Followers

Search Here...

Saturday 13 October 2018

உலகம் உண்ட பெருவாயா என்று நம்மாழ்வார் ஏன் அழைக்க வேண்டும்? - திருவாய்மொழி

நம்மாழ்வார் திருவாய்மொழியில்,


"உலகம் உண்ட பெருவாயா.
உலப்பில் கீர்த்தி யம்மானே,
நிலவும் சுடர் சூழொளிமூர்த்தி.
நெடியாய். அடியேன் ஆருயிரே,
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்எம் பெருமானே,
குலதொல் அடியேன் உன்பாதம் கூடு மாறு கூறாயே"
என்று திருமலையப்பனை கண்டு கதறி சரணாகதி செய்கிறார்.
"உலகம் உண்ட பெருவாயா..." என்று நம்மாழ்வார் திருமலையப்பனை இங்கு  கூப்பிடுகிறார்.
உலகத்தை பெருமாள் எப்பொழுது உண்டார்?
"உலகம் உண்ட பெருவாயா"என்று நம்மாழ்வார் ஏன் இங்கு அழைக்க வேண்டும்? என்கிற கேள்விகள் எழுகிறது.
பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், மகா பிரளய காலத்தில், எம்பெருமான் 14 லோகங்களையும் விழுங்கி, தன் திருவயிற்றில் அடக்கி கொள்கிறார் என்பது பிரசித்தம்.
மீண்டும் ஸ்ருஷ்டி செய்யும் போது, உலகங்களை மீண்டும் படைத்து, புதிய பிரம்மாவை நியமிக்கிறார்.
இதுவும் அனைவரும் அறிந்ததே.

அவ்வளவு பெரிய உலகத்தை விழுங்க வேண்டுமென்றால், பெருமாள், சிறுவாயை கொண்டு விழுங்க முடியாதே!!
உலகம் அளவிற்கு, வாயை பெரிதாக திறந்து தானே விழுங்கி இருக்க வேண்டும்? என்று நமக்கு தோன்றும்.

அதனால் தான் நம்மாழ்வார் பெருமானை, "உலகம் உண்ட பெருவாயா" என்று அழைக்கிறார் போலும், என்றும் நமக்கு தோன்றும்.

ஆனால், நம்மாழ்வார் இந்த காரணத்தால் இப்படி சொல்லவில்லையாம்.

பொதுவாக ஜீவனாகிய நாம், மோக்ஷம் அடைய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், சம்சார வாழ்வில் கஷ்டத்தை அனுபவித்தாலும் அனுபவிப்பேன், பிறவி கடலை தாண்ட மாட்டேன், பெருமாளை காண வரமாட்டேன் என்று ஏனோதானோ என்று இருக்க,
திருமலையப்பனாக அர்ச்ச அவதாரம் செய்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள், இந்த ஜீவனை காக்க வேண்டுமே, மோக்ஷம் என்ற சொத்தை கொடுக்க வேண்டுமே என்று காத்து கொண்டு இருக்கிறார். தவித்துக்கொண்டு இருக்கிறார்.





ஜீவன் ஏனோதானோ என்று இருக்கிறான்.
ஜீவனுக்கு ஈஸ்வரனாக, இருக்கும் பெருமாளோ, தனக்கும், ஜீவனுக்கும் உள்ள சம்பந்தத்தை அறிந்தவர் என்பதால், எப்படியாவது மோக்ஷத்தை கொடுத்து விட வேண்டுமே !! என்று தவித்துக்கொண்டு, மோக்ஷம் கொடுக்க சங்கல்பித்து திருமலையில் அர்ச்ச அவதாரம் செய்து விட்டார்.
இப்படி கருணை செய்வது ஒன்றே குறிக்கோளாக, அவதாரம் செய்துள்ள திருமலையப்பன், தன்னை தரிசிக்க மலை ஏறி வரும் பக்தனை கண்டு பூரித்து போகிறார்.
இந்த ஜீவனுக்கு, மீண்டும் பிறவி இல்லாத மோக்ஷம் கொடுத்து விட வேண்டும் என்று அருள் செய்கிறார்.

பக்தனை கண்டு, திருமலையப்பன் எத்தனை பூரிப்பை அடைகிறார்? என்பதை காட்டவே, நம்மாழ்வார் "உலகம் உண்ட பெருவாயா' என்ற பதத்தை பயன்படுத்தினாராம்.

உலகத்தை விழுங்க, பெருமாளுக்கு பெரு வாய் தேவைப்பட்டதா? என்று பார்த்தால், அப்படி ஒன்றும் தேவைப்படவில்லையாம்.
இதை நிரூபிக்க தான், ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்த பெருமாள், அண்ட சராசரங்களையும் தன் சிறு வாயில் யசோதைக்கு காட்டினாராம்.

யசோதை, குழந்தையாக உள்ள கண்ணனை பார்த்து, "மண்ணு தின்றாயா? மண்ணு தின்றாயா?" என்று அதட்ட,
கண்ணன் அழுது கொண்டே, "இல்லம்மா.. இல்லம்மா..." என்றான்.
"வாயை காட்டு" என்று சொல்ல, கண்ணன் தன் சிறுவாயை காட்ட, உலகங்கள் அனைத்தையும் அந்த சிறிய வாயில் கண்டு பிரமித்தாள் யசோதை.

'உலகம் உண்ட சிறுவாயை' கண்ணனிடம் கண்டாளாம் யசோதை.

'உலகத்தை காக்க, சிறுவாய் போதும்' என்ற சர்வ சக்தி உள்ளவனாக இருக்கும் பகவான் காட்டினார்.

பின் ஏன், நம்மாழ்வார் "உலகம் உண்ட பெறுவாயா" என்று சொன்னார்? "உலகம் உண்ட சிறுவாயா" என்று சொல்லி இருக்கலாமே?
என்ற கேள்வி எழும்போது தான்,
பெரியவாச்சான் பிள்ளை, நம்மாழ்வார் இதயத்தில் என்ன நினைத்தார்? என்று விளக்குகிறார்.
ஒரு பெரிய பாத்திரம் முழுவதும் இனிப்பான தின்பண்டம் இருப்பதை பார்த்து, ஒரு குழந்தை, முழுவதும் தானே சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படும்.
அந்த ஆவலில், "அனைத்தையும் எனக்கே போடு" என்று அம்மாவை கேட்டு அடம்பிடித்து, வாங்கிக்கொள்ளும்.

தேவை கொஞ்சம் தான் என்றாலும், தின்பண்டத்தை பார்த்த பூரிப்பில், தேவைக்கும்  அதிகமாக கேட்டு வாங்கிக்கொள்ளும்.
இது பொதுவாக குழந்தையிடம் பார்க்கும் குணாதிசயம்.


சர்வசக்தி உள்ள பகவான், தன் அடியார்களை கண்டு விட்டால், அந்த குழந்தைக்கு ஏற்படும் பூரிப்பை போல, தானும் அடைந்து விடுகிறார்.

தன் பக்தனை கண்டதால் ஏற்பட்ட அளவு கடந்த பூரிப்பில், இவனுக்கு மோக்ஷம் அளிக்க வேண்டுமே!! காக்க வேண்டுமே!! என்ற ஆவலில் "உலகத்தை காப்பதற்கே சிறு வாய் போதும்" என்று இருந்த பெருமாள், ஒரு பக்தனை காப்பதற்காக இவருக்கு ஏற்பட்ட பூரிப்பை பார்த்தால், சிறு உலகை காக்க பெருவாயால் உண்டது போல பூரிப்பில் இருந்தாராம்.
திருமலையப்பனுக்கு ஏற்பட்ட இந்த பூரிப்பை பார்த்து, நம்மாழ்வார் "உலகம் உண்ட பெருவாயா" என்கிறார்.

பக்தியுடன் நாம் திருமலையப்பனை தரிசித்தால், பெருமாள் நம்மிடமும் இந்த பூரிப்பு அடைகிறார்.
நம் தேவைக்கும் அதிகமாக கருணை செய்து, இகத்திலும், பரத்திலும் ஆனந்தமே கிடைக்க அருள் செய்கிறார்.

அனைவரும் திருமலை செல்வோம்.
திருமலையப்பனை பக்தியுடன் தரிசனம் செய்வோம்.


Saturday 6 October 2018

ராமபிரானுக்கு "மரியாதை ராமன்" என்று ஏன் பெயர் ஏற்பட்டது? நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? - காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்ஸர்யம்

மரியாதை ராமன்

மரியாதை என்ற சமஸ்கரித சொல்லுக்கு "எல்லை" (Boundary) என்று பொருள்.

தன் எல்லைகளை உணர்ந்தவனை, "மரியாதை தெரிந்தவன்" என்று பொதுவாக சொல்வோம்.



  1. காம, 
  2. க்ரோத, 
  3. லோப, 
  4. மோக, 
  5. மத, 
  6. மாத்ஸர்யம்


என்ற 6 விஷயங்களில் மனிதன் எல்லை தாண்ட கூடாது. இப்படி எல்லை தாண்டாதவன் தன் மரியாதையை காத்துக்கொள்கிறான்.
பரவாசுதேவன் நாராயணன், ஸ்ரீராமராக மனித அவதாரம் செய்து, இந்த 6 விஷயங்களில் எல்லை தாண்டாமல், வாழ்ந்து காட்டினார். இதனாலேயே ராமரை, மரியாதை ராமன், மரியாதா புருஷன் என்று அழைக்கிறோம்.

1. காமத்தை ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
சூர்ப்பனகை ஒரு அழகான பெண் வடிவம் எடுத்து, ஸ்ரீ ராமரை மயக்க நினைத்தாள்.
ஆனாலும், ஸ்ரீ ராமர் அவளிடம் மயங்கவில்லை. தான் மணமானவன் என்றும் சொல்லி விலகினார்.
அவளே வந்து மயக்க நினைத்த போதும், "இம்மையில் இரு மாதரை சிந்தையிலும் தொடேன்" என்று எல்லை தாண்டாமல் இருந்தார் ஸ்ரீராமர்.
காமத்தை ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

2. க்ரோதத்தை (கோபத்தை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
தன் மனைவியை ஒரு அசுரன் காக்கை வடிவில் வந்து தீண்ட பார்த்ததற்கே, ஒரே ஒரு ராம பாணத்தில் ஏழு லோகங்கள் ஓடியும் அவனை துரத்தி காலில் விழ வைத்தார்.
தன் மனைவியை இலங்கை தூக்கி சென்று விட்ட ராவணனை, நின்ற இடத்திலேயே ராம பாணத்தால் கொல்லும் சக்தி இருந்தும், கோபத்தை ஒரு  எல்லைக்குள் கட்டுப்படுத்தி, வானர சேனை உருவாக்கி, வானரர்கள் துணை கொண்டு சேது அமைத்து, இலங்கை சென்று, ராவணனுக்கு எச்சரிக்கை கொடுத்து, போரில் ஒரு முறை அவனை மன்னித்து, கடைசியில் அவனை கொன்று சீதையை மீட்டார்.
க்ரோதத்தை (கோபத்தை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.






3. லோபத்தை (பண பேராசை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
கைகேயி 24 வயது ஸ்ரீராமரை பார்த்து, "உன் அரச பதவியை பரதனுக்கு கொடுத்து விட்டு, நீ காட்டுக்கு போ" என்று சொல்ல,
கொஞ்சம் கூட சலனமில்லாமல்,
"இருக்கட்டுமே. என் தம்பிக்கு தானே கொடுக்கிறேன். பரதனே ஆளட்டும்" என்று தாராள மனதோடு காட்டுக்கு சென்றார்.
ஒரே தாய் வயிற்றில் பிறந்த அண்ணன், தம்பி, தங்கை, அக்காக்களே இன்றைய காலத்தில் சொத்து என்றதும் சண்டை போட்டு கொள்ளும் அலங்கோலத்தை நாம் பார்க்கிறோம்.
பரதன் வேறு தாய்க்கு பிறந்தாலும், பணத்தில் பேராசை இல்லாமல் இருந்தார் ஸ்ரீ ராமர்.
லோபத்தை (பண பேராசை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

4. மதம் (ஆணவத்தை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
ஆண்மை, வீரம், கல்வி, எல்லையில்லா நற்குணங்கள் என்று அனைத்தும் இருந்தும், ஸ்ரீ ராமர், மஹரிஷிகளை எங்கு பார்த்தாலும், ஆணவமே இல்லாமல், உடனே அவர்களை வணங்கி, பாத சேவை செய்வார்.
தான் அரசன் மகன் என்ற ஆணவம் துளி கூட காட்டமாட்டார்.
மதம் என்ற ஆணவத்தை ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

5. மோகத்தை (விருப்பம்) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
வனவாசம் முடிந்து, ராவணனிடம் அகப்பட்ட சீதையை மீட்டு, ராம பட்டாபிஷேகம் செய்து கொண்டு, பல ஆண்டுகள் ஆட்சி செய்து கொண்டு வந்தார் ஸ்ரீராமர்.
ஒரு சமயம், ஒரு சலவை தொழிலாளி "ராவணன் தூக்கி சென்ற சீதையை ஸ்ரீ ராமர் ஏற்றுக்கொண்டார். நானாக இருந்தால் ஏற்றுக்கொண்டு இருக்க மாட்டேன்" என்று சீதையை தரம் தாழ்த்தி பேசி விட்டான்.
இந்த செய்தி ஸ்ரீராமருக்கு எட்டியது.
தான், தன் குடும்பம், என்ற  மோகத்தை (விருப்பத்தை) விட, மக்களின் மனம் கோணக்கூடாது என்று இருப்பவர் ஸ்ரீராமர்.



அரசன் எடுக்கும் நல்ல முடிவுகளை புரிந்து கொள்ளாமல், மக்கள் தவறான அபிப்ராயம் கொண்டிருந்தால், அரசன் அதன் நியாயங்களை சொல்லி புரிய வைக்க வேண்டும்.

அரசன் எடுத்த தவறான முடிவை மக்கள் கண்டித்தால், அரசன் அதை ஆராய்ந்து, எடுத்த தவறான முடிவுகளை சரி செய்ய  வேண்டும்.

இன்னும் சில சமயங்களில்,
அரசன் எடுக்கும் நல்ல முடிவை கூட புரிந்து கொள்ளாமல், மக்கள் தவறான அபிப்ராயம் கொண்டிருந்தால், அரசன் அதன் நியாயங்களை சொல்லி புரிய வைப்பது சாத்தியமில்லை என்று தெரிந்தால், அது நல்ல முடிவாக இருந்தாலும் மக்களின் மனம் கோணாமல் இருக்க, நல்ல முடிவுகளையும் கைவிட வேண்டும்.

சீதை கலங்கமற்றவள், என்று இலங்கையில் வானரர்கள், விபீஷணன் முன்னிலையில் அக்னி பிரவேசம் செய்து நிரூபித்தாள்.

ஆனால், அயோத்தியில், சீதையின் மேல் சொல்லப்பட்ட அவதூருக்கு, மீண்டும் அக்னி பிரவேசம் செய்து காட்டு என்று சொன்னால், இது போன்று வேறு யாராவது சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள்.
ஒவ்வொரு முறையும் சீதையை அக்னி பிரவேசம் செய் என்று சொல்ல முடியாது. இது சீதைக்கு இழைக்கும் அநியாயம்.

மக்களை பற்றி கவலையில்லை என்று அரசனால் இருக்க முடியாது. ஸ்ரீ ராமரோ அயோத்திக்கு அரசர்.
இதற்கு நிரந்தர நியாயம் வழங்க முடியாது. இதற்கு ஒரே வழி, அரசனான தன் மோகத்தை (ஆசையை) தியாகம் செய்வது ஒன்றே என்று
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் காலம் தாமதிக்காமல், சீதையை தியாகம் செய்து காட்டுக்கு அனுப்பினார். மீதி காலங்களை சீதை வால்மீகி ஆஸ்ரமத்தில் கழித்தாள் சீதை.

அரசனாக இருப்பதால், தன் தனிப்பட்ட மோகத்தை (விருப்பத்தை) கூட எல்லையில் வைத்தார் ஸ்ரீ ராமர்.
மோகத்தை (விருப்பம்) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

6. மாத்ஸர்யம் (பொறாமை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
கைகேயி தசரதனிடம் வாங்கிய இரண்டு வரங்களை கொண்டு, தன் மகன் பரதன் நாட்டை ஆள வேண்டும், ஸ்ரீ ராமன் காடு செல்ல வேண்டும் என்று கேட்க, ஸ்ரீ ராமர், நாட்டை பரதனே ஆளட்டும் என்று ஏற்று, தான் காட்டுக்கு புறப்பட்டார்.

விஷயம் அறிந்து சிந்து தேசம் சென்றிருந்த பரதன் அழுது, வனத்தில் இருக்கும் ஸ்ரீ ராமர் இருக்கும் இடத்திற்கு வந்து அரசாட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்க வந்தான்.
ஸ்ரீ ராமர், இன்றைய நிலையில் பரதன் அரசனாக இருப்பான் என்பதால்,
"தசரத சக்கரவர்த்தியின் குமாரனான இன்றைய சக்கரவர்த்தியே என் வணக்கம்" என்று உள்ளம் உகந்து, துளி கூட மாத்ஸர்யம் (பொறாமை) இல்லாமல் வரவேற்று பேசினார் ஸ்ரீராமர்.



ஸ்ரீ ராமரின் இந்த குணத்தை கண்டு, துக்கத்தில் நெஞ்சம் வெடித்து விடும் நிலையில் பரதன் இருந்தார். தன்னை பற்றி துளி கூட பொறாமையோ, கோபமோ இல்லாமல் இருக்கிறாரே ஸ்ரீராமர் என்று அழுதார் பரதன்.
மாத்ஸர்யம் (பொறாமை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

இப்படி காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்ஸர்யம் என்ற 6 விஷயங்களில் ஒரு மனிதன் எல்லை தாண்ட கூடாது, என்று தன் வாழ்வில் நடத்தி காட்டிய ஸ்ரீராமரை "மரியாதை ராமன்" என்று தானே சொல்ல வேண்டும்.

ஸ்ரீ ராமரை வெறுப்பவன், மனித நற்குணங்களை வெறுக்கிறான். அப்படிப்பட்டவர்களை  விலங்குக்கும் கீழ்நிலை குணம் உடையவர்கள் என்று ஒதுக்குவதே சிறந்தது.

ஸ்ரீ ராமர் வாழ்க. மரியாதை ராமன் வாழ்க.