Followers

Search Here...

Showing posts with label குருவின் கருணை. Show all posts
Showing posts with label குருவின் கருணை. Show all posts

Monday 2 October 2017

குரு பக்தி பெரிதா? குருவின் கருணை பெரிதா?....


'பகவானை அடைய, எனக்கு குரு தேவையில்லை, அவர் துணையும் தேவையில்லை, குரு நம்பிக்கையும் இல்லை.
நானே முயற்சி செய்வேன்' 
என்று சொல்பவர்களுக்கு, சாஸ்திரம் பல வழிகளை சொல்கிறது.

கீதையில் இதையே சுருக்கமாக, கர்ம யோகம், ஞான யோகம், சந்யாஸ யோகம் என்று பல வழிகளாக சொல்லி கொடுக்கிறார்.

"நானே முயற்சி செய்வேன்" என்று சொல்பவர்களுக்காக பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு பல வழிகளை தன் திருவாயால் சொல்கிறார்.






செய்யும் காரியங்களை (கர்மத்தை) யோகமாக செய்ய தெரியவில்லையென்றால்,
அது வெறும் கர்மம் (செயல்) என்றாகி விடும்.
கர்மத்துக்கு பாவ, புண்ணியம் உண்டு, அதற்கு பலன் உண்டு.
அதனால், துக்கம், சுகம் உண்டு. மீண்டும் பிறவி உண்டு.
'எதையும் யோகமாக செய்ய தெரியாது' என்றால், தானே முயற்சி செய்வது வீண்.

ராவணன், கர்ணன், போன்றவர்கள் கூட கடும் தவம் செய்து பலம் பெற்றாலும், ஒரு ஆன்மீக குருவை நாடாததால், கர்வம் கொண்டிருந்தனர், அழிந்தனர்.
தானே எந்த செயலையும் யோகமாக செய்யும் திறமை இருந்தால் செய்யுங்கள் என்று யோக தர்மங்களை நமக்கு காட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

"யோகம் செய்து கடவுளை இந்த கலியில் அடைய எனக்கு திறமை இல்லை. 
பகவான் தான் என்னை காப்பாற்ற வேண்டும், அடுத்த பிறவி இல்லாமல் முக்தி கொடுக்க வேண்டும்
என்று உணர்ந்தவர்கள், ஒரு ஆன்மீக குருவை கட்டாயம் நாட வேண்டும்.

அவர் ஆன்மீக முன்னேற்றத்துக்கு என்ன சொல்கிறாரோ, அதன் படி நடக்க வேண்டும்.

இதுவே கலியில் சுலபமான வழியும் கூட.

குருவின் துணையில் யோக ஸித்தி ஏற்பட்டாலும், கர்வம் உண்டாகாது.  
அப்படியே கர்வம் உண்டானாலும், குருவே திருத்தி விடுவார்.

குரு பக்திக்கும், குரு கருணைக்கும் வித்தியாசம் உள்ளது:

ஒரு பெரிய குளத்தில், சுவையான நீர் இருந்தது.
குளத்தில் இறங்க முடியாத படி, கல்லும் முள்ளும் சூழ்ந்து இருந்தது.
குளத்தில் இறங்க நான்கு திசையிலும் அழகாக படித்துறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.



தெற்கு திசையில் உள்ள ஊர்காரர்கள் தெற்கு படித்துறை மூலம் இறங்கி, வேண்டிய அளவு தண்ணீீரை எடுத்துக்கொண்டனர்.
அதே போல, 
ஒவ்வொரு திசையிலும் உள்ள ஊர் மக்கள், அந்தந்த படித்துறைகளை பயன்படுத்தினர்.

இதே போன்று,
மோக்ஷம் (குளத்தில் உள்ள தண்ணீர் போல) அடைய விரும்பும் ஜீவன்களுக்கு, பகவான் "கர்ம யோகம், ஞான யோகம், சந்யாஸ யோகம்.." என்று பல படித்துறைகள் அமைத்து கொடுத்தார்.

கர்ம யோகம் செய்ய சக்தி உள்ளவர்கள் கர்ம யோகம் செய்து அந்த படித்துறை வழியாக மோக்ஷம் என்ற நீரை பருகி வைகுண்டம் சென்றனர். பிறவி கடலை கடந்தனர்.

ஞான யோகம், சந்யாஸ யோகம் செய்ய சக்தி உள்ளவர்கள் அந்தந்த படித்துறை வழியாக மோக்ஷம் என்ற நீரை பருகி வைகுண்டம் சென்றனர். பிறவி கடலை கடந்தனர்.

அப்போது இரண்டு காலும் இல்லாத ஒரு நொண்டி, இந்த குளத்தில் தண்ணீர் இருப்பதை அறிந்து, எப்படியோ கஷ்டப்பட்டு குளம் அருகில் வந்து விட்டான்.

ஆனால்,
படித்துறையில் இறங்கி தண்ணீர் எடுக்க அவனால் முடியவில்லை.




'தண்ணீர் வேண்டும்" என்ற தாகம் இருந்தது.
மேலும், 
படித்துறை வழியாக சென்று தண்ணீர் எடுப்பவர்களையும் பார்த்தான்.

இவர்களிடம் காலில் விழுந்தாவது தண்ணீர் கேட்டு வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.

அப்போது அங்கு  குளத்தில் இறங்க சென்ற ஒரு முதியவரை வணங்கி, 'தனக்கும் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?' என்றான்.

இவன் பார்த்தவுடனேயே நிலைமையை உணர்நத அந்த முதியவர், 'நீயே முயற்சி செய்ய வேண்டியது தானே' என்று கிண்டல் செய்யாமல், இவனுக்காக இரக்கப்பட்டு, தானே இவனுக்காக தானே குளத்தில் இறங்கி, தண்ணீர் எடுத்து, இவன் அமர்ந்து இருக்கும் இடம் வந்து, தண்ணீர் கொடுத்து, தாகத்தை தீர்த்தார்.

இதே போன்று, 
மோக்ஷம் (குளத்தில் உள்ள தண்ணீர் போல) அடைய விரும்பும் ஜீவன், 'தன் முயற்சியினால் மோக்ஷம் அடைய முடியாது' என்று உணர்ந்து,
பகவான் சொன்ன கர்ம யோகம், ஞான யோகம், சந்யாஸ யோகம் என்ற பல படித்துறைகள் வழியாக செல்லும் திறன் படைத்த ஒருவரை தன் ஆன்மீக குருவாக ஏற்று, 
அவரிடம் முக்திக்கு வழி கேட்கும் போது, நம்முடையை நிலையை உணர்ந்து, கேலி செய்யாமல், கருணை கொண்டு, நமக்காக அவர் சிபாரிசு செய்து, மோக்ஷத்திற்கு வழி செய்து கொடுப்பார்.

மோக்ஷத்தில் ஆசை இருந்தும், சக்தி இல்லாதவர்கள் தான் உலகெங்கும் அதிகம் உள்ளோம்.

யோக மார்க்கத்தில் செல்ல துப்பு இருந்தால், இன்று மோக்ஷம் அடைந்து இருப்போமே..

யோக, கர்ம, ஞான என்று எந்த மார்க்கமும் செல்ல சக்தி இல்லாத நமக்கு, மோக்ஷம் அடைய ஆசை ஏற்படும் போது தான், குருவை தேட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். 

குரு பக்தியே இங்கு மிகவும் முக்கியம்
குருவிடம் பக்தி செய்ய வேண்டியது நமக்கு இங்கு தேவைப்படுகிறது. 



அந்த ஊரில் ஒரு வழிப்போக்கன் வந்தான்.
வெயிலின் கொடுமையால், தாகம் எடுத்தது.
தண்ணீர் எங்கு கிடைக்கும்? என்று தெரியாததால், அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான்.

படித்துறையில் இறங்கி தண்ணீர் எடுத்து செல்பவர்களில் ஒரு முதியவர்,
"தண்ணீர் இல்லாமல் யாரும் கஷ்டப்படக்கூடாது!!" என்று நினைத்து, "யாராவது தண்ணீர் கிடைக்குமா என்று அலைகிறார்களா?"
என்று தானே தண்ணீரை எடுத்துக்கொண்டு, ஊர் முழுக்க அலைந்தார்.

இப்படி தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கும் இந்த வழிப்போக்கனை பார்த்து விட்டார் முதியவர்.

இவன் கேட்காமலேயே, இவன் அருகில் வந்து, முக மலர்ச்சியுடன் தன் கையில் உள்ள தண்ணீரை கொடுத்து, தாகம் தீர்த்தார்.
'இவன் தனக்கு நன்றி சொல்வானா?' என்று கூட எதிர்பார்க்காமல், இவன் தாகத்தை தீர்த்த சந்தோஷத்திலேயே சென்று விட்டார்.

இதே போன்று,
மோக்ஷம் (குளத்தில் உள்ள தண்ணீர் போல) அடைய விரும்பும் சில ஜீவன், 
சாஸ்திர அறிவும் இல்லாமல், 
யோக மார்க்கம் என்றால் என்ன? 
கர்ம மார்க்கம் என்றால் என்ன? 
என்று எந்த வழியும் தெரியாமல்,
குருவும் கிடைக்காமல், 
குருவை தானே கண்டு பிடிக்கும் திறனும் இல்லாமல், 
குரு பக்தி என்றால் என்ன? 
என்று தெரிய கூட வாய்ப்பு இல்லாமல்,
மோக்ஷம் அடைய வேண்டும் என்ற தாகம் மட்டும் கொண்டு அலைபவனை, 
ஞானியான ஆன்மீக குரு ஒருவர், தானே கருணையின் காரணமாக, இவனை தேடி  வந்து, அவன் மோக்ஷத்திற்கும் வழி செய்து விடுவார்.

குரு பக்தி கூட தேவையில்லை என்று பெருங்கருணை கொண்டு குரு மோக்ஷ பாதையை சிலருக்கு காட்டி விடுகிறார். 
இதுவே "குருவின் கருணை". 

குரு பக்தி இல்லாதவர்களுக்கும், சில சமயம் ஞான பூரணமான சத்குரு கிடைத்து விடுவதற்கு காரணம் இது தான். 

அபாரமான கருணையின் காரணமாக எந்த தகுதியும் இல்லாதவர்களுக்கும் குரு கிடைத்து விடுவது, குருவின் கருணையால் மட்டுமே.

குருவின் கருணைக்கு பாத்திரமானவன் மஹா பாக்கியவான்.

யோகம் செய்வது கடினம்.
குரு பக்தி செய்வதும் கடினம்.
ஆனால்,
குருவின் கருணைக்கு பாத்திரமாக, 'மோக்ஷம் அடைய வேண்டும்' என்ற தாகமே முக்கியம்.
இந்த தாகம் இருந்தால் கூட போதும். குரு தானே கிடைப்பார். 

குருவின் கருணையால், மோக்ஷமும், வாழும் காலத்தில் சுகமும் உண்டாகும்.

தாகம் இல்லாதவனுக்கு, உண்மையான ஆன்மீக குரு கிடைக்க மாட்டார்.
ஆன்மீக குரு கிடைத்தவர்கள் யாவரும், தாகம் உள்ளவர்களே.

குருவின் கருணை, குரு பக்தியை விட உயர்ந்தது.