Followers

Search Here...

Showing posts with label திருமொழி. Show all posts
Showing posts with label திருமொழி. Show all posts

Sunday 26 July 2020

பாசுரம் (அர்த்தம்) - "தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த". கண்டம் என்னும் கடிகையில் (தேவப்ரயாகையில்) வீற்றுஇருக்கும் ராமபிரானை தொழும் பாசுரம். பெரியாழ்வார் வர்ணிக்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !

பரவாசுதேவன் நாராயணன், ராமபிரானாக அயோத்தியில் அவதாரம் செய்து விட்டார்.

வனவாச சமயத்தில் பரத்வாஜ ரிஷியை சந்தித்தார் ராமபிரான். பிறகு சித்ரகூடம் சென்று தங்கி இருந்தார்.

14 வருட வனவாசத்தில்,
அயோத்தியில் ஆரம்பித்து, ராமேஸ்வரம் வரை நடந்தே வந்தார் ராமபிரான்.

ராமபிரானின் பாதம் படும் பாக்கியத்தை அயோத்திக்கு தெற்கே உள்ள பாரத தேசங்கள் முழுவதும் பெற்றது.



இலங்கையில் இருந்த ராக்ஷஸன் ராவணனின் தலையை கொய்து, அவன் தம்பி விபீஷணனுக்கு முடி சூட்டிவிட்டு, அயோத்தியில் இருந்து இலங்கை வரை தன் ஆளுமையை பறைசாற்றினார் ராமபிரான்.

பிறகு, சீதா தேவியுடன் பட்டாபிஷேகம் செய்து, அயோத்தியை அரசாட்சி செய்து கொண்டிருந்தார்.

அயோத்தியில் ஆரம்பித்து, ராமரின் பாதம் தெற்கு பாரதம் முழுக்க பட்டுவிட்டது.
ஆனால், அயோத்திக்கு மேல் உள்ள ஹிமாசலம் போன்ற வ்டபாரத தேசங்கள் ராம பாதம் கிடைக்காமல் இருந்தது.

"புனிதமான கங்கை நதி பாயும் ஹிமாலயத்திலும் ராமபிரான் பாதம் படவேண்டும்"
என்று ஆசைப்பட்டார் பரத்வாஜ ரிஷி.

அதற்காக கண்டம் என்னும் கடிகையில், சித்ரகூடம் போலவே ஒரு குடில் அமைத்து, அயோத்தி மன்னன் னை அழைத்தார்.
பரத்வாஜ ரிஷி அழைப்பை ஏற்று, ராமபிரான் புனிதமான கங்கை ஓடும் இந்த கடிகையில் வந்து சிலகாலம் தங்கினார்.

இந்த 'கடிகை' என்ற திவ்ய தேசமே 'தேவப்ரயாகை' என்றும் அழைக்கபடுகிறது.

இங்குள்ள ரகுநாத் கோவிலில், ராமபிரான் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.

"பாரத தேசம் முழுவதும் ராம ராஜ்யமே"
என்று பறைசாற்றினார்.



"கங்கையில் நின்று, எங்கும் தன் புகழை பரப்பி, பாரத தேசம் முழுவதும் ஆளும் என் புருஷோத்தமனே"
என்று பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்கிறார் இந்த பாசுரத்தில்.

தங்கையை மூக்கும்
தமையனைத் தலையும் தடிந்த
எம் தாசரதி போய்
எங்கும் தன் புகழாய் இருந்து
அரசாண்ட எம் புருஷோத்தமன் இருக்கை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
கடுவினை களைந்திடகிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற
கண்டம் என்னும் கடிநகரே
திருமொழி (பெரியாழ்வார்)
கண்டம் என்னும் கடிநகர், இன்று "தேவப்ரயாகை" (Uttarakhand) என்ற பெயருடன் இருக்கிறது.

வீட்டில் உள்ள வாளி ஜலத்தில் குளிக்கும் போது "கங்கே கங்கே" என்ற சொன்னால் கூட, அந்த சொல்லே குளிப்பவனின் பாவங்களை போக்கி, புனிதமாக்கிவிடும். (கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
கடுவினை களைந்திடகிற்கும்)

'கங்கை' என்ற சொல்லுக்கே அத்தனை மகத்துவம் சொல்லப்படுகிறது.

அப்படிப்பட்ட பெருமைமிகு கங்கை, கடிகை என்ற தேவப்ரயாகையில் ஓடிக்கொண்டு இருக்க, ராமேஸ்வரம் முதல் ஹிமாச்சலம் வரை தன் பாதம் பதித்த ராமபிரானை கண்டு (எம் தாசரதி போய் எங்கும் தன் புகழாய் இருந்து அரசாண்ட எம் புருஷோத்தமன் இருக்கை),
'அந்த கங்கையில் மேல் நின்ற என் புருஷோத்தமனே' என்று ராமபிரானை கை தொழுது சேவிக்கிறார், பெரியாழ்வார். (கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற)

ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார், வடதேசத்தில் உள்ள  தேவப்ரயாகை வரை சென்று ராமபிரானை சேவித்து இருக்கிறார் என்பது தெரிகிறது.
"ராமபிரான் பாரத தேசம் முழுவதும் தன் பாதத்தை பதித்து, கங்கையில் வந்து ரகுநாதனாக நிற்கிறார். அந்த ரகுநாதனை தொழுவோம்"
என்று மட்டும் பெரியாழ்வார் சொல்லி இருக்கலாமே!
ஆனால்,
ஏன், சூர்பனகை மூக்கை அறுத்த, அவள் அண்ணன் ராவணன் தலையை அறுத்த ராமபிரான் என்று சேர்த்து சொன்னார்?

ராக்ஷஸ தாயாருக்கும், ரிஷியான விஸ்ரவசுக்கும் பிறந்தவன் ராவணன். ராவணனும் ஒரு விதத்தில் பிராம்மணன். வேதம் கற்றவன். 
பெரியாழ்வார் பிராம்மணர்.
இப்படி ராவணன் தலையை கொய்து எறிந்த ராமபிரான் என்று சொல்ல காரணம் என்ன?

இதற்கான காரணத்தை பெரியவாச்சான் பிள்ளை சொல்லியிருந்தாலும், அந்த அர்த்தங்கள் நமக்கு கிடைக்காமல் போய் விட்டது.
அதற்கு பின் வந்த மணவாள மாமுனிகள், பெரியாழ்வார் என்ன காரணத்தினால் இப்படி சொன்னார்? என்று நமக்கு காட்டுகிறார்.

உண்மையான பக்தன் பெருமாளையும், பிராட்டியையும் சேர்த்து சேவிக்கவே விரும்புவான். பிரித்து வைக்க விரும்பமாட்டான்.
ஹனுமான் ராமபிரானையும், சீதையும் சேர்க்க பாடுபட்டார். பிரிந்து இருப்பதை கண்டு வருத்தப்பட்டார்.
சேர்த்து வைக்க ஆசைப்பட்ட ஹநுமானுக்கு ராமபிரான் பெரும் புகழை கொடுத்தார்.



ஹனுமானுக்கு கோவில் காட்டினால், அங்கு ஒரு சிறிய சன்னதியில் கூட ராமபிரான் இருக்க சம்மத்தித்து விடுகிறார்.
ராமருக்கே கோவில் காட்டினாலும், அங்கு இருக்கும் சிறு ஹனுமான் சன்னதியை சுற்றுபவர்களே அதிகம்.
ஹநுமானுக்கு ஏன் எந்த ஏற்றம்? 
பெருமாளையும், பிராட்டியையும் சேர்த்து சேவிக்க ஆசைப்பட்டதால், ஹநுமானுக்கு எந்த ஏற்றம் கிடைத்தது.
பெருமாளை பிராட்டியிடமிருந்து பிரித்து பார்க்க ஆசைப்பட்டாள் - 'சூர்ப்பனகை'.
இந்த பாபத்துக்கு மூக்கு அறுபட்டு தண்டிக்கப்பட்டாள்.

பிராட்டியை பெருமாளிடமிருந்து பிரித்து பார்க்க ஆசைப்பட்டான் - 'ராவணன்'.
தலையே போனது அவனுக்கு.

பக்தன் 'பெருமாளையும் பிராட்டியையும் பிரித்து பார்க்க கூடாது' என்று நமக்கு சொல்லவே  பெரியாழ்வார் "தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த" என்று மணவாள மாமுனிகள் நமக்கு விளக்குகிறார்..

ராமபிரானையும், சீதாதேவியையும் சேர்த்தே வணங்குவோம்.
ஹநுமானை போல, பெருமையை அடைவோம்.

குருநாதர் துணை.



Monday 16 July 2018

வேறு தெய்வங்கள் மேல் த்வேஷம் உள்ளவனா வைஷ்ணவன்? வைஷ்ணவ தர்மம் என்ன? பெரியாழ்வார் பாசுரத்தை கொண்டு, புரிந்து கொள்வோம்.

வேறு அந்நிய தேவதைகள் மேல் த்வேஷம் உள்ளவன் வைஷ்ணவனா? வைஷ்ணவ தர்மம் என்ன? பெரியாழ்வார் பாசுரத்தை கொண்டு, புரிந்து கொள்வோம்.





பெரியாழ்வார், திருவேங்கடமுடையானை பார்த்து, 
"என்னுடையவன் நீ என்று, என்னை எடுத்து கொண்டு விட்டீர்கள்"
என்கிறார்.

பெரியாழ்வார், "திருவேங்கடமுடையானை" பார்த்து  பாடுகிறார்,

சென்னி ஓங்கும்
தண் திருவேங்கடம் உடையாய் !
உலகு தன்னை வாழ நின்ற நம்பீ ! தாமோதரா !
சதிரா !
என்னையும்,
என் உடைமையையும்
உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின் அருளே புரிந்திருந்தேன்
இனி என் திருக்குறிப்பே
--   பெரியாழ்வார் திருமொழி.

"உலகமெல்லாம் வாழும்படியாக, சாநித்யத்துடன் திருவேங்கடத்தில் நின்றுள்ள எம்பெருமானே !
ஒரு பெண்ணிற்கு, ஒருவன் தாலி கட்டி, அவள் 'என்னை சேர்ந்தவள்' என்று சேர்த்து கொள்வது போல,
உங்களுடைய சம்பந்தம் உள்ளவன் 'நான்', என்பதை, முத்திரை இட்டு, உன் சம்பந்தமான சங்கம், சக்கரம் சாற்றிக்கொண்டு, நெற்றியில் திருமண் காப்பு, 'எனக்கும், என் உடமைகளுக்கும்' இட்டுக் கொண்டு விட்டேன்.
முத்திரை இட்டு, நான் உங்களுக்கு அடிபணிந்தேன்.
என்னுடையவன் நீ, என்று சேர்த்து கொண்டீர்கள்.
எப்பொழுதும் உங்கள் கருணையை எதிர்பார்த்தே இருப்பேன்"
என்கிறார் பெரியாழ்வார்.

பெரியவாச்சான் பிள்ளை, இந்த பாசுரத்துக்கு விளக்கம் சொல்லும் போது,
"நம்மாழ்வார், 'என் உடைமையை' என்று சொல்லும் இடத்தில் சரீரத்தையும்,
 'என்னையும்' என்று சொல்லும் இடத்தில், ஆத்மாவையும் சொல்கிறார்" என்று ஆச்சர்யமாக, நம்மாழ்வார் பாடியதின் உண்மை பொருளை பிரதிபலிக்கிறார்.

"என் உடைமையையும்
உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு"
என்று சொல்லும்போது,
'உடைமை' என்று தன் சரீரத்தையும் சேர்த்து, சொல்கிறார் நம்மாழ்வார்.

அதனால் தான், 
'வைஷ்ணவர்கள்', தன் வீடு வாசல், தன் சரீரம், என்று அனைத்திலும் சங்கம் சக்கரம் முத்திரை இட்டு, 'இந்த உடைமை அனைத்தும், உன்னை சேர்ந்தது' என்று ப்ரபத்தி செய்கின்றனர்.

சரீரத்தில் வேண்டுமானால், 'சங்கம், சக்கரம்' போன்ற முத்திரை இட்டு கொள்ளலாம்.
நெற்றியில் 'திருமண் காப்பு' இட்டு கொண்டு,
'நான் எம்பெருமானை சேர்ந்தவன், எம்பெருமானுக்கு சம்பந்தப்பட்டவன்'
என்று வெளி உலகுக்கு காட்டி கொள்ளலாம்.

அது எப்படி ஆத்மாவுக்கு முத்திரை இட முடியும்?
'ஆத்மா' கண்ணுக்கு தெரியாதது ஆயிற்றே?




"என்னையும், உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு" 
என்று பெரியாழ்வார் சொல்லும் போது,
'ஆத்மாவுக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டேன்' என்கிறாரே?

இதன் பொருள் என்ன?


இதற்கும் பெரியவாச்சான் பிள்ளையே, நம்மாழ்வார் எண்ணத்தை அப்படியே நமக்கு விளக்கி தருகிறார்.

"அந்நிய தேவதைகள், 'சம்பந்தமே' ஆத்மாவில் இருக்க கூடாது" என்பதே, 'ஆத்மாவுக்கு செய்யும் பஞ்ச சம்ஸ்காரம்' என்கிறார்.

'ஸ்ரீனிவாசனை தவிர எனக்கு வேறு எந்த தெய்வமும் தெரியாது' 
என்று ஆத்மாவில் ஸ்ரீனிவாசனை மட்டும் முத்திரையாக இடுவதே - 'ஆத்மாவில் செய்யும் பஞ்ச சம்ஸ்காரம்' என்று அர்த்தத்தை விளக்குகிறார்.




ஒரு தர்மபத்னி, கணவனை 'மட்டுமே' தன் நெஞ்சில் சுமப்பது போல, ஆத்மாவில் ஸ்ரீனிவாசனுக்கு மட்டுமே இடம்,
என்று ஆத்மாவில் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டாமா?

உடம்பில் மட்டும் சங்கு சக்கர முத்திரை அணிந்து,
மனதில் வேறு தெய்வங்களுக்கும் இடம் உண்டு என்று சொன்னால், "வைஷ்ணவன்" என்று சொல்லி என்ன பயன்?

ஆதலால்,
ஆத்மாவிலும் 'நீ மட்டுமே',
உடம்பிலும் 'உன் சம்பந்தமான திரு சின்னமே' அணிந்து,
நான் உன்னை சேர்ந்தவன் என்று, உன் கருணையையே எதிர்பார்த்து இருக்கிறேன்"
என்று பெரியாழ்வாரின் வைஷ்ணவ தர்மத்தை, விளக்கி தருகிறார் பெரியவாச்சான் பிள்ளை.

வைஷ்ணவ தர்மமே, "பதிவ்ரதா தர்மம்" தான்.

'வேறு அந்நிய தேவதை, சம்பந்தமே இல்லாமல் இரு. ஸ்ரீனிவாசனையே நினை'
என்று ஆத்மாவுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்யும் வைஷ்ணவ தத்துவத்தை மேலோட்டமாக பார்த்து விட்டு,
'வேறு அந்நிய தேவதைகள் மேல் த்வேஷம் உள்ளவன் வைஷ்ணவன்',
 என்று நினைத்து விட கூடாது. அது அர்த்தம் இல்லை.

ஏற்கனவே சொன்ன மாதிரி, வைஷ்ணவ தர்மமே, பதிவ்ரதா தர்மம் தான்.

ஒரு தர்ம பத்னி, தன் கணவனை, தவிர வேறொரு அந்நிய புருஷனை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டாள் அல்லவா?
இதுவே பதிவ்ரதா தர்மம்.
மற்ற புருஷனையும் தன் கணவனாக நினைப்பாளா ஒரு தர்மபத்னி?

"ஏன் இப்படி பாகுபாடு செய்கிறாள்?
மற்ற புருஷர்கள் மேல் இவளுக்கு ஏன் இப்படி த்வேஷம்?
மற்ற புருஷர்கள் என்ன தாழ்ந்தவர்களா?
அடுத்த வீட்டு புருஷனை இவள் ஏறெடுத்து கூட பார்க்க மாட்டேன் என்கிறாளே?"
என்றா இன்னொரு பெண் சொல்லுவாள்?

ஒரு தர்மபத்னிக்கு, அவள் கணவன் மட்டுமே லட்சியம்.
அவளை பொருத்தியவரை, அந்நிய புருஷன் "குபேரனாகவே" இருந்தாலும், "மன்மதனாக" இருந்தாலும் திரும்பி பார்க்க வேண்டிய அவசியமில்லையே?

இப்படி அந்நிய புருஷனை திரும்பி பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று இருப்பது ஒரு பதிவ்ரதைக்கு "பூஷணமே" (அணிகலன்) அன்றி, அது "தூஷணம்" ஆகாது.

வெளியில் பார்க்க, வெறும் தாலி மட்டும் கட்டிக்கொண்டு, மனதில் தன் கணவனுடன் மற்றொருவனுக்கும் இடம் தந்தால், அது எப்படி பதிவிரதை தர்மமாகும்?
அந்த கற்பு "இதயத்தில்" இருந்தால் தானே, திருமாங்கல்யத்துக்கும் மதிப்பு.

திருமாங்கல்யம் போல, "திருமண் காப்பு".
திருமாங்கல்யம் போல, "துளசி மணி மாலை".
திருமாங்கல்யம் போல, "சங்கு சக்கர முத்திரைகள்".
இந்த உடைமைகள், உன்னை சேர்ந்தது என்று குறிக்கின்றதே தவிர, "ஆத்மாவையும் அர்ப்பணம்" செய்யாது போனால், அவன் எப்படி வைஷ்ணவன் ஆக முடியும்?

எம்பெருமானுக்கே ஆட்பட்டவன், என்று ஆத்மாவையும் அர்ப்பணம் செய்பவனல்லவா சுத்தமான வைஷ்ணவன்?

அதேபோல, நெற்றியில் "திருமண்" இட்டு, "சங்கம் சக்கர" முத்திரையும் இட்டு, பார்க்க வைஷ்ணவன் போல இருந்து, "மனதில் வேறு தெய்வத்துக்கும் இடம் உண்டு" என்று சொன்னால், அது பதிவிரதை தர்மம் ஆகாதே?

இந்த பதிவ்ரதா தர்மத்தை தானே, வைஷ்ணவமும் காட்டுகிறது.

ஆதலால்,
"எம்பெருமான் ஒருவனுக்கே நான் ஆட்பட்டு இருப்பேன்" 
என்று சொல்லும் ஒரு வைஷ்ணவன்,
"பிற தெய்வங்களை பார்ப்பது இல்லை" என்று சொல்வது, அந்த தெய்வங்களிடம் உள்ள த்வேஷத்தால் (வெறுப்பு) அல்ல.

"என் தெய்வம் எம்பெருமான் நாராயணன் மட்டுமே" 
என்ற பதிவ்ரதை தர்மத்தில் இருப்பதே காரணம்.
இதில் த்வேஷம் (வெறுப்பு) இல்லை.

இந்த ஆத்மாவுக்கு 'ஒரு தெய்வம்' தானே இருக்க முடியும்?
வேதமோ, அந்த பரமாத்மா 'நாராயணன்' என்று தெளிவாக கூறுகிறது.
இதை பற்றி படிக்க  www.proudhindudharma.com/2017/12/blog-post_7.html Click செய்யவும்,

நாம் அனைவருக்கும் நாராயணனே அனைத்துமாக (மாதா, பிதா, கணவன் எல்லாம்) உள்ளார்.

ஒரு பதிவ்ரதைக்கு, எப்படி தன் கணவன் மட்டுமே தெரியுமோ,
அதுபோல,
நாராயணனால் படைக்கப்பட்ட நாமும், ஒரு பதிவிரதை போல, அவரால் படைக்கப்பட்ட அந்நிய தெய்வங்களின் சம்பந்தம் கொள்ளாமல், நாராயணனே நம் தெய்வம் என்று இருக்க வேண்டும்"
என்று வழி காட்டுகிறது வைஷ்ணவம்.

இப்படி உயர்ந்த பதிவிரதை தத்துவத்தை கொண்டு,
"நாராயணனை தவிர, வைஷ்ணவனுக்கு வேறு தெய்வம் தெரியாது", 
என்று சொல்லும் போது,
"ஏன் இப்படி பாகுபாடு?
மற்ற தெய்வங்கள் என்ன தாழ்ந்தவர்களா?
ஏன் அந்நிய தேவதைகளை மட்டும் வைஷ்ணவர்கள் வணங்க கூடாது?"
என்று கேட்பதே முட்டாளத்தனம்.




இப்படி "சரீரத்தையும், ஆத்மாவையும் எம்பெருமானுக்கு ஆட்படுத்தி,
'நான் உன்னை சேர்ந்தவன்' என்று இருப்பதே" வைஷ்ணவ லக்ஷணம்.

சரீரத்தையும், ஆத்மாவையும் எம்பெருமானுக்கு ஆட்படுத்திய பின், எப்படி இருப்பான் ஒரு வைஷ்ணவன்?
"எம்பெருமான் இஷ்டம்" என்று இருப்பான்.
சுகம் கொடுத்தாலும் உன் இஷ்டம், துக்கம் கொடுத்தாலும் உன் இஷ்டம் என்று இருப்பான்.

புருஷன் கைவிட்டு விட்டான் என்பதற்காக, ஒரு தர்மபத்னி வேறொரு புருஷனை நினைப்பாளா? (கண்ணகி போன்று தானே நம் பாரத தேசம் முழுவதும் பெண்கள் கற்பை உயிராக நினைத்து, தர்மத்தை மீறாமல் இருந்தனர், இருக்கின்றனர்)

அதுபோல,
"எம்பெருமான் துக்கமே கொடுத்தாலும்,  உன்னுடைய கருணை ஒன்றையே ஆச்ரயித்து இருக்கிறேன்"
என்கிற அர்த்தத்தில், நம்மாழ்வார்,
"நின் அருளே புரிந்திருந்தேன், இனி என் திருக்குறிப்பே" என்று சொல்கிறார்.

ஒரே பாசுரத்தில் திருவேங்கடமுடையானிடம்
சரீரம் மற்றும் ஆத்மாவை, ஒரு பதிவிரதை தன் கணவனிடம் தன்னை சமர்பித்து, அவன் 'கருணையை', அவன் 'அன்பை' எதிர்பார்ப்பது போல, சரண் அடைகிறார்.

திருவேங்கடமுடையானை தரிசிக்கும் போது, பெரியாழ்வார் பாசுரத்தை நாமும் அர்த்தத்துடன் ஸ்மரிக்கலாம்.

வாழ்க ஹிந்துக்கள்.  வாழ்க ஹிந்து தர்மம்.