Followers

Search Here...

Showing posts with label பாசுரம். Show all posts
Showing posts with label பாசுரம். Show all posts

Monday 2 March 2020

பாசுரம் (அர்த்தம்) - ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை - திருமங்கையாழ்வார் திருக்கண்ணமங்கை பெருமாளுடன், திருநின்றவூர் பெருமாளை சேர்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருமங்கை ஆழ்வார், திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது,
அதே பெயரில் திருநின்றவூரில் இருக்கும் பக்தஜீவன பெருமாளின் நினைவு வர, அவரையும் சேர்த்து இங்கு மங்களாசாசனம் செய்தார்.




இரண்டு திவ்ய தேசங்களை சேர்த்து கொண்டு மங்களாசாசனம் செய்கிறார்.

பாசுரம்:
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை!
இம்மையை மறுமைக்கு மருந்தினை!
ஆற்றலை அண்டத் அப்புறம் உய்த்திடும் ஐயனை!
கையில் ஆழி ஒன்று ஏந்திய கூற்றினை!
குரு மாமணிக் குன்றினை!
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை!
காற்றினை!
புனலை!
சென்று நாடிக் கண்ணமங்கையுள் 
கண்டு கொண்டேனே!
- (பெரிய திருமொழி)
என்று திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாளை பார்க்கும் போது பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.




திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணமங்கையில் எழுந்தருளி இருக்கும் பக்தவத்சல பெருமாளை பார்க்கும் போது, திருநின்றவூரில் எழுந்தருளி இருக்கும் பக்தஜீவனன் என்ற பெயருடைய பெருமாள் ஆழ்வாருக்கு வலுவில் வந்து தரிசனம் தர,
'நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை'
என்று இந்த திவ்ய தேச பெருமாளை கொஞ்சி மங்களாசாசனம் செய்கிறார்.

பரமபதத்தில் (வைகுண்டம்) எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறார்.
க்ஷீராப்தியிலும் (பாற்கடல்) எம்பெருமான்  எழுந்தருளி இருக்கிறார்.
யாரும் எளிதில் போக முடியாத இமயமலையில் பதரிநாத் போன்ற திவ்ய தேசங்களிலும் எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறார்.
நம்மால் அத்தனை தூரம் வர முடியுமோ!! என்று கருணை கொண்டு, அதே எம்பெருமான், மஹாலக்ஷ்மி ஸ்திரமாக நிற்கும் திருநின்றவூருக்கு நமக்காக வந்து நிற்கிறாரே!!
என்று பகத்ஜீவனனாக இருக்கும் எம்பெருமானை கொஞ்சி மகிழ்கிறார், திருமங்கை ஆழ்வார்.
திருநின்றவூரில் நிற்கும் எம்பெருமான், 'ஒரு முத்து குவியல் போல' பேரழகுடன், குளிர்ந்த திருமேனியுடன் கண் எதிரே தரிசனம் தர, "குரு மாமணிக் குன்றினை" என்று கொஞ்சுகிறார்.




இங்கு "நித்தில தொத்தினை" என்று திருநின்றவூர் எம்பெருமானை என்று அழைக்கிறார்.
"நித்தில தொத்து" என்றால் "பவள கொத்து" என்று அர்த்தம்..
பவளத்திற்கு இயற்கையாகவே ஒரு குளிர்ச்சி உண்டு.
பவள மணியை, மாலையாக கழுத்தில் போட்டு கொண்டால், உடல் குளிர்ச்சியாகும்.

இங்கு, "பவள கொத்து" என்று திருநின்றவூர் எம்பெருமானையே சொல்லி கொஞ்சுகிறார் திருமங்கை ஆழ்வார்.

ஒரு முத்து குவியல் போல பேரழகுடன், குளிர்ந்த திருமேனியுடன் இருக்கும் திருநின்றவூர் பெருமாளை பார்த்ததுமே, 'பெருமாளையே ஒரு பவள மாலையாக ஆக்கிக்கொண்டு, தன் கழுத்தில் போட்டு கொண்டு விட வேண்டும்' என்று ஆசை உண்டாகி விட்டது ஆழ்வாருக்கு.

வெயிலில் வாடி, வியர்த்து போன ஒருவனுக்கு, தென்றல் காற்று வீசினால் எப்படி சுகமாக இருக்குமோ!  அது போல, உலகத்தில் ஏற்படும் பலவித சிரமங்களால் துக்கப்பட்டு துவண்டு போகும் நமக்கு, இவர் தரிசனமே குளிர்ந்த காற்று வீசுவது போல சுகத்தை தருகிறதே!! என்றதும் "காற்றினை" என்று கொஞ்சுகிறார்.

வெயிலில் வாடி, உடம்பில் தண்ணீர் வற்றி, உயிர் போய் விடும்!! இனி தாளாது!! என்று தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு, சுவையான நீர் கிடைத்தால் எத்தனை சுகம் அடைவானோ, அது போல, தாபத்தோடு வரும் பக்தனுக்கு, தாபத்தை போக்கும் புனல் (தண்ணீர்) போல திருநின்றவூர் எம்பெருமான் தரிசனம் தருகிறாரே!! என்றதும் "புனலை" என்று கொஞ்சுகிறார்.

திருக்கண்ணமங்கையில் பக்தவத்சல பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது,
திருநின்றவூர் பக்தஜீவனன்  (பக்தவத்சல என்றும் சொல்கிறார்கள்) என்ற எம்பெருமான், வலிய இடையில் புகுந்து கொண்டு, திருமங்கை ஆழ்வாரிடம் தனக்கும் ஒரு மங்களாசாசனம் வாங்கி கொண்டு விட்டார்.


Saturday 22 February 2020

பாசுரம் (அர்த்தம்) - அலங்கெழு தடக்கை ஆயன் - திருமங்கையாழ்வார் திருபுட்குழி, திருநீர்மலை, திருவிடந்தை பெருமாளை சேர்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற் கழியுமால் என் உள்ளம் என்னும்,
புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் !!
போதுமோ நீர்மலைக் கென்னும் !!
குலங்கெழு கொல்லி கோமள வல்லி
கொடியிடை நெடுமழைக் கண்ணி !
இலங்கெழில் தோளிக்
என் நினைந்து இருந்தாய்?
இடவெந்தை எந்தை பிரானே.
-- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)




இங்கு ஒரு திவ்ய தேசத்தோடு இன்னொரு திவ்ய தேசத்தை சேர்த்து கொண்டு பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

திருமங்கையாழ்வாரே  பரகால நாயகி என்ற பெண்ணாகி, தன் நாயகனான பெருமாளிடம் தீராத காதல் கொண்டு, தன் நாயகன் உகந்து இருக்கும் திவ்ய தேசங்களுக்கு சென்று தரிசிக்கலாமா என்று தன் தாயிடமே கேட்க துணிகிறாளாம்.
பெருமாளிடம் ஏற்பட்ட தீராத காதலால், இந்த பரகால நாயகிக்கு,
அவளுடைய காதலன் இருக்கும் இடம் கூட இனிக்கிறது.
அவளுடைய காதலன் இருக்கும் ஊர் கூட இனிக்கிறது.

ஆழ்வாருக்கு ஏற்பட்ட இதே அனுபவத்தை ஆண்டாளும் சொல்கிறாள் என்று பார்க்கிறோம்.

ஆண்டாள், பெருமாளிடம் காதல் கொண்டு, 'பெருமாளின் கோவில் வாசல் கதவில் கூட தனக்கு நேசம் உண்டு' என்று சொல்கிறாள்.
ஆண்டாள், திருப்பாவையில் "நிலைக் கதவம்" (கதவு) என்று வெறுமனே சொல்லாமல்,
"நேய நிலைக் கதவம்" (நேசமுள்ள கதவு) என்று குறிப்பிட்டு சொல்கிறாள் என்று கவனிக்கிறோம்.

பெருமாளின் சம்பந்தம், ஒரு ஜட பொருளின் மேல் ஏற்பட்டால் கூட, அதில் கூட நேசம் உண்டாகி விடுமாம் உண்மையான வைஷ்ணவனுக்கு.

"கோவிலை பூட்டி, பெருமாள் தரிசனம் இப்போது இல்லை" என்று சொன்னாலும்,
ஸ்ரீ ரங்கத்தில் உள்ள பக்தர்கள் "சரி.. கோவில் நடை திறந்த பிறகு பெருமாளை பார்த்து கொள்ளலாம்" என்று நகர மாட்டார்களாம்.
மாறாக,
பெருமாளுக்கு சம்பந்தப்பட்ட அந்த பூட்டிய கதவையே ஆசையோடு பார்த்துக்கொண்டு, அதன் அருகிலேயே உட்கார்ந்து இருப்பார்களாம் உண்மையான பக்தர்கள்.
இப்படிப்பட்ட வைஷ்ணவர்களுக்கு, பெருமாள் சம்பந்தப்பட்ட கதவு கூட "நேய நிலைக் கதவாக" தோன்றுமாம்.

பெருமாளிடம் பக்தி கொண்டவர்களுக்கு,
கோவில் கதவை பார்க்கும் போதே, இவர்களுக்கு ஒரு நேசம் உண்டாகுமாம்..
கோவில் கதவை பார்க்கும் போதே, இவர்களுக்கு பெருமாளின் நினைவே ஏற்படுத்துமாம்.

இப்படி காதல் கொண்டு நிற்கும் இந்த பரகால நாயகி (திருமங்கையாழ்வார்),
  • இப்பொழுது தன் நாயகன் எங்கு இருப்பார்?
  • திருபுட்குழியில் இருக்கிறாரோ?
  • அல்லது,
  • திருநீர்மலைக்கு சென்று இருக்கிறாரோ?
  • அங்கு சென்று கொஞ்சம் அவரை பார்க்கலாமா?
என்று தன் தாயிடமே துணிந்து வெட்கத்தை விட்டு கேட்கிறாளாம்.







இங்கு திருபுட்குழியை பற்றி சொல்லும் போது,
"புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்" என்று வர்ணிக்கிறார்.
இன்று கூட, திருபுட்குழி என்ற திவ்ய தேசம் வயல் சூழ்ந்து, தண்ணீர் நிறைந்த சோலையாக தான் இன்று வரை உள்ளது.

"புலங்கெழு பொருநீர்" என்ற சொல்லுக்கு 2 அர்த்தங்களை நமக்கு காட்டுகிறார் பெரியவாச்சான் பிள்ளை.

முதல் அர்த்தம்:
  • புலம் என்றால் வயல்
  • வயல்கள் நிறைந்து தண்ணீர் சூழ்ந்த, பசுஞ்சோலையாக இருக்கிறது "திருப்புட்குழி" என்று ஒரு அர்த்தம்.
விசேஷ அர்த்தம்:
  • புலம் என்றால் புலன் என்றும் அர்த்தம் உண்டு.
  • திருப்புட்குழியில் உள்ள விஜயராகவ பெருமாளை பார்த்தாலே, நமது 5 புலன்களும் புஷ்டியாகி ஆரோக்கியத்தை அள்ளி தரும் என்று இன்னொரு அர்த்தம்.
இந்த பரகால நாயகி, பெருமாளிடம் தனக்கு ஏற்பட்ட அடக்கமுடியாத காதலால், தன் அருகில் அவள் தாய் இருப்பதை அறிந்தும், பயப்படாமல் "கலப்பை போன்ற உறுதியான கைகளுடைய, யாதவ குலத்தில் உதித்த  என் நாயகன், தன்னுடைய சிவந்த உதட்டில் இலையினால் செய்யப்பட்ட சிறு ஊதுகுழல் கொண்டு நிற்க, 
இந்த காட்சி என் மனதை விட்டு அகலாமல், என் நெஞ்சம் அவர் நினைவாகவே இருக்கிறது. (அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற் கழியுமால் என் உள்ளம்).
 என் நாயகனை திருப்புட்குழி சென்று நான் காணலாமா? (புலங்கெழு பொருநீர்ப் புட்குழி)
திருநீர்மலை சென்று காணலாமா? (போதுமோ நீர்மலை)"
என்று தைரியமாக வெட்கத்தை விட்டு கேட்கிறாளாம்.

கூச்சத்தை விட்டு இந்த பரகால நாயகி கேட்கிறாள் என்பதால் "பாடும்" என்ற பதத்தை பயன்படுத்துகிறார் ஆழ்வார். - "புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்"

உலகம் என்ன நினைக்குமோ! என்ற கூச்சப்படாமல்,
பக்தன் பெருமாளிடம் தைரியமாக பக்தி செய்கிறான் என்பதையே இங்கு ஆழ்வார், தன்னை பரகால நாயகியாகவும், பெருமாளை நாயகனாகவும் ஆக்கிக்கொண்டு பாடுகிறார்.
ஸ்ரீ கிருஷ்ண அவதார சமயத்தில், ருக்மிணி தேவி 'சிசுபாலனுக்கு தன் அண்ணன் ருக்மி, தன்னை மணம் செய்து கொடுக்க முயற்சிக்கிறான்' என்றதும், பெரும் தாபத்தை அடைந்த ருக்மிணி, வெட்கத்தை விட்டு, துணிந்து ஸ்ரீ கிருஷ்ணருக்கு "காதல் கடிதம்" கொடுத்து அனுப்பி விட்டாள் என்று பார்க்கிறோம்.
ஸ்ரீ கிருஷ்ணர் "என்ன இப்படி தைரியமாக எழுதி இருக்கிறாளே ருக்மிணி?" என்று தன்னை தவறாக நினைத்து விடுவாரோ என்று, அவளே "மணந்தால் உங்களை தான் மணப்பேன் என்று எனக்கு ஏற்பட்ட தவிப்பால் தான் இப்படி துணிந்து எழுதி விட்டேனே தவிர, ருக்மிணி இப்படி வேறு ஒரு புருஷனுக்கு வெட்கத்தை விட்டு கடிதம் எழுதுவாளோ என்று கூட நினைத்து விட வேண்டாம்"
என்று தன் தாபத்தின் காரணத்தை சொல்கிறாள்.

பரகால நாயகி, தன் தாயிடத்தில் வெட்கத்தை விட்டு,
"தன் நாயகனை பார்க்க, திருப்புட்குழி போகட்டுமா? 
திருநீர்மலை போகட்டுமா?" என்று கேட்க,

இப்படி வெட்கத்தை விட்டு, தாயான தன்னிடமே "தன் காதலனிடம் செல்லலாமா?" என்று கேட்க,
தன் மகள் பரகால நாயகி (திருமங்கை ஆழ்வார்) படும் தாபத்தை  கண்டு, அவள் தாயே, தன் மகளுக்காக திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமானிடம் சென்று முறையிடுகிறாள்.

திருமங்கைஆழ்வார், தன்னையே தாயாகவும் மகளாகவும் பாவித்துக் கொண்டு,
மகள் படும் பாட்டைத் தாய் முறையிடுவது போல எம்பெருமானிடம்
முறையிடுகிறார்
"எம்பெருமானே! 
என் மகள் உங்கள் மீது காதல் பித்துப் பிடித்து அலைகிறாள். 
அழகு பொருந்திய தடக்கைகள் (தோள்) கொண்ட ஆயனாக வந்த கண்ணபிரானின் ஆம்பல் நிற வாயைச் சுவைக்கவே என்னுள்ளம் அழிகிறதென்கிறாள். 
திவ்ய தேசத்து எம்பெருமானின் பேரழகையெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்கிறாள். 
பல திவ்ய தேசத்து எம்பெருமான்களை நினைத்துப் பார்க்கிறாள். 
திடீரென அவளுக்கு புட்குழியெம்பெருமானின் நினைவு வருகிறது. 
திருப்புட்குழி எம்பெருமானை வாயாரப் பாடுகிறாள்! 
அக்கணமே, 
திருநீர் மலை எம்பெருமானின் நினைவு வருகிறது. 
திருநீர்மலைக்குப் போக மாட்டேனோ? என்று பொருமுகிறாள். 

கொல்லிமலைப்பாவை போன்றல்லவா இவள் இருக்கிறாள். 
கோமள வதனமும், கொடியிடையும், மழைமேகம்
போன்ற கூந்தலில் அழகிய மலர்களைச் சூடி, எழில்கொஞ்சும் தோள்களைக்
கொண்டு கொல்லியம் பாவை போன்ற பேரழகுபொருந்திய இவள் பொருட்டு,
நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?"என்று தன் மகள் பொருட்டு தாயொருத்தி கேட்பது போல் திருமங்கை ஆழ்வார்  கேட்டு மங்களாசாசனம் செய்கிறார்.




நாராயணன் மட்டுமே ஆண். 
அவர் முன் நாம் அனைவருமே பெண் தான்.

ஒரு பெண்ணுக்கு எப்படி பிறந்து வீடு, புகுந்த வீடு உண்டோ,
அது போல,
நமக்கு புகுந்த வீடு, வைகுண்டமே!
நமது நாதன் நாராயணனே! 

இங்கு, பரகால நாயகி என்ற பெண்ணாக ஆகி, ஆழ்வார், "நாராயணனை அடைவதே நமக்கு லட்சியமாக இருக்க்க வேண்டும்" என்று காட்டுகிறார்.

நமது பக்தியின் நிலையை கண்டு, தாயை போல ஒரு ஆத்ம குரு வந்து, நமக்காக பெருமாளிடம் பிரார்த்தித்து பெருமாளிடம் நம்மை சேர்கிறார் என்று காட்டுகிறார்.

மூன்று பக்தி நிலைகள் என்ன? என்று தெரிந்து கொள்ள...





Friday 14 February 2020

பாசுரம் (அர்த்தம்) - அத்தியூரான் புள்ளையூர்வான் - பூதத்தாழ்வார் காஞ்சி அத்திவரதரை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அத்தியூரான்! 
புள்ளையூர்வான்!
அணிமணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான்!
முத்தீ மறையாவான்!
மாகடல் நஞ்சுண்டான்றனக்கும் இறையாவான்!
எங்கள் பிரான்!
-- இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாழ்வார்)
காஞ்சி அத்திவரதரை, 'பூதத்தாழ்வார் மங்களாசாசனம்' செய்து பாடுகிறார்.




கஜேந்திரன் (ஹஸ்தி) என்ற யானையின் சரீரமே மலையாகி, அந்த சிறு மலையில் (கிரி) வீற்று இருக்கும், அத்திவரத பெருமாளே!  - (அத்தியூரான்)

கருட வாகனத்தில் வருபவரே! - (புள்ளையூர்வான்)

தொடுத்து வைத்தது போல மாணிக்கங்கள் ஆயிரம் தலைகளிலும் ஜொலிக்க, படமெடுக்கும் ஆதிசேஷன் மேல், துயில் கொண்டிருக்கும் பெருமாளே! - (அணிமணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான்)
என்று பெருமாளை கூப்பிடுகிறார் பூதத்தாழ்வார்.

அடுத்து "முத்தீ மறை ஆவான்" என்று கூப்பிடுகிறார் ஆழ்வார்.
'முத்தீ' என்ற பதத்துக்கு, 2 அர்த்தங்களை சொல்கிறார், சேங்கனூரில் அவதரித்த  ஆச்சாரியார் பெரியவாச்சான் பிள்ளை.
முதல் அர்த்தம் : மூன்று தீ (முத்தீ)
இரண்டாவது அர்த்தம் : முக்தி/மோக்ஷம் (முத்தீ)
வேதத்தை, தமிழில் 'மறை' என்று சொல்கிறார்கள்.
காரணம்,
வாக்குக்கு எட்டாத பரப்ரம்மத்தை பற்றி நேரிடையாக பேச, வேதமே தயங்குவதால், பரப்ரம்மமான நாராயணனை மறைத்து மறைத்து பேசுகிறது.
இப்படி மறைத்து பேசுவதாலேயே, தமிழர்கள், வேதத்தை அழகாக "மறை நூல்" என்று சொல்கிறார்கள்.




வேதத்தை பற்றிய ஆழ்ந்த அறிவு உடையவர்களாக தமிழர்கள் இருந்ததால் தானே, வேதத்துக்கு ஈடான தமிழ் சொல்லை பயன்படுத்தினர் என்று பார்க்கிறோம்.

வேதம் வெளியோட்டமாக 'இந்திரன், வருணன், அக்னி' என்று சொல்லி ஸ்துதி செய்கிறது.
அஞானி, வேதம் பல தெய்வங்களை சொல்கிறது என்று நினைக்கிறான்.
இந்திரன் என்ற தேவனை நினைக்கிறான்.
அக்னி என்ற தேவனை நினைக்கிறான்.

வெளிப்படையாக வேறு அர்த்தத்தை காட்டும் வேதம்,
வாக்கும் எட்டாத பரப்ரம்மமான நாராயணனை நேரிடையாக ஸ்துதி செய்ய பயப்படுகிறது.
அதே சமயம்,
ஒரே பரமாத்மாவை தான் இப்படி பல வித பெயர்களை கொண்டு அழைக்கிறேன் என்றும் வேதமே சொல்கிறது.

'இந்திராய ஸ்வாஹா' என்று சொல்லும் போது, உண்மையில் வேதம், இந்திர பதவியில் உள்ள தேவனை குறிப்பிடவில்லை.
மாறாக,
அந்த விராட் புருஷனான பரமாத்மாவின் கைகளே 'இந்திரன்' என்று பூஜிக்கிறது.
'சோமாய ஸ்வாஹா' என்று சொல்லும் போது, பெருமாளின் இதயத்தை பூஜிக்கிறது.

இப்படி வேத மந்திரங்கள் அனைத்துமே, நாராயணனுக்கு ஒரு அங்க பூஜையாக தான் இருக்கிறது என்ற ரகசியத்தை ஞானிகளே அறிந்து கொள்கிறார்கள்.

ஆதலால் தான்,
வேதம், அஞானிக்கு கர்ம காண்டமாகவும், 
வேதம், ஞானிக்கு ஞான காண்டமாகவும் தெரிகிறது.

வெளியோட்டமாக பார்த்தால்,
வேதம் 'யாகம் செய்! யோகம் செய்!' என்று கர்ம காண்டம் போல தெரியும்.
அதே வேதம்,
ஞானிகளுக்கு பிரம்மமாகிய பரமாத்மாவை அடைய வழிகாட்டுவதாக தோன்றுகிறது.
"மூத்தீ மறையாவான்" என்ற சொல்லுக்கு முதல் அர்த்தம்:

  • மூன்று அக்னி (முத்தீ) (லௌகீகாக்னி, ஒளபாசனாக்னி, ஸ்ரௌதாக்னி) வளர்த்து, கர்ம காண்டமாக யாகம் செய்து, வேதங்களால் யஞ்ய நாராயணனனாக புகழப்படும் பெருமாளே! என்பது சாமானிய அர்த்தம்.





"மூத்தீ மறையாவான்" என்ற சொல்லுக்கு இன்னொரு அர்த்தம்:

  • வேதமே (மறை), உண்மையில் நாராயணனுக்கு செய்யும் அங்க பூஜை தான். சகல தேவதைகளும் அவர் அங்கங்களே! இந்த ஞானத்தோடு வேதத்தை உச்சரித்தாலேயே, வேதத்தை கேட்டாலேயே, அதன் பலனாக நமக்கு மோக்ஷத்தை (முக்தி) கொடுக்கும் பெருமாளே!! என்பது மற்றொரு அர்த்தம்.


ப்ரம்ம தேவன் போன்ற ஞானிகளும், வேத மந்திரங்களை நாராயணின் அங்க பூஜையாக செய்து, மோக்ஷம் அடைகின்றனர் - (மூத்தீ மறையாவான்).
உலக ஆசைகள் உள்ள சாமானிய ஜனங்களும், வேத மந்திரங்கள் சொல்லி மூன்று காலங்களில் யாக தீ வளர்த்து உம்மையே பூஜிக்கின்றனர் - (மூத்தீ மறையாவான்)
என்று பூதத்தாழ்வார், அத்தி வரதரை மங்களாசாஸனம் செய்கிறார்.  
விஷ்ணுவின் பரத்துவத்தை அறிந்தவரும், 
எப்பொழுதும் தாரக மந்திரம் (ராம) ஜபிப்பவரும், 
ஞான ஸ்வரூபனும்,
பாற்கடலிலிருந்து கிடைத்த நஞ்சினை உண்ட சிவபெருமானுக்கு, அந்தர்யாமியாக இருக்கும் எம்பெருமான், 
அத்திகிரியில் எழந்தருளியிருக்கிறாரே!! 
(மாகடல் நஞ்சுண்டான்றனக்கும் இறையாவான் எங்கள் பிரான்)
என்று, காஞ்சி வரதராஜ பெருமாளை, மங்களாசாசனம் செய்கிறார் பூதத்தாழ்வார்.


பாசுரம் (அர்த்தம்) - இசைந்த அரவமும், வெற்பும், கடலும் - பேயாழ்வார் சொன்ன வண்ணம் செய்த பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இசைந்த அரவமும், வெற்பும், கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப!
அசைந்து கடைந்த வருத்தமோ?
கச்சி வெஃ காவில் கிடந்திருந்து
நின்றதுவும் அங்கு?
--  மூன்றாம் திருவந்தாதி (பேயாழ்வார்) 
'தன் பர்த்தாவான "ப்ரம்ம தேவனின்" யாகத்தை அழிக்க, 
நதி ரூபமாக அதி வேகத்துடன் வந்த வேகவதியை (சரஸ்வதி தேவி) தடுப்பதற்காக, 
பெருமாளே ஒரு பெரிய அணை போல, காஞ்சியில் உள்ள திருவெஃ காவில், படுத்துக்கொண்டார்' 
என்பது புராண காலத்தில் நடந்த சரித்திரம்.







இந்த பெருமாளுக்கு தான் "யதோத்தகாரி" என்றும் "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" என்று பெயர்.
காஞ்சியில் உள்ள இந்த திவ்ய தேசத்துக்கு "திருவெஃ கா" என்று பெயர்.
'பெருமாள் இங்கு அணை போல படுத்துக்கொண்டது, வேகவதியை தடுப்பதற்காக தான்' என்ற போதிலும்,
'பெருமாள் படுத்துக்கொண்டதற்கான காரணம் வேறோ?'
என்று கேட்கிறார் பேயாழ்வார்.
பெருமாளை பார்த்து கேட்கிறார்,
"முன்பு ஒரு சமயம், 
பாற்கடலை கடைந்து தேவர்கள் அம்ருதம் எடுத்து கொள்ள, 
பாற்கடலை கடைவதற்கு, 
தகுதியான (இசைந்த) மந்திர மலையையே (வெற்பும்) மத்தாக ஆக்கி, 
தகுதியான (இசைந்த) வாசுகி என்ற பாம்பையே (அரவமும்) கயிறாக்கி, 
நீங்களே க்ஷீராப்தியில் கடைந்தீர்களே (பசைந்து)

தேவர்களுக்காக நீங்களே அம்ருதம் கடைந்தீர்களே ! 
விஷம் வந்ததும், தேவர்களும், அசுரர்களும் பாதியில் விட்டு விட்டு ஓடிய பிறகும், அந்த வாசுகியின்  தலையையும், வாலையும் பற்றி கொண்டு, நீரே கடைந்தீரே ! 

ஆயிரம் தலைகளுடன் நீரே அந்த மலையின் கொடு முடியை பிடித்துக்கொண்டு இருந்தீரே ! 

முதுகை கொடுத்து மலையை நீரே கிளப்பி கொண்டு, தாங்கி கொண்டு இருந்தீரே !
அவ்வளவும் நீரே செய்து விட்டு, 
கடைசியில் கிடைத்த அம்ருதத்தை ((அங்கு அமுது படுப்ப) அப்படியே அவர்களுக்கு கொடுத்து விட்டு, 
அங்கு க்ஷீராப்தியில் ஓய்வில்லாமல் நின்று வேலை செய்ததால் (நின்றதுவும் அங்கு) ஏற்பட்ட களைப்பினால், 
காஞ்சியில் உள்ள இந்த திரு வெஃகாவில் வந்து இளைப்பாறுகிறீரோ? (அசைந்து கடைந்த வருத்தமோ)"
என்று பேயாழ்வார், திருவெஃகாவில் உள்ள யதோத்தகாரி பெருமாளை பார்த்து கேட்பது போல, நமக்கு பாசுரத்தை தருகிறார்.
திருவெஃகாவில் உள்ள யதோத்தகாரி என்ற சொன்ன வண்ணம் செய்த பெருமாள், காஞ்சி வரதராஜனுக்கும் (அத்தி வரதர்) முன்பே தோன்றிய அர்ச்சா அவதாரம். 

அருமையான பாசுரம்.
திவ்ய தேசத்தில் நாம் பாடவேண்டிய பாசுரம்.






Wednesday 5 February 2020

பாசுரம் (அர்த்தம்) - தாயே தந்தை என்றும் - திருமங்கையாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருப்பதியில் ஸ்ரீனிவாசபெருமாள், 'நமக்காகவே எப்பொழுதும் நின்று கொண்டே காத்துக்கொண்டிருக்க',

நாமோ, "நேரம் கிடைக்கவில்லை, தலை போகிற காரியம் இருக்கிறது" என்று திருமலை போகாமல் இருப்பதற்கு, காரணங்கள் சொல்லி கொண்டு இருக்கிறோம்.




திருமலையப்பனிடம் கொஞ்சம் தலையை காண்பித்து விட்டு வந்தாலும், தலை போகும் காரியத்தையும் சாதிக்க வைத்துவிடுவாரே!!
தலையும் போகாமலும் காப்பாற்றி விடுவாரே பெருமாள் !!

அல்ப பலன் முதல் மோக்ஷம் வரை தர, சங்கல்பம் செய்து, அர்ச்ச அவதாரம் எடுத்த திருமலையப்பனை காண்பதை விட, வேறு என்ன சாதனை நாம் செய்ய வேண்டும்?

"வாழ்நாள் முழுவதும், ஏதேதோ காரணத்தை சொல்லிக்கொண்டே, கோவிலுக்கு போகாமல், பெருமாளை சரணம் அடையாமல் இருக்கும் நம்மை போன்றவர்கள்,
எதிர்பாராவிதமாக ஒரு நாள் திருமலையப்பனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டால், பெருமாளிடம் என்ன சொல்லி சரணாகதி செய்ய வேண்டும்?"
என்று திருமங்கையாழ்வாரே, பாசுரம் மூலமாக, நமக்கு சொல்லி தருகிறார்.

தாயே தந்தை என்றும்,
தாரமே, கிளை மக்கள் என்றும்,
நோயே பட்டு ஒழிந்தேன் !!
நுன்னை காண்பது ஓர் ஆசையினால்,
வேயேய் பூம்பொழில் சூழ்,
விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்து அடைந்தேன்,
நல்கி ஆள் என்னை கொண்டருளே !!
-- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)

நாம் பிறந்தநாளாக, நம்மை காண்பதற்கு, திருமலையில் அரச்சா திருமேனியுடன் ஸ்ரீனிவாச பெருமாள் காத்து கொண்டு இருக்கிறார்.

பல காரணங்கள் சொல்லி, வராமல் இருக்கும் நாம், ஒருநாள் திடீரென்று திருமலைக்கு வருமாறு நேர்ந்து விட,
பக்தன், 'ஏன் இத்தனை தாமதமாக வந்தேன் என்று பெருமாளிடம் பேசுவது போல' இந்த பாசுரத்தை திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

பெருமாள், பக்தனிடம்,
"நல்ல இளமையான பால்ய வயதிலேயே, உடம்பில் தெம்பு இருக்கும் போதே, திருமலை ஏறி வந்து இருக்கலாமே?"
என்று கேட்க,
பக்தன் உண்மையை சொன்னான்..
'பாசம் என்ற நோய் (மாயை) தன்னை தொற்றியதால், பெருமாளை பார்க்க இத்தனை வருடங்கள் ஆகி விட்டது' என்று சொல்லும்படியாக பாசுரம் அமைந்துள்ளது.

பெருமாளை பார்த்து,
"வாஸ்தவம் தான். இளமையான வயதிலேயே வந்திருக்கலாம்!!.
ஆனால்,
 எனக்கு வயதான அப்பா அம்மா.
நான் தான் அவர்களை பார்த்து கொள்ள வேண்டும்.
என் மனைவி ஒழுங்காக பார்த்து கொள்ள மாட்டாள்.




ஒரு சமயம், என் அப்பாவுக்கு உடம்பு முடியாமல் போய் விடும்.
ஒரு சமயம், என் அம்மாவுக்கு உடம்பு முடியாமல் போய் விடும்.
இப்படியே அந்த சமயங்களில், 
நான் திருப்பதி வர முடியாமல் போய் விட்டது.
பிறகு, 
பெற்றோர்கள் பரமபதம் அடைந்த பின், திருப்பதி கிளம்பலாம் என்றால், 'குடும்ப பொறுப்பு' வந்துவிட்டது.
குழந்தைகள், அம்மாவிடம் கூட போகாமல், "அப்பா.. அப்பா..." என்று எப்பொழுதும் என்னையே சுற்றி சுற்றி வருகின்றனர்.




நான் குழந்தைகளை பார்த்து கொள்ளவில்லையென்றால், என் மனைவி 'உங்களை கட்டிக்கொண்டு இப்படி மாரடிக்கிறேனே' என்று என்னை திட்டுகிறாள்.
இப்படிப்பட்ட நிலையில் நான் எப்படி திருப்பதி வருவது?

உங்களுக்கு நேரம் ஒதுக்கி உங்களை தரிசிக்க முடியாமல், எனக்கு ஏதாவது வியாதி வந்துகொண்டே இருக்கிறது.

அப்படி என்ன வியாதி உனக்கு என்று கேட்கிறீர்களா?? 
பிறந்தது முதல், 
அப்பா என்ற ஒரு வியாதி, 
அம்மா என்ற ஒரு வியாதி, 
மனைவி என்ற ஒரு வியாதி, 
பிள்ளைகள் என்று ஒரு வியாதி.
இப்படி பலவிதமான 'பாசம் என்ற வியாதிகளை' காரணம் சொல்லி சொல்லி, இப்பொழுது எனக்கு வயதும் ஆகிவிட்டது.
'திருமலை போகவேண்டும்' என்ற நினைவு மட்டும் எப்பொழுதும் இருக்கிறது.

'கடமையை செய்து முடிக்க வேண்டும்.
கடமையை செய்து முடிக்க வேண்டும்'
என்று சொல்லிக்கொண்டே இவ்வளவு நாள் காரணங்கள் சொல்லி உங்களிடமிருந்து தப்பித்தேன்.

உண்மையில் கடமை காரணமா?
என் பக்தி குறைவு காரணமா?
ஸ்ரீனிவாசா, உங்களுக்கு உண்மை தெரியுமே!!

'கடமை கடமை' என்ற போர்வை போர்த்திக்கொண்டு நான் உங்களை இது நாள் வரை ஏமாற்றினேன்.

இன்று, 
எல்லாவற்றையும் எப்படியோ விட்டு விட்டு, உங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையால், ஒரு வழியாக ஓடி வந்து விட்டேன்.
இங்கு வந்து, இந்த திருமலையை பார்த்தால், 
எத்தனை குளிர்ச்சியாக இருக்கிறது?
ஏழு மலைகளும் எத்தனை அழகாக இருக்கிறது?
இத்தனை ஆச்சர்யமான திருமலையில், ஒரு நாய் புகுந்து விட்டதே?

'நாய் புகுந்து விட்டதே!! சீ சீ.. ஓடு' 
என்று சொல்லி துரத்தி விடாமல், அந்த நாய்க்கும் கொஞ்சம் எச்சில் இலையை போடுவது போல, எப்படியோ திருமலைக்குள் புகுந்து விட்ட என்னையும், ஸ்ரீனிவாச பெருமாளே!! நீங்கள் அழைத்து அருள் செய்ய வேண்டும்."
என்கிறார் திருமங்கையாழ்வார்.

இதையே
திருவேங்கடவா
நாயேன் வந்து அடைந்தேன்,
நல்கி ஆள் என்னை கொண்டருளே !!
என்கிறார்.

பிறந்தது முதல் பெருமாள் பக்கமே போகாமல்,
தாய், தந்தை, மனைவி, மக்கள் என்று பலரிடம் பாசம் வைத்து,
ஒரு நாள் கூட,
நாராயணன் மீது பாசம் வைக்காமல்,
பெருமாள் கோவிலில் கூட கால் வைக்காமல் இருந்து விட்டு,
திடீரென்று ஒரு நாள்,
திருமலைக்கு வந்து 
"நாராயணா அருள் செய்ய வேண்டும் (நல்கி ஆள் என்னை கொண்டருளே)" என்று கேட்டால்,
"இது என்ன நியாயம்?!!
கொஞ்சம் கூட மதிக்காத இவனுக்கு ஏன் பெருமாள் அருள் செய்ய வேண்டும்?"




பெரியவாச்சான் பிள்ளை போன்ற ஆச்சாரியர்கள் இதற்கு விளக்கம் கொடுக்கும் போது,
"நமக்கு தாய் தந்தை மனைவி மக்கள் மேல் பாசம் என்ற நோய் உள்ளது போல,
பெருமாளுக்கு தன் அம்சமான 'ஜீவனிடம் அளவுகடந்த பாசம்' என்ற நோய் எப்பொழுதும் உண்டு.
பரமபதத்தை விட்டு, நாராயணன் திருமலைக்கு வந்து நிற்பதே, நம்மை எல்லாம் எப்படியாவது திருமலைக்கு வரச்செய்து, தன் தரிசனத்தை கொடுத்து, மோக்ஷம்  கொடுத்து அருள வேண்டும் என்பதற்காக தான்.

ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தை காட்டி, பல காரணங்கள் சொல்லி பெருமாளிடம் வராத ஜீவனையும், பெருமாள் உகப்புடன் ஏற்று அருள் செய்வார் என்று காட்டுகிறார்.

திருமலைக்கு சென்று பெருமாளை தரிசிப்போம்.


Tuesday 4 February 2020

பாசுரம் (அர்த்தம்) - சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் - பெரியாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். வைஷ்ணவன் ஏன் சிவன் கோவிலுக்கு வருவதில்லை? தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பாசுரம்

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய்
உலகு தன்னை வாழநின்ற நம்பீ! 
தாமோதரா! சதிரா!
என்னையும், என் உடைமையையும்
உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் 
இனி என்திருக்குறிப்பே
-- திருமொழி (பெரியாழ்வார்)

பெரியாழ்வார், திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளை பார்த்து பேசுகிறார்.




"உலகமெல்லாம் வாழும்படியாக, திருமலையில் வீற்று இருக்கும் திருவேங்கடமுடையானே !!
கற்புள்ள (பதிவ்ரதை) ஒரு பெண், 'தன் கணவனே கண் கண்ட தெய்வம்' என்று இருப்பாள், 'மனதாலும் வேறு ஒரு ஆணை ஏறெடுத்தும் பார்க்காமல்' இருப்பாள்.
அது மட்டுமில்லாது,
பிற ஆண்கள் தன்னை பார்க்க நேர்ந்தாலும், 'இவள் வேறொருவனுக்கு சொந்தமானவள்' என்று உணர, கழுத்தில் தாலியும், காலில் மெட்டியும், நெற்றி உச்சியில் குங்குமமும் அணிந்து கொள்கிறாள்.
ஒரு பதிவிரதையான பெண், எப்படி தன்னையும் (மனது), தன் உடைமையையும் (உடல்), தன் கணவனுக்கே!! என்று ஒழுக்கத்துடன் இருக்கிறாளோ,
அது போல,
பெருமாளே!! ப்ரம்ம தேவன் முதல் என் வரை அனைவரையும் படைத்தவர் தாங்கள்.
நான் உங்களுடைய சம்பந்தம் உடையவன். உங்களை சேர்ந்தவன். 
எப்படி ஒரு பதிவ்ரதை, 
மனதாலும் கணவனையே நினைத்து கொண்டிருப்பாளோ, 
மற்றவர்கள் பார்த்தாலும் இவள் மணமானவள் என்று அறிந்து கொள்ள தன் கணவன் கட்டிய தாலியை அணிந்து கொண்டே இருப்பாளோ,
அது போல,
நானும் என் மனதில் உங்களுக்கு மட்டுமே இடம் கொடுத்து,
உங்கள் சக்கரத்தையும், சங்கையும் என் உடைமையான இந்த உடலில் முத்திரை இட்டு கொண்டு, 
உங்கள் பாதுகையையே என் நெற்றி திலகமாக இட்டு கொண்டு, 
துளசி மாலை அணிந்து கொண்டு,
'ஒரு ஸதி (மனைவி), தன் பதி தன்னை காப்பார்' என்ற இருப்பது போல, 'ஸதியான நான், நாயகனான உங்கள் அருளையே நோக்கி, உங்களுக்கே ஆட்பட்டு இருப்பேன்... இது என் முடிவே" என்கிறார்.

இதையே,
என்னையும் என் உடைமையையும்
உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனி என்திருக்குறிப்பே
என்கிறார் பெரியாழ்வார்.

இங்கு,
'என்னை' என்று தன் ஆத்மாவை குறிப்பிடுகிறார்.
'உடைமை' என்று தன் உடலை குறிப்பிடுகிறார்.

'ஒரு பதிவ்ரதையின் (கற்புக்கரசி) நிலையே வைஷ்ணவனின் நிலையும்' என்று காட்டுகிறார் பெரியாழ்வார்.

மனதால் கூட அந்நிய புருஷனை நினைக்க மாட்டாள் - ஒரு பதிவிரதை.

பாரத மண்ணில் மட்டுமே அத்தகைய பதிவ்ரதைகள் இன்றும் உள்ளனர்.







ஒரு பதிவ்ரதையை பார்த்து,
"இது என்ன அநியாயம்... உன் புருஷனை மட்டுமே நினைக்கிறாய்!!
உன் புருஷனை போலவே பக்கத்து வீட்டு புருஷனும் நல்லவன் தான்.. 
ஏன் நீ அந்த புருஷனை பார்க்காமல் இருக்கிறாய்?"
என்று ஒழுக்கமுள்ள ஒருவன் கேட்பானா??...
'ஒழுக்ககேட்டின்' மொத்த உருவமான ராவணன்,
பிராம்மண ரிஷி குலத்தில் பிறந்தவனாக இருந்தும்,
ஒழுக்கமே உருவான தன் தம்பி விபீஷணன் இருந்தும்,
பேடித்தனமாக ராமபிரானை அப்புறப்படுத்தி விட்டு,
சீதையை தூக்கி வந்து விட்டு,
"ராமனை நினைத்து கொண்டு இருக்கிறாயே!! 
அவனை விட பராக்ரமும், குபேர செல்வமும், அழகும் கொண்ட என்னை ஏற்றுக்கொள்" என்று வெட்கமில்லாமல் கேட்டான்.
மஹா மட்டமான ராவணனை, ஏறெடுத்தும் பார்க்க விரும்பாத சீதை, "விலங்குக்கு சமமானமான இவன் புல் திங்கட்டும்" என்று அவன் எதிரில் ஒரு புல்லை பிடுங்கி போட்டாள் என்று பார்க்கிறோம்.

பக்தியில் பதிவ்ரதைகளின் தர்மமே தலை சிறந்தது.
அதுவே வைஷ்ணவ சித்தாந்தம் கூட.

ஏன் ஒரு தீவிர வைஷ்ணவன் சிவன் கோவிலுக்கு வருவதில்லை? 
சிவன் மட்டும் தெய்வமில்லையா? சிவ த்வேஷமா?
என்று சில அறிவு குறைந்தவர்கள் கேட்பார்கள்.

'வீண் பிடிவாதத்தால் சிவன் கோவிலுக்கு வர மாட்டேன்' என்று வைஷ்ணவன் சொல்வதில்லை.
ஒரு வைஷ்ணவன் 'வேறு கோவிக்குக்கு போகாமல் இருப்பதற்கு த்வேஷம் காரணமில்லை'.
ஒரு வைஷ்ணவன் 'வேறு கோவிக்குக்கு போகாமல் இருப்பதற்கு பதிவ்ரதா தர்மமே காரணம்'.

ஒரு பதிவிரதை வேறு ஒரு புருஷனை பார்க்க கூசுவது போல,
வைஷ்ணவன் இன்னொரு தெய்வத்தை பற்றி பேச்சு காதில் விழும்போது கூசி நிற்கிறான்.
இதற்கு, த்வேஷம் காரணமில்லை. பதிவ்ரதா தர்மமே காரணம்

ஒரு பதிவிரதையை பார்த்து, இன்னொரு புருஷனை பற்றி என்ன புகழ்ந்து சொன்னாலும் எடுபடாதது போல, 
உண்மையான வைஷ்ணவன் வேறு தெய்வங்களை மனதாலும் நினைப்பதில்லை. 

ஒரு பதிவ்ரதைக்கு எப்படி கணவன் மட்டுமே உலகமோ,
அது போல,
வைஷ்ணவனுக்கு பெருமாள் மட்டுமே உலகம். 

ஒரு பதிவ்ரதை, எப்படி மற்ற புருஷர்களை தன் கணவன் இடத்தில் வைத்து பார்க்க ஆசைப்படமாட்டாளோ, அது போல, 
வைஷ்ணவன், பெருமாளை தன் மனதில் இருந்து இறக்கி விட்டு, வேறு ஒரு தெய்வத்தை ஏற்று கொள்ள மாட்டான்.

பதிவிரதைகள், 'மற்ற புருஷர்களை பற்றி தவறாகவோ, நல்லதாகவோ கூட பேச தயங்குவார்கள். தனக்கு சம்பந்தமில்லாத விஷயம்' 
என்று தன் கணவனை பற்றியே நினைத்து கொண்டிருப்பார்கள்.
அது போல,
வைஷ்ணவனும், மற்ற தெய்வங்களை பற்றி உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசுவது கிடையாது.

ராவணனை போன்ற ஒழுக்ககேடானவன், ராமபிரான் இடத்தில் தன்னை ஸ்தாபிக்க நினைத்தால், ஒப்பீடு செய்ய துணிந்தால்,
இதை கேட்க முடியாத ஆத்திரத்தில், சில சமயங்களில் பதிவிரதைகளும் பிற புருஷனை தாழ்த்தி பேசும்படியாக நேருகிறது.
அது போல,
வைஷ்ணவனிடம் சென்று பிற தெய்வத்தை பற்றி ஒப்பீடு செய்யும் போது, கூசி நிற்கும் வைஷ்ணவன், 'தன் பெருமாளோடு வேறு ஒரு தெய்வத்தை பேசுகிறானே!' என்று ஆத்திரப்பட்டு, தான் பெருமாளை சேர்ந்தவன் என்று பாடம் புகட்ட, அந்நிய தெய்வத்தை குறை சொல்லும்படியாக நேர்ந்து விடுகிறது.

அவரவர் இஷ்ட தெய்வங்களே, அவரவர்களுக்கு நாயகன்.
அதுவே உண்மையான பக்தி.
அதுவே உண்மையான திட பக்தி.




பத்வரதா தர்மமான வைஷ்ணவ தர்மத்தில், 'ஹனுமானுக்கு' உயர்ந்த ஸ்தானம் கொடுக்கப்பட்டு உள்ளது..

வைஷ்ணவர்கள், பெருமாளை வணங்குகிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.
சைவர்கள், சிவபெருமானை வணங்குகிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.
ஹனுமானுடைய பக்தி பதிவிரதை தர்மத்தில் மிக சிறந்தது.
பரமபதத்தை விட்டு, நாராயணன் ராமபிரானாக பூலோகத்தில் அவதரித்தார்.
அதே நாராயணன், ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்த போதும், 
ஹனுமான் 'ஸ்ரீ கிருஷ்ணரை ராமபிரான் இடத்தில்  ஏற்றுக்கொள்ளவில்லை'.
அது மட்டுமா!!

ராமபிரானே "நான் சாக்ஷாத் நாராயணன். வைகுண்டம் புறப்பட போகிறேன்.. வருகிறாயா?" என்று கேட்டதற்கு,
"நாராயணனே இவருக்கு அந்நிய புருஷனாக தோன்ற, நான் ராமபிரானின் தியானத்திலேயே பூலோகத்தில் இருக்கிறேன். வைகுண்டம் கூட வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்.

கணவன்,
வீட்டில் ஒரு விதமான ஆடை அணிந்து கொண்டும்,
வேலைக்கு செல்லும் போது அதற்கான ஆடைகள் அணிந்து கொண்டும் இருப்பான்.
எந்த ரூபத்தில் இருந்தாலும், மனைவிக்கு அவன் கணவன் தானே!!..
ஒரு வைஷ்ணவன் இப்படி தான் பெருமாளை பார்க்கிறான்..

தன் பெருமாள் தான் , ஸ்ரீரங்கத்தில் ஒரு ரூபத்தில், திருப்பதியில் ஒரு ரூபத்தில், தன் வீட்டில் சின்ன விக்கிரக ரூபத்தில், நாராயணனே ராமராக, கிருஷ்ணராக, நரசிம்மமாக, பரசுராமராக இருக்கிறார்
என்று அனைத்து ரூபத்தையும் சேவிக்கிறான் வைஷ்ணவன்.

ஆஞ்சநேயர் 'வைஷ்ணவர்களில் உத்தம வைஷ்ணவர்'.

சில மனைவிகள், ஆபிஸ்க்கு ஏற்ற அலங்காரத்தில் கணவன் இருந்தால், அவன் பக்கமே திரும்ப மாட்டாள். அவர் ஏதோ வேலையாக இருக்கிறார் என்று இருந்து விடுவாள்.
வீட்டில் சாதாரண உடையுடன் இருக்கும் போது மட்டுமே உரிமையுடன் பேசுவாள்.
அது போல,
'ராமபிரான் தான் கண்ணன், அவரே தான் நாராயணன்' என்று தெரிந்தாலும், ஹனுமான், பெருமாள்  ராமபிரானாக வந்தால் தான் ஏற்று கொள்வார்.

இந்த 'திட பக்தியின் காரணமாகவே, வானர ஜாதியில் பிறந்தாலும், வைஷ்ணவர்கள் இவரை ஜாதி பார்க்காமல் வைஷ்ணவர்களில் உத்தமர்' என்று கொண்டாடுகின்றனர்.

ஒரு வைஷ்ணவன்,
உடைமையான தன் உடலில் கோபியும், தோள்களில் சங்கு சக்கர முத்திரை இட்டு கொள்வதற்கு காரணம், இந்த பதிவ்ரதா தர்மமே!!

உடலில் வைஷ்ணவன் போல திருமண் காப்பு இட்டு கொண்டு, 
மனதில் வேறு தெய்வ சிந்தனை இருப்பது என்பது,
தாலி கட்டி கொண்டு, மனதில் வேறு ஒரு புருஷனை நினைப்பது எப்படியோ அது போன்றாகும்..

ஆதலால் தான், பெரியாழ்வார்
"எனக்கும்" "என் உடைமைக்கும்" என்று மனதையும், உடலையும் சொல்லி, 'இந்த இரண்டிலுமே பெருமாளின் சக்கரத்தை ஒற்றிக்கொண்டு இருக்கிறேன்' என்று திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளிடம் ஆத்ம சமர்ப்பணம் பூரணமாக செய்கிறார்.

பெருமாளின் சொத்தான நாம்,
ஜென்ம ஜென்மங்களாக பிறந்து இறந்து கொண்டு இருந்தாலும்,
இன்றுவரை மோக்ஷம் அடைய வேண்டும் என்ற நினைவே இல்லாமல்,
பெருமாளிடம் பக்தியே செய்யாமல்,
அவர் பக்கமே திரும்பி பார்க்காமல்,
எங்கோ பரதேசி போல அலைந்து கொண்டிருந்த போது,
ஒரு நாள், நம்மை எதிர்பாராவிதமாக திருமலைக்கு வர செய்து, தடுத்து நிறுத்தி, தன் திருவடியை காட்டி,
"நீ என்னை சேர்ந்தவன். எனக்கு ஆட்பட்டவன் நீ"
என்று "தான் இருப்பதை" புரிய வைத்து, தன்  சாமர்த்தியத்தால் எம்பெருமான் நம்மை பிடித்து விடுகிறார்.
பெருமாளின் இந்த சாமர்த்தியத்தை எண்ணி "சதிரா" என்று அழைக்கிறார், பெரியாழ்வார்.

"சதிரா" என்றால் சாமர்த்தியசாலி என்று பொருள்.

"தாமோதரா! சதிரா!"
என்று பெருமாளை அழைக்கிறார்.

நலகூபுர, மணிக்ரீவ என்ற தேவர்கள் சாபத்தால் மரமாக போய் விட்டார்கள்.
தான் தேவன் என்பதை மறந்து, மரமாகவே இருந்து கொண்டிருந்தார்கள்.
'தான் யார்?' என்று தெரியாமலேயே, இவர்கள் இருந்து கொண்டு இருக்க,

இவர்களை, உரலை இழுப்பது போல,
தாமோதர கண்ணன், தன் சாமர்த்தியத்தால் மரத்தை சாய்க்க,
"தேவர்கள் வெளிப்பட்டு, தான் யார் என்ற உண்மையை உணர்ந்து", தேவலோகம் சென்றனர்.

இப்படி 'தான் யார்?' என்று தெரியாமலேயே,
யார் யாரையோ எஜமானன் என்றும்,
யார் யாரையோ தெய்வம் என்றும்,
நம்பி அலைந்து கொண்டிருக்கும் நம்மையும்,
அந்த தாமோதரன் தன் சாமர்த்தியத்தால் வளைத்து பிடித்து, தன் அருகில் வைத்து கொண்டு, மோக்ஷ வரை தந்து விடுவார் என்பதால்,
"தாமோதரா சதிரா" என்று திருமலையப்பனை அழைக்கிறார்.


Monday 3 February 2020

பாசுரம் (அர்த்தம்) - எம்மனா! என் குல தெய்வமே! என்னுடைய நாயகனே! - பெரியாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பாசுரம் (அர்த்தம்) : திருப்பதி பெருமாள்

எம்மனா!!
என் குல தெய்வமே!!
என்னுடைய நாயகனே!!
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை
இவ்வுலகினில் யார் பெறுவார்?
-- திருமொழி (பெரியாழ்வார்)




பெரியாழ்வார், திருமலையில் உள்ள ஸ்ரீனிவாசபெருமாளை 3 அழகான பெயர்கள் சொல்லி கூப்பிடுகிறார்...
முதலில்,
  • "எம்மனா!!" என்று கூப்பிடுகிறார்.
பிறகு,
  • "என் குலதெய்வமே!!" என்று கூப்பிடுகிறார்.
பிறகு
  • "என்னுடைய நாயகனே!!" என்று உரிமையுடன் கூப்பிடுகிறார்.

இந்த 3 நாமங்களின் உள் அர்த்தம் தெரியாமல் போனாலும், இந்த சொற்களே இனிக்கிறது...

அர்த்தம் தெரிந்து கொண்டால், தினமும் இந்த 3 நாமத்தை திரும்ப திரும்ப சொல்ல ஆசை வந்து விடும் நமக்கு.
'பெரியவாச்சான் பிள்ளை (உபேயம், உபாயம், பர தெய்வமாக),
ஆளவந்தார் (ஞான விரோதி, ஆஸ்ரய விரோதி, மோக்ஷ விரோதி), 
உடையவர் ஸ்ரீராமானுஜர் (தேக அபிமானம் கழிந்து, அன்ய ஷேசத்துவம் கழிந்து, ஸ்வஸ் ஸ்தாதந்திரியமும் கழிந்து)
போன்ற ஆச்சார்யர்கள் 'இந்த மூன்று சொற்களின் (எம்மனா, என் குலதெய்வமே, என்னுடைய நாயகனே) அர்த்தத்தை பலவாறு ரசிக்கிறார்கள்' என்றும் பார்க்கிறோம்.

மரணத்தை ஒருவன் பார்த்தாலேயே "உடல் வேறு ஆத்மா வேறு" என்ற ஞானம் (அறிவு) கொஞ்சம் பகுத்தறிவு உள்ளவனுக்கும் வந்து விடும்.
ஆதலால்,
"உடல் வேறு ஆத்மா வேறு" என்று நினைப்பது மட்டுமே உண்மையான ஞானம் என்று நினைக்கக்கூடாது.. அது மட்டுமே ஞானம் இல்லை.

"நான் ஜீவன் (ஆத்மா)! நான் பகவானுடைய தாஸன்!"
என்று நினைப்பதே 'உண்மையான ஞானம்' என்கிறார்கள் நம் ஆச்சார்யர்கள்.

"உடல் நானில்லை, ஜீவனே நான். ஜீவனாகிய நான் ஒரு தனித்த பொருள்" என்று பகவானை விலக்கி விட்டு,
"தான் ஆத்மா, தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து கொள்வதே உண்மையான ஞானத்துக்கு விரோதம் தான்.
இப்படி நினைப்பதே "ஞான விரோதம்" என்கிறார்கள் நம் ஆச்சாரியர்கள். (அத்வைதம்)

(அத்வைதம் என்ன சொல்கிறது? விஷிஸ்டாத்வைதம் என்ன சொல்கிறது?) மேலும் அறிய இங்கே படிக்கவும்.

"எம்மனா" (எம்பெருமான்) என்ற சொல்லுக்கு
"உடல் நானில்லை, ஜீவனே (ஆத்மா) நான். ஜீவனாகிய நான் ஒரு தனித்த பொருள் இல்லை. நான் சுதந்திரமானவன் இல்லை. நான் பகவானின் தாஸன்"
என்று அர்த்தம் காட்டுகிறார்கள், நம் ஆச்சாரியர்கள். (விசேஷ அத்வைதம்)

ஆதலால்,
"எம்மனா" (எம்பெருமான்) என்று சொல்லும் போதே,
நமக்கு "ஞான விரோதமான அத்வைத புத்தி ஒழிந்து விடும்" என்கிறார்.




அது போல,
"என் குலதெய்வமே" என்று சொல்லும்போதே,
நமக்கு "ஆஸ்ரய விரோதமான புத்தி ஒழிந்து விடும். பெருமாளை ஆஸ்ரயிக்க வேண்டும் என்ற புத்தி ஏற்படும்" என்கிறார்.
அது போல,
"என்னுடைய நாயகனே" என்று சொல்லும்போதே,
நமக்கு "மோக்ஷ விரோதமான புத்தி ஒழிந்து விடும். வெறும் சுதந்திரம் (விடுதலை) மட்டும் பெறாமல், வைகுண்டம் (வீடு) என்ற நம் சொந்த வீட்டுக்கு (மோக்ஷம்) போக வேண்டும் என்ற புத்தி ஏற்படும்" என்கிறார்.




மேலும்
நாம் இந்த பிறவியில் அடைய வேண்டியது (உபேயம்) எது?
(What should we achieve?)
என்ற கேள்விக்கு,

"எம்மனா" (எம்பெருமான்) என்று சொல் மூலம்,
"நாம் அடைய வேண்டியவர் (உபேயம்), நம்முடைய பகவான் நாராயணனே"
என்ற தெளிவு ஏற்படுத்துகிறார், பெரியாழ்வார்.
"எம்மனா" என்ற சொல்லுக்கு "நான் அவருடையவன். அவருடைய சொத்து" என்று பொருள்.

நாம் அடைய வேண்டியது ("உபேயம்") யார் என்று தெரிந்து விட்டது.சரி...
ஆனால்,
பெருமாளை அடைய வேண்டிய வழி (உபாயம்) என்ன?
என்ற அடுத்த கேள்விக்கு,

"என் குலதெய்வமே" என்ற சொல் மூலம்,
"நாம் பெருமாளை அடைய வேண்டிய வழி (உபாயம்), அவரையே நம் குல தெய்வமாக கொள்வது தான்"
என்ற தெளிவை நமக்கு ஏற்படுத்துகிறார் பெரியாழ்வார்.

"பெருமாளை குலதெய்வமாக நீ ஆக்கிக்கொண்டால், 
நீ மட்டுமல்ல, உன் பரம்பரையில் பிறந்த அனைவருமே, 
அவர்கள் பிறவியில் அடைய வேண்டியதான (உபேயம்) பெருமாளை அடைந்து விடுவார்கள்"
என்கிறார் பெரியாழ்வார்.
"குலதெய்வமாக வெங்கடேசபெருமாளே அமைந்தவர்களுக்கு, வைகுண்டம் போகும் வழியையும் காட்டி, அடையும் லட்சியமாகவும் பெருமாளே இருந்து, மோக்ஷம் வரை துணையாகவே இருக்கிறார்" என்கிறார் பெரியாழ்வார்.

"யாருக்கு குலதெய்வமாக வெங்கடேசபெருமாள் அமைந்தாரோ!, அவர்களே பாக்கியவான்" என்கிறார் பெரியாழ்வார்.
மஹாபாரதத்தில் திரௌபதி "கோவிந்தா..." என்று தன் குலதெய்வமாக பெருமாளை வரித்து கொண்டதற்காக, அவளுடைய பேரன் பரிக்ஷித் கர்ப்பத்திலேயே அழிய வேண்டும் என்று அஸ்வத்தாமன் நினைத்தும், திரௌபதி என்ற பக்தைக்காக அவள் குலத்தை அழிய விடாமல் ரக்ஷித்தார் பெருமாள்.

குலதெய்வமாக இருந்து, நாமும் நம் பரம்பரையும், மோக்ஷம் போகும் வரை, நம் கூட இருந்தே ரக்ஷிக்கிறார்.

"என்னுடைய நாயகனே" என்ற சொல் மூலம், "பரதெய்வம் நாராயணனே"
என்ற தெளிவு ஏற்படுத்துகிறார் பெரியாழ்வார்.

உலகத்தில்,
சிலருக்கு இஷ்ட தெய்வமாக (உபேயமாக) "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார்.
அவர்கள் பெருமாளை "எம்மனா" (எம்பெருமான்) என்கிறார்கள்.

இன்னும் சிலருக்கு குல தெய்வமாக (உபாயமாக) "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார். 
அவர்கள் பெருமாளை "என் குல தெய்வமே" என்கிறார்கள்.

சிலருக்கு பர தெய்வமாக "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார். அவர்கள் பெருமாளை  "என்னுடைய நாயகனே" என்கிறார்கள்.

"தனக்கோ உபேயமாகவும் (இஷ்டதெய்வம்), உபாயமாகவும் (குலதெய்வம்), பரதெய்வமாகவும், 
மூன்று சம்பந்தத்துடன் பெருமாள் இருக்கிறாரே!"
என்ற பெருமிதமடைந்து பாடுகிறார் பெரியாழ்வார்,




பரதெய்வமாக இருக்கும் நாராயணனே, தனக்கு குலதெய்வமாகவும் இருக்கிறார். தனக்கு இஷ்டதெய்வமாகவும் இருக்கிறார்.
பெருமாள், 
என்னையும், என் பரம்பரையையும் ரக்ஷிக்கிறார் என்கிற போது,
என்னை பற்றியும் எனக்கு கவலையில்லாமல்
என் குடும்பத்தை பற்றியும் கவலையில்லாமல்
என்னை உங்கள் திருவடியை ஆச்ரயித்து கொண்டு இருக்குமாறு செய்து கொண்டு, நீங்கள் என்னை சுகமாக வைத்துக்கொண்டு, ரக்ஷிக்கிறீர்களே !!
உம்மிடத்தில் எனக்கு பரிபூரணமான ப்ரேமை உண்டாகும் படி செய்து, எப்பொழுதும் உங்கள் தொண்டுக்காகவே என்னை ஆக்கி,
என்னை வெளி உலக காரியங்களில் இங்கும் அங்கும் போக விடாமல் தடுத்து,
நீங்கள் என்னை பரிபாலிக்கும் அழகும்,
உங்கள் கருணைக்கு பாத்திரமாக இருக்கும் என் நிலையும்,
எனக்கு கிடைத்த நன்மையை (பாக்கியத்தை) போல, இவ்வுலகினில் யார் பெறுவார்? 
என்று என்கிறார் பெரியாழ்வார்.
அதையே,
நின்னுள் உள்ளேனாய்ப் பெற்ற நன்மை
இவ்வுலகினில் யார் பெறுவார்?
என்று பெருமிதம் அடைகிறார்.

நாமும் வெங்கடேச பெருமாளை, பரதெய்வமாகவும், குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் கொள்வோம்.
சர்வ மங்களத்தையும் திருப்பதி பெருமாளே, நமக்கும் நம் பரம்பரைக்கும் அருள்வார். 


குருவே துணை !