Followers

Search Here...

Tuesday 19 December 2017

அதர்மத்தை தட்டி கேட்க வேண்டும். முயற்சியை விட கூடாது - ஸ்ரீ கிருஷ்ணர்

குருவின் உபதேசம்

ஸ்ரீ கிருஷ்ணரின் மீது பக்தி வர வேண்டுமென்றால், அவர் சொன்ன கீதையை நாம் படித்து புரிந்து கொண்டாலே போதும். பக்தியும் வரும். ஸ்ரீ கிருஷ்ணரையும் நமக்கு புரியும்.



கிருஷ்ணர் கீதையில் சொன்னது வெறும் வார்த்தை அல்ல, அறிவுரை அல்ல.
கீதை சொன்ன பொழுது, ஸ்ரீ கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் 100 வயது. 


தன் அனுபவத்தை தான், மனம் ஒடிந்து போயிருந்த அர்ஜுனனுக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.

அவர் தன் வாழ்க்கையில், தான் எப்படி இருந்தேன் என்று தான் சொல்கிறார்.
கீதை அவரது குணம்.





ஸ்ரீ கிருஷ்ணர், கீதையில் பொதுவாக நமக்கு என்ன சொல்கிறார்? அனைவருக்கும் வாழ்க்கையில் துன்பம் வரும், சுகம் வரும், வெற்றி வரும், தோல்வி வரும், மானம், அவமானம் வரும், ஆரோக்கியம் வரும், ரோகம் வரும். இது சகஜம்.

எது வந்தாலும் கலங்காமல், சமமாக இரு.

உலகம் அனித்யம் (மாறக்கூடியது) என்று புரிந்து, கலங்காமல் தீரமாக, தர்மத்தில் இரு.

முயற்சி செய்வதை விடாதே.

இப்படி தான் சொன்னதோடு இல்லாமல், ஸ்ரீ கிருஷ்ணர் தன் வாழ்க்கையிலும் நடத்திக் காட்டினார்.

  • எந்த ஒரு நிலையிலும் இவர் கலங்கவில்லை.
  • ஜெயிலில் பிறந்தோம் என்று சோர்வடையவில்லை.
  • தர்மம், அதர்மம் தெரிந்தும், அதர்மத்திற்கு துணை போன கர்ணனை போன்று, தானும் செல்லவில்லை.
  • தர்மத்திற்காக யுதிஷ்டிரனுக்கு தேரோட்டவும் தயார் என்றார்.

கீதை மூலமே ஸ்ரீ கிருஷ்ணர் தன் வாழ்க்கையை எப்படி தர்ம வழியில், தீரமாக நடத்தினார் என்று புரிந்து கொள்ளலாம்.

ஜெயிலில் பிறந்தும், க்ஷத்ரியனாக பிறந்தும் மாடு மேய்க்கும் நிலை வந்தும், பிறந்த பொழுதே தாய் தந்தை அரவணைப்பு இல்லாமல் வளர்ந்தும், எதிரிகள் பலர் இருந்தும், எந்த நேரத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் புலம்பிய, கலங்கிய சுவடு இல்லை.

துரியோதனின் அதர்மத்தை எதிர்க்க முடியாமல், பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்றோர் ஏதேதோ காரணங்கள் சொல்லி துரியோதனின் பக்கம் நின்றனர். 
துரியோதனின் மகளை மணந்து இருந்தான் ஸ்ரீகிருஷ்ணரின் மகன்.
சம்பந்தி என்ற உறவு. ஆனாலும், அதர்மத்தில் இருந்த துரியோதனுக்கு துணை போகவில்லை.

படை பலம் சிறிதாக இருந்தாலும், தர்மத்தில் உள்ள பாண்டவர்களுக்கு துணை நின்றார்.

சுய முயற்சியால் முன்னேறினார். வாழ்க்கையை தீரமாக எதிர்கொண்டார்.

எந்த நிலையிலும் அதர்மத்தை கண்டித்தார்.

எந்த நிலையிலும், சோகத்தை காட்டிக்கொள்ளாதவராக இருந்தார்.

தர்ம வழியில் நடப்பவர்களுக்கு துணை நின்றார்.


நாம், பகவத் கீதையில் எந்த ஒரு ஸ்லோகத்தையும் படிக்கும் போது, நாம் முதலில் தியானிக்க வேண்டியது - "ஸ்ரீ கிருஷ்ணர் எந்த சம்பவத்தை மனதில் வைத்து இப்படி சொன்னார்' என்று சிந்திக்க வேண்டும்.

இந்த தியானமே, ஸ்ரீ கிருஷ்ணரின் மீது பக்தி உண்டாக்கும்.

எப்படி ஸ்ரீ கிருஷ்ணர் தன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை எதிர்கொண்டார் என்பது புரியும்.

துக்கங்கள் பல, ஒருவன் வாழ்வில் இருந்தாலும், சோகத்தை முகத்தில் காட்டாதவர் ஸ்ரீ கிரிஷ்ணர்.

ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு ஓவியன் கூட சிரித்த மாதிரி தான் வரைவான். சோக கிருஷ்ணனை நாத்தீகன் கூட ஒத்துக்கொள்ள மாட்டான்.

இவரை பார்த்தாலே, பார்ப்பவனுக்கு உற்சாகம் வரும்.

பொறாமை குணம் உடையவர்களுக்கு மட்டுமே, ஸ்ரீ கிருஷ்ணரை பிடிக்காது.
வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் நமக்கு அமையலாம், இருக்கலாம், ஆனால், நாம் மாறிவிட கூடாது.



நாம் தர்மத்திலேயே இருக்க வேண்டும். சுகம் வந்தாலும், துக்கம் வந்தாலும் சமமாக இருக்க வேண்டும்.

அதர்மத்தை தட்டி கேட்க வேண்டும். முயற்சியை விட கூடாது. இதுவே ஸ்ரீ கிருஷ்ணர் தன் வாழ்வில் காட்டியது.

No comments: