Followers

Search Here...

Wednesday 11 November 2020

உத்தராயண காலத்தை எதிர்பார்த்து காத்திருந்த, பீஷமரின் ஹ்ருதயம் என்ன? பீஷ்மர் என்ன ஆசைப்பட்டார்?

உத்தராயண காலத்தை எதிர்பார்த்து காத்திருந்தார், பீஷ்மர்.

மற்றவர்களுக்கு இப்படி ஒரு காரணத்தை காட்டினாலும், மனதில் வேறு ஒரு ஆசையுடன் காத்து இருந்தார்.




கோடியில் ஒரு சில மகாத்மாக்களுக்கு தான், 'பிராணன் போகும் சமயத்தில், பகவானின் நினைவு' வரும்.

பிராணன் போகும் சமயத்தில், 'பகவத் தரிசனம் கிடைப்பது' என்பது அதை விட மஹா பாக்கியம்.

ப்ரம்மச்சர்யத்துடன் வாழ்ந்த பீஷ்மருக்கு, போர் சமயத்திலேயே இந்த பாக்கியம் கிடைத்தும், கை நழுவி போனது


'பீஷ்மர் பெண்ணுடன் போர் புரியவதில்லை' என்று கொள்கை கொண்டவர். 

அதே சமயம், 

ஸ்ரீ கிருஷ்ணர், 'பாரத போரில் ஆயுதம் எடுக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்து இருந்தார்.

9 நாட்கள் பாரத போரில், இரு பக்கமும் பேரிழப்பு ஏற்பட்டது. இருந்தாலும், "பாண்டவர்களில் ஒருவர் கூட கொல்லப்படாமல் இருப்பதற்கு காரணம் பீஷ்மரே" என்று குறை கூறினான், துரியோதனன்.


பீஷ்மர் துரியோதனனிடம் 'நாளைய போரில் பாண்டவர்களை கொல்வேன், என் போர் தடைப்படாமல் இருக்குமானால்!" என்று சபதம் செய்தார்.


அதே சமயம், 'பாண்டவர்கள் ஐவரை காப்பேன்' என்று வாக்கு கொடுத்து இருந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.


ஸ்ரீகிருஷ்ணர் 'பாண்டவர்களை காப்பாற்ற "சிகண்டியை" முன் நிறுத்தி பீஷ்மரின் போரை பங்கம் செய்வேன்' என்றார்.


இப்படி சாமர்த்தியம் செய்யும் ஸ்ரீ கிருஷ்ணர், 'எப்படி இருந்தாலும் 10வது நாள் போரில் தன்னை வீழ்த்தி விடுவார்' என்று புரிந்து கொண்டார் பீஷ்மர்.


ஆனால், 'சிகண்டி போன்றவர்கள் கையால் தான் வீழ்த்தப்பட கூடாது' என்று நினைத்தார். 

'நாளை வீழ போவது நிச்சயம் என்கிற போது, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் கையால் சாக வேண்டும். அவர் நினைவோடு, அவர் தரிசனத்தோடு உயிர் விட்டு விட வேண்டும்' என்று நினைத்து கொண்டார்.


உடனே பீஷ்மர், "கிருஷ்ணனை நாளைய போரில் ஆயுதம் எடுக்க வைப்பேன்" என்று சபதம் செய்தார்.


10வது நாள் போரில், பீஷ்மர் கிருஷ்ணனை ஆயுதம் எடுக்க வைத்து உயிரை விடுவதற்கு, படு பயங்கரமாக போர் புரிந்தார்.

10வது நாள் போரில், பாண்டவர்கள் பக்கம் பெரும் நாசம் ஏற்பட்டது..

ஆயிரக்கணக்கான போர் வீரர்கள், யானை படை, குதிரை படை நாசமானது.


பாண்டவர்கள் பக்கம் நடக்கும் பெரு நாசத்தை கண்டு, ஸ்ரீ கிருஷ்ணர் தன் ரதத்தை பீஷ்மரை நோக்கி செலுத்தினார்.

உத்வேகத்துடன் இருந்த பீஷ்மரை எதிர்க்க முடியாமல், அர்ஜுனனே திணறி போனான். 

சாரதியாக அமர்ந்து இருந்த கிருஷ்ணரை நோக்கி, சரமாரியாக அம்புகளை செலுத்தினார் பீஷ்மர்.

'அன்று பீஷ்மர் செய்த போரில், பார்த்தசாரதியின் மேல் பட்ட காயங்களை தான், திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி காட்டுகிறாரோ!' என்பது போல, அவர் திருமேனி உள்ளது.


அம்புகள் பட்டு ஸ்ரீ கிருஷ்ணர் திருமேனியில் ரத்தம் வழிய, அர்ஜுனன் 'ரதத்தை திருப்பு' என்று சொல்ல, 

'பீஷ்மரை இனியும் உயிரோடு விட்டால் பேராபத்து' என்று கடும் கோபம் கொண்டு, தன் சுருள் சுருளான முடிந்த கேசம் அவிழ்ந்தது கூட கவனிக்காமல், 'இனியும் பொறுக்க முடியாது' என்ற கடும் கோபத்துடன், சத்தியமே ஸ்வரூபமான, சத்தியத்தை மீறாத பரமாத்மா, தன் பக்தனாக இருக்கும் பீஷ்மர் செய்த சபதத்தை காக்க, தன் சத்தியத்தை மீறினார்.


தன் மேல்-அங்கவஸ்திரத்தை தான் சாரதியாக அமர்ந்து இருந்த இடத்தில் போட்டு விட்டு, நீல ஜோதியாக, கையில் சக்கரத்தை ஏந்தி, தேரிலிருந்து குதித்து பீஷ்மரை நோக்கி கடும் கோபத்துடன் ஓடி வந்தார். 

பீஷ்மரான தன் சபதத்தை காக்க, தன் சபதத்தை விட்டு கொடுத்த ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்தார். 

"நீல ஜோதியாக தன்னை நோக்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணரின் கையால் இன்று உயிரை விடும் பாக்கியம் கிடைத்ததே!" 

என்று பேரானந்தம் அடைந்த பீஷ்மர், தன் ஆயுதங்களை கீழே வைத்து, தன்னை ஸ்ரீ கிருஷ்ணர் வீழ்த்தட்டும் என்று நின்றார்.


அதற்குள், அர்ஜுனன் ஓடி வந்து ஸ்ரீ கிருஷ்ணரின் காலை பிடித்து கொண்டு, "கிருஷ்ணா! நீ இப்படி செய்ய கூடாது. ஆயுதம் எந்த மாட்டேன் என்று சபதம் செய்து இருக்கிறாய். பீஷ்ம தாத்தாவை கொல்லாதே! வா.. என்னுடன்.  தேரில் ஏறு.. நானே போர் செய்கிறேன்

என்று கட்டி பிடித்து இழுத்துக்கொண்டு தேரில் போய் அமர செய்தான்.


'தன் சத்தியத்தை காக்க, சத்ய ஸ்வரூபியான பரமாத்மா, தன் சத்தியத்தை கூட விட்டு விட துணிந்தாரே!!' என்று கண்ணீர் விட்டார் பீஷ்மர்.


அதே சமயம், "உயிர் போகும் சமயத்தில் பகவத் தரிசனம் என்ற வாய்ப்பை இழந்தோமே!" என்று ஒரு பக்கம் வருந்தினார்.

அன்றே, சிகண்டியை முன் நிறுத்தி, பீஷ்மரின் போரை பங்கம் செய்ய, அர்ஜுனன் பீஷ்மரை கீழே சாய்த்தான்.

அம்பு படுக்கையில் வீழ்ந்து கிடந்த பீஷ்மர், உயிரை விட சமயம் எதிர்பார்த்து காத்து இருந்தார்.

'ஸ்ரீ கிருஷ்ணர் கையால் வீழ்த்தப்பட்டு, கடைசி மூச்சு விடும் பாக்கியம் கிடைக்காமல் போனதே!! 

விரும்பிய போது மரணம் என்ற வரம் கொண்ட எனக்கு, மீண்டும் ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் கிடைக்குமா?

என்று எதிர்பார்த்து காத்து இருந்தார்.


18 நாள் போர் முடிந்து, பங்காளிகள் அனைவருக்கும் தர்மபுத்ரரரே காரியங்கள் செய்து முடித்தார்.


தர்மபுத்ரர் பெரும் சோகத்தில் மூழ்கி, "ஐயோ! இந்த உடலால் மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்க, இப்படி லக்ஷகணக்கான வீரர்களை கொல்ல காரணமாகி விட்டேனே! இந்த பாவத்துக்கு மீள முடியாத நரகம் தானே எனக்கு கிடைக்கும்" என்று புலம்ப ஆரம்பித்தார்.


'ராஜ தர்மம், ஸ்திரீ தர்மம், வைஸ்ய தர்மம், ப்ராம்மண தர்மம் என்று பல தர்மங்களை பீஷம தாத்தாவிடம் கேட்டு தெரிந்து வேண்டும்' என்று தர்மபுத்ரர் கிளம்ப, அவர் கூடவே ரிஷிகள், சகோதரர்கள் கிளம்ப, அர்ஜுனன் தேரில் தானும் ஏறி அமர்ந்து கொண்டார் கிருஷ்ண பரமாத்மா.

பீஷ்மர், தர்மபுத்ரருக்கு பல வித தர்மங்களை உபதேசித்தார்.

கூடவே வந்து இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்தவுடனேயே, இந்த பக்வத் தரிசனத்தை பார்த்துக்கொண்டே உயிர் விட தயாராகி விட்டார்.




சஹஸ்ர நாமத்தால் ஸ்ரீ கிருஷ்ணரை ஸ்தோத்திரம் செய்து, 'இனியும் கிடைத்த வாய்ப்பை விட கூடாது', என்று முடிவு செய்து, கிருஷ்ண பரமாத்மாவை தரிசித்து கொண்டே உடலை விட்டு பிரிந்தார் பீஷ்மர்.


உத்தராயணத்துக்காக காத்து இருந்தார் பீஷ்மர் என்பது போல வெளி உலகுக்கு காட்டினாலும், 

பீஷ்மருக்கு "தன் பிராணன் விடும் சமயத்தில் கிருஷ்ண பரமாத்மா வேண்டும்" என்று ஆசைப்பட்டார்.

பக்தனின் அந்தரங்க ஆசையையும், ஸ்ரீ கிருஷ்ணர் நிறைவேற்றி கொடுத்தார்.

Tuesday 10 November 2020

'கோவிந்தா கோவிந்தா' என்று சொல்லும் போது, ஸ்ரீனிவாச பெருமாள் யாரை நினைக்கிறார். ஏன் காப்பாற்றுகிறார்? கஷ்ட காலத்தில், தெய்வபக்தி எப்படி சாத்தியமாகும்?

 கையில் பணம் வரும் போது, 

"பகவான் கருணை செய்கிறார்" என்றும்,

அதே பணம் செலவழிந்து போகும் போது, 

"பகவான் சோதிக்கிறார்" என்றும்,

சொல்வது 'உண்மையான பக்தி' என்று சொல்லிவிட முடியாது.


கடவுள் நம்பிக்கை இருப்பதால், 'ஆஸ்தீகமான பக்தி' என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கஷ்டம் வந்தாலும், லாபம் வந்தாலும், 'பகவான் கருணை தான் செய்கிறார்' என்று, அவரை நினைத்து கொண்டே இருப்பது தான் உண்மையான பக்தி.


லாபம் வந்தால் 'பகவான் கருணை செய்கிறார்' என்று ஏற்று கொள்கிறோம்.

கஷ்டம் வந்தால் 'பகவான் கருணை செய்கிறார்' என்று ஏற்று கொள்ள முடிவதில்லை.





'கஷ்டமும் அவர் தான் தருகிறார்..  அவருக்கு அது இஷ்டமென்றால், கஷ்டம் வந்தால் வந்து விட்டு போகட்டுமே! அவர் ஆசைப்பட்டால் துக்கத்தை போக்கட்டும்"

என்ற பக்குவம் நமக்கு எப்படி ஏற்பட முடியும்?


நம்முடைய கடைசி சுவாசத்தை விடும் சமயத்தில், 

சொந்தங்கள் கை விட்ட நிலையில், 

டாக்டர்களும் கை விட்ட நிலையில், 

உடம்பு வெலவெலத்து, 

மரண பயம் உண்டாகும் போது, 1000 தேள் ஒரே சமயத்தில் கொட்டும் மரண வலி உண்டாகும் போது,

'மரண பயத்தை போக்கி, கடைசி மூச்சு விடும் சமயத்தில், எனக்கு அபயம் தரப்போவது அந்த நாராயணனே!' 

என்ற தெளிந்த ஞானம் (அறிவு) இன்றே நமக்கு ஏற்பட்டால் மட்டுமே, நமக்கும் இந்த பக்குவம் ஏற்படும்.


பிராணன் விடும் சமயத்தில் மரண பயத்தை போக்கி காப்பாற்ற போகும் "பரமாத்மா நாராயணன்" நமக்கு துணை என்ற ஞானம் (அறிவு) நமக்கு ஏற்படும் போது, 

சுகம் வந்தாலும், துக்கம் வந்தாலும், இரண்டையும் மன சஞ்சலசம் அடையாமல் சமாளிக்க துணிவு வரும்.


இப்படி 'பகவான் இஷ்டம்' என்று திட பக்தி உள்ள பக்தனுக்கு ஏற்படும் துன்பமும், வருவது போல வந்து பனி போல தானே விலகி விடும்.


இந்த திடபக்தியின் காரணமாக, மகாத்மாக்கள் தங்கள் கடைசி சுவாசம் விடும் சமயத்தில், மரண அவஸ்தைகள் இல்லாமல் பகவத் தரிசனம் பெற்று, மோக்ஷம் அடைந்து விடுகிறார்கள்.


பக்தி இல்லாதவர்களுக்கும், துன்பங்கள் ஏற்படுகிறது. ஆஸ்தீகமான பக்தி உள்ளவர்களுக்கும், துன்பங்கள் ஏற்படுகிறது.

திட பக்தி உள்ளவர்களுக்கும், துன்பம் நேருகிறது.



'காலம்' என்ற விதி யாவருக்கும் பொதுவாக தான் செயல்படுகிறது.


காலம் கொடுக்கும் துன்பத்தை சமாளிக்க, துன்பத்தை போக்க, பகவான் தயாராக இருந்தாலும், நம்மிடம் இந்த திட பக்தியை எதிர்பார்க்கிறார். குறைந்த பட்சம் ஆஸ்தீக பக்தியாவது எதிர்பார்க்கிறார்.


திட பக்தி உள்ளவர்களை துன்பங்கள் தாக்குவது போல நமக்கு தோன்றினாலும், அது உண்மையில் அவர்களை தாக்குவதில்லை.

காரணம், 

திட பக்தி உள்ளவர்களுக்கு துன்ப காலங்களில் 'தன்னுடைய நினைவை கொடுத்து' பகவான் காப்பாற்றி விடுகிறார்.


திரௌபதிக்கு ஹஸ்தினாபுர சபையில் அவமானம் ஏற்பட, பாண்டவர்கள், பீஷ்மர் அனைவரும் செய்வதறியாது இருக்க, துன்பத்தின் அருகில் தள்ளப்பட்டாள்.


புடவையை பிடித்து இழுக்க துச்சாதனன் முயற்சிக்க, இந்த பெரும் துன்பத்தில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்த திரௌபதிக்கு 'திடீரென்று துவாரகையில் இருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஞாபகம்' வந்தது.

திரௌபதியிடம் இந்த திட பக்தி இல்லாமல் போயிருந்தால், 'கிருஷ்ணர் காப்பாற்றுவார்' என்ற நினைவே எழுந்து இருக்காது.


'ஸ்ரீ கிருஷ்ணரை பகவான் என்று இன்று நாம் நினைப்பது ஆச்சரியமில்லை.


அப்போது, சம காலத்தில் மனித ரூபத்தில் துவாரகையில் இருந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.


துவாரகைக்கும் ஹஸ்தினாபுரத்துக்கு எத்தனை தூரம் இருக்கிறது? 

ஹஸ்தினாபுர சபையில் தான் அவமானப்படும் போது, இங்கு அழைத்தால், அவர் எப்படி காப்பாற்ற முடியும்? 

வருவதற்கே ஒரு நாள் ஆகுமே? 

அதுவரை துச்சாதனன் சும்மா இருப்பானா?

என்ற எந்த கேள்வியும் திரௌபதிக்கு எழவில்லை. 


எங்கும் உள்ள பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணர், நம் கூக்குரலை கேட்பார் என்று "கோவிந்தா.. கோவிந்தா.." என்று கதறினாள்.


துவாரகையில் சத்யபாமாவுடன் சொக்கட்டான் விளையாடி கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணர் "அக்ஷையம்" என்று சொல்லி தாயக்கட்டையை உருட்டி போட, 

ஹஸ்தினாபுரத்தில் இருந்த திரௌபதிக்கு பல வண்ண வண்ண புடவைகள் வர தொடங்கியது. 

துச்சாதனன் புடவையை இழுத்து சளைத்து மயங்கினான்.. ஆனால் பகவான் திரௌபதியின் மானத்தை காக்க சளைக்கவில்லை. 


திட பக்தி இல்லாதவர்களுக்கு, கஷ்ட காலம் வந்ததும், நம்பிக்கை குலைந்து விடுகிறது. 

ஆபத்து சமயத்தில் பகவான் நினைவும் எழாமல், மறந்து விடுகிறது.


திட பக்தி உள்ளவர்கள் கஷ்ட காலத்தில் தெய்வத்தை மறப்பதில்லை. 

அவர்கள் மறந்தாலும் பகவான் தன்னை நினைக்க வைத்து, வரும் கஷ்டங்கள் பனி போல விலகி விடுகிறார். 

மேலும் பக்தி அவர்களுக்கு அதிகமாகிறது.




திருப்பதியில் ஸ்ரீனிவாச பெருமாளை பார்த்து "கோவிந்தா! கோவிந்தா!" என்று சொல்லி நாம் கோஷம் இடும் போது, பெருமாள் ஆபத்தில் சிக்கி இருந்த திரௌபதியை காப்பாற்றியது போல, நம்மையும் காக்கிறார்.


திரௌபதியை காப்பாற்றிய, திரௌபதியின் பயத்தை போக்கிய "கோவிந்தா.." என்ற நாமத்தை, நாமும் உணர்ந்து சொல்லும் போது, நம்மை எதிர்கொண்டு இருக்கும் ஆபத்துக்கள் பனி போல விலகி விடும்.


கஷ்டம் வந்தாலும், "பகவான் துணை" என்று திட பக்தியை வளர்த்து கொள்வோம். 

வரும் இன்னல்கள் பனி போல விலகுவதை கண்டு அனுபவிப்போம்.