Followers

Search Here...

Saturday 29 February 2020

செல்வம் யாருக்கு நிலைக்கிறது? செல்வத்தை எதற்காக நமக்கு இறைவன் கொடுக்கிறார்? நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்? தெரிந்து கொள்வோமே....

தனபாலன் என்ற ஒருவன், வியாபாரம் செய்து கொண்டு இருந்தான்.

உலகத்தில் உள்ள கருமிகளை (கஞ்சன்) எல்லாம் கணக்கு எடுத்து வரிசைப்படுத்தினால், இவன் "முதலாவதாக" வருவானாம்.
உலக மகா கஞ்சன்..
தன் வியாபாரம் மூலம் நிறைய செல்வம் சேர்த்து வைத்து இருந்தான்.
ஆனால்,
தப்பித்தவறி கூட, சொப்பனத்தில் கூட, தானம் செய்து விட மாட்டான்.

யாருக்காவது, தன் கையால் ஏதாவது கொடுத்து விட்டதாக சொப்பனத்தில் கனவு கண்டால் கூட, மறுநாள் தன் மனைவியை கூப்பிட்டு 
"இன்று உபவாசம்..." என்று சொல்லிவிடுவானாம்.




அவன் மனைவி "இன்று ஏகாதசி இல்லையே!!.. நீங்கள் ஏன் இன்று உபவாசம் இருக்க வேண்டும்?"  என்று கேட்டால்,
"இல்லை.. நேற்று ஒருவர் இங்கு வந்து சாப்பிட்டு போய் விட்டார்... 
அதற்கான கணக்கு சரி செய்ய இன்று உபவாசம் இருக்க வேண்டும்" என்று சொல்வானாம்.

"எனக்கு தெரியாமல் இங்கு யாரும் சாப்பிட முடியாதே!!... நான் தானே இங்கு யார் வந்தாலும் சாப்பாடு போட்டு ஆக வேண்டும்..." என்று கேட்க,

"அடி போடி... நீதானே சாதம் போட்டாய்!!" என்று இவன் சொல்ல,

"நான் சத்தியமாக யாருக்கும் சாதம் போடவில்லையே" என்று இவள் சொல்ல,

"சொப்பனத்தில் சாதம் போட்டாயே!!" 
என்று சொல்லி, மறுநாள் முழுக்க ஜலம் கூட குடிக்காமல் உபவாசம் இருப்பானாம் இந்த தனபாலன்.

இப்படி 'கருத்தாக' குடும்பம் நடத்தி வந்தான் தனபாலன்.

சந்யாசிக்கு கூட வராத ஒரு விரக்தி,
லோபிகளுக்கு (கருமிகளுக்கு) வந்து விடுமாம்.
சந்யாசிகள் கூட, சிற்சில சமயம் "இன்னிக்கு அடை பலகாரம் செய்கிறாயா?" என்று கேட்டு விடுவார்களாம்.
ஆனால்,
இந்த லோபிகள், தப்பித்தவறி  கூட, தன் சொந்த வீட்டில் "டிபன் செய்கிறாயா?" என்று கேட்டுவிட மாட்டார்களாம்.

லோபிகளுக்கு தன் வீட்டில் மட்டும் இந்த விரக்தி இருக்குமாம்.. அடுத்தவன் வீட்டில் மூக்கு பிடிக்க சாப்பிடுவார்களாம்.

தன் வீட்டில், "வெறும் ரசம் சாதம் போதுமே" என்று இருப்பார்களாம்.

"துணியை சலவைகாரனிடம் கொடுக்கிறாயே!!.. காசு கொடுத்து சோப் வாங்குகிறாயே?... 
நமக்கு கை எதற்கு இருக்கிறது?.. கசக்கி கட்டி கொள்ளலாமே!" என்று இந்த கருமி சொல்வானாம்.

இப்படி கையாலேயே கசக்கி கட்டும் இந்த கருமிகளின் வேஷ்டி அழுக்கு சேர்ந்து காவி போல தெரியுமாம்...

சந்நியாசி உடுத்தும் காவி உடையும்,
கருமி உடுத்தும் காவி ஏறிய துணியும்
பார்ப்பதற்கு ஒன்று போல தெரியுமாம்.

ஞானத்தால் சந்யாசிகளுக்கு ஏற்படும் விரக்தி,
கருமிகளுக்கு சுலபமாக ஏற்பட்டு விடுமாம்.

கருமிகள் தாங்கள் சேர்க்கும் 'பொருளை' கொண்டு

  • 'அறமும்' (தர்மம்) செய்வதில்லை...
  • அறம் மீறாத 'இன்பமும்' அனுபவிப்பதில்லை...

ஒரு சமயம் இவன் வியாபாரம் நஷ்டமாகி போக, வியாபாரத்துக்காக வாங்கிய கடனை கொடுக்க மனமில்லாமல், ஏமாற்ற நினைத்தான்.


தன் சொத்தை காப்பாற்ற தன் மனைவி, மக்கள், உறவுக்காரர்கள் பெயரில் சொத்தை பிரித்து கொடுத்து விட்டான்.

கடன் கொடுத்தவர்கள், இவனிடம் சொத்து இல்லாமல் இருக்க, அடித்து நொறுக்கி விட்டார்கள்..

கருமித்தனமாக இவனுடன் வாழ்ந்த இவன் மனைவியும், மக்களும் தன் இஷ்டத்துக்கு செலவு செய்தனர்... இவனை உதாசீனப்படுத்தினர்..

உறவுக்காரர்கள், இந்த கருமியிடம் மீண்டும் முகத்தை காட்டவே பிரியப்படவில்லை.

கருமியாக வாழ்ந்த தனபாலன், ஏழை ஆனான். மதிப்பு இழந்து போனான்.

செல்வம் அனைவருக்குமே கிடைக்கிறது...
ஆனால் நிலைப்பதில்லை...

சிலருக்கு செல்வம் இருக்கும்... சம்பாதித்தவனுக்கு நோய் வந்து விடும் அல்லது உயிர் போய் விடும்..
அல்லது
இவன் இருப்பான்.. கண் எதிரே சம்பாதித்த செல்வங்கள் தொலைந்து விடும்...

இப்படிப்பட்ட 'கருமிகளிடம்' மஹாலக்ஷ்மி நிரந்தரமாக தங்க  விரும்பமாட்டாள்...
கோடி பணம் சேர்த்தாலும், பசித்தால் பணத்தை வாயில் போட்டு கொள்ள முடியுமா?...






பணம் முக்கியம் தான். ஆனால், பணத்தை (பொருள்) நமக்கு பகவான் எதற்காக கிடைக்க செய்கிறார்? 
என்று நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

"தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம்" என்று நான்கு புருஷார்த்தங்கள் சொல்லப்படுகிறது...
இதையே தமிழில்,
"அறம் பொருள் இன்பம் வீடு" என்று சொல்கிறோம்.
வள்ளுவர் "அறம் பொருள் இன்பம்" என்ற 3 புருஷார்த்தங்களை பற்றி மட்டும் சொல்வதற்கே 1330 குறள் எழுதினார்..
'மோக்ஷம் என்ற வீடு, அறம் செய்வதால் கிடைக்கும்' என்று
"அறம் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை"
என்று மோக்ஷத்தை பற்றி சொல்கிறார்.

"அக்ஷரானாம் 'அ'காரோஸ்மி" 

'எழுத்துக்களில் அ என்ற முதல் எழுத்தாகவும் நானே இருக்கிறேன்'
என்று கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்.
ஆதிமூலமான பகவான் ஸ்ரீகிருஷ்ணரை
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்" என்று வணங்கிவிட்டு,
அறம் பொருள் இன்பத்தை பற்றி பாடல் இயற்றுகிறார், வள்ளுவர்.

உலகில் "பொருள்" தானே முக்கியமாக இருக்கிறது!!

பொருளுக்கு(பணத்திற்கு) 'முதல் இடம்' கொடுத்து, 
"பொருள், இன்பம், அறம்" என்று மாற்றி சொல்லி இருக்கலாமே?
மாறாக,
"அறம் பொருள் இன்பம்" என்று பொருளை 'அறத்துக்கும் இன்பத்துக்கும் நடுவில்' ஏன் வைத்து சொன்னார்கள்? 

இதற்கு காரணம் உண்டு.

உனக்கு கிடைக்கும் 'பொருளை' கொண்டு,

  • 'அறம்' செய்! (தர்மம் செய்)..

உனக்கு கிடைக்கும் 'பொருளை' கொண்டு,

  • தர்மத்துக்கு விரோதமில்லாத 'இன்பத்துக்கும்' செலவு செய்து கொள்!

என்று காட்டவே, பொருளை 'அறத்துக்கும் இன்பத்துக்கும் நடுவில்' வைத்தார்கள்.

நம்மிடம் பொருள் இருந்தால், "தர்மத்தை செய்யலாம்!"
நம்மிடம் பொருள் இருந்தால்,
"தர்மத்துக்கு விரோதமில்லாத இன்பத்தையும் அனுபவிக்கலாம்!" 
இதன் காரணத்தால்,
பொருளை 'அறத்துக்கும் இன்பத்துக்கும் நடுவில்' வைத்தார்கள்.

"அறம், பொருள், இன்பம்" என்று இந்த வரிசையில் ஏன் சொன்னார்கள்? என்பதும் இப்போது நமக்கு புரிந்து இருக்கும்.

பொருளை வைத்து 'அறமும் செய்யலாம், இன்பத்தையும் அனுபவிக்கலாம்'

இந்த இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

பொருளை கொண்டு, எதில் அதிகமாக செலவு செய்ய வேண்டும்? 
அறத்துக்கா? இன்பத்துக்கா?




"அறத்திற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்பதற்காக, அறத்தை முதலில் வைத்தார்கள்.

'அறம், பொருள், இன்பம்' என்று சொல்லும் போதே,
உனக்கு கிடைக்கும் பொருளை கொண்டு, முதலில் அறம் (தர்மம்) செய்!
மிச்சப்பட்ட பொருளை கொண்டு, தர்மத்துக்கு விரோதமில்லாத இன்பத்தை அனுபவித்து கொள்! 
என்கிறது..

இப்படி நமக்கு கிடைக்கும் பொருளை கொண்டு ஒரு பங்கையாவது அறம் (தர்மம்) செய்து, மீதியை அறம் மீறாத இன்பத்துக்கு (உணவு, உடை, இடம்...) செலவு செய்தோமானால், மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் என்றுமே நமக்கு நிலைக்கும்..

லக்ஷ்மியின் கணவரான நாராயணனை நம் இஷ்ட தெய்வமாக கொண்டு, திருப்பதி, ஸ்ரீ ரங்கம் மற்றும் பல திவ்ய தேசங்களில் நம்மால் முடிந்த பொருள் சேவை செய்தால், கோவில் திருப்பணிகள் செய்தால், லக்ஷ்மியின் கடாக்ஷம் என்றுமே நமக்கு நிலைக்கும்...

ஹிந்து தர்மத்தில் "ஒவ்வொரு சொல்லிலும் ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு" என்று தெரிகிறது...

ஹிந்துவாக பிறந்ததற்கு, பெருமை அடைய வேண்டும்.
பாரத மண்ணில் பிறந்ததற்கு, பெருமை அடைய வேண்டும். 

போலி மதங்களில் வீழாமல் இருக்க, ஹிந்து தர்மத்தை அறிந்து கொள்ள வேண்டும்... 
அனைவரையும் அறிவு பெற செய்து, ஹிந்தவாக ஆக்க வேண்டும்.


வாழ்க ஹிந்து தர்மம்...

Thursday 27 February 2020

'க்வா க்வா' என்று ஏன் குழந்தை அழுகிறது? நாம் ஏன் சுகத்தையே தேடுகிறோம்? ... இதற்கு காரணம் என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா?

"சுகமாக இருக்க வேண்டும்" என்று தான், நாம் அனைவருமே ஆசைப்படுகிறோம்.
துக்கமாகவே இருக்க வேண்டும்!! என்று நம்மில் ஒருவர் கூட ஆசைப்படுவதில்லையே.... ஏன்?
ஏன் நம் முயற்சிகள் அனைத்தும், சுகத்தை நோக்கியே உள்ளது?
நாம் ஏன் சுகத்தையே தேடுகிறோம்? 




இது போன்ற நுட்பமான கேள்விக்கும் "ஹிந்து தர்மம் பதில் சொல்கிறது".
ஹிந்து தர்மத்தில் சொல்லாத விஷயங்களே கிடையாது..

இங்கிருந்த சில கருத்துக்களை தான், போலி மதங்கள் எடுத்து கொண்டு, "தான் ஏதோ புதிதாக ஏதோ ஒரு கருத்தை கண்டுபிடித்தது போல மக்களை ஏமாற்றுகிறது"!!

ஒரு ஹிந்துவுக்கு, போலி மதங்களை கண்டு ஏமாறுவதை காட்டிலும், முட்டாள் தனம் வேறு இருக்க முடியுமா?...

போலி மதங்களில் வீழாமல், ஹிந்துவாக வாழ ஆசைப்பட்டால் கூட, அது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு உதவி செய்யும்..
மேலும் தொடருங்கள்...

தஸ்ய ப்ரியமேவ சிர:
மோதோ தக்ஷிண பக்ஷ:
ப்ரமோத உத்தர பக்ஷ:
ஆனந்த 'ஆத்மா'
என்று "தைத்ரிய உபநிஷத்" சொல்கிறது.

இங்கு, 'பரமாத்மா எப்படி இருக்கிறார்?' என்று வேதம் சொல்கிறது.

பரமாத்மா, 'ஆனந்த மூர்த்தியாகவே எப்பொழுதும் இருக்கிறார்'. 
பரமாத்மா, 'தலை முதல் பாதம் வரை அன்பு நிறைந்தவராகவே இருக்கிறார்.' 
என்று வேதம் நமக்கு சொல்கிறது.

"Supreme God (Narayana) by his True nature is always in state of happiness and lovable"

ஆனந்த மூர்த்தியான, பரமாத்மாவின் அம்சம் தான் "நாம்" (ஜீவாத்மா).
"நாமும், பரமாத்மா நாராயணனும்" இருவருமே "ஆனந்த மூர்த்தி" தான்.

"நாமும், பரமாத்மாவை போல ஆனந்த மூர்த்தி தான்" என்பதை பல முறை மனதில் பதிய வைத்து கொள்ள வேண்டும்.

பரமாத்மா பரவாசுதேவனின் அம்சம் தான்  தான் "நாம்", என்று வேதம் சொல்கிறது.

"உலகில் பிறந்து இருக்கும்" போது ஜீவாத்மா பரமாத்மாவோடு சேர்ந்து இருந்தாலும் பிரிந்தது போல காட்டிக்கொள்கிறது.
பிரிந்து இருக்கும் நிலையில், "த்வைதமாக" தெரிகிறது என்று வேதம் சொல்கிறது.

"மோக்ஷம்" அடைந்த பின், ஜீவாத்மா பரமாத்மாவோடு கலந்து விடுவதால், இரண்டுமே ஒன்று தான் ("த்வைதம்) என்று வேதம் சொல்கிறது.

இரண்டையும் சொல்வதே "விஷிஸ்டாத்வைதம்"மேலும் அறிந்து கொள்ள  இங்கே படிக்கவும்.   


"கடல்" இருப்பதை நாம் காண்கிறோம்.
அதன் ஓரங்களில் கடல் "அலைகள்" உருவாகி மறைகிறது.

"அலைகள்" போன்று உருவாகி அழிந்து, மீண்டும் உருவாகி கொண்டே இருப்பது "ஜீவாத்மா".
'கடலை' போன்று எப்பொழுதுமே இருப்பவர் "பரமாத்மா"

"அலை" உருவாவதற்கு காரணம் "கடல்".
அது போல,
"ஜீவாத்மா" பிறப்பதற்கு காரணம் "பரமாத்மா".




கடல் இருப்பதற்கு, அலைகள் காரணம் இல்லை.
அலைகள் இல்லாமல்,  கடல் இருக்க முடியும்.
கடல் சுதந்திரமானது.
அலைகள் கடலுக்கு கட்டுப்பட்டது.
அது போல,
பரமாத்மா இருப்பதற்கு, ஜீவாத்மா காரணம் இல்லை.
ஜீவாத்மாக்கள் இல்லாமல், பரமாத்மா இருக்க முடியும்.
பரமாத்மா சுதந்திரமானவர்.
ஜீவாத்மா பரமாத்மாவுக்கு கட்டுப்பட்டது.


அலைகள் ஒடுங்கிய நிலையில், கடலும் அலையும் உண்மையில் ஒன்று தான் (அத்வைதம்).
கடல் அலைகளை உருவாக்கி, த்வைதமாக காட்டுகிறது.
அது போல,
ஜீவாத்மா ஒடுங்கிய நிலையில் (ஞானம் பெற்ற/மோக்ஷ நிலை), பரமாத்மாவும் ஜீவாத்மாவும்  உண்மையில் ஒன்று தான் (அத்வைதம்).
பரமாத்மா, ஜீவாத்மாக்களை உருவாக்கி, த்வைதமாக காட்டுகிறது.

கடல் நினைத்தால் தான், அலைகள் அடங்க முடியும்.
அதுபோல,
பரமாத்மா நினைத்தால் தான், நாம் பிறவா நிலையை பெற முடியும்.

நாம் பக்தி செய்யாதவரை, கடல் போன்ற பரமாத்மா, நம்மை மீண்டும் மீண்டும் அலைகளை போல பிறக்க செய்கிறார். 

பரமாத்மா, தன்  அம்சமாக ஜீவாத்மாக்களை தானே ஸ்ருஷ்டி செய்தார்.

பரமாத்மா, அற்புதமான உலகங்களை படைத்து,
ஜீவாத்மாவுக்கு அதில் பஞ்ச பூதங்களால் உடம்பை கொடுத்து,
தன் உலக ஸ்ருஷ்டியை பார்த்து மயக்க செய்து,
தான் செய்த உலக சிருஷ்டியை அனுபவித்தால் சுகமும், கூடவே துக்கமும் வரும்படியாக செய்து,
தன் அம்சமான இந்த ஜீவாத்மா,
"படைத்தவனிடம் சேர்ந்து விடுவோம்" என்று நினைக்கிறானோ? 
அல்லது
"தான் சுதந்திரன்!"
என்று சொல்லி கொண்டு,
தான் படைத்த, உலகத்தில் உள்ள, உயிர்களை பார்த்து, இடங்களை பார்த்து, செடி கொடிகைகளை பார்த்து மயங்கி, 
பாவ புண்ணியங்கள் செய்து, 
சுகம் துக்கம் அனுபவித்து, 
மீண்டும் மீண்டும் உடல் எடுத்து கொண்டு, 
தான் படைத்த உலகத்திலேயே வாழ போகிறானா? 
என்று பார்த்து கொண்டு இருக்கிறார் பரமாத்மா நாராயணன்.



பரமாத்மா சுதந்திரமானவர். நாம் சுதந்திரமானவர்கள் இல்லை.

நம்மை தனியாக பிரிக்கவும், தன்னிடம் சேர்த்து கொள்ளவும் சக்தி உள்ளவராக! இருக்கிறார் பரமாத்மா நாராயணன். 

பரமாத்மா, சுதந்திரமானவர்.
பரமாத்மா, அவதாரம் செய்ய நினைத்தால் சுதந்திரமாக அவதாரம் செய்கிறார். 
ஹனுமானை, சிரஞ்சீவியாக இரு!! என்று இவர் சொன்னால், சிரஞ்சீவியாகவே இருப்பார்.

"ஜடாயு என்ற பறவைக்கு மோக்ஷம் தருகிறேன்" என்று சொன்னால், ஜடாயு மோக்ஷம் சென்று விடுகிறார்.

'12 வருடம் முன் இறந்த பிள்ளையை மீண்டும் தர வேண்டும்' என்று சாந்தீபினி கேட்க,
யமனிடம் சென்ற, பிள்ளையை (ஜீவாத்மாவை) தானே உடல் கொடுத்து, மீட்டு கொடுத்து விட்டார்.

குழந்தையாக இருந்த போதே, "கம்சன் என்ன செய்வானோ!! என்று உனக்கு பயமாக இருந்தால், என்னை கோகுலத்தில் விடு" என்று பேசுகிறார்.




7 வயதில், சிறுவன் போல இருந்து கொண்டு, தன் சுண்டு விரலில் ஒரு மலையையே தூக்கி விட்டார்.

10 வயதில், சிறுவன் போல இருந்து கொண்டு, தன்னை கொல்ல வந்த குவலயா பீடம் என்ற மதம் பிடித்த யானையை சுழற்றி அடித்து, அதன் வாயில் இருந்த பெரிய தந்தத்தை வேரோடு பிடுங்கி விட்டார்.
யமனே பயந்து நடுங்கும் ராவணன் போன்ற ராக்ஷசனை, மகா பலம் கொண்ட ராக்ஷச கூட்டத்தை, ஒரு கவசம் கூட அணியாமல், குரங்கு படைகளை வைத்து கொண்டு, ராக்ஷச படையை நிர்மூலமாக்கி, ராவணன் 10 தலையையும் கொய்து விட்டு,
அவன் சொத்தும் வேண்டாம், நகரமும் வேண்டாம்! என்று அப்படியே ராவணன் தம்பி விபீஷணனுக்கு கொடுத்து விட்டார்.

சிறுவன் எப்படி மலையை தூக்க முடியும்?
குழந்தை எப்படி பேசும்? 
பிற நாட்டையே கைப்பற்றியும் அந்த நாட்டின் செல்வத்தின் மீது ஆசை இல்லாமல் எப்படி இருக்க முடியும்?
குரங்கை ராணுவத்தில் வைத்து கொண்டு ஜெயிக்க முடியுமா?
இன்னொருவரை எப்படி சிரஞ்சீவியாக்க முடியும்?
பரமாத்மா, மனித அவதாரம் எடுத்தாலும், சுதந்திரமாக தன் இஷ்டத்துக்கு செயல்படும் சக்தி உள்ளவர்.


நம் (ஜீவாத்மா) நிலைமை நமக்கு நன்றாக தெரியும். 
நம் பிறப்பே நம் கையில் இல்லை. 
இதிலேயே நாம் சுதந்திரமானவர்கள் இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.

என்னென்ன முயற்சி செய்தாலும், நிரந்தரமான சுகத்தை அடையவே முடியவில்லை.

என்ன தான் செல்வம் சேர்த்தாலும், முதுமை நோய் வந்து பிறகு மீண்டும் துக்கம் வந்து விடுகிறது.

மரணம் நமக்கு தேவையான நேரத்தில் வர வைக்க முடியாது. 
தற்கொலை செய்து கொண்டாலும், தற்கொலை செய்து கொண்ட பாவத்துக்கு மேலும் நோய் அதிகம் உள்ள குடும்பத்தில் பிறக்க நேரும் என்று ஹிந்து தர்மம் சொல்கிறது.

நாம் (ஜீவாத்மா) மனித அவதாரம் எடுத்தாலும், சுதந்திரமாக வாழ முடியாது. 

நம்மை படைத்தவர்  பரமாத்மா வாசுதேவன்.
அவரின் தயவு இல்லாமல் நிரந்தரமான சுகத்தை பெறவே முடியாது.

இப்படி சுதந்திரம் இல்லாத நாம், பரமாத்மாவிடம் சேர்ந்து இருந்த போது, பரமாத்மாவின் ஆனந்தத்தை நாமும் அனுபவித்து கொண்டே இருந்தோம் என்கிறது வேதம்.

பரமாத்மா லீலை (விளையாட்டு) காரணமாக, நம்மை அலை (ஜீவாத்மா) போன்று பிரித்து காட்டி, உலகங்களை ஸ்ருஷ்டி செய்து, உலகில் பிறக்க செய்து விட்டார்.

இதுநாள் வரை பரமாத்மாவிடமே இருந்த இந்த ஜீவாத்மா, தான் அனுபவித்த ஆனந்தத்தை இழந்ததும், தான் தொலைத்த அந்த அனுபவத்தை மீண்டும் பெறுவதற்கு பெரு முயற்சி செய்கிறது.

இந்த சோகமே, குழந்தை அழுகைக்கு காரணம்.
குழந்தை பிறந்த உடனேயே "க்வா க்வா க்வா..." என்று கதறுகிறது.

'அது பாலுக்கு அழுகிறது' என்று தாய் நினைக்கிறாள்.

"க்வா" என்ற சம்ஸ்க்ரித சொல்லுக்கு  "எங்கே?" என்று அர்த்தம்.
உண்மையில்,
குழந்தை "தான் அனுபவித்த அந்த ஆனந்தம் எங்கே எங்கே எங்கே...?" என்று தான் அழுகிறது என்று காட்டுகிறது நம் வேதம்.

தாய் பால் கொடுக்க, அதில் ஒரு திருப்தி ஏற்பட, சமாதானம் அடைகிறது.
அந்த சுகம் சிறிது நேரத்தில் மறைந்ததும், மீண்டும் துக்கம் ஏற்பட, மீண்டும் அழுகிறது.
இந்த அழுகை மயானம் வரை தொடர்கிறது.

"தான் தொலைத்துவிட்ட ஆனந்தம் எது?" என்று அறிந்து கொள்ள முடியாத ஜீவன்,


தான் தொலைத்துவிட்ட ஆனந்தம் எது? என்று அறிந்து கொள்ள முடியாத ஜீவன்,
இனிப்பு சாப்பிட்டால் கிடைக்கும் சுகத்தை "ஆனந்தம்" என்று நினைக்கிறான்.

மனித உறவுகளால் ஏற்படும் சுகத்தை "ஆனந்தம்" என்று நினைக்கிறான்.
தன் உடலுக்கு கொள்ளும் சுகத்தை "ஆனந்தம்" என்று நினைக்கிறான்.

இப்படி உலகில் கிடைக்கும் சுகங்களை அனுபவித்து "இது தான் தான் விரும்பிய ஆனந்தமோ?!" என்று பார்க்கிறான்.

கிடைக்கும் சுகங்கள் யாவுமே சிறிது காலம் வரை தான் அவனுக்கு ஆனந்தம் தருவதை, அனுபவத்தில் காண்கிறான்.
ஒரு நாள் தான் அனுபவித்த சுகம், பிறகு துக்கமாக மாறுவதை காண்கிறான்.
ஒரு நாள் வெற்றி என்ற சுகத்தை அனுபவித்து, பிறகு அவனே தோல்வியை காண்கிறான்.
ஒரு நாள் மரியாதையுடன் வாழ்ந்து, பிறகு அவனே அவமானத்தை காண்கிறான்.
இளமை என்ற சுகத்தை அனுபவித்து, ஒருநாள் முதுமை என்ற கொடுமையை அனுபவிக்கிறான்.

இப்படி வாழ்நாள் முழுவதும், "தான் தொலைத்த ஆனந்தம் எங்கே?" என்று உலகில் தேடி தேடி, கடைசியில்,
அவன் தொலைத்த ஆனந்தத்தை கண்டுபிடிக்காமலேயே இறந்து விடுகிறான். 
இதனால், மீண்டும் பிறக்கிறான்.
சம்சாரத்திலேயே மீண்டும் மீண்டும் விழுகிறான்.




'பரமாத்மாவிடமிருந்து தான் நாம் வந்துள்ளோம். 
ஆனந்த மூர்த்தியான பரமாத்மாவோடு இருந்த பொழுது, தான் அனுபவித்த ஆனந்தமே நாம் தேடும் உண்மையான ஆனந்தம்!!'
என்று அறிந்து கொள்ளும் ஜீவாத்மா, பரமாத்மாவை பற்றி சிந்திக்க தொடங்குகிறது.

பரமாத்மா நாராயணனை பிடித்து கொள்ளும் ஜீவாத்மாக்கள், தான் ஆசைப்பட்ட ஆனந்தம் எங்கே உள்ளது? என்று அறிந்து கொள்கிறார்கள். அவர்களே மகாத்மாக்கள்!
அவர்களே ஞானிகள்!
அவர்களே சாதுக்கள்!

நாராயணனிடம் பக்தி செய்தவர்கள்,
அவர் அவதாரமான ராம, கிருஷ்ண அவதாரங்களில் பக்தி செய்தவர்கள், நாம் தேடும் உண்மையான ஆனந்தத்தை அடைந்து விட்ட திருப்தியை பெறுகிறார்கள்.
இப்படிப்பட்ட மகான்கள், எப்பொழுதுமே தன் வரையில் திருப்தியாகவும், ஆனந்தமாகவுமே எப்பொழுதும் இருக்கிறார்கள்.

நாமும், ராம பக்தி, கிருஷ்ணா பக்தி செய்வோம்.
நாம் தேடும் உண்மையான ஆனந்தத்தை இதே வாழ்நாளில் பெற்று விடுவோம்.

வாழ்க ஹிந்து தர்மம்...