Followers

Search Here...

Saturday 1 February 2020

பாசுரம் (அர்த்தம்) - திருவுக்கும் திருவாகிய செல்வா - திருமங்கை ஆழ்வார் தேவாதிராஜ பெருமாளை (தேரழுந்தூர்) பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருமங்கையாழ்வார் தேர்அழுந்தூரில் உள்ள தேவாதிராஜ பெருமாளை மங்களாசாசனம் செய்து, தன்னை காப்பாற்றுமாறு சரணடைகிறார்.

திருமங்கை ஆழ்வார் "அர்ச்சா திருமேனியையே" பெருமாளின் அவதாரமாக அனுபவிப்பவர்.





அற்புதமான பாசுரம்..
அனைவரும் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டிய பாசுரம். .

திருவுக்கும் திருவாகிய செல்வா!!
தெய்வத்துக்கு அரசே!!
செய்ய கண்ணா!!
உருவச் செஞ்சுடராழி வல்லானே!!
உலகுண்டவொரு வா!!
திருமார்பா!!
ஒருவற்காற்றி உய்யும் வகையென்றால்
உடன் நின்று ஐவர் 
என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட!!
அஞ்சி!! நின்னடைந்தேன்!!
அழுந்தூர் மேல்திசை நின்ற
அம்மானே!!
-- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)

பாசுரத்தின் அர்த்தம் :

மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் யாருக்கு கிடைக்கிறதோ!! அவர்களுக்கு குறைவில்லாத செல்வம் கிடைக்கிறது.
எல்லோருக்கும் மங்களம் கொடுப்பவள் மஹாலக்ஷ்மி.

செல்வம் மட்டுமல்ல,
உலகில் நாம் காணும் அழகும், பொலிவும், அனைத்து மங்களமும் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷமே..

நமக்கு சர்வ மங்களத்தை தரும், திருவாகிய மஹாலக்ஷ்மி தனக்கு மங்களம் கிடைக்க, திருவாகிய நாராயணனை சரணடைந்து அவருக்கு பாத சேவை செய்து கொண்டிருக்கிறாள்.
திருவாகிய மஹாலக்ஷ்மியே தனக்கு வேண்டிய செல்வத்தை, அழகை, தன் பதியான திருவாகிய திருமாலிடம் பெறுகிறாளே !! பெருமாளே "செல்வமாக" இருக்கிறாரே!!
என்று பெருமாளின் பெருமையை நினைத்து திருமங்கையாழ்வார்
'திருவுக்கும் திருவாகிய செல்வா' என்கிறார்.
அழகுக்கெல்லாம் அழகர்,
பொலிவுக்கெல்லாம் பொலிவு உடையவர்,
செல்வதுக்கெல்லாம் செல்வமாக இருப்பவர்,
சர்வ மங்களத்துக்கும் மங்களத்தை தருபவர்,
மகாலட்சுமிக்கு பதியாக இருப்பவர்,
தானே பெரும் நிதியாக (செல்வமாக) இருப்பவர், 
எம்பெருமான் நாராயணன்.

அப்படிப்பட்ட பெருமைமிகுந்த பெருமாள் தன் எதிரே நின்று, திரு அழுந்தூர் என்ற திவ்ய தேசத்தில் தேவாதிதேவனாக காட்சி கொடுக்க, 'எனக்கு நிதியே' என்று கொஞ்சுவதை போல, "திருவுக்கும் திருவாகிய செல்வா' என்கிறார் திருமங்கையாழ்வார்.

மேலும்,
"தெய்வத்துக்கு அரசே" என்ற பதத்தை கொண்டு, தெய்வத்துக்கும் தெய்வமாக (தேவாதிராஜன்) பெருமாள் இருக்கிறார் என்று பூரிக்கிறார்.

தேவர்களுக்கு இந்திரன் (தலைவன்) யார்?
இந்திரன் (தலைவன்/அரசன்) என்ற சொல் யாரை குறிக்கிறது?
என்ற கேள்வியை 'இந்திர ப்ராணாதி கரணம்' என்ற வேதாந்தத்தில் ஒரு கேள்வியாக கேட்டு, அதற்கு பதில் சொல்கிறது.







"இந்திரன் யார்?" என்று இப்படி கேள்வி கேட்டு, இந்திரன் என்ற பெயரில் பலர் உள்ளார்களே!!.. என்று கேள்வி கேட்டு, முடிவும் சொல்கிறது...

மனிதர்களுக்கு (நரன்) தலைவனை "நரேந்திரன்" என்று சொல்வார்கள்.
தேவர்களுக்கு தலைவனை "தேவேந்திரன்" என்று சொல்வார்கள்.
சுரர்களுக்கு தலைவனை "சுரேந்திரன்' என்று சொல்வார்கள்.
மிருகங்களுக்கு தலைவனை "ம்ருகேந்திரன்" என்று சொல்வார்கள்.
யார் அனைவருக்கும் தலைவனோ அவரையே "இந்திரன்" என்று சொல்வார்கள்.

'இவர் இவருக்கு தலைவன், இவருக்கு இவர் தலைவனில்லை' என்று இல்லாமல்,
'நரன், தேவன்...' என்று விசேஷம் இல்லாமல், அனைவருக்கும் தலைவனாக இருக்கும் நாராயணனே 'இந்திரன்' என்று முடிக்கிறது வேதாந்தம்.
உப தெய்வங்களான இந்திரன், ப்ரம்மா, ருத்ரன், மனு போன்றவர்களுக்கெல்லாம் "அரசர்" என்ற பெருமையுடைய பரம்பொருள் அல்லவா, என் கண் முன்னே இருக்கிறார்!!
என்றதும்,
திரு அழுந்தூர் தேவாதிராஜ பெருமாளை பார்த்து
"தெய்வத்துக்கு அரசே"
என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.

தேவேந்திரனுக்கு மட்டும் அரசனல்ல (தேவராஜன் மட்டுமல்ல),
உலகில் தெய்வங்கள் என்று இருக்கும் அனைவருக்கும் அரசனாக இருக்கிறார் என்பதால்,
இந்த பெருமாளுக்கு "தேவாதிராஜன்" என்று பெயர் கொடுத்தார்.

மேலும்,
செய்ய கண்ணா!
உருவச் செஞ்சுடராழி வல்லானே!
உலகுண்ட ஒருவா!
திருமார்பா!
என்றெல்லாம் உங்களை எப்பொழுதும் பாடி மகிழ ஆசைப்படுகிறேன்!!
ஆனாலும், 
'என்னை பக்தி செய்ய விடாமல், என் கூடவே பிறந்த 5 சத்ருக்கள் உங்களிடம் நேரம் செலவழிக்கவே விடாமல் தடுக்கிறார்களே!!'
என்று புகார் சொல்கிறார்.

ருக்மிணி ஸ்ரீ கிருஷ்ணரை மணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாள்.
ஆனால்,
இவளுடன் கூட பிறந்த 5 சகோதரர்களான 'ருக்மி, ருக்மரதன், ருக்மபாஹு, ருக்மகேசன், ருக்மமாலி' ஆகிய ஐவருமே ருக்மிணியை, ஸ்ரீ கிருஷ்ணரிடம் சேர விடாமல் தடுத்தார்கள்.

5 பேரையும் அடக்கி, ருக்மிணி ஆசைப்பட்டது போலவே, வந்து மணந்து கொண்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.
இந்த
அது போல,
'தன்னுடன் பிறந்த 'கண், காது, மூக்கு, நாக்கு, தோல்' என்ற இந்த 5 சத்ருக்கள், பெருமாளிடம் நேரம் செலவிடவே அனுமதிப்பதில்லை' 
என்று தன் குறையை பெருமாளிடம் சொல்லி, 
'இந்த சத்ருக்களிடமிருந்து மீட்டு, தன்னிடம் சேர்த்து கொள்ள வேண்டும்' என்று ப்ரார்திக்கிறார்.

பெருமாளை கொஞ்சம் பார்ப்போம் என்று கோவில் சந்நிதி முன் நின்றால் கூட, 'கண்' பெருமாளை பார்க்காமல் அங்குமிங்கும் பார்க்கிறது...
சரி, ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி உபன்யாசம் கேட்கலாம் என்று உட்கார்ந்தால், 'காது' உபன்யாசத்தை கேட்க மறுத்து, ஏதேதோ கேட்க ஆசைப்படுகிறது...

"இப்படி என்னுடன் பிறந்த இந்த ஐவருமே, ருக்மிணி பிராட்டிக்கு அமைந்த சகோதரர்களை போல, கிருஷ்ண பக்தி செய்ய தடுக்கிறார்களே!!
இவர்கள் கொஞ்சம் கூட ஓயாமல் (no rest/ஒழியாது) என்னை பக்தி செய்ய விடாமல் தடுக்கிறார்களே!!"
என்று தன் உடன் பிறந்த இந்த ஐவரை பற்றி புகார் சொல்வது போல,
"உடன் நின்று ஐவர்
என்னுள் புகுந்து ஒழியாது" என்கிறார்.

"இப்படி என்னை பெருமாளிடம் பக்தி செய்ய விடாமல், இந்த கண்ணும், காதும், நாக்கும், மூக்கும், தோலும் என்னை
அருவித் தின்றிட, இவர்களிடமிருந்து என்னை நான் விடுவிக்க சக்தி இல்லாமல், உன்னிடம் பக்தி செய்ய முடியாமலேயே இருந்து விடுவேனா!! என்று அஞ்சி,
திருஅழுந்தூர் மேல்திசை நின்ற
அம்மானே (எம்பெருமானே), உன்னிடம் ருக்மிணி பிராட்டி சரண் அடைந்தது போல நின்னடைந்தேன்"
என்று பாடுகிறார் ஆழ்வார்.




உபரிஜரவசு என்ற அரசன் தன் ஆகாய விமானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது, அவன் ஆகாய தேர், இந்த ஊரில் நின்று போக, அவருடைய தேர் இங்கு அழுந்தியதால், இந்த ஊருக்கு தேர் அழுந்தூர் என்ற பெயர் ஏற்பட்டது..

உபரிஜரவசுவுக்கு, பெருமாள் கண்ணனாக நின்று கொண்டு, ஒரு கையால் பசுவை (ஆ) கட்டிக்கொண்டு (மருவி) காட்சி கொடுத்ததால், இந்த பெருமாளுக்கு ஆமருவியப்பன் என்று பெயர்.
மயிலாடுதுறை அடுத்து உள்ளது தேரழுந்தூர் என்ற இந்த திவ்யதேசம்.
மூலவர் பெயர் : தேவாதிராஜன்
உத்சவர் : ஆமருவியப்பன்


Thursday 30 January 2020

தெய்வ பக்தியின் மூன்று நிலைகள் என்ன?... தெய்வத்திடம் காதல் கொண்டு ஆழ்வார்கள் பாடுகிறார்கள் என்று பார்க்கிறோம்... ஆழ்வார்கள் நிலை என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா... ஹிந்துக்கள்.

தெய்வ பக்தியின் மூன்று நிலைகள் என்ன? 
தெரிந்து கொள்வோமே !!

1. காம்யார்த்தமான பக்தி:

  • உலக ஆசை உடையவர்கள். 
  • தெய்வம் தனக்கு அணுகிரஹம் செய்யும் என்று உணர்நதவர்கள். 
  • தெய்வத்திடம் பக்தி செய்து, விரதம் இருந்து, தெய்வ அணுகிரஹத்தால் தன் உலக ஆசைகளை பூர்த்தி செய்து கொள்பவர்கள்.




கோவிலுக்கு செல்வது, 
தெய்வ விக்ரஹங்களை சிலையாக பார்க்காமல் பெருமாளாக பார்ப்பது, 
விரதம் இருப்பது, 
மந்திரங்கள் ஜபிப்பது போன்றவை செய்கிறார்கள்

2. சாதனா பக்தி:

  • உலக ஆசை குறைந்து இருப்பவர்கள்.
  • தெய்வத்தின் அருளை அனுபவத்தில் உணர்நதவர்கள்.
  • உலக ஆசைகளை தெய்வத்திடம் பிரார்த்திப்பதை விட, அந்த தெய்வத்தை பற்றி, நன்கு புரிந்து கொள்ளவே ஆர்வம் மிக்கவர்கள். 
  • அதற்கு தேவையான சாதனைகளை செய்பவர்கள்.




கோவிலின் தத்துவத்தை அறிய முயல்பவர்கள்,
மந்திரங்களின் ஆழ்ந்த அர்த்தத்தை அறிந்து கொள்ள முயல்பபவர்கள்,
தெய்வத்தின் புராண சரித்திரங்கள், குணங்கள் போன்றவற்றில் ஆழ்ந்து உணருபவர்கள்,
தெய்வத்தை பற்றி அறிய தனி மனித ஒழுக்கம் என்று உணர்நதவர்கள்,
தியானம் யோகம் செய்து புலன்களை கட்டுப்படுத்தி வைத்து இருப்பவர்கள்.

ராமானுஜர் "திருவஷ்டாக்ஷர மந்திரத்தின் பொருள் அறிய", தான் யதிராஜராக இருந்த போதும்,
'ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூர் வரை' நடந்து சென்றும், 'திருக்கோஷ்டியூர் நம்பி' அதன் அர்த்தத்தை தகுதி இல்லாதவர்க்கு சொல்லி விட கூடாதே என்று தயங்கி மறுத்தார்.




ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை.
17 முறை தொடர்ந்து ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார்.
இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி அர்த்தத்தை சொல்ல தயங்கி மறுத்தார்.

அந்த பாதயாத்திரையின் பலன் 18வது சந்திப்பில் கிடைத்தது. 
உண்மையான ஆர்வமும்,
அலுப்பு அடையாமல்,
தன் மீது கோபமும் இல்லாமல் இருக்கும் ராமனுஜரே, மந்திரத்தின் பொருளை அறிய தகுதி ஆனவர்,
என்று அறிந்து, அர்த்த விஷேஷத்தை போதித்தார்.

சாதனா பக்தியில், எப்படி ஒரு பக்தன் இருப்பான்? என்று தன் சரித்திரத்திலேயே காண்பித்தார் ஸ்ரீ ராமானுஜர்.
ஞானத்தில் பூர்ணரான ராமானுஜர், 'நாதீகனும், காம்யார்த்த பக்தி செய்பவனும் கூட, பரமபதம் இதே ஜென்மத்தில் அடைந்து விட வேண்டும்' என்ற பரந்த நோக்கில், தான் கஷ்டப்பட்டு பெற்ற உபதேசத்தை இலவசமாக அனைவருக்கும் கிடைக்கும் படியாக கொடுத்து விட்டார்.

3. ஞான பக்தி :

  • உலக வாழ்க்கையை மதிக்காதவர்கள். 
  • செல்வம் சேர்ந்தாலும், ஏழையானாலும் குறைபட்டு கொள்ளாதவர்கள்.
  • இந்த ஆத்மா எப்பொழுது இந்த உடலை விட்டு, பரந்தாமனை அடையுமோ என்று தவிப்பவர்கள்.




ஜீவனாகிய தன்னை பெண்ணாகவும்,
பரமாத்மா நாராயணனே தன் புருஷனாகவும்,
"தன் கணவனிடம் சேரும் காலம் எப்பொழுதோ!!"
என்று பரமபதத்தையே எதிர்பார்த்து, தெய்வத்திடம் விரக தாபத்தில் இருப்பவர்கள்.
(ஆழ்வார்கள் இந்த நிலையிலேயே இருந்தனர்) 
ஆழ்வார்கள் தன்னை காதலியாகவும், பெருமாளை காதலானாகவும் கதறி அழுது பாடும் பாசுரங்கள், இவர்களின் ஞான பக்தி நிலையை நமக்கு காட்டுகிறது.

இந்த அனுபவத்தில் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை, நாத்தீகன் மட்டுமல்ல, காம்யார்த்தமான பக்தி செய்பவனும், சாதனா பக்தி செய்பவன் கூட படித்தாலும், "ஆழ்வார்கள் எந்த நிலையில் இப்படி பாடினார்கள்!!" என்று புரிந்து கொள்ள முடியாமல், "இது ஏதோ உலகத்தில் காணும் காதல் பாடல்" என்றே நினைப்பார்கள்.


இதன் காரணமாகவோ என்னவோ!! வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில், ஆழ்வார்கள் பாசுரங்களை, அதன் அர்த்தத்தை விஷ்ணு சஹஸ்ரநாமம் போல, அனைவருக்கும் தராமல், ஞானத்தின் தகுதி பார்த்தே பகிர்ந்துள்ளனர் என்று தெரிகிறது..

நமக்கு ஞான பக்தி இல்லாமல் போனாலும், ஆழ்வார்கள் நிலை வராது போனாலும்,
குறைந்தபட்சம் நாதீகர்களாகவாவது வாழாமல், காம்யார்த்த பக்தியாவது செய்து கொண்டு, தெய்வ அணுகிரஹத்தால், குருவின் துணையால், மேலும் மேலும் ஆன்மீக வளர்ச்சி நோக்கி செல்வோம்.

வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஹிந்து தர்மம்.