Followers

Search Here...

Showing posts with label சத்யபாமா. Show all posts
Showing posts with label சத்யபாமா. Show all posts

Friday, 30 May 2025

ஶ்ரீ கிருஷ்ணரின் பத்னிகள் தங்கள் திருமணத்தை பற்றி சொல்கிறார்கள்

ஶ்ரீ கிருஷ்ணரின் மனைவிகள் வந்திருப்பதை பார்த்த திரௌபதி, அவர்களிடம் திருமணம் நடந்த நிகழ்வை பற்றி கேட்டாள்.

"ஜராசந்தனின் தலைமையில் பல மன்னர்கள் சிசுபாலனை எனக்கு மணம் செய்து வைக்க விரும்பினர். திருமணத்தை நிறுத்த நினைப்பவர்களுடன் சண்டையிட அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் கிருஷ்ணர் வந்து, அவர்கள் அனைவரையும் தோற்கடித்து, இரையை எடுத்து செல்லும் சிங்கம் போல என்னை அழைத்துச் சென்றார்" என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், ருக்மிணி.


"என் மாமா ப்ரசேதஸ் கொல்லப்பட்டார், என் தந்தை சத்ரார்ஜித், கிருஷ்ணரை தவறாகக் குற்றம் சாட்டினார். தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க, கிருஷ்ணர் ஜாம்பவானுடன் போரிட்டு, ச்யமந்தக மணியை திரும்பப் பெற்று, அதைத் திருப்பித் தந்தார். பின்னர் என் தந்தை வருத்தப்பட்டு, அந்த ரத்தினத்தை திரும்ப கொடுத்து, என்னையும் கிருஷ்ணருக்கே மணம் செய்து கொடுத்தார்" என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், சத்யபாமா..


“கிருஷ்ணர் என் தந்தையின் குகைக்குள் அந்த ச்யமந்தக மணியை தேடி வந்தார். அவர் யார் என்று தெரியாமல், என் தந்தை ஜாம்பவான், 27 நாட்கள் சண்டையிட்டார். கடைசியில், கிருஷ்ணரே ராமர் என்பதை உணர்ந்தார். பின்னர் அவர் கிருஷ்ணருக்கு ரத்தினத்தையும், என்னை அவரது மணப்பெண்ணாகவும் கொடுத்தார்.”, என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், ஜாம்பவதி.


“கிருஷ்ணரை என் கணவராகப் பெற நான் கடுமையான பிரார்த்தனைகளையும் விரதத்தையும் மேற்கொண்டேன். ஒரு நாள், அவர் அர்ஜுனனுடன் வந்து என்னை மணக்க ஒப்புக்கொண்டார்” என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், காளிந்தி.


“எனது சுயம்வரத்தில், கிருஷ்ணர் மற்ற எல்லா மன்னர்களையும் தோற்கடித்து, என்னைத் தன்னுடன் துவாரகைக்கு அழைத்துச் சென்றார்” என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், மித்ரவிந்தா.


“ஏழு வலிமையான காளைகளை அடக்கக் கூடியவர் யாரோ, அவர் என் பெண்ணை மணக்கலாம் என்று என் தந்தை சொன்னார். கிருஷ்ணர் அதை எளிதாகச் செய்தார், 7 காளைகளையும் அடக்கி, என்னை மணந்தார்” என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், சத்யா.


“நான் ஏற்கனவே விரும்பிய கிருஷ்ணரை, என் தந்தையே அழைத்து, முழுப் படையுடனும் என் தோழிகளுடன் அனுப்பி, என்னை மணம் செய்து கொடுத்தார்” என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், பத்ரா.


“எனது சுயம்வரத்தில் போட்டி நடந்தது. ஒரு மீன் மேலே கட்டப்பட்டு மறைந்திருந்தது, அதன் ப்ரதிபிம்பத்தின் ப்ரதிபிம்பமே  ஒரு பானை தண்ணீரில் காணப்பட்டது. பல மன்னர்கள் அந்த ப்ரதிபிம்பத்தை பார்த்து, மேலே இருந்த மீனை அடிக்க முயற்சி செய்தும், தவறினர். அர்ஜுனன் கிட்டத்தட்ட இலக்கைத் தாக்கினார், ஆனால் தவறிவிட்டார். பின்னர் கிருஷ்ணர் தனது அம்பை எய்து அதை சரியாகத் தாக்கினார். நான் அவர் மீது திருமண மாலையை அணிவித்தேன். மற்ற மன்னர்கள் கோபமடைந்து தாக்கினர், ஆனால் கிருஷ்ணர் அவர்கள் அனைவரையும் தோற்கடித்து, த்வாரகைக்கு ஒரு பிரமாண்டமான திருமணத்திற்காக என்னை அழைத்துச் சென்றார், என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், லக்ஷ்மணா.


பலராமரின் தாயார் ரோஹிணிதேவி, கிருஷ்ணனின் மற்ற தேவிகளை பற்றி விவரித்தாள். "இவர்கள் அனைவரையும், பௌமாசுரன் என்ற அரக்கன் சிறைப்பிடித்து வைத்திருந்தான். இவர்கள் அனைவரும் பல தேசத்து அரசர்களின் மகள்கள். அந்த அசுரன் இவர்கள் அனைவரையும் பூட்டி வைத்திருந்தான். கிருஷ்ணன் அந்த அசுரனை கொன்று, அனைவரையும் விடுவித்தான். தங்களை ஶ்ரீ கிருஷ்ணன் தான் ஏற்க வேண்டும் என்று கேட்க, அனைவரையும் ஏற்று கொண்டான் ஶ்ரீ கிருஷ்ணன். பின்னர் அனைவரையும் தனது த்வாரகைக்கு இளவரசியாக ஆக்கினான்" என்று கூறினாள்.