Followers

Search Here...

Saturday 16 February 2019

சரணாகதி செய்து விட்டால் மட்டும், பகவான் காப்பாற்றி விடுவாரா?... ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது...

குருவே துணை

"பகவானை நாம் சரணம் அடைந்தால், பகவான் நம்மை நிச்சயம் காப்பாற்றுகிறார்".


திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற ஒரு மகான் சேங்கனூர் என்ற ஊரில் பிறந்தார்.
பெரியவாச்சான் பிள்ளை, அவரது குரு நம்பிள்ளை
இதே ஊரில் தான் 4000 திவ்ய பிரபந்ததுக்கும் விளக்க உரை எழுதிய ரோகினி நக்ஷத்திரத்தில், அவதரித்த பெரியவாச்சான் பிள்ளை என்ற கிருஷ்ணசூரியும் தோன்றினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தமிழ்நாட்டில், கும்பகோணம் அருகில் உள்ளது "சேங்கனூர்" என்ற இந்த க்ஷேத்ரம்.

சேங்கனூர் அருகில் உள்ள திருக்கண்ணமங்கை கோவிலில் உள்ள பக்தவத்சல பெருமாளிடம் இவருக்கு இருந்த பக்தியின் காரணமாக திருக்கண்ணமங்கை ஆண்டான் எனறே பெயர் அமைந்தது.

கோவிலில் தானே, பூ கைங்கர்யம் செய்து கொண்டு, கோவிலை சுத்தப்படுத்தி கொண்டு, பகவானிடம் சரணாகதி செய்து, வாழ்ந்து வந்தார்.
ஒரு சமயம், "பகவான் சரணாகதி செய்பவர்களை காப்பாற்றுவார் என்று எப்படி நம்புவது?" என்ற சந்தேகத்துடன் இருந்த ஒருவர், திருக்கண்ணமங்கை ஆண்டானிடத்தில், அவர்கள் வந்து,
"சரணாகதி.. சரணாகதி.. என்று சொல்கிறீரே. 
நாம் சரணாகதி செய்து விட்டால் மட்டும் பெருமாள் காப்பாற்றி விடுவாரா?" 
என்று அவரிடம் சாஸ்திரத்தின் மேல் நம்பிக்கை இல்லாததால், விதண்டாவாதம் செய்தார்.


திருக்கண்ணமங்கை ஆண்டான், இவருக்கு சாஸ்திரத்தை கொண்டு பதில் சொல்லவில்லை. மௌனமாகவே உடகார்ந்து இருந்தார்.

'சாஸ்திரம் இப்படி சொல்லி இருக்கிறது' என்று சொன்னால், சாஸ்திரத்தை நம்ப இவர் தயாரில்லை.
இவரிடம், சாஸ்திரத்தை கொண்டு நிரூபிக்க முயற்சி செய்வது வீண்.

சாஸ்திரத்தை நம்பாத ஜனங்களிடம், சகஜமாக உலகத்தில் நடக்கும் விஷயங்களை காட்டி நிரூபிக்கலாம்.

'சாஸ்திரம் இப்படி சொல்லி இருக்கிறது' என்று சொல்லி புரியவைக்க முடியாத ஜனங்களுக்கு, ஹித உபதேசங்கள் செய்து ஆசாரியர்கள் நல்வழி படுத்திவிடுவார்கள்.

அந்த சமயம்,
எதிர் வீட்டில் ஒருவன் நாய் வளர்த்து கொண்டு இருந்தான்.
அன்று, அவனோடு அந்த நாய் தெருவோடு நடந்து கொண்டிருக்கும் போது,
அந்த தெருவிலேயே இருக்கும் இன்னொரு நாய், இதை பார்த்தவுடன், அங்கிருந்து வேகமாக ஓடி வந்து, இவனின் நாயை பார்த்து கோபத்துடன் "லொள் லொள்.." என்று ஹிம்சை பண்ண ஆரம்பித்தது.


யாரிடமோ பேசி கொண்டிருந்த அந்த வீட்டு நாயின் எஜமானன், தான் வளர்க்கும் நாய் ஹிம்சிக்கப்படுகிறது என்று பார்த்த அடுத்த நொடி, 'குபீர்' என்று பாய்ந்து, தன் நாயை தாக்க வந்த அந்த நாயை கல்லால் அடித்து துரத்தி விட்டு, தன் சொந்த நாயை அணைத்து கொண்டு, தன் வீட்டுக்கு கூட்டி சென்றான்.
இந்த நிகழ்வை பார்த்து கொண்டிருந்த திருக்கண்ணமங்கை ஆண்டான், தன்னிடம் விதண்டாவாதம் செய்தவரை பார்த்து,
"இந்த எஜமானனுக்கு ஏன் இந்த நாயின் மேல் அபிமானம் ஏற்பட்டது?
இந்த எஜமானனும் நாயும் ஒரே ஜாதியா? ரத்த சம்பந்த உறவா?"
என்று கேட்க,




"இது இவன் சொந்த நாய். அதனால் அபிமானம் இவனுக்கு ஏற்பட்டது" என்றார்.

"சொந்த நாயாக இது ஆவதற்கு காரணம் என்ன?" என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் கேட்க,

"இந்த நாய் அவன் வீட்டோடு எப்பொழுதும் இருக்கிறது. 
அவன் கொடுக்கும் உணவை சாப்பிட்டு, அவன் காலையே சுற்றி சுற்றி வருகிறது. 

இந்த அன்பு, அந்த எஜமானனுக்கு ஜாதியில் இது நாயாக இருந்தாலும், தன் சொந்தம் என்று நினைக்க வைக்கிறது. இதை காப்பாற்ற வேண்டியது தன் பொறுப்பு என்று நினைக்கிறான்" என்றார்.

"தனக்கு பிரியமான இந்த நாய் மேலே, இன்னொரு நாய் வந்து ஹிம்சை செய்தால் அதை தான் விலக்கி, அணைத்து காப்பாற்றுவது ஒரு அல்ப மனிதனுக்கே ஸ்வபாவமாக இருக்குமென்றால்,
பக்தவத்சலனான திருக்கண்ணமங்கை எம்பெருமான் அப்படி செய்ய மாட்டாரா?
எம்பெருமானே கதி என்று அவர் அடியிலேயே கிடக்கும் அடியார்களை, அணைத்து கொள்ளாமல் இருந்து விடுவாரா?


அந்த தெரு நாய் போன்று, மோக்ஷத்திற்கு எதிரான பாதையில் திருப்பி, மீண்டும் உலக விஷயங்களில் திருப்ப நினைப்பவர்களை, தன் அடியார்களோடு சேரவிடாமல் விலக்கி, அணைத்து கொண்டு காப்பாற்ற மாட்டாரா, எம்பெருமான்?.
"சரணாகதி செய்தால், சத்தியமாக எஜமானன் காப்பாற்றுகிறான்" என்று உலக வாழ்க்கையிலேயே தெரியும் பொழுது,
கருணையே வடிவான எம்பெருமான், சரணாகதி செய்தவர்களை காப்பாற்றுவாரா என்று சந்தேகமும் ஒருவனுக்கு எழும்புமா?"

சரணாகதி செய்த அடியார்களுக்கு எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதே லட்சியம்.

அந்த கைங்கர்யம் செய்து கொண்டிருப்பது மட்டுமே சரணாகதி செய்தவன், தன் எஜமானனான எம்பெருமானுக்கு செய்ய வேண்டியது"
என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் ஹித உபதேசமாக உலக விஷயத்தை வைத்தே விளக்கி சொல்ல,
சந்தேகம் தெளிந்து விடைபெற்றார் அந்த நபர்.

சரணாகதி செய்தவன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

காலை 4 மணிக்கு எழுந்து, 6 மணிக்குள்,
பல் துலக்கி,
கை கால்களை அலம்பிக்கொண்டு,
விஷ்ணு சஹஸ்ரநாமம்,
கஜேந்திர மோக்ஷம்,
ருத்ர கீதம்,
ப்ராத ஸ்மரணம் ,
சுப்ரபாதம்,
ஆத்ம நிவேதனம்,
திருப்பள்ளி எழுச்சி,
திருப்பாவை
முதலியவைகளை சொல்லி,
ராமானுஜர், மாத்வர், ஆதிசங்கரர் போன்ற ஆசார்யர்களும்,
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் போன்ற அவதார புருஷர்களும்,
மேலும் பல மகான்களும் இயற்றிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்து கொண்டு,

காலை 6 மணி முதல், 8 மணிக்குள், 
ஸ்நானம், அனுஷ்டானம் செய்து,
ஸ்ரீமத் பாகவதமோ,
ஸ்ரீமத் ராமாயணமோ,
ஸ்ரீமத் பகவத் கீதையோ,
ஒரு வேளை, தேவர்களின் பாஷையான சம்ஸ்க்ரிதம் தெரியாதவர்கள் என்றால்,
4000 திவ்ய ப்ரபந்தமோ பாராயணம் செய்ய வேண்டும்.
பாராயணம் முடித்து விட்டு, பூஜை செய்ய வேண்டும்.

மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை, தனிமையான இடத்தில் மௌனமாக அமர்ந்து கொண்டு பகவானின் மூர்த்தியை தியானம் செய்து கொண்டோ,
ஹரே ராமா சொல்லிக்கொண்டோ,
குருவிடம் உபதேசம் ஆகி இருந்தால், அவர் உபதேசம் செய்த பகவன் நாமாவை குருவின் திருவடியை தியானம் செய்து கொண்டே சொல்லிக்கொண்டோ, இருக்க வேண்டும்.


தினசரி குடும்ப காரியங்களுக்கு இடையில் ஒழிவு/நேரம் கிடைக்கும் போதும், விடுமுறை நாட்களிலும்
கிருஷ்ண சைதன்யர் சரித்திரமமோ,
ஸ்ரீ ராமகிருஷ்ணர் சரித்திரமோ,
பாரத மண்ணில் தோன்றிய மீரா, துளசிதாஸ், துக்காராம், ஏகநாதர், பத்ராசல ராமதாசர், சமர்த்த ராமதாசர் போன்ற பக்தர்களின் சரித்திரமமோ,
ஆழ்வார்கள், நாயன்மார்கள் சரித்திரமோ,
அல்லது
இந்த மகான்கள் நமக்கு சொன்ன உபதேங்களை தனியாக படித்துக்கொண்டோ, பலபேர் கூடியோ படிக்க வேண்டும்.

பகல் தூக்கம் கூடாது.
பகல் தூக்கம் ஆரோக்கியத்துக்கும் கெடுதல்.
பகல் தூக்கத்தினால், நேரம்  வீணாகி, பாரமார்கத்துக்கும் விரோதமாகிறது.

இந்த விதியை மனிதனாக பிறந்த அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

பெரியவர்கள் மட்டுமில்லாது,
குடும்பத்தில் உள்ள குழந்தைகள், பெண்கள் என்று அனைவரும் அனுசரித்து கொண்டு, உற்சாகத்துடன் செய்ய வேண்டும்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்த வரிசைப்படி செய்ய சொல்லி தர வேண்டும்.

இப்படி ஒரு நியமப்படி, தானும் வாழ உண்மையாக ஆசைப்படுபவர்களுக்கு பகவான் அவர்கள் வாழ்க்கையை அனுகூலம் ஆக்கி கொடுப்பான்.

இப்படி வாழ்ந்தால் பகவான் நம்மை கண்டு மகிழ்ச்சி அடைகிறார். அவரே நம்மை காண வருவார்.
மகான்கள் நம்மை கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இது ஒவ்வொரு ஹிந்துவின் வாழ்க்கை முறை.

ஹிந்துவாக பிறந்த நாம், இந்த முறையில் வாழ முயற்சிப்போம்.

"பகவானை நாம் சரணம் அடைந்தால், பகவான் நம்மை நிச்சயம் காப்பாற்றுகிறார்".

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka


sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka



எந்த பலம் நமக்கு இருந்தால், தன்னம்பிக்கை எல்லையில்லாமல் இருக்கும்? ...

"க்ரதுமய புருஷ:" என்று வேதம் (சாந்தோக்ய உபநிஷத்) சொல்லும் போது,
"நம்பிக்கையே வடிவமாக இருப்பவன் மனிதன்" என்று மனிதனின் அடையாளத்தை சொல்கிறது.


"நம்பிக்கையை ஒரு மனிதன் இழந்து விட்டால்", அவன் உலகில் வாழ முடியாது போகிறான்.

உலகில் வாழ்வதற்கே, மனிதனுக்கு முதலில் தேவைப்படுவது "தன்னம்பிக்கை".
எந்த காரியத்தை எடுத்தாலும் "என்னால் செய்ய முடியாது" என்ற நம்பிக்கை இல்லாதவனாக இருந்தால், அவனால் எதிலும் முன்னேற முடியாமல் போகிறது. 
"ஒழுங்காக படிக்கிறாயா?" என்று கேட்டால், ஒரு மாணவன் "ஏதோ படிக்கிறேன்" என்று தன்னம்பிக்கை இல்லாமல் சொன்னால்,
அவனுடைய நம்பிக்கையின்மையே ஜெயிக்க முடியாதபடி செய்து விடும்.
"வேலை பார்க்கிறாயா?" என்று கேட்டால், ஒருவன் "ஏதோ பார்க்கிறேன்" என்று தன்னம்பிக்கை இல்லாமல் சொன்னால், அவனுடைய நம்பிக்கையின்மையே ஜெயிக்க முடியாதபடி செய்து விடும்.
"கல்யாணம் செய்து வைக்கலாமா?"
 என்று தகப்பன் கேட்டால், பிள்ளை "செய்து வையுங்கள். குடும்பம் ஏதோ நடத்த பார்க்கிறேன்" என்று தன்னம்பிக்கை இல்லாமல் சொன்னால், அவனுடைய நம்பிக்கையின்மையே ஜெயிக்க முடியாதபடி செய்து விடும்.

இப்படி தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கும் மனிதன், உலக வாழ்க்கைக்கே லாயக்கு இல்லாமல் போகிறான்.
நான் இந்த படிப்பு படிப்பேன்,
இந்த மாதிரி உத்யோகம் பார்ப்பேன்,
கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவேன்
என்று சொன்னால் தானே, அது தன்னம்பிக்கைக்கு லக்ஷ்னமாகும்.
படிப்பு, தனக்கு தகுந்த படிப்பா?
உத்யோகம், உயர்ந்த உத்யோகமா?
கல்யாணம் செய்து கொண்ட துணை சரியான துணையா?
என்று பார்ப்பது, ஒரு புறம் இருந்தாலும்,
எப்படி இருந்தாலும் தன்னம்பிக்கையோடு இருப்பேன் என்று சொல்வது தானே மனிதனுக்கு அழகு.


தனக்கு விதிக்கப்பட்ட காரியங்களில் ஸ்ரத்தை (ஈடுபாடு) இல்லாதவன், தன்னம்பிக்கையை இழக்க நேரும்.
இப்படிப்பட்டவர்கள் உலக வாழ்க்கைக்கே லாயக்கு இல்லை.
திடமான தன்னம்பிக்கை உடையவன், எப்பொழுதும் எல்லையற்ற ஆச்சர்யமான காரியங்களை செய்வான்.
இதற்கு யார் சாட்சி? நம் வீர ஹனுமானே சாட்சி.

தன்னம்பிக்கை நமக்கு இரண்டு விஷயங்களை பொறுத்து வருகிறது.

  1. ஒன்று, நம்முடைய உடல், அறிவு பலத்தை அறிந்து கொள்வதால் ஏற்படும் "தன்னம்பிக்கை".
  2. மற்றொன்று, தெய்வம் நமக்கு துணை நிற்கிறது என்பதை உணர்ந்து கொள்வதால் ஏற்படும் "தன்னம்பிக்கை".

சீதா தேவியை கண்டுபிடிக்க, நாற்புறமும் வானரர்கள் சுக்ரீவனால் அனுப்பப்பட்டனர்.
தெற்கு நோக்கி வந்த வானர சைன்யத்தில் (படையில்), ஹனுமான் இருந்தார்.

கடலை தாண்டி, இலங்கை சென்று பார்க்க வேண்டும் என்கிற நிலையில், அனைத்து வானரர்களும் ஒரு கூட்டம் போட்டு ஆலோசித்தனர்.

ஒரு வானரன் "நான் 10 யோஜன தூரம் தாண்டுவேன்" என்றான்,
மற்றொரு வானரன் "நான் 20 யோஜன தூரம் தாண்டுவேன்" என்றான்,
மற்றொரு வானரன் "நான் 30 யோஜன தூரம் தாண்டுவேன்" என்றான்,

மகா பலசாலியான அங்கதன், "100 யோஜன தூரமும் தாண்டி விடுவேன், ஆனால் திரும்பி வர முடியாது" என்றான்.
"சிறு வயதாக இருந்தால் தாண்டி, சீதா தேவி அங்கு உள்ளாரா என்று பார்த்து விட்டு, திரும்பியும் வந்து விடுவேன்.. வயதாகி விட்டதால் தாண்ட முடியாது" என்றார் ஜாம்பவான்

இப்படியே ஒவ்வொரு வானரனும் தன் உடல், அறிவு பலத்தை அறிந்து கொண்டு, அவரவர்கள் எவ்வளவு தூரம் தாண்ட முடியும் என்று, தன்னம்பிக்கையுடன் பேசினர்.
ஹனுமானை கேட்டதும், "கடலை தாண்டுவேன். சீதையை பார்ப்பேன். மீண்டும் திரும்பி வருவேன்" என்று எல்லையற்ற திடமான தன்னம்பிக்கையுடன் மார்பு தட்டிக்கொண்டு சொன்னார்.





எல்லையற்ற திடமான தன்னம்பிக்கை ஹனுமானுக்கு மட்டும் எப்படி ஏற்பட்டது?

மற்ற வானரர்கள் அனைவரும், தங்கள் உடல் வலிமையை மட்டும் வைத்து ஆலோசித்ததால், தன் சுயபலத்தை கொண்டு ஏற்பட்ட "தன்னம்பிக்கையிலேயே" அவர்களுக்கு அவநம்பிக்கை வந்தது.

இத்தனை பெரிய காரியத்தை செய்ய வேண்டும் என்கிற போது, தன் பலத்தை கொண்டு ஏற்பட்ட "தன்னம்பிக்கையிலேயே" அவர்களுக்கு அவநம்பிக்கை வந்தது.

ஹனுமான் தான் "ராம பக்தன்" என்று அறிந்தவர்.
மேலும், தன் பக்தியால், ராமரின் அபிமானத்துக்கு பாத்திரமானவர்.
தெய்வம் எல்லோருக்கும் பொதுவானவர் என்றாலும்,
"கடவுளா? எங்கே காட்டு!!" என்று திமிராக பேசுபவனை காட்டிலும்,
"100 கோடி ராம நாமம் சொன்னால் ஸ்ரீ ராமரை தரிசிக்கலாம்" என்று தியாகராஜரை பார்த்து அவர் அப்பா சொல்ல,
"100 கோடி ராம நாம ஜபம் செய்து பார்த்து விட வேண்டும்" என்று ஆவலோடு ஜபம் செய்த அவருக்கு ஸ்ரீ ராமர் தரிசனம் கொடுத்தார் என்று பார்க்கிறோம்.

தன் உடல், அறிவு பலத்தால் ஏற்படும் தன்னம்பிக்கை, உடல், அறிவு பலத்தை தாண்டிய செயல்கள் செய்ய நிலை வரும் போது உடைந்து போகும்.

தெய்வத்திடம் உண்மையாக பக்தி (உறவு, அன்பு, ஆர்வம், உருக்கம் சேர்ந்தது "பக்தி") செய்து, தெய்வம் மனம் குளிர நாம் வாழ்ந்தால், தெய்வ அணுகிரஹத்தால், நாம் செய்யும் எந்த காரியமும் சுபமாக முடியும்.

ஹனுமானின் "ராமபக்தி" உலகம் அறிந்தது.

ஹனுமான் கடலை தாண்ட வேண்டும் என்று மற்ற வானரர்கள் பேசி கொண்டிருக்கும் போது, யோசித்து பார்த்தார்.
"சீதையை தேட லட்சக்கணக்கான வானரர்களை சுக்ரீவன் நாற்புறமும் அனுப்பினார்.  
சீதைக்கு தன் அடையாளமாக காட்ட, ஸ்ரீராமர், தன் கையில் அணிந்திருந்த கனையாழியை (மோதிரத்தை) எந்த வானரனுக்கோ கொடுத்து இருக்கலாம்.
இத்தனை வானரர்களிடையே, அடியேனான என்னை தேர்ந்தெடுத்து எப்பொழுது கூப்பிட்டு, இந்த கனையாழியை (மோதிரத்தை) என்னிடம் கொடுத்தாரோ!!
இதிலிருந்தே, நான் நிச்சயம் சீதா தேவியை பார்க்க போகிறேன் என்று தெரிகிறது.
இந்த தன்னம்பிக்கை என்னுடைய உடல், அறிவு பலத்தால் வந்தது அல்ல,
இந்த எல்லையற்ற தன்னம்பிக்கை, 'ஸ்ரீ ராமர் என்னை தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்' என்கிற தெய்வ பலத்தால் என்று அறிகிறேன்"
என்று மனதுக்குள் புரிந்து கொண்டார்.


'தன் சுய பலத்தை காட்டிலும், தனக்கு தெய்வம் பலம் கூட இருக்கிறது' எனறு புரிந்து கொண்ட பின், தன் பலத்தை மீறிய செயலையும் தான் செய்ய முடியும் என்று தன்னம்பிக்கை கொண்டார் ஹனுமான்.

மற்ற வானரர்கள் தங்கள் சுய பலத்தை கருத்தில் கொண்டு யோசித்ததால்,  தன்னம்பிக்கை ஒரு எல்லையுடன் இருந்ததால், கடலை தாண்ட முடியாது என்று நினைத்தனர்.
ஒருவரும் லாயக்கு இல்லை என்று, கடைசியில் ஹனுமானை கேட்டதும், "கடலை இப்பொழுதே தாண்டுவேன். சீதையை பார்ப்பேன், திரும்பி வருவேன்" என்று உற்சாகமாக கிளம்பினார்.
குரு நமக்கு துணை நிற்கிறார் என்று "குருவின் அணுகிரஹ பலத்தையும்",
நாராயணன் நமக்கு துணை செய்கிறார் என்று 'தெய்வ அணுகிரஹ பலத்தையும்" யார் உணர்ந்து கொள்கிறார்களோ,
அவர்களுக்கு எல்லையில்லா திடமா தன்னம்பிக்கை உண்டாகிறது.

தன் சுய பலம், அறிவு பலத்தை மட்டும் நம்பினால், ஓரளவு தான் தன்னம்பிக்கை கிடைக்கும்.

மகான்கள், சாதுக்கள் "தெய்வ பலத்தால் ஏற்பட்ட தன்னம்பிக்கையில்",  நினைத்து பார்க்க முடியாத, பெரிய பெரிய காரியங்களை கூட எளிதில் செய்து விடுகிறார்கள்.
மகான்கள் செய்யும் காரியங்கள்,
"ஸமர்த்த ராமதாசர்" போன்ற மகானின் அன்புக்கு பாத்திரமான "வீர சிவாஜி" போன்றவர்கள் மராட்டிய சாம்ராஜ்ஜியம் அமைத்து, செய்த சாதனைகள் காரியங்கள்
என்று பல ஆச்சர்யங்களை காணலாம்.
தெய்வத்திடம் பக்தி செய்த ப்ருகு, கன்வர், ஹரிதர் போன்ற ரிஷிகள், தங்களின் தெய்வபக்தியால், தெய்வ அணுகிரஹம் பெற்று, தெய்வங்கள் இவர்களுக்காக பாரத தேசம் முழுவதும் சிவனாக, விஷ்ணுவாக, முருகனாக, காட்சி கொடுத்தனர்.
அந்த ரிஷிகளுக்காக அங்கேயே சாநித்யம் குறையாமல் இருக்க சம்மதித்து இருக்கின்றனர்.

ரிஷிகள் தன் தெய்வபக்தியினால்  தெய்வங்களை மகிழ்ச்சிப்படுத்தி, தெய்வங்கள் காட்சி தந்தவுடன், "சக்தியில்லாத, பக்தி குறைவாக உள்ள நமக்கும் காட்சி கிடைக்கட்டுமே" என்று, தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்ய, அர்ச்ச அவதாரமாக, அங்கேயே சாநித்யம் குறையாமல் இருக்க, தெய்வத்திடமே சம்மதம் வாங்கி, நமக்கு தந்து விட்டனர்.
ரிஷிகளால் தெய்வ சாநித்யம் அடைந்த இடங்கள், அரசர்களால் கோவில் அமைக்கப்பட்டு, காட்சி கொடுத்த தெய்வங்கள் வேத மந்திரங்கள் மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் செய்ய வேதம் கற்று அறிந்த வேதியர்கள் அமர்த்தப்பட்டு, அந்த இடங்கள் திவ்ய க்ஷேத்ரங்கள் ஆனது.


பாரதம் ஏங்கும், ரிஷிகள் தொடாத இடங்களே இல்லை என்பதால், ஆங்காங்கு தெய்வங்கள் அவர்களுக்கு பிரசன்னம் ஆனார்கள்.
ஊருக்கு ஒரு கோவில் இருப்பது போல,
உலகத்திற்கே ஒரு கோவிலாக நம் பாரத தேசம் உள்ளது.

தெய்வ பக்தி திடமாக இல்லாத நாமும், தெய்வ சிந்தனை ஏற்பட்டு மோக்ஷத்திற்கு வழி செய்து கொள்ள, 
ரிஷிகளின் பக்தியால், நமக்கு தெய்வங்கள் பாரத தேசம் முழுவதும் அர்ச்ச (விக்கிரக) ரூபமாக கிடைத்தார்கள்.

அரசர்களால், அதை சுற்றி கோவில்கள் ஆகம விதிப்படி கட்டப்பட்டது.
ரிஷிகளுக்காக பிரகடனமான தெய்வங்களை, "நாயன்மார்கள், ஆழ்வார்கள், மகான்கள், சித்தர்கள்" போன்ற தெய்வீக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் மங்களாசாசனம் செய்து பாடல்கள் பாடி, அவர்கள் சார்பில் நமக்கு பாசுரங்கள், பிரபந்தங்கள், ஸ்தோத்திரங்களை தந்து விட்டு சென்றனர்.
"ராமானுஜர், மாத்வர், சங்கரர்" போன்ற ஆசாரியர்கள் கோவிலில் வீற்று இருக்கும் தெய்வத்திடம் எப்படி பழக வேண்டும், பூஜை செய்ய வேண்டும் என்று முறைகளை காட்டி, கைங்கர்யம் செய்யும் வழியை காண்பித்து சென்றனர்.
இப்படி,
"தெய்வத்தைநமக்காக கொடுத்து விட்டு, ரிஷிகள் சென்றனர்.
"கோவிலை" கட்டி, நமக்காக கொடுத்து விட்டு, அரசர்கள் சென்றனர்.
கோவிலில் சென்று நாமும் பாட, பாசுரங்கள், பிரபந்தங்கள், "ஸ்தோத்திரங்களைநமக்காக கொடுத்து விட்டு, ஆழ்வார்கள். நாயன்மார்கள், மகாத்மாக்கள் சென்றனர்.
தெய்வத்திடம் "கைங்கர்யம் செய்யும் முறையை" ராமானுஜர், மாத்வர், சங்கரர் போன்ற ஆசாரியர்கள் நமக்கு தந்து விட்டு சென்றனர்.

மனிதன் நம்பிக்கையின் மேல் தான் வாழ்கிறான்.
உலக வாழ்க்கை வாழ்வதற்கே, உடல், அறிவு பலத்தின் மூலம் ஏற்படும் தன்னம்பிக்கையில் தான் மனிதன் வாழ்கிறான்.

உலக வாழ்க்கைக்கே தெய்வ பலமோ, சுய பலமோ தேவைப்படும் போது,
தெய்வத்தை பார்க்க வேண்டும் என்றால், கட்டாயம் நமக்கு "தெய்வத்திடம் பக்தி" அடிப்படையாக தேவைப்படுகிறது.

தெய்வ பக்தி இல்லாமல், "கடவுளை காட்டு" என்று திமிராக பேசுபவன், பேசிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.
ஒரு வேளை இவன் அறிவு மற்றும் உடல் பலத்தால் ஏற்பட்ட தன்னம்பிக்கையில் செய்த காரியத்தில் தோற்று போக நேர்ந்தால், மனம் ஒடிந்து போகிறான் மனிதன்.

ரிஷிகளுக்காக ப்ரத்யக்ஷம் ஆகி, 
மகான்கள், நாயன்மார்கள், ஆழ்வார்களுக்காக எப்பொழுதும் கோவிலில் அருள் செய்ய தயாராக இருக்கும் தெய்வத்திடம் 
ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை பாடி பக்தி செய்து, 
தெய்வ பலத்தை பெற நாமும் முயற்சிப்போம்.

உண்மையான பக்தி செய்து, தெய்வ பலத்தை நாம் பெறும் போது,
நாமும் திடமான தன்னம்பிக்கையை பெறுவோம். 
உலக வாழ்க்கையில் திடமான நம்பிக்கையுடன் நாமும் வாழ்வோம்.

தெய்வ பலத்தால் ஏற்பட்ட தன்னம்பிக்கை, எந்த காரியத்தை எடுத்தாலும் நமக்கு வெற்றி தரும்.

சுய பலத்தால் ஏற்படும் "தன்னம்பிக்கையை" காட்டிலும், தெய்வ பக்தியினால் நமக்கு கிடைக்கும் தெய்வ பலம், அசைக்க முடியாத "தன்னம்பிக்கையை" தருகிறது.

கோவிலுக்கு சென்று வழி படுவோம்.
தெய்வத்திடம் பக்தி செய்து, தெய்வ அணுகிரஹத்தை பெறுவோம்.

தெய்வம் நமக்கு துணை நிற்கிறார் என்று ஹனுமானை போன்று உணர்ந்து விட்டால், எதையும் சாதிக்க தன்னம்பிக்கை கிடைக்கும்.

தன்னம்பிக்கையை கொண்டே மனிதன் வாழ்கிறான்.

வாழ்க ஹிந்துக்கள்.
ஹிந்துவாக பிறந்ததே நம் பாக்கியம்.

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka