Followers

Search Here...

Showing posts with label யோகா. Show all posts
Showing posts with label யோகா. Show all posts

Saturday 23 May 2020

சோகம் நமக்கு எதிலிருந்து உண்டாகிறது? ஆத்மாவே நான். உடல் நானல்ல. இதை அனுபவத்தில் புரிந்து கொள்ள முடியுமா?

"ஆத்மாவே நீ. உடல் நீயல்ல.."
இந்த சத்யத்தையே ஹிந்து மதம் எப்பொழுதும் பேசுகிறது.
ரிஷிகள், ஞானிகள், சிவபெருமான் உட்பட இந்த தத்துவத்தை தான் பல விதத்தில் நமக்கு உபதேசம் செய்கிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு அத்தியாயம் 3ல் ஆரம்பித்து இதையே பல தர்மங்கள் வழியாக சொல்கிறார் என்று பார்க்கிறோம்.



"உடலும், மனதும் இருப்பதால் தான்", ஆத்மாவாகிய நமக்கு "சூடு, குளிர், மானம், அவமானம், நறுமணம், நாற்றம், வெற்றி, தோல்வி, சுகம், துக்கம்" என்று பல அனுபவங்கள் ஏற்படுகிறது.

"உடலும், மனதும் நீ அல்ல. ஆத்மாவே நீ. 
ஆத்மா எந்த துக்கத்தையும் அனுபவிக்கவில்லை. உடலும் மனதும் தான் இந்த அனுபவத்தை கொடுக்கிறது"
என்று ஹிந்து தர்மம் சொல்வதை நாமே அனுபவத்தில் புரிந்து கொள்ள முடியுமா?
முடியும்....
Anaesthetic injection போடும் போது உடல் மரத்து கிடக்கிறது.
"உடலை மரத்து போக செய்து விட்டால், நாம் (ஆத்மா) இந்த உடலில் இருந்தாலும், உடல் அனுபவங்கள் நம்மை தாக்குவதில்லை.
மண்டையை பிளந்து டாக்டர் பார்த்தாலும் 'உடல் வலி' ஆத்மாவுக்கு (நமக்கு) தெரியவில்லை.
தூங்கும் போது மனம் அடங்கி கிடக்கிறது.
நாம் (ஆத்மா) இந்த உடலில் இருந்தாலும், ஆழ்ந்த தூக்கத்தில், அருகில் பிணம் கிடந்தாலும் கூட, தூக்கத்தில் ஒன்றுமே நடக்காதது போல தூங்குகிறான்.
"கை கால் நொறுங்கி வலி பொறுக்க முடியாமல் அழுதவன்", தூக்கத்தில் ஒன்றுமே நடக்காதது போல தூங்குகிறான்.

"உடல் பலத்தை விட மனம் பலம் வாய்ந்தது" என்று தெரிகிறது.

மனம் ஓய்ந்து விட்டால், மனத்துயரம் மட்டுமல்ல, உடல் வலிகள் கூட தெரிவதில்லை என்று அனுபவத்திலேயே நாம் புரிந்து கொண்டு விடலாம்.

தூக்கத்தில் ஏன் மனம் ஓய்கிறது?
இதற்கான பதிலை ரிஷிகள் ஆராய்ச்சி செய்த பலனே யோகாப்யாஸம்.
மனம் எப்பொழுதும் அசைய கூடியது.
இந்த "உடல்" எத்தனைக்கு எத்தனை அசைகிறதோ, அத்தனை வேகமாக "மனம்" வேலை செய்யும்.

கோபம் அதிகமாகும் போது, உடல் அசைவு, உள்ளும் புறமும் தீவிரப்படும்.
இதனாலேயே மனம் அதி தீவிரமாக வேலை செய்யும்.
மனம் எத்தனைக்கு எத்தனை வேலை செய்கிறதோ!!.. அத்தனைக்கு அத்தனை கவலை, சுகம், வெற்றி, தோல்வி, பயம், மானம், அவமானம் என்று அனுபவங்களை இந்த உடலுக்கு கொடுக்கும்.

தூக்கத்தில் மனம் அடங்கும் ரகசியத்தை அறிந்த நம் ரிஷிகள்,
விழிப்புடன் இருக்கும் போதும் இந்த மனதை அடக்கும் வழியை தேடினார்கள்.

பதஞ்சலி "யோக சூத்திரம்" பிரசித்தம்.

'மனது' என்ற பம்பரத்தை யார் சுற்றுகிறார்கள்? என்று கவனித்த போது, அது நம் 'மூச்சு காற்றே' என்று அறிந்தார்கள்.

"இந்த பிராணன் என்ற கயிறு எப்படி வேகமாக சுற்றுகிறதோ, அதை பொறுத்து, இந்த மனம் வேகமாக அலைகிறது" என்று அறிந்தார்கள்.

பிராணனை அடக்க, பிராணாயாமம் வந்தது
தூங்குபவனுக்கு மூச்சு சீராக இருப்பது போல, பிராணாயாமம் செய்பவன் விழிப்பு நிலையிலும் மூச்சை சீராக வைத்து கொள்ள ஆரம்பித்தான். 
அதற்கு பலனாக, மனம் அடங்கி இருக்க முடிந்தது.

தூக்கத்தில், மூச்சு மட்டுமா சீராக உள்ளது?..  உடலும் அசைவின்றி உள்ளது... அல்லவா?

"எத்தனைக்கு எத்தனை உடல் அசையாமல் இருக்கிறதோ!! அத்தனைக்கு அத்தனைக்கு அத்தனை மனம் அடங்கும்"
என்ற உண்மையும் அறிந்தார்கள் நம் ரிஷிகள்.

தூக்கத்தில் ஏன் மனம் ஓய்கிறது? 
உடல் "அசையாமல்" இருப்பதாலேயே மனம் ஒடுங்கி இருக்கிறது.

"ப்ரேக் டான்ஸ் ஆடி, கண்டபடி உடலை அசைக்கும் ஆட்டங்கள் மனதுக்கு கேடு" என்று சொல்வதற்கு காரணம் இதுவே!..
வெளிநாட்டு கலாச்சாரத்தில் உள்ள இது போன்ற ஆட்டங்கள், உடலை அர்த்தமில்லாமால் அசைப்பதாலேயே "இது போன்ற ஆட்டம் ஆடாதே!" என்று சொன்னார்கள்.




நம் கலாச்சாரத்தில், இது போன்ற குத்தாட்டங்கள் கிடையாது.
நடனம் ஆடுவதற்கும் பல வித விதிகள் நம்மிடம் உண்டு.

இப்படி உடல் அசைவும், மனதை அசைய செய்கிறது என்ற உண்மையை அறிந்து நம் ரிஷிகள்,
"பிராணாயாமம் மட்டும் போதாது" என்று "ஆசனங்கள்" சொல்லி கொடுத்தனர்.

யோக ஆசனங்களை உடற்பயிற்சி போல உடலை வேகமாக அசைத்து அசைத்து செய்வதால் உண்மையான பலன் ஏற்படுவதில்லை.

வேக வேகமாக செய்தால், இதுவும் உடற்பயிற்சியே.
உடல் வலுவாகுமே தவிர, மனம் அடங்காது.
ப்ராணாயாமத்துடன், பத்மாசனம் போட்டு கொண்டு அசையாமல் ஒரு மணி நேரம் உட்கார முடிந்தாலேயே, யோகம் செய்த பலன் கிடைத்து விடும்.
உடலும் வலுவாக இருக்கும். மனமும் அடங்கி இருக்கும்.

தூக்கத்தில் தானாகவே மனம் அடங்கி விடுவதால், துக்கம் பாதிக்காமல் தூங்குகிறோம்.
விழிப்பில், ஆசனங்கள் மூலம் உடல் அசைவை குறைத்து கொண்டு பிராணாயாமம் செய்து கொண்டு இருந்தாலேயே, விழிப்பு நிலையிலும், துக்கம் நம்மை பாதிக்காமல்  பார்த்துக்கொள்ள முடியும்.

மனம் அடங்கி இருப்பவனுக்கு, துக்கம் தாக்குவதில்லை.
யோகத்தில் ஸித்தி ஆன ஜடபரதரிடம், "தலையை வெட்டி காளிக்கு பலி கொடுக்க வேண்டும்" என்று கேட்க, ஒன்றுமே சொல்லாமல் சென்றார் என்றால், அதன் ரகசியம் என்ன? என்று இப்பொழுது புரிந்து கொள்ள முடியும்.

தூக்கத்தில் மனம் அழிந்து, 
மரத்து போகும் ஊசி போட்டு உடல் இருப்பதே மறத்து போன நிலையை, யோகிகள் விழிப்பு நிலையிலேயே, கொண்டு வந்தனர்.

எத்தனை அற்புதமான தேசம் இது!!.
இந்த தேசத்தில் பிறந்த நாம், நம் பெருமையை மெச்சி கொள்ள வேண்டாமா?.

மேற்கத்திய மத சிந்தனையை ஏற்று கொள்வதே அவமானவல்லவா நமக்கு? யோசிக்க வேண்டும்...


"ஆத்மாவே நீ. உடல் நீயல்ல.." என்ற தத்துவத்தை சொல்வதே நம் ஹிந்து தர்மம்.

அதை நமக்கு திரும்ப திரும்ப சொல்ல தான், இத்தனை மஹான்கள், சாதுக்கள், அவதரித்தனர்.
இந்த ஆத்மா ... அதாவது நாம் (ஆத்மா) மோக்ஷம் அடைவதே லட்சியம் என்று காட்டினார்கள்.

இதை படிக்கும் சிலர்,
"அப்படியென்னறால், உலகம் மாயை, ஆத்மா தான் உண்மை என்றால், கடமைகளை விட்டு விடலாமா? 
நிரந்தரமில்லாத இந்த உடலில் ஏற்படும் அனுபவங்களுக்காக இத்தனை உழைக்க வேண்டுமா? குடும்பம் தேவையா?" 
என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

ஹிந்து தர்மம், கடமையை தவிர்க்க சொல்கிறதா?
என்று குழப்பமடைகிறார்கள்.
பெரும்பாலான ரிஷிகள், முனிகள், சந்யாசிகள், ஆதி சங்கரராக வந்த சிவபெருமான் உட்பட, அனைவருமே "ஆத்மா தான் நீ.. உடல் நீயல்ல" என்று சொல்வதாலும், பெரும்பாலும் இவர்களே உலகத்தில் பற்று இல்லாமல் இருப்பதாலும், ஹிந்து தர்மம் கடமையை தவிர்க்க சொல்கிறதோ? என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது.

இதற்கு பதிலை பிரம்மாவையும் படைத்த நாராயணன் சொல்கிறார்.

கிருஷ்ண பரமாத்மாவாக அவதரித்த நாராயணன் (பரவாசுதேவன்), அர்ஜுனனிடம் பேசும் போது இதற்கான பதிலை சொல்கிறார்.
"ஆத்மாவே நீ. உடல் நீ அல்ல" என்று சொல்லும் கிருஷ்ணர், அர்ஜுனனை பார்த்து "அதற்காக உன் கடமையை செய்யாமல் இருக்காதே" என்று சொல்கிறார்.

தான் பரமாத்மாவாக இருந்த போதும், தானும் கடமையை செய்கிறேன் என்று காட்டுகிறார்.
எப்பொழுது எல்லாம் தர்மம் உலகில் அபாயத்தை சந்திக்குமோ, அப்பொழுதெல்லாம் தானே அவதாரம் செய்வதாக சொல்கிறார். 

"தான் பரமாத்மாவாக இருந்த போதிலும், இந்த கிருஷ்ண அவதாரத்தில், 
க்ஷத்ரியனாக அரசாளுகிறேன். என் தர்மத்தை காக்கிறேன். பாண்டவர்களான உங்களுக்கு ஏற்படும் அநீதிக்கு, நீதி கிடைக்க, உங்களுக்காக போராடுகிறேன்.

உடல் வேறு, ஆத்மா வேறு என்று தெரிந்தவன் கடமைகளை செய்யாமல் போவானா? 
இந்த அறிவு ஏற்பட்டவன் இன்னும் உற்சாகமாக மேலும் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை தானே செய்வான் !
உடலால் ஏற்படும் சோகம் எதுவும் எனக்கு இல்லை என்று தெரிந்த  ஞானி, தனக்கு விதிக்கப்பட்ட கடமையை செய்ய என்ன தடை இருக்க முடியும்? 
உடல் நீ அல்ல, ஆத்மாவே நீ என்கிற போது, க்ஷத்ரியனான நீ சண்டை போட்டு, தர்மத்தை நிலைநாட்டி, உனக்கு சேர வேண்டிய சொத்தை பெற்று கொள்ள வேண்டாமா? போரில் நீ அடிபட்டு வீழ்ந்தால், உன் உடல் தானே நாசமாகும்..  ஆத்மா இல்லையே !  நீ தோற்றாலும், ஜெயித்தாலும் உனக்கு (ஆத்மா) அதனால் ஆவது ஒன்றும் இல்லை என்கிற போது, க்ஷத்ரியனாக இருக்கும் நீ சண்டை போடுவது தானே உன் கடமை 
என்று சொல்லி அர்ஜுனனை அவன் கடமையை செய்ய உற்சாகப்படுத்துகிறார்.




"ஆத்மாவே நான். உடல் நான் அல்ல. 
இதை மனதில் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே, உனக்கு விதிக்கப்பட்ட கடமையை எனக்கா செய். என் உருவத்தையே மனதில் வைத்துக்கொண்டு, உன் கடமையை செய். 

உன் கடமையை என் நினைவோடு செய்து கொண்டிருந்தால், இந்த உடலை விட்டு பிரியும் போது,ஜீவ  ஆத்மாவாகிய உன்னை உடல் என்ற சம்பத்ததில் இருந்து நீக்கி, என்னுடன் சேர்த்து கொண்டு விடுவேன். மோக்ஷம் தந்து விடுகிறேன்" 
என்று சொல்கிறார்.

இதுவே நமக்கு பாடம்.

ரிஷிகள், ஞானிகள் இதை சொன்னாலும், தாங்கள் சன்யாசிகளாகவே வாழ்ந்தனர்.
"குடும்பத்தில் இருந்தாலும், அவரவர்கள் கடமையை ஒழுங்காக செய்து கொண்டு இருந்தாலும், ஆத்மா ஞானியாக (நான் ஆத்மா) இருப்பவனுக்கு, மோக்ஷம் கட்டாயம் கிடைக்கும்"
என்று நிரூபிக்க, தானே அவதரித்து, தன் கடமையை செய்து, வாழ்ந்து காட்டினார் பரமாத்மா நாராயணன்.


இதன் காரணத்தாலேயே பகவத் கீதத்தை அனைத்து ஹிந்துக்களின் சம்மதம் கொண்ட புனித நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வாழ்க ஹிந்து தர்மம்.