Followers

Search Here...

Saturday 27 October 2018

திருமலையில் மட்டும் பெருமாள் தடையில்லாமல் எப்படி அணுகிரஹம் செய்கிறார்? அலர்மேல் மங்கையான மகாலட்சுமி (அலமேலு தாயார்) எப்படி நமக்கு அனுக்கிரஹம் கிடைக்க உதவுகிறாள்? தெரிந்து கொள்வோமே

அகல கில்லேன் இறையும்
என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய் உலகமூன் றுடையாய்.
என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே
- நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி


"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா"

பொதுவாக, ஜனங்களோடு ஜனங்களாக இருந்தால், எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியாது.
கொஞ்சம் மாடியில் ஏறி நின்று பார்த்தால், அந்த தெருவில் போகும் எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியும்.

தனக்கு ஒரு ஏழு அடுக்கு மாடி அமைத்துக்கொண்டு, அங்கு நின்று கொண்டால், எல்லோரையும் பார்க்கலாமே என்று சங்கல்பம் செய்தார் பாற்கடலில் உள்ள எம்பெருமான்.
ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன், எம்பெருமான் சங்கல்பத்தை உணர்ந்து, ஏழு மலையாக ஆகி பூலோகத்திற்கு வந்து விட்டார்.
உன்னதமான இடத்தில் இருந்தால் தான், கருணையை அனைவருக்கும் வர்ஷிக்க முடியும் என்பதால், திருமலையின் உச்சியில் போய், எம்பெருமான் அர்ச்ச அவதாரம் செய்து நின்று விட்டார்.
கருணையே வடிவானவள் மகாலட்சுமி.
க்ஷீராப்தியில் இருந்து பெருமாள் பூலோகம் வந்து விட, தனக்கொரு இடம் தேடினாள்.

கருணையே வடிவான மகாலட்சுமி திருமலையை விட உயர்ந்த இடத்தை தேடினாள்.
திருமலையை விட உயரமான இடம், எம்பெருமானின் வக்ஷஸ்தலமே என்று, அங்கு போய் அமர்ந்து விட்டாள்.
திருமலையில் எம்பெருமான் வக்ஷஸ்தலத்தில் (பெருமாள் மார்பில்) எப்பொழுதும் பிரியாமல் இருக்கிறாள் மகாலட்சுமி.

மலர்ந்த (அலர்) தாமரைப்பூவின் மேல் அமர்ந்திருக்கும் மகாலட்சுமிக்கு "அலர்மேல் மங்கை" (அலமேலு தாயார்) என்று பெயர்.

இப்படி எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து, இனி ஒரு நொடி பொழுது (இறை பொழுதும்) கூட உங்களை விட்டு பிரிய மாட்டேன் (அகல இல்லேன்) என்று அமர்ந்தாள் அலர்மேல் மங்கையான மகாலட்சுமி.

எம்பெருமானை தனியாக வழிபடுவதை விட, தாயாரையும் சேர்த்து வழிபடும் போது தான், பெருமாள் தடையில்லாமல் அணுகிரஹம் செய்கிறார்.

"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா"
என்று நம்மாழ்வார் அழைக்கும் போது,
'தாயாரை முதலில் சொல்லி, அவளை முன்னிட்டு,  எம்பெருமானிடம் சரணாகதி' செய்கிறார்.

மகாலட்சுமி (ஸ்ரீ தேவி) எம்பெருமான் மார்பில் இருப்பதால் (நிவாசம்), வெங்கடேச பெருமாளுக்கு, "ஸ்ரீனிவாச பெருமாள்" என்றும் பெயர் வந்தது.

எப்படி பகவானை நாம் அணுக வேண்டும்?
எப்படி அணுகினால், பகவான் தடையில்லாமல் நமக்கு அணுகிரஹம் செய்வார்? என்பதை இந்த ஒரு பாசுரமே நமக்கு காட்டி விடுகிறது.

இப்படி திருமலையில், எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து விட்டாளே மகாலட்சுமி!!
இப்படி அமர்ந்தது அவள் சுகத்திற்காகவா? இல்லை பெருமாள் சுகத்திற்காகவா? என்று கேட்டால், இரண்டுமே இல்லையாம்.
நாம் அனைவரும் சுகம் பெற வேண்டும் என்பதற்காக தான், எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து விட்டாளாம் மகாலட்சுமி.

அது எப்படி?
பொதுவாக ஆழ்வார்கள், மற்ற திவ்ய தேசம் சென்று அங்கு இருக்கும் பெருமாளை சேவிக்கும் போது பிரேம பக்தியுடன் கொஞ்சி மகிழ்வார்கள்.
ஆனால் திருமலை வந்து விட்டால் மட்டும், ஆழ்வார்கள் அனைவரும், கதறி அழுது சரணாகதி செய்து விடுகின்றனர்.





நம்மாழ்வார், திருமலையப்பனிடம் வந்து,
"திருவேங்கடத்தானே !
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்று கதறி அழுது சரணாகதி செய்கிறார்.

திருமலையப்பனிடம் வந்தால் மட்டும் ஏன் இப்படி ஆழ்வார்களின் மனோபாவத்தில் கூட வித்தியாசம் தெரிகிறது?
மற்ற திவ்ய தேச பெருமாளும் இவர் தானே?
இருந்தும்,
திருமலையப்பனுக்கு மட்டும் என்ன விஷேசத்தை ஆழ்வார்கள் பார்த்தார்கள்?

பொதுவாக, திருமலையை தவிர்த்து, மற்ற திவ்ய தேசங்களில் பெருமாள் ஒரு சன்னதியில் இருப்பார். தாயார் தனி சன்னதியில் இருப்பாள்.
மற்றும் சில திவ்ய தேசங்களில் பெருமாளும் தாயாரும் ஒரே சந்நிதியில் அருகருகே கூட இருப்பார்கள்.

பொதுவாக தாய்க்கு தான், தன் பிள்ளை தவறே செய்தாலும் கூட, அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், கருணையே செய்ய தோன்றும்.
தாயுள்ளம் மகத்தானது.

பொதுவாக பெருமாள், தகப்பன் ஸ்தானத்தில், ஒரு நீதிபதி ஸ்தானத்திலும் நம்மை பார்ப்பாராம்.
பக்தனே சில சமயம் தவறு செய்தாலும்  பாரப்பட்சம் காட்ட கூடாது என்று நினைப்பாராம்.

பத்ராசல ராமதாஸர், ராமருக்கு கோவில் கட்ட இஸ்லாமிய அரசன் தானிஷாவின் வரி பணத்தை எடுத்து கட்டி விட்டார்.
இதற்கு 12 வருடம் சிறையில் தள்ளி, தினமும் சவுக்கடி கொடுக்க உத்தரவு இட்டான் தானிஷா.
உடம்பெல்லாம் ரத்தம் ஏற்பட்டு, தினமும் சிறையில் அழுது, ராமரிடம் கீர்த்தனைகள் இயற்றினார்.
ராமரோ தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார் என்று ஒரு நீதிபதி போல பேசாமல் இருந்தார்.
கடைசியில் இனி தாளாது என்ற நிலையில், ராமதாசருக்கு சீதையின் நினைவு வர,
"சீதம்மா...  இந்த ராமதாசனை காப்பாற்ற வருமாறு, நீயாவது அருகில் இருக்கும் ஸ்ரீ ராமரிடம் சொல்லம்மா..."
என்று கதற, சீதை ஸ்ரீ ராமரிடம் "இனி ஒரு க்ஷணம் தாமதிக்காமல் காப்பாற்றுங்கள்" என்று சொல்ல,
தானே ஒரு மனிதனாக வந்து, தானிஷாவை பார்த்து, தங்க கட்டிகளாக வரி பணத்தை வட்டியுடன் கட்டி, விடுதலை செய்யுமாறு செய்து மறைந்து விட்டார்.

பெருமாளை மட்டும் நாம் தனியாக பிரார்த்தனை செய்தால், நம் குற்றம் குறை அவருக்கு தெரிவதால், கட்டுப்பாடு இல்லாமல் அணுகிரஹம் செய்ய கொஞ்சம் தயங்குவாராம்.

ஸ்ரீ ரங்கம் உட்பட மற்ற திவ்ய தேச பெருமாள் கூட, தாயார் அருகில் இல்லாமல் இருப்பதால், ஆழ்வார்களுக்கு கூட தடையில்லாமல் அணுகிரஹம் செய்யாமல் இருந்தார்களாம்.

'அணுகிரஹம் குறைவில்லாமல் செய்யலாமே' என்று மற்ற திவ்ய தேச பெருமாளிடம் காரணம் கேட்டால், "இன்னும் இதயம் கணியட்டும்" என்று மற்ற திவ்ய தேச பெருமாள் எல்லோரும்  சொல்வார்களாம்.

ஒரே பெருமாள் தான் என்றாலும், அந்தந்த திவ்ய தேச மகத்துவம் பொருத்து தான் பழகுவார்களாம்.

இப்படி ஏன் அணுகிரஹம் செய்ய மற்ற திவ்ய தேச பெருமாள் எல்லோரும் தயங்குகிறார்கள்? என்று கேட்டால், நமக்காக சிபாரிசு செய்ய தாயார் கூட இல்லை என்பதால் தான்.

எம்பெருமானை நாம் தனியாக சேவிக்கும் போது, நம் தகுதி, நேர்மையை பார்ப்பாராம். இதனாலேயே அணுகிரஹம் செய்ய தயங்குவாராம்.

ஸ்ரீ ராம அவதார சமயத்தில், 'தானும் வனவாசம் வருவேன்' என்று லக்ஷ்மணன் வந்து விட்டார்.
அன்றைய இரவு பொழுதில், லக்ஷ்மணன் பார்த்து, "பொழுது விடிந்ததும் நீ வேண்டுமானால் அயோத்தி திரும்பி செல்கிறாயா?" என்று ஸ்ரீ ராமர் கேட்டு விட்டார்.
ஸ்ரீ ராமரை விட்டு நொடி பொழுது பிரிந்தாலும், உயிர் போய் விடும் என்ற நிலையில் இருந்த லக்ஷ்மணன், செய்வதறியாது ஸ்ரீ ராமரின் பாதங்களில் விழுந்து விட்டார்.
ஸ்ரீ ராமரின் சம்மதத்தை பெற, ஸ்ரீ ராமரிடம் கேட்டால் நடக்காது என்று அறிந்து, தலையை தூக்கி, அருகில் நின்று இருந்த சீதையை பரிதவிப்புடன் பார்த்து, தனக்கு சிபாரிசு செய்ய பிரார்த்தித்தார்.

லக்ஷ்மணனின் நிலையை புரிந்து கொண்ட சீதை, ஸ்ரீ ராமரை பார்த்து, " எப்படி குளத்தில் இருக்கும் மீனை வெளியே எடுத்தால் அதற்கு உயிர் தங்காதோ, அது போல லக்ஷ்மஷ்ணன் உங்கள் பிரிவை தாள மாட்டான்."
என்று சொல்ல, ராமர் மறு பேச்சின்றி அழைத்து கொண்டார்.
அதற்குப்பின், கடைசி வரை லக்ஷ்மணனை பிரிந்து ஒரு க்ஷணம் இருந்ததில்லை ஸ்ரீ ராமர்.


தாயாருக்கு அத்தனை மதிப்பு கொடுப்பாராம் பெருமாள்.

தாயாரை முன்னிட்டு, பெருமாளை சேவித்தால், நம் தகுதி பார்க்காமல் அணுகிரஹம் உடனே செய்து விடுவார்.

தனியாக தான் சந்நிதியில் இருந்தால், நமக்கு பெருமாள் அணுகிரஹம் செய்வாரோ என்னவோ என்று நினைத்த தாயார், திருமலையில் எம்பெருமான் நெஞ்சில் போய் அமர்ந்து விட்டாளாம்.

பெருமாள், தாயாரை பார்த்து, 'இப்படி என் நெஞ்சோடு அமர்ந்து விட்டாயே, உனக்கு வேண்டுமானால் தனி சன்னதி இருக்க செய்யட்டுமா?" என்று கேட்க,
"வேண்டவே வேண்டாம்" என்றாளாம்.
"சரி, அப்படியென்றால் ஒரே சந்நிதியில் அருகேயே இருக்கிறாயா?" என்று கேட்க,
"அதுவும் வேண்டாம்"
என்றாளாம் தாயார்.
மேலும்,
'எனக்கு தனி சந்நிதி கொடுத்து, ராவணன் தூக்கி போனான் என்ற அனுபவமே போதும்.
தனி சந்நிதி கொடுத்தால், மற்றவர்களை நம்ப இயலவில்லை.
உங்கள் அருகிலேயே இருந்தாலும், உங்களையும் நம்ப முடியாது.
ஒரு சமயம், கஜேந்திரன் என்ற ஒரு யானை உங்களை கூப்பிட்டான் என்றதும், அருகில் இருந்த நான் கூட முக்கியமில்லை என்று, கிளம்பி விட்டீர்களே.
இதனால் எனக்கு தனியாக இடமும் வேண்டாம், உங்கள் பக்கத்திலும் இடம் வேண்டாம்.
நான் இனி இறை பொழுது கூட அகல கில்லேன், அகல கில்லேன்,  நான் உங்கள் நெஞ்சோடு தான் இருப்பேன்.
நீங்கள் எந்த பக்தன் அழைத்தாலும், என்னையும் தூக்கி கொண்டு செல்லுங்கள்"
என்று பிடிவாதம் செய்து அமர்ந்து விட்டாளாம் தாயார்.

இப்படி, நமக்கு தடையே இல்லாமல் அணுகிரஹம் செய்ய, அலர்மேல் மங்கை தாயார் வக்ஷஸ்தலத்தில் இறை பொழுது கூட அகல கில்லேன் என்று அமர்ந்து விட்ட ஸ்ரீனிவாச பெருமாளே என்பதை தான், நம்மாழ்வார்,
"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா"
என்று சொல்கிறார்.

திருமலையில், பெருமாளுக்கு உள்ள விசேஷம் இதுவே.

திருமலையப்பனை காண நாம் மலை ஏறி செல்லும் போது, பெருமாள் பார்ப்பதற்கு முன்,  ஸ்ரீனிவாசனின் மார்பில் இருக்கும் தாயார், நம்மை முதலில் பார்த்து விடுகிறாள்.

பெருமாள் நம் பாவ புண்ணியத்தை பார்க்கும் முன், தாயார் முந்திக்கொண்டு, "நம் குழந்தை, அணுகிரஹம் செய்யுங்கள்" என்று நமக்காக சிபாரிசு செய்து விடுகிறாள்.

தாயார் பார்த்ததினாலேயே, பெருமாள், நம் தகுதி பாராமல், உடனே அணுகிரஹம் செய்து விடுகிறார் ஸ்ரீனிவாச பெருமாள்.

திருமலையப்பனுக்கு உள்ள இந்த தனித்துவம், மற்ற திவ்ய தேச பெருமாளிடம் காண இயலாது.

திருமலையில், தாயாரை தன் மார்போடு வைத்து இருப்பதால், தடையின்றி நம்மிடம் கருணையை வர்ஷிக்கிறார் பெருமாள்.

நிகரில் புகழாய்.
உலக மூன்றுடையாய்.
என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

சொர்க்கத்தில் உள்ள தேவர்கள், தப லோகத்தில் இருக்கும் ரிஷிகள், பிரம்மா உட்பட ஒரு நாள் அழிந்து விடுவார்கள். ஆனால் வைகுண்டத்தில் உள்ள தேவர்களான நித்ய பார்ஷதர்கள் வைகுண்ட நாதனை போல அமரர்கள்.
வைகுண்ட நாதனை போல அவர்களும் என்றுமே இருப்பவர்கள்.
பரமாத்மாவாக இருப்பதால், வைகுண்ட நாதனுக்கு கூட, உலகத்தை ஸ்ருஷ்டி செய்ய வேண்டும், உலகத்தை ரக்ஷிக்க வேண்டும் என்ற பொறுப்பு உண்டு.
நித்ய பார்ஷதர்களான இவர்களுக்கு அந்த பொறுப்பு கிடையாது என்பதால், இவர்கள் லட்சியம் வைகுண்ட நாதனுக்கு கைங்கர்யம் செய்வதே. தேவைப்பட்டால், இவர்களே ப்ரம்ம லோகம் முதல், பூலோகம் வரை வந்து போகவும் முடியும். சுதந்திரமானவர்கள், அமரர்கள்.

அப்படிப்பட்ட அமரர்களான நித்ய பார்ஷதர்களும் (அமரர் முனிக்கணங்கள்), பூலோகத்தில் உள்ள திருமலை வந்து சேவை செய்ய விரும்பும் பெருமை உடைய திருவேங்கடத்தானே என்று
"நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே"
என்று நம்மாழ்வார் திருமலையப்பனின் புகழை நமக்கு காட்டுகிறார்.

வைகுண்டத்திலேயே எம்பெருமானை சேவிக்கும் பாக்கியம் பெற்ற நித்ய பார்ஷதர்களே திருமலை வந்து சேவிப்பார்கள் என்றால், இந்த உலகத்திலேயே உள்ள எனக்கு உன் திருவடி அடையாமல் வேறு என்ன செய்வேன்?

நித்ய பார்ஷதர்களுக்கு திருமலை இல்லையென்றால், வைகுண்டம் இருக்கிறது. அங்கு போய் உமக்கு சேவை செய்து கொள்வார்கள்.
அவர்களே வைகுண்டம் வேண்டாம், திருமலை தான் வேண்டும் என்று வரும்போது,
பூலோகத்தில் புகலிடம் இல்லாத எனக்கு, நீஙகள் ஒருவர் தானே கதி என்று,
"புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்கிறார் நம்மாழ்வார்.

வைகுண்டம் சென்று உங்கள் திருவடியை பிடிக்க இயலாத எனக்கு திருமலையில் உள்ள நீங்கள் தானே கதி. புகலிடம் இல்லாத அடியேன், உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே என்கிறார்.

இங்கு "உன் திருவடியில் புகுந்தேனே" என்று கூறாமல்,
"உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே"என்கிறார்.

இங்கு "அமர்ந்து" என்ற சொல்லை சொல்லி, சரணாகதி செய்த நம்மாழ்வார், மோக்ஷம் வேண்டினாலும், உடனே தந்து விட வேண்டாம், கொஞ்சம் திருமலையில் தங்கி (அமர்ந்து) உங்களுக்கு இங்கேயே சில காலம் சேவை செய்ய அணுகிரஹம் செய்து விட்டு, பின்னர் மோக்ஷம் கொடுங்கள் என்கிறார்.

மோக்ஷம் யாருக்கு கொடுக்கிறார் பெருமாள்?
இரண்டு விதமான நிலைக்கு, மோக்ஷம் கொடுக்கிறார் பெருமாள்.
1. "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து செய்தால், உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

2. "இனி தாளாது என்ற ஆர்த்தி (துடிப்பு) இல்லாமல்" சரணாகதி செய்து விட்டானானால், அவன் ப்ராரப்தம் முடியும் வரை உடம்போடு வாழ்ந்து தான் ஆக வேண்டும்.

ப்ராரப்த கர்மா அனுபவிக்காமல் மோக்ஷம் கொடுப்பாரா?
கோபிகைகள் போல "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து விட்டால், ப்ராரப்த கர்மாவும் பொசுங்கி, உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

ஞானியும் ப்ராரப்த கர்மாவை அனுபவிக்கிறார்கள்.


நம்மாழ்வார் திருமலையப்பனை பூரண சரணாகதி செய்தவர்.
"இனி தாளாது" என்ற ஆர்த்தியும் (துடிப்பு) உள்ளவர்.
உடனே மோக்ஷம் பெறுவதற்கு தகுதி இருந்தாலும்,
பிராரப்த காலம் முடியும்வரை, இந்த உடலோடு இருந்து, திருவெங்கட நாதனுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டாராம் ஆழ்வார்.

இதை குறிப்பதாக, "உன் திருவடியில் அமர்ந்து" என்று சொல்லி, எப்பொழுது பிராரப்த காலம் முடியுமோ, அப்பொழுது திருவெங்கட நாதனுக்கு திருமலையில் செய்த சேவையை, வைகுண்டம் சென்று செய்வோம் என்று பிரார்த்தித்தார்.


Thursday 25 October 2018

திருமலையாக இருக்கும் ஆதிசேஷன் எத்தனை நீளமாக படுத்துள்ளார். ஆதிசேஷன் மேல் வெங்கடேச பெருமாள் எங்கு இருக்கிறார்?

ஆதிசேஷன் எம்பெருமானுக்கு எப்படி எல்லாம் சேவை செய்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமான் பரவாசுதேவனாக இருந்தால், இவர் அமர்வதற்கு தானே சிம்மாசனம் ஆகி விடுகிறார்.



பாற்கடலில் எம்பெருமான் வ்யூஹ அவதாரம் செய்து மகாவிஷ்ணுவாக இருந்தால், இவர் படுத்தால், தானே பஞ்சுபடுக்கை ஆகி விடுகிறார்.
எம்பெருமான் நடந்து சென்றால், தானே அவருக்கு குடையாகி விடுகிறார்.
(கிருஷ்ண அவதாரம் செய்த போது யமுனையை கடக்கும் போது குடையானார்)
எம்பெருமான் நின்றால், தானே அவர் திருவடிக்கு பாதுகை ஆகி விடுகிறார்.
(திருமலையப்பன் நிற்க  சேஷாத்திரி (திருமலை) ஆனார்)

இப்படி
சர்வ தேச (எந்த இடத்திலும்),
சர்வ கால (எந்த சமயத்திலும்),
சர்வ அவஸ்தைகளிலும் (எந்த நிலையிலும்)
எம்பெருமானுக்கு சர்வ கைங்கர்யமும் (எந்த சேவையும்) செய்யக்கூடியவராக இருக்கிறார் ஆதிசேஷன்.

எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதில், ஆதிசேஷனை போல ஆசையோடு செய்ய வேண்டும்.

ஏழுமலைகளாக எந்த யுகத்திலோ தோன்றிவிட்ட ஆதிசேஷன் "சேஷாத்ரி" என்ற பெயருடன் எம்பெருமான் அவதாரத்திற்கு காத்து கொண்டிருந்தார்.

ஆதிசேஷன் "சேஷாத்ரி" என்ற 7 மலையாக ஆகி இருந்தார். காலப்போக்கில் ஒவ்வொரு மலைக்கும் தனி பெயர் ஏற்பட்டது.
1. சேஷாத்ரி (உண்மையான பெயர்)
2. நாராயணாத்ரி
3. வ்ருஷபாத்ரி (வ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்ற மலை)
4. அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த மலை)
5. கருடாத்ரி
6. வெங்கடாத்ரி (வெங்கடேச பெருமாள் இருக்கும் இடம். பாவங்கள் பொசுங்கும் மலை)
7. சிம்மாத்ரி


"அத்ரி" என்றால் மலை என்று அர்த்தம்.

ஆதிசேஷன் எத்தனை நீளமாக படுத்தார்? என்று பார்க்கும் போது,
காளஹஸ்தி என்ற இடத்தில் ஆதிசேஷனின் தலை (சிரசு) ஆரம்பித்து,
அந்த பாம்பின் வளைந்து இருக்கும் தலையின் உச்சத்தில் அவர் தரித்து இருந்த நாக ரத்தினத்தின் உச்சத்தில், வெங்கடேசபெருமாள் ஆனந்த விமானத்தில் தன்னை வெளிக்காட்டி, அந்த சிரசையே "வெங்கடாத்ரி" என்ற ஒரு மலையாக ஏற்று வீற்றிருக்கிறார்.
ஆதிசேஷனின் இதய பகுதியில் உருவான க்ஷேத்ரமே "அஹோபிலம்".
ஸ்ரீசைலம் என்ற இடத்தில் ஆதிசேஷனின் வால் பகுதி முடிகிறது.

காளஹஸ்தி ஆரம்பித்து, ஸ்ரீசைலம் வரை ஆதிசேஷன் படுத்தார் என்றால், ஏழு மலைகளின் நீளம் நமக்கு புரியும்.

வைகுண்டத்தை பூலோகத்தில் கொண்டு வந்து விட்டார் ஆதிசேஷன், பகவான் கருணையின் காரணமாக.




இப்படி அதி ஆச்சர்யமாக எம்பெருமான் வருவதற்காக படுத்து விட்டார் ஆதிசேஷன்.
இதை பார்த்த கங்கை, இந்த திருமலைக்கு ஒரு வெள்ளை கொடி பறக்க விடுவது போல, "ஆகாச கங்கை"யாக பொழிய ஆரம்பித்தாள்.

கங்கையே வந்தவுடன், ஏழு மலையையும் சூழ்ந்து கொண்டு அனைத்து புனிதமான தீர்த்தங்களும் ஆங்காங்கே உருவானது.

மலையே செழிப்பு நிறைந்து, பூக்களும், மரங்களும் நிறைந்த பசுமையான சோலை ஆனது திருமலை, எம்பெருமானை வரவேற்க.

மலையாக பார்க்காமல், ஆதிசேஷனாக பார்க்கும் போது தான், பக்தன் எப்படி எல்லாம் கைங்கர்யம் செய்கிறான் என்பது புரியும்.

காற்றில் மரங்கள் யாவும் அசைவதை பார்த்தால், ஆதிசேஷனின் ஆயிரம் தலைகள் அசைவது போல தோன்றுமாம் பக்தனுக்கு.

ஏழு மலையையும்,  வெண்மையான மேகங்கள் சூழ்ந்து வருவதை பார்த்தால், க்ஷீராப்தியில் இருந்த பாற்கடல் ஆதிசேஷனும் கிளம்பி விட்டார், எம்பெருமானும் கிளம்பி விட்டார் என்று அறிந்து, இனி வைகுண்டத்தில் என்ன வேலை என்று திருமலைக்கு வந்து விட்டதோ என்று தோன்றுமாம் பக்தனுக்கு.

வைகுண்டத்தில் இருந்து ஆதிஷேஷனே திருமலையாக வந்து விட்டார் என்று உணர்ந்த ரிஷிகள், தங்கள் ஆஸ்ரமங்களை விட்டு விட்டு, திருமலை வந்து பகவத் தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

மயில்களும், குயில்களும் ஆனந்தமாக கானம் செய்து விளையாடியது. பெருமாளின் வருகைக்கு
காள என்றால் "சிலந்தி",
ஹஸ்தி என்றால் "யானை".
இந்த ஸ்தலத்தில் யானையும், சிலந்தியும் சிவ பூஜை செய்த காரணத்தால், இந்த இடத்திற்கு பிற்காலத்தில் "காளஹஸ்தி" என்ற பெயர் உண்டானது. இன்று வரை சிவ ஸ்தலமாகவும் உள்ளது.
பெருமாளும், சிவனும் பிரித்து பார்த்து வழிபடும் பழக்கம் இருந்ததில்லை என்பது இதிலேயே தெரிகிறது.

ஸ்ரீசைலம் என்பதும் மற்றொரு சிவக்ஷேத்ரம். இந்த சிவக்ஷேத்ரத்தில், மருத மரமாக (அர்ஜுன மரம்) சிவபெருமானே இருக்கிறார்.  பார்வதி தேவி இங்கு மல்லிகை கொடியாக ஆகி, அந்த மருத மரத்தை சுற்றிக்கொண்டு இருக்கிறாள்.
இதனால் இங்கு சிவபெருமானுக்கு "மல்லிகார்ஜூன்" என்றும் பெயர்.

இயற்கையில் தோன்றியது இந்த மலை அல்ல, இங்கு வசிக்கும் எந்த மிருகமும், மனிதர்களும், பறவைகளும் என்ன பிரார்த்தனை செய்து இப்படி திருமலையில் வாசம் செய்கிறார்களோ நமக்கு தெரியாது.


மகான்கள், ஆழ்வார்கள் எல்லோரும் இந்த கண்ணோட்டத்தில் தானே திருமலையை பார்த்தனர். பார்க்கின்றனர்.

ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர் 'அனந்தாழ்வார்' திருமலையில் பூ கைங்கர்யம் ராமானுஜரின் உகப்புக்கு செய்து கொண்டிருந்தார்.
ஒரு சமயம், அனந்தாழ்வார் தன் சிஷ்யர்களுடன் மேல் நாட்டு திவ்ய தேசங்கள் ஆரம்பித்து, அனந்த பத்மநாபன் வரை சேவிக்க புறப்பட்டார்.

பயணத்திற்கு திருமலை பிரசாதமே எடுத்துக்கொள்ளலாம் என்று ஒரு மூட்டையில் பிரசாதம் எடுத்துக்கொண்டு, கிளம்பினார்கள்.

கிளம்பி வெகுதூரம் சென்ற பின், சரி சாப்பிடலாம் என்று நினைத்து, பிரசாத மூட்டையை அவிழ்க்க, அதில் எறும்புகள் இருப்பதை பார்த்தார் அனந்தாழ்வார்.
அவர் சிஷ்யர்கள், "எறும்பை தட்டி விட்டு சாப்பிடலாமா? இல்லை அப்படியே பிரசாதத்தை வைத்து விட்டு பயணத்தை தொடரலாமா?"
என்று யோசிக்க,
அனந்தாழ்வார், "இந்த எறும்புகள் எல்லாம் திருமலையில் இருந்தே வந்திருக்கிறது.
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ" (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் செய்த பிரார்த்தனை, இந்த எறும்புக்கு கிடைத்துள்ளதே.
திவ்யதேச வாசம் செய்த எறும்புகளை இப்படி ஏதோ ஒரு கிராமத்தில் விட்டு விட கூடாது. இவையெல்லாம் எந்த ஜீவனோ நமக்கு தெரியாது.
திருமலை வாசம் பெற்ற இந்த ஜீவனை, நாம் மீண்டும் திருமலை சென்று, அங்கேயே இந்த பிரசாதத்தை வைத்து விட்டு நம் பயணத்தை மீண்டும் தொடர்வோம்" என்று சொல்லி அவர்கள் யாத்திரையை நிறுத்து விட்டு, மீண்டும் திருமலையில் ஏறி, அந்த எறும்புகளை மீண்டும் ஸ்வாமி புஸ்கரணி தீர்த்தம் அருகே,  திருமலையிலேயே விட்டு விட்டு, மீண்டும் யாத்திரையை தொடர்ந்தனர்.
நம் பூர்வ ஆச்சாரியர்கள் எப்படி திருமலையை பக்தியுடன் பார்த்தனர், அங்குள்ள ஜீவராசிகளை எப்படி மதித்து உள்ளனர் என்று புரிகிறதே.

திருமலையை மற்ற  இயற்கையாக தோன்றிய மலை போலவா ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.
ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும். 
அந்த பக்தி நமக்கு வர வேண்டாமா?

ஆதிசேஷனே ஏழு மலையாக இருக்கும் போது, பரவாசுதேவனே திருமலையப்பனாக நின்று கொண்டு இருக்கும் போது, இங்கு வசிக்கும் விலங்குகளும், பறவைகளும் மட்டும் சாதாரணம் என்று நினைக்க தோன்றுமா ஒரு பக்தனுக்கு?.
ஆழ்வார்கள் போன்று நமக்கும் பக்தி வர ஆசைப்பட வேண்டுமே.

எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ" (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் பாடும் பொழுது, இங்கு இருக்கும் செடி, கொடிகளுக்கு கூட மங்களாசாசனம் செய்து விட்டாரே. இங்கு இருக்கும் ஈ, எறும்பு கூட எந்த மகானோ என்றல்லவா நமக்கு தோன்ற வேண்டும்.

ஆயிரம் நாக்கு உடைய ஆதிஷேஷனே திருமலையின் மகத்துவத்தை சொல்ல முடியாத போது 18 புராணங்களும் திருமலையின் மகத்துவத்தை சொல்வது ஆச்சர்யமில்லையே.


ஆதிஷேஷனே, கலியில் ஸ்ரீ ராமானுஜராக 1017ல் அவதாரம் செய்தார்.
ஒரு சமயம், யதிராஜனாக (சந்நியாசி) ஆன பின்பு, திருமலையில் ஒரு மாதம் தங்கி, அவர் பூர்வ க்ருஹத்தில் மாமாவான "திருமலைநம்பி"யிடம் ராமாயண காலட்சேபம் கேட்கலாம் என்ற ஆசையோடு திருமலை வந்தார்.

"எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ" என்ற ஆழ்வார் பாசுரத்தை எண்ணி, திருமலையில் எப்படி கால் வைத்து போவேன்? என்று தயங்கி, தன் இரு கால்களையும் மடக்கி இருக்க கட்டி, தன் முழங்காலால் நடக்க ஆரம்பித்தார்.
ஸ்ரீ ராமானுஜர் முழங்கால் தேய திருமலை ஏறிக்கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்ட திருமலை நம்பி, கீழே இறங்கி ஓடி வந்தார்.
அதற்குள் ராமானுஜர் முதல் கோபுரம் வரை வந்து விட்டார்.

தன் மருமகன் தான் 'ராமானுஜர்' பூர்வ ஆஸ்ரமித்தில் என்றாலும், யதிராஜராக ஆகி விட்ட ராமானுஜரை சேவித்துக்கொண்டே,
"ஏன் இப்படி வர வேண்டும்?" என்று கேட்க,
"தங்களை சேவிக்கலாம் என்று தான் வந்து கொண்டிருந்தேன்"
என்றார் ராமானுஜர்.

"யதி ராஜர் இப்படி முட்டுக்கால் தேய வந்தால் இது சாத்தியமா?
சாதாரணமாக காலால் நடந்து வந்து பெருமாளை திருமலை ஏறி வந்து தரிசிப்பதே ஜனங்களுக்கு கடினமாக இருக்கும் போது, தாங்கள் ஆதிசேஷனாக இருக்கும் திருமலை மேல் கால் படக்கூடாது என்று இப்படி கால்களை கட்டிக்கொண்டு, ஏறி வந்தால், யதிராஜரே கால் வைக்க தயங்கினார் என்று தெரிந்தால், ஒருத்தர் கூட திருமலை வந்து எம்பெருமானை தரிசிக்க மாட்டார்களே!!

நீங்கள் திருமலையில் கால் வைத்து நடப்பது தோஷமில்லை.
ஒரு தாயார் தன் மடி மீது குழந்தை வைத்து கொள்ளும் போது, சில சமயம் தன் சின்ன காலால், தாயை உதைத்தாலும், அது அவளுக்கு ஏற்பு உடையதாக இருக்கும்.
அதை அவள் அபசாரம் என்று நினைப்பதில்லை.
அதுபோல, திருமலையில் கால் வைத்து ஏறினாலும், அது பெருமானுக்கு ஏற்புடையதாக இருக்குமே தவிர அபசாரமாக இருக்காது. கால் வைத்து வாருங்கள் என்று இதை சொல்ல தான் ஓடிவந்தேன்"
என்றார் திருமலை நம்பி.

"இதை சொல்வதற்கு யாராவது சிறுவனை அனுப்பி இருக்க கூடாதோ. நான் ஏற்று இருப்பேனே. இதற்கு தேவரீர் தானே புறப்பட்டு வர வேண்டுமா?" என்று ராமானுஜர் கேட்க,

"திருமலை முழுவதும் தேடி பார்த்து விட்டேன். அடியேனை தவிர சிறுவன் இங்கு கிடைக்கவில்லை. யாரை பார்த்தாலும் இவர் என்ன பாக்கியம் செய்து திருமலையில் வாசம் செய்கிறாரோ என்று மனதில் தோன்றுகிறது.
'எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ' என்ற ஆழ்வார் பாடிய பிறகு, இங்கு பிறந்த ஈ, எறும்பு கூட என்ன பாக்கியம் செய்ததோ என்று தான் தோன்றுகிறது.
யாரை பார்த்தாலும் பெரியவாளாக தோன்றுகிறது."
என்றார்.

ராமானுஜர் பிறகு, திருமலை ஏறி, பெருமானை தரிசித்தார்.

திருமலையை மற்ற  இயற்கையாக தோன்றிய மலை போலவா ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.
ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும்.

திருமலை ஏறி சென்று, ஆதிசேஷனின் தலை உச்சியில் இருக்கும் ரத்தினத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கும் வெங்கடேச பெருமாளை தரிசிப்போம்.


Saturday 20 October 2018

"அறம், பொருள், இன்பம், விடுதலை" என்று சொல்லாமல் "அறம், பொருள், இன்பம், வீடு" என்று ஏன் சொன்னார்கள்? காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

"மோக்ஷம்" என்ற சொல்லுக்கு "விடுதலை" என்றும் பொருள் உண்டு, "வீடு" என்ற பொருளும் உண்டு.
தமிழில் "மோக்ஷத்தை" சொல்லும் போது "வீடு" என்ற சொல்கிறார்கள்.

"தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்" என்று வேதம் கூறும் நான்கு விஷயங்களை.
"அறம், பொருள், இன்பம், வீடு" என்று தமிழிலில் சொல்கிறார்கள்.
நன்றாக கவனித்தோமென்றால்,
"அறம், பொருள், இன்பம், விடுதலை" என்று சொல்லவில்லை.
மோக்ஷத்தை, "வீடு" என்ற அர்த்தத்தை கொண்டு ஏன் சொன்னார்கள்? தெரிந்து கொள்ள வேண்டாமா தமிழர்கள்?

1. தர்மம், (धर्म) (rules)
2. அர்த்தம், (अर्थ) (wealth)
3. காமம், (काम) (desire)
4. மோக்ஷம் (मोक्ष) (freedom from rebirth)
என்ற நான்கு விஷயங்களை நோக்கி தான் மனிதர்கள் எப்பொழுதும் பயணிக்கின்றனர் என்கிறது சப்த ப்ரம்மமாகிய வேதம்.

இதை பொதுவாக 4 புருஷார்த்தங்கள் (Purushartha - லட்சியம்) என்று சொல்கிறது.



இதில் "மோக்ஷம்" என்ற விஷயத்தை நோக்கி செல்லும் மனிதர்கள் மட்டும், மீண்டும் பிறவி எடுக்காமல், சம்சார கடலில் இருந்து பகவானால்  விடுவிக்கப்படுகின்றனர்.
பிறவியில் இருந்து விடுதலை பெறுகின்றனர்.
ஆகவே, "மோக்ஷத்தை" தன் லட்சியமாக கொள்ளும் மனிதர்கள் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்.

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கில், அனைவரும் கட்டாயம் தன் வாழ்க்கையின் லட்சியமாக கொள்ள வேண்டியது "தர்மம்" (Human Rules) என்று சொல்லப்படுகிறது.
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற இந்த நான்கு சமஸ்கரித சொல்லுக்கு ஈடாக, தமிழிலில்
1. அறம் (சமஸ்கரித சொல் தர்மம்)
2. பொருள் (சமஸ்கரித சொல் அர்த்தம்)
3. இன்பம் (சமஸ்கரித சொல் காமம்)
4. வீடு (சமஸ்கரித சொல் மோக்ஷம்)
என்று சொல்கிறோம்.

"மோக்ஷம்" என்ற சொல்லுக்கு, "விடுதலை" என்பது தான் நிகரான தமிழ் சொல்.

பின்பு ஏன்?
"அறம், பொருள், இன்பம், விடுதலை"
என்று சொல்லாமல்,
"அறம், பொருள், இன்பம், வீடு"
என்று தமிழிலில் சொன்னார்கள்?

காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

'மோக்ஷம்' என்ற சொல் இரண்டு மோக்ஷத்தை குறிக்கிறது.
1. 'கைவல்யம்' என்பதும் ஒரு மோக்ஷம்.
2. 'வைகுண்டம்' என்பதும் ஒரு மோக்ஷம்.

கைவல்யம் என்றால் என்ன?
வைகுண்டம் என்றால் என்ன?
என்று புரிந்து கொள்ளும் போது, ஏன் 'மோக்ஷம்' என்ற சொல்லுக்கு 'வீடு' என்று தமிழில் சொன்னார்கள்? என்று புலப்படும்.

செய்த பாவத்திற்கு, இறந்த பின், ஜீவ ஆத்மா நரகம் சென்று தண்டனை அனுபவித்து, பின் மீண்டும் உலகில் பிறக்கிறது.

செய்த புண்ணியத்திற்கு, இறந்த பின், ஆத்மா சொர்க்கம் முதல் பிரம்ம லோகம் வரை, சென்று போகங்களை அனுபவித்து, பின் மீண்டும் உலகில் பிறக்கிறது.

ஆக, பாவம் செய்தாலும் மீண்டும் பிறவி உண்டு. புண்ணியம் செய்தாலும் மீண்டும் பிறவி உண்டு.

பிற மதங்களும், புண்ணியங்கள் செய்தால் சொர்க்கம் என்கிறது.

அந்த சொர்க்கமும் நிரந்தரமல்ல என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்.




சொர்க்க லோகத்தில் இருப்பவர்கள் தேவர்கள்.
இவர்கள் நம் புண்ணியம் தீர்ந்த பின், கீழ் லோகமாக இருக்கும் பூமிக்கு மீண்டும் பிறக்க அனுப்பி விடுகின்றனர்.

பிற மதங்கள் சொர்க்கத்துக்கு மேல் ஒன்று இருப்பதாக கூட நினைக்கவில்லை. அதுவே நிரந்தரம் என்றும் சொல்லிக்கொள்கின்றனர்.

நாமோ, சொர்க்க லோகத்துக்கும் மேல், இன்னும் 4 லோகங்கள் உள்ளது என்று சொல்கிறோம். அதுவும் நிரந்தரமில்லை என்றும் சொல்கிறோம்.
சொர்க்க லோகத்துக்கும் மேல்,
மகர லோகம் (stars), ஜன லோகம், தப லோகம், கடைசியாக ப்ரம்ம லோகம் என்று சொல்கிறோம்.

ப்ரம்ம லோகத்தையும் படைத்த நாராயணன் இருக்கும் இடம் வைகுண்டம் என்கிறோம். அங்கு செல்பவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பதில்லை என்கிறது நம் சனாதன தர்மம்.

சொர்க்க லோகத்தில் நின்று விட்ட மற்ற மத அறிவு எங்கே?, நம் அறிவு எங்கே என்று இதிலேயே புரிந்து கொள்ளலாம்.



மோக்ஷம் என்ற கைவல்யம் :
உலகம் நிலை இல்லாதது (அநித்யம்) என்று உணர்ந்து, உடல் வேறு, ஆத்மா வேறு என்று உணர்ந்து, உலகத்தோடு ஒட்டாமல், பாவம் புண்ணியம் செய்யாமல், யோகியாய் இருந்து, இறந்த பின், அந்த ஆத்மா, கைவல்யம் (விடுதலை) என்ற முக்தியை அடைகிறது.

மோக்ஷம் என்ற வைகுண்டம் :
உலகம் நிலை இல்லாதது (அநித்யம்) என்று உணர்ந்து, உலகத்தோடு இருந்து கொண்டே, பாவம் புண்ணியம் அனைத்தையும் நாராயணன் பாதத்தில் சமர்ப்பித்து, நாராயணனே கதி என்று வாழ்ந்து, இறந்த பின், அந்த ஜீவ ஆத்மாவை, பரதெய்வமான நாராயணன், தன் இடமான வைகுண்டம் (வீடு) என்ற முக்தியை, மோக்ஷத்தை கொடுத்து விடுகிறார்.

கைவல்யம் (விடுதலை) அடைந்த ஜீவனும், மீண்டும் பிறப்பதில்லை.
வைகுண்டம் (வீடு) போய் சேர்ந்த ஜீவனும், மீண்டும் பிறப்பதில்லை.

இரண்டுமே மோக்ஷம் தான் என்றாலும், இதில் நாம் அடைய வேண்டியது விடுதலை மட்டுமல்ல, வீடு போய் சேர வேண்டும் என்று வேதத்தின் உண்மையான அபிப்ராயத்தை தெரிந்த தமிழர்கள்,
"அறம் பொருள் இன்பம் விடுதலை"
என்று சொல்லாமல்,
"அறம், பொருள், இன்பம், வீடு"
என்று சொன்னார்கள்.

ஒரு கைதி, பல ஆண்டுகள் சிறையில் இருந்து வந்தான்.
அவனுக்கு திடீரென்று விரக்தி வந்து விட்டது. இந்த சிறைச்சாலை என்னுடையது அல்ல, எப்படியாவது இதை விட்டு தப்பிக்க வேண்டும் என்று முடிவு செயதான்.
தப்பிக்க பல தடவை முயற்சி செய்தும், காவலாளிகள் பிடித்து விட்டனர்.
இனி முரண்டு செய்யாமல், ஒழுக்கமாக இருந்து, நல்ல பெயர் வாங்கி, விடுதலை அடைவோம் என்று எண்ணினான். அதற்கு பல வருடங்களுக்கு பிறகு பலனும் கிடைத்தது. நன்னடத்தை காரணமாக, ஒரு நாள் விடுதலை ஆகி விட்டான்.
இனி சிறை இல்லை, இனி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற விடுதலை காற்றை அனுபவித்த அவன் பேரானந்தம் அடைந்தான். இது தான் கைவல்யம் என்ற மோக்ஷ நிலை.

கைவல்யம் என்பது, சிறையில் வைக்கப்பட்டு இருந்த ஒருவன் விடுதலை ஆவது போல. பிறப்பு இறப்பு என்ற சிறைச்சாலையில் இருந்து "விடுதலை" ஆவதே இவன் நோக்கம்.

அதே சிறைச்சாலையில் இன்னொருவன் இருந்தான். அவனும் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைத்தான். இவன் தப்பிக்க நினைப்பதற்கு விடுதலை மட்டும் காரணமல்ல, அவன் வரவை எதிர்பார்த்து, அவன் தகப்பன், அவன் வீடு எல்லாம் உள்ளது என்று அறிகிறான்.
ஒரு நாள் இவனும் நன்னடத்தை காரணமாக, விடுதலை ஆகி விட்டான்.
இதற்கு முன்னால் விடுதலை ஆனவன், கூப்பிட ஆள் இல்லாததால், நேராக அங்கு இருக்கும் பார்க்கில் சுகமாக படுத்துக்கொண்டு வருவோர் போவோர்களை பார்த்து கொண்டு அலைந்து கொண்டிருந்தான்.

இவனோ, விடுதலை ஆனவுடன், தன் வீட்டுக்கு சென்று தகப்பன் வரவேற்க, அவன் வீட்டுக்கு போய் நிம்மதியாக தகப்பன் நிழலில் நிம்மதியாக இருந்தான்.
வைகுண்டம் என்பது, சிறையில் வைக்கப்பட்டு இருந்த ஒருவன் விடுதலை ஆன பின், தன் சொந்த தகப்பன் வீட்டுக்கு வந்து, தந்தையான நாராயணன் அரவணைப்பில் வீட்டில் இருப்பதே.

இந்த வேற்றுமையை உணர்ந்த தமிழ் ரிஷிகள், கைவல்யம் (விடுதலை) என்ற மோக்ஷத்தை நம் லட்சியமாக கொள்ளாமல், வைகுண்டம் (வீடு) என்ற மோக்ஷத்தையே நம் லட்சியமாக கொள்ள வேண்டும் என்று, அறம், பொருள், இன்பம், வீடு என்றனர்.



"வீட்டுக்கு" போய் சேர்வதே நம் நோக்கம்.

வைகுண்டம் என்பது கைவல்யத்தை விட உத்தமானது.

வீடு என்பது விடுதலையை விட உத்தமானது.

இதனால் தான் அறம், பொருள், இன்பம், விடுதலை என்று சொல்லாமல், அறம், பொருள், இன்பம், வீடு என்ற சொல்லில் முடிக்கின்றனர்.

திருவள்ளுவர் திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மூன்றும் மூன்று பகுதிகளில் சொல்லியிருக்கிறார்.
மோக்ஷத்தைப் பற்றித் தனியாக இப்படிப் பெரிய பகுதி இல்லாவிட்டாலும், அறத்துப் பாலிலேயே ‘இல்லற இயல்’ என்பதற்கு அப்புறம் ‘துறவற இயல்’என்று சில அதிகாரங்கள் பண்ணி, அதில் நூற்றுக்கு மேற்பட்ட குறள்களில் மோக்ஷம் ஸித்திப்பதற்கான வழிகளைச் சொல்லியிருக்கிறார்.
(http://www.kamakoti.org/tamil/3dk257.htm)

திருவள்ளுவர், சமஸ்கிருதம் அறிந்த, தமிழ் புலவர் என்பதும் வெளிச்சம் ஆகிறது.

வாழ்க தமிழ். வாழ்க தெய்வ பாஷை.



Saturday 13 October 2018

உலகில் பல விதத்தில் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். ஏன்?

உலகில் பல விதத்தில் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். ஏன்?


மனிதனால் மட்டும் தான், கடந்த காலத்தை பற்றியும், எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்க முடிகிறது.
பலமாக கொடுக்கப்பட்ட இந்த வரத்தை, வீண் செய்பவர்கள் துன்பப்படுகிறார்கள்.

மிருகங்கள் எதற்கும் கடந்த காலத்தை நினைத்தோ, எதிர்காலத்தை நினைத்தோ வருத்தம் அடைவது இல்லை. இதனாலேயே அவை நிம்மதியாகவே உள்ளன.

மூளை கலங்கிய கடந்த காலத்தை மறந்து, எதிர்கால சிந்தனையும் இல்லாமல், சில பைத்தியம் பிடித்தவர்கள் கூட,  வருத்தம் அடைவது இல்லை. இதனாலேயே அவர்களும், நிம்மதியாகவே உள்ளனர்.

கடந்த கால வாழ்வில் நடந்த சோகங்கள், இனி நடக்காமல் இருக்க, வழி செய்வதை விட்டுவிட்டு, கடந்த கால வாழ்வில் நடந்த சோகத்தை நினைவில்  மட்டும் வைத்து கொள்பவர்கள், துன்பப்படுகிறார்கள்.

எதிர் கால வாழ்வில் என்ன விபரீதங்கள் நடக்குமோ? என்று பயந்து, நல்லவைகள் நடக்க இன்று செயலில் இறங்குவதை விட்டுவிட்டு, எதிர் கால வாழ்வில் என்ன நடக்குமோ என்று பயத்தை மட்டும் நினைவில் வைத்து கொள்பவர்கள், துன்பப்படுகிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணர், "கடமையை செய்" என்று, "இன்று நீ செய்ய வேண்டிய கடமையை செய்ய செயலில் இறங்கு" என்று வழி காட்டுகிறார்.


ஸ்ரீ கிருஷ்ணரின் கர்ம யோக வழியில், கடந்த கால வாழ்க்கையை உணர்ந்து, அதில் கற்ற பாடம் என்ன? என்று அறிந்து, எதிர்காலத்தில் நல்ல படியாக வாழ இன்று என்ன செய்ய வேண்டும்? என்று உணர்ந்து, நம் கடமையை தர்மத்துடன் செய்து வந்தால், பகவான் நம்மை காப்பாற்றுகிறார்.

கிருஷ்ண பக்தன் நாசமாக மாட்டான் என்று, பக்தனும் தைரியமாக கடந்த கால சோகத்தில் மூழ்காமல், எதிர்கால பயத்தில் மூழ்காமல், இன்று என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு, துன்பம் அடையாமல் சந்தோஷமாக வாழ்கிறான்.

கிருஷ்ணர் சொன்ன கீதையை படித்து, கிருஷ்ண பக்தனாகி, நாமும் தைரியமாக கடந்த கால சோகத்தில் மூழ்காமல், எதிர்கால பயத்தில் மூழ்காமல், இன்று என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு, துன்பம் அடையாமல் சந்தோஷமாக வாழுவோம்.


உலகம் உண்ட பெருவாயா என்று நம்மாழ்வார் ஏன் அழைக்க வேண்டும்? - திருவாய்மொழி

நம்மாழ்வார் திருவாய்மொழியில்,


"உலகம் உண்ட பெருவாயா.
உலப்பில் கீர்த்தி யம்மானே,
நிலவும் சுடர் சூழொளிமூர்த்தி.
நெடியாய். அடியேன் ஆருயிரே,
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்எம் பெருமானே,
குலதொல் அடியேன் உன்பாதம் கூடு மாறு கூறாயே"
என்று திருமலையப்பனை கண்டு கதறி சரணாகதி செய்கிறார்.
"உலகம் உண்ட பெருவாயா..." என்று நம்மாழ்வார் திருமலையப்பனை இங்கு  கூப்பிடுகிறார்.
உலகத்தை பெருமாள் எப்பொழுது உண்டார்?
"உலகம் உண்ட பெருவாயா"என்று நம்மாழ்வார் ஏன் இங்கு அழைக்க வேண்டும்? என்கிற கேள்விகள் எழுகிறது.
பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், மகா பிரளய காலத்தில், எம்பெருமான் 14 லோகங்களையும் விழுங்கி, தன் திருவயிற்றில் அடக்கி கொள்கிறார் என்பது பிரசித்தம்.
மீண்டும் ஸ்ருஷ்டி செய்யும் போது, உலகங்களை மீண்டும் படைத்து, புதிய பிரம்மாவை நியமிக்கிறார்.
இதுவும் அனைவரும் அறிந்ததே.

அவ்வளவு பெரிய உலகத்தை விழுங்க வேண்டுமென்றால், பெருமாள், சிறுவாயை கொண்டு விழுங்க முடியாதே!!
உலகம் அளவிற்கு, வாயை பெரிதாக திறந்து தானே விழுங்கி இருக்க வேண்டும்? என்று நமக்கு தோன்றும்.

அதனால் தான் நம்மாழ்வார் பெருமானை, "உலகம் உண்ட பெருவாயா" என்று அழைக்கிறார் போலும், என்றும் நமக்கு தோன்றும்.

ஆனால், நம்மாழ்வார் இந்த காரணத்தால் இப்படி சொல்லவில்லையாம்.

பொதுவாக ஜீவனாகிய நாம், மோக்ஷம் அடைய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், சம்சார வாழ்வில் கஷ்டத்தை அனுபவித்தாலும் அனுபவிப்பேன், பிறவி கடலை தாண்ட மாட்டேன், பெருமாளை காண வரமாட்டேன் என்று ஏனோதானோ என்று இருக்க,
திருமலையப்பனாக அர்ச்ச அவதாரம் செய்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள், இந்த ஜீவனை காக்க வேண்டுமே, மோக்ஷம் என்ற சொத்தை கொடுக்க வேண்டுமே என்று காத்து கொண்டு இருக்கிறார். தவித்துக்கொண்டு இருக்கிறார்.





ஜீவன் ஏனோதானோ என்று இருக்கிறான்.
ஜீவனுக்கு ஈஸ்வரனாக, இருக்கும் பெருமாளோ, தனக்கும், ஜீவனுக்கும் உள்ள சம்பந்தத்தை அறிந்தவர் என்பதால், எப்படியாவது மோக்ஷத்தை கொடுத்து விட வேண்டுமே !! என்று தவித்துக்கொண்டு, மோக்ஷம் கொடுக்க சங்கல்பித்து திருமலையில் அர்ச்ச அவதாரம் செய்து விட்டார்.
இப்படி கருணை செய்வது ஒன்றே குறிக்கோளாக, அவதாரம் செய்துள்ள திருமலையப்பன், தன்னை தரிசிக்க மலை ஏறி வரும் பக்தனை கண்டு பூரித்து போகிறார்.
இந்த ஜீவனுக்கு, மீண்டும் பிறவி இல்லாத மோக்ஷம் கொடுத்து விட வேண்டும் என்று அருள் செய்கிறார்.

பக்தனை கண்டு, திருமலையப்பன் எத்தனை பூரிப்பை அடைகிறார்? என்பதை காட்டவே, நம்மாழ்வார் "உலகம் உண்ட பெருவாயா' என்ற பதத்தை பயன்படுத்தினாராம்.

உலகத்தை விழுங்க, பெருமாளுக்கு பெரு வாய் தேவைப்பட்டதா? என்று பார்த்தால், அப்படி ஒன்றும் தேவைப்படவில்லையாம்.
இதை நிரூபிக்க தான், ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்த பெருமாள், அண்ட சராசரங்களையும் தன் சிறு வாயில் யசோதைக்கு காட்டினாராம்.

யசோதை, குழந்தையாக உள்ள கண்ணனை பார்த்து, "மண்ணு தின்றாயா? மண்ணு தின்றாயா?" என்று அதட்ட,
கண்ணன் அழுது கொண்டே, "இல்லம்மா.. இல்லம்மா..." என்றான்.
"வாயை காட்டு" என்று சொல்ல, கண்ணன் தன் சிறுவாயை காட்ட, உலகங்கள் அனைத்தையும் அந்த சிறிய வாயில் கண்டு பிரமித்தாள் யசோதை.

'உலகம் உண்ட சிறுவாயை' கண்ணனிடம் கண்டாளாம் யசோதை.

'உலகத்தை காக்க, சிறுவாய் போதும்' என்ற சர்வ சக்தி உள்ளவனாக இருக்கும் பகவான் காட்டினார்.

பின் ஏன், நம்மாழ்வார் "உலகம் உண்ட பெறுவாயா" என்று சொன்னார்? "உலகம் உண்ட சிறுவாயா" என்று சொல்லி இருக்கலாமே?
என்ற கேள்வி எழும்போது தான்,
பெரியவாச்சான் பிள்ளை, நம்மாழ்வார் இதயத்தில் என்ன நினைத்தார்? என்று விளக்குகிறார்.
ஒரு பெரிய பாத்திரம் முழுவதும் இனிப்பான தின்பண்டம் இருப்பதை பார்த்து, ஒரு குழந்தை, முழுவதும் தானே சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படும்.
அந்த ஆவலில், "அனைத்தையும் எனக்கே போடு" என்று அம்மாவை கேட்டு அடம்பிடித்து, வாங்கிக்கொள்ளும்.

தேவை கொஞ்சம் தான் என்றாலும், தின்பண்டத்தை பார்த்த பூரிப்பில், தேவைக்கும்  அதிகமாக கேட்டு வாங்கிக்கொள்ளும்.
இது பொதுவாக குழந்தையிடம் பார்க்கும் குணாதிசயம்.


சர்வசக்தி உள்ள பகவான், தன் அடியார்களை கண்டு விட்டால், அந்த குழந்தைக்கு ஏற்படும் பூரிப்பை போல, தானும் அடைந்து விடுகிறார்.

தன் பக்தனை கண்டதால் ஏற்பட்ட அளவு கடந்த பூரிப்பில், இவனுக்கு மோக்ஷம் அளிக்க வேண்டுமே!! காக்க வேண்டுமே!! என்ற ஆவலில் "உலகத்தை காப்பதற்கே சிறு வாய் போதும்" என்று இருந்த பெருமாள், ஒரு பக்தனை காப்பதற்காக இவருக்கு ஏற்பட்ட பூரிப்பை பார்த்தால், சிறு உலகை காக்க பெருவாயால் உண்டது போல பூரிப்பில் இருந்தாராம்.
திருமலையப்பனுக்கு ஏற்பட்ட இந்த பூரிப்பை பார்த்து, நம்மாழ்வார் "உலகம் உண்ட பெருவாயா" என்கிறார்.

பக்தியுடன் நாம் திருமலையப்பனை தரிசித்தால், பெருமாள் நம்மிடமும் இந்த பூரிப்பு அடைகிறார்.
நம் தேவைக்கும் அதிகமாக கருணை செய்து, இகத்திலும், பரத்திலும் ஆனந்தமே கிடைக்க அருள் செய்கிறார்.

அனைவரும் திருமலை செல்வோம்.
திருமலையப்பனை பக்தியுடன் தரிசனம் செய்வோம்.


Saturday 6 October 2018

ராமபிரானுக்கு "மரியாதை ராமன்" என்று ஏன் பெயர் ஏற்பட்டது? நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? - காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்ஸர்யம்

மரியாதை ராமன்

மரியாதை என்ற சமஸ்கரித சொல்லுக்கு "எல்லை" (Boundary) என்று பொருள்.

தன் எல்லைகளை உணர்ந்தவனை, "மரியாதை தெரிந்தவன்" என்று பொதுவாக சொல்வோம்.



  1. காம, 
  2. க்ரோத, 
  3. லோப, 
  4. மோக, 
  5. மத, 
  6. மாத்ஸர்யம்


என்ற 6 விஷயங்களில் மனிதன் எல்லை தாண்ட கூடாது. இப்படி எல்லை தாண்டாதவன் தன் மரியாதையை காத்துக்கொள்கிறான்.
பரவாசுதேவன் நாராயணன், ஸ்ரீராமராக மனித அவதாரம் செய்து, இந்த 6 விஷயங்களில் எல்லை தாண்டாமல், வாழ்ந்து காட்டினார். இதனாலேயே ராமரை, மரியாதை ராமன், மரியாதா புருஷன் என்று அழைக்கிறோம்.

1. காமத்தை ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
சூர்ப்பனகை ஒரு அழகான பெண் வடிவம் எடுத்து, ஸ்ரீ ராமரை மயக்க நினைத்தாள்.
ஆனாலும், ஸ்ரீ ராமர் அவளிடம் மயங்கவில்லை. தான் மணமானவன் என்றும் சொல்லி விலகினார்.
அவளே வந்து மயக்க நினைத்த போதும், "இம்மையில் இரு மாதரை சிந்தையிலும் தொடேன்" என்று எல்லை தாண்டாமல் இருந்தார் ஸ்ரீராமர்.
காமத்தை ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

2. க்ரோதத்தை (கோபத்தை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
தன் மனைவியை ஒரு அசுரன் காக்கை வடிவில் வந்து தீண்ட பார்த்ததற்கே, ஒரே ஒரு ராம பாணத்தில் ஏழு லோகங்கள் ஓடியும் அவனை துரத்தி காலில் விழ வைத்தார்.
தன் மனைவியை இலங்கை தூக்கி சென்று விட்ட ராவணனை, நின்ற இடத்திலேயே ராம பாணத்தால் கொல்லும் சக்தி இருந்தும், கோபத்தை ஒரு  எல்லைக்குள் கட்டுப்படுத்தி, வானர சேனை உருவாக்கி, வானரர்கள் துணை கொண்டு சேது அமைத்து, இலங்கை சென்று, ராவணனுக்கு எச்சரிக்கை கொடுத்து, போரில் ஒரு முறை அவனை மன்னித்து, கடைசியில் அவனை கொன்று சீதையை மீட்டார்.
க்ரோதத்தை (கோபத்தை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.






3. லோபத்தை (பண பேராசை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
கைகேயி 24 வயது ஸ்ரீராமரை பார்த்து, "உன் அரச பதவியை பரதனுக்கு கொடுத்து விட்டு, நீ காட்டுக்கு போ" என்று சொல்ல,
கொஞ்சம் கூட சலனமில்லாமல்,
"இருக்கட்டுமே. என் தம்பிக்கு தானே கொடுக்கிறேன். பரதனே ஆளட்டும்" என்று தாராள மனதோடு காட்டுக்கு சென்றார்.
ஒரே தாய் வயிற்றில் பிறந்த அண்ணன், தம்பி, தங்கை, அக்காக்களே இன்றைய காலத்தில் சொத்து என்றதும் சண்டை போட்டு கொள்ளும் அலங்கோலத்தை நாம் பார்க்கிறோம்.
பரதன் வேறு தாய்க்கு பிறந்தாலும், பணத்தில் பேராசை இல்லாமல் இருந்தார் ஸ்ரீ ராமர்.
லோபத்தை (பண பேராசை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

4. மதம் (ஆணவத்தை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
ஆண்மை, வீரம், கல்வி, எல்லையில்லா நற்குணங்கள் என்று அனைத்தும் இருந்தும், ஸ்ரீ ராமர், மஹரிஷிகளை எங்கு பார்த்தாலும், ஆணவமே இல்லாமல், உடனே அவர்களை வணங்கி, பாத சேவை செய்வார்.
தான் அரசன் மகன் என்ற ஆணவம் துளி கூட காட்டமாட்டார்.
மதம் என்ற ஆணவத்தை ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

5. மோகத்தை (விருப்பம்) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
வனவாசம் முடிந்து, ராவணனிடம் அகப்பட்ட சீதையை மீட்டு, ராம பட்டாபிஷேகம் செய்து கொண்டு, பல ஆண்டுகள் ஆட்சி செய்து கொண்டு வந்தார் ஸ்ரீராமர்.
ஒரு சமயம், ஒரு சலவை தொழிலாளி "ராவணன் தூக்கி சென்ற சீதையை ஸ்ரீ ராமர் ஏற்றுக்கொண்டார். நானாக இருந்தால் ஏற்றுக்கொண்டு இருக்க மாட்டேன்" என்று சீதையை தரம் தாழ்த்தி பேசி விட்டான்.
இந்த செய்தி ஸ்ரீராமருக்கு எட்டியது.
தான், தன் குடும்பம், என்ற  மோகத்தை (விருப்பத்தை) விட, மக்களின் மனம் கோணக்கூடாது என்று இருப்பவர் ஸ்ரீராமர்.



அரசன் எடுக்கும் நல்ல முடிவுகளை புரிந்து கொள்ளாமல், மக்கள் தவறான அபிப்ராயம் கொண்டிருந்தால், அரசன் அதன் நியாயங்களை சொல்லி புரிய வைக்க வேண்டும்.

அரசன் எடுத்த தவறான முடிவை மக்கள் கண்டித்தால், அரசன் அதை ஆராய்ந்து, எடுத்த தவறான முடிவுகளை சரி செய்ய  வேண்டும்.

இன்னும் சில சமயங்களில்,
அரசன் எடுக்கும் நல்ல முடிவை கூட புரிந்து கொள்ளாமல், மக்கள் தவறான அபிப்ராயம் கொண்டிருந்தால், அரசன் அதன் நியாயங்களை சொல்லி புரிய வைப்பது சாத்தியமில்லை என்று தெரிந்தால், அது நல்ல முடிவாக இருந்தாலும் மக்களின் மனம் கோணாமல் இருக்க, நல்ல முடிவுகளையும் கைவிட வேண்டும்.

சீதை கலங்கமற்றவள், என்று இலங்கையில் வானரர்கள், விபீஷணன் முன்னிலையில் அக்னி பிரவேசம் செய்து நிரூபித்தாள்.

ஆனால், அயோத்தியில், சீதையின் மேல் சொல்லப்பட்ட அவதூருக்கு, மீண்டும் அக்னி பிரவேசம் செய்து காட்டு என்று சொன்னால், இது போன்று வேறு யாராவது சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள்.
ஒவ்வொரு முறையும் சீதையை அக்னி பிரவேசம் செய் என்று சொல்ல முடியாது. இது சீதைக்கு இழைக்கும் அநியாயம்.

மக்களை பற்றி கவலையில்லை என்று அரசனால் இருக்க முடியாது. ஸ்ரீ ராமரோ அயோத்திக்கு அரசர்.
இதற்கு நிரந்தர நியாயம் வழங்க முடியாது. இதற்கு ஒரே வழி, அரசனான தன் மோகத்தை (ஆசையை) தியாகம் செய்வது ஒன்றே என்று
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் காலம் தாமதிக்காமல், சீதையை தியாகம் செய்து காட்டுக்கு அனுப்பினார். மீதி காலங்களை சீதை வால்மீகி ஆஸ்ரமத்தில் கழித்தாள் சீதை.

அரசனாக இருப்பதால், தன் தனிப்பட்ட மோகத்தை (விருப்பத்தை) கூட எல்லையில் வைத்தார் ஸ்ரீ ராமர்.
மோகத்தை (விருப்பம்) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

6. மாத்ஸர்யம் (பொறாமை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
கைகேயி தசரதனிடம் வாங்கிய இரண்டு வரங்களை கொண்டு, தன் மகன் பரதன் நாட்டை ஆள வேண்டும், ஸ்ரீ ராமன் காடு செல்ல வேண்டும் என்று கேட்க, ஸ்ரீ ராமர், நாட்டை பரதனே ஆளட்டும் என்று ஏற்று, தான் காட்டுக்கு புறப்பட்டார்.

விஷயம் அறிந்து சிந்து தேசம் சென்றிருந்த பரதன் அழுது, வனத்தில் இருக்கும் ஸ்ரீ ராமர் இருக்கும் இடத்திற்கு வந்து அரசாட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்க வந்தான்.
ஸ்ரீ ராமர், இன்றைய நிலையில் பரதன் அரசனாக இருப்பான் என்பதால்,
"தசரத சக்கரவர்த்தியின் குமாரனான இன்றைய சக்கரவர்த்தியே என் வணக்கம்" என்று உள்ளம் உகந்து, துளி கூட மாத்ஸர்யம் (பொறாமை) இல்லாமல் வரவேற்று பேசினார் ஸ்ரீராமர்.



ஸ்ரீ ராமரின் இந்த குணத்தை கண்டு, துக்கத்தில் நெஞ்சம் வெடித்து விடும் நிலையில் பரதன் இருந்தார். தன்னை பற்றி துளி கூட பொறாமையோ, கோபமோ இல்லாமல் இருக்கிறாரே ஸ்ரீராமர் என்று அழுதார் பரதன்.
மாத்ஸர்யம் (பொறாமை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

இப்படி காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்ஸர்யம் என்ற 6 விஷயங்களில் ஒரு மனிதன் எல்லை தாண்ட கூடாது, என்று தன் வாழ்வில் நடத்தி காட்டிய ஸ்ரீராமரை "மரியாதை ராமன்" என்று தானே சொல்ல வேண்டும்.

ஸ்ரீ ராமரை வெறுப்பவன், மனித நற்குணங்களை வெறுக்கிறான். அப்படிப்பட்டவர்களை  விலங்குக்கும் கீழ்நிலை குணம் உடையவர்கள் என்று ஒதுக்குவதே சிறந்தது.

ஸ்ரீ ராமர் வாழ்க. மரியாதை ராமன் வாழ்க.




Tuesday 2 October 2018

குடும்ப வாழ்க்கையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமா? ஒரு அலசல்...

"ஒரு குழந்தை போதும்அந்த ஒரு குழந்தைக்கு தரமான கல்வி, வசதிகள் செய்து கொடுத்து வாழ்க்கையில் உயர்த்துவோம்"
என்ற எண்ணம் பொதுவாக இன்றைய இந்தியர்களிடம் வந்துள்ளது.


இதற்கு முன் 1970,1980களில் இருந்தவர்கள், "இரண்டு குழந்தை போதும்" என்று எண்ணினார்கள்.

1960களில் அதற்கும் முன் இருந்த காலங்களில் இருந்தவர்கள், :குழந்தைகள் பிறப்பை எண்ணிக்கை அடிப்படையில் தடுக்கவில்லை".
மேலும்,
1970களில் கருத்தடை சாதனங்கள், ஆப்பரேஷன் போன்றவை அன்று இல்லை.
இதனால், பொதுவாக, ஒரு கணவன் மனைவிக்கு "குறைந்தது 5 குழந்தைகள்" இருந்தனர்.

இன்று, 80-90 வயதில் வாழும் இவர்களுக்கு, வாழ ஒரு இடம் உள்ளது. 

5 குழந்தைகளை பெற்ற இவர்கள், தன் 90 வயதில், இரண்டு மூத்த குழந்தைகளை கூட இழந்து இருக்க வாய்ப்பு உண்டு.
மற்ற இரண்டு பேர், வெளிநாட்டில் இருக்கவும் வாய்ப்பு உண்டு.
அல்லது, தன் குடும்ப பொறுப்புகளில் சிக்கி இருக்கவும்  வாய்ப்பு உண்டு.

குறைந்த பட்சம் ஒரு பிள்ளையாவது!! ஆரோக்கியம் உள்ளவனாக, தன் 90 வயது பெற்றோரை வைத்து காப்பாற்ற கூடியவனாக இருப்பான்.
இன்று கூட, சில வீடுகளில் 90 வயது கிழவன்/கிழவி நிம்மதியாக இருப்பதை நாம் பார்த்து இருக்க வாய்ப்பு உண்டு.

"இந்த நிம்மதியை, நம்முடைய வயதான காலத்தில் நாம் அனுபவிக்க போவதில்லை" என்பதையே இதில் கவனிக்க வேண்டும்.
பெரும் அபாயம் நமக்கு முன் காத்துக்கொண்டு இருக்கிறது.




பல குழந்தை பெற்ற இவர்கள், தங்கள் குழந்தைகள் அனைவருக்கும் தரமான கல்வி கொடுக்க இயலாமல் போனாலும், குடும்ப பொறுப்பு ஒருவன் தலையில் மட்டும் ஏறாமல் இருக்க உதவி செய்தனர்.
தம்பியின் கஷ்டத்தில் அண்ணன் கை கொடுப்பதும்,
அண்ணன் கஷ்டத்தில் தம்பி கை கொடுப்பதும்,
தங்கை தம்பியிடம் பாசத்தை பொழிவதும்,
அண்ணன் தங்கைக்கு தான் சேர்த்த பொருளை கொடுத்து சுகமாக வைப்பதும் இன்றுவரை நடந்துள்ளது. 
இனி நடக்கப்போவது இல்லை..

துக்கமும், சுகமும் ஒருவருக்கு ஒருவர் பகிரப்பட்டதால், நோய் இல்லாமல் இருந்தனர். எதிர்கால பயமே இல்லாமல் இருந்தனர்.

பல குழந்தை பெற்று இன்று வயதாகி விட்ட முதியவர்களுக்கு ஒரு மகனோ, மகளோ இருக்கின்றனர்.
இது இன்று வரை நாம் பார்க்க கூடிய காட்சி.
இனி பார்க்க இயலாத காட்சி.

1980-90களில் "இரண்டு குழந்தை போதும்" என்று இருந்தனர் முந்தைய தலைமுறைகள்,

இரு குழந்தைகள் பெற்று 60 வயதை கடந்து நிற்கும் இவர்கள்,
"6 மாதம் ஒரு பையன் வீடு, 6 மாதம் மற்றொரு பையன் வீடு" என்று நாடோடி வாழ்க்கை வாழ்கின்றனர்.
இரண்டும் பெண் குழந்தையாக இருந்தால், "அனாதைகளாக" தனியாக தன் 60 வயதுக்கு மேல் வாழ ஆரம்பிக்கின்றனர்.
இன்று நாம் பார்க்க கூடிய காட்சி !!

இதில் கணவன் இறந்து, வயதான மனைவியின் வாழ்க்கை அந்தோ பரிதாபம்.
அதை விட கொடுமை,
மனைவி இறந்து, 60 வயதுக்கு மேல் கணவன் மட்டும் வாழும்  தனிமை வாழ்க்கை.
பிறந்த 2 இரண்டு குழந்தைகளில் ஒன்று இறந்து, மற்றொருவனும் பணமில்லாமல் கஷ்டப்படும் வாழ்க்கை, அதை விட நரகம்

வயதான காலத்தில் நோய், பார்த்துக்கொள்ள ஆள் இல்லை. இது அதை விட நரகம்.

இவை எல்லாம் இன்று 60 வயதை கடந்து நிற்கும் ஆண்களும், பெண்களும் சந்திக்கும் நிஜங்கள்..

இன்று "ஒரே குழந்தை போதும். அந்த குழந்தைக்கு தரமான கல்வி தருவது ஒன்றே லட்சியம்" என்று வீறுநடை போடும் தலைமுறை, 60 வயதுக்கு மேல் உயிருடன் இருப்பதே தேவையா? என்ற நிலைக்கு நிச்சயம் கொண்டு போகப்போகிறது.

60 வயதுக்கு மேல், நோய் வந்தால், பெற்ற ஒரு மகன்
மொத்த செலவை சமாளித்து, 
பெற்றவர்கள் உடம்பையும் பார்த்துக்கொள்வான் 
என்று எதிர்பார்க்க முடியாது.

தன் கஷ்டங்களை, சுகங்களை தன் உடன்பிறந்த தம்பி தங்கைகளிடம் சொல்லிக்கொள்ள கூட ஆளில்லாமல், பெற்ற ஒரு மகனே, stress, tension என்று முழித்து, நமக்கு முந்தி கொண்டு இறக்கவும் வாய்ப்பு உண்டு.

பண தேவைகளை சமாளிக்க முடியாமல் மகனும்,
நோய் வந்ததால் உதவிக்கு ஆள் இல்லாமல் பெற்றவர்களும்,
சுக துக்கங்களை பகிர முடியாமல் இருவரும் 
"குடும்ப வாழ்க்கையே நரகம்" 
என்று தோன்ற வைத்து, "இனி குழந்தையே வேண்டாம்!!" என்று நிலைக்கு வந்து விடுவோம்.

அப்படியே பெற்றாலும், "பிள்ளையை அரசு காப்பாற்ற வேண்டும். வயதான பின், அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்" என்று பயமுறுத்தவும் வாய்ப்பு உண்டு.

இப்படி குடும்ப வாழ்க்கை பொதுவாக அழிந்தாழும்,
இன்றும்
சொந்தமாக தொழில் செய்து,
இரண்டுக்கு மேல் குழந்தை பெற்று, மேலும்
கூட்டு குடும்பமாக வாழும் எவரும்,
இது போன்ற துன்பங்களை எதிர்காலத்திலும் எதிர்கொள்ள போவதில்லை என்பதே உண்மை.

மார்வாடி, நகை செட்டியார் போன்றவர்கள் இன்று வரை,
சொந்தமாக தொழில் செய்து,
இரண்டுக்கு மேல் குழந்தை பெற்று, மேலும்
கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர்.
இவர்கள் இப்படியே இருக்கும் வரை, இவர்கள் சுகமாகவே வாழ்வார்கள்.

"நோயும், ஆயுசும் நம் கையில் இல்லை" என்பதை மறக்க கூடாது.
ஆனால், "குடும்ப வாழ்க்கை அமைத்து கொள்வது நம் கையில் உள்ளது", என்பதை மறக்க கூடாது.

இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வது வளர்ப்பதற்கு கடினமாக இருந்தாலும், அது  குழந்தைகளுக்குள் ஒரு பாதுகாப்பு உணர்வை தரும். எதிர்கால பயத்தை , அநாதை என்ற பயத்தை போக்கும்.

ஒரு குழந்தை போதுமே !
குழந்தையே வேண்டாமே !
தனியாக வாழ்கிறோமே !
என்ற சிந்தனை உடைய இன்றைய சமுதாயம், "தனக்கும் 60, 80 வயதாகும்!!" என்பதை சிந்திக்க வேண்டி இருக்கிறது.

70 வயதில், பெற்ற ஒரு  பிள்ளையும் 40 வயதை கடந்து இருப்பான். 
அவனும் உடல் பலமில்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு.
அவனும் பண வசதி இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு.
அவன் கஷ்டத்தை யாரிடமும்  சொல்லிக்கொள்ள முடியாமல் இருக்க வாய்ப்புண்டு.
அவனும் பென்ஷன் இல்லாத வாழ்க்கை வேறு வாழ வேண்டும்.


80 வயதுக்கு மேல் வாழ நேர்ந்தால், காப்பாற்ற பெற்ற ஒரு மகனும் உயிருடன் இருப்பானா? என்று கூட தெரியாது.
"நோயும், ஆயுசும் நம் கையில் இல்லை" என்பதை மறக்க கூடாது.

சிதறிய குடும்பங்கள்,
குழந்தை இல்லாத குடும்பங்கள்,
ஒரே குழந்தை பெற்ற குடும்பங்கள்,
சீரழிய வாய்ப்புக்கள் கோடி உள்ளது.

பாரத நாட்டின் தனித்துவம் "குடும்ப கலாச்சாரமே".  
அது அழியாமல் இருக்க, சற்று சிந்திப்போம்..  பகிர்வோம்.