Followers

Search Here...

Thursday 25 October 2018

திருமலையாக இருக்கும் ஆதிசேஷன் எத்தனை நீளமாக படுத்துள்ளார். ஆதிசேஷன் மேல் வெங்கடேச பெருமாள் எங்கு இருக்கிறார்?

ஆதிசேஷன் எம்பெருமானுக்கு எப்படி எல்லாம் சேவை செய்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமான் பரவாசுதேவனாக இருந்தால், இவர் அமர்வதற்கு தானே சிம்மாசனம் ஆகி விடுகிறார்.



பாற்கடலில் எம்பெருமான் வ்யூஹ அவதாரம் செய்து மகாவிஷ்ணுவாக இருந்தால், இவர் படுத்தால், தானே பஞ்சுபடுக்கை ஆகி விடுகிறார்.
எம்பெருமான் நடந்து சென்றால், தானே அவருக்கு குடையாகி விடுகிறார்.
(கிருஷ்ண அவதாரம் செய்த போது யமுனையை கடக்கும் போது குடையானார்)
எம்பெருமான் நின்றால், தானே அவர் திருவடிக்கு பாதுகை ஆகி விடுகிறார்.
(திருமலையப்பன் நிற்க  சேஷாத்திரி (திருமலை) ஆனார்)

இப்படி
சர்வ தேச (எந்த இடத்திலும்),
சர்வ கால (எந்த சமயத்திலும்),
சர்வ அவஸ்தைகளிலும் (எந்த நிலையிலும்)
எம்பெருமானுக்கு சர்வ கைங்கர்யமும் (எந்த சேவையும்) செய்யக்கூடியவராக இருக்கிறார் ஆதிசேஷன்.

எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதில், ஆதிசேஷனை போல ஆசையோடு செய்ய வேண்டும்.

ஏழுமலைகளாக எந்த யுகத்திலோ தோன்றிவிட்ட ஆதிசேஷன் "சேஷாத்ரி" என்ற பெயருடன் எம்பெருமான் அவதாரத்திற்கு காத்து கொண்டிருந்தார்.

ஆதிசேஷன் "சேஷாத்ரி" என்ற 7 மலையாக ஆகி இருந்தார். காலப்போக்கில் ஒவ்வொரு மலைக்கும் தனி பெயர் ஏற்பட்டது.
1. சேஷாத்ரி (உண்மையான பெயர்)
2. நாராயணாத்ரி
3. வ்ருஷபாத்ரி (வ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்ற மலை)
4. அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த மலை)
5. கருடாத்ரி
6. வெங்கடாத்ரி (வெங்கடேச பெருமாள் இருக்கும் இடம். பாவங்கள் பொசுங்கும் மலை)
7. சிம்மாத்ரி


"அத்ரி" என்றால் மலை என்று அர்த்தம்.

ஆதிசேஷன் எத்தனை நீளமாக படுத்தார்? என்று பார்க்கும் போது,
காளஹஸ்தி என்ற இடத்தில் ஆதிசேஷனின் தலை (சிரசு) ஆரம்பித்து,
அந்த பாம்பின் வளைந்து இருக்கும் தலையின் உச்சத்தில் அவர் தரித்து இருந்த நாக ரத்தினத்தின் உச்சத்தில், வெங்கடேசபெருமாள் ஆனந்த விமானத்தில் தன்னை வெளிக்காட்டி, அந்த சிரசையே "வெங்கடாத்ரி" என்ற ஒரு மலையாக ஏற்று வீற்றிருக்கிறார்.
ஆதிசேஷனின் இதய பகுதியில் உருவான க்ஷேத்ரமே "அஹோபிலம்".
ஸ்ரீசைலம் என்ற இடத்தில் ஆதிசேஷனின் வால் பகுதி முடிகிறது.

காளஹஸ்தி ஆரம்பித்து, ஸ்ரீசைலம் வரை ஆதிசேஷன் படுத்தார் என்றால், ஏழு மலைகளின் நீளம் நமக்கு புரியும்.

வைகுண்டத்தை பூலோகத்தில் கொண்டு வந்து விட்டார் ஆதிசேஷன், பகவான் கருணையின் காரணமாக.




இப்படி அதி ஆச்சர்யமாக எம்பெருமான் வருவதற்காக படுத்து விட்டார் ஆதிசேஷன்.
இதை பார்த்த கங்கை, இந்த திருமலைக்கு ஒரு வெள்ளை கொடி பறக்க விடுவது போல, "ஆகாச கங்கை"யாக பொழிய ஆரம்பித்தாள்.

கங்கையே வந்தவுடன், ஏழு மலையையும் சூழ்ந்து கொண்டு அனைத்து புனிதமான தீர்த்தங்களும் ஆங்காங்கே உருவானது.

மலையே செழிப்பு நிறைந்து, பூக்களும், மரங்களும் நிறைந்த பசுமையான சோலை ஆனது திருமலை, எம்பெருமானை வரவேற்க.

மலையாக பார்க்காமல், ஆதிசேஷனாக பார்க்கும் போது தான், பக்தன் எப்படி எல்லாம் கைங்கர்யம் செய்கிறான் என்பது புரியும்.

காற்றில் மரங்கள் யாவும் அசைவதை பார்த்தால், ஆதிசேஷனின் ஆயிரம் தலைகள் அசைவது போல தோன்றுமாம் பக்தனுக்கு.

ஏழு மலையையும்,  வெண்மையான மேகங்கள் சூழ்ந்து வருவதை பார்த்தால், க்ஷீராப்தியில் இருந்த பாற்கடல் ஆதிசேஷனும் கிளம்பி விட்டார், எம்பெருமானும் கிளம்பி விட்டார் என்று அறிந்து, இனி வைகுண்டத்தில் என்ன வேலை என்று திருமலைக்கு வந்து விட்டதோ என்று தோன்றுமாம் பக்தனுக்கு.

வைகுண்டத்தில் இருந்து ஆதிஷேஷனே திருமலையாக வந்து விட்டார் என்று உணர்ந்த ரிஷிகள், தங்கள் ஆஸ்ரமங்களை விட்டு விட்டு, திருமலை வந்து பகவத் தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

மயில்களும், குயில்களும் ஆனந்தமாக கானம் செய்து விளையாடியது. பெருமாளின் வருகைக்கு
காள என்றால் "சிலந்தி",
ஹஸ்தி என்றால் "யானை".
இந்த ஸ்தலத்தில் யானையும், சிலந்தியும் சிவ பூஜை செய்த காரணத்தால், இந்த இடத்திற்கு பிற்காலத்தில் "காளஹஸ்தி" என்ற பெயர் உண்டானது. இன்று வரை சிவ ஸ்தலமாகவும் உள்ளது.
பெருமாளும், சிவனும் பிரித்து பார்த்து வழிபடும் பழக்கம் இருந்ததில்லை என்பது இதிலேயே தெரிகிறது.

ஸ்ரீசைலம் என்பதும் மற்றொரு சிவக்ஷேத்ரம். இந்த சிவக்ஷேத்ரத்தில், மருத மரமாக (அர்ஜுன மரம்) சிவபெருமானே இருக்கிறார்.  பார்வதி தேவி இங்கு மல்லிகை கொடியாக ஆகி, அந்த மருத மரத்தை சுற்றிக்கொண்டு இருக்கிறாள்.
இதனால் இங்கு சிவபெருமானுக்கு "மல்லிகார்ஜூன்" என்றும் பெயர்.

இயற்கையில் தோன்றியது இந்த மலை அல்ல, இங்கு வசிக்கும் எந்த மிருகமும், மனிதர்களும், பறவைகளும் என்ன பிரார்த்தனை செய்து இப்படி திருமலையில் வாசம் செய்கிறார்களோ நமக்கு தெரியாது.


மகான்கள், ஆழ்வார்கள் எல்லோரும் இந்த கண்ணோட்டத்தில் தானே திருமலையை பார்த்தனர். பார்க்கின்றனர்.

ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர் 'அனந்தாழ்வார்' திருமலையில் பூ கைங்கர்யம் ராமானுஜரின் உகப்புக்கு செய்து கொண்டிருந்தார்.
ஒரு சமயம், அனந்தாழ்வார் தன் சிஷ்யர்களுடன் மேல் நாட்டு திவ்ய தேசங்கள் ஆரம்பித்து, அனந்த பத்மநாபன் வரை சேவிக்க புறப்பட்டார்.

பயணத்திற்கு திருமலை பிரசாதமே எடுத்துக்கொள்ளலாம் என்று ஒரு மூட்டையில் பிரசாதம் எடுத்துக்கொண்டு, கிளம்பினார்கள்.

கிளம்பி வெகுதூரம் சென்ற பின், சரி சாப்பிடலாம் என்று நினைத்து, பிரசாத மூட்டையை அவிழ்க்க, அதில் எறும்புகள் இருப்பதை பார்த்தார் அனந்தாழ்வார்.
அவர் சிஷ்யர்கள், "எறும்பை தட்டி விட்டு சாப்பிடலாமா? இல்லை அப்படியே பிரசாதத்தை வைத்து விட்டு பயணத்தை தொடரலாமா?"
என்று யோசிக்க,
அனந்தாழ்வார், "இந்த எறும்புகள் எல்லாம் திருமலையில் இருந்தே வந்திருக்கிறது.
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ" (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் செய்த பிரார்த்தனை, இந்த எறும்புக்கு கிடைத்துள்ளதே.
திவ்யதேச வாசம் செய்த எறும்புகளை இப்படி ஏதோ ஒரு கிராமத்தில் விட்டு விட கூடாது. இவையெல்லாம் எந்த ஜீவனோ நமக்கு தெரியாது.
திருமலை வாசம் பெற்ற இந்த ஜீவனை, நாம் மீண்டும் திருமலை சென்று, அங்கேயே இந்த பிரசாதத்தை வைத்து விட்டு நம் பயணத்தை மீண்டும் தொடர்வோம்" என்று சொல்லி அவர்கள் யாத்திரையை நிறுத்து விட்டு, மீண்டும் திருமலையில் ஏறி, அந்த எறும்புகளை மீண்டும் ஸ்வாமி புஸ்கரணி தீர்த்தம் அருகே,  திருமலையிலேயே விட்டு விட்டு, மீண்டும் யாத்திரையை தொடர்ந்தனர்.
நம் பூர்வ ஆச்சாரியர்கள் எப்படி திருமலையை பக்தியுடன் பார்த்தனர், அங்குள்ள ஜீவராசிகளை எப்படி மதித்து உள்ளனர் என்று புரிகிறதே.

திருமலையை மற்ற  இயற்கையாக தோன்றிய மலை போலவா ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.
ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும். 
அந்த பக்தி நமக்கு வர வேண்டாமா?

ஆதிசேஷனே ஏழு மலையாக இருக்கும் போது, பரவாசுதேவனே திருமலையப்பனாக நின்று கொண்டு இருக்கும் போது, இங்கு வசிக்கும் விலங்குகளும், பறவைகளும் மட்டும் சாதாரணம் என்று நினைக்க தோன்றுமா ஒரு பக்தனுக்கு?.
ஆழ்வார்கள் போன்று நமக்கும் பக்தி வர ஆசைப்பட வேண்டுமே.

எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ" (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் பாடும் பொழுது, இங்கு இருக்கும் செடி, கொடிகளுக்கு கூட மங்களாசாசனம் செய்து விட்டாரே. இங்கு இருக்கும் ஈ, எறும்பு கூட எந்த மகானோ என்றல்லவா நமக்கு தோன்ற வேண்டும்.

ஆயிரம் நாக்கு உடைய ஆதிஷேஷனே திருமலையின் மகத்துவத்தை சொல்ல முடியாத போது 18 புராணங்களும் திருமலையின் மகத்துவத்தை சொல்வது ஆச்சர்யமில்லையே.


ஆதிஷேஷனே, கலியில் ஸ்ரீ ராமானுஜராக 1017ல் அவதாரம் செய்தார்.
ஒரு சமயம், யதிராஜனாக (சந்நியாசி) ஆன பின்பு, திருமலையில் ஒரு மாதம் தங்கி, அவர் பூர்வ க்ருஹத்தில் மாமாவான "திருமலைநம்பி"யிடம் ராமாயண காலட்சேபம் கேட்கலாம் என்ற ஆசையோடு திருமலை வந்தார்.

"எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ" என்ற ஆழ்வார் பாசுரத்தை எண்ணி, திருமலையில் எப்படி கால் வைத்து போவேன்? என்று தயங்கி, தன் இரு கால்களையும் மடக்கி இருக்க கட்டி, தன் முழங்காலால் நடக்க ஆரம்பித்தார்.
ஸ்ரீ ராமானுஜர் முழங்கால் தேய திருமலை ஏறிக்கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்ட திருமலை நம்பி, கீழே இறங்கி ஓடி வந்தார்.
அதற்குள் ராமானுஜர் முதல் கோபுரம் வரை வந்து விட்டார்.

தன் மருமகன் தான் 'ராமானுஜர்' பூர்வ ஆஸ்ரமித்தில் என்றாலும், யதிராஜராக ஆகி விட்ட ராமானுஜரை சேவித்துக்கொண்டே,
"ஏன் இப்படி வர வேண்டும்?" என்று கேட்க,
"தங்களை சேவிக்கலாம் என்று தான் வந்து கொண்டிருந்தேன்"
என்றார் ராமானுஜர்.

"யதி ராஜர் இப்படி முட்டுக்கால் தேய வந்தால் இது சாத்தியமா?
சாதாரணமாக காலால் நடந்து வந்து பெருமாளை திருமலை ஏறி வந்து தரிசிப்பதே ஜனங்களுக்கு கடினமாக இருக்கும் போது, தாங்கள் ஆதிசேஷனாக இருக்கும் திருமலை மேல் கால் படக்கூடாது என்று இப்படி கால்களை கட்டிக்கொண்டு, ஏறி வந்தால், யதிராஜரே கால் வைக்க தயங்கினார் என்று தெரிந்தால், ஒருத்தர் கூட திருமலை வந்து எம்பெருமானை தரிசிக்க மாட்டார்களே!!

நீங்கள் திருமலையில் கால் வைத்து நடப்பது தோஷமில்லை.
ஒரு தாயார் தன் மடி மீது குழந்தை வைத்து கொள்ளும் போது, சில சமயம் தன் சின்ன காலால், தாயை உதைத்தாலும், அது அவளுக்கு ஏற்பு உடையதாக இருக்கும்.
அதை அவள் அபசாரம் என்று நினைப்பதில்லை.
அதுபோல, திருமலையில் கால் வைத்து ஏறினாலும், அது பெருமானுக்கு ஏற்புடையதாக இருக்குமே தவிர அபசாரமாக இருக்காது. கால் வைத்து வாருங்கள் என்று இதை சொல்ல தான் ஓடிவந்தேன்"
என்றார் திருமலை நம்பி.

"இதை சொல்வதற்கு யாராவது சிறுவனை அனுப்பி இருக்க கூடாதோ. நான் ஏற்று இருப்பேனே. இதற்கு தேவரீர் தானே புறப்பட்டு வர வேண்டுமா?" என்று ராமானுஜர் கேட்க,

"திருமலை முழுவதும் தேடி பார்த்து விட்டேன். அடியேனை தவிர சிறுவன் இங்கு கிடைக்கவில்லை. யாரை பார்த்தாலும் இவர் என்ன பாக்கியம் செய்து திருமலையில் வாசம் செய்கிறாரோ என்று மனதில் தோன்றுகிறது.
'எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ' என்ற ஆழ்வார் பாடிய பிறகு, இங்கு பிறந்த ஈ, எறும்பு கூட என்ன பாக்கியம் செய்ததோ என்று தான் தோன்றுகிறது.
யாரை பார்த்தாலும் பெரியவாளாக தோன்றுகிறது."
என்றார்.

ராமானுஜர் பிறகு, திருமலை ஏறி, பெருமானை தரிசித்தார்.

திருமலையை மற்ற  இயற்கையாக தோன்றிய மலை போலவா ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.
ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும்.

திருமலை ஏறி சென்று, ஆதிசேஷனின் தலை உச்சியில் இருக்கும் ரத்தினத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கும் வெங்கடேச பெருமாளை தரிசிப்போம்.


Saturday 20 October 2018

"அறம், பொருள், இன்பம், விடுதலை" என்று சொல்லாமல் "அறம், பொருள், இன்பம், வீடு" என்று ஏன் சொன்னார்கள்? காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

"மோக்ஷம்" என்ற சொல்லுக்கு "விடுதலை" என்றும் பொருள் உண்டு, "வீடு" என்ற பொருளும் உண்டு.
தமிழில் "மோக்ஷத்தை" சொல்லும் போது "வீடு" என்ற சொல்கிறார்கள்.

"தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்" என்று வேதம் கூறும் நான்கு விஷயங்களை.
"அறம், பொருள், இன்பம், வீடு" என்று தமிழிலில் சொல்கிறார்கள்.
நன்றாக கவனித்தோமென்றால்,
"அறம், பொருள், இன்பம், விடுதலை" என்று சொல்லவில்லை.
மோக்ஷத்தை, "வீடு" என்ற அர்த்தத்தை கொண்டு ஏன் சொன்னார்கள்? தெரிந்து கொள்ள வேண்டாமா தமிழர்கள்?

1. தர்மம், (धर्म) (rules)
2. அர்த்தம், (अर्थ) (wealth)
3. காமம், (काम) (desire)
4. மோக்ஷம் (मोक्ष) (freedom from rebirth)
என்ற நான்கு விஷயங்களை நோக்கி தான் மனிதர்கள் எப்பொழுதும் பயணிக்கின்றனர் என்கிறது சப்த ப்ரம்மமாகிய வேதம்.

இதை பொதுவாக 4 புருஷார்த்தங்கள் (Purushartha - லட்சியம்) என்று சொல்கிறது.



இதில் "மோக்ஷம்" என்ற விஷயத்தை நோக்கி செல்லும் மனிதர்கள் மட்டும், மீண்டும் பிறவி எடுக்காமல், சம்சார கடலில் இருந்து பகவானால்  விடுவிக்கப்படுகின்றனர்.
பிறவியில் இருந்து விடுதலை பெறுகின்றனர்.
ஆகவே, "மோக்ஷத்தை" தன் லட்சியமாக கொள்ளும் மனிதர்கள் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்.

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கில், அனைவரும் கட்டாயம் தன் வாழ்க்கையின் லட்சியமாக கொள்ள வேண்டியது "தர்மம்" (Human Rules) என்று சொல்லப்படுகிறது.
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற இந்த நான்கு சமஸ்கரித சொல்லுக்கு ஈடாக, தமிழிலில்
1. அறம் (சமஸ்கரித சொல் தர்மம்)
2. பொருள் (சமஸ்கரித சொல் அர்த்தம்)
3. இன்பம் (சமஸ்கரித சொல் காமம்)
4. வீடு (சமஸ்கரித சொல் மோக்ஷம்)
என்று சொல்கிறோம்.

"மோக்ஷம்" என்ற சொல்லுக்கு, "விடுதலை" என்பது தான் நிகரான தமிழ் சொல்.

பின்பு ஏன்?
"அறம், பொருள், இன்பம், விடுதலை"
என்று சொல்லாமல்,
"அறம், பொருள், இன்பம், வீடு"
என்று தமிழிலில் சொன்னார்கள்?

காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

'மோக்ஷம்' என்ற சொல் இரண்டு மோக்ஷத்தை குறிக்கிறது.
1. 'கைவல்யம்' என்பதும் ஒரு மோக்ஷம்.
2. 'வைகுண்டம்' என்பதும் ஒரு மோக்ஷம்.

கைவல்யம் என்றால் என்ன?
வைகுண்டம் என்றால் என்ன?
என்று புரிந்து கொள்ளும் போது, ஏன் 'மோக்ஷம்' என்ற சொல்லுக்கு 'வீடு' என்று தமிழில் சொன்னார்கள்? என்று புலப்படும்.

செய்த பாவத்திற்கு, இறந்த பின், ஜீவ ஆத்மா நரகம் சென்று தண்டனை அனுபவித்து, பின் மீண்டும் உலகில் பிறக்கிறது.

செய்த புண்ணியத்திற்கு, இறந்த பின், ஆத்மா சொர்க்கம் முதல் பிரம்ம லோகம் வரை, சென்று போகங்களை அனுபவித்து, பின் மீண்டும் உலகில் பிறக்கிறது.

ஆக, பாவம் செய்தாலும் மீண்டும் பிறவி உண்டு. புண்ணியம் செய்தாலும் மீண்டும் பிறவி உண்டு.

பிற மதங்களும், புண்ணியங்கள் செய்தால் சொர்க்கம் என்கிறது.

அந்த சொர்க்கமும் நிரந்தரமல்ல என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்.




சொர்க்க லோகத்தில் இருப்பவர்கள் தேவர்கள்.
இவர்கள் நம் புண்ணியம் தீர்ந்த பின், கீழ் லோகமாக இருக்கும் பூமிக்கு மீண்டும் பிறக்க அனுப்பி விடுகின்றனர்.

பிற மதங்கள் சொர்க்கத்துக்கு மேல் ஒன்று இருப்பதாக கூட நினைக்கவில்லை. அதுவே நிரந்தரம் என்றும் சொல்லிக்கொள்கின்றனர்.

நாமோ, சொர்க்க லோகத்துக்கும் மேல், இன்னும் 4 லோகங்கள் உள்ளது என்று சொல்கிறோம். அதுவும் நிரந்தரமில்லை என்றும் சொல்கிறோம்.
சொர்க்க லோகத்துக்கும் மேல்,
மகர லோகம் (stars), ஜன லோகம், தப லோகம், கடைசியாக ப்ரம்ம லோகம் என்று சொல்கிறோம்.

ப்ரம்ம லோகத்தையும் படைத்த நாராயணன் இருக்கும் இடம் வைகுண்டம் என்கிறோம். அங்கு செல்பவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பதில்லை என்கிறது நம் சனாதன தர்மம்.

சொர்க்க லோகத்தில் நின்று விட்ட மற்ற மத அறிவு எங்கே?, நம் அறிவு எங்கே என்று இதிலேயே புரிந்து கொள்ளலாம்.



மோக்ஷம் என்ற கைவல்யம் :
உலகம் நிலை இல்லாதது (அநித்யம்) என்று உணர்ந்து, உடல் வேறு, ஆத்மா வேறு என்று உணர்ந்து, உலகத்தோடு ஒட்டாமல், பாவம் புண்ணியம் செய்யாமல், யோகியாய் இருந்து, இறந்த பின், அந்த ஆத்மா, கைவல்யம் (விடுதலை) என்ற முக்தியை அடைகிறது.

மோக்ஷம் என்ற வைகுண்டம் :
உலகம் நிலை இல்லாதது (அநித்யம்) என்று உணர்ந்து, உலகத்தோடு இருந்து கொண்டே, பாவம் புண்ணியம் அனைத்தையும் நாராயணன் பாதத்தில் சமர்ப்பித்து, நாராயணனே கதி என்று வாழ்ந்து, இறந்த பின், அந்த ஜீவ ஆத்மாவை, பரதெய்வமான நாராயணன், தன் இடமான வைகுண்டம் (வீடு) என்ற முக்தியை, மோக்ஷத்தை கொடுத்து விடுகிறார்.

கைவல்யம் (விடுதலை) அடைந்த ஜீவனும், மீண்டும் பிறப்பதில்லை.
வைகுண்டம் (வீடு) போய் சேர்ந்த ஜீவனும், மீண்டும் பிறப்பதில்லை.

இரண்டுமே மோக்ஷம் தான் என்றாலும், இதில் நாம் அடைய வேண்டியது விடுதலை மட்டுமல்ல, வீடு போய் சேர வேண்டும் என்று வேதத்தின் உண்மையான அபிப்ராயத்தை தெரிந்த தமிழர்கள்,
"அறம் பொருள் இன்பம் விடுதலை"
என்று சொல்லாமல்,
"அறம், பொருள், இன்பம், வீடு"
என்று சொன்னார்கள்.

ஒரு கைதி, பல ஆண்டுகள் சிறையில் இருந்து வந்தான்.
அவனுக்கு திடீரென்று விரக்தி வந்து விட்டது. இந்த சிறைச்சாலை என்னுடையது அல்ல, எப்படியாவது இதை விட்டு தப்பிக்க வேண்டும் என்று முடிவு செயதான்.
தப்பிக்க பல தடவை முயற்சி செய்தும், காவலாளிகள் பிடித்து விட்டனர்.
இனி முரண்டு செய்யாமல், ஒழுக்கமாக இருந்து, நல்ல பெயர் வாங்கி, விடுதலை அடைவோம் என்று எண்ணினான். அதற்கு பல வருடங்களுக்கு பிறகு பலனும் கிடைத்தது. நன்னடத்தை காரணமாக, ஒரு நாள் விடுதலை ஆகி விட்டான்.
இனி சிறை இல்லை, இனி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற விடுதலை காற்றை அனுபவித்த அவன் பேரானந்தம் அடைந்தான். இது தான் கைவல்யம் என்ற மோக்ஷ நிலை.

கைவல்யம் என்பது, சிறையில் வைக்கப்பட்டு இருந்த ஒருவன் விடுதலை ஆவது போல. பிறப்பு இறப்பு என்ற சிறைச்சாலையில் இருந்து "விடுதலை" ஆவதே இவன் நோக்கம்.

அதே சிறைச்சாலையில் இன்னொருவன் இருந்தான். அவனும் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைத்தான். இவன் தப்பிக்க நினைப்பதற்கு விடுதலை மட்டும் காரணமல்ல, அவன் வரவை எதிர்பார்த்து, அவன் தகப்பன், அவன் வீடு எல்லாம் உள்ளது என்று அறிகிறான்.
ஒரு நாள் இவனும் நன்னடத்தை காரணமாக, விடுதலை ஆகி விட்டான்.
இதற்கு முன்னால் விடுதலை ஆனவன், கூப்பிட ஆள் இல்லாததால், நேராக அங்கு இருக்கும் பார்க்கில் சுகமாக படுத்துக்கொண்டு வருவோர் போவோர்களை பார்த்து கொண்டு அலைந்து கொண்டிருந்தான்.

இவனோ, விடுதலை ஆனவுடன், தன் வீட்டுக்கு சென்று தகப்பன் வரவேற்க, அவன் வீட்டுக்கு போய் நிம்மதியாக தகப்பன் நிழலில் நிம்மதியாக இருந்தான்.
வைகுண்டம் என்பது, சிறையில் வைக்கப்பட்டு இருந்த ஒருவன் விடுதலை ஆன பின், தன் சொந்த தகப்பன் வீட்டுக்கு வந்து, தந்தையான நாராயணன் அரவணைப்பில் வீட்டில் இருப்பதே.

இந்த வேற்றுமையை உணர்ந்த தமிழ் ரிஷிகள், கைவல்யம் (விடுதலை) என்ற மோக்ஷத்தை நம் லட்சியமாக கொள்ளாமல், வைகுண்டம் (வீடு) என்ற மோக்ஷத்தையே நம் லட்சியமாக கொள்ள வேண்டும் என்று, அறம், பொருள், இன்பம், வீடு என்றனர்.



"வீட்டுக்கு" போய் சேர்வதே நம் நோக்கம்.

வைகுண்டம் என்பது கைவல்யத்தை விட உத்தமானது.

வீடு என்பது விடுதலையை விட உத்தமானது.

இதனால் தான் அறம், பொருள், இன்பம், விடுதலை என்று சொல்லாமல், அறம், பொருள், இன்பம், வீடு என்ற சொல்லில் முடிக்கின்றனர்.

திருவள்ளுவர் திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மூன்றும் மூன்று பகுதிகளில் சொல்லியிருக்கிறார்.
மோக்ஷத்தைப் பற்றித் தனியாக இப்படிப் பெரிய பகுதி இல்லாவிட்டாலும், அறத்துப் பாலிலேயே ‘இல்லற இயல்’ என்பதற்கு அப்புறம் ‘துறவற இயல்’என்று சில அதிகாரங்கள் பண்ணி, அதில் நூற்றுக்கு மேற்பட்ட குறள்களில் மோக்ஷம் ஸித்திப்பதற்கான வழிகளைச் சொல்லியிருக்கிறார்.
(http://www.kamakoti.org/tamil/3dk257.htm)

திருவள்ளுவர், சமஸ்கிருதம் அறிந்த, தமிழ் புலவர் என்பதும் வெளிச்சம் ஆகிறது.

வாழ்க தமிழ். வாழ்க தெய்வ பாஷை.