Followers

Search Here...

Showing posts with label ஸ்ரீரங்கம். Show all posts
Showing posts with label ஸ்ரீரங்கம். Show all posts

Thursday 29 July 2021

ஸ்ரீரங்கம் பெருமை... பாசுரம் (அர்த்தம்) - "பச்சை மா-மலை போல் மேனி". ஸ்ரீரங்கத்தில் (திருச்சி மாவட்டம்) வீற்று இருக்கும் ரங்கநாத பெருமாளை தொழும் பாசுரம். தொண்டரடிப்பொடியாழ்வார் வர்ணிக்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !

ஸ்ரீரங்கத்தின் பெருமை....

பச்சை மா-மலை போல் மேனி!
பவள-வாய் கமல-செங்கண்!
அச்சுதா!
அமரர் ஏறே!
ஆயர்தம் கொழுந்தே! என்னும்,
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம்  ஆளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன்!
அரங்க மாநகர் உளானே!

வேதநூல் பிராயம் நூறு
மனிசர்தாம் புகுவரேலும்,
பாதியும் உறங்கிப் போகும்
நின்றதில் பதினை  ஆண்டு,
பேதை பாலகன்  அதாகும்
பிணி! பசி! மூப்பு! துன்பம்!
ஆதலால், "பிறவி வேண்டேன்"
அரங்கமா நகர் உளானே !
- திருமாலை (தொண்டரடிப்பொடியாழ்வார்)

ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டு இருக்கும் ரங்கநாதரை பார்த்து 
"எனக்கு பரலோகமும் வேண்டாம், இக லோகமும் வேண்டாம்" என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

பெருமாளுக்கு இகலோகம், பரலோகம் - என்ற இரு சொத்துக்கள் தானே உள்ளது !!




நமக்கு இகலோகம் பிடிக்கவில்லை என்றால், "சரி.. பரலோகம் செல்" என்பார்.

பரலோகம் செல்ல நம்மில் பலருக்கு இன்னும் ஆசை வரவே இல்லை! 
ஆதலால், "சரி.. இகலோகத்திலேயே இரு" என்று நம்மை மீண்டும் மீண்டும் பிறக்க செய்கிறார்.

ஆழ்வாரோ, தனக்கு "அச்சுவை பெறினும் வேண்டேன்" என்று சொல்லி "பரலோகம் கூட வேண்டாம்' என்கிறார்.

"சரி... இகலோகம் தரட்டுமா?' என்றால்... 'அதுவும் வேண்டாம்' என்கிறார்.

'ஏன் இகலோகம் வேண்டாம்?' என்று பெருமாள் கேட்டால்,

ஆழ்வார் தன் மனசாட்சியையே கேட்டு பதில் சொல்கிறார்..
"உலகத்திற்கு எத்தனை ஆயுசு கொடுக்கப்பட்டு இருக்கிறது?
ஆகாசத்திற்கு எத்தனை ஆயுசு? ஆகாசம் எவ்வளவு காலம் இருக்கிறது? 
இந்த பூமி எவ்வளவு காலம் இருக்க போகிறது? 
கடல் எவ்வளவு காலம் இருக்கப்போகிறது? 
மலை எவ்வளவு காலம் இருக்கப்போகிறது?

இவைகளின் ஆயுசை பார்க்கும் போது, இவ்வளவு பெரிய உலகத்தில், இந்த மனிதனுக்கு எத்தனை சொற்ப காலம் ஆயுசு உள்ளது !!

ஆகாசம் அளவுக்கு ஆயுசு இல்லாவிட்டாலும், ஒரு ஆயிரம் வருடமாவது மனிதனுக்கு ஆயுசு இருந்தால் பரவாயில்லை.

நூறு வயது காலம் தான் "மனித ஆயுசு" என்று எல்லை வைக்கிறதே!! (வேதநூல் பிராயம் நூறு)

வேதம், 'மனிதனுக்கு 100 வயது' என்று சொன்னாலும், அந்த நூறு வயதை தொடுபவன் கூட கோடியில் ஒரு சிலர் தானே !




50 வயதிலோ, 25 வயதிலோ, குழந்தையாக இருக்கும் போதோ, 'பட்' என்று ஆயுசு முடிந்து விடுகிறது.

கல்யாணம் ஆன பிறகு சிலருக்கு மரணம் ஏற்பட்டு விடுகிறது. கல்யாணம் ஆகாமலேயே மரணம் சிலருக்கு.

சொந்த வீட்டில் இறந்து போகிறான்.
வீடு இருந்தும் எங்கேயோ விபத்தில் இறந்து விடுகிறான். 

பந்துக்கள் சூழ்ந்து இருக்கும் போது இறந்து போகிறான். அனாதையாக இறந்து போகிறான்.

ஆஸ்பத்திரியில் இறந்து விடுகிறான். மாரடைப்பு ஏற்பட்டு மரணம். 
கொடுக்கப்பட்ட 100 வயதை கழிப்பதற்குள், வித விதமான வழிகளில் மனிதனுக்கு மரணம் ஏற்பட்டு விடுகிறது.

ஒன்று நிச்சயாமாகிறது.

'ஒரு நாள், இந்த உயிர், இந்த உடலை விட்டு கிளம்பி விடும்' என்று நிச்சயமாக தெரிகிறது.

சரி.. கிடைத்த ஆயுசை என்ன செய்கிறான் என்று பார்த்தால்!! பாதி நாள் தூக்கத்திலேயே கழிக்கிறான்.

வாழ்ந்த நாட்களில் "பகல் முழுக்க முழித்து கொண்டு இருந்தான்" என்பது தான் மனித பிறவியின் ப்ரயோஜனமா?

சரி..  முழித்து கொண்டு இருக்கும் வேளையில் நன்றாகவே இருக்கிறானா? அதுவும் இல்லை.. 

முதல் 15 வருடங்கள் பாலகனாக விளையாடி வீணடித்து விடுகிறான்.

பிறகு, மிச்ச ஆயுசை பிணியாலும், பசியாலும், மூப்பினாலும், பல வித விதமான துன்பங்களாலும் அனுபவித்து செலவு செய்கிறான்.

சீ ! இந்த உலக வாழ்க்கை வெறுக்கத்தக்கதாக இருக்கிறதே !

ஏதோ பூர்வ கர்மாவால், இந்த ஜென்மாவை எடுத்து விட்டேன். எனக்கு இக லோகமும் பிடிக்கவில்லை.

பரலோகமான இந்திர லோகம் ஆளும், அச்சுவை பெறினும் வேண்டேன்!"
(ஆதலால், "பிறவி வேண்டேன்") என்று பிரார்த்திக்கிறார்.

இப்படி ஆழ்வார் "இகலோகமும் வேண்டாம், பரலோகமும் வேண்டாம்" என்று சொல்ல, 
ஸ்ரீரங்கநாதர், 'இகலோகம், பரலோகம் என்ற இரண்டு சொத்து தானே என்னிடம் இருக்கிறது. இரண்டுமே வேண்டாம் என்றால் எப்படி? இப்படி பிடிவாதம் செய்ய கூடாது.' என்றார்




தாய் தன் குழந்தையை மடியில் வைத்து கொண்டாள். "மடியில் இருக்க மாட்டேன்" என்று கத்தி பிடிவாதம் செய்தது.

"சரி..." என்று கீழே இறக்கிவிட்டாள். 
"கீழே இறக்கி விடாதே" என்று அழுதது.

'குழந்தையை எப்படி சமாதானப்படுத்துவது?' என்று புரியாமல் தாய் தவிப்பது போல, 
'எனக்கு இகமும் வேண்டாம்.. பரமும் வேண்டாம்' என்று புலம்பி அழும் தொண்டரடிப்பொடியாழ்வாரை சமாதானம் செய்ய முடியாமல் பெருமாள் திகைக்க, ஆழ்வாரே தனக்கு வேண்டியதை ரகசியமாக கேட்கிறார்.

'அரங்க மாநகர் உளானே' என்று சொல்லும் போது... "எனக்கு இக லோகமும் வேண்டாம்.. பரலோகமும் வேண்டாம் .. ஆனால், யாருக்கும் தெரியப்படுத்தாமல், ரகசியமாக வைத்து இருக்கும் உங்கள் மூன்றாவது சொத்தான ஸ்ரீரங்கத்தில் நீங்கள் வாசம் செய்ய, உங்களுக்கு ஏதாவது சிறு கைங்கர்யம் செய்து கொண்டு ஸ்ரீரங்க வாசம் செய்யும் பாக்கியத்தை தாருங்கள்" 
என்று கேட்காமல் கேட்கிறார்.

"ஸ்ரீரங்கம் இகலோகத்தில் தானே இருக்கிறது..  நீர் தான் இகலோகம் வேண்டாம் என்கிறீரே?" என்று பெருமாள் கேட்க...

"ஸ்ரீரங்கநாதருக்கு கைங்கர்யம் செய்பவருக்கு இக லோக துக்கமே தெரியவில்லையே!" என்கிறார்.

"சரி.. ஸ்ரீரங்கம் பரமபதத்தை காட்டிலும் உயர்ந்ததோ?" என்று கேட்க..

"பரமபதம் உயர்ந்தது தான் என்றாலும்..  அங்கு பரமபத நாதன் எப்பொழுதும் தரிசன ஆனந்தம் மட்டும் தானே தருகிறார். 
இங்கோ ! 
அதே பரமபத நாதன் 'ரங்கநாதனாக' இருந்து கொண்டு, தரிசன ஆனந்தம் கொடுத்து, பற்பல உற்சவங்கள் செய்து கொண்டு பஞ்ச இந்திரியங்களுக்கும் ஆனந்தம் கொடுக்கிறாரே! 
அவருக்கு விதவிதமான கைங்கர்யம் செய்வதால், கைங்கர்ய ஆனந்தமும் கிடைக்கிறதே!. பரமபதத்தை விட, எனக்கு ஸ்ரீரங்கம் பேரானந்தத்தை தருகிறதே!" என்கிறார்.

இப்படி. ஆச்சர்யமாக, ஆழ்வார், 'எனக்கு ஸ்ரீ ரங்கநாதரே போதும்.. ஸ்ரீரங்கமே போதும்... வேறு எதுவும் வேண்டாம்' 
என்று சொல்லி கதறி அழும் பாசுரம் இது.

'பக்தி என்றால் என்ன?
என்பதை ஆழ்வார் பாசுரங்களை படித்து அர்த்தம் தெரிந்து கொண்டாலே நாம் புரிந்து கொள்ள முடிகிறது..

தமிழனாய் பிறந்தவன் - வாழும் சில வருட வாழ்நாளில், ஒரு வருடமாவது 4000 தமிழ் பாசுரங்களை அர்த்தம் தெரிந்து படிக்க முயற்சிக்க வேண்டும்.

குருநாதர் துணை

Saturday 21 March 2020

ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) நம்பெருமாள் வருவதற்கு முன் நடந்த சரித்திரம். தெரிந்து கொள்ள வேண்டாமா?

உலக ஸ்ருஷ்டி ஆரம்பமான காலம்:
ப்ரம்மாவுடைய மானஸ புத்ரன் தக்ஷன்.
ப்ரம்மாவின் ஆணையை ஏற்று தக்ஷ ப்ரஜாபதி உலக ஸ்ருஷ்டிகளை செய்தார்.
28 பெண் தேவதைகளை ஸ்ருஷ்டி செய்தார்.
இதில் 27 தேவதைகளே 'நக்ஷத்திரங்களாக' ஜொலிக்கின்றனர். மற்றொருவள் பெயர் "அபிஜித்".

"க்ஷத்ர" என்றால் "மங்கக்கூடிய" என்று பொருள்.
"ந-க்ஷத்ர" என்றால் "மங்காத" என்று பொருள்.

உலகில் மனிதர்களை "மங்காத புகழ்" என்று சொல்ல "நக்ஷரம்" என்று சொல்லி பெருமைபட்டுக்கொள்வார்கள்.
ஆனால்,
அனைவரும் ஒருநாள் மங்கக்கூடியவர்களே !




உண்மையில் என்றுமே மங்காத பெருமையுடன் இரத்தின மாலை போல ஜொலிப்பவர்கள் இந்த தேவதைகள்.

27 பெண்களின் பெயர்: (நக்ஷத்ர தேவத்தைகள்)
அஸ்வினி, பரணி, கிருத்திகா (கார்த்திகை),
ரோகினி, ம்ருகசீர்ஷா, ஆத்ரா (திருவாதிரை),
புனர்வசு (புனர்பூசம்),  புஷ்ய (பூசம்), ஆஸ்லேசா (ஆயில்யம்),
மகா (மகம்), பூர்வ பல்குனி (பூரம்), உத்தர பல்குணி (உத்திரம்),
ஹஸ்த (அஸ்தம்), சித்ரா (சித்திரை), ஸ்வாதி (சுவாதி),
விஷாகா (விசாகம்), அனுராதா (அனுஷம்), ஜ்யேஷ்டா (கேட்டை),
மூல (மூலம்), பூர்வ ஆஷாடா (பூராடம்), உத்தர ஆஷாட (உத்திராடம்),
ஸ்ரவண (திருவோணம்), தனிஷ்டா (அவிட்டம்), சதபிஷா (சதயம்),
பூர்வ பாத்ரபதா (பூரட்டாதி), உத்திர  பாத்ரபதா (உத்திரட்டாதி), ரேவதி

தன் 28 பெண்களையும், பாற்கடலில்  தோன்றிய சந்திரனுக்கே மணம் செய்து கொடுத்தார்.
பார்ப்பதற்கே குளிர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கும் சந்திரன், செல்வத்துக்கு அதிதேவதையான மகாலட்சுமிக்கு சதோதரன்
என்ற காரணத்தினாலேயே மனமுவந்து தன் 27 பெண்களையும் கொடுத்தார்.

பெருமாளும், தாயாரும் நமக்கு தாய் தந்தை.
அதன் காரணத்தாலேயே, மகாலட்சுமியின் சகோதரனான சந்திரனை "சந்திர மாமா" என்றும் "அம்புலி மாமா" என்று உறவு சொல்லி அழைக்கிறோம்.
இந்த அதி தேவதைகளே 27 நக்ஷத்திர மண்டலங்களாக, சந்திரனுடன் நமக்கு காட்சி கொடுக்கிறார்கள்.

28 பெண்களை மனம் செய்து கொடுத்தாலும், சந்திரன் ரோகினியிடம் மட்டும் தனி பிரியம் கொண்டிருந்தார்.
மற்ற மனைவிகளிடம் சமமாக பழகாமல் இருந்து வந்தார்.

தங்கள் குறையை தகப்பனாரான தக்ஷனிடம் மற்ற 27 பெண்கள் சொல்ல, மனைவியிடம் பிரியம் இல்லாமல் இருக்கும் சந்திரன் மேல் கடும் கோபம் கொண்டார்,  தக்ஷ பிரஜாபதி.
மாப்பிள்ளையை சபித்தால் யாருக்கு நஷ்டம்?
தன் பெண்களுக்கு தானே நஷ்டம் !

கோபத்தில், சந்திரனை பார்த்து "உன் பொலிவான தோற்றத்தில் க்ஷய ரோகம் (தேய்மானம்) ஏற்படட்டும்" என்று சபித்துவிட்டார்.

சாபத்தால், நாளுக்கு நாள் சந்திரனின் பொலிவு தேய ஆரம்பிக்க, "அமாவாசை வருவதற்குள் நாம் முழுவதும் பொலிவு இல்லாமல் அழிந்து விடுவோம் போல உள்ளதே!!" என்று ப்ருகு முனிவரை சந்திரன் சரண் அடைந்து உபாயம் கேட்டார்.

ப்ருகு சந்திரனை பார்த்து, "நீ உடனேயே பூலோகம் சென்று, அங்கு வாசுதேவனை  ஆராதனை செய். அப்படி செய்தாய் என்றால், உனக்கு இந்த க்ஷய ரோகம் நிவர்த்தி ஆகும்" என்று சொல்ல,

சந்திர தேவன்  பூலோகம் வந்து, தானே ஒரு புண்ணிய தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, வாசுதேவனை குறித்து ஆராதனை செய்ய தொடங்கினார்.

சந்திரனால் ஏற்பட்ட இந்த தீர்த்தத்துக்கு "சந்திர புஷ்கரணி " என்று பெயர் ஏற்பட்டது.
இது காவிரி உருவாவதற்கும் முந்தைய காலம்.
திருவரங்கத்திற்கு நம்பெருமாள் இன்னும் வராத காலம்.

"சந்திர புஷ்கரணி " என்ற தீர்த்தம் அமைத்து, அதன் நான்கு பக்கங்களிலும் மேலும் (உப) சில தீர்த்தங்களும் அமைத்தார் சந்திர தேவன்.

ப்ராச்ய (கிழக்கு) திசையில், நாவல் (ஜம்பு) மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'ஜம்பு தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
ஜம்பு (நாவல்) மரத்துக்கு ஈஸ்வரனாக இருக்கும் சிவபெருமானை அங்கு பிரதிஷ்டை செய்தார். (திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் கோவில்).

தக்ஷிண (தெற்கு)திசையில், புன்னை மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'புன்னாக தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
அங்கு, ப்ருகு முனிவர் சொன்னபடி,  "வாசுதேவனை" பிரதிஷ்டை செய்தார்.

பஸ்சிம (மேற்கு) திசையில், வில்வ  மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'வில்வ தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
அங்கு, தன் சகோதரியான மகாலட்சுமியை பிரதிஷ்டை செய்தார்.

"சந்திர புஷ்கரணி " தீர்த்தத்துக்கு உத்திர (வடக்கு) திசையில், கதம்ப   மரங்கள் நிறைந்த இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'கதம்ப  தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது. அங்கும் புருஷோத்தமனை பிரதிஷ்டை செய்தார்.  (கதம்பனூர் என்றும் கரம்பனூர் என்றும் சொல்கிறோம். திருக்கரம்பனூர் உத்தமர் கோயில்)

சந்திரன் அமைத்த "சந்திர புஷ்கரணி"  என்ற தீர்த்த கரையில் பிற்காலத்தில், த்ரேதா யுகத்தில், விபீஷணனால், கொண்டு வரப்பட்டு, ஸ்ரீ ரங்கநாத பெருமாளே வந்து சேருகிறார்.

சந்திரன் அமைத்த மற்ற தீர்த்தங்களை ஸ்ரீ ரங்கநாதர், பங்குனி மாதம் ஒவ்வொரு தீர்த்தத்துக்கு சென்று தங்கி, ஸ்ரீரங்க எல்லையை தானே காத்து வருகிறார்.
பங்குனி திருநாள் உத்சவம் என்று ஸ்ரீரங்கத்தில் இன்றும் பெருமாள் தன் ராஜ்யத்தை நடத்தி வருகிறார்.

இப்படி பல தீர்த்தங்கள் அமைத்து, பெருமாளை வாசுதேவனாக, ஆராதனை செய்த சந்திர தேவன், தன் க்ஷய ரோகத்தில் இருந்து விடுபட்டு, அமாவாசை முடிந்து சுக்ல பக்ஷத்தில் மீண்டும் வளர்ச்சி அடைந்து விட்டார்.

தக்ஷன் சொன்ன வார்த்தையும் சத்தியம் செய்வதற்காக, கிருஷ்ண பக்ஷத்தில் மட்டிலும் க்ஷத ரோகத்தை அனுபவிக்கிறார்.

வாசுதேவனின் அனுகிரஹத்தால்
, சந்திர தேவனுக்கு ஏற்பட்ட க்ஷய ரோகம் மட்டும் நீங்காமல், தன் மனைவிகளிடத்தில் இருந்த வேற்றுமை உணர்வும் நீங்கியது.
ஸ்ரீ ரங்கத்தில் உள்ள, இந்த சந்திர புஷ்கரணியின் அருகிலேயே வாசுதேவ சன்னதி இருக்கிறது. 
இந்த வாசுதேவன் பெரிய பெருமாள் (ரங்கநாதர்) இங்கு வருவதற்கு முன்பேயே வந்தவர்.

ஸ்ரீ ரங்கத்தில் உள்ள, இந்த சந்திர புஷ்கரணியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு, க்ஷய ரோகங்கள் (தோல் சம்பந்தமான) நிவர்த்தியாகி விடும்.
ரோகங்கள் வருவதற்கான  காரணம் "நாம் செய்த பாபங்களே"
அந்த பாபங்கள் வாசுதேவனின் சாநித்தியத்தாலேயே பொசுங்கி விடும்.

ஸ்ரீரங்கநாதர் வருவதற்கு முன்பேயே வந்தவர் "வாசுதேவன்".
வாசுதேவன் சந்நிதி இன்றும் சந்திர புஷ்கரணி தீர்த்தத்துக்கு அருகிலேயே இருக்கிறது.

வாசுதேவன் சாநித்தியத்துடன் இருக்கும் இந்த சந்திர புஸ்கரணியிலே,
நாம் தீர்த்தமும், முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்தால், கோடி புண்ணியம். 
நம் முன்னோர்கள் எல்லோரும் நல்ல கதியை அடைவார்கள்.


அந்த தீர்த்த கரையிலேயே வாசம் செய்யும் வேத ப்ராம்மணர்களுக்கு, நாம் அன்ன தானம், வஸ்திர தானம், கோ (பசு) தானம், தனம் முதலியவை கொடுத்தால், எந்த காலமும் செல்வம் குறையாத நிலையில் வாழும் பாக்கியம் நமக்கு கிடைக்கும்.




அழிவில்லா செல்வம் தரக்கூடிய புண்ணிய காரியங்கள் இவை.

சந்திரா புஷ்கரணி தீரத்தில், யார் ஜபம், தபசு செய்கிறார்களோ! அவர்களுக்கு சீக்கிரமாக தான் எதிர்பார்த்த பலங்கள் ஸித்தி ஆகிறது.

அனைத்து புண்ணிய நதிகளும், இந்த சந்திர புஷ்காரணியில் வசிக்கிறார்கள்.

அனைவரும் சென்று பார்க்க வேண்டும்.