Followers

Search Here...

Saturday 13 October 2018

உலகில் பல விதத்தில் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். ஏன்?

உலகில் பல விதத்தில் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். ஏன்?


மனிதனால் மட்டும் தான், கடந்த காலத்தை பற்றியும், எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்க முடிகிறது.
பலமாக கொடுக்கப்பட்ட இந்த வரத்தை, வீண் செய்பவர்கள் துன்பப்படுகிறார்கள்.

மிருகங்கள் எதற்கும் கடந்த காலத்தை நினைத்தோ, எதிர்காலத்தை நினைத்தோ வருத்தம் அடைவது இல்லை. இதனாலேயே அவை நிம்மதியாகவே உள்ளன.

மூளை கலங்கிய கடந்த காலத்தை மறந்து, எதிர்கால சிந்தனையும் இல்லாமல், சில பைத்தியம் பிடித்தவர்கள் கூட,  வருத்தம் அடைவது இல்லை. இதனாலேயே அவர்களும், நிம்மதியாகவே உள்ளனர்.

கடந்த கால வாழ்வில் நடந்த சோகங்கள், இனி நடக்காமல் இருக்க, வழி செய்வதை விட்டுவிட்டு, கடந்த கால வாழ்வில் நடந்த சோகத்தை நினைவில்  மட்டும் வைத்து கொள்பவர்கள், துன்பப்படுகிறார்கள்.

எதிர் கால வாழ்வில் என்ன விபரீதங்கள் நடக்குமோ? என்று பயந்து, நல்லவைகள் நடக்க இன்று செயலில் இறங்குவதை விட்டுவிட்டு, எதிர் கால வாழ்வில் என்ன நடக்குமோ என்று பயத்தை மட்டும் நினைவில் வைத்து கொள்பவர்கள், துன்பப்படுகிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணர், "கடமையை செய்" என்று, "இன்று நீ செய்ய வேண்டிய கடமையை செய்ய செயலில் இறங்கு" என்று வழி காட்டுகிறார்.


ஸ்ரீ கிருஷ்ணரின் கர்ம யோக வழியில், கடந்த கால வாழ்க்கையை உணர்ந்து, அதில் கற்ற பாடம் என்ன? என்று அறிந்து, எதிர்காலத்தில் நல்ல படியாக வாழ இன்று என்ன செய்ய வேண்டும்? என்று உணர்ந்து, நம் கடமையை தர்மத்துடன் செய்து வந்தால், பகவான் நம்மை காப்பாற்றுகிறார்.

கிருஷ்ண பக்தன் நாசமாக மாட்டான் என்று, பக்தனும் தைரியமாக கடந்த கால சோகத்தில் மூழ்காமல், எதிர்கால பயத்தில் மூழ்காமல், இன்று என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு, துன்பம் அடையாமல் சந்தோஷமாக வாழ்கிறான்.

கிருஷ்ணர் சொன்ன கீதையை படித்து, கிருஷ்ண பக்தனாகி, நாமும் தைரியமாக கடந்த கால சோகத்தில் மூழ்காமல், எதிர்கால பயத்தில் மூழ்காமல், இன்று என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு, துன்பம் அடையாமல் சந்தோஷமாக வாழுவோம்.


உலகம் உண்ட பெருவாயா என்று நம்மாழ்வார் ஏன் அழைக்க வேண்டும்? - திருவாய்மொழி

நம்மாழ்வார் திருவாய்மொழியில்,


"உலகம் உண்ட பெருவாயா.
உலப்பில் கீர்த்தி யம்மானே,
நிலவும் சுடர் சூழொளிமூர்த்தி.
நெடியாய். அடியேன் ஆருயிரே,
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்எம் பெருமானே,
குலதொல் அடியேன் உன்பாதம் கூடு மாறு கூறாயே"
என்று திருமலையப்பனை கண்டு கதறி சரணாகதி செய்கிறார்.
"உலகம் உண்ட பெருவாயா..." என்று நம்மாழ்வார் திருமலையப்பனை இங்கு  கூப்பிடுகிறார்.
உலகத்தை பெருமாள் எப்பொழுது உண்டார்?
"உலகம் உண்ட பெருவாயா"என்று நம்மாழ்வார் ஏன் இங்கு அழைக்க வேண்டும்? என்கிற கேள்விகள் எழுகிறது.
பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், மகா பிரளய காலத்தில், எம்பெருமான் 14 லோகங்களையும் விழுங்கி, தன் திருவயிற்றில் அடக்கி கொள்கிறார் என்பது பிரசித்தம்.
மீண்டும் ஸ்ருஷ்டி செய்யும் போது, உலகங்களை மீண்டும் படைத்து, புதிய பிரம்மாவை நியமிக்கிறார்.
இதுவும் அனைவரும் அறிந்ததே.

அவ்வளவு பெரிய உலகத்தை விழுங்க வேண்டுமென்றால், பெருமாள், சிறுவாயை கொண்டு விழுங்க முடியாதே!!
உலகம் அளவிற்கு, வாயை பெரிதாக திறந்து தானே விழுங்கி இருக்க வேண்டும்? என்று நமக்கு தோன்றும்.

அதனால் தான் நம்மாழ்வார் பெருமானை, "உலகம் உண்ட பெருவாயா" என்று அழைக்கிறார் போலும், என்றும் நமக்கு தோன்றும்.

ஆனால், நம்மாழ்வார் இந்த காரணத்தால் இப்படி சொல்லவில்லையாம்.

பொதுவாக ஜீவனாகிய நாம், மோக்ஷம் அடைய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், சம்சார வாழ்வில் கஷ்டத்தை அனுபவித்தாலும் அனுபவிப்பேன், பிறவி கடலை தாண்ட மாட்டேன், பெருமாளை காண வரமாட்டேன் என்று ஏனோதானோ என்று இருக்க,
திருமலையப்பனாக அர்ச்ச அவதாரம் செய்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள், இந்த ஜீவனை காக்க வேண்டுமே, மோக்ஷம் என்ற சொத்தை கொடுக்க வேண்டுமே என்று காத்து கொண்டு இருக்கிறார். தவித்துக்கொண்டு இருக்கிறார்.





ஜீவன் ஏனோதானோ என்று இருக்கிறான்.
ஜீவனுக்கு ஈஸ்வரனாக, இருக்கும் பெருமாளோ, தனக்கும், ஜீவனுக்கும் உள்ள சம்பந்தத்தை அறிந்தவர் என்பதால், எப்படியாவது மோக்ஷத்தை கொடுத்து விட வேண்டுமே !! என்று தவித்துக்கொண்டு, மோக்ஷம் கொடுக்க சங்கல்பித்து திருமலையில் அர்ச்ச அவதாரம் செய்து விட்டார்.
இப்படி கருணை செய்வது ஒன்றே குறிக்கோளாக, அவதாரம் செய்துள்ள திருமலையப்பன், தன்னை தரிசிக்க மலை ஏறி வரும் பக்தனை கண்டு பூரித்து போகிறார்.
இந்த ஜீவனுக்கு, மீண்டும் பிறவி இல்லாத மோக்ஷம் கொடுத்து விட வேண்டும் என்று அருள் செய்கிறார்.

பக்தனை கண்டு, திருமலையப்பன் எத்தனை பூரிப்பை அடைகிறார்? என்பதை காட்டவே, நம்மாழ்வார் "உலகம் உண்ட பெருவாயா' என்ற பதத்தை பயன்படுத்தினாராம்.

உலகத்தை விழுங்க, பெருமாளுக்கு பெரு வாய் தேவைப்பட்டதா? என்று பார்த்தால், அப்படி ஒன்றும் தேவைப்படவில்லையாம்.
இதை நிரூபிக்க தான், ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்த பெருமாள், அண்ட சராசரங்களையும் தன் சிறு வாயில் யசோதைக்கு காட்டினாராம்.

யசோதை, குழந்தையாக உள்ள கண்ணனை பார்த்து, "மண்ணு தின்றாயா? மண்ணு தின்றாயா?" என்று அதட்ட,
கண்ணன் அழுது கொண்டே, "இல்லம்மா.. இல்லம்மா..." என்றான்.
"வாயை காட்டு" என்று சொல்ல, கண்ணன் தன் சிறுவாயை காட்ட, உலகங்கள் அனைத்தையும் அந்த சிறிய வாயில் கண்டு பிரமித்தாள் யசோதை.

'உலகம் உண்ட சிறுவாயை' கண்ணனிடம் கண்டாளாம் யசோதை.

'உலகத்தை காக்க, சிறுவாய் போதும்' என்ற சர்வ சக்தி உள்ளவனாக இருக்கும் பகவான் காட்டினார்.

பின் ஏன், நம்மாழ்வார் "உலகம் உண்ட பெறுவாயா" என்று சொன்னார்? "உலகம் உண்ட சிறுவாயா" என்று சொல்லி இருக்கலாமே?
என்ற கேள்வி எழும்போது தான்,
பெரியவாச்சான் பிள்ளை, நம்மாழ்வார் இதயத்தில் என்ன நினைத்தார்? என்று விளக்குகிறார்.
ஒரு பெரிய பாத்திரம் முழுவதும் இனிப்பான தின்பண்டம் இருப்பதை பார்த்து, ஒரு குழந்தை, முழுவதும் தானே சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படும்.
அந்த ஆவலில், "அனைத்தையும் எனக்கே போடு" என்று அம்மாவை கேட்டு அடம்பிடித்து, வாங்கிக்கொள்ளும்.

தேவை கொஞ்சம் தான் என்றாலும், தின்பண்டத்தை பார்த்த பூரிப்பில், தேவைக்கும்  அதிகமாக கேட்டு வாங்கிக்கொள்ளும்.
இது பொதுவாக குழந்தையிடம் பார்க்கும் குணாதிசயம்.


சர்வசக்தி உள்ள பகவான், தன் அடியார்களை கண்டு விட்டால், அந்த குழந்தைக்கு ஏற்படும் பூரிப்பை போல, தானும் அடைந்து விடுகிறார்.

தன் பக்தனை கண்டதால் ஏற்பட்ட அளவு கடந்த பூரிப்பில், இவனுக்கு மோக்ஷம் அளிக்க வேண்டுமே!! காக்க வேண்டுமே!! என்ற ஆவலில் "உலகத்தை காப்பதற்கே சிறு வாய் போதும்" என்று இருந்த பெருமாள், ஒரு பக்தனை காப்பதற்காக இவருக்கு ஏற்பட்ட பூரிப்பை பார்த்தால், சிறு உலகை காக்க பெருவாயால் உண்டது போல பூரிப்பில் இருந்தாராம்.
திருமலையப்பனுக்கு ஏற்பட்ட இந்த பூரிப்பை பார்த்து, நம்மாழ்வார் "உலகம் உண்ட பெருவாயா" என்கிறார்.

பக்தியுடன் நாம் திருமலையப்பனை தரிசித்தால், பெருமாள் நம்மிடமும் இந்த பூரிப்பு அடைகிறார்.
நம் தேவைக்கும் அதிகமாக கருணை செய்து, இகத்திலும், பரத்திலும் ஆனந்தமே கிடைக்க அருள் செய்கிறார்.

அனைவரும் திருமலை செல்வோம்.
திருமலையப்பனை பக்தியுடன் தரிசனம் செய்வோம்.


Saturday 6 October 2018

ராமபிரானுக்கு "மரியாதை ராமன்" என்று ஏன் பெயர் ஏற்பட்டது? நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? - காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்ஸர்யம்

மரியாதை ராமன்

மரியாதை என்ற சமஸ்கரித சொல்லுக்கு "எல்லை" (Boundary) என்று பொருள்.

தன் எல்லைகளை உணர்ந்தவனை, "மரியாதை தெரிந்தவன்" என்று பொதுவாக சொல்வோம்.



  1. காம, 
  2. க்ரோத, 
  3. லோப, 
  4. மோக, 
  5. மத, 
  6. மாத்ஸர்யம்


என்ற 6 விஷயங்களில் மனிதன் எல்லை தாண்ட கூடாது. இப்படி எல்லை தாண்டாதவன் தன் மரியாதையை காத்துக்கொள்கிறான்.
பரவாசுதேவன் நாராயணன், ஸ்ரீராமராக மனித அவதாரம் செய்து, இந்த 6 விஷயங்களில் எல்லை தாண்டாமல், வாழ்ந்து காட்டினார். இதனாலேயே ராமரை, மரியாதை ராமன், மரியாதா புருஷன் என்று அழைக்கிறோம்.

1. காமத்தை ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
சூர்ப்பனகை ஒரு அழகான பெண் வடிவம் எடுத்து, ஸ்ரீ ராமரை மயக்க நினைத்தாள்.
ஆனாலும், ஸ்ரீ ராமர் அவளிடம் மயங்கவில்லை. தான் மணமானவன் என்றும் சொல்லி விலகினார்.
அவளே வந்து மயக்க நினைத்த போதும், "இம்மையில் இரு மாதரை சிந்தையிலும் தொடேன்" என்று எல்லை தாண்டாமல் இருந்தார் ஸ்ரீராமர்.
காமத்தை ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

2. க்ரோதத்தை (கோபத்தை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
தன் மனைவியை ஒரு அசுரன் காக்கை வடிவில் வந்து தீண்ட பார்த்ததற்கே, ஒரே ஒரு ராம பாணத்தில் ஏழு லோகங்கள் ஓடியும் அவனை துரத்தி காலில் விழ வைத்தார்.
தன் மனைவியை இலங்கை தூக்கி சென்று விட்ட ராவணனை, நின்ற இடத்திலேயே ராம பாணத்தால் கொல்லும் சக்தி இருந்தும், கோபத்தை ஒரு  எல்லைக்குள் கட்டுப்படுத்தி, வானர சேனை உருவாக்கி, வானரர்கள் துணை கொண்டு சேது அமைத்து, இலங்கை சென்று, ராவணனுக்கு எச்சரிக்கை கொடுத்து, போரில் ஒரு முறை அவனை மன்னித்து, கடைசியில் அவனை கொன்று சீதையை மீட்டார்.
க்ரோதத்தை (கோபத்தை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.






3. லோபத்தை (பண பேராசை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
கைகேயி 24 வயது ஸ்ரீராமரை பார்த்து, "உன் அரச பதவியை பரதனுக்கு கொடுத்து விட்டு, நீ காட்டுக்கு போ" என்று சொல்ல,
கொஞ்சம் கூட சலனமில்லாமல்,
"இருக்கட்டுமே. என் தம்பிக்கு தானே கொடுக்கிறேன். பரதனே ஆளட்டும்" என்று தாராள மனதோடு காட்டுக்கு சென்றார்.
ஒரே தாய் வயிற்றில் பிறந்த அண்ணன், தம்பி, தங்கை, அக்காக்களே இன்றைய காலத்தில் சொத்து என்றதும் சண்டை போட்டு கொள்ளும் அலங்கோலத்தை நாம் பார்க்கிறோம்.
பரதன் வேறு தாய்க்கு பிறந்தாலும், பணத்தில் பேராசை இல்லாமல் இருந்தார் ஸ்ரீ ராமர்.
லோபத்தை (பண பேராசை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

4. மதம் (ஆணவத்தை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
ஆண்மை, வீரம், கல்வி, எல்லையில்லா நற்குணங்கள் என்று அனைத்தும் இருந்தும், ஸ்ரீ ராமர், மஹரிஷிகளை எங்கு பார்த்தாலும், ஆணவமே இல்லாமல், உடனே அவர்களை வணங்கி, பாத சேவை செய்வார்.
தான் அரசன் மகன் என்ற ஆணவம் துளி கூட காட்டமாட்டார்.
மதம் என்ற ஆணவத்தை ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

5. மோகத்தை (விருப்பம்) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
வனவாசம் முடிந்து, ராவணனிடம் அகப்பட்ட சீதையை மீட்டு, ராம பட்டாபிஷேகம் செய்து கொண்டு, பல ஆண்டுகள் ஆட்சி செய்து கொண்டு வந்தார் ஸ்ரீராமர்.
ஒரு சமயம், ஒரு சலவை தொழிலாளி "ராவணன் தூக்கி சென்ற சீதையை ஸ்ரீ ராமர் ஏற்றுக்கொண்டார். நானாக இருந்தால் ஏற்றுக்கொண்டு இருக்க மாட்டேன்" என்று சீதையை தரம் தாழ்த்தி பேசி விட்டான்.
இந்த செய்தி ஸ்ரீராமருக்கு எட்டியது.
தான், தன் குடும்பம், என்ற  மோகத்தை (விருப்பத்தை) விட, மக்களின் மனம் கோணக்கூடாது என்று இருப்பவர் ஸ்ரீராமர்.



அரசன் எடுக்கும் நல்ல முடிவுகளை புரிந்து கொள்ளாமல், மக்கள் தவறான அபிப்ராயம் கொண்டிருந்தால், அரசன் அதன் நியாயங்களை சொல்லி புரிய வைக்க வேண்டும்.

அரசன் எடுத்த தவறான முடிவை மக்கள் கண்டித்தால், அரசன் அதை ஆராய்ந்து, எடுத்த தவறான முடிவுகளை சரி செய்ய  வேண்டும்.

இன்னும் சில சமயங்களில்,
அரசன் எடுக்கும் நல்ல முடிவை கூட புரிந்து கொள்ளாமல், மக்கள் தவறான அபிப்ராயம் கொண்டிருந்தால், அரசன் அதன் நியாயங்களை சொல்லி புரிய வைப்பது சாத்தியமில்லை என்று தெரிந்தால், அது நல்ல முடிவாக இருந்தாலும் மக்களின் மனம் கோணாமல் இருக்க, நல்ல முடிவுகளையும் கைவிட வேண்டும்.

சீதை கலங்கமற்றவள், என்று இலங்கையில் வானரர்கள், விபீஷணன் முன்னிலையில் அக்னி பிரவேசம் செய்து நிரூபித்தாள்.

ஆனால், அயோத்தியில், சீதையின் மேல் சொல்லப்பட்ட அவதூருக்கு, மீண்டும் அக்னி பிரவேசம் செய்து காட்டு என்று சொன்னால், இது போன்று வேறு யாராவது சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள்.
ஒவ்வொரு முறையும் சீதையை அக்னி பிரவேசம் செய் என்று சொல்ல முடியாது. இது சீதைக்கு இழைக்கும் அநியாயம்.

மக்களை பற்றி கவலையில்லை என்று அரசனால் இருக்க முடியாது. ஸ்ரீ ராமரோ அயோத்திக்கு அரசர்.
இதற்கு நிரந்தர நியாயம் வழங்க முடியாது. இதற்கு ஒரே வழி, அரசனான தன் மோகத்தை (ஆசையை) தியாகம் செய்வது ஒன்றே என்று
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் காலம் தாமதிக்காமல், சீதையை தியாகம் செய்து காட்டுக்கு அனுப்பினார். மீதி காலங்களை சீதை வால்மீகி ஆஸ்ரமத்தில் கழித்தாள் சீதை.

அரசனாக இருப்பதால், தன் தனிப்பட்ட மோகத்தை (விருப்பத்தை) கூட எல்லையில் வைத்தார் ஸ்ரீ ராமர்.
மோகத்தை (விருப்பம்) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

6. மாத்ஸர்யம் (பொறாமை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
கைகேயி தசரதனிடம் வாங்கிய இரண்டு வரங்களை கொண்டு, தன் மகன் பரதன் நாட்டை ஆள வேண்டும், ஸ்ரீ ராமன் காடு செல்ல வேண்டும் என்று கேட்க, ஸ்ரீ ராமர், நாட்டை பரதனே ஆளட்டும் என்று ஏற்று, தான் காட்டுக்கு புறப்பட்டார்.

விஷயம் அறிந்து சிந்து தேசம் சென்றிருந்த பரதன் அழுது, வனத்தில் இருக்கும் ஸ்ரீ ராமர் இருக்கும் இடத்திற்கு வந்து அரசாட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்க வந்தான்.
ஸ்ரீ ராமர், இன்றைய நிலையில் பரதன் அரசனாக இருப்பான் என்பதால்,
"தசரத சக்கரவர்த்தியின் குமாரனான இன்றைய சக்கரவர்த்தியே என் வணக்கம்" என்று உள்ளம் உகந்து, துளி கூட மாத்ஸர்யம் (பொறாமை) இல்லாமல் வரவேற்று பேசினார் ஸ்ரீராமர்.



ஸ்ரீ ராமரின் இந்த குணத்தை கண்டு, துக்கத்தில் நெஞ்சம் வெடித்து விடும் நிலையில் பரதன் இருந்தார். தன்னை பற்றி துளி கூட பொறாமையோ, கோபமோ இல்லாமல் இருக்கிறாரே ஸ்ரீராமர் என்று அழுதார் பரதன்.
மாத்ஸர்யம் (பொறாமை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

இப்படி காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்ஸர்யம் என்ற 6 விஷயங்களில் ஒரு மனிதன் எல்லை தாண்ட கூடாது, என்று தன் வாழ்வில் நடத்தி காட்டிய ஸ்ரீராமரை "மரியாதை ராமன்" என்று தானே சொல்ல வேண்டும்.

ஸ்ரீ ராமரை வெறுப்பவன், மனித நற்குணங்களை வெறுக்கிறான். அப்படிப்பட்டவர்களை  விலங்குக்கும் கீழ்நிலை குணம் உடையவர்கள் என்று ஒதுக்குவதே சிறந்தது.

ஸ்ரீ ராமர் வாழ்க. மரியாதை ராமன் வாழ்க.




Tuesday 2 October 2018

குடும்ப வாழ்க்கையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமா? ஒரு அலசல்...

"ஒரு குழந்தை போதும்அந்த ஒரு குழந்தைக்கு தரமான கல்வி, வசதிகள் செய்து கொடுத்து வாழ்க்கையில் உயர்த்துவோம்"
என்ற எண்ணம் பொதுவாக இன்றைய இந்தியர்களிடம் வந்துள்ளது.


இதற்கு முன் 1970,1980களில் இருந்தவர்கள், "இரண்டு குழந்தை போதும்" என்று எண்ணினார்கள்.

1960களில் அதற்கும் முன் இருந்த காலங்களில் இருந்தவர்கள், :குழந்தைகள் பிறப்பை எண்ணிக்கை அடிப்படையில் தடுக்கவில்லை".
மேலும்,
1970களில் கருத்தடை சாதனங்கள், ஆப்பரேஷன் போன்றவை அன்று இல்லை.
இதனால், பொதுவாக, ஒரு கணவன் மனைவிக்கு "குறைந்தது 5 குழந்தைகள்" இருந்தனர்.

இன்று, 80-90 வயதில் வாழும் இவர்களுக்கு, வாழ ஒரு இடம் உள்ளது. 

5 குழந்தைகளை பெற்ற இவர்கள், தன் 90 வயதில், இரண்டு மூத்த குழந்தைகளை கூட இழந்து இருக்க வாய்ப்பு உண்டு.
மற்ற இரண்டு பேர், வெளிநாட்டில் இருக்கவும் வாய்ப்பு உண்டு.
அல்லது, தன் குடும்ப பொறுப்புகளில் சிக்கி இருக்கவும்  வாய்ப்பு உண்டு.

குறைந்த பட்சம் ஒரு பிள்ளையாவது!! ஆரோக்கியம் உள்ளவனாக, தன் 90 வயது பெற்றோரை வைத்து காப்பாற்ற கூடியவனாக இருப்பான்.
இன்று கூட, சில வீடுகளில் 90 வயது கிழவன்/கிழவி நிம்மதியாக இருப்பதை நாம் பார்த்து இருக்க வாய்ப்பு உண்டு.

"இந்த நிம்மதியை, நம்முடைய வயதான காலத்தில் நாம் அனுபவிக்க போவதில்லை" என்பதையே இதில் கவனிக்க வேண்டும்.
பெரும் அபாயம் நமக்கு முன் காத்துக்கொண்டு இருக்கிறது.




பல குழந்தை பெற்ற இவர்கள், தங்கள் குழந்தைகள் அனைவருக்கும் தரமான கல்வி கொடுக்க இயலாமல் போனாலும், குடும்ப பொறுப்பு ஒருவன் தலையில் மட்டும் ஏறாமல் இருக்க உதவி செய்தனர்.
தம்பியின் கஷ்டத்தில் அண்ணன் கை கொடுப்பதும்,
அண்ணன் கஷ்டத்தில் தம்பி கை கொடுப்பதும்,
தங்கை தம்பியிடம் பாசத்தை பொழிவதும்,
அண்ணன் தங்கைக்கு தான் சேர்த்த பொருளை கொடுத்து சுகமாக வைப்பதும் இன்றுவரை நடந்துள்ளது. 
இனி நடக்கப்போவது இல்லை..

துக்கமும், சுகமும் ஒருவருக்கு ஒருவர் பகிரப்பட்டதால், நோய் இல்லாமல் இருந்தனர். எதிர்கால பயமே இல்லாமல் இருந்தனர்.

பல குழந்தை பெற்று இன்று வயதாகி விட்ட முதியவர்களுக்கு ஒரு மகனோ, மகளோ இருக்கின்றனர்.
இது இன்று வரை நாம் பார்க்க கூடிய காட்சி.
இனி பார்க்க இயலாத காட்சி.

1980-90களில் "இரண்டு குழந்தை போதும்" என்று இருந்தனர் முந்தைய தலைமுறைகள்,

இரு குழந்தைகள் பெற்று 60 வயதை கடந்து நிற்கும் இவர்கள்,
"6 மாதம் ஒரு பையன் வீடு, 6 மாதம் மற்றொரு பையன் வீடு" என்று நாடோடி வாழ்க்கை வாழ்கின்றனர்.
இரண்டும் பெண் குழந்தையாக இருந்தால், "அனாதைகளாக" தனியாக தன் 60 வயதுக்கு மேல் வாழ ஆரம்பிக்கின்றனர்.
இன்று நாம் பார்க்க கூடிய காட்சி !!

இதில் கணவன் இறந்து, வயதான மனைவியின் வாழ்க்கை அந்தோ பரிதாபம்.
அதை விட கொடுமை,
மனைவி இறந்து, 60 வயதுக்கு மேல் கணவன் மட்டும் வாழும்  தனிமை வாழ்க்கை.
பிறந்த 2 இரண்டு குழந்தைகளில் ஒன்று இறந்து, மற்றொருவனும் பணமில்லாமல் கஷ்டப்படும் வாழ்க்கை, அதை விட நரகம்

வயதான காலத்தில் நோய், பார்த்துக்கொள்ள ஆள் இல்லை. இது அதை விட நரகம்.

இவை எல்லாம் இன்று 60 வயதை கடந்து நிற்கும் ஆண்களும், பெண்களும் சந்திக்கும் நிஜங்கள்..

இன்று "ஒரே குழந்தை போதும். அந்த குழந்தைக்கு தரமான கல்வி தருவது ஒன்றே லட்சியம்" என்று வீறுநடை போடும் தலைமுறை, 60 வயதுக்கு மேல் உயிருடன் இருப்பதே தேவையா? என்ற நிலைக்கு நிச்சயம் கொண்டு போகப்போகிறது.

60 வயதுக்கு மேல், நோய் வந்தால், பெற்ற ஒரு மகன்
மொத்த செலவை சமாளித்து, 
பெற்றவர்கள் உடம்பையும் பார்த்துக்கொள்வான் 
என்று எதிர்பார்க்க முடியாது.

தன் கஷ்டங்களை, சுகங்களை தன் உடன்பிறந்த தம்பி தங்கைகளிடம் சொல்லிக்கொள்ள கூட ஆளில்லாமல், பெற்ற ஒரு மகனே, stress, tension என்று முழித்து, நமக்கு முந்தி கொண்டு இறக்கவும் வாய்ப்பு உண்டு.

பண தேவைகளை சமாளிக்க முடியாமல் மகனும்,
நோய் வந்ததால் உதவிக்கு ஆள் இல்லாமல் பெற்றவர்களும்,
சுக துக்கங்களை பகிர முடியாமல் இருவரும் 
"குடும்ப வாழ்க்கையே நரகம்" 
என்று தோன்ற வைத்து, "இனி குழந்தையே வேண்டாம்!!" என்று நிலைக்கு வந்து விடுவோம்.

அப்படியே பெற்றாலும், "பிள்ளையை அரசு காப்பாற்ற வேண்டும். வயதான பின், அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்" என்று பயமுறுத்தவும் வாய்ப்பு உண்டு.

இப்படி குடும்ப வாழ்க்கை பொதுவாக அழிந்தாழும்,
இன்றும்
சொந்தமாக தொழில் செய்து,
இரண்டுக்கு மேல் குழந்தை பெற்று, மேலும்
கூட்டு குடும்பமாக வாழும் எவரும்,
இது போன்ற துன்பங்களை எதிர்காலத்திலும் எதிர்கொள்ள போவதில்லை என்பதே உண்மை.

மார்வாடி, நகை செட்டியார் போன்றவர்கள் இன்று வரை,
சொந்தமாக தொழில் செய்து,
இரண்டுக்கு மேல் குழந்தை பெற்று, மேலும்
கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர்.
இவர்கள் இப்படியே இருக்கும் வரை, இவர்கள் சுகமாகவே வாழ்வார்கள்.

"நோயும், ஆயுசும் நம் கையில் இல்லை" என்பதை மறக்க கூடாது.
ஆனால், "குடும்ப வாழ்க்கை அமைத்து கொள்வது நம் கையில் உள்ளது", என்பதை மறக்க கூடாது.

இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வது வளர்ப்பதற்கு கடினமாக இருந்தாலும், அது  குழந்தைகளுக்குள் ஒரு பாதுகாப்பு உணர்வை தரும். எதிர்கால பயத்தை , அநாதை என்ற பயத்தை போக்கும்.

ஒரு குழந்தை போதுமே !
குழந்தையே வேண்டாமே !
தனியாக வாழ்கிறோமே !
என்ற சிந்தனை உடைய இன்றைய சமுதாயம், "தனக்கும் 60, 80 வயதாகும்!!" என்பதை சிந்திக்க வேண்டி இருக்கிறது.

70 வயதில், பெற்ற ஒரு  பிள்ளையும் 40 வயதை கடந்து இருப்பான். 
அவனும் உடல் பலமில்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு.
அவனும் பண வசதி இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு.
அவன் கஷ்டத்தை யாரிடமும்  சொல்லிக்கொள்ள முடியாமல் இருக்க வாய்ப்புண்டு.
அவனும் பென்ஷன் இல்லாத வாழ்க்கை வேறு வாழ வேண்டும்.


80 வயதுக்கு மேல் வாழ நேர்ந்தால், காப்பாற்ற பெற்ற ஒரு மகனும் உயிருடன் இருப்பானா? என்று கூட தெரியாது.
"நோயும், ஆயுசும் நம் கையில் இல்லை" என்பதை மறக்க கூடாது.

சிதறிய குடும்பங்கள்,
குழந்தை இல்லாத குடும்பங்கள்,
ஒரே குழந்தை பெற்ற குடும்பங்கள்,
சீரழிய வாய்ப்புக்கள் கோடி உள்ளது.

பாரத நாட்டின் தனித்துவம் "குடும்ப கலாச்சாரமே".  
அது அழியாமல் இருக்க, சற்று சிந்திப்போம்..  பகிர்வோம்.


Friday 28 September 2018

சக்தியை கொடுப்பது எது? உலகில் மதிக்கத்தக்கது எது? மதிக்க வேண்டியது எது?

இந்த உலகில்,
                     நாம் மிகவும் மதிக்கத்தக்கது எது?
                     நாம் மதிக்க வேண்டியது எது?
                     நாம் உணர வேண்டியது எது? 
                     நாம் அடைய வேண்டியது எது?
உலகத்தை பார்ப்பதற்கு, நமக்கு ஒரு தீபத்தின் ஜோதி (ஒளி) தேவைப்படுகிறது.



ஒரு தீபத்தின் வெளிச்சத்தில் உலகம் தெரிகிறது.
யார் நிற்கிறார்கள்? யார் இருக்கிறார்கள்?
என்று அனைத்தும் இந்த தீப ஜோதியினால் நமக்கு தெரிகிறது.
தீப ஜோதி இல்லையென்றால், நிலா வெளிச்சத்தில் உலகம் தெரிகிறது.
இரவில் சந்திர ஜோதி நமக்கு உலகை காட்டுகிறது.
பகலில், சூரிய வெளிச்சத்தில் உலகம் தெரிகிறது.
சூரிய ஜோதி நமக்கு உலகை காட்டுகிறது.

தீப ஜோதியை விட ப்ரகாசமானது 'சந்திர ஜோதி'.

சந்திர ஜோதியை விட மிகவும் ப்ரகாசமானது 'சூரிய ஜோதி'.

ஆக சந்திர ஜோதியை விட, மிகவும் மதிக்கத்தக்கது சூரிய ஜோதி.

சூரிய ஜோதியை விட, பிரகாசமான ஜோதி உலகத்தில் இருக்க முடியுமா?
சூரிய ஜோதியை விட உலகத்தை காட்டும் சக்தியுள்ள ஒரு ஜோதி உண்டா?
ஆம்... இருக்கிறது.

கண் என்ற உறுப்பு இருந்தும், பார்க்க முடியாத குருடனுக்கு, ஆயிரம் சூரியன் சேர்ந்து, வெளிச்சத்தை கக்கினாலும், உலகம் இருப்பதை அவனுக்கு காட்ட முடியுமா?

கண் என்ற உறுப்பில், நேத்ர ஜோதியும்  உடையவன் தானே உலகை காண்கிறான்.

நேத்ரம் என்றால் தமிழில் "கண்" என்று அர்த்தம்.
ஆக சூரிய ஜோதியை விட, மிகவும் மதிக்கத்தக்கது நம்முடைய "நேத்ர ஜோதி" தானே.

இந்த கண்ணுக்கு எங்கிருந்து இந்த 'நேத்ர ஜோதி' வந்தது?
என்ற கேள்வி எழும்போது நமக்கு பல உண்மைகள் விளங்கும்.

செத்துப்போனவனுக்கு கண் இருந்தாலும், அந்த கண்ணில் இருந்த நேத்ர ஜோதியை காணவில்லையே!!

உடம்பில் உயிர் இருந்தவரை, நேத்ர ஜோதியை கண்ணுக்கு கொடுத்தது, உள்ளிருக்கும் "ஆத்ம ஜோதி" அல்லவா.

கொஞ்சம் சிந்தித்து பார்த்தாலே, 'ஆத்மஜோதி இந்த உடம்பில் இருக்கும் வரை தானே, இந்த உடம்பில் உள்ள ஜட பொருட்கள் சக்தி பெற்றது' என்ற உண்மை புரியும்.
ஆத்மா இந்த உடம்பில் இருக்கும் வரை தானே, 'கண்' என்ற அவயவம் பார்ப்பதற்கு பயன்பட்டது.
ஆத்ம ஜோதி உடலை விட்டு பிரிந்தவுடன், கண்ணுக்கு கிடைத்த "நேத்ர ஜோதியும்" மறைந்து விட்டதே.

கண் பார்த்தால் தானே, சூரிய ஜோதியே ப்ரயோஜனப்படுகிறது.

கண் பார்த்தால் தானே, சந்திர ஜோதியே ப்ரயோஜனப்படுகிறது.

கண் பார்த்தால் தானே, தீப ஜோதியே ப்ரயோஜனப்படுகிறது.

இந்த கண் பார்க்காமல் போனால், உலகம் இருந்தும் ப்ரயோஜனமில்லையே நமக்கு.

கண் தெரிவதற்கு காரணம்,  "ஆத்மஜோதி" உள்ளே இருப்பதால் தானே.

இப்படி இருக்கும் போது, ஆத்ம ஜோதியை விட பெரிய ஜோதி எது இருக்க முடியும்?

ஆத்ம ஜோதியை காட்டிலும் பெரிய ஜோதி கிடையாது.
அந்த மதிப்பு மிகுந்த ஆத்ம ஜோதி தானே "நாம்".
"நாம்" எத்தனை அருமை என்று அப்பொழுதுதானே புரியும்.

இந்த ஆத்ம ஜோதியின் அருமை புரிந்தவன், இந்த ஆத்மாவை எப்படி மதிப்போடு பார்த்து கொள்வான்.

இந்த உடம்பை காப்பாற்ற, அதற்கு உணவு கொடுக்க,  வாழ்நாள் முழுவதும் வேலை செய்து, யார் யாருக்கோ பணத்திற்காக அடிமையாகி போய், இந்த உடம்பை போஷிக்கும் நாம், ஆத்ம ஜோதியான நமக்கு ஆகாரம் போடாமல், நம்மை கவனிக்காமல் விட்டு விடுகிறோமே?
இது அநியாயம் அல்லவா?

உடம்பை கவனிப்பது போல, கொஞ்சம் ஆத்மாவையும் கவனிக்க வேண்டாமா?

ஜீவ ஆத்மாவான நமக்கு, இந்த உடல் கிடைக்க பகவான் அனுக்கிரகம் செய்ததே, பரமாத்மாவான தன்னை பூஜிப்பான், முக்திக்கு வழி செய்து கொள்வான் என்பதற்காக தானே.
கண் என்ற அவயவத்தால், ஸ்ரீ கிருஷ்ணனை தரிசித்து,
காலால் கோவிலுக்கும், திவ்ய க்ஷேத்ரங்களுக்கும் நடந்து,
வாயால் பகவானை பாடி, ராம ஜபம் செய்து,
கையால் பூஜை செய்து, பக்தி செய்து, இறுதியில்
இந்த ஜீவஆத்மாவை, அந்த பரமாத்மாவிடம் சேர்த்து கொள்வான் என்று தானே மனித உடம்பு கொடுக்கிறார் பகவான்.
நம் உடம்பில் உள்ள எந்த உறுப்புக்கும், சக்தியை கொடுப்பது உள்ளிருக்கும் ஆத்ம ஜோதி தானே.

கண் என்ற அவயவம், நேத்ர ஜோதியை, ஆத்ம ஜோதியின் துணையால் தானே பெறுகிறது.



ஆத்மாவோ, "சுயமே பிரகாசம்" உடையதாக உள்ளது.

இருட்டான இடத்தில் ஒருவனிடம், "நீ (ஆத்மா) இருக்கிறாயா?" என்று கேட்டாலும்,
"நான் இருக்கிறேன்" என்று தானே சொல்வான்.
"நான் இல்லை" என்று சொல்வானா? இல்லையே.

இருட்டில் இருந்தாலும், வெளியில் உலகில், தீபஜோதி இல்லாமல் போனாலும், தன் ஆத்மஜோதியாலேயே "நான் இருக்கிறேன்" என்று தெரிந்து கொண்டு விடுகிறானே.




இதை சற்று சிந்திக்கும் போது தான், நமக்கு, "ஆத்ம ஜோதி"யான நம் மகத்துவம் புரியும். நாம் அருமை என்றும் புரியும்.

"ஆத்ம ஜோதியான நாம்" உடம்பை விட்டு வெளியேறி விட்டால்,
மலை, ஆகாயம், கடல் போன்ற ஜடமான பொருட்களை போன்று தான், இந்த உடம்பும் என்று தெரிந்து விடுமே?

இத்தனை நாள் இந்த "உடம்பே" 'நான்'" என்று நினைத்த அறிவீனம் நமக்கு புரியுமே.

நான் தான் அந்த "ஆத்ம ஜோதி" என்று புரிந்து கொண்டவன், இந்த ஜடமான உடம்பு நமக்கு பரமாத்வால் ஏதோ ஒரு காரணத்துக்காக கொடுக்கப்பட்டு உள்ளது என்று உணர்கிறான்.
உடம்பை மட்டுமே போஷிக்காமல், ஆத்மாவையும் போஷிக்கிறான்.

இன்னொரு விளக்கு (ஜோதி) கொண்டு பார்க்க வேண்டிய அவசியமில்லாமல், தானே பிரகாசமாக இருப்பதால், ஆத்ம ஜோதியே சிறந்தது.

அந்த ஆத்ம ஜோதி "நீ தான்" என்று வேதம் நம் மதிப்பை நமக்கு காட்டுகிறது.

தீப ஒளியை கொண்டு, ஆத்ம ஜோதியை பார்க்க முடியாது.
சூரிய ஒளியை கொண்டும், ஆத்ம ஜோதியை பார்க்க முடியாது.
ஆனால்,
ஆத்ம ஜோதியால், அனைத்து ஜோதியையும் பார்க்க முடிகிறது.
ஆத்ம ஜோதியை விட உயர்ந்தது உலகில் உண்டா?

ஆத்மாவுக்கு தான் இருப்பது இருட்டில் இருந்தாலும் தெரிவதால், ஆத்மாவை "சுயம் பிரகாசம்" என்றும் சொல்கிறோம்.

இன்னொரு ஜோதி கொண்டுதான் அறிய முடியும் என்று இல்லாத படி, தானே பிரகாசமாக இருப்பதால், தானே ஞானத்துடன் இருப்பதால், ஆத்மாவுக்கு "ஞான ஸ்வரூபன்" என்றும் பெயர்.

ஞான ஸ்வரூபனான ஆத்மாவுக்கு தான் இருப்பது தெரிகிறது. 
ஜடமான பொருளுக்கு தான் இருப்பது தெரிவதில்லை.

உலகத்தில் உள்ள எல்லா ஜட வஸ்துக்களும், இந்த ஞான ஸ்வரூபமான 'ஆத்ம ஜோதியால்' மட்டுமே அறியப்படுகிறது.

அத்தனை பெரிய ஜடமான மலைக்கு, தனக்கு மேலே ஆகாயம் இருப்பது தெரியாது. "தான்" இருப்பதும் தெரியாது.
அத்தனை பெரிய ஜடமான ஆகாயத்திற்கு, அருகில் கடல், மலை இருப்பது தெரியாது. "தான்" இருப்பதும் தெரியாது.

இவையெல்லாம் பெரிய பெரிய பொருளாக இருந்தாலும், ஜடமாக இருப்பதால், "தான்" இருப்பது கூட தெரிவதில்லை.

ஆனால், உலகத்தில் உள்ள சிறிய பொருளிலிருந்து, பெரிய பெரிய மலைகள், கடல், ஆகாயம் வரை  இருப்பது, ஆத்மாவான "நமக்கு" தெரிகிறது.

'ஆத்மா'வான நமக்கோ இந்த உலகம் இருப்பதும் தெரிகிறது. "தான்" இருப்பதும் தெரிகிறதே!!  எத்தனை அற்புதமான படைப்பு நாம்! 

அப்பொழுது தான், ஆகாசத்தை விட, மலையை விட, கடலை விட, மிகவும் பெரியது, மதிக்கத்தக்கது "ஆத்மா" என்று புரியும்.

"உலகத்தில் உள்ள ஜட பொருட்களை எல்லாம் அறியக்கூடிய ஆத்மாவல்லவோ நீ.
மதிப்பு மிக்க ஆத்மாவாகிய நீ, ஜடமான இந்த உடம்பை போய் "நான், நான்" என்று நினைக்கிறாயே?
ஆத்மாவுக்கு எவ்வளவு பெரிய அவமானம் இது?"
என்று கேட்கிறது வேதம்.

இந்த உடம்பு மாறிக்கொண்டே இருக்கிறதே. ஒரு நாள் சுருங்கி, அழுகி, செத்து போய் விடுமே.
ஆத்மா (நீ) வெளியேறிய பின்,
இந்த உடம்பு தானாக அழுகி விடுமே?
புதைத்தால் மண்ணோடு மண்ணாகி விடுமே?
எரித்தால் சாம்பலாகி விடுமே?.
அப்படியே விட்டு விட்டால், பறவைகள் கொத்தி தின்று விடுமே?
இந்த உடம்பை போய் "நான் நான்" என்று நினைப்பது, எத்தனை முட்டாள் தனம்?

கொஞ்சம் விவேக புத்தியால் உணர்ந்து, தான் அந்த "ஆத்ம ஜோதி" என்று எப்பொழுதும் அனுசந்தானம் (நினைத்து) செய்ய வேண்டும்.

இந்த உடம்பு தான் அல்ல, தான் உள்ளிருக்கும் "ஆத்ம ஜோதி" என்று உணர்ந்தவன் எப்படி இருப்பான்?

அந்த ஆத்ம ஜோதி தான் "நான்" என்று புரிந்து கொண்டு விட்டால்,
ஒரு பிடி சர்க்கரையை வாயில் போட்டால், "சுவைக்கிறதே" என்றா தோன்றும்?. பைத்தியக்காரா! அதே சக்கரையை செத்தவன் நாக்கில் போட்டால், சுவைக்குமா?

இது நாள் வரை நாக்கா சுவைத்தது?
சுவைக்கும் சக்தியை கொடுத்தது ஆத்ம ஜோதி அல்லவோ.

ஆத்ம ஜோதியான "நான்" உள்ளே இருப்பதால் தானே, நாக்குக்கு சுவை தெரிகிறது என்ற ஞானம் ஏற்படும்.
இந்த சுவை என்ற சுகம் நாக்கினால் ஏற்பட்டது. அவ்வளவு தானே என்று இருப்பான்.

ஒருவன் நீங்கள் ரொம்ப அறிவாளி சார், என்று புகழ்ந்தால், காதுக்கு இனிமையாக இருக்கிறது.
ஆனால், அந்த காதுக்கு கேட்கும் சக்தியை கொடுத்தது யார்?
ஆத்ம ஜோதியான உள்ளே இருப்பதால் தானே காதுக்கு கேட்கும் சக்தியை கிடைத்தது என்ற ஞானம் ஏற்படும்.

இந்த புகழ்ச்சி என்ற சுகம் காதினால் ஏற்பட்டது. அவ்வளவு தானே என்று இருப்பான்.
இதெல்லாம் அல்ப சுகம் என்று நிதானமாக இருப்பான்.

இந்த ஜட வஸ்துக்களான கண், காது, நாக்கு, மூக்கு, தோல் போன்றவற்றின் துணை கொண்டு ஆத்மா அனுபவிக்கும் சுகம் அல்ப சுகங்களே.

இவற்றின் துணை இல்லாமல், ஆத்ம ஜோதியான தன்னை மட்டுமே கொண்டு அனுபவிக்க தெரிந்தவன், "ஞான இன்பத்தை' அல்லவா அனுபவிக்கிறான் என்கிறார் நம்மாழ்வார்.

மகான்கள் இந்த உலகத்தில் பூத உடலை விட்டு சென்றாலும், ஆத்ம ஜோதியான அவர்கள் இருந்து கொண்டே இருக்கின்றனர். அருள் செய்து கொண்டே இருக்கின்றனர்.
காஞ்சி பெரியவர், சாய் பாபா போன்ற மகான்கள் இன்றும் ஜீவிக்கின்றனர். ஞான இன்பத்தை அனுபவித்து கொண்டு இருக்கின்றனர்.

'அதனில் பெரிய சுடர் ஞானஇன்பமே ஓ' - என்று  திருவாய்மொழியில் (நம்மாழ்வார்) பாடுகிறார்.

இந்த ஜட வஸ்துக்களை கொண்டு, ஆத்ம ஜோதியான நீ அனுபவிக்கும் அனைத்து சுகங்களும், "அல்ப இன்பத்தை" தானே தரும்.
ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, அதன் மேல் ஐந்து ஓட்டை உள்ள ஒரு மூடியை வைத்து மூடி விட்டால், அந்த தீபத்தின் வெளிச்சம் சுதந்திரமாக எங்கும் பிரகாசிக்க முடியாமல், எப்படி வெளிச்சத்தை அந்த ஐந்து ஓட்டைகள் வழியோடு மட்டும் காட்டி, சிறை படுமோ,
அது போல,
ஆத்ம ஜோதியான நீ, ஆனந்தத்தை சுதந்திரமாக அனுபவித்த நீ, இந்த உடம்பு என்ற சிறையில், கண் காது மூக்கு நாக்கு தோல் என்ற ஐந்து ஓட்டைகள் வழியாக மட்டும் சுகத்தை அனுபவித்து, கைதியாக இருக்கிறாய்.



இதிலும், 'தான்' சிறையில் உள்ள ஆத்ம ஜோதி என்பதை அறியாமல், ஐந்து ஜன்னல் உடைய சிறைச்சாலையான இந்த உடம்பையே தான் என்று நினைத்து அஞானத்தில் மூழ்குகிறாய்.

நீ அனுபவித்த எல்லையில்லா இன்பத்தை தடுத்து, இந்த ஐந்து ஜன்னல் வழியாக மட்டும் சுகத்தையே பேரின்பமாக நினைக்காமல், இந்த ஜட வஸ்துக்களான கண், காது, மூக்கு, நாக்கு, தோல் இல்லாமல் சுகத்தை அனுபவிக்க தெரிந்தவன் எல்லையில்லா ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.

கண் என்ற வஸ்துவை கொண்டு தான் பார்க்க முடியுமானால், கண் என்ற ஜன்னல் கொடுக்கும் அளவு தான், ஆத்ம ஜோதி உனக்கு இன்பம் கிடைக்கிறது.

காது என்ற வஸ்துவை கொண்டு தான் கேட்க முடியுமானால், காது என்ற ஜன்னல் கொடுக்கும் அளவு தான், ஆத்ம ஜோதி உனக்கு இன்பம் கிடைக்கிறது.

இந்த உடம்பு என்ற சட்டையை கழற்றினோம் என்றால், அற்பமாக கிடைத்த சுகங்கள் போய், அகண்டமான எல்லையில்லா சுகம் இந்த ஆத்மாவுக்கு கிடைக்கிறது.

இந்த ஐந்து புலன்கள் வழியாகவே கிடைக்கும் இன்பத்தை கொண்டு எத்தனை ஜென்மங்கள் உழல்வேன்? என்கிறார் ஆழ்வார்.
எப்பொழுது இந்த உடலை விட்டு பிரிந்து, எல்லையில்லா ஆனந்தத்தை பெறுவேன் என்கிறார்.

சுதந்திரமான ஆத்மா பேரின்பத்தை அனுபவிக்க ஆசையில்லாமல், இந்த உடம்பினால் அனுபவித்த சிற்றின்பத்தை ஆசைப்பட்டால், சிற்றின்பமே கிடைக்கும்.

உடலை நினைத்தே உயிரை விடுபவன் முக்தி அடைவதில்லை. மீண்டும் மீண்டும் பிறக்கிறான்.

வைகுண்டம் நம்முடைய சொத்து. அங்கு அனுபவித்த பேரின்பமும் நம்முடையது, என்று இருக்க, "வைகுண்டமும் வேண்டாம், பேரின்பமும் வேண்டாம்" என்று இருக்கலாமா?
உலக ஆசையை தள்ளி, பேரின்பத்தை நாடி, வைகுண்டம் அடைவது மண்ணவற்கு விதியே என்று சொல்கிறார் நம்மாழ்வார்.

எப்பொழுது வரை நாம் அழியக்கூடிய பொருளை விரும்புகிறோமோ, அதுவரை, பிறப்பு வந்து கொண்டே இருக்கும்.
அழியக்கூடிய பொருளை விரும்பினால், அழியக்கூடிய பொருளே கிடைக்கும்.

எந்த ஜென்மத்தில் நமக்கு அழிவில்லாத இந்த ஆத்ம ஜோதியே 'நான்' என்ற தெளிவு பிறக்கிறதோ, நான் அடைய வேண்டியது அந்த பரமாத்வான நாராயணனை மட்டுமே என்று அறிந்து கொள்கிறானோ, அதுவே அவனது கடைசி பிறவி ஆகிறது. அந்த ஆத்மா முக்தி அடைந்து விடுகிறான்.

அழியக்கூடிய எதை ஆசைப்பட்டாலும் அதில் கிடைக்கும் இன்பமும் அழியக்கூடியதாகவே உள்ளது.
அதனால் தான்,
நமக்கு சுகம் என்று வந்தால், அதை தொடர்ந்து துக்கம் வருகிறது.
ஆரோக்யமாக இருக்கிறோம் என்று நினைத்தால், ஒரு நாள் நோய் வருகிறது.
லாபம் என்றால், நஷ்டம் வருகிறது.

உலகம் சுகமாக இருக்கிறது என்று நினைக்கிறான் உடம்பே "நான்" என்று நினைக்கும் அஞானி.
ஆனால் உலகம் உண்மையில் பயங்கரமாக இருக்கிறது.
கல்யாணம், விசேஷம், குழந்தையின் மழலை பேச்சு, அருமையான இசை, நிலா, சுமங்கலியான பெண்கள், பசு மாடு, வசதியான வாழ்க்கை
இவை அனைத்தையும் பார்க்கும் போது உலகம் சுகமாக இருக்கிறதே என்று தோன்ற செய்தாலும்,
கொஞ்சம் விவேகத்துடன் பார்த்தால்,

  • குழந்தையாக இருக்கும் போதே மரணம்,
  • கல்யாணம் ஆகி சில வருடத்தில் கணவன் மரணம், விதவையாகும் பெண்,
  • பெற்றவள் இருக்க, மகன் இறந்து விடுகிறான்,
  • மனைவி இறந்து, கணவன் அழுகிறான்,
  • அதை விட சோகம், குழந்தை, மனைவியை விட்டு விட்டு, கணவன் இறந்து விடுகிறான்.
  • இளமையான பையன் திடீரென்று இறந்து விடுகிறான்,
  • தாங்க முடியாத வியாதிகள்.

இவையெல்லாம் உலகத்தில் நாம் அனைவரும் பார்க்கிறோமே.

அல்ப காலம் வாழ கிடைத்த இந்த உடம்பை வைத்துக்கொண்டு, கொஞ்சம் விவேகமுள்ள எவன் தான் இந்த உலகம் சுகமானது என்று சொல்லி இங்கு வாழ ஆசைப்படுவான்?

இந்த துக்கமான உலகத்தில் இருந்து எனக்கு விமோசனம் கிடைக்காதா? என்று தானே நினைப்பான்.
உலக துக்கம் தாளாமல், தற்கொலை செய்து கொண்டு விடுவோம் என்று கூட சிலர் துணிந்து விடுகிறார்களே. 

தற்கொலை செய்து கொண்டாலும், மீண்டும் பிறக்க வேண்டுமே! 
அழிவில்லாத சுகம் இந்த உலகத்தில் பார்க்க முடியவில்லையே..

நோய்களும், துன்பங்களும் துரத்தும் இந்த உலகத்தில், இருந்து விடுபட, இந்த ஆதம் ஜோதி "நான்" என்று அறிந்து, பக்தி செய்து மோக்ஷம் போவதை தவிர நமக்கு வழி இல்லையே..
இதனால் தான், ஆழ்வார் "வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே" என்று சொல்கிறார்.

இந்த உலக துன்பத்தில் இருந்து தப்பிக்க, ஆத்ம ஜோதியான நாம் வைகுண்டம் அடைய முயற்சிப்பதை தவிர வேறு வழியில்லை என்பதால், மண்ணில் பிறந்த அனைவரும், 
"வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே" என்கிறார் நம்மாழ்வார்

திருவாய்மொழியில் நம்மாழ்வார் பாசுரம்.
"வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுகென்று வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர் வகுந்தம் புகுவது மண்ணவர் விதியே"
என்று சொல்கிறார்.

உலக துன்பத்தில் இருந்து தப்பிக்க, வைகுண்டம் போகவேண்டியது தவிர வேறு வழியில்லை என்பதால், வைகுண்டம் புகுவது நம் விதியே என்று ஆழ்வார் சொல்வதற்கு காரணம் இது தான்.

உலகம் துன்பத்தால் சூழ்ந்து  இருப்பது புரியாதவரை "வைகுண்டம்" என்ற சொல் கூட புரியாமல் தான் இருக்கும். ஏளனமாக கூட இருக்கும்.

பணம் இருக்கும் போதும், இளமை இருக்கும் போதும், புதிதாக கல்யாணம் ஆகி இருக்கும் போதும், அகம்பாவம் (கர்வம்) மறைக்கும் போது, "வைகுண்டம்" ஏளனமாக கூட இருக்கும்.
ஆனால், விவேகமுள்ளவன், எந்த நிலையிலும் "இது எவ்வளவு நாளுக்கு?" என்று கேட்டுக்கொள்ளும் போது,
பின் வரக்கூடிய முதுமை, மரணம் போன்றவற்றை அறிந்து, அகம்பாவம் இல்லாமல், பக்தி செய்து வைகுண்டம் அடைய முயற்சி செய்வான்.

இன்றைய விஞ்ஞான உலகத்தில், இந்த சுகத்தை நிரந்தரமாக செய்ய பெரும் முயற்சி செய்கிறார்கள்.
தானே விசிறி கொள்ளாமல் இருக்க, ac, fan செய்துள்ளனர்.
காலால் நடப்பதற்கு பதில் bus, train, flight செய்துள்ளனர்.
உடல் ஆரோக்கியமாக இருக்க ஏதேதோ  மருந்து தயாரிக்கின்றனர்.

நூறு வயது ஆனாலும், இளமை ஆரோகிக்கியம் குறையாத மருந்து தயாரிக்க வேண்டியது தானே?
சாகாமல் இருக்க, மருந்து தயாரிக்க வேண்டியது தானே?. இன்று வரை முடியவில்லையே.



இன்றைய விஞ்ஞானம் எப்படியாவது உலகத்தில் அழியா சுகம் கிடைக்க வைக்க முயற்சி செய்கிறது.

முதுமையும், மரணமும் நிச்சயமாக உள்ள இந்த உலகில், எந்த முயற்சியும் எடுபடாது என்பதை உணர்ந்த நம் ரிஷிகள், இவர்கள் முயற்சிகளை பெரிதாக எடுத்து கொள்ளவும் இல்லை. நம்பவும் இல்லை.

இந்த வசதிகள் புராணத்திலும் இருந்ததே. புஷ்பக விமானம் என்று flight ராமாயண காலத்திலேயே சொல்லப்பட்டு உள்ளதே. காலால் நடக்காமல் இருக்க தேர் இருந்தது.
இதையெல்லாம் நம் ரிஷிகள் பெரிய விஷயமாக கருதவில்லையே.
இந்த வெளி சுகங்களை நம்பவில்லையே நம் ரிஷிகள்.
தாற்காலிகமாக உள்ள இந்த சுகங்களை நம் ரிஷிகள் நம்பவில்லையே.

எத்தனை பெருமையாக வாழ்ந்தாலும், சுகமாக வாழ்ந்தாலும், "தாற்காலிகம்" தானே.

இறந்த பின், எவனாக இருந்தாலும் மண்ணோடு மண்ணாகவோ, பொசுங்கியோ போக வேண்டியது தானே இந்த சரீரம்.

"பஸ்மாந்தகம் சரீரம்" என்ற ஒரு சொல்லில் வேதம் உண்மையை சொல்லி விடுகிறதே.

கோடீஸ்வரனானாலும், இறந்து விட்டால், தங்கத்தாலா பாடை கட்டுவார்கள்?

இந்த சரீரம் ஒரு நாள் சாம்பலாகி விடும் என்று வேதம் சொல்லும் போது, இந்த உலகத்தின் தாற்காலிகத்தை தானே அது நமக்கு சொல்கிறது.

ஆழ்வார்கள் பாசுரத்தில் பல இடங்களில் இந்த உலகத்தில் உள்ள துன்பங்களை, மரணத்தின் போது ஏற்படும் துன்பங்களை எடுத்து எடுத்து நமக்கு காட்டுகின்றனரே, எதற்காக?
"தற்காலிகமான வாழ்க்கையை நம்பாதே" என்பதற்காக தானே.

"ப்ரம்ம லோகம் வரை அழிய கூடியது என்று இருக்கும் போது,50-100 வயது வரை வாழும் அல்ப வாழ்க்கையை நம்பாதே.
அகம்பாவம் அகற்றி, வைகுண்டம் அடைய நாராயணனை சரணம் செய்"
என்று ஆழ்வார்கள் வழி காட்டுகின்றனரே.

சொர்கலோகம் சென்றாலும் உலகத்திற்கு திரும்ப வேண்டும்.

பிரம்மாவின் இரவு பொழுதில்,
நைமித்திய பிரளயம் ஏற்பட்டு, சொர்கலோகம் ஆரம்பித்து, பூலோகம், பாதாளம் வரை அழிந்து விடும்.
மீண்டும் அவருடைய பகலில்
ப்ரம்மா மூன்று லோகங்களை மீண்டும் ஸ்ருஷ்டி செய்கிறார்.

பிரம்மாவின் ஆயுசு முடியும் பொழுது,
பரமபத நாதனான நாராயணனால் மகா பிரளயம் ஏற்பட்டு,
சொர்கலோகத்துக்கு மேல் உள்ள மகர (நக்ஷத்திர) லோகம், ஜன லோகம்,தப லோகம், சத்ய லோகம் என்ற ப்ரம்ம லோகம் உட்பட  பூலோகம், பாதாளம் வரை சேர்த்து 14 லோகங்களும் அழிந்து விடுகிறது.
பஞ்ச பூதங்களான ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்று எதுவுமே இல்லாது போகும்.
அந்த நிலையிலும், அழியாமல் இருப்பது நம்முடைய ஆத்ம ஜோதியும்,
வைகுண்டமும் தான். 
வைகுண்டத்தில் நாராயணன் யோக நித்திரையில் இந்த ஜீவ ஆத்மாக்கள் அனைவரையும் தன் இதயத்தில் வைத்து, 14 உலகங்களை தன் திரு வயிற்றில் வைத்து இருந்து, மீண்டும் தன் சங்கல்பத்தால் 14 லோகங்களை ஸ்ருஷ்டி செய்து, பிரம்மாவை நியமித்து, மோக்ஷம் அடையாத ஜீவ ஆத்மாக்கள் மீண்டும் பிறக்க வைக்கிறார்.

இந்த பிரளய காலத்தில், பரமாத்மாவாவின் இதயத்தில் இருந்து பேரின்பத்தை எங்கு இருந்து அனுபவித்தோம் என்று தெரியாமல் அனுபவித்த நாம், உலகத்தில் பிறந்தாலும் ஆனந்தத்தை தேடிக்கொண்டே இருக்கிறோம்.

அறியாமல் பேரின்பத்தை அனுபவித்ததால், உலகில் கிடைக்கும் சிற்றின்பத்தை எல்லாம் அடைய முயற்சி செய்து, துன்பத்தை அடைகிறோம்.

ஸத் என்ற அழிவில்லாத வைகுண்டம் அடைவதை தவிர, பரமாத்மாவை அடைவதை தவிர, ஆத்ம ஜோதியான நமக்கு, உலக துன்பங்களில் இருந்து விடு பட வேறு வழியில்லை.

நாம் இந்த உடம்பு அல்ல, "ஆத்ம ஜோதி"யே நாம் என்று அறிவோம்.
நாராயணனிடம் பக்தி செய்து, வைகுண்டம் அடைய ஆசை படுவோம்.