Followers

Search Here...

Showing posts with label ஞானம். Show all posts
Showing posts with label ஞானம். Show all posts

Thursday 15 June 2023

இசைஞானி என்றும், ஆத்மஞானி என்றும் சிலரை சொல்கிறோம். ஞானம் என்றால் என்ன? ஞானி என்றால் என்ன?

இசைஞானி, ஆத்மஞானி.. ஞானம் என்றால் என்ன?

பல புத்தகங்களை ஒருவன் படிக்கும் போது, அதில் சொல்லப்பட்ட விஷயங்களை பற்றிய அறிவு அவனுக்கு ஏற்படுகிறது.


உதாரணத்திற்கு, 

ஆத்மா என்றால் என்ன? 

சரீரம் என்றால் என்ன? 

என்று விளக்கும் பல சாஸ்திர புத்தகங்களை படிக்கிறோம். பகவானே தன் திருவாயால் பகவத்கீதையில் ஆத்மா, சரீரம் பற்றி விளக்கி சொல்கிறார்.


இதை படிக்கும் போது, "ஆத்மாவாகிய நாம் இந்த உடலில் இருக்கிறோம். இந்த உடல் ஒரு வாடகை வீடு தான். யமன் என்ற சொந்தக்காரன் எப்பொழுது காலி செய் என்று சொல்வானோ அப்பொழுதே ஆத்மாவாகிய நாம், போட்டது போட்டபடி விட்டுவிட்டு, கிளம்ப வேண்டியது தான்" என்று அறிவு பெறுகிறோம். 

அறிவு வேறு. 

ஞானம் வேறு.


நமக்கு படிப்பு அறிவு இருந்தும், அனுபவத்தில் உணரப்படாத வரை, உடல் பற்றிய கவலையிலேயே இருக்கிறோம். 

பகவானிடத்தில் அன்பு செய்வதையே, ஆத்மா விரும்பும் என்று தெரிந்தும், உலக விஷயங்களிலேயே அன்பு செலுத்துகிறோம். 

 

"நான் ஆத்மா. நான் இப்போது இந்த உடலில் வாடகைக்கு இருக்கிறேன். பகவான் கூப்பிடும் வரை இந்த உடலை அவ்வபோது சரி செய்து கொண்டு, அவரிடமே அன்பு (பக்தி) செய்து கொண்டிருப்பேன்" என்ற இந்த அனுபவ உணர்வோடு வாழ்பவர்களையே "ஞானி" என்று சொல்கிறோம். குறிப்பாக "ஆத்ம ஞானி" என்று சொல்கிறோம் 


ஆத்மாவை பற்றிய அறிவு, படிப்பதால் ஏற்படுகிறது.

ஆத்மாவை பற்றிய அறிவோடு, ஆத்மாவே நான் என்பதை வாழ்க்கையில் அனுபவ ரீதியாக உணர்பவர்கள், "ஆத்மஞானி" என்று அழைக்கப்படுகிறார்கள்.


அது போல, 

இசையை பற்றிய அறிவு, இசை சம்பந்தமான புத்தகங்களை படிப்பதால் நமக்கு ஏற்படுகிறது.


இசையை பற்றிய அறிவோடு, இசையை தன் வாழ்க்கையில் அனுபவ ரீதியாக உணர்பவர்கள்,  "இசைஞானி" என்று அழைக்கப்படுகிறார்கள்.


Saturday 24 November 2018

ஞானத்தை விட அன்பு உயர்ந்தது ராமாயணத்தில் நடந்த ஒரு சம்பவம்.

தெய்வத்திடம் ஏற்படும் ப்ரேமையை (அன்பை), ஞான உபதேத்தால் வீழ்த்தவே முடியாது.
பிரேமை (அன்பு) தான் ஜெயிக்கும்.


இதற்கு சான்றாக ராமாயணத்தில் ஒரு சம்பவம் நடந்தது.

தசரத மகாராஜனை காண, விஸ்வாமித்ரர் அயோத்தி வந்தார்.

ப்ரம்ம ரிஷியான விஸ்வாமித்ரர் வருகையினால் சந்தோஷப்பட்டு,
"தங்கள் ஆணைக்கு காத்து கொண்டு இருக்கிறேன். உங்களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்"
என்று சொல்லி சபைக்குள் அழைத்தார் தசரதன்.
விஸ்வாமித்ரர் மிகவும் சந்தோஷப்பட்டார்.
"தசரதா, எங்களை போன்ற ரிஷிகளுக்கு உலக தேவைகள் எதுவும் கிடையாது.
எங்களுக்கு ஏற்படும் தேவையை, ஒரு கஞ்சனிடம் சென்று கேட்கும் நிலையை ஈஸ்வரன் எங்களுக்கு கொடுப்பதில்லை.

எங்களை தரிசிக்கும் ஆவல் கொண்ட, எங்களுக்கு ஏதாவது உண்மையாக கொடுக்க ஆசைப்படுபவர்களிடம் மட்டுமே, எங்களை ஈஸ்வரன் அனுப்புகிறார்.

இந்த உலகத்திலேயே உன்னை போன்ற கொடையாளி கிடையாது என்று அறிவேன். நீ ப்ரம்மத்தை உணர்ந்தவன், சத்யம் தவறாதவன் என்றும் அறிவேன்.

இந்த நற்குணங்கள் உன்னிடம் இயற்கையாகவும், பரம்பரை பரம்பரையாகவும் உள்ளது.
மேலும் ப்ரம்ம ரிஷியான வசிஷ்டர் உனக்கு குல குருவாகவும், உன் வீட்டு புரோகிதராகவும் இருக்கிறார் என்பதும் உன் பெருமையை காட்டுகிறது.

நான் வந்த விஷயத்தை சொல்கிறேன்.
நானும், என்னோடு பல ரிஷிகளும் சேர்ந்து,  ஸித்தாஸ்ரமத்தில் யாகம் செய்கிறோம்.

பல நல்ல காரியங்களுக்காகவும், உலக நன்மைக்காகவும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ராக்ஷசர்கள் நடமாட்டம் அங்கு உள்ளது.
ராக்ஷசர்கள் நர மாமிசம் சாப்பிடுபவர்கள்.
இதனால் அங்கு இருக்கும் சாதுக்கள் நடமாட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.
இந்த கஷ்டத்தை போக்கி, அங்கு இருக்கும் சாதுக்களுக்கு உபகாரம் செய்ய வேண்டியது, தசரத ராஜனான உன் கடமை."
என்று சொல்லிக்கொண்டே, அங்குமிங்கும் கண்களால் ஒரு நோட்டமிட்ட விஸ்வாமித்ரர்,
"அதோ, அங்கு அழகான குடுமியுடன், நின்று கொண்டிருக்கும் உன் மூத்த மகன் 'ராமனை' என்னுடன் அழைத்து கொண்டு போய், யாகம் பூர்த்தி ஆனவுடன் திருப்பி உன்னிடமே கொண்டு வந்து விடுகிறேன்."
என்று சொல்லி முடித்தார்.

ராமன் என்ற பெயரை விஸ்வாமித்ரர் சொன்ன பிறகு, தசரதன் அதற்கு பிறகு அவர் சொன்னதை கவனித்தாரா? என்று கூட தெரியவில்லை.

"ஆகா ! காத்துக்கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு சேவை செய்ய ராமனை உடனே அனுப்புகிறேன்" என்று சந்தோஷமாக சொல்ல வேண்டாமோ?

"இந்த ராக்ஷஸர்களை நீங்களே சபித்து விடலாமே !
உலக நன்மைக்காக யாகம் செய்கிறீர்கள்.
நர மாமிசம் சாப்பிடும் இந்த ராக்ஷர்களை சபிப்பதும் கூட உலக நன்மை தானே?
உங்கள் தவ சக்தியால், வரும் ராக்ஷஸர்களை ஒவ்வொருத்தராகவோ, மொத்தமாகவோ பொசுக்கி விடலாமே?"
என்றார் தசரதர்.

"சபிப்பது பற்றி என்னை விட யாருக்கு தெரியும், தசரதா?
கோபப்பட்டு சபிப்பதில் எனக்கு இஷ்டமில்லை.
பொறுமையாகவே நான் இருக்கிறேன்.
எவ்வளவுக்கெவ்வளவு நான் பொறுமையை கடைபிடிக்கிறேனோ, அதை பார்த்து மற்றவர்கள் எனக்கு சக்தி இல்லையோ என்று நினைக்கின்றனர்.

கோபம் ஏற்படுவதால் பல தோஷங்கள் ஏற்படுகிறது.
கோபத்தை கட்டுப்படுத்தி, பொறுமையை கடைபிடிப்பதால், ஒரே ஒரு தோஷம் மட்டுமே ஏற்படுகிறது.

கோபத்தினால் பகை, அடிதடி, கொலை, என்று பல தோஷங்கள் ஏற்படுகிறது.

கோபத்தை அடக்கி பொறுமையை கடைபிடித்தால், ஒரே ஒரு தோஷம் மட்டுமே ஏற்படுகிறது.

அந்த தோஷம் எதுவென்றால், கோபமே இல்லாமல் பொறுமை காக்கும் கணவனை, 'அவன் பத்தினி கூட மதிக்க மாட்டாள்', என்பது தான்.

கோபமே கொள்ளாமல், பொறுமை காப்பவனிடம் ஏற்படும் ஒரே தோஷம் "உலகம் இவனை மதிக்காது" என்பது மட்டுமே.

கோபத்தினால் பல தோஷங்களை ஏற்றுக்கொள்வதற்கு பதில், 'மற்றவர்கள் மதிக்காமல் போனால் போகட்டுமே' என்று ஒரே ஒரு தோஷத்தை ஏற்றுக்கொண்டதால், பொறுமையை கடைபிடிக்கிறேன்.

அதுவும் தவிர,
'ப்ராம்மணனுக்கு' பொறுமையே லக்ஷணம்.
'க்ஷத்ரியனுக்கு' வீரமும், அதர்மம் செய்பவர்கள் மீது கோபமும் லக்ஷணம்.

நான் ப்ராம்மண தர்மத்தின் படி, பொறுமையை கடைபிடிக்கிறேன்.

நாங்கள் செய்யும் தவம், உலக நன்மையை நோக்கியே தவிர, சபிப்பதற்காக இல்லையே !

கோரமான தபசு செய்து, அதன் சக்தியை வேறொரு நல்ல காரியங்களுக்கு பிரயோகம் செய்ய இருக்கும் போது, அதை சபித்து விரயம் செய்ய விரும்பவில்லை.

நான் பொறுமையாக இருப்பதை பார்த்து, ராக்ஷசர்கள் 'எனக்கு சக்தி இல்லை' என்று நினைத்து அட்டகாசம் செய்கின்றனர்.

இந்த ராக்ஷர்களை சபித்து அழிக்கும் சக்தி இருந்தும், நான் ஏன் உன்னிடம் வந்து உதவி கேட்கிறேன்? என்று நினைத்தாய் என்றால், அதற்கு காரணம் உள்ளது.

யாகம் செய்வது உலக நன்மைக்காக.
அந்த பிரதேசமும் உன் ராஜ்யமாக உள்ளது.

உன் ராஜ்ஜியத்தில் 'ராக்ஷசர்கள் நடமாடும் இடமும் இருக்கிறது' என்பதை நீ கவனிக்க வேண்டாமா?

தேவர்களுக்கு அசுரர்களால் ஆபத்து என்றவுடன், சொர்க்க லோகம் சென்று உதவி செய்கிறாய்.
இந்த மனுஷ்ய லோகத்தில், உன் ராஜ்யத்தில், ராக்ஷஸர்கள் ரிஷிகளை நர மாமிசமாகவே அடித்து சாப்பிட்டு விடுகின்றனர்.

துஷ்டர்களை நிக்ரஹம் செய்வதும் (தீயவர்களை அடக்குவதும்),
சிஷ்டர்களை பரிபாலனம் செய்வதும் (நல்லவர்களை காப்பதும்) ஒரு அரசனின் கடமை.

உன் கடமையை நினைவு மூட்ட வந்தேனே தவிர, புகார் சொல்வதற்கு வரவில்லை.

ராக்ஷஸர்களை அடக்கி, ரிஷிகளை காக்க வேண்டியது உன் கடமை.

அந்த கடமையை நிறைவேற்ற நீ ராமனை என்னுடன் அனுப்பு. ராமனே இந்த காரியத்தை செய்யத்தக்கவன்.
உன் மகன் ராமன் உனக்கு எத்தனை அருமை என்று எனக்கு தெரியாதா!
பலவித ஷ்ரேயசை ராமனுக்கு செய்து அனுப்புவேன். என்னுடன் அனுப்பு."
என்றார் விஸ்வாமித்ரர்.


தசரதர் பதில் சொல்லாமல் இருந்தார். மேலும் நினைத்தார்,
"இவர் ஆஸ்ரமத்தில் என்ன சௌகரியம் இருந்து விட போகிறது?

நான் என் குழந்தையை வேளை தவறாமல் பார்த்து பார்த்து பாலும் பழமும் கொடுத்து, தாலாட்டி லாலனை செய்கிறேன்.

ஒரு வசதியும் இல்லாமல், இவர் என் குழந்தையை காட்டுக்கு அழைத்து கொண்டு போகிறேன் என்று சொல்கிறாரே?
அது மட்டுமில்லாமல், என் குழந்தையை ராக்ஷசர்களிடம் சண்டைக்கு அனுப்புவேன் என்று வேறு சொல்கிறாரே?

என் குமாரனுக்கு இவர் என்ன ஷ்ரேயஸ் (நன்மை) செய்து விட போகிறார்?
எனக்கு இல்லாத அக்கரை இவருக்கு இருக்கப்போகிறதா?"
என்று நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்தார்.

தசரதன் பேசாமல் இருப்பதை பார்த்து, விஸ்வாமித்ரர்,
"இவன் என் குழந்தை. இவனுக்கு ஒன்றும் தெரியாது என்று நீ நினைக்கலாம்.
இந்த ராக்ஷசர்களை ராமன் எதிர்க்க முடியுமா? என்று நீ யோசிக்கிறாய்.
நான் சத்தியமாக சொல்கிறேன், ராக்ஷசர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்.
அப்பேர்ப்பட்ட சக்தியுள்ளவன் உன் மகன். நீ கவலையே படவேண்டாம்"
என்றார் விஸ்வாமித்ரர்.

விஸ்வாமித்ரர் சொல்வது கொஞ்சம் கூட தசரதனுக்கு புரியவில்லை.

தசரதன் பார்வைக்கு 12 வயது ஸ்ரீ ராமன் குழந்தையாகவே தெரிந்தார்.

"ஸ்வாமி, என் குழந்தையை பற்றி உங்களுக்கு தெரியாது போல இருக்கிறது.
என் குழந்தை சாயங்காலம் விளையாடி கொண்டிருப்பான். விளையாடி விட்டு, அரண்மனைக்குள் வரும் போது, உள்ளே வரும் பாதை சிறிது வெளிச்சம் குறைவாக இருக்கும்.
இருட்டாக உள்ளதே என்று உள்ளே வர பயந்துகொண்டு, வாசலில் நின்று கொண்டே, 'அம்மா, அம்மா..' என்று துணைக்கு அழைப்பான் என் குழந்தை.
அவன் தாயார் வந்து கூட்டி கொண்டு உள்ளே செல்வாள்.
என் குழந்தையை பற்றி எனக்கு தெரியாதா?, ஸ்வாமி.
நீங்கள் ராக்ஷஸர்கள் முன் சண்டைக்கு கூட்டி சென்றால், பயப்படுவான், ஸ்வாமி"
என்றார்.

விஸ்வாமித்ரர், தசரதனை பார்த்து,
"தசரதா ! நம் குழந்தை தானே, நம் குழந்தை தானே என்று பார்க்காதே.
நீ ராமனை 'என் குழந்தை' என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறாய்.
குழந்தை என்று பார்த்தால், உனக்கு குழந்தையாக தான் தெரிவான்.
வேறு த்ருஷ்டியால் பார்த்தால் தான், ராமனின் பெருமை புரியும்.

'குழந்தையாக இருந்து உன்னை சுகப்படுத்த வேண்டும்'
என்று ராமன் சங்கல்பித்ததால் தான், உனக்கு அப்படி ஒரு அனுபவம் தோன்றுகிறது.

அப்படியே ஒன்றும் தெரியாத குழந்தை என்றாலும், எத்தனை நாள் இப்படியே வீட்டுக்குள் பூட்டி வைப்பாய்?

குழந்தைகளை நாலு பேருடன் பழக விட வேண்டும்.
துணிந்து வெளி உலகத்தை பார்க்க அனுப்ப வேண்டும்.
நாலு இடத்துக்கு போனால் தான் அந்த குழந்தைக்கும் சாமர்த்தியம் வருமே தவிர, வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்தால், மகா மக்காக ஆகி, நம் காலையே சுற்றிக்கொண்டு இருப்பான்.

உன் குழந்தை என்று நீ பார்த்தாலும், நீ அவனுக்கு வில் ஆயுதம் கற்று கொடுத்துள்ளாய். கல்வி மட்டும் போதுமா?
அதை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்தினால் தானே கல்வியின் பயனை அவன் அனுபவிப்பான்.
ராமனை என்னோடு அனுப்பு.

மேலும்,
தசரதா ! உன் பிள்ளையை பற்றி உனக்கு தெரியாது. எனக்கு தெரியும்.

ஜடா முடியுடன் இருக்கும் நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, ரத்ன கிரீடம் அணிந்து இருக்கும் நீ புரிந்து கொள்ள முடியாது.

ஞான யஞ்யம் செய்ய கூடிய நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, புத்ர காமேஷ்டி யாகம் செய்யும் நீ புரிந்து கொள்ள முடியாது.

காய்ந்த இலைகளை உண்டு, தவம் செய்யும் நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, ராஜ போஜனம் செய்யும் நீ புரிந்து கொள்ள முடியாது.

தர்பாஸனத்தில் அமர்ந்திருக்கும் நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் நீ புரிந்து கொள்ள முடியாது.

ஒரு குருவை உயர்ந்த ஆசனம் கொடுத்து, அவருக்கு கீழே அமர்ந்து உபதேசம் கேட்க வேண்டியிருக்க, வசிஷ்டர் போன்ற குருவை கீழே ஆசனம் கொடுத்து அமர செய்து, அவரை விட உயர்ந்த ஆசனத்தில் ராஜா என்று உட்கார்ந்திருக்கும் நீ புரிந்து கொள்ள முடியாது.

ராஜ யோகியான நான் புரிந்து கொள்ளும் விஷயங்களை, ராஜ போகியான நீ புரிந்து கொள்ள முடியாது.

உன் நிலை வேறு, என் நிலை வேறு.

நீ ஊனக் கண்ணால் பார்க்கிறாய். நான் ஞான கண்ணால் (சாஸ்திர அறிவை கொண்டு) பார்க்கிறேன்.
வேதத்தின் பிரமாணத்தை கொண்டு, உன் பிள்ளை 'ராமன்' பரமாத்மா என்று தெரிந்து கொண்டேன்.
வேதமே வழிபடும் பரமபுருஷன் தான் உன் மகனாக பிறந்து இருக்கிறான் என்றும் அறிகிறேன்.

உன்னை பொறுத்தவரை, மிகவும் அழகாக இருக்கிறான் என்பதால், "ராமன்" என்று பெயர் வைத்தோம் என்று நினைத்து இருப்பாய்.

யோகிகள் எந்த பரப்ரம்மத்தை நோக்கி ரமிக்கிறார்களோ அந்த பரப்ரம்மம் தான் 'ராமனாக' அவதரித்து உள்ளார் என்று தெரிந்து கொள்.

இந்த ராமன், யோகிகளை ரமிக்க செய்கிறான் என்பது உன் சபையை பார்த்தாலே நீ புரிந்து கொள்ளலாம்.

போரில் புறமுதுகிட்டு ஓடாத, போர் திறன் மிக்கவன் ராமன் என்று உணர்த்த 'சத்ய பராக்ரமன்' என்று பெயர் வைத்து இருப்பாய்.

ஸ்ருஷ்டி (படைத்தல்),
ஸ்திதி (காத்தல்),
சம்ஹாரம் (அழித்தல்)
என்ற மூன்றும், உலகில் எப்பொழுதும் சத்தியமாக நிகழ்ந்து கொண்டே இருக்க செய்யும், பராக்ரமம் (திறமை) மிகுந்த பரம்பொருள், ராமனாக பிறந்ததால் தான், இவனுக்கு 'சத்ய பராக்ரமன்' என்றும் பெயர் உள்ளது என்று நீ அறிய மாட்டாய்.

இந்த ராமனின் பெருமையை நீங்கள் மட்டும் தான் அறிவீரோ? என்று நீ நினைத்தால், சொல்கிறேன் கேள்.
உன் சபையில் குலகுருவாக இருக்கும் 'வஷிஷ்டருக்கும்' இது தெரியும்.

தசரதா ! உன் குலகுருவாக இருக்கும் வஷிஷ்டருக்கும், எனக்கும் மட்டும் தான் தெரியும் என்று நினைத்து விடாதே.
உன் சபையில் குழுமி இருக்கும் அனைத்து ரிஷிகளுக்கும் தெரியும், ராமன் பரப்ரம்மம் என்று.

மேலும் கேள் தசரதா.
பொதுவாக, ரிஷிகள் காடுகளில் தவம் செய்து கொண்டிருப்பவர்கள் தானே?
இவர்கள் ஏன் உன் அரண்மனையில் இருக்கிறார்கள் என்று எப்பொழுதாவது யோசித்து பார்த்தாயா?




தவம் செய்ய ஏற்ற இடமா அரண்மனை?
ஒரு காலத்தில் தபோவனத்தில் கால் பதிந்த இந்த ரிஷிகள், இன்று தபோவனத்தை மறந்து, உன் அரண்மனையே கதி என்று இங்கேயே இருக்கின்றனர்.

உன் அரண்மனைக்கு வந்தால், நீ ராஜ போஜனம் ஏற்பாடு செய்து கொடுப்பாய், வயிறார உணவு கிடைக்கும் என்று இந்த ரிஷிகள் வரவில்லையே.
இங்கு வந்தும் தவத்திலேயே இருக்கிறார்கள்.
நீ கொடுக்கும் ராஜ போஜனத்தை இவர்கள் எதிர்பார்க்கவில்லையே?
தாங்கள் கொண்டு வந்த காய்ந்த இலைகளை கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டு, எப்பொழுது பார்த்தாலும் உன் தர்பாரில் வந்து அமர்ந்து கொண்டு உள்ளனரே?

உன் தர்பாரில் உட்கார்ந்து இருக்கும் இந்த ரிஷிகள், உன் சபைக்கு கொண்டு வரப்படும், விவாதங்கள் எதிலும் ஈடுபடுவதில்லை.
எப்பொழுதும் கண்ணை மூடி பரப்ரம்மத்தை தியானித்து கொண்டே அமர்ந்து இருக்கின்றனர்.
நீ என்ன தீர்ப்பு வழங்கினாய்? என்ன நடந்தது? என்று கூட இவர்கள் கவனிப்பதில்லை.

நீ போடும் ராஜ போஜனம் எதையும் இவர்கள் சாப்பிடுவதில்லை.
சபையில் நடக்கும் எந்த விஷயத்திலும் இவர்கள் கலந்து கொள்வதும் இல்லை.
கண்ணை மூடிக்கொண்டு எப்பொழுதும் ஜபம் செய்து கொண்டு, கண்களில் நீர் வடிய, உன் சபையில் உட்கார்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

புஷ்டியான சரீரமில்லாமல், இளைத்த உடம்புடன், வறண்ட வாயுடன், கண்களில் இருந்து கண்ணீரும், ஒட்டிய வயிருடன், இடுப்பில் மரவுரி அணிந்து, அடிக்கடி ஆனந்த கண்ணீர் விட்டு கொண்டு, உன் சபையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்களே இவர்கள்.
எந்த சுகத்தை அனுபவிக்க இவர்கள் இங்கு வந்து அமர்ந்து இருக்கிறார்கள்? என்று எப்பொழுதாவது நினைத்தது உண்டா, தசரதா?

அவர்கள் எந்த சுகத்தை அனுபவிக்க இங்கு இருக்கிறார்கள்? என்பதை நீ அறிந்து கொண்டாலே, என்ன காரணம் என்று புரிந்து கொண்டு விடலாம்.

சபையில், நீ சில சமயம் "ராமா" என்று கூப்பிடும் போது, உன் மகன் ராமன் ஓடி வந்து "அப்பா" என்று வந்து உன் முன் நிற்கும் போதும் மட்டும், இந்த ரிஷிகள் கண்களை திறந்து ராமனை பார்க்கின்றனர்.
கல்ப காலமாய் காட்டில் தவம் செய்தாலும், தரிசனம் கொடுக்க வராத பகவான், 'தசரதன் கூப்பிட்டான்' என்றவுடன், அடுத்த நொடி தரிசனம் கொடுப்பதை அறிந்து, உன்னுடன் சேர்ந்து கொண்டு தாங்களும் பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டு, உன் சபையில் வந்து அமர்ந்துள்ளனர்.

உன் புத்திரனை பார்ப்பதற்காகவே இந்த ரிஷிகள் வந்து அமர்ந்திருக்கும் போதே தெரியவில்லையா, இவன் பரப்ரம்மம் என்று.

ஒரு சாதாரண ராஜகுமாரனை பார்ப்பதற்கா இத்தனை ரிஷிகள் உன் சபையில் அமர்ந்து இருக்கிறார்கள்?
வேறு தேசங்களில் ராஜ்குமாரர்கள் இல்லையா? அங்கு போகலாமே இந்த ரிஷிகள் !

இந்த ரிஷிகள் ஏன் இங்கு வந்து அமர ஆர்வம் காட்டுகின்றனர்? என்று நீ நிதானமாக யோசித்தாலே, உனக்கு உண்மை விளங்கும்.

சாதுக்களான ரிஷிகள் எப்பொழுதும் பரமாத்மாவை தரிசிக்கவே விரும்புவார்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.
இந்த சாதுக்கள் உன் மகன் ராமனை பார்க்கவே இங்கு அமர்ந்துள்ளனர் என்று நீ புரிந்து கொள்ளும் போது, உன் மகன் பரப்ரம்மம் என்று உனக்கு புரியும்"
என்று சொன்னார் விஸ்வாமித்ரர்.


விஸ்வாமித்ரர் சொல்வதையெல்லாம் கேட்டு, தசரதர் மூர்ச்சையாகிவிட்டார்.

பக்கத்தில் இருந்த சேவகர்கள் பன்னீர் தெளித்து, விசிறி விட்டு தசரதரை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

தசரதர் உடல் தளர்ச்சியால் மூர்ச்சை ஆகவில்லை.
ராமனை கேட்கிறாரே என்ற சோகத்தில் மூர்ச்சை ஆகி இருந்தார்.

விஸ்வாமித்ரருக்கு என்ன சொல்லி இந்த சங்கடத்தில் இருந்து தப்பிக்கலாம்? என்று யோசித்து கொண்டிருந்தார்.
திடீரென்று ஒரு மனதில் ஒரு பதில் கிடைக்க, இதை வைத்து சமாளித்து விடலாம் என்று எண்ணி, உடனே எழுந்து கொண்டு,
"ஸ்வாமி, இன்னும் என் குழந்தைக்கு வயதாகவில்லை.
எந்த காரியத்தை செய்ய வேண்டுமென்றாலும், அதற்கு தகுந்த வயது உள்ளவனா? என்று பார்க்க வேண்டி இருக்கிறது. 

வாலிபனாக ஆகும் வரை, 'இவன் இன்னாரது பிள்ளை' என்று தகப்பனை வைத்து தானே அடையாளம் காட்டுவார்கள்.

என் குழந்தைக்கு 12 வயது தான் ஆகிறது.
அவனாக ஒரு காரியத்தை செய்யும் அளவுக்கு வயது இல்லை, ஸ்வாமி.
இன்னும் 16 வயது கூட ஆகவில்லையே ஸ்வாமி, என் பையனுக்கு.

அப்படியே 12 வயது குழந்தையை அழைத்தாலும், அங்கே நாடகம், விளையாட்டு நடக்கிறது என்றா அழைக்கிறீர்கள்? யுத்தத்திற்கு அழைக்கிறீர்களே !!

அப்படியே யுத்தம் என்றாலும் அவன் வயதில் ஒரு விளையாட்டு யுத்தம் அழைத்தாலும் பரவாயில்லை. ராக்ஷசர்களோடு யுத்தம் என்று சொல்கிறீர்களே?

அப்படிப்பட்ட முரட்டு தனமான யுத்தத்திற்கு நான் குழந்தை பெறவில்லையே !!

யுத்தத்திற்காகவே என் குழந்தையை பெற்று இருந்தால், அவனுக்கு "வீரபாகு, மகாபாகு, சத்ருஞ்ஜெயன்" என்றல்லவா பெயர் வைத்து இருப்பேன்.

'அழகாக இருக்கிறான்' என் குழந்தை என்று 'ராமன்' என்றல்லவா பெயர் வைத்து இருக்கிறேன்.

அழகாக இருக்கும் என் குழந்தையை பார்த்து சந்தோஷப்படாமல், இப்படி யுத்தத்திற்கு அழைக்கிறீர்களே?

ஒரு வேளை, ராமன் ராமன் என்று தவறி இங்கு வந்து விட்டீரோ?
கையில் கோடாரியுடன் சண்டைக்காகவே இன்னொரு ராமன் அலைந்து கொண்டு இருக்கிறார். நீங்கள் அவரை பார்க்க வந்து, தவறி இங்கு வந்து விட்டீர்களோ?
இவன் 'தசரதராமன்' ஸ்வாமி. நீங்கள் தேடி வந்தது 'பரசுராமர்' என்று நினைக்கிறேன்.

என் குழந்தை ராமன் "தாமரை போன்ற கண்கள்" (ராஜீவ லோசனன்) உடையவன் ஸ்வாமி.

இதன் காரணமாகவே ராக்ஷசர்களோடு யுத்தம் செய்யும் தகுதி என் குழந்தைக்கு இல்லை."
என்று சொல்லி முடித்து விட்டார்.

பொதுவாக "தாமரை கண்ணன்" என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் கவிஞர்களுக்கு மனதில் உதிக்கும்.

தசரதன், விஸ்வாமித்ரரை பார்த்து
"தாமரை எப்படி மலர்ந்து இருக்குமோ, அதுபோல, மலர்ந்த கண்களை உடையவன் என் குழந்தை.
தாமரை எப்படி அழகாக இருக்குமோ, அதுபோல அழகான கண்களை உடையவன் என் குழந்தை.
தாமரை எப்படி குளிர்ச்சியாக (ஆர்த்ரம்) இருக்குமோ, அதுபோல குளிர்ச்சியான கண்களை உடையவன் என் குழந்தை.
தாமரையின் ஓரத்தில் எப்படி சிவப்பு இருக்குமோ, அதுபோல என் குழந்தையின் கண்களின் ஓரத்தில் சிவப்பாக இருக்கும்.
தாமரை பார்த்து எப்படி வண்டுகள் மொய்க்குமோ, அதுபோல அனைவரையும் ஆகர்ஷிக்கும் அன்பு நிறைந்த கண்களை உடையவன் என் குழந்தை."
என்ற பொதுவான அர்த்தத்தில் சொல்லவில்லையாம்.

மாறாக,
தசரதன், விஸ்வாமித்ரரை பார்த்து,
"ஸ்வாமி, தாமரையானது சாயங்காலம் ஆனது என்றால், கூம்பி விடும்.
ராத்திரியில் தாமரை மலர்ந்து இருக்காதே.
என் குழந்தை ராமன் "தாமரை போன்ற கண்கள்" உடையவன் ஸ்வாமி.
என் மகன், காலை வேளையில், வெளியே சென்று விளையாடி, சாயங்காலம் வருவான்.
அவன் தின்பதற்கு கொஞ்சம் பட்சணம் செய்து கொடுத்து சாப்பிட சொல்லி, கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்த்தால், அங்கேயே சாய்ந்து கொண்டு தூங்கி கொண்டு இருப்பான்.
அவன் தாய், கௌசல்யா அவனை ஆசையோடு உள்ளே அழைத்து கொண்டு, சூரியன் மறைந்து இரவு வருவதற்குள் தூங்க பண்ணி விடுவாள், ஸ்வாமி.

நீங்கள் யுத்தம் செய்ய சொல்வதோ, ராக்ஷஷர்களுடன்.
அவர்களோ ராத்திரியில் தான் சண்டைக்கு வருவார்கள்.
விடியும் வரை சண்டை செய்வார்களே?
என் குழந்தையோ தாமரை கூம்பி விடுவது போல, தூங்கி போய் விடுவானே, ஸ்வாமி?

இதன் காரணமாகவே, யுத்தம் செய்ய என் குழந்தைக்கு யோக்கியதை இல்லை, ஸ்வாமி"
என்று சொல்லி, தன் மகன்  யுத்தத்திற்கு லாயக்கு இல்லை என்று முடித்து விட்டார் தசரதன்.

விஸ்வாமித்ரர் மனதுக்குள் நினைத்தார்,
"இவனிடத்தில் போய் வேதாந்த ரகசியத்தை இத்தனை மணிநேரம் பேசினேனே!!
பரப்ரம்மம் தான் உனக்கு ராமனாக வந்து இருக்கிறார் என்று வெளிப்படையாக நானே சொன்ன பிறகும், ஒரே அடியாக, என் குழந்தைக்கு யுத்தம் செய்ய யோக்கியதை இல்லை என்று சொல்லி முடித்து விட்டானே!!

வேதாந்த ரகசியத்தை விருப்பம் இல்லாதவனிடம், கேட்கும் பக்குவம் இல்லாதவனிடம் சொல்ல கூடாது என்ற பொழுதும், இவனுக்கு போய் சொல்லி நேரத்தை வீணடித்து விட்டேனே!!"
என்று மனதுக்குள் நினைத்தார்.

ராமனை தன்னுடன் கூட்டி கொண்டு செல்ல முடியாததை காட்டிலும், இத்தனை நேரம் இவனுக்கு செய்த உபதேசம் வீண்  போனதே என்று 'பொறுமையே ப்ராம்மணனுக்கு பூஷணம்' என்று சொன்ன விஸ்வாமித்ரர், யாகத்தில் பூர்ணஆஹுதி விடும் போது வெளிப்படும் அக்னியை போல கோபத்தை வரவழைத்து கொண்டார்.

இவரின் கோபத்தை கண்டு, சூரியன் தன் கிரணங்களை குறைத்து கொண்டான்.
வாயு பகவான் காற்றை மந்தமாக்கினான். தேவர்கள் பயந்ததால், பஞ்ச பூதங்களும் தன் சக்தியை குறைத்து கொண்டது. உலகமே மந்தமாகி, இவர் கோபத்தின் விளைவு என்ன ஆகுமோ? என்று பயந்தது.

விஸ்வாமித்ரரின் கோபத்தை கவனித்த வசிஷ்டர், இவரை நன்கு அறிந்தவர்.

ஒரு சமயம், விஸ்வாமித்ரர் அரசனாக (க்ஷத்ரியன்) இருந்த போது, வஷிஸ்டரிடம் கோபம் கொண்டு, 'நானும் ப்ரம்ம ரிஷி ஆவேன், நானும் பிராம்மணன் ஆவேன்' என்று சபதம் செய்தார்.
சபதம் செய்தது மட்டுமில்லை, கடும் தவம் செய்து, காமத்தையும், கோபத்தையும் க்ஷத்ரியனாக இருந்ததால் பல தடவை அடக்க முடியாமல் போனாலும், விடா முயற்சியால் மீண்டும் மீண்டும் தவம் செய்து, கடைசியில் காமத்தையும், கோபத்தையும் ஜெயித்து, பிராம்மணன் ஆகி, மேலும் கடும் தவம் செய்து தேவர்கள், ப்ரம்மா உட்பட ப்ரத்யக்ஷம் ஆகி, "நீ ப்ரம்ம ரிஷி" என்று சொல்லிய பின்பும், ஒப்புக்கொள்ளாமல், வசிஷ்டர் வாயால் இறுதியில் "நீ ப்ரம்ம ரிஷி" என்று பெயர் வாங்கி தன் சபதத்தை நிறைவேற்றி கொண்டார்.

ஒரு ப்ரம்ம ரிஷி ஆவதற்கே விஸ்வாமித்ரருக்கு அத்தனை விடா முயற்சி இருந்தது என்றால், பரப்ரம்மம் ராமனாக அவதரித்துள்ள நிலையில், தசரதனால் தனக்கு ராமன் கிடைக்கவில்லை என்று சொன்னால், இவருக்கு எத்தனை கோபம் வருமோ? என்று வசிஷ்டரே சிறுது கலங்கி விட்டார்.

விஸ்வாமித்ரர் ஒரு மணி நேரம் ஞானத்தை உபதேசம் செய்தும், தசரதன் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்று உணர்ந்த வசிஷ்டர், தசரதனை பார்த்து,
"விஸ்வாமித்ரர் சொன்னது போல, உன் மகன் ராமன் 'பரப்ரம்மம்' தான். சர்வ வல்லமை உடையவன் தான்."
என்று தன் பங்குக்கு ஒரு மணி நேரம் ராமனின் பெருமையை சொல்லவில்லை. சொன்னாலும் தசரதனுக்கு புரியாது.
அதற்கு பதில், விஸ்வாமித்ரரின் பெருமையை தசரதனுக்கு சொல்லலாம் என்று தீர்மானித்தார்.

மகா புத்திசாலியான வசிஷ்டர், தசரதனிடம் "ராமனின் அவதாரத்தை, பெருமையை" சொல்லி ஒன்றும் நடக்காது என்று புரிந்து கொண்டார்.

விஸ்வாமித்ரர் "பரபிரம்மமே ராமனாக அவதரித்து உள்ளார்" என்று ஞானத்தோடு பார்த்து சொல்கிறார்.
தசரதனோ, "ராமன் என் குழந்தை" என்று பாசத்தோடு (ப்ரேமையோடு) பார்க்கிறான்.

பொதுவாக, தெய்வத்திடம் ஏற்படும் ப்ரேமையை, ஞான உபதேத்தால் வீழ்த்தவே முடியாது.
பிரேமை தான் ஜெயிக்கும்.

இங்கு இத்தனை மணி நேரம் விஸ்வாமித்ரர் செய்த ஞான உபதேசம், தசரதனின் ராம பிரேமையால் தோற்று நின்றது.

இப்பொழுது விஸ்வாமித்ரருடன் ராமனை அழைத்து செல்ல வைக்க, அந்த அன்பின் வழியிலேயே சென்றால் தான், தசரதன் அனுப்ப சம்மதிப்பான் என்று உணர்ந்த வசிஷ்டர், உடனே தசரதனை பார்த்து,
"தசரதா ! உன் குழந்தைக்கு ஒரு ஆபத்தும் வராது.
விஸ்வாமித்ரர் எப்பேர்ப்பட்ட மகாத்மா தெரியுமா?
எனக்கு ஒரு யோக்கியதை உண்டு .
உனக்கு ஒரு யோக்கியதை உண்டு.
நான் ப்ரம்ம ரிஷி, நீ ராஜ ரிஷி.
அவரோ இரண்டு யோக்கியதையும் உடையவர். இவர் முதலில் ராஜரிஷியாகி இருந்து, ப்ரம்ம ரிஷி ஆனவர்.

அவரிடத்தில் உலகில் உள்ள  ஏராளமான அஸ்திர, சஸ்திரங்கள் இருக்கிறது.
தானாகவே கண்டுபிடித்த அஸ்திர, சஸ்திரங்களும் இவரிடத்தில் இருக்கிறது.

ப்ரம்ம ரிஷியாகி போனதால், இவையெல்லாம் இவருக்கு பிரயோஜனம் இல்லை.

இவை அனைத்தையும் உன் பிள்ளைக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
இப்படி பலவித ஷ்ரேயஸ்களை ராமனுக்கு செய்வார்.
ஒரு ஆபத்தும் ஏற்படாது. விஸ்வாமித்ரருடன் அனுப்பு"
என்றவுடன்,
தசரதன் சந்தோஷமடைந்தார்.

"விஸ்வாமித்ர ரிஷிக்கு என் குழந்தை மேல் எத்தனை கிருபை இருந்தால், அத்தனையும் என் குழந்தைக்கு கொடுக்க நினைப்பார்.
நான் அனுப்பாமல் இருந்து இருந்தால், என் குழந்தைக்கு எத்தனை பெரிய நஷ்டம் இது."
என்று நினைத்து, விஸ்வாமித்ர ரிஷியுடன் அனுப்ப சம்மதத்துடன் "ராமா" என்று அழைக்க, இந்த விவாதத்தை கேட்டு கொண்டிருந்த ராமன், கூடவே லக்ஷ்மணனுடன் வில்லும், அம்புமாக தயாராக வந்து நின்றனர்.
தசரதன் இரண்டு குழந்தைகளையும் விஸ்வாமித்ரரிடம் ஒப்படைத்தார்.

தன் வந்த காரியம் நிறைவேறிய சந்தோஷத்தில், இனி ஒரு நொடி இருந்தாலும், திடீரென்று மனம் மாறி, "அனுப்ப மாட்டேன். சுமந்திரா, உடனே சென்று ராம லக்ஷ்மணர்களை அழைத்து கொண்டு வா" என்று தசரதன் சொல்லி விடுவானோ, என்று உடனேயே அங்கிருந்து ராம லக்ஷ்மணர்களை கூட்டிக்கொண்டு வெகு தூரம் சென்று விட்டார்.
ராம லக்ஷ்மணர்கள் கையில் வில், அம்புடன் இவர் பின்னால் ஓட, வேக வேகமாக நடந்தார்.


சரயு நதி வரை நிற்காமல் வேகமாக நடந்த விஸ்வாமித்ரர் அங்கு வந்த பின் தான் கொஞ்சம் நின்றாராம்.
மேலும் சித்தாஸ்ரமம் நோக்கி வேகமாக நடக்க ஆரம்பிக்க, பரப்ரம்மமே ராமனாக தன்னை பின் தொடர்ந்து வருவதை மறந்து விடுவாரா விஸ்வாமித்ரர்?
இவர்கள் நடந்து போவதை பார்த்தால், பரமேஸ்வரன் முன்னே நடக்க, பின்னால் முருகனும், விநாயகரும் செல்வது போல இருந்தது என்கிறார், வால்மீகி பகவான்.

நீருண்ட மேகம் போல, மரகத மணியை போல இருக்கும் ராமரும், வைடூரிய மணியை போல ஜொலிக்கும் லக்ஷ்மணனும், தன் பின்னால் ராஜ அலங்காரத்துடன் கையில் வில், அம்புடன் வருவதை எண்ணி, தனக்கு கிடைத்த பாக்கியத்தை நினைத்தார்.

வேகமாக நடந்து கொண்டே, அவ்வப்போது விஸ்வாமித்ரர் ராம, லக்ஷ்மண தொடர்ந்து வரும் அழகை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே நடந்தார்.

வெளியில் பார்ப்பதற்கு விஸ்வாமித்ரர் கம்பீரமான ரிஷியாக தெரிந்தாலும்,  'பரபிரம்மம்' தன் பின்னால் வருகிறதே என்று எண்ணி பரவசம் அடைந்தார்.
விஸ்வாமித்ரர் கண்களில் நீர் வழிய, தன் மனதுக்குள் நினைத்தார்,
"இது எனக்கு கிடைக்க கூடிய நிதியா? தன் தகப்பனாரை விட்டு, இப்படி என் பின்னால் ஓடி வருகிறார்களே இருவரும் !

நான் சம்பாதித்த ஞானத்தை (அறிவு) கொண்டு, பகவானை பிடித்து விடலாம் என்றல்லவா நினைத்தேன்.

என் சாமர்த்தியத்தால் பேசி, ராமரை பிடித்து விடலாம் என்று நினைத்தேனே !

பகவானை, நான் பயின்ற ஞானத்தால் அடைய முடியாது என்று தசரதன் சபையிலேயே உணர்ந்து கொண்டேன்.
என் சாமர்த்தியம் ஒன்று கூட அங்கு செல்லுபடியாகவில்லையே !
கடைசியில் குருவான வசிஷ்டர் செய்த சிபாரிசு தானே ஜெயித்தது.

எந்த அறிவை கொண்டும், பகவானை பிடித்து விட முடியாது என்று உணர்ந்தேன்.

வசிஷ்டர் சொன்ன ஒரு சொல்லுக்கு, இப்படி ராமனாக அவதரித்த பரப்ரம்மம் என் பின்னால் ஓடி வருகிறாரே?

மேலும், 'உன் முயற்சியால் என்னை பிடிக்க முடியாது' என்று முதலில் நிரூபித்து,
பின், தானே என்னுடன் வருவதற்கு ஆசைப்பட்டு, தசரதன் மனது மாறும்படியாக செய்து, இப்படி என் பின்னால் ஓடி வருகிறாரே!!

'எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவனாக, மனதில் எப்பொழுதும் பகவத் தியானமே செய்து கொண்டிருப்பவனாக, சாதுக்களாக இருக்கும் மகாத்மாக்கள் பாத தூளி என் தலை மேல் விழாதா? என்று அவர்களை தொடர்ந்து கொண்டு, அவர்கள் பின்னால் நான் ஒடுகிறேன்'
என்று பகவான் சொல்லும் சாஸ்திரம், இன்று நிரூபணம் ஆகிறதே?"
என்று நினைத்து, தனக்கு கிடைத்த அணுகிரஹத்தை நினைத்து மேனி சிலிர்த்து ஆனந்த கண்ணீருடன், அவ்வப்போது திரும்பி திரும்பி ராம லக்ஷ்மண சகோதரர்களை பார்த்து கொண்டே, நடந்து கொண்டு இருந்தார்.

ராமருடன் இப்படியே சில மணி நேரம் நடந்து வர வர  விஸ்வாமித்ரரின் ஸ்வபாவம் மாற தொடங்கியது.

ராமர் தன்னோடு அருகிலேயே வர வர, விஸ்வாமித்ரர் இது வரை சபையில் பேசிய "ராம ப்ரபாவம், வேதாந்த தத்துவங்கள்' எல்லாம் காணாமல் போய், பிரேமை (அன்பு) அதிகமானது".

'நம் பையன், நம் குழந்தை' என்ற எண்ணம் உருவாகி, அடிக்கடி திரும்பி பார்த்து, ராமரின் தலையை வருடி விட்டார்.
வேர்வையை தன் மரவுரியால் துடைத்து விட்டார்.

மேலும் ராமனை பார்த்து,
"குழந்தாய், நடந்து நடந்து கால் வலிக்கிறதோ?
நான் வேண்டுமென்றால் கை கால் பிடித்து விடட்டுமா?
களைப்பாக இருந்தால், நாம் இங்கேயே தங்கி விட்டு, பின்னர்  செல்லலாமா?
உனக்கு பசிக்கிறதா? காலையில் அரசவையில் சாப்பிட்டது தானே. நேரம் ஆகிவிட்டதே?"
என்றெல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டார் ஞானியான விஸ்வாமித்ரர்.

ராமரோ, "அதெல்லாம் ஒன்றும் இல்லையே" என்று சொல்லியும், ராம லக்ஷ்மணர்களுக்கு பசிக்குமோ, களைத்து இருப்பாரோ, தூக்கம் வருமோ என்று தானே நினைக்க ஆரம்பித்து விட்டார் விஸ்வாமித்ரர்.

'ஆமாம் பசிக்கிறது' என்று சொன்னால் கூட, இவரிடம் கொடுப்பதற்கு போஜனம் ஏதும் இல்லை.
ஆனாலும் விஸ்வாமித்ரரிடம்,
பசியே வராமல் இருக்க,
தேவைப்பட்டால் மட்டும் தூக்கம் வர,
களைப்பே அடையாமல் இருக்க
சக்தி வாய்ந்த 'பலை அபலை' என்ற இரு மந்திரங்கள் அவரிடம் ஸித்தியாகி இருந்தது.

ராமருக்கு லக்ஷ்மணருக்கும் தான் ஸித்தியாக்கி வைத்திருந்த இந்த பலை-அதிபலை என்ற மந்திரத்தை உபதேசம் செய்து விட்டார் விஸ்வாமித்ரர்.

உபதேசம் செய்த பின், விஸ்வாமித்ரர் பெரிதும் நிம்மதி அடைந்தார்.

தன் மந்திர உபதேசத்தால், ராமன் பலம் பெற்றான் என்று எப்படி  நினைத்தார் விஸ்வாமித்ரர்? என்று நமக்கு தோன்றலாம்.

இப்படி ஒரு எண்ணம் எப்படி விஸ்வாமித்ரரிடம் வந்தது? என்றும் நமக்கு தோன்றலாம்.

சற்று முன் தான், இவர் தசரதனிடம் மணிக்கணக்கில் சபையில்
'வேதத்தின் பிரமாணத்தை கொண்டு, உன் பிள்ளை 'ராமன்' பரமாத்மா என்று தெரிந்து கொண்டேன். அவனை குழந்தை குழந்தை என்று பார்க்காதே'
என்றெல்லாம் பேசி ராமனை அழைத்து வந்தார் விஸ்வாமித்ரர் என்று பார்க்கிறோம்.


பகவான் என்று சொல்லிவிட்டு, அவருக்கு இவர் மந்திர உபதேசம் செய்து பலம் கிடைக்கட்டும் என்று எப்படி நினைத்தார்? என்று நமக்கு தோன்றலாம்.

வேதத்தில் "விஷ்ணுவின் பலத்தால் தான் இந்த உலகமே தரிக்கப்பட்டுள்ளது" என்று விஷ்ணுவின் பலத்தை சொல்கிறது.

வேத ப்ராமணமாக ராமன் அவதார புருஷன் என்று தெரிந்த விஸ்வாமித்ரருக்கு, விஷ்ணுவின் பலம் தெரியாமல் இருக்குமா?

மகா பலசாலியான விஷ்ணு அவதாரமான ராமருக்கு, இவர் உபதேசித்த "பலை அதிபலை" என்ற இரு மந்திரத்தால் தான் பலம் அதிகரித்தது என்று எப்படி விஸ்வாமித்ரர் திடீரென்று நினைத்தார்? என்று நமக்கு தோன்றலாம்.

சற்று முன் சபையில் இவர் பேசியதற்கும், இப்பொழுது இவர் பேசுவதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே?

விஸ்வாமித்திரரின் செயலில் ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கு காரணம் உண்டு.

பொதுவாக ஆரம்பத்தில் "பகவானே, என்னை காப்பாற்று !!"
என்று தனக்காக அழுவான் அஞானியான பக்தன்.

அஞானியான பக்தனுக்கும்  பகவான் அணுகிரஹம் செய்கிறார்.

பகவானின் அணுகிரஹத்தை அனுபவித்த இவன், பகவான் தன் கையில் கிடைத்தவுடன், "என்னை காப்பாற்று" என்று ஆரம்பத்தில் சொன்னவன், அன்பின் காரணமாக, "பகவானை நாம் காப்பாற்ற வேண்டுமே" என்று நினைக்க ஆரம்பித்து விடுவான்.

"என்னை காப்பாற்று" என்று சொல்லும் பக்தன், பகவானை "சர்வேஸ்வரன், சர்வ வல்லமை கொண்டவன்" என்று நினைக்கிறான்.

பகவான் தன்னை வெளிக்காட்ட வெளிக்காட்ட, தன் அருகே இருப்பதை உணரும் பக்தன்,
'யாருக்கும் கிடைக்காதவர் தனக்கு கிடைத்து விட்டாரே! அவரை நாம் தானே பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மை விட்டால் யார் பார்த்து கொள்வார்கள்?'
என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்து விடுவான்.
இதற்கு பெயர் தான் பிரேமை (அன்பு).

இந்த பிரேமை (அன்பு) அதிகமாகி அதிகமாகி, "பகவான் என்னை காப்பாற்ற வேண்டும்" என்று வந்தவன், அன்பின் காரணமாக, "பகவானை தான் காப்பாற்ற வேண்டும். அவரை தீயவர்கள் நெருங்காமல் பார்த்து கொள்ள வேண்டுமே!!" என்று நினைக்க ஆரம்பித்து விடுவான் பிரேம பக்தன்.

ராமரை மகனாக பெற்ற தசரத மகாராஜனின் பிரேம நிலை, விஸ்வாமித்ரருக்கு புரிந்தது.

இந்த அன்புக்கு அடிப்படை எது?
ஞானம் (அறிவு).

தெளிந்த அறிவு உடைய ஞானியின் அருகில், பகவான் வந்து விட்டால், பிரேம பக்தி ஆரம்பிக்கிறது.
இந்த பிரேமை என்ற அனுபவம், ஞானத்தை விட உயர்ந்தது.

விஸ்வாமித்ரர் மஹா ஞானி.
ராமர் 'பரமாத்மா' என்று நன்கு அறிந்தவர்.
சர்வ வல்லமை கொண்டவர் 'ராமர்' என்றும் அறிந்தவர்.

இப்பேர்ப்பட்ட இந்த ஞானியிடம், பகவான் ராமர் அருகில் வந்ததும், வேதாந்த தத்துவங்கள் மறந்து, ஒரு அஞானியை போல, தான் உபதேசித்த மந்திரத்தால் ராமனுக்கு பலம் என்று நினைக்கவில்லை.
மாறாக,
தான் சம்பாதித்த இந்த மந்திரத்தை அவரிடம் சமர்ப்பணம் செய்து, ராமருக்கு தன்னிடம் இருந்ததை சமர்ப்பித்து, "மங்களாசாஸனம்" செய்தார் விஸ்வாமித்ரர்.

பகவானுக்கு அஞானி தன்னிடம் பக்தி செய்வது ஆச்சரியமாக இருக்காது.
ஒரு ஞானி தன்னிடம் பக்தி செய்வதை பெருமையாக கருதுகிறார்.

விஸ்வாமித்திரர் மந்திர உபதேசமாக தனக்கு செய்யும் பூஜையை ஆசையுடன் ஏற்று கொண்டார்.

ராத்திரி பொழுதை அந்த சரயு நதி கரையிலேயே தங்கி, அதற்கு பின் சித்தாஸ்ரமம் சென்றார்.
தாடகை வதம் செய்து, யாகம் இனிதாக நடக்க செய்து, அங்கிருந்து மிதலா (நேபால்) சென்று அங்கு சிவதனுஷை நாண் ஏற்றி, வில்லை முறித்து தன் பலத்தை காட்டி, சீதையை தன் தகப்பனார் தசரதன் சம்மதத்துடன் ஏற்றுக்கொண்டு, சீதா ராம தம்பதிகளாக அயோத்தியா திரும்பினர், திவ்ய தம்பதிகள்.
ஜெய் ஸ்ரீ ராம். ஸ்ரீ ராமஜெயம்.