Followers

Search Here...

Showing posts with label நம்மாழ்வார். Show all posts
Showing posts with label நம்மாழ்வார். Show all posts

Thursday 13 January 2022

பெரியோர்களிடம் எப்படி பழக வேண்டும்? ஆளவந்தார் திருவனந்தபுரம் செல்ல வைத்த பாசுரம். அர்த்தம் தெரிந்து கொள்வோம். கெடுமிட ராயவெல்லாம் ...

பெரியோர்களை பார்க்கும் போது, "முதலில் அவர்களுடைய திருவடியை தான் பார்க்க வேண்டும். பிறகு தான் அவர்களின் முகத்தை பார்க்கவேண்டும்".

இது பெரியோர்களிடம் மரியாதையாக பழகும் முறை. 

ஒரு அரசனை பார்த்தாலும், இப்படி தான் பார்க்க வேண்டும்.

நம்முடைய ஆசாரியனை பார்த்தாலும், முதலில் அவருடைய திருவடியை பார்த்து விட்டு தான் அவருடைய முகத்தை பார்க்க வேண்டும்.

தெய்வத்தை பார்த்தாலும், முதலில் திருவடியை பார்த்து விட்டு தான், அவருடைய திருமுகத்தை பார்க்க வேண்டும்.


திருவடியை பார்த்து விட்டு, முகத்தை பார்ப்பது என்பது "மரியாதை".

முகத்தை பார்த்து விட்டு, பிறகு வெட்கப்பட்டு தலை குனிந்து திருவடியை பார்ப்பது என்பது "அன்பு".

திருவடியின் பெருமையை ஆளவந்தார் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் நமக்கு காட்டுகிறது.

திருமங்கையாழ்வார், திருவரங்கத்தில் நம்பெருமாள் முன்பு தம்முடைய திருநெடுந்தாண்டக பாசுரங்களை அனுபவித்துப் பாடினார்

அரங்கன், “ஆழ்வாரின் விருப்பம் என்னவோ?” என்று கேட்க, 

திருமங்கையாழ்வார், ”மார்கழியின் மோக்ஷ உத்ஸவத்தன்று வடமொழி வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியையும் அரங்கன் கேட்டருள வேண்டும்”  என வேண்டினார். 

அரங்கன் மகிழ்வுடன் இணங்கினார்


இதை படிப்படியாக சீர்படுத்தப்பட்டு, இதில் மோஹினி அவதாரம், திருக்கைத்தல சேவை, வேடுபறி, மற்றும் நம்மாழ்வார் மோக்ஷம் போன்றவை சேர்த்து பிரமாண்ட உத்ஸவமாக நாதமுனிகள் ஆரம்பித்தார்.

அவரை தொடர்ந்து ஆளவந்தார், சுவாமி ராமானுஜர் மற்றும் மணவாள மாமுனிகள் என்னும் ஆச்சாரியார்கள், தொடர்ந்து, இன்று வரை நிர்வகித்து வருகின்றனர்.

இந்த உத்ஸவத்திற்காக ஆழ்வார்திருநகரியில் இருந்து நம்மாழ்வார் விக்கிரகத்தை திருவரங்கம் கோயிலுக்கு எழுந்தருள செய்வார்கள்.  

இது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி முதல் பத்து நாட்கள் நடைபெறும்.

இந்நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி அரையர்களால் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும். 

இது பத்து  நாட்கள் இரவில் நடைபெறும். 

எனவே ’இராப்பத்து’ எனப்படுகிறது.  

இதுவே ’அத்யயன உத்ஸவம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.

அத்யயன உத்சவ காலத்தில், வைஷ்ணவ ஆசாரியர்கள் பெருமாளை விட்டு போகவே மாட்டார்கள்.

அத்யயன உத்ஸவத்தில் தான், திவ்ய பாசுரங்களை, பெருமாளே உட்கார்ந்து கேட்பார்.

பரம ரசிகர்களான ஆசாரியர்கள் பாசுரத்தையும், பெருமாள் கேட்பதையும் அனுபவிக்காமல் வேறு எங்காவது போக ஆசைப்படுவார்களா? 

இந்த அனுபவத்தை விடுவதற்கு யாருக்கு தான் மனம் வரும்?

இந்த அத்யயன உத்ஸவத்தை ஆரம்பித்தவரே நாதமுனிகள் தான்.

அவரை தொடர்ந்து நிர்வகித்து வந்தவர் ஆளவந்தார்.

"108 திவ்ய தேசங்களை நமது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து, திவ்ய தேச தரிசனம் செய்ய சொல்லி இருக்கிறார்களே! 

மேல் நாட்டு, மலை நாட்டு திவ்ய தேசங்கள் அனைத்தும் பார்க்க வேண்டுமே! பார்க்க வேண்டுமே!"

என்று ஆளவந்தார் ஆசைப்பட்டு கொண்டிருந்தார்.


அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. மேலும், நம்பெருமான் அனுமதிக்காக காத்து இருந்தார்.

அத்யயன உத்சவம் நம்பெருமாளுக்கு ஆரம்பமானது.

பாசுரங்களை கேட்டு, பெருமாளையும் பார்த்து ரசித்து கொண்டிருந்தார் ஆளவந்தார்.





பத்மநாபன் மீதான பாசுரம் வந்த போது, "அனந்தபுர நகர் புகுதும் இன்றே" என்று சொல்லும்போது, கொஞ்சம் வீசி சொல்லி, ஆளவந்தாரை அரையர் பார்க்க, 'இது தான் நம்பெருமாள் நியமனம்' என்று, அப்படியே புறப்பட்டு விட்டார்.


ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு, போகும் வழியில் உள்ள திவ்ய தேசங்கள் அனைத்தையும் சேவித்து கொண்டே, நடந்து நடந்து, 'திருவனந்தபுரம்'  வந்து சேர்ந்தார்.


பத்மநாபனை அங்கு மூன்று வாசல் வழியாக தான் பார்க்க முடியும். 

முதலில் திருவடி, பிறகு திருநாபி, பிறகு திருமுகம் என்று மூன்று ஸ்தானமாக பெருமாளை இங்கு பார்க்கலாம்.

'மூன்று உலகங்களாக விராட் புருஷனாக (வ்யாஹ்ருதி - பூ: புவ ஸுவ:) தானே இருக்கிறேன்' என்கிறார்.

ஸ்ரீரங்கத்தில் இருந்து நடந்தே வந்து, ஆசையோடு பார்க்க வந்த ஆளவந்தார், கோவிலுக்குள் வந்து, முதல் வாசலில் பெருமாளின் "திருவடியை" பார்த்தார்.

பார்த்து விட்டு, உடனேயே, திரும்பி விட்டார்.

சேவை செய்து வைப்பவர்கள், ஆளவந்தாரை கூப்பிட்டு, 'இதோ பாருங்கள் பெருமாளின் நாபி கமலம். ப்ரம்ம தேவனை படைத்த நாபி கமலத்தை பாருங்கள்' என்று காண்பித்து அழைக்க,

ஆளவந்தார் அவர்களிடம், "அதற்கு அதிகாரம் நமக்கில்லை. திரு நாபியை தரிசிக்கவோ,திருமுகத்தை தரிசிக்கவோ பிராட்டிக்கு தான் அதிகாரம். அடியேனுக்கு திருவடியே போதும்" என்று சொல்லிவிட்டு திரும்பினார்.

ஆளவந்தாரை திருவனந்தபுரம் கொண்டு வர செய்த நம்மாழ்வார் பாசுரம் :

கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார் விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் தடமுடை வயல் அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே

- திருவாய்மொழி (நம்மாழ்வார்)

கேசவா! என்ற மூன்றெழுத்து நாமத்தை சொன்னால் துன்பம் அனைத்தும்  தொலைந்து போகுமே! (கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன

இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு நரக வேதனைகளை அனுபவிக்க யமலோகம் யமதூதர்கள் அழைத்து செல்லும் போது, 

இங்கு ஏன் வந்தாய்? அனைத்து பாவங்களையும் நாசம் செய்யவல்ல, கேசவனை நீ பஜிக்கவில்லையா? கேசவனின் நாமத்தை சொல்பவர்களுக்கு நரக வேதனை நேராதே! கேசவ நாமத்தை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும், கேசவனை பூஜை செய்ததற்கு சமம் அன்றோ!' என்று எமதர்மன் கேட்பாரே!

கேசவா! என்று சொல்பவருக்கு எம பயமில்லையே! (நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்)

ஆதிசேஷன் மேல் விரும்பி பள்ளி கொள்பவன் வீற்று இருக்கும் (விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான்)

வண்டுகள் ரீங்காரம் செய்யும், தடாகங்கள் நிறைந்த, வயல்வெளிகள் நிறைந்த (சுரும்பு அலற்றும் தடம் உடை வயல்)

திருவனந்தபுரத்திற்கு இன்றே செல்வோமே! (அனந்தபுரநகர் புகுதும் இன்றே)


இதை கேட்டதும், ஆளவந்தார், நம்பெருமாள் உத்தரவாக ஏற்று,  திருவனந்தபுரத்திற்கு கிளம்பி விட்டார். 

Thursday 25 June 2020

பாசுரம் (அர்த்தம்) - இடங்கொள் சமயத்தை. "பாற்கடலில், ஹரிபக்தி செய்பவர்களின் பக்தி எப்படி உள்ளது?" என்று நம்மாழ்வார் வர்ணிக்கிறார். தெரிந்து கொள்வோமே !

ஒரு சமயம் நாரதர், நர நாராயணனாக வீற்று இருக்கும் பதரிநாத்க்கு வந்தார்.



எப்பொழுதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் நாரதர், முகம் வாடி இருந்தார்..

இதை கவனித்த பதரி நாராயணன், "என்ன காரணம்?" என்று விஜாரித்தார்.

நாரதர் பல உலகங்கள் சஞ்சாரம் செய்பவர்.
எங்கு போனாலும் இவருக்கு மரியாதை, வரவேற்பு தான் கிடைக்கும்.

கம்சன் அரண்மனைக்கு சென்றாலும் வரவேற்பு கிடைக்கும், சிவபெருமானை பார்க்க சென்றாலும் வரவேற்பு கிடைக்கும்.

இவரை மதிக்காதவர் உலகில் இல்லை.

இருந்தாலும், ஒரு சமயம் ஒரு இடத்துக்கு இப்பொழுது தான் முதல் முறையாக சென்றாராம்.

அங்கு இருந்தவர்கள் அனைவரும் ஹரி நாம கீர்த்தனை தான் செய்து கொண்டு இருந்தார்கள்.

நாரதரும் ஹரி நாம கீர்த்தனை செய்பவர் தான்.
ஆசையாக இவர்கள் அருகில் சென்றும், நாரதர் வந்து இருக்கிறார் என்று கூட கவனிக்காமல், 
மெய்மறந்து நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு இருந்தார்களாம். ஆடினார்களாம்.. துள்ளினார்களாம்.. பாடினார்களாம்...குனிந்து நிமிர்ந்து நமஸ்காரம் செய்து ஆடி பாடினார்களாம்...
ஆனால் கடைசி வரை நாரதர் இருப்பதையே கவனிக்க வில்லையாம்...

இப்படி ஒரு ஹரி நாம கீர்த்தனையை நாரதர் கேட்டதே இல்லையாம்.. மேலும், தன்னை கவனிக்காததும் ஆச்சரியம் தர,
பதரி நாராயணனிடம் "இப்படி ஹரிநாம பஜனை செய்யும் இவர்கள் யார்?"
என்று கேட்க,
பதரி நாராயணன் நாரதரை பார்த்து,
"நீங்கள் பார்த்தது க்ஷீராப்தியில் அருகில் உள்ள இடம்.
அதற்கு ஸ்வேத த்வீபம் என்று பெயர்.
விஷ்ணு பக்தி செய்த புண்ணிய ஆத்மாக்கள், இங்கே தடையில்லாமல், தன்னையே மறந்து என்னை பஜித்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நானே லட்சியமாக இருக்கிறேன்.
இதனாலேயே, வந்திருப்பது யார் என்று கூட அவர்கள் கவனிக்கவில்லை.
அவர்கள் பக்தி அலாதியானது"
என்றார்.
விஷ்ணு லோகமான 'க்ஷீராப்தியில் உள்ள உன்னதமான பக்தர்கள் எப்படி பஜனை செய்கிறார்கள்?'
என்று தன் பாசுரத்தில் "நம்மாழ்வார்" நமக்கு காட்டுகிறார்.

இடங்கொள் சமயத்தை யெல்லாம்
எடுத்துக் களைவன போல !
தடங்கடல் பள்ளிப் பெருமான்
தன்னுடைப் பூதங்களேயாய் !
கிடந்தும் ! இருந்தும் ! எழுந்தும் !
கீதம் பலபல பாடி !
நடந்தும் ! பறந்தும் ! குனித்தும் !
நாடகம் செய்கின்றனவே !!




'பரமபதத்தில்' நாராயணன் நான்கு கைகளுடன், சங்கு சக்கரம் ஏந்தி அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.
அதே நாராயணன்,
'க்ஷீராப்தியில்' விஷ்ணுவாக இருக்கும் போது, இரண்டு கைகளுடன், ஆதிசேஷன் மேல், யோக நித்திரையில் பாற்கடலில் பள்ளி கொண்டு இருக்கிறார்.

'க்ஷீராப்தியில்' ப்ரம்ம தேவன், ருத்ரன், தேவர்கள், ரிஷிகள் பேசி பழகும் படியாக பிரசன்னமாக பாற்கடலில் இருக்கிறார்.

பாற்கடலில் வீற்று இருக்கும் விஷ்ணுவை, ஸ்வேத த்வீபத்தில் இருக்கும் இவர்கள் எப்படி பஜிக்கிறார்கள்? என்று சொல்கிறார் நம்மாழ்வார்.

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை (தடங்கடல் பள்ளிப் பெருமான்)
நினைத்து நினைத்து, ஸ்வேத தீவபத்தில் இருக்கும் இவர்கள் ஆனந்தத்தில் திளைக்கிறார்களாம்,
விஷ்ணுவின் நாமத்தை, கைகளில் தாளத்தை வைத்து கொண்டு "நாராயண..நாராயண..நாராயண.." என்று சொல்ல சொல்ல, கோஷ்டியாக 1000 பேர் சேர்ந்து கொண்டு குனிந்து, நிமிர்ந்து ஆடியும் பாடியும் அபிநயமும் செய்து கொண்டு இருக்கின்றனராம்.

பாற்கடலில் இருக்கும் இவர்களுக்கு "நாராயணனை' பஜிப்பதே லட்சியம்.

பெருமாளே இவர்களுக்குள் புகுந்தது போல இருந்தார்களாம் இவர்கள்.
அதையே "பெருமாள் தன்னுடைப் பூதங்களேயாய் !" என்கிறார்.

இப்படி பெருமாள் இவர்களிடம் ஆவேசித்து இருக்க,
க்ஷீராப்தியில் ஆதிசேஷன் மேல் படுத்து கொண்டிருக்கிறார் என்று பாடும் போது,
தானும் அது போல அபிநயம் செய்து கிடப்பார்களாம் (கிடந்தும்)
மற்றொரு சமயம்,
பரமபத்தில் அமர்ந்த கோலத்தில் பரவாசுதேவனாக இருக்க, இவர்களும் பரவாசுதேவன போலவே அமர்ந்த படி (இருந்தும்) அபிநயம் செய்வார்களாம்.
மற்றொரு சமயம்,
திருமலையில் ஸ்ரீனிவாசனாக எழுந்து நின்று இருப்பது போலவே நின்று (எழுந்ததும்) அபிநயம் செய்வார்களாம்.

வெறும் அபிநயம் மட்டும் செய்தால் நன்றாக இருக்குமா?... அபிநயத்தோடு பல பல கீதங்கள் பாடுவார்களாம்.

தண்டகாரண்யத்தில் ராமபிரானாக நடந்ததையும், ஸ்ரீ பிருந்தாவனத்தில் கண்ணனாக நடந்ததையும் பாடும் போது,
கண்ணனாகவே நடந்து (நடந்தும்) அபிநயம் செய்வார்களாம், ராமபிரானாகவே நடந்து (நடந்தும்) அபிநயம் செய்வார்களாம்.

கருடனில் பறந்து வரும் பெருமாளாக பாடும் போது, தன் கைகளே இறக்கையாக நினைத்து, தானும் பறப்பது போல அபிநயம் (நாடகம்) செய்து ஆடுகிறார்களாம் (குனித்தும்) இவர்கள்.

இதையே,
கிடந்தும் ! இருந்தும் ! எழுந்தும் !
கீதம் பலபல பாடி !
நடந்தும் ! பறந்தும் ! குனித்தும் !
நாடகம் செய்கின்றனவே !!
என்கிறார்.

நெல் விதைக்கப்பட்ட நிலத்தில், தேவையில்லாத கோரை புல் இடையிடையே வளர்ந்து இருக்கும்.
நெல் வளர்ச்சியை தடுக்கும், இந்த கோரை புற்களை முழுமூச்சுடன் உடனே களையெடுக்க, அந்த விவசாயி குனிந்து, நிமிர்ந்து அதை தேடி கண்டுபிடித்து, அறுத்து எரிவார்களாம்,
குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதால், களைப்பு ஏற்படாமல் இருக்க கிராமத்து பாடல் பாடிக்கொண்டே, அறுத்து எரிவார்களாம்,
கோரை புல்லை பிடுங்கி எரிந்து, நெல்லை காப்பாற்றும் விவசாயி போல, இங்கு இவர்கள் குனிந்தும், நிமிர்ந்தும் ஆடுவதையும், 
களைப்பு தெரியாமல் இருக்க இவர்கள்  "நாராயண.. நாராயண.." என்று சொல்லிக்கொண்டே பாடுவதையும் பார்த்தால், 
எதையோ தூக்கி எரிவது போல தோன்றியதாம்!  நம்மாழ்வாருக்கு.




அப்படி என்ன எறிந்தார்களாம் இவர்கள்?
விஷ்ணு பக்தியை வளர்க்காத போலி மதங்களை எல்லாம், க்ஷீராப்தியில் இருக்கும் இவர்கள் கோரை புல்லை பிடுங்கி எரிவது போல தூக்கி எறிந்தார்களாம்.

மற்ற விஷயங்கள் புகாமல், நாராயணனின் நினைவே க்ஷீராப்தியில் நிரம்பி இருந்தது  என்ற ரீதியில் ரசித்து, 'க்ஷீராப்தியில் உள்ள விஷ்ணு பக்தர்கள் செய்யும் பஜனையை' ரசிக்கிறார் நம்மாழ்வார்.

இதையே,
இடங்கொள் சமயத்தை யெல்லாம்
எடுத்துக் களைவன போல !
என்று சொல்கிறார்.

குருநாதர் துணை.

Tuesday 23 June 2020

பாசுரம் (அர்த்தம்) - முனியே நான்முகனே... நம்மாழ்வார் க்ஷீராப்தி நாதனை நினைத்து பாடிய அழகான பாசுரம். சிவபெருமானை 'அப்பா' என்று வைஷ்ணவரான நம்மாழ்வார் அழைக்கிறார். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பரமபதத்தில் (வைகுண்டம்) "நாராயணன்" நித்ய வாசம் செய்கிறார்.
ஆதிசேஷனும், மஹாலக்ஷ்மியும் கூடவே இருக்கிறார்கள்.




மோக்ஷம் அடைந்த ஜீவன்கள், பரமபதத்தில், திவ்ய பார்ஷத ரூபத்துடன், பகவானை எப்பொழுதும் பார்த்து கொண்டே இருக்கின்றனர்.

ப்ரம்ம தேவனும் செல்ல முடியாத இடம் 'பரமபதம்'.
ப்ரம்ம தேவனே தரிசிக்காத இடம் "பரமபதம்".
"பரமபதம்" மோக்ஷம் அடைந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடியது என்பதால்,
"பிரம்ம தேவன், ரிஷிகள், தேவர்கள் போன்றோர் தன்னை தரிசனம் செய்ய"  'க்ஷீராப்தி என்ற பாற்கடலை' ஸ்ருஷ்டி செய்து கொண்டு, 
அங்கு வ்யூஹ ரூபத்துடன் 'விஷ்ணு'வாக ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு இருக்கிறார்.
பிறகு, ஒரு சமயம் தேவர்களுக்கு அம்ருதம் கிடைக்க, பாற்கடலை கடைய சொல்ல,
மஹாலக்ஷ்மியை பாற்கடலை கடையும் போது, வரச்செய்து தானே மணந்து கொண்டார்.

பிரம்ம தேவனுக்கும், ருத்ரனுக்கும் "அந்தர்யாமியாக" இருக்கும் பரவாசுதேவன்,
இவர்களோடு சமமாக பழக ஆசைப்பட்டு, "விஷ்ணுவாக" அவதரித்து விட்டார்.
பிரம்ம தேவனுக்கு "படைக்கும்" தொழிலை கொடுத்து,
ருத்ரனுக்கு "சம்ஹார" தொழிலை கொடுக்க,
தான் விஷ்ணுவாக "காக்கும்" தொழில் செய்கிறேன்,
என்று வந்து விட்டார்.

தேவர்களுக்கு கஷ்டம் என்றால், இவர்தான் காக்க ஓடுவார்.
ஒரு சமயம், ருத்ரனுக்கே பஸ்மாசுரன் என்ற அசுரனால் கஷ்டம் ஏற்பட, ருத்ரனை காக்க ஓடினார்.

ஆதிபுருஷனாக இருந்தும், தன்னை மும்மூர்த்திகளில் ஒருவனாக காட்டி கொள்ள ஆசைப்படுகிறார்.

தான் படைத்த பிரம்ம தேவனுக்கு சம ஆசனம் கொடுக்கிறார்.
சுலபமான தெய்வமாக இருக்கிறார் பெருமாள்.
யாருக்கும் கிடைக்கிறார்.

அதுமட்டுமா?
தேவர்களுக்கு மத்தியில் "உபேந்திரன்" என்ற ஒரு தேவனாக அவதரித்தார். தேவர்களுடன் சுலபமாக பழகுகிறார்.

ரிஷிகள் கூட்டத்தில் தானும் ஒரு ரிஷி என்று "வ்யாஸராக" அவதரித்தார். ரிஷிகளுடன் சுலபமாக பழகுகிறார்.
மனிதர்கள் கூட்டத்தில் தானும் ஒரு மனிதன் என்று "ராமபிரானாக" அவதரித்தார். மனிதர்களுடன் சுலபமாக பழகுகிறார்.

ஒரு சமயம், பன்றி கூட்டத்தின் நடுவே, தானும் "ஒரு பன்றியாக" கூட அவதரித்து விட்டார்.

மீன் கூட்டத்தின் நடுவே, தானும் "ஒரு மீனாக" கூட அவதரித்து விட்டார்.

இப்படி அனைவரையும் படைத்து, அனைவருக்குள்ளும் தானே அந்தர்யாமியாக இருந்து கொண்டு,
அதுவும் போதாதென்று,
தானும் அவர்களை போலவே சில சமயம் அவதரித்து,
எப்பொழுதும் அனைத்து ஜீவனிடத்திலும் உறவாட ஆசைப்படுகிறார் பெருமாள்.

'தானே அனைத்துமாக இருக்கிறேன்' என்றும் காட்டுகிறார்.




பரப்ரம்மத்தையே உபாசிக்கும் நம்மாழ்வார் 'தனித்த பொருளான பரவாசுதேவன், தன்னை மும்மூர்த்திகளில் ஒருவனாக காட்டி கொண்டு, க்ஷீராப்தியில் இருப்பதை கண்டு ஆசைதீர, அந்த க்ஷீராப்தி நாதனுக்கு மங்களாசாசனம்' செய்கிறார்.

க்ஷீராப்தி - 108 திவ்ய தேசத்தில் ஒன்று.

க்ஷீராப்திக்கு மங்களாசாசனம் செய்த பாசுரம் தெரிந்து கொள்வோமே.

பாசுரம்:
முனியே நான்முகனே!
முக்கண்ணப்பா!
என் பொல்லாக் கனிவாய்த்
தாமரைக்கண் கருமாணிக்கமே!
என் கள்வா !
தனியேன் ஆருயிரே !
என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் !
என்றும் மாயம் செய்யேல் என்னையே !
-- நம்மாழ்வார் (திருவாய்மொழி)

'வைணவ பக்தி' ஆழ்வார்களால் ஒரு புறம் வளர,
'சைவ பக்தி' நாயன்மார்களால் மறுபுறம் வளர்ந்தது.

"பொறாமை இல்லாமல் பக்தியே நம்மிடம் இருந்தது" என்பதற்கு இந்த பாசுரமே சான்று.

இந்த பாசுரத்தில் ஆழ்வார், "தனித்தவரான பரவாசுதேவன் நாராயணன், மும்மூர்த்திகளில் தானும் ஒருவராக தன்னை காண்பித்து கொள்ள க்ஷீராப்தி வந்து விட்டாரே" என்று ஆச்சரியமும், ஆனந்தமும் அடைகிறார்.

வேதம் சொல்லும் மும்மூர்த்திகளை, நம்மாழ்வாரும் இங்கு சொல்கிறார்.
இங்கு ஆழ்வார்,
சிவபெருமானை எப்படி அழைக்கிறார்? என்று பாருங்கள்...

முனியே நான்முகனே! 
முக்கண்ணப்பா!
என்று ஆரம்பிக்கும் போது,
முனிவர்களுக்குள் உயர்ந்த நான்முகனான "ப்ரம்ம தேவனை" முதலில் சொல்கிறார்.
பிறகு,
சிவபெருமானை ஆழ்வார் சொல்லும்போது "முக்கண்ணா" என்று மட்டும் சொல்லி அழைத்து இருக்கலாம்!!
ஆனால்,
மூன்று கண் உடைய சிவபெருமானை "அப்பா" என்று சொல்லி அழைக்கிறார்.

சிவபெருமானை 'அப்பா' என்று வைஷ்ணவரான நம்மாழ்வார் அழைக்கிறார்!!
என்று கவனிக்க வேண்டும்.

எங்கு இருந்தது நமக்குள் சிவ விஷ்ணு வெறுப்பு?...

"சிவ-த்வேஷம் வைணவ-த்வேஷம்" என்று சொல்லி சொல்லி, "ஹிந்துக்களிடையே பிரிவினையை உருவாக்க வேண்டும்" என்று திட்டமிட்டு, வெளி மதத்தை சேர்ந்தவர்கள் இன்றுவரை பெருமுயற்சி செய்கின்றனர்.

சிவபக்தியினால் கிருமிகண்ட சோழன் மட்டும் தான், அவன் காலத்தில் வைஷ்ணவ வெறுப்பை காட்டினான்.
இதை மட்டுமே எப்பொழுதும் காட்டி காட்டி, இன்று வரை ஹிந்துக்களை பிரிக்க நினைக்கின்றனர்.

கிருமிகண்ட சோழனுக்கு முன்னால் இருந்த சோழனும்,
அவனுக்கு பின்னால் வந்த சோழர்களும் தான், 'பல வைணவ கோவிலையும் கட்டினர், பல சிவன் கோவிலையும் கட்டினார்கள்'
என்ற உண்மையை இவர்கள் சொல்ல விரும்புவதில்லை.

ஹிந்துக்களை ஒழிப்பதே இவர்கள் நோக்கமாக உள்ளது.

ஹிந்துக்களை பிரித்து,
ஹிந்துக்களுக்கு இடையே வெறுப்பை உருவாக்கி,
தன் போலி மதத்தை நுழைத்து,
தன் மதத்தில் ஆள் சேர்க்க,
இவர்கள் செய்யும் முயற்சிகளை ஹிந்துக்கள் வேரறுக்க வேண்டும்.

கும்பகோணத்தில் ஒரு தெருவில் சாரங்கபாணி இருக்க,
மறு தெருவில் கும்பேஸ்வரர் இருக்கும் போது,
இப்படி ஹிந்துக்களிடையே பிரிவினை உருவாக்க முயற்சிக்கும் இவர்களை ஹிந்துக்கள் வேரறுக்க வேண்டும்.

ஆழ்வார் சிவபெருமானை அழைப்பதே நமக்கு ஆச்சர்யமாக இருக்க,
இங்கு சிவபெருமானை "முக்கண்ணா" என்று மட்டும் அழைக்காமல் "முக்கண்ணப்பா" என்று ஏன் அழைத்தார் ஆழ்வார்?..

ஒரு தகப்பன், தன் பிள்ளை எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவனுக்கு நல்லதே செய்வான்.

'ஆத்மாவே நான்' என்ற அறிவுடன், அனுபவத்தில் வாழும் ஞானிக்கு இந்த உடலே ஒரு சிறையாக தோன்றுமாம்.

இந்த "உடல் இல்லாமல் இருந்தால், அந்த பரமாத்மா நாராயணனை இப்பொழுதே அடைந்து விடலாமே!"
என்று ஞானிகள் ஆசைப்படுவார்களாம்.





'சம்ஹாரம்' என்ற அழிக்கும் தொழிலை செய்யும் சிவபெருமான், "மரணம் என்ற காரியத்தின் மூலம், ஆத்மாவுக்கு இந்த சிறையில் இருந்து விடுதலை கொடுக்கிறார்".

ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு பார்த்து பார்த்து நல்லது செய்வது போல, "மரணம் என்ற உபகாரம் செய்து கொடுத்து, இந்த ஜீவ ஆத்மாக்கள் வைகுண்டம் செல்லட்டும் என்று தகப்பன் போல பேருதவி செய்கிறாரே"
என்றதும் சிவபெருமானை 'அப்பா' என்று அழைக்க ஆசை வர, "முக்கண்ணப்பா" என்று நன்றியுடன் அழைக்கிறார் ஆழ்வார்.

ஆழ்வார் பிரம்மாவையும், சிவபெருமானையும் சொல்கிறாரே..
அவருக்கு இஷ்ட தெய்வம் யார்? 
என்ற கேள்விக்கு அவரே இந்த பாசுரத்தில் விடையும் தருகிறார்.
தனித்து இருக்கும் (தனியேன்) ஆதி புருஷனான நாராயணனே, பிரம்மாவுக்கும், சிவனுக்கும் நடுவில் "விஷ்ணு"வாக க்ஷீராப்தியில் அவதரித்து இருப்பதை பார்த்து விட்டு,
'என் மாணிக்கமே..என் கள்வா.. என் ஆருயிரே..'
என்று பல தடவை "என்னுடைய, என்னுடைய.." என்று கூப்பிடுகிறார்.

இதன் மூலமே, நாராயணன் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர் ஆழ்வார் என்று தெரிகிறது.

அதே சமயம் மற்ற தெய்வங்கள் மேல் மரியாதையும் உண்டு என்றும் காட்டுகிறார்.

"மரியாதை மற்ற தெய்வங்களிடம் இருக்க வேண்டும்.
ஆனால் நம் இஷ்ட தெய்வத்திடம் ஆசையும் பக்தியும் நமக்கு வேண்டும்" 
என்றும் காட்டுகிறார் நம்மாழ்வார்.

மும்மூர்த்திகளில் பிரம்மாவையும், சிவபெருமானையும் "நான்முகனே! முக்கண்ணப்பா!" என்று மரியாதையோடு அழைக்கிறார்.

"நாராயணனே இவர்களுக்கு உள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார்" என்பதால் அவர்களுக்கான மரியாதையை கொடுக்கிறார்.

ப்ரம்மாவை பார்த்தால் வேத மூர்த்தியாக அமைதியாக இருக்கிறார்.
சிவபெருமானோ ஜடை வளர்த்து, சுடுகாட்டு சாம்பலை பூசிக்கொண்டு யோகி போல இருக்கிறார்.

மரியாதை ஏற்பட்டதேயன்றி, இதயத்தை இவர்களுக்கு கொடுத்து விடவில்லையாம் ஆழ்வார்.

என் ஆசையெல்லாம் உலக விஷயங்களில் மட்டுமே சுற்றிக்கொண்டு இருக்க, ஒருசமயம்,
பரவாசுதேவன் நாராயணனே "விஷ்ணுவாக" இருப்பதை பார்க்க வாய்ப்பு கிடைக்க,
"தன் திருமேனி அழகை காட்டியே, உலக விஷயங்களில் அலைந்து கொண்டிருந்த என்னை திருடி, தனக்கு அடியானாக ஆக்கிக்கொண்டு விட்டாரே, இந்த பொல்லாத பெருமாள்!" என்று பாடுகிறார்.
இவரோ, பிரம்மாவை போல, சிவபெருமானை போல அமைதியாக இருக்காமல், 
தன் அழகான சிரிப்பால் உள்ளத்தை மயக்கி, தன் கண் அழகினாலேயே இவர் இதயத்தை திருடி விட்டார் என்றதும்,
விஷ்ணுவின் தாமரை போன்ற கண்களையும், கனிந்த உதடுகளையும் பார்த்து மயங்கி போனதால், "என் மனதை திருடிய கள்வா, பொல்லாதவனே!" என்றெல்லாம் ஆசை தீர கூப்பிடுகிறார்.

என் பொல்லாக் கனிவாய்த்
தாமரைக்கண் கருமாணிக்கமே!
என் கள்வா !
தனியேன் ஆருயிரே !
என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் !
என்றும் மாயம் செய்யேல் என்னையே!
என்று தனித்து இருக்கும் பரவாசுதேவன், "இப்படி விஷ்ணுவாக, பிரம்மாவுக்கும், சிவனுக்கும் நடுவில் அவதரித்து, திருமேனி அழகினால் தன் இதயத்தை திருடி விட்டாரே!" என்கிறார்.

இங்கு,
விஷ்ணுவாக இருக்கும் நாராயணனை பார்த்து,
"என் தாமரைக்கண் கருமாணிக்கமே' என்று திருமேனி அழகில் மயங்கியதை குறிப்பிடுகிறார்.

தனித்த புருஷனாக (தனியேன்) இருந்தாலும்,
மும்மூர்த்திகளில் தானும் ஒருவர் போல இருந்தாலும்,
இவர் தன் இதயத்தை திருடிவிட்டாரே (கள்வா) என்றதும், "என் பொல்லா" என்கிறார்.

"பல ஜென்மங்களாக உங்களிடம் மட்டும் அகப்படாமல் தப்பித்த என்னை, பொல்லாத நீங்கள், உங்கள் திருமேனி அழகை காட்டி, ஒரு சிரிப்பு சிரித்து இன்று என்னை பிடித்து விட்டீர்களே!" என்கிறார்
"பரவாசுதேவனான உங்களிடம் சிக்கிய பின், இனி நான் சம்சாரத்தில் மீண்டும் விழப்போவதில்லை.
உலக மாயையும் எங்களை இனி ஒன்றும் செய்யாது"
என்று கடைசியில் விஷ்ணுவை சரண் அடைந்தவன் பெரும் பயனை பற்றி சொல்கிறார்.

என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் !
என்றும் மாயம் செய்யேல் என்னையே !

க்ஷீராப்தி என்ற பாற்கடலுக்கு,
'சொர்க்க லோகம், ஜன லோகம், தப லோகம், சத்ய லோகம், கைலாசம்' போன்றவற்றில் வசிக்கும் தேவர்களும், ரிஷிகளும், பிரம்மாவும், ருத்ரனுமே சென்று பார்க்க முடியும்.

பூமியில் இருக்கும் நம்மால் இந்த உடலோடு செல்ல முடியாது.
ஆனால்,
க்ஷீராப்தி நாதனை நம் மனதில் இந்த ஆழ்வார் பாசுரத்தின் மூலம் கண்டு விடலாம். 

குருநாதர் துணை...

Sunday 14 June 2020

பாசுரம் (அர்த்தம்) - தாள்களை எனக்கே... நம்மாழ்வார் பரமபத நாதனான விராட் ரூபனாக நினைத்து பாடிய அழகான பாசுரம். சடாரியின் பெருமையை விளக்கும் பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பரமபுருஷன் "அனைவரிடத்திலும் அந்தர்யாமியாக இருப்பதால், 
அவரே ஆயிரக்கணக்கான கண்களுடன், தலையுடன், தானே அனைத்துமாக இருக்கிறார்"
என்று பரவாசுதேவனின் விராட் ரூபத்தை 'புருஷ சூக்தம்' வர்ணிக்கிறது.
இந்த புருஷ சூக்தத்தின் அர்த்தத்தை, தமிழில் பாசுரமாக பாடி கொடுத்து விட்டார் நம்-ஆழ்வார்.




தாள்களை எனக்கே
தலைத்தலை சிறப்ப தந்த பேருதவி 
கைம்மாறா !! 
தோள்களை ஆரத் தழுவி !
என் உயிரை அறவிலை செய்தனன் சோதீ !!

தோள்கள் ஆயிரத்தாய் !
முடிகள் ஆயிரத்தாய் ! துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !
பேர்கள் ஆயிரத்தாய் !
தமியனேன் பெரிய அப்பனே !
- திருவாய்மொழி (நம்மாழ்வார்)


தன் பலத்தால் "பூலோகம் முதல் ப்ரம்ம லோகம் வரை" பிடித்து வைத்து இருந்த பலி சக்கரவர்த்தி,
தானமாக, தான் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் கொடுத்தான்.

"7 லோகங்களையும் அடமானம் வைத்தாலும், தன் திருவடிக்கு ஈடு ஆகாது"
என்று மிரட்டி, 'மூன்றாவது அடி எங்கே?' என்று பெருமாள் கேட்க,
தன்னையே அர்ப்பணம் (ஆத்ம நிவேதனம்) செய்து நின்றான் பலி சக்கரவர்த்தி.
தன் சொத்தையும், தன்னையும் சமர்ப்பணம் செய்த பிறகு, அதற்கு கைமாறாக பெருமாள் தன் திருவடியை தொடும் ஆனந்தத்தை பலி சக்கரவர்த்திக்கு கொடுத்தார்.
இது வாமன அவதார சரித்திரம்.   




பெருமாளின் திருவடியை தான் நமக்கு கோவிலில் "சடாரி" என்று வைக்கிறார்கள்.

"பெருமாளின் திருவடி சம்பந்தம் கிடைக்க", பலி சக்கரவர்த்தி தன் சொத்து அனைத்தையும் கொடுத்து, தன்னையே கொடுத்தான்.
ஆனால்,
ஒன்றுமே கொடுக்காத நமக்கு, கைம்மாறு எதிர்பார்க்காமல் பெருமாள் தன் திருவடி (சடாரி) கொடுத்துவிட்டாரே !!

"கைம்மாறு எதிர்பார்க்காமல், தன் திருவடியை (தாள்களை) என் தலை மேல் வைத்து சிறப்பித்து (எனக்கே தலைத்தலை சிறப்ப தந்த) பேருதவிக்கு நான் என்ன செய்வேன்?" என்று திகைக்கிறார்.

பெருமாள் திருவடி (சடாரி) தன் தலை மீது பட்டதால், தன் சரீரமே பெருமாள் சொத்து ஆகி விட்டது என்ற பூரிப்பில், நம்மாழ்வார் தன்னையே ஆரத்தழுவி கொண்டு (தோள்களை ஆரத் தழுவி) "எனது ஆத்மாவை, அந்த பரஞ்சோதியான நாராயணனுக்கு பரிபூரணமாக சமர்ப்பணம் செய்து விட்டேன் (என் உயிரை அறவிலை செய்தனன் சோதீ)"
என்று தன்னையே அர்ப்பணம் (ஆத்ம நிவேதனம்) செய்கிறார்.
தானே அனைத்துமாக விராட் புருஷனாக இருக்கும் பெருமாள், 
ஒவ்வொருவரின் உள்ளிலிருந்து கொண்டு, பார்க்க செய்கிறார், கேட்க செய்கிறார் என்பதால், 
அவரே ஆயிரக்கணக்கான தோள்களை உடையவராகவும்,
அவரே ஆயிரக்கணக்கான தலைகள் உடையவராகவும்,
அவரே ஆயிரக்கணக்கான கண்களை உடையவராகவும்,
அவரே ஆயிரக்கணக்கான கால்களாகவும், 
அவரே ஆயிரக்கணக்கான பெயர்களுடனும்,
இருக்கிறார், என்று புருஷ சூக்த்தத்தை அப்படியே தமிழில் நமக்கு கொடுத்து விட்டார்.

பலி சக்கரவர்த்தி தன்னையும், தன் சொத்துகள் அனைத்தையும் கொடுத்தார். அதற்கு கைமாறாக தன் திருவடியை கொடுத்தார்.
ஆனால்,
திறன் இல்லாத நமக்கு (தமியனேன் எனக்கு), கைம்மாறு எதிர்பார்க்காமல் தன் திருவடியை கொடுத்த பெருமாள், நமக்கு "அப்பா" என்று உறவு காட்டி அழைக்கிறார்.

நம்மிடம் எதுவுமே எதிர்பார்க்காமல், 7 உலகங்களுக்கும் ஈடு இல்லாத தனது திருவடி நமக்கு கொடுத்து, "பயப்படாதே" என்று அபயம் தருகிறார்.




பெருமாளின் திருவடி (சடாரி) நம் மீது பட்டாலே, அனைத்து பாவங்களும் போய் விடும் என்று ராமபிரானின் சரித்திரம் மூலமே நிரூபணம் ஆனது.
நம் தகப்பனான பெருமாளை "நம் பெருமாள்" என்றுநம்மிடம் எதுவுமே எதிர்பார்க்காமல், 7 உலகங்களுக்கும் ஈடுஇல்லாத தனது திருவடி நமக்கு கொடுத்து, "பயப்படாதே" என்று அபயம் தருகிறார்.

நம் தகப்பனான பெருமாளை "நம் பெருமாள்" என்றும் "எம் பெருமாள்" என்று
ம் உறவு சொல்லி கொண்டாடுவோம்.
நம் சொந்த வீடான மோக்ஷத்தை இந்த பிறவி முடிந்ததும் பெறுவோம்.

வாழும்வரை பெருமாளிடம் பக்தி செய்வோம். ஆழ்வார்கள் பாசுரங்களை அர்த்தம் புரிந்து படிப்போம்.

வாழ்க ஹிந்துக்கள். "எம் பெருமாள்" என்று
உறவு சொல்லி கொண்டாடுவோம்.
நம் சொந்த வீடான மோக்ஷத்தை இந்த பிறவி முடிந்ததும் பெறுவோம்.

வாழும்வரை பெருமாளிடம் பக்தி செய்வோம்.
ஆழ்வார்கள் பாசுரங்களை அர்த்தம் புரிந்து படிப்போம்.

வாழ்க ஹிந்துக்கள்.

Saturday 13 June 2020

பாசுரம் (அர்த்தம்) - சூழ்ந்தகன்று ஆழ்ந்துயர்ந்த... நம்மாழ்வார் வைகுண்டம்) பரமபத நாதனான நாராயணனை நினைத்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சூழ்ந்து அகன்று ஆழ்ந்துயர்ந்த
முடிவில் பெரும் பாழேயோ !
சூழ்ந்து அதனில் பெரிய பர
நன் மலர் சோதீயோ !
சூழ்ந்து அதனில் பெரிய சுடர்
ஞான இன்பமேயோ !
சூழ்ந்து அதனில் பெரிய என்
அவா அறச் சூழ்ந்தாயே  !
- திருவாய்மொழி (நம்மாழ்வார்)

** பிரளய காலத்தில் உலகம் இருண்டு கிடக்க,
** மோக்ஷம் அடையாத ஆத்மாக்கள் உறங்கி கிடக்க,
** சில ஆத்மாக்கள் கைவல்யம் என்ற மோக்ஷத்தை அனுபவித்து கிடக்க,
** பரமபதம் என்ற மோக்ஷத்தை அடையும் (அடையபோகும்) தன்னை போன்ற விஷ்ணு பக்தர்களை பரவாசுதேவன் நாராயணன் அரவணைத்து கொள்கிறார்"
என்று பரமபதத்தின் பெருமையை பாடுகிறார் நம்மாழ்வார்.
திருவாய்மொழியில் உள்ள அருமையான பாசுரம்.




சூழ்ந்து அகன்று ஆழ்ந்துயர்ந்த
முடிவில் பெரும் பாழேயோ !
என்று சொல்லும் போது,
"ப்ரம்மாவின் ஆயுசு முடிந்த பின், பிரளய ஜலத்தால், 14 உலகங்களும் சூழப்பட்டு, அழிந்து போய், பேரிருள் சூழ்ந்திருக்கும் நிலையை" சொல்கிறார் ஆழ்வார்.
"தமஸ்" என்ற சமஸ்க்ரித சொல்லையே இங்கு தமிழில் "பாழ்" என்று சொல்கிறார் நம்மாழ்வார்.
"பாழ்" என்றால் "இருள்" என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
ஆத்மாவுக்கு அழிவே இல்லை.
ஆதலால்,
உலகங்கள் அழிந்தாலும், பரமாத்மா நாராயணன் அழிவதில்லை, கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களும் (நாமும்) அழிவதில்லை.

"மோக்ஷம் அடைந்த ஜீவ-ஆத்மாக்கள், பரமாத்மாவை அடைந்து இருப்பது போல,
பிரம்மாவின் ஆயுசு முடிந்தும், இன்னமும் மோக்ஷம் அடையாத ஜீவாத்மாக்களும் அழியாமல் பரமாத்மா நாராயணனிடம் 'பாழ்' என்ற இருள் நிலையில், 'தான் எங்கு இருக்கிறோம்?' என்றே அறியாமல் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள்"
என்கிறார்.

இப்படி மகா பிரளய காலத்தில், பரமாத்மாவோடு இருந்த போதிலும், தான் எங்கு இருக்கிறோம்? என்றே அறியாமல்" மோக்ஷம் அடையாத ஜீவாத்மாக்கள் உறங்கி கொண்டு இருக்கிறார்கள்.

"மீண்டும் உலக ஸ்ருஷ்டி செய்ய பரவாசுதேவன் சங்கல்பிக்கும் வரை, 'தமஸ் என்ற பாழ் இருளில்' இந்த ஜீவாத்மாக்கள் இருக்கிறார்கள்"
என்கிறார்.
அடுத்ததாக,
சூழ்ந்து அதனில் பெரிய பர
நன் மலர் சோதீயோ !
என்று சொல்லும் போது,
"14 உலகங்களும் அழிந்த நிலையிலும், மோக்ஷம் அடையாத ஜீவ ஆத்மாக்கள் அழியாமல் 'நன் மலர் ஜோதியாக' பிராகாசித்து கொண்டே நாராயனிடம் ஒடுங்கி கிடக்கிறது.
ஆனால், ஒரே ஒரு குறை.
அந்த மோக்ஷம் அடையாத ஜீவன்கள் இருளில் (பாழேயோ) கிடக்கிறார்கள்"
என்கிறார் நம்மாழ்வார்.

அதாவது,
"'நாராயணிடம் தான், நாம் இருக்கிறோம்' என்று அறியாமலேயே, மோக்ஷம் அடையாத ஜீவாத்மாக்கள் 'தமஸ்' என்ற நிலையிலேயே கிடக்கிறார்கள்"
என்கிறார்.



"குழந்தை தன் தாய்மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் போது, தாயின் அரவணைப்பை, சுகமான தூக்கத்தை அனுபவித்தாலும், தான் தாயின் மடியில் தான் தூங்குகிறோம் என்று தெரியாமலேயே (தமஸ்) இருப்பது போல,
மோக்ஷம் அடையாமல் இருக்கும் ஜீவாத்மாக்கள், பிரளய காலத்தில் நாராயணின் இதயத்திலேயே உறங்கி கொண்டு இருந்தாலும், அவரிடம் தான் நாம் இருக்கிறோம் என்று அறிந்து கொள்ளாமல் தூங்கி கொண்டு இருக்கிறார்கள்"
என்கிறார் ஆழ்வார்.

பிரளய காலத்தில் மட்டுமல்ல, நாம் தினசரி தூங்கும் போது கூட, இந்த சேர்க்கை அனைவருக்கும் நடக்கிறது.

"தூங்கினால் சுகமாக உள்ளது" என்று மட்டுமே அறிகிறோம்.
ஆனால், "யார் மடியில் உறங்கினோம்?..யார் சுகமான தூக்கத்தை கொடுத்தார்கள்?"
என்று அறியாமலேயே தூங்குகிறோம்
என்று சாஸ்திரம் சொல்கிறது.

அதனால் தான் தூக்கத்தை "தாமஸ" குணம் என்று சொல்கிறோம்.
புத்தி விழிப்பு இல்லாத நிலை அது.

"தாமஸ்" விரட்டி அடிக்கப்பட வேண்டிய விஷம்.
மூளையை மழுங்க செய்வது தாமஸ். 'இருள் போன்றது' தாமஸ்.
ஹிந்துக்கள் இந்த தாமஸிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அடுத்ததாக,
சூழ்ந்து அதனில் பெரிய சுடர்
ஞான இன்பமேயோ !
என்று சொல்லும் போது,
"உடல் நானல்ல..ஆத்மாவே நான்" என்ற ஞானத்தை (அறிவை) மட்டும் பெற்றவர்கள், பிரளய காலத்தில், சம்சாரத்தில் இருந்து முழு விடுதலை அடைந்து, கைவல்யம் என்ற மோக்ஷத்தை அடைந்து 'சுதந்திர காற்றை' (ஞான இன்பம் என்று சொல்கிறார்) அனுபவிக்கிறார்கள்"
என்று சொல்கிறார்.

இரண்டு விதமான மோக்ஷம் சொல்லப்படுகிறது.
ஒன்று : கைவல்யம் (விடுதலை)
மற்றொன்று : பரமபதம் என்ற வைகுண்டம் (வீடு)

"உடல் நானல்ல..ஆத்மாவே நான்" என்ற அத்வைத ஞானத்தை (அறிவை) மட்டும் பெற்றவர்கள் "நானே பரமாத்மா" என்ற அனுபவத்திலேயே இருப்பதால், கைவல்யம் (விடுதலை) என்ற மோக்ஷத்தை அடைகிறார்கள்.

உடல் நானல்ல..ஆத்மாவே நான் என்ற ஞானம் அனுபவத்தில் உள்ளதால், 
சம்சாரத்தில் மீண்டும் இவர்கள் பிறப்பதில்லை.

ஜெயில் பல வருடம் சிறை கைதியாக இருந்த ஒருவன், ஒருநாள் விடுதலை பெற்றது போன்ற நிலையே "கைவல்யம்".

சிறையில் இருந்து விடுதலை அடைந்தோமே!!
என்ற சந்தோஷத்தில் இன்பமாக ஊர் முழுக்க அலைபவன் போல,
கைவல்யம் பெற்றவனும் இருக்கிறான்.
இதையே "ஞான இன்பமேயோ" என்று சொல்கிறார்.

"கைவல்யம்" என்ற மோக்ஷத்தை விட, "பரமபதமே" நமக்கு சிறந்தது என்பதால்,
கடைசியாக,
சூழ்ந்து அதனில் பெரிய என்
அவா அறச் சூழ்ந்தாயே  !
என்று சொல்லி பரமபதத்தை நமக்கு காட்டுகிறார் ஆழ்வார்.

அத்வைத ஞானம் பெற்றவன், நானே பரமாத்மா என்று நினைப்பதால், கைலவல்யம் மட்டுமே அடைகிறான்.
அதாவது "விடுதலை" மட்டுமே அடைகிறான்.
ஆனால் "வீடு" போய் சேர்வதில்லை.

ஜெயிலில் பல வருடம் அடைபட்டு, விடுதலை அடைந்தவன், "விடுதலை அடைந்தேன்" என்பதிலேயே திருப்தி அடைவது போல "கைவலயம்".

"உடல் நானல்ல, ஆத்மாவே நான்" என்ற ஞானத்தோடு,
"என் வீடு எது? என் தகப்பன் யார்? என்னை படைத்தவன் யார்?" என்று அறிந்தவன், மோக்ஷம் அடையும் போது, பரமபதம் என்ற வீடு போய் சேருகிறான்
என்கிறார் ஆழ்வார்.

"பரமபதம் என்ற மோக்ஷத்தை அடையும் (அடையபோகும்) தன்னை போன்ற விஷ்ணு பக்தர்களை பரவாசுதேவன் நாராயணன் அரவணைத்து கொள்கிறார்"
என்று பரமபதத்தின் பெருமையை பாடுகிறார் நம்மாழ்வார்.
இதையே
"என் அவா அறச் சூழ்ந்தாயே"
என்கிறார் நம்மாழ்வார்.

பரமபத நாதனான நாராயணனை தொழுவோம்.

குருநாதர் துணை.

Monday 30 March 2020

பாசுரம் (அர்த்தம்) - முடிச்சோதியாய் உனது முகச்சோதி - நம்மாழ்வார் கள்ளழகர் (மதுரை) சுந்தரராஜ பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

நம்மாழ்வார் (திருவாய்மொழி) நம் கள்ளழகரை மங்களாசாசனம் செய்து பாடுகிறார்.

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? 
திருமாலே கட்டுரையே
-  நம்மாழ்வார் (திருவாய்மொழி)
அர்ச்சா திருமேனியுடன் தான் கள்ளழகர் இருக்கிறார்.
இருந்தாலும்,
பரமபதத்தில் அப்ராக்ருத (Beyond Nature) திவ்ய மங்கள வடிவை கொண்ட பரவாசுதேவன் எப்படி இருப்பாரோ, அது போலவே இருக்கிறார் கள்ளழகர்.

கள்ளழகரை பார்க்கும் போது, இவர் அர்ச்சா திருமேனி  என்று தோன்றவே தோன்றாது.




இவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டு இருக்கிறார்?
என்றே சொல்ல முடியாத படி, தனித்து இருக்கிறார்.
இன்றைக்கு சென்று, நம் ஊன கண்ணால் பார்த்தாலும் இந்த அதிசயத்தை நாம் உணரலாம்.

எந்த கோவிலுக்கு சென்று போய் பார்த்தாலும், கள்ளழகருக்கு உள்ள அந்த அழகு, பொலிவு வேறு எங்கும் பார்க்க முடியாது.

திருமஞ்சனம் செய்யட்டும், செய்யாமாலே இருக்கட்டும், இவர் திருமேனி மட்டும் தக தக வென்று அப்படி ஒரு பொலிவுடன் இருக்கும்.
நம்மாழ்வார் ஹ்ருதயத்தில் அத்தகைய பொலிவுடன் கள்ளழகர் காட்சி தர, அந்த பொலிவை வர்ணிக்கிறார்.

தக தக வென ஜொலிக்கும் பெருமாளின் "கன்னத்தில் (முக) வெளிப்பட்ட பொலிவு (ஜோதி) தான் கிரீடமாக (முடிச்சோதி) இருக்கிறதோ?"
என்று பார்த்து பிரமிக்கிறார் நம்மாழ்வார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்கிறார்.

தங்க ஆபரணங்களை தனியாக பார்க்கும் போது ஜொலி ஜொலிக்குமாம்.
அதே தங்க ஆபரணங்களை கள்ளழகர் அணிந்துகொண்டு விட்டால், இவருடைய மேனி பொலிவுக்கு முன், தங்க நகைகள் பொலிவு இல்லாதது போல தெரியுமாம். 
இந்த அனுபவத்தை இன்று கள்ளழகரை சென்று பார்த்தால் கூட நாமும் அனுபவிக்க முடியும். 




கள்ளழகர் கன்னத்தை பார்த்தால், எதிரே நிற்பவர்களின் பிம்பம் தெரியுமாம். 
அத்தனை பொலிவு உடைய கள்ளழகரின் பொலிவை கண்டு மயங்கி, 
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்று நம்மாழ்வார் ஆச்சர்யப்பட்டு கேட்கிறார்.

பெருமாளின் முகப்பொலிவை கண்ட பிரமித்த நம்மாழ்வார், "சரி திருவடியை பார்ப்போம்" என்று கவனிக்க,
கள்ளழகரின் திருவடியின் அடிப்பகுதி சிவந்து பெரும் பொலிவை தர,
அந்த "திருவடி பொலிவுதான் சிவந்த தாமரையாக மலர்ந்து இருக்கிறதோ?" என்று கேட்கிறார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,  
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
என்கிறார்.




பெருமாள் இடுப்பில் பீதாம்பரம் அணிந்து இருந்தாலும், அந்த வஸ்திரத்தையும் மீறிக்கொண்டு, அவர் திருதொடையின் பொலிவு, பீதாம்பரத்துக்கும் மேல் பிரகாசிக்குமாம்.

இப்படி அடி முதல் முடி வரை தங்கம் போல (பைம்பொன்) தக தகவென ஜொலிக்கும் அழகரை கண்டு பிரம்பிக்கிறார் நம்மாழ்வார்.

இதையே

படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் 
நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ
என்கிறார்.

எப்பொழுதுமே தங்கம் போல ஜொலிக்கும் கள்ளழகர் .
ஒரே ஒரு சமயம் மட்டும், பச்சை திருமேனியாக ஆகி விடுகிறார்.

கள்ளழகர் ஒரு சமயம் மலை மீது ஏறி, நூபுர கங்கைக்கு செல்வார்.
இந்த மலையோ பச்சை பசேல் என்று சோலையாக இருக்கும். 

போகும் வழியில், இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று இருப்பதால், அந்த சாயம் இவர் கன்னத்தில் பிரதிபலித்து, பெருமாளே பச்சை வர்ணமாக காட்சி தருவார்.
அங்கு மட்டும் கள்ளழகர் பச்சை வண்ண பெருமாளாக இருப்பார்.
மற்ற சமயங்களில் எல்லாம், பெருமாள் மணிவண்ணனாகவே இருப்பார்.

இப்படி பெருமாளின் பொலிவை கண்டு ஆனந்தப்படுகிறார் நம்மாழ்வார்.

Saturday 13 October 2018

உலகம் உண்ட பெருவாயா என்று நம்மாழ்வார் ஏன் அழைக்க வேண்டும்? - திருவாய்மொழி

நம்மாழ்வார் திருவாய்மொழியில்,


"உலகம் உண்ட பெருவாயா.
உலப்பில் கீர்த்தி யம்மானே,
நிலவும் சுடர் சூழொளிமூர்த்தி.
நெடியாய். அடியேன் ஆருயிரே,
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்எம் பெருமானே,
குலதொல் அடியேன் உன்பாதம் கூடு மாறு கூறாயே"
என்று திருமலையப்பனை கண்டு கதறி சரணாகதி செய்கிறார்.
"உலகம் உண்ட பெருவாயா..." என்று நம்மாழ்வார் திருமலையப்பனை இங்கு  கூப்பிடுகிறார்.
உலகத்தை பெருமாள் எப்பொழுது உண்டார்?
"உலகம் உண்ட பெருவாயா"என்று நம்மாழ்வார் ஏன் இங்கு அழைக்க வேண்டும்? என்கிற கேள்விகள் எழுகிறது.
பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், மகா பிரளய காலத்தில், எம்பெருமான் 14 லோகங்களையும் விழுங்கி, தன் திருவயிற்றில் அடக்கி கொள்கிறார் என்பது பிரசித்தம்.
மீண்டும் ஸ்ருஷ்டி செய்யும் போது, உலகங்களை மீண்டும் படைத்து, புதிய பிரம்மாவை நியமிக்கிறார்.
இதுவும் அனைவரும் அறிந்ததே.

அவ்வளவு பெரிய உலகத்தை விழுங்க வேண்டுமென்றால், பெருமாள், சிறுவாயை கொண்டு விழுங்க முடியாதே!!
உலகம் அளவிற்கு, வாயை பெரிதாக திறந்து தானே விழுங்கி இருக்க வேண்டும்? என்று நமக்கு தோன்றும்.

அதனால் தான் நம்மாழ்வார் பெருமானை, "உலகம் உண்ட பெருவாயா" என்று அழைக்கிறார் போலும், என்றும் நமக்கு தோன்றும்.

ஆனால், நம்மாழ்வார் இந்த காரணத்தால் இப்படி சொல்லவில்லையாம்.

பொதுவாக ஜீவனாகிய நாம், மோக்ஷம் அடைய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், சம்சார வாழ்வில் கஷ்டத்தை அனுபவித்தாலும் அனுபவிப்பேன், பிறவி கடலை தாண்ட மாட்டேன், பெருமாளை காண வரமாட்டேன் என்று ஏனோதானோ என்று இருக்க,
திருமலையப்பனாக அர்ச்ச அவதாரம் செய்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள், இந்த ஜீவனை காக்க வேண்டுமே, மோக்ஷம் என்ற சொத்தை கொடுக்க வேண்டுமே என்று காத்து கொண்டு இருக்கிறார். தவித்துக்கொண்டு இருக்கிறார்.





ஜீவன் ஏனோதானோ என்று இருக்கிறான்.
ஜீவனுக்கு ஈஸ்வரனாக, இருக்கும் பெருமாளோ, தனக்கும், ஜீவனுக்கும் உள்ள சம்பந்தத்தை அறிந்தவர் என்பதால், எப்படியாவது மோக்ஷத்தை கொடுத்து விட வேண்டுமே !! என்று தவித்துக்கொண்டு, மோக்ஷம் கொடுக்க சங்கல்பித்து திருமலையில் அர்ச்ச அவதாரம் செய்து விட்டார்.
இப்படி கருணை செய்வது ஒன்றே குறிக்கோளாக, அவதாரம் செய்துள்ள திருமலையப்பன், தன்னை தரிசிக்க மலை ஏறி வரும் பக்தனை கண்டு பூரித்து போகிறார்.
இந்த ஜீவனுக்கு, மீண்டும் பிறவி இல்லாத மோக்ஷம் கொடுத்து விட வேண்டும் என்று அருள் செய்கிறார்.

பக்தனை கண்டு, திருமலையப்பன் எத்தனை பூரிப்பை அடைகிறார்? என்பதை காட்டவே, நம்மாழ்வார் "உலகம் உண்ட பெருவாயா' என்ற பதத்தை பயன்படுத்தினாராம்.

உலகத்தை விழுங்க, பெருமாளுக்கு பெரு வாய் தேவைப்பட்டதா? என்று பார்த்தால், அப்படி ஒன்றும் தேவைப்படவில்லையாம்.
இதை நிரூபிக்க தான், ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்த பெருமாள், அண்ட சராசரங்களையும் தன் சிறு வாயில் யசோதைக்கு காட்டினாராம்.

யசோதை, குழந்தையாக உள்ள கண்ணனை பார்த்து, "மண்ணு தின்றாயா? மண்ணு தின்றாயா?" என்று அதட்ட,
கண்ணன் அழுது கொண்டே, "இல்லம்மா.. இல்லம்மா..." என்றான்.
"வாயை காட்டு" என்று சொல்ல, கண்ணன் தன் சிறுவாயை காட்ட, உலகங்கள் அனைத்தையும் அந்த சிறிய வாயில் கண்டு பிரமித்தாள் யசோதை.

'உலகம் உண்ட சிறுவாயை' கண்ணனிடம் கண்டாளாம் யசோதை.

'உலகத்தை காக்க, சிறுவாய் போதும்' என்ற சர்வ சக்தி உள்ளவனாக இருக்கும் பகவான் காட்டினார்.

பின் ஏன், நம்மாழ்வார் "உலகம் உண்ட பெறுவாயா" என்று சொன்னார்? "உலகம் உண்ட சிறுவாயா" என்று சொல்லி இருக்கலாமே?
என்ற கேள்வி எழும்போது தான்,
பெரியவாச்சான் பிள்ளை, நம்மாழ்வார் இதயத்தில் என்ன நினைத்தார்? என்று விளக்குகிறார்.
ஒரு பெரிய பாத்திரம் முழுவதும் இனிப்பான தின்பண்டம் இருப்பதை பார்த்து, ஒரு குழந்தை, முழுவதும் தானே சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படும்.
அந்த ஆவலில், "அனைத்தையும் எனக்கே போடு" என்று அம்மாவை கேட்டு அடம்பிடித்து, வாங்கிக்கொள்ளும்.

தேவை கொஞ்சம் தான் என்றாலும், தின்பண்டத்தை பார்த்த பூரிப்பில், தேவைக்கும்  அதிகமாக கேட்டு வாங்கிக்கொள்ளும்.
இது பொதுவாக குழந்தையிடம் பார்க்கும் குணாதிசயம்.


சர்வசக்தி உள்ள பகவான், தன் அடியார்களை கண்டு விட்டால், அந்த குழந்தைக்கு ஏற்படும் பூரிப்பை போல, தானும் அடைந்து விடுகிறார்.

தன் பக்தனை கண்டதால் ஏற்பட்ட அளவு கடந்த பூரிப்பில், இவனுக்கு மோக்ஷம் அளிக்க வேண்டுமே!! காக்க வேண்டுமே!! என்ற ஆவலில் "உலகத்தை காப்பதற்கே சிறு வாய் போதும்" என்று இருந்த பெருமாள், ஒரு பக்தனை காப்பதற்காக இவருக்கு ஏற்பட்ட பூரிப்பை பார்த்தால், சிறு உலகை காக்க பெருவாயால் உண்டது போல பூரிப்பில் இருந்தாராம்.
திருமலையப்பனுக்கு ஏற்பட்ட இந்த பூரிப்பை பார்த்து, நம்மாழ்வார் "உலகம் உண்ட பெருவாயா" என்கிறார்.

பக்தியுடன் நாம் திருமலையப்பனை தரிசித்தால், பெருமாள் நம்மிடமும் இந்த பூரிப்பு அடைகிறார்.
நம் தேவைக்கும் அதிகமாக கருணை செய்து, இகத்திலும், பரத்திலும் ஆனந்தமே கிடைக்க அருள் செய்கிறார்.

அனைவரும் திருமலை செல்வோம்.
திருமலையப்பனை பக்தியுடன் தரிசனம் செய்வோம்.