Followers

Search Here...

Showing posts with label bhargavi. Show all posts
Showing posts with label bhargavi. Show all posts

Thursday 12 September 2019

ப்ருகு ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... ஸ்ரீவத்ஸ கோத்திர ரிஷி இவர். தெரிந்து கொள்வோமே நம் ரிஷிகள் பெருமையை, பக்தியை..

"ப்ருகு ரிஷியின்" பரம்பரையில் வந்த முக்கியமான சில ரிஷிகளின் பெயர்:

ம்ருகண்டு
மார்க்கண்டேயர்
ஹேம ரிஷி

சௌனகர்
ச்யாவன
ஆப்னவான
ஔர்வ
ஜாமதக்ன்ய (ஜமதக்னி)
பரசுராமர்

இவர்களை போல, மேலும் பல ரிஷிகள், சாதுக்கள், மகாத்மாக்கள் இந்த பரம்பரையில் தோன்றி உள்ளனர்.


ப்ருகு ரிஷியை, "பார்கவ" ரிஷி என்றும் அழைப்பது உண்டு.

இந்த ரிஷிகளின் பெயர்களை ஸ்மரித்து கொண்டே,
'நான் இந்த ரிஷிகளின் கோத்திரத்தில் (வம்சத்தை) பிறந்தவன்'
என்று அபிவாதயே (self intro) சொல்வது ஹிந்துக்களுக்கு வழக்கம்.

இன்று பிராம்மண சமுதாயம் மட்டுமே, தான் எந்த ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் என்று தன்  அடையாளத்தை ஞாபகத்தில் வைத்து இருக்கிறார்கள்.

மற்ற சமுதாய மக்களும், ரிஷி பரம்பரையில் இருந்து வந்தவர்கள் தான்.

ஹிந்துக்கள் அனைவரும் தன் ரிஷி பரம்பரையை அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் எந்த ரிஷியின் பரம்பரையில் இருந்து வந்தோம் என்று தெரிந்து கொள்வது மிக அவசியம். கௌரவமும் கூட.
அந்த ரிஷிகளை பற்றி நன்கு தெரிந்து இருக்கவும் வேண்டும்.

ப்ருகுவின் பரம்பரையில் வந்தவர் 'ச்யவனர்' என்ற ரிஷி.
இவர் ஸித்த மருத்துவ முறைப்படி நமக்கு தயாரித்து தந்தது தான், நாம் இன்று கடையில் வாங்கி வாங்கி விழுங்கும் ஸ்யவன்ப்ராஸ் (Cyavanprash) என்ற லேகியம்.
இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி தரும், ஆரோக்கியம் என்று விழுங்கும் நாம்,
அதே ஸ்யவன ரிஷி, "தாரக மந்திரமான "ராம நாமத்தை" எப்பொழுதும் சொல்பவனுக்கு மோக்ஷம் நிச்சயம்" என்ற வழியையும் சொன்னார் என்பதை மறக்க கூடாது.

"ஸ்யவன்ப்ராஸ் (Cyavanprash) உடம்புக்கு நல்லது" என்று விழுங்கும் நாம்,
'ஆத்மாவின் ஆரோக்கியத்துக்கு ராம நாமத்தையும் சொல்ல வேண்டாமா?'
கொஞ்சம் ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும்.

ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் மூலம் தோன்றிய பரம்பரை என்பதால்,
இந்த பரம்பரையில் உள்ளவர்கள், "பார்கவ கோத்திரத்தை (வம்சத்தை) சேர்ந்தவர்கள்" என்று அறியலாம்.

ஆடையில்லாது, அறிவில்லாது திரிந்த "ஆதாம் ஏவாள்" வழியில் வந்த 'மடையர்கள்' என்று சொல்லிக்கொள்வதில்லை வேத தர்மத்தில் உள்ள ஹிந்துக்கள்.
"நான் முட்டாள் ஆதாம் ஏவாள் பரம்பரையில் வந்தவன்" என்று சொல்லிக்கொள்வதை விட அவமானம் ஏதாவது உண்டா?

"ஞானத்திலும், தவத்திலும், தெய்வீகத்திலும், ஸித்த மருத்துவத்திலும்" தேர்ந்த "ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள்" என்று வேத தர்மத்தில் உள்ள ஹிந்துக்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொள்கின்றனர்.


அறிவாளியாக இருந்த ரிஷிகள் என் முப்பாட்டன் இல்லை, "முட்டாள் ஆதாம், ஏவாள் தான் என் முப்பாட்டன்" என்று சொல்வதே, மதம் மாறுபவனுக்கு அவமானமல்லவா !!.
ப்ருகு என்ற பார்கவ ரிஷி, பிரம்மாவின் மனதில் இருந்து தோன்றியவர்.
பிரம்மாவின் மானஸபுத்ரர்களில் இவரும் ஒருவர்.

'உலக மக்களை ஸ்ருஷ்டி செய்ய ஒன்பது ப்ராஜாபதிகளை நியமித்தார்' ப்ரம்மா. அதில் ப்ருகு ரிஷியும் ஒருவர்.

"தக்ஷ பிரஜாபதி" ப்ருகு ரிஷிக்கு தன் மகள் "க்யாதி"யை மணம் செய்து கொடுத்தார்.
சாஷாத் மஹாலக்ஷ்மி ப்ருகுவுக்கு மகளாக பிறந்தாள்.  
ப்ருகுவுக்கு மகளாக பிறந்ததால், மகாலட்சுமி "பார்கவி" என்ற பெயரில் வளர்ந்தாள்.
விஷ்ணுவாகிய நாராயணன் "பார்கவி"யை மணந்து கொண்டார்.

மஹாலக்ஷ்மி பரமாத்மாவை ஒரு நாழிகை கூட பிரிய இஷடப்படாததால், "தன் மார்பிலேயே (வக்ஷஸ்தலம்) இடம்" கொடுத்து விட்டார்.
ப்ருகு ரிஷி "பரமாத்மாவுக்கு மாமனார்" என்ற பெருமையை பெற்றார்.

இதற்கு பின், தேவர்களுக்கு அசுரர்களுக்கும் ஓயாத சண்டை ஏற்பட, தேவர்கள் தங்களுக்கு உதவி செய்ய பெருமாளை கேட்க, தான் இருக்கும் க்ஷீராப்தியிலேயே (பாற்கடல்) மந்த்ர மலையை போட்டு, வாசுகி என்ற பாம்பை கயிறாக கடைந்து அதில் வரும் அம்ருதத்தை எடுத்து கொள்ளுமாறு சொன்னார்.
அந்த சமயம் மஹாலக்ஷ்மி மீண்டும் பாற்கடலிருந்தே அவதாரம் செய்து, மீண்டும் விஷ்ணுவை மணந்தாள்.
மஹாலக்ஷ்மியை பெற்றதால், பாற்கடலும் "பெருமாளுக்கு சம்பந்தி" என்ற பெருமையை பெற்றது.

'பூரணமான சாத்வீக குணம் நமக்கு இருந்தால் மட்டுமே 'மோக்ஷம்' கொடுக்கப்படும்' என்ற என்று சாஸ்திரம் சொல்கிறது.
அந்த "மோக்ஷத்தை தருபவரும் பூரணமான சாத்வீக தெய்வமாக தானே இருக்க வேண்டும்" என்பதால்,
ப்ரம்ம தேவன் சாத்வீக தெய்வமா?
ருத்ரன் சாத்வீக தெய்வமா?
விஷ்ணு சாத்வீக தெய்வமா?
என்று மும்மூர்த்திகளையே பரிக்ஷை செய்ய கிளம்பிய பொல்லாத ரிஷி இவர்.

ப்ரம்ம லோகம் (சத்ய லோகம்) சென்ற போது,
ப்ரம்ம தேவன் இவரை வரவேற்று பேசாமல், சரஸ்வதியிடம் பேசி கொண்டு இருந்தார்.
ப்ரம்ம தேவன் "ரஜோ குணம்" உடையவராக இருப்பதை பார்த்து, ப்ரம்ம லோகத்தை விட்டு கிளம்பி சிவலோகம் வந்தார்.




"சிவன் கோவிலுக்கு அகாலத்தில் போக கூடாது" என்று வழக்கம் உண்டு. சம்ஹார மூர்த்தி அல்லவா..

ப்ருகு அகாலத்தில் வந்து விட, சிவபெருமான் தன் சூலத்தால் குத்த வந்தார்.
சிவ பெருமான் "தாமஸ குணம்" உடையவராக இருப்பதை பார்த்து, சிவ லோகத்தை விட்டு கிளம்பி க்ஷீராப்தி (பாற்கடல்) வந்தார்.

தன்னை ப்ரம்ம தேவனும், சிவபெருமானும் அலட்சியம் செய்த கோபத்துடனேயே க்ஷீராப்தி (பாற்கடல்) வந்தார்.

ஆதிசேஷன் மேல் யோகநித்திரையில் கண்ணை மூடி கொண்டு படுத்து இருக்கும் விஷ்ணுவை கண்டு பெரும் கோபம் கொண்டார்.
"தன்னை இவரும் வரவேற்காமல் இருக்கிறாரே!!" என்ற கோபத்தில், ஜீவகோடிகளை தாங்கும் விஷ்ணுவின் வக்ஷஸ்தலத்தில் (மார்பில்) ஓங்கி காலால் உதைத்து விட்டார்.

உடனே பெருமாள் எழுந்திருந்து, ப்ருகு ரிஷி தன்னை உதைத்தார் என்று கோபப்படாமல், கருணையுடன், ப்ருகு ரிஷியின் பாதத்தை பிடித்து தடவி கொடுத்து,
"கால் வலிக்கிறதோ?.. என் மார்பு கடினமாயிற்றே!... ஏன் இப்படி உதைத்தீர்?..."
என்று சமாதானமாய் கேட்டார்.
தானும் கோபப்படாமல், 
தன்னை கோபத்துடன் எதிர்ப்பவனையும் சாந்தப்படுத்தும் தன்மையுடைய, "விஷ்ணுவே" சாத்வீக குணம் கொண்ட "சத்வ குண மூர்த்தி" என்று உலகுக்கு காட்டினார்.
இவரே "மோக்ஷம் அளிப்பவர்" என்று காட்டினார்.




ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் பரம்பரையில் வந்தவர்கள், தங்களை "பார்கவ கோத்திரம்" என்று சொல்லிக்கொள்ளாமல்,
"ஸ்ரீவத்ஸ கோத்திரம்" என்று சொல்லி கொள்ள ப்ரியப்படுவதை நாம் கவனிக்கலாம்.

பார்கவ கோத்திரத்துக்கு, "ஸ்ரீவத்ஸ கோத்திரம்" என்று எதனால் பெயர் ஏற்பட்டது?
இதற்கு காரணம் உண்டு...

'ஸ்ரீ' என்ற சொல், மஹாலக்ஷ்மியை குறிக்கும்.
'வத்ஸ' என்ற சொல், குழந்தையை குறிக்கும்.




ஸ்ரீமந் நாராயணனுக்கு எப்படி பிறப்பு இல்லையோ,
அது போல,
மஹாலட்சுமிக்கும் பிறப்பு இல்லை.
எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறாள் 'மஹாலட்சுமி'.

எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் ஸ்ரீமந் நாராயணனே, ஒரு சமயம்
தசரதனுக்கு பிள்ளையாகவும் (ஸ்ரீ ராமர்),
கஷ்யபரின் பிள்ளையாகவும் (வாமன)
அவதாரம் செய்து விடுகிறார்.
அது போல, மஹாலட்சுமியே ஒரு சமயம்,
"ப்ருகு ரிஷிக்கு பெண்ணாக" அவதாரம் செய்து இருக்கிறாள்.
பாற்கடலில் இருந்து தோன்றியும் இருக்கிறாள்.

ஸ்ரீயும் (மஹாலட்சுமியும்), நாராயணனும், ஆதிசேஷனும் நித்யமாக எப்பொழுதும் "வைகுண்டத்தில்" இருந்து கொண்டே இருக்கின்றனர்.

லீலையின் காரணமாக, பாற்கடலில், பூலோகத்தில் என்று பல்வேறு லோகங்களில் அவதாரம் செய்கின்றனர்.
சுதந்திரமானவர்கள், யாருக்கும் அடிமைப்பட்டவர்கள் அல்ல.

ப்ருகு ரிஷியின் பெண்ணாக மஹாலட்சுமி பிறந்ததால், மஹாலட்சுமிக்கு "பார்கவி" என்றும் பெயர் உண்டானது.

யாருக்கு மஹாலக்ஷ்மி (ஸ்ரீ) குழந்தையோ (வத்ஸ), அவரே ஸ்ரீவத்ஸன் என்பதால், ப்ருகு ரிஷிக்கு "ஸ்ரீவத்ஸன்" என்று பெயர் ஏற்பட்டது.

ப்ருகு ரிஷிக்கு "ஸ்ரீவத்ஸன்" என்றும் பெயரும் ஏற்பட்டது.

இதன் காரணமாக, பார்கவ (ப்ருகு) வம்சத்தில் வந்தவர்கள் "நாங்கள் பார்க்கவ கோத்திரம்" என்று சொல்வதை விட,
"எங்கள் வம்சத்தில் மகாலக்ஷ்மியே குழந்தையாக அவதரித்தாள்" 
என்று சொல்லி பெருமைப்படும் விதமாக, ப்ருகுவுக்கும் "ஸ்ரீவத்ஸன்" என்று பெயர் ஏற்பட்டதால்,
"நாங்கள் ஸ்ரீவத்ஸ கோத்திரம்" என்று சொல்வது வழக்கத்தில் ஏற்பட்டது.

ஸ்ரீ என்ற மஹாலக்ஷ்மியே, தனக்கு மகளாக அவதரித்ததால், மஹாலக்ஷ்மியிடம் ப்ருகுவுக்கு வாத்ஸல்ய பக்தி (தன் மகள் என்ற பாசம்) உண்டு.

இந்த கோத்திரத்தில் வந்த ரிஷிகளுக்கு, இந்த கோத்திரத்தில் இன்று வரை இருக்கும் அனைவருக்கும் இந்த உணர்வு எப்பொழுதுமே உண்டு.


ப்ருகு ரிஷி, யார் சாத்வீக தெய்வம்?
என்று மும்மூர்த்திகளை பரீக்ஷை செய்ய சென்று, விஷ்ணுவின் மார்பை காலால் உதைத்ததால், எம்பெருமாள் மார்பில் மரு ஏற்பட்டது.

ப்ருகு விஷ்ணுவுக்கு மாமனார் முறை. 
மஹாலக்ஷ்மியை எப்பொழுதும் தன் மார்பில் வைத்து இருக்கிறார் பெருமாள்.

தன் மார்பில், மகாலட்சுமிக்கு இடம் கொடுத்த பெருமாள், இப்பொழுது பிருகு ரிஷியின் (பித்ரு) சம்பந்தமும் தன் மார்பில் ஏற்பட்டதால் மகிழ்ந்தார்.

மகாலட்சுமியை (ஸ்ரீ) குழந்தையாக (வத்ஸ) பெற்றதால்,
ப்ருகுவுக்கு 'ஸ்ரீவத்ஸன்' என்று பெயர் ஏற்பட்டது.

ப்ருகு ரிஷியால் தன் மார்பில் ஏற்பட்ட மருவுக்கும், "ஸ்ரீவத்ஸ" என்று பெயர் ஏற்படுமாறு செய்தார் எம்பெருமான்.

"ஸ்ரீவத்ஸ" என்று சொல்லும் போது,
ப்ருகு ரிஷிக்கே "ஸ்ரீவத்ஸன்' என்றும் பெயர் இருப்பதால், ப்ருகு ரிஷியை தியானித்த பலன் நமக்கு கிடைக்கும்.
ஸ்ரீ என்ற சொல் மஹாலக்ஷ்மியை குறிப்பதால், தாயாரை தியானித்த பலனும் கிடைக்கும்.
ப்ருகு ரிஷியால் தன் மார்பில் ஏற்பட்ட மருவுக்கும் (லக்ஷ்ம), "ஸ்ரீவத்ஸ" என்று பெயர் ஏற்படுமாறு எம்பெருமான் செய்து கொண்டதால், நாராயணனை தியானித்த பலனும் கிடைக்கும்.

"லக்ஷ்ம" என்றால் அடையாளம்/மரு.
ப்ருகு ரிஷி உதைத்தால் மார்பில் ஏற்பட்ட அடையாளத்தில் (லக்ஷ்ம),
ஸ்ரீ வசிப்பதால், அவளுக்கு "ஸ்ரீலக்ஷ்மி" என்று பெயர்.

வடக்கில் பெருமாளின் மார்பில் இருக்கும் இந்த மருவுக்கு "ப்ருகு சின்னம்" என்று இன்றும் சில கோவில்களில் சொல்கின்றனர்.

பொதுவாக "ப்ருகு சின்னம்" என்று சொல்வதை காட்டிலும், "ஸ்ரீவத்ஸம்" என்று சொல்வதே உசிதமானது.

'மஹாலக்ஷ்மி "ஸ்ரீவத்ஸம்" உள்ள எம்பெருமான மார்பில், வாசம் செய்கிறாள்' என்று சொல்வதே பொருத்தமும், அழகும் கூட.

"மஹாலக்ஷ்மி வசிக்கும் மார்பில் உதைத்து விட்டோமே" என்று வேதனையுற்றார் பிருகு ரிஷி.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்கண்ணங்குடிக்கு வந்தார் பிருகு ரிஷி.
அங்கு லோகநாதனாக பெருமாள், காட்சி கொடுத்தார்.

பிருகு ரிஷி, லோகநாத பெருமாளை பார்த்து,
"ஒரே தேவன். நீரே பரமாத்மா. 
நீரே அனைவரிடத்திலும் அந்தர்யாமியாக இருக்கிறீர்கள். 
அவரவர்கள் குண வித்தியாசத்தால், நீங்கள் பேதம் போல காட்டிக்கொள்கிறீர்கள்.

'ப்ரம்ம தேவனுக்கு' அந்தர்யாமியாக இருந்து கொண்டு உலக சிருஷ்டியை நீங்களே செய்கிறீர்கள்.
'விஷ்ணுவாக' இருந்து கொண்டு உலகை ரக்ஷிக்கிறீர்கள்.
'ருத்ரனாக' இருந்து கொண்டு உலகை சம்ஹாரம் செய்கிறீர்கள்.



'படைப்பு, காத்தல், அழித்தல்' போன்ற செயலை செய்ய, 
மாயையான குணங்களை உங்களிடத்தில் நீங்களே சேர்த்து கொள்கிறீர்கள்.

ரஜோ குணத்தை தன்னிடத்தில் சேர்த்து கொண்டு, 'ப்ரம்ம தேவனாக படைக்கும் தொழிலை செய்கிறீர்கள்'.   
சத்வ குணத்தை தன்னிடத்தில் சேர்த்து கொண்டு, 'விஷ்ணுவாக  காக்கும் தொழிலை செய்கிறீர்கள்'.
தமோ குணத்தை தன்னிடத்தில் சேர்த்து கொண்டு, 'ருத்ரனாக அழிக்கும் தொழிலை செய்கிறீர்கள்'.

குணங்களை கடந்தவர் நீங்கள் என்று அறிகிறேன். மாயையான குணங்களை தேவைக்காக உங்களிடம் சேர்த்து கொள்கிறீர்கள் தவிர, 'குணங்களுக்கு அப்பாற்பட்ட பரமாத்மா நீங்கள்' என்று அறிகிறேன்.

ஒரு சுத்தமான ஸ்படிக கல் (prism) அருகில் ஒரு நீல வர்ண பூவை வைத்தால், அந்த ஸ்படிகம் நீளமாக தோன்றும். 

ஒரு சிவப்பு நிற பூவை வைத்தால், ஸ்படிகம் சிவப்பாக தோன்றும்.

அதுபோல, நீங்கள் நிர்குணமாக இருக்கிறீர்கள். 
எப்பொழுதெல்லாம், ரஜோ குணம், தமோ குணம், சத்வ குணம் தேவைப்படுகிறதோ, அப்பொழுது அந்த ,மாயா குணங்களை தன்னிடம் சேர்த்து கொண்டு, 
ரஜோ குணம் உள்ளவர் போலவும், 
தமோ குணம் உள்ளவர் போலவும், 
சத்வ குணம் உள்ளவர் போலவும் காட்சி கொடுக்கிறீர்கள். 

உண்மையில் நீங்கள் நிர்குண பிரம்மம் என்று அறிகிறேன்.
ஆனால், உங்களுடைய விபூதி ரூபங்களான ப்ரம்ம (ரஜோ குணம்), ருத்ரனை (தமோ குணம்) ஆஸ்ரயித்து, ராவணன், ஹிரண்யகசிபு போன்றவர்கள், உலகையே ஆளும் சக்தி பெற்றார்கள், உலக செல்வம் அவர்கள் காலில் விழுந்தது.
விஷ்ணுவாக சத்வ மூர்த்தியாக இருக்கும் உங்களை ஆஸ்ரயித்து, ஒரு யானை கூட மோக்ஷம் அடைந்து விட்டது.
மோக்ஷத்தை கொடுக்கும் சத்வ மூர்த்தியான உங்களிடம் வாயால் சொல்லக்கூட முடியாத பெரும் அபச்சாரத்தை செய்து விட்டேனே என்று நான் தாபப்படுகிறேன்!!"
என்று வருந்தினார்.

பெருமாள் ப்ருகுவை பார்த்து,
"இது ஒரு பெரிய பாபம் இல்லையே!!  
ஒரு குழந்தை தன் தயார் மடியில் உட்கார்ந்து கொண்டு, தன் தாயையே காலால் உதைக்கும். அதை கண்டு தாயார் குழந்தை அபச்சாரம் செய்கிறது என்று நினைப்பாளா?" என்றார்.

ப்ருகு,
"அது விவேகம் இல்லாத குழந்தை. விவேகம் உடைய நான் இப்படி செய்து இருக்கலாமா?" என்று வருத்தப்பட்டார்.

பெருமாள்,
"கணவன்-மனைவி, சிநேகிதர்கள்  சில சமயம், தவறுதலாக  கால் பட்டு விட்டாலும் அபச்சாரம் என்று நினைப்பார்களா?.  
அதுபோல, உங்களுடைய கால் என் மீது மட்ட போதும் அதை நான் அபச்சாரமாக பார்க்கவில்லை, எனக்கு போக்யமாக தான் ஏற்றுக்கொண்டேன்.
அர்ச்சா விக்ரஹமாக நான் அவதாரம் செய்யும் போது, சில சமயங்கள் பூஜை செய்பவர்களின் 'கால் என் மீது படுகிறது'. 
எனக்கு உபசாரம் செய்ய, பூஜை செய்ய தானே, ஆசையாக வருகிறார்கள் என்று நான் அறிவதால், தவறுதலாக ஏற்படும் அபச்சாரங்களை நான் பார்ப்பதில்லை. நான் செயலை பார்ப்பதில்லை. அதில் உள்ள நோக்கத்தை தான் பார்க்கிறேன்." என்றார்.


ப்ருகு,
"இப்படி பேசுவது உங்களுக்கு அழகு. ஆனால் நான் செய்தது அபச்சாரம் தானே!!" என்றார்.

"யார் சர்வேஸ்வரன்? என்ற சர்ச்சைக்கு, நீங்கள் 'என் பெருமையை உலகிற்கு ஸ்தாபிக்க வேண்டும்' என்ற உங்கள் எண்ணம் தானே இங்கே விஷேசம். 
உங்கள் எண்ணத்தை தான் பார்க்கிறேன். 
"மும்மூர்த்திகளில் சிறந்தவன், சாத்வீகன் என்று என்னை காட்ட வேண்டும்" என்று உமக்கு ஏற்பட்ட ஆசையை தான் நான் பார்க்கிறேன்.
இந்த அன்பை பார்க்கிறேனே தவிர, நீங்கள் செய்தது பாபம் ஆகாது"
என்று சொல்லி சமாதானம் செய்தார் பெருமாள்.

பெருமாள் குறையாக நினைக்கவில்லை என்று சொல்லியும், "பிராட்டி பெருமாளின் வக்ஷஸ்தலத்தில் இருக்கிறாள் என்று கூட உணராமல் உதைத்து விட்டோமே" என்று பெரிதும் தாபப்பட்டார்.

"பெருமாள் தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னாலும், பிராட்டியின் மேல் என் கால் பட்டு இருக்குமே !!"
என்று நினைத்து கொண்டே, இந்த திவ்ய தேசத்தில் கண்ணீர் விட்டு கொண்டு, பகவத் தியானத்திலேயே இருந்து கொண்டு இருந்தார் பிருகு ரிஷி.
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை என்னும் ஊருக்கு வந்து தியானத்தில் இருந்தார்.

இவர் தாபத்தை போக்க மஹாலக்ஷ்மியே 'பிருகு ரிஷிக்கு இங்கு காட்சி கொடுத்தாள்'.
சாஷாத் மஹாலக்ஷ்மி பிருகு ரிஷிக்காக மீண்டும் அவதாரம் செய்து இருக்கிறாள் என்றதும், தேவர்கள் கூடி பார்க்க, ஐராவதம் என்ற யானை தாயாருக்கு அபிஷேகம் செய்ய, இங்கு மகாலட்சுமிக்கு "அபிஷேக வள்ளி" என்று பெயர் ஏற்பட்டது.

ப்ருகு ரிஷி "ஸ்ரீ சூக்தம்" சொல்லி மஹாலக்ஷ்மியை ஸ்தோத்திரம் செய்து கண்ணீர் விட்டார்.

மஹாலக்ஷ்மி தாயார் ப்ருகுவை பார்த்து, "அப்பா.." என்று ஆசையோடு அழைத்து பேசலானாள்.
"நீங்கள் என்னை தாயாராக பார்க்கிறீர்கள்.  நான் உங்களை என் தந்தையாக பார்க்கிறேன். 
தவறுதலாக குழந்தை மேல் தகப்பனாரின் கால் பட்டு விட்டால், அந்த குழந்தைக்கு க்ஷேமம் தானே. எப்பொழுது உங்களுக்கு நான் பெண்ணாக (பார்கவி) பிறந்தேனோ, உங்களை ஏன் தகப்பனாராக ஏற்றுக்கொண்டேனோ, அப்பொழுதே உங்களிடம் எனக்கு தனியான பாசம் உண்டு. உங்கள் கால் என் மேல் பட்டாலும் எனக்கு அது க்ஷேமம் தானே. 

அதனால், பாபம் செய்து விட்டோமோ!! என்ற பயத்தை நீங்கள் நீக்கிவிடுங்கள்." 
என்று தானும் சமாதானம் செய்து, மீண்டும் இந்த தேசத்தில், "கிருஷ்ண மங்கா" (கண்ணமங்கை) என்ற பெயருடன் குழந்தையாகவே அவதரித்து, ப்ருகுவின் தாபத்தை நீக்கினாள்.

மஹாலக்ஷ்மியை "கிருஷ்ண மங்கை"யாக வளர்த்து, கல்யாண வயது வந்ததும் "பெருமாள்" வந்து கரம் பற்ற வேண்டுமே!! என்று பிருகு ரிஷி காத்து இருக்க, பரமாத்மா இங்கு "பக்தவத்சலன்" என்ற பெயருடன் தானே வந்து "கண்ணமங்கை" என்ற மஹாலக்ஷ்மியை மணந்துகொண்டார்.



"லட்சுமி கடாக்ஷம்" கிடைக்க, "தரித்திரம் ஒழிய",
வாழ்நாளில் ஒருமுறையாவது மனிதனாக பிறந்தவன் வந்து பார்க்க வேண்டிய திவ்ய க்ஷேத்ரமாக ஆனது  தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள "திருக்கண்ணமங்கை" என்ற தேசம்.

தாயாருக்கு "கண்ணமங்கை நாயகி" என்று பெயரும் ஏற்பட்டது.

கோவிலில் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதை நாம் பார்த்து இருப்போம்.

சாதாரணமாக நமக்கு திருமணம் நடந்தால்,
"இந்த கோத்திரத்தில் (வம்சம்) பிறந்த மணப்பெண்ணை,
இந்த கோத்திரத்தில் பிறந்த மணமகனுக்கு 'கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன்"
என்று சொல்லி, கன்னிகாதானம் செய்து கொடுப்பது வழக்கம்.

பிறப்பே இல்லாத பெருமாளுக்கும், பிராட்டிக்கும் 'எந்த வம்சத்தை சொல்லி' திருக்கல்யாணம் செய்வது?
அதற்கான பதிலை, "வைகானஸ ரிஷி" நிர்ணயம் செய்ய, வெங்கடேச எம்பெருமானே அதை அங்கீகரித்தார்.

வைகானஸ முறைப்படி,  திருகல்யாண உத்ஸவம் செய்யும் போது,
பெருமாள், கஷ்யபருக்கு புத்திரனாக 'வாமன அவதாரம்' செய்ததால்,
தன்னை 'காஷ்யப' கோத்திரத்தை சேர்ந்தவன் என்றும்,
மஹாலக்ஷ்மி, ப்ருகுவுக்கு புத்ரியாக அவதாரம் செய்ததால், 'பார்கவ' கோத்திரத்தை சேர்ந்தவள் என்றும் சொல்லலாம்
என்று அங்கீகரித்தார் பெருமாள்.

எந்த கோவிலாக இருந்தாலும்,
பெருமாள் "காஷ்யப கோத்திரம்" என்றும்,
பிராட்டி "பார்கவ கோத்திரம்" என்று சொல்லி,
திருக்கல்யாண உத்சவங்கள் இன்று வரை நடந்து வருகிறது.
"பரமாத்மாவுக்கு மாமனார்" என்ற அந்தஸ்தும்,
"மஹாலட்சுமிக்கு தந்தை" என்ற பெருமையும்,
பிரம்மாவின் மானஸ புத்ரன்,
ஒன்பது பிராஜாபதிகளில் ஒருவர் என்ற பதவியும் பெற்ற,
மகத்தான வைஷ்ணவ ரிஷி "ப்ருகு".

ப்ருகு ரிஷியே பிறகு "வருணனுக்கு மகனாக" அவதரித்தார்.
வருண தேவனிடம் "பஞ்சகோச" வித்யையை, ப்ரம்ம வித்யையை கற்றார் என்று தைத்ரிய உபநிஷத் கூறுகிறது.

அந்த சமயத்தில் தான், நாரதர் 'மஹாவிஷ்ணு ஸ்ரீ ராம அவதாரம் செய்ய போகிறார்' என்று தெரிந்து கொண்டார்.
வருணனின் ஆசிரமத்துக்கு வந்து அவர் பிள்ளையாக வளரும் ப்ருகுவே அந்த சரித்திரத்தை எழுத வேண்டும் என்று ஆசைப்பட,
வருண தேவன் பாசத்தால் விட்டு பிரிய மனமில்லாமல் இருப்பதை பார்த்து, சபிப்பது போல சபித்து, வருணனின் பிள்ளையாக வளரும் ப்ருகுவை பூலோகத்தில் பிறக்க செய்து விட்டார்.


பிருகு ரிஷி பூலோகத்தில், தமிழ்நாட்டில் "ருக்ஷன்" என்ற வேடுவனாக வளர்ந்து, பிறகு உலகமே போற்றும் "வால்மீகி" ரிஷியாக ஆகி,
மஹா விஷ்ணு ஸ்ரீ ராமர் அவதாரம் செய்த போதே "ஸ்ரீ ராமாயண" காவியத்தை கவி நடையில் எழுதி உலகிற்கு தந்து விட்டார்.
ப்ருகு ரிஷியால், நமக்கு ராமாயணம் என்ற மகா காவியமும் கிடைத்தது. பெருமாள் நமக்காக ஸ்ரீ ராம அவதாரம் செய்த சரித்திரமும் நமக்கு கிடைத்தது.  வால்மீகி பற்றி தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்.
ஹிந்துக்கள் அனைவரும் ஏதாவது ஒரு முறையில்  ரிஷிகளுக்கு கடமைப்பட்டு உள்ளோம்.

வாழ்க ப்ருகு ரிஷியின் புகழ்.
வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ஹிந்து தர்மம்.