Followers

Search Here...

Showing posts with label வையம். Show all posts
Showing posts with label வையம். Show all posts

Wednesday 23 December 2020

பாசுரம் (அர்த்தம்) - "வையம் ஏழும் உண்டு". திருவஹீந்திரபுரத்தில் (கடலூர் மாவட்டம்) வீற்றுஇருக்கும் தேவநாத பெருமாளை தொழும் பாசுரம். திருமங்கையாழ்வார் வர்ணிக்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !

திருவஹீந்திரபுரம் திவ்ய தேசம்…  (கடலூர் மாவட்டம் அருகில் உள்ளது.)

பெருமாள்:  தேவநாதன். தாயார்: ஹேமாம்புஜவல்லி

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யும் போது, இந்த பெருமாளோடு, அந்த ஊரின் அழகை பார்த்து அப்படியே வர்ணித்து திவ்ய தேசத்தை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார்.

வையம் ஏழும் உண்டு 

ஆலிலை வைகிய மாயவன்! 

அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வநாயகன் இடம் !

மெய்தகு வரைச்சாரல் 

மொய்கொள் 

மாதவி சண்பகம் முயங்கிய

முல்லையங் கொடியாட !

செய்ய தாமரைச் 

செழும்பணை திகழ்தரு 

திருவயிந்திரபுரமே !

 - பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார் )

இந்த பாசுரத்தை பாடும் போதே, இந்த திவ்ய தேசம் அவரை எப்படி வரவேற்றது? என்று காட்டுவது போல இருக்கிறது.


அந்த திவ்ய தேசத்தில் கழனி வழிகள் எப்படி இருந்தது? முல்லை எப்படி இருந்தது? என்று சொல்லி கொண்டே ஆழ்வார் வர, பெருமாளோடு, திவ்ய தேசத்தையும் சேர்த்து நமக்கு காட்டி விடுகிறார்.


அந்த ஓஷதி மலையில் சாரல் விழ (மெய்தகு வரைச்சாரல் ), அந்த மலையில் எங்கு பார்த்தாலும் வளர்ந்து இருக்கும் செண்பக மரத்தின் (மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய) மேல் முல்லை கொடி படர்ந்து ஆட (முல்லையங் கொடியாட), தடாகங்களில் நன்கு செழித்து ஓங்கிய தாமரையும் (செய்ய தாமரைச்), மலை ஓரங்களில் செழித்து ஓங்கிய பனை மரங்களும் (செழும் பணை திகழ்தரு) நிரம்பி இருக்க, அதை பார்த்த ஆழ்வாருக்கு தன்னை ஆசையோடு திவ்ய தேசமே வரவேற்ப்பது போல இருந்ததாம்.


இப்படி திவ்ய தேசத்தின் அழகை நம் கண் முன்னே கொண்டு வந்த ஆழ்வார், அப்படிப்பட்ட அழகிய திவ்ய தேசத்தில், ஏழு உலகங்களையும் உண்டு தன் திருவயிற்றில் வைத்து கொண்டு (வையம் ஏழும் உண்டு), பிரளய ஜலத்தில் ஒரு பயமுமில்லாமல் ஒரு சிறு ஆலிலையில் படுத்து உறங்கும் மாயன் (ஆலிலை வைகிய மாயவன்!) அங்கு இருக்கிறார் என்று பாடுகிறார்.


'கல் என்றால் கல், பெருமாள் என்றால் பெருமாள். உண்டு என்றால் உண்டு. இல்லை என்றால் இல்லை' என்று நம் பக்தியை பொறுத்து, தான் இருப்பதை நமக்கு காட்டும் படியாக அடியவர்க்கு மெய்யனாகிய தேவநாதன், என்கிறார்.


'ஆஸ்ரயித்து உபாசனை செய்யத்தக்க பெருமாள், தேவநாத பெருமாள்' என்கிறார் தேசிகர்.

தேசிகர் அவதரித்த ஸ்தலம் "தூப்புல்" (காஞ்சிபுரம்).

வேதாந்த தேசிகருக்கு, அவதார ஸ்தலம் காஞ்சிபுரமாக இருந்தாலும், பெருமாளின் சாஷாத்காரம் கிடைத்த இடமோ "திருவஹீந்திரபுரம்".


காலத்தில் உபநயனம் ஆகி சாஸ்திரங்கள் அனைத்தும் அத்யயனம் செய்து முடித்தும் திருப்தி ஏற்படவில்லை தேசிகருக்கு.

'படிப்பு தானே இவை.. படித்தது அனுபவத்தில் வந்தால் தானே முழுமை' என்று நினைத்தார் வேதாந்த தேசிகர்.

'வேதாந்தம் படித்தும் அனுபவத்தில் வரவில்லையென்றால், பெருமாள் கிடைக்க மாட்டார்' என்று புரிந்து கொண்டார் ஸ்வாமி தேசிகர்.


'சாஸ்திரமும் கற்றதன் பலனாக, பெருமாளை நேரில் பார்க்க வேண்டும்' என்று ஆசைப்பட்டார் ஸ்வாமி தேசிகர்.


இந்த சிந்தனையோடு, 'தீர்த்தம், மூர்த்தி, மலை, திவ்ய தேசம்' இவை நான்கும் சேர்ந்த திவ்ய தேசத்தை தேடி வந்தார் ஸ்வாமி தேசிகர்.


'கடில தீர்த்தம், ஓஷதி மலை, தேவநாத பெருமாள், திவ்ய தேசம்' என்று நான்கும் பொருந்தி இருக்கும் இடமாக திருவஹீந்திரபுரம் இருப்பதை கண்டு கொண்டார்.


இந்த திவ்ய தேசத்தில் இவருடைய மாமா "கிடாம்பி அப்புள்ளார்" என்ற பரம வைஷ்ணவர் இருந்தார்.

இவரை பார்க்க வந்த தேசிகர், தன் மாமாவிடம் "பெருமாள் தனக்கு ப்ரத்யக்ஷம் ஆவாரா?" என்று கேட்டார்.

உடனே அப்புள்ளார், தேசிகருக்கு, கருட மந்திரத்தை உபதேசம் செய்தார்.

மேலும்,

'எந்த கருடன் பெருமாளை இங்கு சாஷாத்கரிக்க வந்தாரோ! அந்த கருடனை குறித்து இங்கு நீ பக்தியோடு தியானம் செய். 

இந்த கருட மலையில் அமர்ந்து கொண்டு, கருட மந்திரத்தை அக்ஷரத்துக்கு லட்சம் ஜபம் செய்' என்று சொல்ல, 

அது போலவே தேசிகரும் பக்தி யோகத்தால் தியானம் செய்ய, கருடன் தேசிகருக்கு ப்ரத்யக்ஷமானார்.




கருடன் தேசிகருக்கு "ஹயக்ரீவ மந்திரத்தை தானே உபதேசிக்க", அதையும் ஈடுபாடு குறையாத பக்தியோடு ஜபம் செய்ய, பெருமாள், தேசிகருக்கு இந்த மலையில் ஹயக்ரீவ மூர்த்தியாகவே ப்ரத்யக்ஷமாகி காட்சி கொடுத்தார்.

ஹயக்ரீவ தரிசனம் ஏற்பட்டதுமே, படித்தது எல்லாம் அனுபவ பூர்வமாகி தெளிந்த ஞானம் ஏற்பட்டது தேசிகருக்கு.

சர்வ கலையும் தெரிந்தவராகி இருந்தார், ஸ்வாமி தேசிகர்.

இதனை கேட்டு அசூயை பட்ட ஒரு சிற்பி, 'சர்வ கலையும் தெரிந்தவர் என்றால், சிற்ப கலை தெரியுமா? அதிலும் தன்னையே சிற்பமாக அப்படியே செதுக்கி காட்ட முடியுமா?" என்று கேட்க, 

தேசிகர், 'தன்னையே சிற்பமாக வடித்து கொடுத்து விட்டார்".


ஒரு சிற்பிக்கு மற்றவர் உருவத்தை செதுக்குவது எளிது

தன் ரூபத்தை தானே வடிப்பது என்பது சிற்ப கலையில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே முடியும்.


'சிற்ப கலையும் தெரிந்தவர்' என்று தானே தன்னை அப்படியே சிலையாக வடித்து விட்டார் தேசிகர். 

அந்த சிற்பி அமைதியாக திரும்பி விட்டான். 

தானே செய்த தன் திருமேனியை தானே ஆலிங்கனம் செய்து கொண்டு, தன் சிஷ்யர்களுக்கு ஆராதனைக்காக கொடுத்து விட்டார் தேசிகர்.

தேசிகரே வடித்த, தேசிகரே ஆலிங்கனம் செய்து கொண்ட, அந்த அர்ச்சா திருமேனி இன்றும் உள்ளது. 


இப்படி பின்னாளில் தேசிகர் போன்ற பல அடியவர்க்கு, ப்ரத்யக்ஷமாகும் (மெய்யனாகிய) தேவநாத பெருமாள் (தெய்வ நாயகன்) வீற்று இருக்கும் இடம், திருவஹீந்திரபுரம் என்று, இனி வரும் பக்தர்களுக்கும் ப்ரத்யக்ஷமாகும் பெருமாள் என்று அப்போதே பாடி மங்களாசாசனம் செய்து விட்டார் திருமங்கையாழ்வார்


இங்கு திருமங்கையாழ்வார் "தெய்வ நாயகன்" என்று பாடியதை விளக்கி தேசிகர் சொல்லும் போது, 

தேவர்களுக்கும் நாயகன் என்ற கருத்தில் மட்டும் ஆழ்வார் இந்த பதத்தை குறிப்பிடவில்லை, 

தெய்வ சாரூப்யம் கொண்ட, வைகுண்டத்திலேயே இருக்கும் நித்ய பார்க்ஷதர்களான,  கருடனுக்கும், அஹீந்திரனுக்கும் தெய்வம் என்ற கருத்தில், திருமங்கையாழ்வார் 'தெய்வ நாயகன்" என்று பெருமாளை பாடுகிறார் என்று விளக்கினார். 

இதுவும் பொருத்தமானதே

மேலும், தெய்வ சாரூப்யம் கொண்ட கருடனுக்கும், அஹீந்திரனுக்கும் அனுக்கிரகம் செய்து கொண்டு பரமபத்திலேயே இருக்கலாமே பெருமாள். எதற்காக திருவஹீந்திரபுரம் வந்தார்? என்ற கேள்வி எழலாம்..

அதற்கான பதிலாக "அடியவர்க்கு மெய்யனாகிய" என்ற பதத்தில் ஆழ்வார் காட்டுவதை விளக்குகிறார் பெரியவாச்சான் பிள்ளை.


மோக்ஷன் அடைந்து விட்ட, நித்ய சூரிகளான கருடனும், அஹீந்திரனுமே (தெய்வ) வணங்கும் பெருமாள் (நாதன்), கருணையின் காரணமாக, தன்னை பல 'அடியார்களும் ஆச்ரயிக்க வேண்டுமே' என்று ஆசைப்பட்டு, வைகுண்டத்தை விட்டு விட்டு, கூடவே தெய்வ சாரூப்யம் அடைந்த கருடனையும், அஹீந்திரனையும் (தெய்வ) கூடவே அழைத்து கொண்டு வந்து விட்டார் என்று, 'அடியவர்க்கு மெய்யனாகிய" என்ற பதத்தில் உள்ள ஆழ்ந்த அர்த்தத்தை நமக்கு விளக்குகிறார்.

மேலும், தேசிகர் மங்களாசாசனம் செய்கிறார்.

தேசிகர் தன் அனுபவத்தை சொல்வதாக உள்ளது..

ப்ரணத சுர கிரீட ப்ராந்த மந்தார மாலா 

விகளித மகரந்த ஸ்நிக்த பாதாரவிந்த: |

பசுபதி விதி பூஜ்ய: |

பத்ம பத்ரா யதாக்ஷகா |

ஹனி பதிபுர நாத: |

பாது மாம் தேவநாத: |

 - தேசிகர்

திருவஹீந்திரபுர 'தேவநாத பெருமாளை' மங்களாசாசனம் செய்கிறார்

தமிழ் அர்த்தம்.

தேவர்கள், மந்தார புஷ்பத்தை எடுத்து கொண்டு வந்து தேவநாத பெருமாளின் திருவடியில் சமர்பிக்கிறார்களாம்.

அந்த மந்தாரபூக்களில் வழிந்து வரும் தேனாலேயே பெருமாளுக்கு பாத பூஜை (பாத்யம்) செய்தார்களாம் தேவர்கள்.

எந்த தேவர்கள் வந்தார்களாம்? முப்பத்து முக்கோடி தேவர்களோ?

அவர்களுக்கும் மேற்பட்ட தேவனான, கைலாயத்தில் உள்ள பசுபதியும், சத்ய லோகத்தில் உள்ள ப்ராம்மாவும் மிகவும் ப்ரகாசனான முகத்தோடு, இந்த தேவநாத பெருமாளின் இருபக்கமும் இருந்து கொண்டு பூஜித்து கொண்டிருக்க, 'தேவாதி தேவனாக இருக்கும், அஹீந்திரனுக்கு தேவனாக இருக்கும் இந்த பெருமாள் என்னை ரக்ஷிக்கட்டும்

என்று பாடுகிறார் தேசிகர்.

குருநாதர் துணை..