Followers

Search Here...

Showing posts with label ராமானுஜர். Show all posts
Showing posts with label ராமானுஜர். Show all posts

Thursday 3 February 2022

கனவு உண்மையா? பல கனவுகள் ஏற்படுகிறது.. ஆண்டாள், ஆழ்வார்கள் கனவில் பெருமாள் வந்ததாக சொல்கிறார்கள். நம்மில் சிலருக்கு தெய்வங்கள் கனவில் காட்சி கொடுக்கிறார்கள். பல சமயம் கெட்ட கனவுகள், நல்ல கனவுகளும் வருகிறது. கனவுகள் உண்மையா? ராமானுஜர் என்ன சொல்கிறார்? தெரிந்து கொள்வோம்...

'கனவு' என்பது அவஸ்தை (அனுபவம்) தானே! அதை எப்படி உண்மை என்று நம்ப முடியும்?

ராமானுஜர் தனது ஸ்ரீ பாஷ்யத்தில், 

"விழித்து இருக்கும் போது நாம் காணும் காட்சிகள் எந்த அளவுக்கு சத்தியமோ!, அது போல, கனவில் காணும் காட்சிகளும் சத்தியமே" என்கிறார்.

ஒருநாள், 

ஒருவன் திடீரென்று காக்கையாகி விட்டான். காகம் போல கறைந்து கொண்டு பறக்கிறான். தன் வீட்டை பார்த்ததும், வாசல் வழியாக நுழைய முயன்றான். அவன் மனைவியே "சூ சூ..." என்று துரத்தி விட்டாள்.

"ஐயோ! என் நிலைமை இப்படி ஆகி விட்டதே!"

என்று புலம்பி அழ, விழித்துக்கொண்டு விட்டான்.

"அட.. சீ! என்ன கனவு இது!" என்று பெருமூச்சு விட்டான். கனவு பொய் என்று நினைத்தான்.

ராமானுஜரிடம் கேட்டால்,

"கனவு சத்தியம் தான். ஏதோ ஒரு பூர்வ ஜென்மத்தில் காக்கையாக இருந்திருப்பான், அந்த வாசனை இன்னும் போகாததால், இப்படி ஒரு கனவு கண்டான்" என்கிறார்.


ஒருநாள், 

திடீரென்று நான்கு பேர் சேர்ந்து கொண்டு, இவனை அடி அடியென்று அடித்து நொறுக்கி விட்டார்கள். ரத்தம் சொட்ட, வலி தாங்க முடியாமல், உயிருக்கு பயந்து இவன் ஓட, விழித்துக்கொண்டு விட்டான்.

"அப்பாடா! பெரிய கஷ்டத்தில் இருந்து தப்பித்தோம்! .. சீ! என்ன கனவு இது!" என்று நினைத்தான்.


ராமானுஜரிடம் கேட்டால்,

"கனவு சத்தியம் தான். இவனுக்கு இப்படி ஒரு அவஸ்தை விழிப்பு நிலையில் இவனது பூர்வ கர்மாவால் நடக்க வேண்டியிருக்க, பெருமாளின் கருணையால், இந்த அனுபவத்தை கனவில் கொடுத்து,  பாப கர்மாவின் கணக்கை கழித்து விட்டார்." என்கிறார். 

'நியாயமாக இவன் பெருமாளுக்கு நன்றி சொல்ல வேண்டும்' என்கிறார்.

'கெட்ட கனவும், பாபத்தை கழிக்கவே வருகிறது. இது பெருமாளின் கருணையையே காட்டுகிறது' என்கிறார்.


ஒருநாள், 

பெரிய மாளிகையில், பெரிய சிம்மாசனத்தில் இவன் அமர்ந்து இருக்கிறான். 

ஆயிரக்கணக்கான வேலைக்காரர்கள் சூழ, பல வித உணவுகள் இருக்க, சகல வசதியுடன் இருக்கிறான். 

'ஆஹா எத்தனை சுகமான வாழ்க்கை' என்று அனுபவித்து கொண்டு இருக்கும் போது, விழித்துக்கொண்டு விட்டான்.

ஒட்டு வீட்டில், வெறும் தரையில் படுத்து கொண்டு இருக்கிறான்.

"அடடா.. என்ன அற்புதமான கனவு இது!" என்று நினைத்தான்.


ராமானுஜரிடம் கேட்டால்,

"இந்த கனவு சத்தியம் தான். இவனுக்கு இப்படி ஒரு அவஸ்தை விழிப்பு நிலையில் இவனது பூர்வ கர்மாவால் நடக்க வேண்டியிருக்க, பெருமாளின் கருணையால், இந்த சௌக்கியமான அனுபவத்தை கனவில் கொடுத்து,  புண்ணிய கர்மாவின் கணக்கை கழித்து விட்டார்." என்கிறார். 


'நல்ல கனவு, புண்ணியத்தை கழிக்கவே வருகிறது. இதுவும் பெருமாளின் கருணையே' என்கிறார்.

பெரிய மாளிகை கட்டி, வசதியாக வாழும்படி நிஜத்தில் நடத்தி இருக்க கூடாதா? என்று கேட்டால்,

'வசதி நிஜத்தில் கொடுத்து இருக்கலாம். கஷ்டம் இருந்தால், பெருமாளை கொஞ்சமாவது நினைப்பான்.

அதீத வசதி கொடுத்தால், பெருமாளை விட்டு விலகி சென்று விடுவானே! மீண்டும் சம்சார சுகத்தில் வீழ்ந்து விடுவானே! அதனால் தான் அந்த புண்ணிய அனுபவத்தையும் கனவில் கொடுத்து, அதையும் கழித்து விடுகிறார்" என்கிறார்.


இப்படி, நல்ல கனவும், கெட்ட கனவும், 'பூர்வ ஜென்ம வாசனையாலும், சில பாவ கர்மாக்களை கழிக்கவும், சில புண்ணிய கர்மாக்களை கழிக்கவும்' ஏற்படுகிறது என்கிறார்.

சிலருக்கு ஆச்சர்யமாக கனவில் பெருமாள் தோன்றுகிறாரே!

ஆண்டாள் தனது கனவில் பெருமாள் வந்து தன்னை கரம் பிடித்ததாக கண்டேன் என்று சொல்கிறாளே!  மற்ற ஆழ்வார்களும் கனவில் பெருமாளை தரிசித்தேன் என்று சொல்கிறார்களே!

நமக்கும், எப்பொழுதாவது, 

தெய்வீக காட்சிகள் ஏற்படுகிறதே! அதற்கு காரணம் என்ன? என்று கேட்டால்,

ராமானுஜர், "அந்த திவ்ய காட்சிகள் சத்தியமே! என்கிறார்.


பெருமாள் நேரில் வந்தால் தாங்க முடியாது. நேரில் பார்த்த ஆழ்வார்களால் உலகத்தோடு பழக முடியவில்லை. நேராக தெய்வம் வந்து பேசினால் பித்தனாகி விடுவோம். உலக விஷயங்களில் பிறகு மனம் செல்லவே செல்லாது. 

ஆதலால், பெருமாள், பக்குவம் இல்லாத தன் பக்தனிடம், பழக ஆசைப்படும் போது, முதலில் கனவில் வருகிறார்.

'நாளைக்கு பெருமாளை கனவில் பார்க்க போகிறேன்' என்று சொல்லி யாரும் பார்த்து விட முடியாது. 

'பெருமாள் கனவில் வருவது நம் சாமர்த்தியத்தால் அல்ல, அவர் கருணையால் மட்டுமே!' என்பதால் கனவில் எற்படும் திவ்ய காட்சிகளை சத்தியம் என்றே உணர வேண்டும்.


தன்னிடம் பழக தெய்வம் வருகிறார் என்று கனவில் பார்த்த பக்தன், மேலும் மேலும் நம் பக்தியை வளர்த்து கொள்ள வேண்டும்.


வேதத்தில் இல்லாத, சொல்லாத உருவங்கள், போலி தெய்வங்கள் கனவில் ஏற்பட்டால், அது இந்த ஜென்மத்தில் பழகிய வாசனையே என்று உதற வேண்டும்.

Saturday 4 April 2020

பாசுரம் (அர்த்தம்) - நாறு நறும்பொழில்... ஆண்டாள் (மதுரை) கள்ளழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?


நாறு நறும்பொழில்
மாலிருஞ்சோலை நம்பிக்கு,
நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவி வைத்தேன்,
நூறு தடா நிறைந்த
அக்காரவடிசில் சொன்னேன்,
ஏறு திருவுடையான்
இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ
-  நாச்சியார் திருமொழி (ஆண்டாள்)




வராக அவதாரம் செய்த போது இந்த பூமியை பிரளய ஜலத்தில் இருந்து தூக்கிய அதே பகவான்,
வாமன அவதாரம் செய்த போது இந்த பூமியை பலிசக்கரவர்த்தியிடம் இருந்து மீட்க உலகை அளந்த அதே பகவான்,
கிருஷ்ண அவதாரம் செய்த போது இந்த பூமியை உண்டு, லோகங்கள் அனைத்தும் தனக்குள் அடக்கம் என்று யசோதையிடம் லீலை செய்த அதே பகவான்,

இந்த அழகர் மலையில் கள்ளழகனாக (மாலிருஞ்சோலை நம்பி) வீற்று இருக்க,
இங்கு வாழும் பலதரப்பட்ட பக்தர்களான கள்ளர்கள், மறவர்கள், பிராம்மணர்கள் எவரானாலும்,
தனக்கு கிடைத்த கேழ்வரகானாலும், ஆடு கோழியானாலும், பால், நெய் என்று எந்த பொருளானாலும்,
அதில் ஒரு பாகம் "என் அழகருக்கு" என்று உரைத்து, அவர் பாதத்தில் சமர்ப்பித்து விடுகிறார்கள். 

அழகர் பெருமாள் ஜாதி பார்க்காமல், குணம் பார்க்காமல் இங்கு மட்டும் தான், அவரவர்கள் ஜாதிக்கு ஏற்ப, அவரவர்கள்  பேச்சுக்கு ஏற்ப, அவரவர்கள் நாகரீகத்து ஏற்ப, அவரவர்கள் சாப்பாடுக்கு ஏற்ப, அவரவர்கள் குணத்திற்கு ஏற்ப பழகுகிறார்.

பொருளை கொள்ளை அடிக்கும் கள்ளர்களின் மத்தியில் நின்று கொண்டு, கள்ளர்களின் மனதையும் கொள்ளையடிக்கும் கள்ளனுக்கு கள்ளனாக கள்ளழகர் இங்கு இருக்கிறார். 

ஸ்ரீரங்க நம்பெருமாள் போல இங்கு கள்ளழகர் இருக்க மாட்டார்.
அங்கு பெருமாள், யார் கொடுத்தாலும் ஏற்க மாட்டார். ஒரு அரசனாக இருப்பார்.

இங்கோ, பெருமாள் 'கம்பு சாப்பிடுவீர்களா?' என்று கேட்டால், "சாப்பிடுவேனே !" என்று சொல்கிறார். 
'கள்ளர்களை போல கருப்பு துணி கட்டி கொள்வீர்களா?' என்று கேட்டால், 'சரி' என்று கட்டி கொள்கிறார்.

பெருமாள் ஒரு நாள் கருப்பு துணி கட்டிக்கொள்ளும் அதிசயம் அழகர்மலையில் மட்டுமே காண முடியும். 

கள்ளர்களும் ரசிக்க கருப்பு துணி, கருப்பு தொப்பி அணிந்து கொண்டு, கையில் ஒரு கோலுடன் தரிசனம் தருகிறார் அழகர்.

அழகரை பார்த்தால் அனைவருக்குமே என் பெருமாள் (எம்பிரான்) என்று தோன்றிவிடும்.

மற்ற ஊர்களில் பெருமாளுக்கு நேரடியாக எதையும் சமைத்து நெய்வேத்யம் செய்து விட முடியாது.
பெருமாள் இங்கு மிகவும் சுலபமாக இருப்பதால், அழகர்மலையை சுற்றி ஆயிரக்கணாக்கான மக்கள், நூபுர கங்கையில் (சிலம்பாறு) ஸ்நானம் செய்து விட்டு, தாங்களே அடுப்பு மூட்டி, பொங்கல் வைத்து பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்யும் அழகை நாம் ரசிக்கலாம்.

சமயத்தில், கிராம மக்கள், தான் சாப்பிடும் ஆடு கோழியை சமர்ப்பித்தால் கூட, இந்த பெருமாள் அதையும் ஏற்கிறார்.

இப்படி பிரார்த்தனை எல்லாம் இங்கு பலித்து விடும் என்பதை அறிந்து கொண்ட பெரியாழ்வார் பெற்ற ஆண்டாள்,
"ஸ்ரீ ரங்க பெருமாளை மணக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து, நம் அழகருக்கு பொங்கல் (அக்காரவடிசில்) செய்கிறேன் என்று வேண்டிக்கொண்டாள்.

மாலிருஞ்சோலை நம்பிக்கு,
நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவி வைத்தேன்,
நூறு தடா நிறைந்த
அக்காரவடிசில் சொன்னேன்,
என்று ஆண்டாளே  பாடுகிறாள்.




ஆண்டாள் அவதரித்த காலத்துக்கு பிறகு, ராமானுஜர் அவதரித்தார் (1017AD).

ஆண்டாள் பாடிய இந்த பாட்டில், "அக்காரவடிசில் சமர்ப்பித்தேன்" என்று சொல்லாமல், "அக்காரவடிசில் சொன்னேன்" என்று இருப்பதை கவனித்து விட்டார் ராமானுஜர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த ஆண்டாள், ரங்கநாதரை மணந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையினால், மதுரையில் உள்ள கள்ளழகரிடம் பிரார்த்தனை செய்து, "பொங்கல் வைக்கிறேன்" என்று சொன்னாளாம்.

ஆண்டாள் தன்னிடம் சொன்னதற்கே, கள்ளழகர் அவள் ஆசையை பூர்த்தி செய்து விட்டாராம். 
ஆண்டாள் ஸ்ரீ ரங்கநாதருடன் ஐக்கியமாகி விட்டாள்.

தங்கை மனதில் ஆசைப்பட்டதை கூட, அண்ணன் தானே பூர்த்தி செய்து கொடுக்க வேண்டுமாம். 

"அக்காரவடிசில் செய்கிறேன்" என்று சொல்லியும், ஆண்டாள், கள்ளழகருக்கு அக்காரவடிசில் செய்யமுடியாமல் போனது. 

ஆண்டாள் ரங்கநாதரை திருமணம் செய்து கொண்டு புக்ககம் போய் விட்டாள் என்பதால், அண்ணனாக தான் இருந்து, தன் தங்கை ஆண்டாள் செய்த பிரார்த்தனையை முடித்து கொடுக்க ஆசைப்பட்டார்.

இதற்காக மதுரை வந்து, கள்ளழகரை தரிசித்து, அவருக்கு நூறு தடா அக்காரவடிசில் செய்து ஆண்டாள் செய்த பிரார்த்தனையை நிறைவேற்றி கொடுத்தார்.

தான் அண்ணனாக செய்த இந்த காரியத்தை தன் தங்கைக்கு சொல்ல, ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற ராமானுஜர், ஆண்டாள் சன்னதிக்கு செல்ல,

அந்த சன்னதியில் இருந்து 7 வயது பெண் குழந்தை ஓடி வந்து"அண்ணா..." என்று ராமானுஜரை நோக்கி ஓடி வந்து கட்டிக்கொண்டாளாம்.
வந்திருப்பது ஆண்டாள் என்று உணர்ந்த ராமானுஜர், தன் தங்கையின் பிரார்த்தனையை தான் செய்து முடித்த ஆனந்தத்தை அடைந்தார்.

ராமானுஜர் ஆண்டாளுக்கு அண்ணனாகி விட்டதாலேயே, அவருக்கு "கோயில் அண்ணன்" என்றும் பெயர் ஏற்பட்டது.

ராமானுஜர் வாழ்வில் நடந்த அற்புதமான சம்பவம் இது.

மதுரையில் உள்ள அழகரை காண ராமானுஜர் வந்தார் என்பதும்,
ஆண்டாள் பிரார்த்தனை கூட இந்த அழகரால் தான் நிறைவேறியது என்று பார்க்கும் போது, நம் பிரார்த்தனையும் கள்ளழகர் மூலம் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை.

நாமும் கள்ளழகரை தரிசிப்போம்.

Saturday 29 June 2019

ரங்கநாதர் ராமானுஜருடன் பேசிக்கொண்ட நிகழ்ச்சி. தன்வந்திரி சன்னதி எப்படி வந்தது?

ஒரு சுவையான சம்பவம் ஸ்ரீ ராமானுஜர் அவதார சமயத்தில் நடந்தது.
ஸ்ரீ ராமானுஜர், பெரிய பெருமாளை பார்க்க சென்றார்.
அப்பொழுது தைல காப்பு சாத்தி இருந்தார் பெரிய பெருமாள்.




என்ன காரணத்தாலோ, துணியால் போர்த்திக்கொண்டு படுத்து இருந்தார் பெரிய பெருமாள்.
இதை பார்த்த ஸ்ரீ ராமானுஜருக்கு பெரிய பெருமாளுக்கு உடம்புக்கு ஏதோ சௌகரியம் இல்லையோ என்று மனதில் தோன்றியது.

அர்ச்ச அவதாரம் தானே, கல் தானே என்று நினைக்கும் அஞானிக்கு, ஸ்ரீ ராமானுஜரின் நிலை எப்படி புரியும்?

பெரிய பெருமாளை பார்த்து "ஏன், திருமேனி பாங்கு இல்லையோ?" என்று கேட்டே விட்டார் ஸ்ரீ ராமானுஜர்.

ஸ்ரீ ராமானுஜரை பார்த்தார் பெரிய பெருமாள். பக்தன் மனோபாவத்துக்கு ஏற்று, பெருமாள் பழகுவார்.

அர்ச்ச அவதாரமாகவே பேசினார்,
"ஆமாம். கொஞ்சம் சரியாக இல்லை." என்று சொன்னார் பெரிய பெருமாள்.

"ஏன் இப்படி ஆனது?" என்று ஸ்ரீ ராமானுஜர் கேட்க,






"எனக்கு தயிர் சாதத்துடன், நெல்லிக்காயை வைத்து நிவேதனம் செய்து விட்டனர். நாமும் பக்தன் கொடுப்பதால் சாப்பிட்டு விட்டோம்.
இதனால் கொஞ்சம் உடலுக்கு ஒத்துக்காமல் ஆகி விட்டது. ஜுரம் வந்து விட்டது" என்றாராம் பெரிய பெருமாள்.

தன் பக்தனிடம், பக்தனின் மனோ நிலைக்கு ஏற்றாற்போல லீலை செய்வார் பகவான்.

அதுவரை ஸ்ரீ ரங்கராஜ்யம் நடத்தும் பெரிய பெருமாளுக்கு, தன் ரங்க ராஜ்யத்தில் அரச மருத்துவன் இல்லையாம்.
இதற்காக ஸ்ரீ ராமானுஜரின் மனதில் இப்படி ஒரு எண்ணம் தோன்ற சங்கல்பம் செய்தார், பெரிய பெருமாள்.

பெரிய பெருமாளோ அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார்.
ஸ்ரீ ராமானுஜர் 'பெருமாளுக்கு ஜுரம்' என்று கேட்டவுடன், கண்ணீர் விட்டார்.

ஸ்ரீ ராமானுஜர், பெரிய பெருமாளை பார்த்து,
"ஒரு மாமிச சரீரமாக இருந்தால், ஒரு மருத்துவரை கூட்டிக்கொண்டு வந்து காட்டலாம்.
உங்களுடைய அப்ராக்ருத திவ்ய சரீரத்துக்கு எந்த மருத்துவரை (டாக்டரை) கொண்டு வந்து காட்டுவேன்?"
என்று கண்ணீர் விட்டார்.

"நமக்கு தான் டாக்டர் இருக்கிறாரே"
என்றாராம் பெரிய பெருமாள்.

"அதை தேவரீர் தான் சொல்ல வேண்டும்" என்று ராமானுஜர் பிரார்த்திக்க,
"நம் சன்னதியில், 'தன்வந்திரி'யை பிரதிஷ்டை செய்யும். அவர் என்னை அடிக்கடி பார்த்துக்கொள்வார்"
என்று பெரிய பெருமாள் சொன்னார்.
தன்வந்தரி சன்னதி மடப்பளி அருகிலேயே உள்ளது.



அன்று முதல்,
பெரிய பெருமாளுக்கு எந்த பதார்த்தங்கள் தயார் செய்தாலும், அந்த பதார்த்தங்கள் பெரிய பெருமாளுக்கு உகக்குமா? என்று தன்வந்திரி எதிரில் வைத்து, அவர் அனுமதித்த பின் தான், பெரிய பெருமாள் நிவேதனம் செய்வாராம்.
பெரிய பெருமாளும், தன்வந்திரி அனுமதித்த பதார்த்தங்களை மட்டும் தான், அன்று முதல் தொடுவாராம்.
அப்படி ஒரு ப்ராதான்யம் (முக்கியத்துவம்) பெரிய பெருமாள், தன்வந்திரிக்கு கொடுத்துவிட்டார்.

தன்வந்திரியின் பெருமையை காட்ட, ஸ்ரீ ராமானுஜரின் பக்தி பாவத்தை காட்ட பெரிய பெருமாள் செய்த ரசிக்கதக்க லீலை இது.

ஸ்ரீ ராமானுஜர் அவதார காலம் 1017 AD முதல் அடுத்த 120 வருடங்கள் வரை.
2017ADல் ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி ஹிந்துக்களால் கொண்டாடப்பட்டது.

இப்படி பெரிய பெருமாளே தனக்கு மருத்துவன் என்று வைத்து இருக்கும் தன்வந்திரியும் அவரே தான்.




தானே மருத்துவனாகவும் இருக்கிறேன் என்று காட்டும் அற்புதமான லீீலை.


Saturday 25 May 2019

மோக்ஷத்திற்கு மிகவும் எளிதான பாதை எது? சொர்க்கம் எவன் வேண்டுமானாலும் அடையலாம். ஆனால் அது ப்ரயோஜனமில்லை...மோக்ஷமே ஜீவன் அடைய வேண்டிய இலக்கு... ஒரு அலசல்...

ராமபிரான் சரித்திரத்தில் நாம் பல விதமான "ராம பக்தர்களை" பார்க்கிறோம்.



மனிதர்களில் மட்டுமல்லாது, ராக்ஷஸர்களில், மிருங்கங்களில், பறவைகளில், ரிஷிகளில் என்று பல தரப்பட்ட பக்தர்கள், ராமரை 'பரமாத்மா'வாக அறிந்தனர்.

குறிப்பாக "சபரி மற்றும் குகன்" என்ற இரண்டு பக்தர்கள், ஸ்ரீ ராமரை தரிசிக்கும் போது, பழங்களை ஆசையோடு ராமருக்கு சமர்பிக்கும் பாக்கியம் பெற்றனர் என்று பார்க்கிறோம்.

இருவருமே காட்டுவாசிகள்.
ராமரோ அயோத்திக்கு அரசர்.

குலத்தை வைத்து பார்த்தால், இந்த இருவரை விட, உயர்ந்த சூரிய குலத்தில் உதித்தவர் ராமர்.

குணத்திலும் மேன்மையானவர்.
பராக்ரமத்திலும் நிகரற்றவர்.
பார்த்தவர்கள் பார்த்து கொண்டே இருக்க வைக்கும் அழகு கொண்டவர்.
படிப்பிலும் மேன்மையானவர்.


ஆனால் இந்த வேறுபாடுகள் நமக்கு தெரிந்தாலும், ஸ்ரீ ராமருக்கு தெரியவில்லை.

இருவரின் அன்புக்கு கட்டுப்பட்டார்.
குகன் என்ற வேடுவ குல தலைவனை, சக்ரவர்த்தி திருமகன் நண்பனாக பார்த்தார்.
நண்பனை கட்டிக்கொண்டு நலம் விசாரித்தார்.
அதற்கும் மேல், குகனுக்கு சீதையை அறிமுகப்படுத்தும் போது, 'இவள் உன் சகோதரி' என்று உறவு கொண்டாடினார்.
தன் அடியவருக்கு எளியவன் என்று இருந்தார் ஸ்ரீ ராமர்.
குகன் ஸ்ரீ ராமருக்கு, தான் கொண்டு வந்த பழங்களை சமர்பிக்கிறான்.
ஸ்ரீ ராமர் குகனின் அன்புக்கு கட்டுப்பட்டு, அதை தொட்டு ஏற்றுக்கொள்கிறார். சாப்பிடவில்லை.


ஸ்ரீ ராமருக்கு ஒரு கொள்கை இருந்தது.
பிறருக்கு தன்னிடம் உள்ளதை கொடுப்பதற்கு ப்ரியப்படுவாரே ஒழிய, மற்றவர்களிடம் வாங்கும் பழக்கம் இல்லாதவர்.
ஸ்ரீ ராமரின் கைகள் எப்போழுதுமே கொடுப்பதற்காக நீளுமே தவிர, வாங்குவதற்கு நீளாது.

இதை அறிந்த குகன், ஸ்ரீ ராமர் தான் கொடுத்த பழங்களை தொட்டு ஏற்றுக்கொண்டதே தன் பாக்கியம் என்று சந்தோஷப்பட்டார்.
ஸ்ரீ ராமர் கம்பீர புருஷன் என்று குகன் அறிந்தவரும் கூட.

அதே ஸ்ரீ ராமர், காட்டில் வசித்த வயதான மூதாட்டியான "சபரி'யை வனவாச சமயத்தில் சந்தித்தார்.
சபரியின் குருநாதர் 'மதங்க முனி' மறையும் பொழுது, 'ஸ்ரீ ராமர் வரும்வரை ஆஸ்ரமித்தில் வாழ்ந்து, ஸ்ரீ ராமரை தரிசித்த பின், உடலை பூலோகத்திலேயே விட்டு விட்டு, தான் இருக்கும் மேல்லோகத்திற்கு வர சொன்னதாக' ஸ்ரீ ராமரிடம் தன் முழு சரித்திரத்தையும் சொன்னாள்.

ஸ்ரீ ராமருக்கு தான் பறித்த பழங்களை கொடுத்து சாப்பிட சொன்னாள் சபரி பாட்டி.


தன் நண்பன் குகன் ஆசையுடன்  பழங்களை  கொடுக்கும் போது, மரியாதைக்காகவும், குகனின் அன்புக்காகவும் தொட்டு மட்டும் ஏற்றுக்கொண்ட ஸ்ரீ ராமர், 
காட்டுவாசியான சபரி கொடுத்த பழங்களை கை நீட்டி வாங்கி கொண்டார்.
யாரிடமும் வாங்குவதற்கு நீளாத கைகள், உற்ற நண்பன் குகனுக்காகவும் நீளாத கைகள், சபரி என்ற வேடுவச்சிக்காக நீண்டது.
தான் மட்டும் அல்லாமல், தன் கூட இருந்த லக்ஷ்மணரையும் சபரியிடம் பழங்களை வாங்கி சாப்பிட சொன்னார் ஸ்ரீ ராமர்.

இருவருமே வேடுவர்கள், காட்டு வாசிகள்..  சபரியை விட குகனுக்கு ஸ்ரீ ராமர் மேல் அன்பு அதிகம்.
இருந்தும் ஸ்ரீ ராமர் சபரி கொடுத்ததை மட்டும் ஏன் ஏற்றுக்கொண்டார்?... இதில் ஒரு காரணம் இருக்க வேண்டுமே...

பொதுவாகவே இறை பக்தி உள்ளவர்கள் உலகில் அதிகம் காணப்படுகிறார்கள்.
குகனை போன்ற தீவிரமான இறை பக்தி உள்ளவர்களும் உலகில் உண்டு.


கோவிலுக்கு செல்லும் அனைவருமே ஏதோ ஒரு அளவில் இறை பக்தி உள்ளவர்கள் தான்.

பகவான் நாராயணன், தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, அவர்கள் வேண்டும் வரத்தை அளிக்கிறார்.
பிரார்த்தனைகளுக்கு அவர்கள் பக்தியின் நம்பிக்கையை பொறுத்து நடத்தி கொடுக்கிறார்.
திருப்பதியில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள். அவர்கள் பிரார்த்தனை பலிப்பதால் தானே மீண்டும் மீண்டும் வருகிறார்கள்.
குகனை போன்ற பக்தர்கள் இருந்தால், பெருமாள் சிலையாக இருந்தாலும் கனவிலும், மறைமுகமாகவும், நேரிலும் பேசுகிறார். 
மகான்கள் சரத்திரத்தில், பகவான் பேசினார், திருவிலையாடல் செய்தார் என்று பார்க்கிறோம்.
அவரவர் பக்தியை பொறுத்து, பெருமாள் தன்னை வெளிப்படுத்துகிறார்.

குகனை போன்று, சபரிக்கு பக்தி ராமரிடத்தில் இல்லையென்றாலும், அவளின் 'குரு பக்தியும், குருவின் வாக்கின் மீது இருந்த, அசையாத திட நம்பிக்கையுமே', ஸ்ரீ ராமபிரானை அவள் கொடுக்கும் பழத்தை கை நீட்டி வாங்க வைத்தது.
பொதுவாக பெருமாளை அடைவதற்கு, குருவின் துணை இல்லாமல் பக்தி செய்வதை காட்டிலும், 'குரு பரம்பரையை ஆச்ரயித்து பக்தி செய்பவர்களுக்கு' பெருமாள் எதையும் கொடுக்க தயாராகிறார்.
பெருமாள் சுலபமாகிறார். இதற்கு காரணம் உண்டு.

இதையே குகனிடத்தில், சபரியிடத்தில் பெருமாள் பழகிய விதம் காட்டுகிறது.




குகன் பழம் கொடுக்கும் போது, தொட்டு ஏற்று கொண்ட பெருமாள்,
'குருவை ஆச்ரயித்த, குருவின் வாக்கில் துளியும் சந்தேகமற்ற' சபரி, பழம் கொடுக்கும் போது, தன் கொள்கையையும் விட்டு, கை நீட்டி அவள் கொடுக்கும் பழத்தை வாங்கி உண்டார்.
உத்தமமான குருவின் துணை கொண்டு, பெருமாளை தரிசிக்கும் போது,
சுமாரான பக்தனுக்கு கூட, பெருமாள் தடையே இல்லாமல், குருவின் பக்தியை மனதில் வைத்து கொண்டே, சிஷ்யனான பக்தனுக்கும் பேரருள் செய்து விடுகிறார்.

'உத்தமமான குருவை, உத்தமமான குரு பரம்பரையில் உள்ள குருவை நாம் ஆச்ரயிக்கும் போது', நம்மை போன்ற சாதாரண பக்தர்களை பார்க்கும் போதும், பெருமாள் அபரிமிதமான கருணையை வர்ஷித்து விடுகிறார்.

உத்தமமான ஆத்ம குருவை நாம் அடையும் போது, பெருமாளின் கிருபை எளிதாக கிடைக்கிறது.
இதற்கு ப்ரமாணம் சபரியே.

குரு பரம்பரையை ஆச்ரயித்த சபரி மோக்ஷம் அடைந்தாள். 
குரு பரம்பரையை ஆச்ரயித்தவன் வீண் போகவே மாட்டான், அவர்களும் மோக்ஷம் அடைவார்கள் என்று நிரூபணம் செய்யும் விதமாக, ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது...

ஒரு சமயம் ஸ்ரீ ரங்கத்தில், ராமானுஜர் தன் சிஷ்யர்களுக்கு ராமாயண உபன்யாசம் சொல்லிக்கொண்டு இருந்தார்.
சிஷயர்கள் சிரத்தையோடு கேட்டுக்கொண்டு இருந்தனர்.
விபீஷணன் ஸ்ரீ ராமரை சரணாகதி செய்யும் கட்டத்தை சொல்லி கொண்டு இருந்தார், ராமானுஜர்.
ராமானுஜரே (சாக்ஷாத் ஆதிசேஷ அவதாரம், அவரே லக்ஷ்மணன்) ராமாயண உபன்யாசம் செய்தார் என்றால், அந்த உபன்யாசம் எப்படி அற்புதமாக இருந்து இருக்கும்.
கண் கொட்டாமல் பக்தர்கள் கேட்டுக்கொண்டு இருந்தனர்.

விபீஷணன் சரியான காலத்தில் வரவில்லை, 
இவன் ஒரு ராக்ஷஸன், 
ராவணனின் தம்பி, 
நம் படையை வேவு பார்க்க வந்து இருக்கிறான், 
என்று பல தரப்பட்ட விவாதங்கள் வானரர்களுக்குள் நடந்து கொண்டிருந்தது.
ஸ்ரீ ராமானுஜர் தர்ம-அதர்ம விஷயங்கள் பற்றி ஆச்சர்யமாக காலட்சேபம் செய்து கொண்டிருந்தார்.
அனைவரும் ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர் "பிள்ளை உறங்காவில்லி தாசர்" என்பவர், மிகவும் மனம் நொந்து, திடீரென்று உபன்யாசத்துக்கு நடுவில் எழுந்து புறப்பட தயாராகி விட்டார்.

அந்த காலங்களில்,
பகவானை பற்றிய காலட்சேபம் நடக்கும் போது,
பகவானை பற்றிய விஷயங்கள் சொல்லும் போது 
மரியாதை நிமித்தமாகவும், அலட்சியம் செய்ய கூடாது என்பதற்காகவும், உபன்யாசத்தின் நடுவில் எழுந்து போகவே மாட்டார்கள்.

ராமானுஜர், புறப்பட தயாரான பிள்ளை உறங்காவில்லியை தடுத்து நிறுத்தி, "ஏன் புறப்பட்டு விட்டீர்?" என்று கேட்டார்.
பிள்ளை உறங்காவில்லி தாசர் மன வேதனையுடன்,
"இலங்கை ராஜ்யத்தையே விட்டு, நாட்டை விட்டு, 
மக்களை விட்டு, அண்ணனை விட்டு, மனைவியை விட்டு, 
உற்ற உறவினர்களையும் விட்டு, அனைத்தையும் விட்டு விட்டு, 'பெருமாளே கதி எனக்கு' என்று ஸ்ரீ ராமரிடம் சரணாகதி செய்து கொண்டு நிற்கிறார் விபீஷண ஆழ்வான்.
பூரண சரணாகதி செய்த அவர் விஷயமாகவே,
'இவரை சேர்த்து கொள்ளலாமா? சேர்த்து கொள்ள கூடாதா?' 
என்று இத்தனை ஆலோசனை நடக்கும் என்றால்,
அடியேன் ஒன்றையும் விடவில்லையே!!. 
என் மனைவியை விடவில்லை. என் மக்களை விடவில்லை. எதையுமே விடவில்லையே!!. 



இப்படி இருக்க, பெருமாளுக்கு என் விஷயமாக எத்தனை ஆலோசனை இருக்கும்? 
எனக்கு எப்படி பெருமாள் அபயம் கொடுக்க போகிறார்? 
எதையுமே பெருமாளுக்காக தியாகம் செய்யாத எனக்கா வைகுண்டம் தருவார்? என்று தோன்றியதால், மனதில் அதைரியம் உண்டாகி எழுந்து விட்டேன்" என்றார்.

ராமானுஜர், பிள்ளை உறங்காவில்லி தாசரை பார்த்து,
"அது ராமர் கோஷ்டி.. நீர் ராமானுஜன் கோஷ்டி. சஞ்சலப்படாமல் உட்காருங்கள்.
விபீஷணனை சேர்த்து கொள்ளலாமா? வேண்டாமா? என்று ராமர் கோஷ்டியில் தான் ஆலோசனை நடந்தது.
ராமானுஜன் கோஷ்டியில் சேருவதற்கு ஆலோசனையே கிடையாது.
ஆதலால்,
'ராமானுஜரே கதி' என்று கவலைப்படாமல், அதைரியம் அடையாமல் உட்காரும்.

'பெருமாள் சேர்த்து கொள்வார்' என்று என்ன தைரியத்தில் சொல்கிறீர்கள்? என்று கேட்டால், சொல்கிறேன்.

இந்த ராமானுஜன் 'வைகுண்டம்' போக போவது உண்மை தானே?
ராமானுஜன் நரகம் போய்விட போவதில்லையே?
நான் வைகுண்டம் போவது சத்தியம் என்றால், உமக்கும் வைகுண்டம் கிடைக்கப்போவது சத்தியமே. உட்காருங்கள்." என்றார்.


தான் மட்டும் வைகுண்டம் போவேன்!! என்று ராமானுஜர் எப்படி நிச்சயமாக சொன்னார்?
வைகுண்டம் செல்ல அனைத்து தகுதியும் உடையவரல்லவா ஸ்ரீ ராமானுஜர். 
மறுக்க முடியுமா அவர் வாழ்க்கை சரித்திரத்தை.

'நான் ஸ்ரீ மத் ராமாயண காலட்சேபம் செய்கிறேன்.
பரத்துவ ஞானம் உடையவனாக இருக்கிறேன்.
பெருமாளிடம் பக்தி உடையவனாக இருக்கிறேன்.
உலக விஷயங்களில் பற்றில்லாமல் வைராக்கியம் உடையவனாக இருக்கிறேன்.
ஜகத் குருவாக இருக்கிறேன்.
ஸ்ரீ பாஷ்யம் எழுதி இருக்கிறேன்.
சந்யாசியாக இருக்கிறேன்.
பகவத் விஷயங்களே சொல்கிறேன்.
திவ்ய தேசங்கள் அனைத்தும் சென்று பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்து இருக்கிறேன்.
அப்பேற்பட்ட தகுதிகள் மட்டுமில்லாது, நானே ஆதிசேஷன் அவதாரமும் கூட.
அப்பேற்பட்ட ஆச்சார்யனை அடைந்தும் கூடவா, பரமபதம் கிடைக்குமா,? பெருமாள் சேர்த்து கொள்வாரா? என்று உமக்கு சந்தேகம்?!!'
என்று சொல்லிக்கொள்ளவில்லை ராமானுஜர்.


தன்னை பற்றிய பெருமையை பேசவே மாட்டார் ஸ்ரீ ராமானுஜர்.
மாறாக, ஸ்ரீராமானுஜர் பேசலானார்,
"என் ஆச்சாரியன் 'பெரிய நம்பி'களுக்கு வைகுண்டம் உண்டாகில், அடியேனுக்கும் உண்டு.
எனக்கு வைகுண்டம் உண்டாகில், உமக்கும் உண்டு.

'ஆளவந்தாருக்கு' வைகுண்டம் உண்டாகில், அவர் சிஷ்யர் பெரிய நம்பி'களுக்கும் உண்டு.

'மணக்கால் நம்பி'க்கு வைகுண்டம் உண்டாகில், 'ஆளவந்தாருக்கும்' உண்டு.

'உய்யக்கொண்டாருக்கு' வைகுண்டம் உண்டாகில், 'மணக்கால் நம்பி'க்கும் உண்டு.

'நாதமுனி'களுக்கு வைகுண்டம் உண்டாகில், 'உய்யக்கொண்டாருக்கும்' உண்டு.

'விஸ்வத்சேனருக்கு' வைகுண்டம் உண்டாகில் 'நாதமுனி'க்கும் உண்டு.

'பெரிய பிராட்டியான மகாலட்சுமி'க்கு வைகுண்டம் உண்டாகில், 'விஸ்வத்சேனருக்கும்' உண்டு.

அந்த 'பெருமாளுக்கு' வைகுண்டம் உண்டாகில், 'மகாலக்ஷ்மி'க்கும் உண்டு.

இந்த குரு சிஷ்ய பரம்பரை பெருமாள் வரை போகிறது.
இப்பொழுது, இந்த ராமனுஜனை ஆச்ரயித்த ஒருவனுக்கு வைகுண்டம் இல்லையென்றால், இந்த தொடர் சங்கிலி வைகுண்டம் வரை சென்று, பரவாசுதேவனுக்கே வைகுண்டம் இல்லை என்று ஆக்கி விடும்.

ஆக பரவாசுதேவன், மகாலட்சுமி தொடங்கி, நாதமுனிகள் மத்தியில் இருந்து கொண்டு, தொடர்ந்து வரும் குரு பரம்பரையில் இருந்து கொண்டும், பெருமாள் சேர்த்து கொள்வாரா என்று நீர் கவலை பட காரணமில்லையே..



நமக்கு வைகுண்டம் நிச்சயம். கிடைக்க போகும் சொத்து என்பதை உணர்ந்து,
இந்த உலகில் இருக்க போகும் காலம் வரை, நாம் காலத்தை எப்படி கழிக்க வேண்டும்? என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, வைகுண்டம் கிடைக்குமா? என்று கேள்வியே எழ கூடாது.

இருக்கும் காலத்தில், ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெருமாளிடம் பக்தியை வளர்த்து கொள்ள வேண்டும்.
வைராக்யத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.
கர்ம யோகத்தில் வாழ வேண்டும்.
அனுஷ்டானம் தவறாமல் வாழ வேண்டும்.
தியான யோகமும் செய்ய வேண்டும்.
சந்யாசமும் வாங்கி கொள்ள வேண்டும்.
என்று யார் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும்,
'நீர் ஆச்சாரியன் திருவடியே கதி' என்று இருந்தால் போதும்.
நமக்கு மோக்ஷத்திற்கான முயற்சி, சாதனை இதுவே.

யோகம் செய்பவர்கள் செய்யட்டும்.
பக்தி செய்பவர்கள் செய்யட்டும்.
சந்யாசம் வாங்கி கொள்பவர்கள் வாங்கி கொள்ளட்டும்.
குரு பரம்பரையை ஆச்ரயித்த சிஷ்யனுக்கு "ஆச்சாரியன் திருவடியே கதி" என்று இருக்க வேண்டியது தான் மோட்சத்திற்கு சாதனம்.
"ஆச்சாரியன் திருவடியே கதி" என்று இருந்தால் போதும்.
ஆச்சாரியன் நம்மிடத்தில் ஒரு அபிமானம் கொண்டிருந்தாலே நமக்கு போதும்.
நிச்சயம் நம்மை வைகுண்டத்தில் இருந்து தள்ளி விட மாட்டார்கள்.

அப்படிப்பட்ட குருவை ஆச்ரயித்த ஒருவன், வைகுண்டம் தனக்கு நிச்சயம் என்று கவலையே இல்லாமல் இருப்பான்.

பெருமாள் ஆரம்பித்து வரும் இத்தகைய அருமையான பரம்பரையில் ஆச்சாரியனாக ஆக கிடைத்தவன்,
தான் அடைந்த பாக்கியத்தை அறிந்து கொள்ளாமல் இருந்தால், அவனே
துர்பாக்கியசாலி.


'எத்தனை அருமையான சம்பரதாயத்தில் ஆச்சார்யனாக வந்துள்ளோம்' என்று தன் பெருமையை உணர்ந்து கொள்பவர்கள் மகா பாக்கியவான்கள்.

இத்தகைய குரு பரம்பரையில் வந்த குருவை ஆச்ரயித்த ஒருவன் 'ஆச்சரியன் திருவடியே கதி' என்று மட்டும் இருந்தாலேயே, பெருமாள் ஒரு கேள்வியும் கேட்காமல் வைகுண்ட வாசலை திறந்து விட்டு விடுகிறார்.

குருவின் சம்பந்தம் இல்லாமல், பக்தியில் சிறந்த, நண்பனான குகன், பெருமாளுக்கு பழம் சமர்ப்பிக்க, அவன் பக்திக்காக தொட்டு ஏற்று கொண்ட ராமபிரான், 
அதே சமயம், 
குருவை ஆச்ரயித்த சபரி, ஸ்ரீ ராமபிரானுக்கு பழம் கொடுக்க, அவளுடைய குரு பக்திக்கு வசப்பட்டு, யாரிடமும் தன் கைகளை நீட்டி வாங்காத ஸ்ரீராமர், அவள் கொடுத்த பழங்களை வாங்கி சாப்பிட்டார்.

சுயமாக பகவானிடம் பக்தி செய்து, அவர் அணுகிரஹத்தை பெறுவதை விட,
ஸத் பரம்பரையில் வழி வழியாக வரும் குருவை ஆச்ரயித்து, 'ஆசாரியன் திருவடியே கதி' என்று வாழ்ந்து விட்டால், பெருமாள் மரண வேதனை ஏற்படாமல், நம்மையும் வைகுண்டம் அழைத்து சென்று விடுவார்.
குருவே துணை நமக்கு. 
அனைவருக்கும் ஆத்ம குரு அவசியம்  தேவை.
ஸத் பரம்பரையாக ஏற்பட்ட குரு பீடத்தில், ஒரு குருவை ஆச்ரயிக்க வேண்டும். மோக்ஷத்திற்கு ஆசைப்பட வேண்டும்.
நம் பக்தியினால் மட்டுமே பெருமாளை ஆகர்ஷிக்க முடியாது. ஸ்ரீ ராமானுஜர் ஆச்ரயித்தது போன்ற ஒரு குரு பரம்பரையில் நாம் குரு சிஷ்ய சம்பந்தம் பெற வேண்டும்.
அதுவே மோக்ஷத்திற்கு வழி.


மோக்ஷம் அடையாது போனால், மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்க வேண்டியது தான்.
உலகமோ இயற்கையாகவே நம்மை பொறுத்தவரை நிலையற்றது, சுகம் நிரந்தரமாக கொடுக்காதது.
ஸ்ரீ கிருஷ்ணரும் பகவத் கீதையில், 'அநித்யம் அசுகம் லோகம்' என்று சொல்லி எச்சரிக்கிறார்.
'மோக்ஷத்திற்கு முயற்சி செய்' என்கிறார்.

ஸ்ரீ ராமானுஜர், 'மோக்ஷத்திற்கு மிகவும் எளிதான பாதை ஒரு குரு பரம்பரையில் வந்த குருவை பற்றிகொள்வதே' என்று நமக்கு வழி காட்டி விட்டார். 
பெருமாள் நமக்கு வைகுண்ட வாசலை திறந்து விட, குருவை ஆச்ரயிப்போம்.

Hare Rama Hare Krishna - Bhajan

Sandhya vandanam with meaning - morning

Sandhya vandanam with meaning - afternoon



Sandhya vandanam with meaning - evening




Saturday 20 April 2019

மரண வேதனையில் இருந்து தப்பிக்க வழி என்ன? மரண வேதனை எப்படி இருக்கும்? தெரிந்து கொள்வோமே!!

நமது உடலில் உள்ள 'நாடிகள்' சரியான நிலையில் ஓடும் வரை,
நமது 'மனம்' திடமாக இருக்கும் வரை,
நம்முடைய வாழ்க்கை ஒழுங்காக ஓடுகிறது.


ஒழுங்காக ஓடும் வரை, 'அதை வாங்குவேன், இதை சாதிப்பேன், அவனை ஒழிப்பேன்' என்று அலைகிறோம்.
நமக்கு உடம்பு சரியில்லை என்றால், டாக்டரை பார்க்க ஒடுகிறோம்.
அவர் நம் கையை பிடித்து, நாடி ஒழுங்காக ஒடுகிறதா? என்று  பார்க்கிறார்.
நாடி ஒழுங்காக ஓடினால் 'பயமில்லை' என்கிறார்.
நாடி தாறுமாறாக ஓடினால்?
மனம் பேதலித்து போனால்?
நமக்கு உண்மையான பிரச்சனை அங்கு தான் ஆரம்பிக்கிறது.

மரண சமயத்தில், உடம்பில் உள்ள நாடிகளும், மனமும் தாறுமாறாகி விடும். எதற்கும் கட்டுப்படாமல் போகும்.
மனம் தாறுமாறாக போன நிலையில்,
எதுவுமே புரியாத நிலையை ஏற்பட்டு விடும்.

மரண படுக்கையில் கிடக்கும் போது, யார் யாரோ மனதுக்குள், வந்து வந்து நிற்பார்கள்.
இத்தனை காலம் மனதில் எழுந்த தோற்றங்கள், எண்ணங்கள், விஸ்வரூபம் எடுத்து, தாறுமாறாக நம் மனதில் வந்து நிற்கும்.

பலரின் நினைவு ஒரே சமயத்தில் வருவதால், குழப்பத்தை ஏற்படுத்தி, 'யார்? யார்? யார்?' என்று கேட்க வைத்து, கண்கள் அகன்று பேய் முழி முழிக்க வைக்கும்.
மனமும், நாடிகளும் கட்டுப்பாட்டை இழந்து, மரண சமயத்தில் சிலருக்கு, யார் தன்னை பார்க்க வந்து இருக்கிறார்? என்று தெரியும். ஆனால் பேச விடாமல் வாய் இழுத்து விடும்.
'பேரன்' தான் வந்து இருக்கிறான் என்று தெரியும்.
பேசலாம் என்று தோன்றும். ஆனால் வாக்குக்கான நாடி செயல்படாமல் இழுத்து விடும். வாக்கு எழாது.
வாக்கு இழுத்த நிலையில், மனமும் தாறுமாறாக போன நிலையில், பேச முடியாமல் செய்வதறியாது கண்கள் அகன்று முழிக்க வைக்கும்.

சில பேருக்கு, மரண சமயத்தில் யார் வந்து இருக்கிறார்? என்பது கூட தெரியாமல் போய் விடும்.
தன் மகனே வந்தாலும், யார் வந்தார்கள்? என்று புரிந்து கொள்ள முடியாமல், மனது அலை பாயும்.
"யாரு? யாரு?..." என்று கேட்டுக்கொண்டே செய்வதறியாது முழிப்பார்கள்.


இது மரண காலத்தில் அனைவருக்கும் ஏற்பட போகும் அவஸ்தை.
மறுக்க முடியாத உண்மை.

இப்படி ஒரு மரண வேதனையை, ஒவ்வொரு ஜீவனும் கட்டாயம் அனுபவிக்கிறார்கள். அனுபவிக்க போகிறார்கள்.
யோகிகளுக்கும் இந்த மரண வேதனை உண்டு.

மரண சமயத்தில், மனமும் நாடியும் தாறுமாறாக போவதால்,
வாய் இழுத்து விடும்,
கண்களை போட்டு சுழற்றும்,
உடம்பே வீங்கி விடும்,
வயிற் உப்பி விடும்.
மனம் கட்டுப்பாட்டை இழந்ததால், நாடிகள் தாறுமாறாக வேலை செய்ய ஆரம்பிக்க, படுத்த படுக்கையிலேயே மலம் மூத்திரம் தானாகவே வெளியேறி விடுகிறது. 
மரண சமயத்தில் இவன் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறான்? என்று சொந்தங்களையே பேச வைக்கும்.

மரண வாசலில் படுத்து இருக்கும் போது, உடம்பில் ஈ மொய்க்கும். எறும்பு கடிக்கும்.
தன் மேல் கடிக்கும் எறும்பை, தன் கையால் எடுத்து ஏறிய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

ஒரு கல்லை போன்று, கட்டையை போன்று, போட்டது போட்டபடி மரண சமயத்தில் கிடக்கிறான்.
ஆரோக்கியமாக இருந்த காலத்தில், ஒரு கொசு கடித்தால் கூட தாங்க முடியாமல் புரண்டு புரண்டு படுப்பவன், தன் மரண சமயத்தில்,100 தேள் ஒரே சமயத்தில் கடித்தால் ஏற்படும் தாங்க முடியாத வலியை ஒருசேர, உடல் முழுவதும் அனுபவிக்கிறான்.
மரண காலத்தில் என்ன அனுபவம் பெறுகிறோம்? என்று கருட புராணத்திலும் காட்டப்படுகிறது.

இப்படி ஒரு மரண வேதனை நமக்கு முன்னால் இருப்பது தெரிந்தும், அந்த மரண வேதனையில் இருந்து தப்பிக்க வழி தேடிக்கொள்ளாமல் இருப்பானா ஒரு விவேகி? 

மரண வேதனையில் இருந்து தப்பிக்க, இன்றே "நாராயணனிடம் பக்தி செய்" என்று நமக்கு பாசுரங்கள் அருளி இருக்கிறார்கள் ஆழ்வார்கள்.

இப்படிப்பட்ட மரண வேதனையை அனுபவித்து கொண்டு, நம் சொந்தங்கள் 'எப்போ இவன் உயிர் போகுமோ?' என்று கேட்கும் அவமானத்தை கேட்டு கொண்டு, "கொர்...  கொர்..." என்று இழுத்துக்கொண்டு, உயிர் ஊசலாடி கொண்டு இருக்கும்.

இந்த நிலையை பார்த்து விட்டு, நம்முடைய சொந்தங்கள் எல்லோரும் "இன்னும் பத்து நிமிடத்தில் உயிர் போய் விடும்" என்று சொல்லிக்கொண்டு, செய்வதறியாமல் கையை பிசக்கிக்கொண்டு சுற்றி உட்கார்ந்து இருப்பார்கள்.


இப்படி ஒரு நிலை நமக்கும் உண்டே.. மறுக்க முடியுமா?...
தர்மபுத்திரரான யுதிஷ்டிரரிடம், யக்ஷ ராஜன் (யமன்)
"எது ஆச்சர்யம் ?"
என்று கேட்ட பொழுது, தர்மபுத்திரர் அற்புதமான பதிலை சொன்னார் என்று பார்க்கிறோம்.
"இந்த சரீரத்தில் ஒன்பது த்வாரங்கள் இருந்தும், ஆத்மா வெளியே செல்லாமல் இருக்கிறதே!! இதுவே ஆச்சர்யம்."
என்றார்.

இதை கேட்ட யக்ஷன்,
"இதையும் விட ஆச்சர்யம் எது?"
என்று மேலும் கேட்க,
"உலகில், பலர் தினமும் இறந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதை கண் கூடாக பார்த்தும்,
தான் மட்டும் ஏதோ சாகாமல், சாஸ்வதமாக (நிரந்தரமாக) இருந்துகொண்டே இருக்கப்போவதாக நினைத்து வாழ்கிறார்களே!! இவர்களே மிகப் பெரிய ஆச்சர்யம்"
என்று பதில் சொன்னார் என்று பார்க்கிறோம்.

மரண வேதனை நம் அனைவர் முன்னாலும் காத்து கொண்டு நிற்கிறது.
மரண வேதனை தவிர்க்க முடியாதது.
'மோக்ஷம் என்ற வைகுண்டம்' அடையாது போனால், நமக்கு மறுபிறவி உண்டு.
ஒவ்வொரு பிறவியிலும் இந்த மரண வேதனை நம்மை விடாது.
மரண வேதனைக்கு பயந்தாவது, நாராயணனை பற்றி கொள் என்கிறார்கள் ஆழ்வார்கள்.

நாம் செய்த புண்ணியங்களுக்கு, சொர்க்கத்தில் சில நிமிடங்கள் இருந்து விட்டு,
நாம் செய்த பாவங்களுக்கு நரகத்தில் தண்டிக்கப்பட்டு,
மீண்டும் மீண்டும் பூமிக்கு அனுப்பப்பட்டு, பிறந்து கொண்டே இருக்கிறோம்.
கடைசி மூச்சு விடும் சமயத்தில், என்ன நினைவு ஏற்படுகிறதோ? அது சம்பந்தமாகவே அடுத்த பிறவி எடுக்கிறான் என்று வேத சாஸ்திரம் 'மறுபிறவி ஏற்படுவதற்கான காரணத்தை' சொல்கிறது.


பகவத்கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் ,
யம் யம் வாபி ஸ்மரண் பாவம்
த்யஜத் யந்தே கலேவரம் !
தம் தமேவைத்தி கௌந்தேய
சதா தத் பாவ பாவித !! 
(Chapter 8, Sloka 8)
என்று சொல்லும்போது,
"எவனெவன் சாகிற காலத்தில், எதை எதை நினைத்து சாகிறானோ, அது சம்பந்தமாகவே அடுத்த பிறவி எடுத்து விடுகிறான்." என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, வேத வாக்கை ஊர்ஜிதப்படுத்துக்கிறார்.
'கடைசி மூச்சு விடும் சமயத்தில், நாராயணனை ஸ்மரணம் செய்து கொண்டே உயிர் பிரிந்தால் மட்டுமே மோக்ஷம் கிடைக்கும்' என்று வேத சாஸ்திரம் சொல்கிறது.

ராமாயண காலத்தில் சபரியும், சரபங்க ரிஷியும் யோகிகளாக வாழ்ந்தனர்.
தன் யோக வலிமையால் ஸ்ரீ ராமரை தரிசித்துக்கொண்டே, வேறு நினைவுகள் ஏற்படாத வண்ணம் மனதை நிலை நிறுத்தி, ஜீவன் உடலை விட்டு பிரிவதை தைரியமாக எதிர்கொண்டு, மோக்ஷம் அடைந்தார்கள்.
அதே போல, கடைசி நிமிடத்தில், ஸ்ரீ கிருஷ்ணனை தரிசித்து கொண்டே, விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி, கிருஷ்ண த்யானத்தோடு, தைரியமாக உயிரை பிரித்து கொண்டார் பீஷ்மர்.

யோகீஸ்வரர்களான இவர்களால், உயிர் பிரிவதை, ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மரண சமயத்தில் இருந்தது.
பகவானை எதிரில் நிறுத்தி, அவர் த்யானத்துடன் உயிரை பிரித்துக்கொள்ளும் சாமர்த்தியம் கொண்டிருந்தனர்.

யோகிகள் எல்லோரும் மோக்ஷம் அடைவார்களா? என்று கேட்டால், 'இல்லை' என்றும் தெரிகிறது.

யோகீஸ்வரரான பரத முனிக்கே மோக்ஷம் அந்த ஜென்மத்தில் கிடைக்கவில்லையே !!
பரத யோகீஸ்வரருக்கு, அவருடைய மரண சமயத்தில் "ஐயோ நான் வளர்த்த மான் என்ன ஆகுமோ?"
என்று மான் நினைவு ஏற்பட்டு விட்டது.
தன் வாழ்நாள் முழுவதும், தன் யோக பலத்தால், பகவத் தியானமே செய்தார் பரத யோகி.
கடைசி காலத்தில்,
பகவான் நாராயணன் நினைவு அவருக்கே வரவில்லை.


அத்தனை கடும்முயற்சி செய்து யோகீஸ்வரரான பரதர், மரண சமயத்தில் மான் நினைவோடு உயிரை விட்டதால், மறு ஜென்மத்தில் மானாகவே பிறந்து விட்டார்.
யோக பயிற்சிகள் அவரை கைவிட்டு விட்டதே !!
அப்யாச 'யோக'த்தால் செய்த தியானம் அவரை கைவிட்டது.
ஒரு மானிடம் ஏற்பட்ட 'ஆசை' அவரை கவிழ்த்து விட்டதே!!

யோகத்தால் தியான ஸித்தி ஏற்படலாம்.
8 ஸித்திகளும் கை கூடலாம்.
கடைசி நிமிடத்தில்  பகவத் தியானம் ஏற்படுமா? என்பது சந்தேகம் என்று பரத ரிஷி வாழ்க்கையை பார்த்தாலே தெரிகிறதே!!

மோக்ஷம் அடைய, யோக சாதனைகள் ப்ரயோஜனப்படாது என்று தெரிகிறதே.

யோக சாதனைகளை, மோக்ஷம் அடையும் வழியாக நம்ப இயலவில்லை.

கடைசி நிமிடத்தில் யோகிகள் கூட  பகவத் தியானம் செய்ய முடியாமல் போகுமென்றால், சாதாரண ஜனங்களான நம்மை போன்ற மனிதர்கள், யோக சாதனைகளை செய்து, மோக்ஷம் அடைவது என்பது நடக்காத காரியமே.

கடைசி மூச்சு விடும் சமயத்தில் 'ஹரி' நாமம் வராது போனால், மோக்ஷம் கிடைக்காது.
மோக்ஷம் அடையாது போனால், நமக்கு மறுபிறவி நிச்சயம். 
மறுபிறவி இருப்பதாலேயே, மரண வேதனையும் நிச்சயம்.

இன்றைய பொழுதில் நமக்கு உடலும் அனுகூலமாக உள்ளது. மனதும் விகாரப்படாமல் அடங்கி இருக்கிறது.
இந்த நல்ல நிலையில் கூட, நம் வாயில் "ராம ராம ராம..." என்று பகவன் நாமா வரவில்லையே !!
காபி சாப்பிடவும்,
புரளி பேசவும்,
சினிமா பார்க்கவும்
அங்கும் இங்கும் அலைய ஆசை இருக்கிறதே தவிர,
வரப்போகும் மரணத்தை பற்றிய எண்ணமில்லையே !!
மறுபிறவி கூடாது, மோக்ஷம் வேண்டும் என்ற முயற்சி இல்லையே!!




உடலும், மனமும் நன்றாக இருக்கும் இன்றைய நிலையிலேயே "நாராயணா" என்று வாயில் வராத போது,
மரகட்டை போல கிடக்கும் நிலையில், உடலும் மனமும் கட்டுப்பாட்டை இழந்த நிலையில்,
100 தேள் ஒரே சமயத்தில் கொட்டும் வேதனையை தரும் மரண காலத்திலா,
நமக்கு "நாராயணா..." என்று வர போகிறது?

மரண காலத்திற்கு இப்பொழுதே தயார் செய்து கொள்ள வேண்டாமா?
மரண வேதனை ஏற்படாமல் இருக்க வேண்டிய முயற்சி செய்து கொள்ள வேண்டாமா?

யோகிகளும் ஜெயிக்க முடியாத மரண வேதனையை, சாதாரண ஜனங்கள் ஜெயிக்க முடியுமா?
மரண வேதனையை மறந்தால் தானே, பகவத் தியானம் செய்ய முடியும்?
பகவான் நாராயணனோ, கடைசி மூச்சு விடும் சமயத்தில்
'யார் என்னை நினைக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே மோக்ஷம் கொடுக்கிறேன். மற்றவர்களுக்கு அவர்கள் செய்த புண்ணியத்துக்கு ஏற்ற சொர்க்க வாசமோ, ப்ரம்ம லோக வாசமோ, கைலாய வாசமோ, அதல, சுதல, பாதாள லோகங்களில் வாசமோ செய்ய செய்து,
பாவத்துக்கு நரக லோகத்தில் ஏற்ற தண்டனை கொடுக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் பூ உலகில் மரமாகவோ, விலங்காகவோ, பறவையாகவோ, மனிதனாகவோ பிறக்க செய்கிறேன்' என்கிறார் !!

மரண வேதனையை சாதாரண ஜனங்களால் ஜெயிக்கவே முடியாதே!!
ஒரு கொசு கடித்தாலேயே, உடலை துச்சம் என்று நம்மால் நினைக்க முடிவதில்லை.
மரண வேதனையை அனுபவிக்கும் சமயத்தில், உடலை மறந்து, சாதாரண ஜனங்களால் பகவத் தியானம் செய்யவே முடியாதே!!
அவர்களுக்கு மோக்ஷமே கிடையாதா??
இந்த கவலை ஒரு முறை ஸ்ரீ ராமனுஜருக்கே வந்து விட்டது!!
எய்ப்பு என்னை வந்து நலியும் போது
அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப்பள்ளியானே !!
இது பெரியாழ்வார் அருளிய 'திருமொழி'
'ரங்கப்ரபோ... உடலும் மனதும் கட்டுப்பாட்டை இழந்து,
100 தேள் ஒரே சமயத்தில் கொட்டும் மரண வேதனையை அனுபவிக்கும் சமயத்தில்,
அந்த மரண வேதனையை தாங்க முடியாமல் "ஐயோ... அம்மா.." என்று கதறும் என்னிடம் போய், 'என்னை மரண சமயத்தில் தியானம் செய்தாயா?' என்று கேட்காதீர்கள்.
மரண வேதனையை அனுபவிக்கும் நான், அந்த சமயத்தில், உறுதியாக உங்களை நினைக்கவே மாட்டேன்.

மரண காலத்தில் உங்களை நினைக்க துப்பு இல்லாதவன் என்பதை உணர்வதால், குழந்தையாக இருக்கும் போதே, இளமையுடன், ஆரோக்கியத்துடன் இருக்கும் இப்போதே 'ரங்கப்ரபோ.. ரங்கப்ரபோ..." என்று இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப்பள்ளியானே'
என்று திருமொழியில் பெரியாழ்வாரே இந்த பாசுரத்தில், உறுதியாக சொல்கிறார்.
பகவானோ 'மரண சமயத்தில் என் தியானம் வராவிட்டால், மோக்ஷம் கிடையாது' என்று உறுதியாக, தீர்மானமாக சொல்கிறார்.

பெரியாழ்வாரோ 'மரண சமயத்தில் மரண வேதனை எழும்பி, பகவத் தியானம் வரவே வராது' என்று உறுதியாக சொல்கிறார்.

இளமை காலத்திலேயே, உடலும் மனமும் நம் சொல்பேச்சு கேட்கும் சமயத்திலேயே, பகவத் பக்தி செய்து பழகி விட்டோம் என்றால், அந்த பழக்கமே, நம் கடைசி காலத்தில் பகவத் தியானத்தை சுலபத்தில் கொடுக்கும் என்று நம்பினால், ஆழ்வார் அதற்கும் உத்திரவாதம் இல்லை என்கிறார்..
மேலும்,
பெரியாழ்வாரே "அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்" என்று 'கடைசி நிமிடத்தில் பகவத் தியானம் நான் செய்ய மாட்டேன்' என்று வேறு சொல்கிறார்.

எப்படிப்பட்ட எண்ணங்களுடன் ஒருவன் தன் வாழ்நாளை செலவழிக்கிறானோ, அப்படிப்பட்ட எண்ணங்களே மரண சமயத்தில் எழும்பி, அந்த எண்ணங்களே காரணமாக ஆகி மறுபிறவி அமைந்து விடுகிறது.

உலக எண்ணங்களுடனேயே ஒருவன் தன் வாழ்நாளை செலவழித்தால், அது சம்பந்தமான எண்ணங்களே மரண சமயத்தில் எழும்பி, அந்த எண்ணங்களே காரணமாக ஆகி மறுபிறவி அமைந்து விடுகிறது.
எப்படிப்பட்ட எண்ணங்களுடன் வாழ்கிறோமோ, அது சம்பந்தமான எண்ணங்களே மரண சமயத்தில் எழும்புவதால், 'மோக்ஷம் அடைய வேண்டும்' என்று ஆசைப்படுபவர்கள் (முமுக்ஷுக்கள்),
தன் வாழ்நாளை பகவத் தியானம், பகவத் கைகர்யம் செய்து கொண்டே கழிக்கின்ற்னர்.
அது சம்பந்தமான பகவத் எண்ணங்கள் மட்டுமே மரண காலத்திலும் அவர்களுக்கு ஏற்பட்டு, மோக்ஷத்திற்கு வழி செய்யும் என்று புரிந்து இருந்தார் ராமானுஜர்.

யோகிகள் கூட, மரண வேதனையை ஜெயிக்க முடியாமல், மனதின் எண்ணத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர்..
பகவத் தியானமே தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்த பரத யோகீஸ்வரருக்கு, கடைசி நொடியில் பகவத் தியானம் மறந்து போய், எங்கேயோ மனதில் ஒட்டியிருந்த மானின் எண்ணம் ஏற்பட்டு, உயிர் பிரிந்து விட்டது. அந்த ஜென்மத்தில் அவருக்கு மோக்ஷம் கிடைக்கவில்லை. அடுத்த பிறவி அமைந்து மானாகவே பிறந்து விட்டார்.

யோகிகள் கூட மோக்ஷம் கிடைக்காமல் தோற்று போனார்கள் என்பதால், பெரியாழ்வார் 'இளமையிலேயே பகவத் பக்தி செய்து, பகவத் பக்தி செய்து, வாழ்ந்தாலும், மரண சமயத்தில் மரண வேதனையை மீறி, பகவத் சிந்தனை நமக்கு ஏற்படும் என்று சொல்வதற்கில்லை' என்று சொல்ல, ஸ்ரீ ராமானுஜருக்கே ஒரு சமயம் கலக்கம் ஏற்பட்டு விட்டது.

நன்றாக இருக்கும் காலத்திலேயே பகவத் தியானம் இந்த ஜனங்களுக்கு வரவில்லையே !! மரண வேதனையை அனுபவிக்கும் சமயத்திலா சாதாரண ஜனங்களுக்கு 'நாராயணன்' நினைவு வரப்போகிறது?

மரண வேதனை நிச்சயமாக நமக்கும் இருக்கிறது, என்று தெரிந்து கொண்டே,
வீண் பொழுது போக்கி,
நன்றாக இருந்த சமயத்தில்
தூங்கியும், சாப்பிட்டும்,
தூங்கியும், சாப்பிட்டும்,
தூங்கியும் தானே பொழுது போனது...
இப்படி வாழ்க்கை வாழ்ந்தால், கடைசி நிமிடத்தில் எப்படி பகவத் தியானம் ஏற்படும்?


பெரியாழ்வார் சொன்னபடி, இளமை காலத்திலேயே பக்தி செய்தோம் என்றாலும், கடைசி மூச்சு விடும் சமயத்தில் பகவத் தியானம் ஏற்படுவது சுலபம் இல்லை என்கிறாரே?
தாங்க முடியாத மரண வேதனையை மீறி, பகவத் தியானம் ஏற்படுமா?.. சாத்தியமில்லையே..

'பகவத் தியானம் செய்தால் தான் மோக்ஷம் தருவேன்' என்று பெருமாள் சொல்கிறாரே!!

பெரியாழ்வார் 'சொன்ன சொல்லும் பொய் போகாது'.
பெருமாள் 'சொன்ன சொல்லும் பொய் போகாது'.

"இளமை காலத்திலிருந்தே பகவத் கைகர்யம் செய்கிறேன். அதனால் மரண காலத்தில் பகவத் தியானத்தை எதிர்பார்க்காதீர்கள்" என்று ஆழ்வார் சொல்கிறாரே?
"மரண காலத்தில் பகவத் தியானம் செய்தவர்களுக்கு மட்டுமே மோக்ஷம்" என்று பெருமாள் சொல்கிறாரே?

இருவர் வாக்கும் பொய் போகாது என்று புரிந்தாலும், இருவர் சொல்வதும் எதிர் எதிராக இருப்பது போல தெரிய, ஸ்ரீ ராமனுஜருக்கு மனதில் கலக்கம் ஏற்பட்டது.
பெருமாளோ ஸ்ரீ ராமானுஜரிடம் அர்ச்ச மூர்த்தியாகவே (சிலையாகவே) பேசுவார்.
தன் வருத்தத்தை காஞ்சி வரதராஜ பெருமாளிடமே விண்ணப்பித்து கொண்டார் ஸ்ரீராமானுஜர்.
(இன்று காஞ்சிபுரம் போனாலும் ராமனுஜரிடம் பேசிய வரதராஜ பெருமாளை, பேரருளாளனை நாமும் நம் கண்ணால் தரிசித்து ஆனந்த படலாம்)

வராஹ அவதாரம் செய்த போது பூமி தேவியுடன் பேசிய அதே பதிலை, இப்பொழுது காஞ்சி வரதன், ஸ்ரீ ராமனுஜருக்கு ஞாபகப்படுத்தினார்.

காஞ்சி வரதன் என்ற பேரருளாளன், ஸ்ரீ ராமானுஜரை பார்த்து, அர்ச்ச அவதாரமாக இருந்து கொண்டே பேசினார்,
"என்னுடைய அடியாருக்கு, அந்திம காலத்தில் என்னுடைய நினைவு வர தேவையில்லை" என்றார்.
'இது என்ன தேவரீர், இப்படி சொல்லிவீர்டீர்கள்!
சாஸ்திரம் அந்திம காலத்தில் உங்கள் ஸ்மரணம் வேண்டும் என்று சொல்கிறதே?'
என்று ராமானுஜர் கேட்க,
'என்னை சரணம் அடையாத யோகீஸ்வரர்களுக்கு அப்படி ஒரு விதி சொல்லப்பட்டது.
யோக அப்யாசத்தால் சுய முயற்சியால் மனதை நிறுத்தி, மரண காலத்தில் என்னை தியானிக்க சக்தி உள்ளவர்களுக்கு 'என்னை தியானம் செய்தால்' மோக்ஷம் கொடுக்கிறேன் என்றேன்.
ஆனால்,
என் அடியார்களுக்கு இத்தனை கடும் முயற்சிகள் தேவையில்லை.
என் அடியார்கள், அந்திம காலத்தில் 'ஐயோ அம்மா..' என்று மரண வேதனையில் அலறிக்கொண்டு இருந்தாலும் மோக்ஷம் கிடைக்க செய்கிறேன்.

காஷ்டபாசமாக (கல்லும் கட்டையும் போல) மரண வாசலில் என் பக்தன் கிடக்கும் போது, அவனால் என்னை நினைக்க முடியாது என்று அறிவேன்.
மனமும், உடலும் தாறுமாறாக போன நிலையில் அவனால் என்னை தியானிக்க முடியாது என்று அறிவேன்.
என் பக்தன் என்னை அப்பொழுது தியானிக்க முடியாது போனாலும்,
அவனை நான் நினைக்கிறேன்.



அவன் 'கால்' நன்றாக இருக்கும் பொழுது, ஓடி ஓடி வந்து 'என் சன்னதி' முன் நிற்பானே!!
'இன்று ரங்கநாதன் புறப்பாடு,
இன்று திருவெங்கடமுடையான் புறப்பாடு', என்று வந்து வந்து நிற்பானே!!
'கண்' நன்றாக தெரியும் போது, ஓடி ஓடி வந்து 'பெருமாள் சேவை இன்று எப்படி அழகாக இருந்தது!!',  என்று பார்த்து கொண்டு ரசிப்பானே!!

'காது' நன்றாக கேட்கும் பொழுது, ஓடி வந்து ஓடி வந்து 'அங்கு பாகவத உபன்யாசமாம்', 'அங்கு ராமாயண உபன்யாசமாம்' என்று காது குளிர கேட்டு ஆனந்த படுவானே!!
'வாய்' நன்றாக இருக்கும் காலத்தில், 'நாராயணா...கோவிந்தா... ராமா...ரங்கப்ரபோ...வரதா' என்று என் திருநாமத்தை எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பானே!!

'கை' நன்றாக இருந்த காலத்தில், என் அடியார்களுக்கு வேண்டிய தொண்டுகள் அலுக்காமல் சலிக்காமல் செய்வானே!!

ஒரு மனிதன், தனக்கு அன்பு காட்டியவனிடத்தில் நன்றி கெட்டு நடந்து கொள்ள வாய்ப்பு உண்டு.
ஆனால் எனக்கு, ஒரு ஜீவன் ஒரு 'துளசி' சமர்ப்பித்தால் கூட வீண் போகாது.
ஒரு பிடி 'அவல்' கொடுத்தாலும் கூட, குபேரன் ஆக்கி விடுவேன் என் பக்தனை.
ஒன்றுமே கொடுக்கவில்லை, வாயால் 'கோவிந்தா...' என்று ஒரு முறை சொன்னால் கூட அபயம் தருவேன்.
திரௌபதி 'கோவிந்தா' என்று கூப்பிட்ட ஒரு சொல்லுக்கு அவள் குடும்பத்துக்கே அடிமையாக கூட இருந்து காப்பேன் என்று தானே, அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினேன்.

என்னையே சரணம் அடைந்து, என்னையே சுற்றி சுற்றி வந்தவனுக்கு நான் அல்லவோ உண்மையான ஆதம் உறவு.

இன்று மரண வாசலில் என் பக்தன் கிடக்கிறானே... அவனுடைய சரீர பந்துக்கள் எல்லோரும் வந்து போகிறார்களே.
நான் அவனுடைய ஆத்ம பந்துவாயிற்றே.. நாம் சென்று பார்க்க வேண்டாமா..

என் பக்தன் மரண படுக்கையில் கிடக்கும் போது, மரண வேதனையில் தவிக்கும் போது, நான் அவனுக்கு மரண வேதனையை மறைத்து, என் தியானத்தை கொடுப்பேன்.



சரீர பந்துக்கள்
'அப்பா... அப்பா.. என்னை தெரிகிறதா?....',
'அண்ணா.. என்னை தெரிகிறதா?...',
என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது,
ஆத்ம பந்துவான நான், என் அபய ஹஸ்தத்தை காட்டி, பிரசன்னமான முகத்துடன் 'என்னை தெரிகிறதா?...' என்று கேட்க, சரீர பந்துக்கள் அழைப்பது எல்லாம் என் பக்தனுக்கு மறந்தே போய் விடும்.
மரண வேதனையும் மறைந்து விடும்.

நானே வலிய வந்து, என் பக்தனுக்கு, என் நினைவை கொடுப்பேன்.
தரிசனம் பெற்ற என் பக்தனுக்கு வேறு நினைவு ஏற்படாத வண்ணம் செய்து, என் பக்தன் கடைசி மூச்சு விடும் சமயத்தில் 'என்னை நினைத்து விட்டான்' என்று வேத சாஸ்திரத்தையும் மீறாமல் இருக்க செய்து, நானே அவனை மோக்ஷத்திற்கு அழைத்து சென்று விடுவேன்"
என்றார் அர்ச்ச அவதாரமாக இருந்த காஞ்சி வரதன்.
ஸ்ரீ ராமானுஜர் பேரருளாளன் பதிலால், பேரானந்தம் அடைந்தார்.

இளமை காலத்திலேயே பகவத் பக்தி நிறைய செய்து வந்தால், பகவான் நம்மை கண்டு பிரியம் கொள்கிறார்.
'என் பக்தன்' என்று கவனிக்கிறார்.

மரண காலத்தில், மரண வேதனை அனுபவித்தாலும்,
நம்மால் பெருமாளை தியானிக்க முடியாமல் போனாலும்,
நாம் அவரிடம் காட்டிய 'பக்தி என்ற அன்பு'க்கு வசமாகி, நமக்கும் திவ்ய காட்சி கொடுத்து, பகவத் தியானத்தை தானே கொடுத்து, மோக்ஷம் கிடைக்க செய்கிறார்.
பெருமாள் தன் கருணையின் காரணமாக தன் பக்தன், பிறவி கடலை கடக்க செய்கிறார்.

காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு 'பேரருளாளன்' என்ற சொல்வதன் மகத்துவம் ஸ்ரீ ராமனுஜருக்கே புரியக்கூடியது.
உலகம் பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பூமா தேவி, பெருமாளிடம் பிரார்த்தனை செய்தாள்.
பூமியை வராஹ அவதாரம் செய்து தூக்கி, அதன் நிலையில் நிறுத்தினார் பெருமாள்.

அப்பொழுது, நம்மை எல்லாம் பெற்று, தாங்கி கொண்டு இருக்கும் பூமி தாயார், தன் கணவனான, நம் தகப்பனாரான பெருமாளிடம், 'இப்படி நம் குழந்தைகள் (ஜீவன்கள்) பிறந்து இறந்து, பிறந்து இறந்து கொண்டே இருக்கிறார்களே!! இவர்களுக்கும் மோக்ஷம் கிடைக்க வழி சொல்லுங்கள்' என்று கேட்க,
வராஹ அவதாரத்துடன் இருந்த பெருமாள், பிற்காலத்தில் 1037AD சமயத்தில், காஞ்சி வரதனாக ஸ்ரீராமனுஜருக்கு உபதேசித்ததை, அன்று பூமா தேவிக்கு உபதேசம் செய்தார்.

பெற்றோருக்கு, தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டுமே என்ற கவலை எப்பொழுதும் உண்டு.
நாம் அனைவருக்கும் தாயான பூமா தேவியும், பூமா தேவியின் கணவனும், நம் தந்தையுமான நாராயணனும், நம் நலத்திற்காக பேசிக்கொள்ளும் அற்புதமான புராணம் வராஹ புராணம்.


வராஹ புராணம் படிப்பதாலேயே நமக்கு சாத்வீக புத்தி வளரும். சாத்வீக பக்தியும் வளரும். சாத்வீக குணங்களே வளரும். சாத்வீக தெய்வமான நாராயணன் மீதே பிரியம் ஏற்படும். மோக்ஷமும் உண்டாகும்.

நாம் மோக்ஷம் அடைய,
சக்கரவர்த்தியான 'ராமபிரான்' சொல்லாத ஆறுதல் வார்த்தையை,
கீதாச்சாரியன் 'ஸ்ரீ கிருஷ்ணர்' சொல்லாத ஆறுதல் வார்த்தையை,
'வராஹ பெருமாள்' நமக்கு சொல்கிறார்.

ஒவ்வொரு அவதாரமும் ஒரு காரணத்திற்காக பெருமாள் செய்தார்.
வராஹ அவதாரம் செய்து பூமியை மீட்டு, நாம் வாழ இடமும் கொடுத்து, மோக்ஷமும் கிடைக்க வழியை சொல்லி, வைகுண்டம் அழைத்து கொண்டு போவேன்' என்று சொல்லும் அவதாரமாக உள்ளது வராஹ அவதாரம்.

ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த பெருமாள், "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று சொல்லும்போது, "என்னை சரணம் அடை. மோக்ஷமும் கொடுக்கிறேன்." என்கிறார்.

ஸ்ரீ ராமராக அவதாரம் செய்த பெருமாள், "குற்றமே செய்தாலும், என்னை சரணம் அடைந்தவனை காப்பேன்" என்கிறார்.

ராம, கிருஷ்ண அவதாரத்தில் "சரணம் அடை" என்று உத்தரவு போடுகிறார் பகவான்.

ஆனால், பகவான் வராஹ அவதாரம் செய்த போது, 'என்னை சரணம் அடை. மோக்ஷம் கொடுக்கிறேன் என்று மட்டும் சொல்லவில்லை. வைகுண்டதுக்கு நானே அழைத்து கொண்டே போவேன்' என்று ராம, கிருஷ்ண அவதாரத்தில் சொல்லாத ஆறுதல் வார்த்தையை சொல்கிறார்.

நமக்கு மோக்ஷம் கிடைப்பதற்கு, நம்மை சுமக்கும் தாயான பூமி தேவி, நமக்கு தந்தையான நாராயணனிடம் மோக்ஷத்திற்கான வழியை கேட்டாள்.

தாயும் தந்தையும் தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டுமே..என்று பேசிக்கொண்ட அருமையான உரையாடல் வராஹ புராணம்.
"யார் ஒருவன், தன்னுடைய நாடிகள் ஒழுங்காக ஓடிக்கொண்டு இருக்கும் போதும், மனதும் திடமாக இருக்கும் போதும்,
என்னை பஜிக்கிறானோ, அவனின் மரண கால சமயத்தில், அவன் நாடிகள் தாறுமாறாக போன நிலையில், மனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், என்னை நினைக்க முடியாத சமயத்தில், நான் அவனை நினைத்து கொள்வேன்.

சம்சார சூழலில் இருந்து அந்த ஜீவனை மீட்டு, மீண்டும் பிறக்க விடாமல், அந்த ஜீவனை வைகுண்டம் கூட்டி செல்வேன்"
என்று நமக்கு ஆறுதல் வாரத்தையை சொன்னார் வராஹ மூர்த்தியாக இருந்த நாராயணன்.

பூமி தேவி, நாராயணனை பஜிக்கும் ஜீவனான நம்மை கண்டு பேரானந்தம் அடைகிறாள். ஒரு ஜீவன் மோக்ஷத்திற்கு செல்ல போகிறது என்று ஆனந்தம் அடைகிறாள்.

நாராயணனை துவேசிக்கும், வெறுக்கும் ஜீவனை கண்டு வெறுப்பு கொள்கிறாள்.
'இப்படியும் ஒரு பிள்ளையை பெற்றோமே' என்று வெறுப்பு கொள்கிறாள் பூமா தேவி.

ஒரு தாய்க்கு நல்ல குழந்தையும் பிறக்கும், கெட்ட குணங்கள் கொண்ட குழந்தையும் பிறக்கும்.
தாய்க்கு இரண்டு குழந்தைகளிடமும் பாசம் உண்டாகும். கெட்ட குணம் கொண்ட குழந்தையாக இருந்தாலும், விட்டு விட மாட்டாள்.
தன்னை அடித்தால் கூட பொறுத்துக்கொள்வாள் தாய்.
ஆனால்,
தன் கணவனை கேலி பேசும், திட்டும் பிள்ளையை அடியோடு வெறுப்பாள் தாய்.
இது இயற்கையான தாயுள்ளம்.
இந்த குணம் பூமி தாயாருக்கும் உண்டு.


பூமியில் நல்லவர்கள், கெட்டவர்கள் பிறக்கிறார்கள். அனைவரையும் அணைத்து கொண்டு பூமி தேவி இடம் கொடுக்கிறாள். உணவு தருகிறாள்.
தன்னையே மிதித்தாலும், வெட்டினாலும் பொறுமை காக்கிறாள்.
எதையும் பொறுத்து கொள்வதாலேயே பூமிக்கு 'க்ஷமா' என்றும் பெயர் சொல்வதுண்டு.

இப்படிப்பட்ட பூமா தேவியும், நம்மை கண்டு கோபம் கொள்வது ஒரேயொரு சமயத்தில் தான்.

தன் கணவனான நாராயணனை வெறுப்பவர்களை, அடியோடு வெறுக்கிறாள்.

வராஹ அவதாரம் செய்து பூமியை நிலை நிறுத்தினார் பகவான் நாராயணன்.

க்ருத, த்ரேதா யுகம் முடிந்து, துவாபர யுகம் முடியும் சமயத்தில், பூமி பாரம் தாங்க முடியாமல் பூமா தேவி நாராயணனை சரணம் அடைந்தாள்.
எத்தனை கோடி ஜனங்கள் இருந்தாலும் தாங்க கூடிய பூமா தேவி, பாரம் தாங்க முடியாமல் தவித்தாள் என்று சொல்லப்படும் போது, பூமாதேவியே அதற்கு விளக்கம் தருகிறாள்.
துவாபர யுகம் முடியும் சமயத்தில், பூமா தேவியும் மனம் வெறுக்கும் அளவிற்கு, திடீரென்று நாராயணனை துவேசிக்கும் அசுரர்கள் உலகெங்கும் பிறந்து விட்டனர்.
தன் பிள்ளைகள் தான் என்றாலும், கணவனை வெறுக்கும் பிள்ளைகளை வெறுத்தாள் பூமா தேவி.
இவர்கள் அனைவரையும் ஒடுக்கி, தன் வேதனையை போக்க வேண்டும் என்று பிரார்த்திக்க, ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்து, பிறந்த நாள் முதலேயே சம்ஹார மூர்த்தியாக, ஆனால் கோபமே இல்லாத ஆனந்த மூர்த்தியாக இருந்து, உலகில் இருந்த ஒட்டு மொத்த நாராயண விரோதிகளையும் ஒரே இடத்தில் போர் என்று இழுத்து வேரோடு சாய்த்து, பூமா தேவிக்கு நிம்மதி வழங்கினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

ஸ்ரீ கிருஷ்ண, ஸ்ரீ ராம அவதாரங்களில் கூட ராஜஸ (போர்) குணங்கள் வெளிப்படுகிறது.
மோக்ஷம் மட்டுமே குறிக்கோள் என்று நினைப்பவர்கள், ராஜஸ குணம் துளியும் சேர கூடாது என்று நினைப்பார்கள்.
வராஹ அவதாரம் சுத்தமான சாத்வீக புராணம் என்று பெரியோர்கள் அறிகிறார்கள்.

மோக்ஷ்ம் மட்டுமே வாழ்நாள் லட்சியம் என்று நினைப்பவர்கள், சாத்வீக கிரந்தமான வராஹ புராணம் படிப்பதை தான் விரும்புவார்கள். அல்லது சாத்வீக கிரந்தமான பாகவதம் படிக்க விரும்புவார்கள்.

மஹாபாரதம் எழுதிய பின் வ்யாஸருக்கே மனம் சஞ்சலமாக போய் விட்டது. அதற்கு பின், ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தையும், அதற்கு முன் செய்த அவதாரத்தையும் மட்டுமே 'பாகவதம்' என்ற சாத்வீக கிரந்தமாக எழுதி மன சாந்தி அடைந்தார் வியாசர்.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம்.
சொர்க்கம், நரகம் என்று நிறுத்திக்கொண்டு விட்டன உருவாக்கப்பட்ட பொய் மதங்கள்.
சொர்க்கத்துக்கும் மேல், மகர லோகம், ஜன லோகம், தப லோகம், ப்ரம்ம லோகம், பாற்கடல், கைலாயம் என்று சொல்லிக்கொண்டே போகிறது நம் ஹிந்து வேத தர்மம்.
இவை அனைத்தும் அழிய கூடியது என்று சொல்லி, வைகுண்டம் என்ற மோக்ஷத்தை பற்றியும் சொல்கிறது ஹிந்து வேத தர்மம்.
அந்த வைகுண்டநாத பெருமாள்,
மோக்ஷத்திற்கான வழியாக என்ன சொன்னார் என்று சொல்லி தருகிறது..


ஹிந்துவாக பிறப்பதே மகா புண்ணியம்...
போலி மதங்களில் தவறி போனாலும்,
போலி மதங்களில் பிறந்து விட்டாலும், நாராயணா பக்தி அனைவரும் செய்யலாம்.
ஹிந்துவாக வாழ்வதாலேயே நமக்கு பல வாழ்க்கை ரகசியங்கள் தானாக விளங்கி விடும்.
வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ஹிந்து வேத தர்மம்.

Hare Rama Hare Krishna - Bhajan

Sandhya Vandanam - Evening Prayer (with meaning)



Sandhya Vandanam - Afternoon Prayer (with meaning)

Sandhya Vandanam - Morning Prayer (with meaning)