீது ஒரு கையை போட்டு கட்டிக்கொண்டு (ஆமருவி), மற்றொரு கையில் சுருள் கோல் வைத்து கொண்டு, திருவழுந்தூர் என்ற தெரழுந்தூரில் நின்று கொண்டிருப்பார் (நிரை மேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக்கு). அது தான் அவரது அடையாளம்" என்றாள் பரகால நாயகி.


"சரி. இரண்டு நாள் கழித்து செல்லவா?" என்று வண்டு கேட்க,

"இன்றே செல்லுங்கள்" (இன்றே சென்று,) என்றாள் பரகால நாயகி.


"நீ சொல்வதால் போகிறேன். ஆனால் பயமாக இருக்கிறதே!" என்று சொல்ல,


"நீ அஞ்சவே வேண்டாம். அவர் மிகவும் சாந்த ஸ்வபாவம் உடையவர் (நீ மருவி அஞ்சாதே). தைரியமாக அவரை ஒரு சுற்று சுற்றிவிட்டு, 'உங்களை எதிர்பார்த்து ஒரு மாது காத்து கொண்டு இருக்கிறாளே!" என்று மட்டும் சொல்லி விட்டு, அவர் முகத்தை கவனித்து விட்டு வா" (நின்று ஓர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பி காணே) என்று சொன்னாள்,

"மாது என்று மட்டும் சொன்னால் போதுமா? அவரிடம், பரகால நாயகி என்று உங்கள் பெயரை சொல்லவேண்டாமா?" என்று கேட்க,


"எனக்கு தரிசனம் கொடுத்து, என்னை கட்டிக்கொண்டு, என்னை அழ விட்டு சென்றார். அவரிடம் "ஒரு மாது" என்று சொன்னாலேயே என்னை பற்றி தான் நினைவுக்கு வரும்" என்று சொல்ல,

"அவரின் முகத்தை கவனி என்று சொன்னாயே?" என்று வண்டு கேட்க,

"நீ என்னை பற்றி சொன்னதுமே 

அவளா! என்று என்னை அலட்சியமாக நினைக்கிறாரா? அல்லது

யாரை சொல்கிறாய் என்று தெரியவில்லையே! என்று நினைக்கிறாரா? 

அல்லது

அப்படியா! என்று கருணையோடு கேட்கிறாரா?

என்று கவனித்து எனக்கு சொல். 

அவர் அப்படியா!  என்று என்னை பற்றி நினைவோடு கேட்டால், அவர் என் மீது கருணை வைத்து இருக்கிறார் என்று அறிந்து கொள்வேன்" என்றாள் பரகால நாயகி.

Friday 14 January 2022

'என்னை அடிமையாக்கி விட்டு, ஸ்ரீரங்கம் சென்றாரே' என்று பரகால நாயகி சொல்கிறாள். பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்... மின்னிலங்கு திருவுருவும்...

பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

மின் இலங்கு திரு உருவும்

பெரிய தோளும்

கரி முனிந்த கை தலமும்

கண்ணும் வாயும்

தன் அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கும் 

மகரம்சேர் குழையும் காட்டி

என் நலனும் என் நிறையும்

என் சிந்தையும்

என் வளையும் கொண்டு 

என்னை ஆளும் கொண்டு

பொன் அலர்ந்த நறுஞ்செருந்தி பொழிலின் ஊடே

புனல் அரங்கம் ஊரென்று போயினாரே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

'மின்னல் போல ஜொலிக்கும் அவருடைய திரு உருவமும் (மின் இலங்கு திரு உருவும்), 

அவருடைய அழகிய பெரிய தோளும் (பெரிய தோளும்), 

குவலயாபீடம் என்ற யானை ஒரே குத்தில் வீழ்த்திய அந்த திரு கைகளும் (கரி முனிந்த கை தலமும்), 

அவருடைய அழகிய கண்களும், மந்தஹாசம் செய்யும் திருவாயும் (கண்ணும் வாயும்), 

அன்று மலர்ந்த நறுமணமிக்க பூக்களை கொண்டு, அவர் கழுத்தில் போட்டுக்கொண்டிருக்கும் பெரிய வைஜயந்தி மாலையும், அவர் காதில் போட்டுக்கொண்டிருக்கும் மகர குண்டலங்கள் அந்த வைஜயந்தி மாலையை ஸ்பரிசிக்கும் அழகையும் எனக்கு காட்டி (தன் அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி), 

எனக்கு எது நலமோ, எனக்கு எது நிறைவோ, அதை தானே நிர்வாகம் செய்வதாக ஆக்கி (என் நலனும் என் நிறையும்), 

என் எண்ணத்தையும், என் வளையல்களையும் எடுத்து கொண்டு, கடைசியில் என்னையே அவருக்கு அடிமையாக்கி கொண்டு விட்டு (என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு) 'போய் வருகிறேன்' என்று சொல்லி கிளம்பிவிட்டார். 

அவருக்கு அடிமையாகிய நானும் அவர் எங்கு செல்கின்றார்? என்று பார்த்தேன். 

திடீரென்று மறைந்து விடாமல், தன்னுடைய பின் அழகையும் காண்பித்து, பொன் நிறத்தில் பூக்கும் பொய்கையில் புதர் புதராக வளரும் செருந்தி பூக்கள் (சம்பகா புஷ்பம்) பூத்த நந்தவனத்திற்கு இடையே புகுந்து, 'எங்கள் ஊர் திருவரங்கம் செல்கிறேன்' என்று சொல்லி போகின்றாரே ! (பொன் அலர்ந்த நறுஞ்செருந்தி பொழிலின் ஊடே புனல் அரங்கம் ஊரென்று போயினாரே)' என்று பெருமாள் தனக்கு தரிசனம் கொடுத்து விட்டு சென்று விட்டாரே என்று கண்ணீர் சிந்துகிறாள்.

Thursday 13 January 2022

பெரியோர்களிடம் எப்படி பழக வேண்டும்? ஆளவந்தார் திருவனந்தபுரம் செல்ல வைத்த பாசுரம். அர்த்தம் தெரிந்து கொள்வோம். கெடுமிட ராயவெல்லாம் ...

பெரியோர்களை பார்க்கும் போது, "முதலில் அவர்களுடைய திருவடியை தான் பார்க்க வேண்டும். பிறகு தான் அவர்களின் முகத்தை பார்க்கவேண்டும்".

இது பெரியோர்களிடம் மரியாதையாக பழகும் முறை. 

ஒரு அரசனை பார்த்தாலும், இப்படி தான் பார்க்க வேண்டும்.

நம்முடைய ஆசாரியனை பார்த்தாலும், முதலில் அவருடைய திருவடியை பார்த்து விட்டு தான் அவருடைய முகத்தை பார்க்க வேண்டும்.

தெய்வத்தை பார்த்தாலும், முதலில் திருவடியை பார்த்து விட்டு தான், அவருடைய திருமுகத்தை பார்க்க வேண்டும்.


திருவடியை பார்த்து விட்டு, முகத்தை பார்ப்பது என்பது "மரியாதை".

முகத்தை பார்த்து விட்டு, பிறகு வெட்கப்பட்டு தலை குனிந்து திருவடியை பார்ப்பது என்பது "அன்பு".

திருவடியின் பெருமையை ஆளவந்தார் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் நமக்கு காட்டுகிறது.

திருமங்கையாழ்வார், திருவரங்கத்தில் நம்பெருமாள் முன்பு தம்முடைய திருநெடுந்தாண்டக பாசுரங்களை அனுபவித்துப் பாடினார்

அரங்கன், “ஆழ்வாரின் விருப்பம் என்னவோ?” என்று கேட்க, 

திருமங்கையாழ்வார், ”மார்கழியின் மோக்ஷ உத்ஸவத்தன்று வடமொழி வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியையும் அரங்கன் கேட்டருள வேண்டும்”  என வேண்டினார். 

அரங்கன் மகிழ்வுடன் இணங்கினார்


இதை படிப்படியாக சீர்படுத்தப்பட்டு, இதில் மோஹினி அவதாரம், திருக்கைத்தல சேவை, வேடுபறி, மற்றும் நம்மாழ்வார் மோக்ஷம் போன்றவை சேர்த்து பிரமாண்ட உத்ஸவமாக நாதமுனிகள் ஆரம்பித்தார்.

அவரை தொடர்ந்து ஆளவந்தார், சுவாமி ராமானுஜர் மற்றும் மணவாள மாமுனிகள் என்னும் ஆச்சாரியார்கள், தொடர்ந்து, இன்று வரை நிர்வகித்து வருகின்றனர்.

இந்த உத்ஸவத்திற்காக ஆழ்வார்திருநகரியில் இருந்து நம்மாழ்வார் விக்கிரகத்தை திருவரங்கம் கோயிலுக்கு எழுந்தருள செய்வார்கள்.  

இது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி முதல் பத்து நாட்கள் நடைபெறும்.

இந்நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி அரையர்களால் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும். 

இது பத்து  நாட்கள் இரவில் நடைபெறும். 

எனவே ’இராப்பத்து’ எனப்படுகிறது.  

இதுவே ’அத்யயன உத்ஸவம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.

அத்யயன உத்சவ காலத்தில், வைஷ்ணவ ஆசாரியர்கள் பெருமாளை விட்டு போகவே மாட்டார்கள்.

அத்யயன உத்ஸவத்தில் தான், திவ்ய பாசுரங்களை, பெருமாளே உட்கார்ந்து கேட்பார்.

பரம ரசிகர்களான ஆசாரியர்கள் பாசுரத்தையும், பெருமாள் கேட்பதையும் அனுபவிக்காமல் வேறு எங்காவது போக ஆசைப்படுவார்களா? 

இந்த அனுபவத்தை விடுவதற்கு யாருக்கு தான் மனம் வரும்?

இந்த அத்யயன உத்ஸவத்தை ஆரம்பித்தவரே நாதமுனிகள் தான்.

அவரை தொடர்ந்து நிர்வகித்து வந்தவர் ஆளவந்தார்.

"108 திவ்ய தேசங்களை நமது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து, திவ்ய தேச தரிசனம் செய்ய சொல்லி இருக்கிறார்களே! 

மேல் நாட்டு, மலை நாட்டு திவ்ய தேசங்கள் அனைத்தும் பார்க்க வேண்டுமே! பார்க்க வேண்டுமே!"

என்று ஆளவந்தார் ஆசைப்பட்டு கொண்டிருந்தார்.


அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. மேலும், நம்பெருமான் அனுமதிக்காக காத்து இருந்தார்.

அத்யயன உத்சவம் நம்பெருமாளுக்கு ஆரம்பமானது.

பாசுரங்களை கேட்டு, பெருமாளையும் பார்த்து ரசித்து கொண்டிருந்தார் ஆளவந்தார்.





பத்மநாபன் மீதான பாசுரம் வந்த போது, "அனந்தபுர நகர் புகுதும் இன்றே" என்று சொல்லும்போது, கொஞ்சம் வீசி சொல்லி, ஆளவந்தாரை அரையர் பார்க்க, 'இது தான் நம்பெருமாள் நியமனம்' என்று, அப்படியே புறப்பட்டு விட்டார்.


ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு, போகும் வழியில் உள்ள திவ்ய தேசங்கள் அனைத்தையும் சேவித்து கொண்டே, நடந்து நடந்து, 'திருவனந்தபுரம்'  வந்து சேர்ந்தார்.


பத்மநாபனை அங்கு மூன்று வாசல் வழியாக தான் பார்க்க முடியும். 

முதலில் திருவடி, பிறகு திருநாபி, பிறகு திருமுகம் என்று மூன்று ஸ்தானமாக பெருமாளை இங்கு பார்க்கலாம்.

'மூன்று உலகங்களாக விராட் புருஷனாக (வ்யாஹ்ருதி - பூ: புவ ஸுவ:) தானே இருக்கிறேன்' என்கிறார்.

ஸ்ரீரங்கத்தில் இருந்து நடந்தே வந்து, ஆசையோடு பார்க்க வந்த ஆளவந்தார், கோவிலுக்குள் வந்து, முதல் வாசலில் பெருமாளின் "திருவடியை" பார்த்தார்.

பார்த்து விட்டு, உடனேயே, திரும்பி விட்டார்.

சேவை செய்து வைப்பவர்கள், ஆளவந்தாரை கூப்பிட்டு, 'இதோ பாருங்கள் பெருமாளின் நாபி கமலம். ப்ரம்ம தேவனை படைத்த நாபி கமலத்தை பாருங்கள்' என்று காண்பித்து அழைக்க,

ஆளவந்தார் அவர்களிடம், "அதற்கு அதிகாரம் நமக்கில்லை. திரு நாபியை தரிசிக்கவோ,திருமுகத்தை தரிசிக்கவோ பிராட்டிக்கு தான் அதிகாரம். அடியேனுக்கு திருவடியே போதும்" என்று சொல்லிவிட்டு திரும்பினார்.

ஆளவந்தாரை திருவனந்தபுரம் கொண்டு வர செய்த நம்மாழ்வார் பாசுரம் :

கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார் விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் தடமுடை வயல் அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே

- திருவாய்மொழி (நம்மாழ்வார்)

கேசவா! என்ற மூன்றெழுத்து நாமத்தை சொன்னால் துன்பம் அனைத்தும்  தொலைந்து போகுமே! (கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன

இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு நரக வேதனைகளை அனுபவிக்க யமலோகம் யமதூதர்கள் அழைத்து செல்லும் போது, 

இங்கு ஏன் வந்தாய்? அனைத்து பாவங்களையும் நாசம் செய்யவல்ல, கேசவனை நீ பஜிக்கவில்லையா? கேசவனின் நாமத்தை சொல்பவர்களுக்கு நரக வேதனை நேராதே! கேசவ நாமத்தை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும், கேசவனை பூஜை செய்ததற்கு சமம் அன்றோ!' என்று எமதர்மன் கேட்பாரே!

கேசவா! என்று சொல்பவருக்கு எம பயமில்லையே! (நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்)

ஆதிசேஷன் மேல் விரும்பி பள்ளி கொள்பவன் வீற்று இருக்கும் (விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான்)

வண்டுகள் ரீங்காரம் செய்யும், தடாகங்கள் நிறைந்த, வயல்வெளிகள் நிறைந்த (சுரும்பு அலற்றும் தடம் உடை வயல்)

திருவனந்தபுரத்திற்கு இன்றே செல்வோமே! (அனந்தபுரநகர் புகுதும் இன்றே)


இதை கேட்டதும், ஆளவந்தார், நம்பெருமாள் உத்தரவாக ஏற்று,  திருவனந்தபுரத்திற்கு கிளம்பி விட்டார். 

Tuesday 11 January 2022

ஸ்ரீரங்கம் வா, உனக்கு இடம் தருகிறேன்' என்று பெருமாள் பரகால நாயகியிடம் சொல்கிறார். இருகையில்சங் கிவைநில்லா.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்

 பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.


இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்
இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட,பெருவயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்
பெரும் தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு 
ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து
என் பொரு கயல் கண்ணீர் அரும்ப புலவி தந்து
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!
- திருநெடுந்தாண்டகம் (திருமங்கையாழ்வார்)

பெருமாளுடைய மகத்துவம் தெரிந்ததால், அவருடைய பிரிவினால் விரகம் ஏற்பட்டு, உடல் மெலிந்து, நான் அணிந்திருந்த வளையல்கள் கூட என் கையில் நிற்காமல், தானே கழண்டு விழுந்து விடுகிறதே ! (இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்),

அவர் எப்பேர்பட்டவர் தெரியுமா?

பேரொலி எழுப்பும் அலைகளை உடைய பெருங்கடலில் உள்ள நீரை தன்னுடைய பெரிய வயிற்றில் நிரப்பி கொள்ளும் காளமேகத்தின் நிறத்தை ஒத்து இருப்பார். கருமுகில் போல வண்ணம் உடையவர். (இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட, பெருவயிற்ற கருமுகிலே ஒப்பர் வண்ணம்)

உலகத்தையே உண்டவர். பூமி பிராட்டி மீது அத்தனை அன்பு அவருக்கு, (உலகுண்ட பெருவாயர்) அது போல, பரகால நாயகியான என்னிடத்திலும் பேரன்பு உடையவர். என்னையும் அப்படியே விழுங்கிவிடுவார்.

பெருமாள் ஆசையோடு என்னிடத்தில் பேசுவதற்காக அருகில் வந்தார் (இங்கே வந்து). நானும் குழைந்து குழைந்து அவர் முன் நின்றேன். 

என்னிடம் பேசிக்கொண்டிருந்த பெருமாள், திடீரென்று "சற்று இரு" என்று சொல்லிவிட்டு திரும்பி சென்றார்.

இப்படி எங்கே அவசரமாக செல்கிறார்? என்று கொஞ்சம் எட்டி பார்த்தேன்..

அங்கு பெருமாளை பார்க்க, கூட்டமாக ரிஷிகள் வந்திருந்தனர். 
பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்து, தவம் செய்து இப்போது பெருமாளை பார்க்க வந்து இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ரிஷிகளுக்கு தன் தரிசனத்தை கொடுக்க பெருமாள் கிளம்பி இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன் !

பெருமாளும் அந்த ரிஷிகளுடன் பேசிக்கொண்டிருந்தார் 

இப்படி என்னை விட்டு விட்டு சென்றுவிட்டாரே! என்ற அசூயை எனக்கு இல்லை. 
அவர்கள் தவத்துக்கு பலனாக பெருமாள் தரிசனம் தருகிறார்  என்று அறிகிறேன்! (பெரும் தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ)

அவர்களிடம் பேசி விட்டு, ரிஷிகளுக்கு, 'ஒரு கையில் சங்கும், ஒரு கையில் கதை ஏந்தி தரிசனமும் கொடுத்தார்.'

(ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி)


இப்படி எப்பொழுதுமே இவரை சுற்றி ரிஷிகள் கூட்டமும், தேவர்கள் கூட்டமும் சூழ்ந்து கொண்டே இருக்க, எனக்கு நேரம் ஒதுக்க பெருமாளால் முடியவில்லையே! என்றதும் என் கண்களில் நீர் வழிய (என் பொரு கயல் கண்ணீர் அரும்ப புலவி தந்து), என்னிடம் பேரன்பு கொண்ட பெருமாள், இத்தனை காரியங்கள் இடையிலும் என்னை திரும்பி பார்த்து விட்டார்.

உடனே என்னை சமாதானம் செய்து, "நம்முடைய ஊர் ஸ்ரீரங்கம் உள்ளது. அங்கு உன்னையும் அழைத்து வைத்து கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றாரே ! (புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!) என்று பரகால நாயகி தன்னிடம் பிரியம் கொண்டுள்ள பெருமாளை நினைத்து உருகி நிற்கிறாள்.

Thursday 6 January 2022

இப்படி ஒரு பெண்ணை பெற்றோமே! என்று ஆனந்தமும் அடைகிறாள் பரகால நாயகியின் தாய். பாசுரம் "தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத்..." அர்த்தம் தெரிந்து கொள்வோம்.

பெருமாளை அடைய முடியாமல் தவிக்கும் ஆழ்வார், தன் நிலையை தானே நேரடியாக பெருமாளிடம் சொல்லிக்கொள்ளாமல், தன்னையே பரகால நாயகியாக ஆக்கிக்கொண்டு, தன் தாயின் மூலம் பெருமாளிடம் தன் விரகத்தை சொல்லி புலம்புகிறார்.

தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள !

தென் இலங்கை முன் மலங்க !

செந்தீ ஓங்கி! போர் ஆளன் !

ஆயிரம் வாணன் மாள 

பொருகடலை அரண் கடந்து புக்கு மிக்க !

பார் ஆளன் ! பார் இடந்து ! 

பாரை உண்டு ! பார் உமிழ்ந்து !

பார் அளந்து ! பாரை ஆண்ட ! பேர் ஆளன் ! 

பேர் ஓதும் பெண்ணை !

மண்மேல் பெரும் தவத்தாள் 

என்று அல்லால் பேசலாமே!

- திருமங்கையாழ்வார் (திருநெடுந்தாண்டகம்)

பரகால நாயகியின் தாயார், தன்னுடைய பெண் குழந்தை படும் வேதனையை கண்டு வருந்தி மேலும் பாடுகிறாள்.

"சதுரங்க சேனைக்கு மஹாரதனாகவும், கையில்  சந்திரஹாசம் என்ற வாளை வைத்து இருந்த ராக்ஷஸனான ராவணன்  (தேர் ஆளும் வாள் அரக்கன்) சீதாதேவியை இலங்கைக்கு தூக்கி சென்று விட்டான் என்றதும், முதலில் ஹநுமானை அனுப்பி, செல்வங்கள் குவிந்து இருக்கும் இலங்கையை (தென் இலங்கை), தீயில் (செந்தீ ஓங்கி) பொசுக்கி ராவணனை கலங்கடித்து (முன் மலங்க), பிறகு தானே நேருக்கு நேர் போர் செய்து (போர் ஆளன்), ராவணனை கொன்று, சீதை பிராட்டியை மீட்ட ராமபிரானே !





ஆயிரம் தோள்களை உடையனான பாணாஸுரனை (ஆயிரம் வாணன்) ஒழித்து கட்ட (மாள), அலை எறிகின்ற கடலாகிய  கோட்டையை கடந்து (பொருகடலை அரண் கடந்து) அவனுடைய இடத்திற்கே சென்று (புக்கு) போரிட்டு வெற்றிபெற்ற (மிக்க) கண்ணனே!

இந்த பூமிக்கு பதியே! (பார் ஆளன்)

பூமியை பிரளய ஜலதிதிலிருந்து தூக்கிய வராஹ மூர்த்தியே! (பார் இடந்து)

கிருஷ்ணாவதார காலத்தில் மண்ணை உண்டு, பிரளய காலத்தில், உலகத்தை உண்டு தன் திருவயிற்றில் அடக்கியவரே ! (பாரை உண்டு)

உலக ஸ்ருஷ்டி செய்ய சங்கல்பித்த போது, உலகை மீண்டும் வெளிப்படுத்தியவரே! (பார் உமிழ்ந்து) என்றும்,

திருவிக்ரமனாக இருந்து உலகை அளந்தவரே ! (பார் அளந்து

ராம அவதாரத்தில் இந்த உலகை அரசாண்டவரே (பாரை ஆண்ட) என்று, 

பெருமை பொருந்திய எம்பெருமானுடைய (பேர் ஆளன்) திருநாமங்களையே ஓயாது பாடி (பேர் ஓதும்), கண்ணீர் விட்டு கொண்டிருக்கும் இது போன்ற பெண்ணை இந்த உலகில் காண முடியுமோ? 

பெருமாளிடம் பக்தி உள்ள இப்படி ஒரு பெண்பிள்ளையை இந்த உலகில் (மண்மேல்) பெற்று தந்த பாக்கியவதி அல்லவோ இவள்! என்று தானே, என்னை அனைவரும் சொல்வார்கள்!" 

என்று திருமங்கையாழ்வாராகிய பரகால நாயகியின் தாய், 'ஒரு புறம் 'இப்படி வாடி போகிறாளே என் மகள்!' என்று வருந்தினாலும், பெருமாளிடம் இவள் கொண்டிருக்கும் பக்தியை நினைத்து, இப்படி ஒரு பெண்ணை பெற்றோமே!' என்று ஆனந்தமும் அடைகிறாள்.


தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி,

பேராள னாயிரம் வாணன் மாளப் பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க

பாராளன், பாரிடந்து பாரை யுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட

பேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல் பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே?

'8 சீர்களை கொண்ட பாடல்' என்பதால், திருநெடுந்தாண்டகம் என்ற வரிசையில் வருகிறது. இதை பற்றி தெரிந்து கொள்ள, இங்கே பார்க்கவும்.