Followers

Search Here...

Showing posts with label அர்த்தங்கள். Show all posts
Showing posts with label அர்த்தங்கள். Show all posts

Friday 13 April 2018

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்கள் என்ன?. கிருஷ்ணணே பகவான்

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்களை விஷ்ணு புராணம் சொல்கிறது.
1. பூர்ணமான ஐச்வர்யம்
2. பூர்ணமான தர்மம்
3. பூர்ணமான புகழ்
4. பூர்ணமான ஸ்ரீ
5. பூர்ணமான வைராக்யம்
6. பூர்ணமான மோக்ஷம்

இந்த ஆறும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இருந்ததை இனி பார்ப்போம்.

1. பூர்ணமான ஐச்வர்யம் : (Complete Power to create, maintain, destroy)
  • படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவை போல, வத்ஸா பஹரண லீலை செய்து, பிரம்மாவை போல படைத்தது,
  • அழிக்கும் தொழிலை செய்யும் ருத்திரனை போல, பாணாஸுர யுத்தத்தில் ருத்திரனை வென்று, பாணாஸுரனை வதம் செய்தது,
  • வைதீகன் பிள்ளைகளை மீட்டதில் விஷ்ணுவையும் அடக்கினதாலும்,
  • இந்திரனை கோவர்த்தன லீலை செய்து தோற்கடித்தும்,
  • ஸாந்தீபனியின் பிள்ளையை யமனிடம் மீட்டதும், 
ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான ஐச்வர்ய ஸ்வரூபம் என்று தெரிகிறது.

2. பூர்ணமான தர்மம் :  (Stand by Dharma)
  • அதர்மம் செய்த கம்சன், நரகாசுரன், பாணாசுரன், ஜராசந்தன், கௌரவர்கள் அனைவரையும் அழித்து, தர்மத்தை நிலை நாட்டி
  • யுதிஷ்டிரனை ஆட்சியில் அமர்த்தியதில், 
ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான தர்ம ஸ்வரூபம் என்று தெரிகிறது.

3. பூர்ணமான புகழ் : (Fame beyond boundary)
  • ஸ்ரீமத் பாகவதம், மஹா பாரதம், ஸ்ரீமத் பகவத் கீதை போன்ற என்றும் நிலைக்கும் பிரமாணங்களே 
பூர்ணமான புகழ் கொண்டவர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று தெரிகிறது.




4. பூர்ணமான ஸ்ரீ :  (Complete Wealth)
  • மஹாலக்ஷ்மி ஸ்ரீகிருஷ்ணருக்கு ருக்மிணியாக சேவை செய்தாள் எனில், ஸ்ரீ கிருஷ்ணரை விட பூர்ணமான ஸ்ரீமான் யார்? 
  • செல்வம் கொழித்த தேசமாக இருந்தது துவாரகை.
    ஸ்ரீ கிருஷ்ணரை நம்பியதாலேயே பெரும் செல்வம் அடைந்து, பேரரசனும் ஆனார் தர்மபுத்திரர். 
  • ஏழை பிராம்மணன் குசேலர் என்ற சுதாமா, ஸ்ரீ கிருஷ்ணரை பார்க்க சென்றதற்கே அவர் பெரும் செல்வந்தனாக ஆனார் என்ற நிகழ்ச்சிகளே 

ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான ஸ்ரீமான் என்று தெரிகிறது.

5. பூர்ணமான வைராக்யம் :
  • ஷோடச ஸ்திரீ ஸஹஸ்ரேசன் ஆயினும், அநாதி ப்ரம்மச்சாரி என்று ஸ்ரீ கிருஷ்ணரை, ப்ரம்மச்சாரியான பீஷ்மரும், சுகரும் சொல்லும் போதே பூர்ணமான வைராக்யம் ஸ்வரூபமாக கொண்டவர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று தெரிகிறது. 
  • பிறக்கும் போதே தாயும், தந்தையும் சிறையில், தனக்கு முன் பிறந்த குழந்தைகள் அனைவரும் கொலை செய்யப்பட்ட சோகம், கோகுலத்தில் வளரும் போதே குழந்தையாக இருந்ததில் இருந்தே கொலை செய்ய பல வித முயற்சி, பல விதத்தில் ஜராசந்தன் போன்றவர்களால் யாதவர்கள் இன்னல் போன்றவை ஏற்பட்டும், ஸ்ரீ கிருஷ்ணர் எந்த நிலையிலும் மனம் தளராத தீரனாகவும், மகிழ்ச்சி குறையாதவனாகவும், சம நிலையில், புலம்பல் இல்லாமல், அழுகை இல்லாமல், அனைத்து கஷ்டங்களையும் எளிதாக சமாளித்து, மற்றவர்களும் இவரால் பயன் பெறும் வகையில் பூர்ணமான வைராக்ய ஸ்வரூபமாக இருந்தார். 
  • பகவத் கீதை முழுவதுமே ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான வைராக்கியம் உடையவர் என்று உணர்த்துகிறது.

6. பூர்ணமான மோக்ஷம்:
  • மோக்ஷம் என்ற வைகுண்டம் நாராயணர் மட்டுமே கொடுக்க கூடியது. 
  • எந்த புண்யத்தாலும் சம்பாதிக்க முடியாத மோக்ஷம் என்ற வைகுண்டத்தை
  • எந்த தகுதியும் இல்லாத பூதனை போன்ற அல்பத்திற்கும் தன் சங்கல்பத்தில் (விருப்பத்தில்) வைகுண்டம் கிடைக்கச் செய்தார்.
பகவான் என்ற சொல்லின் 6 அர்த்தங்களையும் கண்ணன் காண்பித்தான்.

நாராயணரின் விபவ அவதாரத்தில், இந்த ஆறும் நிரம்ப அவதாரம் செய்தது ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே.

கையை தூக்கி நோயே விலகு, பிசாசே ஓடு என்று இந்த்ரஜாலம் செய்வதும், நதியில் நடப்பதும், நதியை கடக்க முயலும் போது நதி வழி விடுவதும் அனைத்தும் ஒரு யோக கலையே.

நம் தமிழ் நாட்டில் குட்டி முனிவர் அகத்தியர் கடல் நீரை அள்ளி தன் கமண்டலத்தில் அடக்கி விட்டார்.
ராவணன் பத்து தலைகளுடன், யமனையும் சேர்த்து அடிமை செய்து விட்டான்.
வசிஷ்டர் தன் தண்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான போர் படைகளை உருவாக்கி, விஸ்வாமித்திரர் அரசனாக இருந்த போது சண்டை இட்டார்.




இப்படி சாகசங்கள், ஆச்சரியங்கள், மருத்துவன் செய்ய கூடிய சிகிச்சைகள் செய்யும் இவர்களை மூடத்தனமாக பகவான் என்று ஹிந்துக்கள் கூறவில்லை.
ஞானி, மஹாத்மா, முனி, ரிஷி, ஸாது, அரசன் என்று மதிப்பு கொடுத்தனர்.

அகத்தியர், பதஞ்சலி போன்ற பெரும் முனிகளை, மதித்தனர்.
ஆனால் பகவான் என்று சொல்லவில்லை.

இந்த 6ம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இருப்பதால், முழு முதல் பகவான் கண்ணனே

"பகவான்" என்ற பெயருக்கு உரிமையாளன் யார்?

பொதுவாக, எந்த தெய்வத்தையும் "பகவான்" என்று சொல்லி ஆனந்தப்படுகிறோம்.

புத்தரை கூட சிலர் "புத்த பகவான்" என்று சொல்வதுண்டு.

"பகவான்" என்ற மதிப்பு மிக்க அடையாளத்தை அனைத்து தெய்வங்களும் பயன்படுத்தினாலும், ஆழ்ந்து கவனிக்கும் போது, எந்த தெய்வம் "பகவான்" என்ற பெயருக்கு உண்மையில் உரிமையாளர் என்று தெரிந்து விடும்.

ஒவ்வொரு தேவதைக்கும் புராணம் சொல்லப்பட்டு இருக்கிறது.

சிவபெருமானை பற்றி சொல்லும் புராணத்திற்கு "சிவ புராணம்" என்று பெயர் உள்ளது.

கணேசனை பற்றி சொல்லும் புராணத்திற்கு "கணேச புராணம்",
முருகனை பற்றி சொல்லும் புராணத்திற்கு "கந்த புராணம்" என்று பெயர் உள்ளது.

இப்படி ஒவ்வொரு தெய்வத்தின் புராணமும் அவரவர் பெயர்களை கொண்டிருக்க,
ஸ்ரீ கிருஷ்ணனை பற்றி சொல்லும் புராணத்திற்கு "கிருஷ்ண புராணம்" என்று இல்லாமல், அவர் பெயரை கூட பயன்படுத்த அவசியமில்லாமல், "பாகவதம்" என்று பெயர் உள்ளதை கவனிக்க வேண்டும்.

தேவியை பற்றி சொல்லும் புராணத்திற்கு கூட "தேவி பாகவதம்" என்று தேவியின் அடையாளத்தை சேர்த்து தான் பெயர் உள்ளது. 

ஆனால், ஸ்ரீ கிருஷ்ண சரித்திரத்தை சொல்லும் போது, கிருஷ்ணன் என்று சொல்லக்கூட அவசியமில்லாமல், "பாகவதம்' என்று தனித்து நிற்கிறது.

புராணங்கள் மட்டும் தான் இப்படி உள்ளது என்றில்லை.. உபதேச க்ரந்தங்களும் இப்படியே இருக்கிறது.

ருத்ரன் உபதேசித்த கீதைக்கு "ருத்ர கீதை", "சிவ கீதை" என்று பெயர்.
கணேசன் உபதேசித்த கீதைக்கு "கணேச கீதை" என்றும்,
எமன் உபதேசித்த கீதைக்கு "எம கீதை" என்றும் பெயர் உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார் என்றதும், "கிருஷ்ண கீதை" என்று தானே இருக்க வேண்டும்...

ஆனால், ஸ்ரீ கிருஷ்ணனே "பகவான்" என்பதால், அவர் உபதேசித்த கீதைக்கு மட்டும் "பகவத் கீதை" என்று பெயர் ஏற்பட்டது.

அது மட்டுமல்ல,
மஹாபாரதத்தில் மற்ற இடங்களில் ஸ்ரீ கிருஷ்ணர் சகஜமாக பேசும் இடங்களில் "ஸ்ரீ கிருஷ்ணன் பேசுகிறார்" என்றே காண்கிறோம். 
அர்ஜுனன் பேசும் போது கூட, "அர்ஜுன உவாச" (அர்ஜுனன் பேசுகிறான்) என்றே பகவத் கீதையில் உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணர், உபதேசிக்கிறார் என்றதும், "கிருஷ்ண உவாச" என்ற பதத்தை பயன்படுத்தாமல், "பகவான் உவாச... பகவான் உவாச... பகவான் உவாச..." என்று கீதை முழுக்க "பகவான் பேசுகிறார்... பகவான் பேசுகிறார்..  பகவான் பேசுகிறார்" என்று இருப்பதை காண்கிறோம்.

பகவான் பேசும் கீதையை படிக்க யாருக்கு தான் ஆசை ஏற்படாது. 

கிருஷ்ண சரித்திரம் "பாகவதம்' என்றும்,
அவர் உபதேசம் செய்தால் "பகவத் கீதை" என்றும்,
அவர் பேசுனால், "பகவான் உவாச" என்றும் பார்க்கும் போது "பகவான்" என்ற பெயருக்கு உரிமையாளன் யார் என்று தெளிவாக நமக்கு தெரிகிறது.

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்கள் சேர்த்து சொல்லப்படுகிறது. 

இந்த 6ம் ஒரு சேர பெற்றவர் ஸ்ரீ கிருஷ்ணர் ஒருவரே. 

ஸ்ரீ கிருஷ்ணரே "பகவான்"