Followers

Search Here...

Tuesday 27 March 2018

அக்னி பிரவேசம் செய்த போது, தேவி சீதை என்ன நினைத்தாள்? ராமபிரான் என்ன நினைத்தார்? லக்ஷ்மணன், ஹனுமான் என்ன நினைத்தார்கள்?. சீதையின் உண்மை நிலை என்ன? யாரிடமும் கடிந்து பேசாத ஸ்ரீ ராமர், சீதையை பார்த்து ஏன் கடிந்து பேசினார்?

ராவணன், சீதையை அபகரித்து இலங்கைக்கு கொண்டு சென்று விட்டான்.
அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை, "ஸ்ரீராமர் வந்து காப்பாற்றுவார்" என்று பத்து மாதங்கள் காத்திருந்தாள்.
சீதையை மீட்க,
பெரும் வானர படை திரட்டி, கடலில் சேது அமைத்து,
பெரும் போர் செய்து,  ராவணன் 10 தலையையும் கீழே சாய்த்து,
விபீஷணனை இலங்கை அரசனாக்கி,
மகிழ்ச்சியுடன் விபீஷணனை பார்த்து,
சீதையை தன்னிடம், அழைத்து வர சொன்னார் ஸ்ரீ ராமர்.




சீதையை சகல மரியாதையுடன், மூடு பல்லக்கில் அழைத்து வந்தார் விபீஷணன்.

"எந்த சீதைக்காக, தங்கள் உயிரை கூட தியாகம் செய்ய தயாராக இருந்தார்களோ! அந்த சீதையை, வானரர்கள் தரிசனம் செய்ய வேண்டும்"
என்று ஆசைப்பட்ட ஸ்ரீ ராமர், சீதையை பல்லக்கை விட்டு இறங்கி, வானரர்கள் பார்க்க நடந்து வர சொன்னார்.

க்ஷத்ரிய பெண்ணான சீதை, ராவணனை கூட கண்டு அஞ்சாத வீரமிக்கவள், என்ன காரணத்தாலோ, 'திடீரென்று, தன் முகத்தை தன் புடவையால் மூடி கொண்டு, முகத்தை காட்டிக்கொள்ள பிரியப்படாமல், தலை குனிந்து கொண்டே', வானரர்களுக்கு இடையே நடந்து, ராமபிரான் அருகில் வந்து நின்றாள்.

தன் உயிருக்கு உயிரான சீதையை மீட்க, இலங்கை வரை படையை திரட்டிக்கொண்டு சென்று, ராவணனை கொன்று, 'தன் பத்னியான சீதையை ஆசையுடன் அழைத்து வர சொன்ன ஸ்ரீ ராமர்'தலை குனிந்து கொண்டே தன் அருகில் வந்து நிற்கும் சீதையை கவனித்ததும்,
அவளை பார்க்க கூட செய்யாமல், எங்கோ பார்த்து கொண்டு, யாருமே எதிர்பார்க்காத கடும் சொற்களை பேசினார்.

இந்த கடும் சொற்களை கேட்ட சீதை, துளியும் பயம் இல்லாமல், லக்ஷ்மணரை பார்த்து,
"லக்ஷ்மணா! எனக்கு இங்கேயே அக்னியை மூட்டு, நான் அக்னி பிரவேஷம் செய்கிறேன்." என்றாள்.

"அக்னியை மூட்டுவதா? வேண்டாமா?" என்ற நிலையில், லக்ஷ்மணன் ராமபிரானை பார்க்க, ஸ்ரீ ராமர் முகத்தில் சம்மதம் தெரிந்தது. உடனே அக்னி மூட்டிவிட்டார்.

ஸ்ரீ ராமருக்காக 'சீதையை தேடி இலங்கை சென்று பார்த்த' ஆஞ்சநேயரும் இங்கு நடக்கும் நிகழ்வை கண்டு துக்கப்படவில்லை.

வெளியோட்டமாக பார்க்கும் போது, யாரிடமும் கடிந்து பேசாத ஸ்ரீ ராமர், சீதையை பார்த்து ஏன் இப்படி பேசினார்? என்று தோன்றும்.

ராமபிரான் கடிந்து பேசியதே ஆச்சர்யம்! 
அதற்கு சீதை பதிலாக "நான் அக்னி பிரவேசம் செய்து என்னை நிரூபிக்கிறேன்" என்று சொன்னதும் ஆச்சர்யம்.
இதை கண்டு, பதட்டம் அடையாத லக்ஷ்மணரும், ஹனுமனும் கூட ஆச்சர்யமே !!

நடப்பது அநியாயம் போல தோன்றும் இந்த நிகழ்வில், ஏன் ஹனுமனும், லக்ஷ்மணனும் அமைதியாக இருந்தனர்? என்றும் கேள்விகள் தோன்றும்.

ஸ்ரீ ராமரும், சீதையும் திவ்ய தம்பதிகள்.

சாதாரண தம்பதிகளுக்கும், திவ்ய தம்பதிக்கும் பல வித்யாசம் உண்டு.

சாதாரண உலக தம்பதிகளுக்கு, மற்றவர் என்ன சொல்ல நினைக்கிறார்? என்ன ஆசைப்படுகிறார்? என்பதை சொன்னால் தான், புரிந்து கொள்ள முடியும்.

திவ்ய தம்பதிகளுக்கு, தன் கணவன் என்ன சொல்ல நினைக்கிறார்? தன் மனைவி என்ன சொல்ல நினைக்கிறாள்? என்ன ஆசைப்படுகிறார்? என்பதை  அவர்கள் குறிப்பு அறிந்தே புரிந்து கொள்ள முடியும்.
திவ்ய தம்பதிகள் தன் தேவைகளுக்கு பேச கூட அவசியமில்லாமல் இருப்பர். 
திவ்ய தம்பதிகள் பேசினால், பேசுவதற்கு ஆசை பட்டு தான் பேசுவார்களே தவிர, தேவைக்கு பேசக்கூட அவசியமில்லாமல் இருப்பார்கள்...

ஸ்ரீ ராமரும், சீதையும் திவ்ய தம்பதிகள் என்பதை நாம் மறக்க கூடாது.

நம்மை போன்ற சாதாரண தம்பதிகள் என்ற பார்வையில் பார்த்தாலே, அது நமக்கு பாவத்தை தரும்.
இவர்கள் சாக்ஷாத் அந்த 'விஷ்ணுவும், லட்சுமியும்' என்ற உணர்வில் பார்க்க வேண்டும்.

உண்மையில் என்ன நிகழ்ந்தது?
ஸ்ரீ ராமர், ராவணனை கொன்ற பின், விபீஷணனை பார்த்து சீதையை சகல மரியாதையுடன் அழைத்துவர சொன்னார்.

சுக்ரீவனும் அவனுடைய சேனைகளும், சீதையை பார்த்தது கூட இல்லை. ஆனால், சீதைக்காக தங்கள் உயிரை கூட விட துணிந்து போர் செய்தனர்.
யாருக்காக தன் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருந்தார்களோ! அந்த சீதையின் தரிசனம் இவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கருணை கொண்டார் ஸ்ரீராமர்.

இதன் காரணமாக, சீதையை ஸ்நானம் செய்து, சர்வ ஆபரணத்துடன் சேனைகளுக்கு நடுவே நடத்தி அழைத்து வருமாறு சொன்னார்.

பத்து மாதம் சிறையில் இருந்த சீதையை, விபீஷணன் தன் மனைவியை முன்னிட்டு, "ஸ்ரீ ராமர் தங்களை பார்க்க ஆவலாக, அழைப்பதாக" சொன்னார்.

இந்த ஒரு சொல்லுக்காக காத்திருந்த சீதை, உடனே சந்தோசத்துடன் கிளம்ப தயாரானாள்.

ஸ்ரீ ராமர், "சீதையை ஸ்நானம் செய்து, சர்வ ஆபரணத்துடன் அழைத்து வருமாறு" சொன்னதாக சொல்ல,
பணிப்பெண்களும், விபீஷணனின் பத்னியும், சீதைக்கு ஸ்நானம், அலங்காரம் செய்து, மூடு பல்லக்கில், மகாராணி சீதையை சர்வ மரியாதையுடன் அழைத்துக் கொண்டு, ஸ்ரீ ராமரை நோக்கி வந்தனர்.

வானர சேனைகள், சீதையை காண முடியாமல், மூடு பல்லக்கை ஆச்சர்யமாக பார்த்தனர்.




வானர படைகளின் "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற கோஷம் விண்ணை முட்டியது.

'வானரர்கள் யாருக்காக தன் உயிரையும் துறக்க துணிந்தார்களோ! அவர்களுக்கு சீதையின் தரிசனம் கிடைக்க வேண்டும்' என்று எண்ணினார் ஸ்ரீ ராமர்.




உடனே, ஸ்ரீ ராமர், வானரர்கள் சீதா தேவியை பார்க்க வேண்டும் என்ற கருணையால், மூடு பல்லக்கு இல்லாமல், சீதையை சகல மரியாதையுடன் நடத்தி அழைத்து வருமாறு சொன்னார்.

கம்பீரமான, தாயுள்ளம் கொண்ட சீதை, மகிழ்ச்சியுடன் பெரும் சேனைக்கு நடுவே ஸ்ரீ ராமரை நோக்கி நடக்கலானாள்.

'தனக்காக பெரும் படையை திரட்டி, ஜெயராமனாக இருக்கும் ஸ்ரீராமரை காணப்போகிறோம்' என்று ஆனந்தப்பட்டாள் சீதை.

பெரும் வானர படை வீரர்களை கண்டு, ஸ்ரீ ராமருக்கும், தனக்கும் கிடைத்த குழந்தைகள் போல நினைத்தாள், சீதை.
தாயுள்ளதோடு அனைவரையும் கண்டாள்.

சீதையை கண்டதும், பேரிரைச்சல் உண்டானது.
வானர்கள்,
"இதோ சீதா மாதா...",
"ஆஹா... இவள்தான் சீதா தேவியோ !",
"சீதா ராம் கீ ஜெய்"
என்று எங்கும் பேரிரைச்சல் உண்டானது.

மூடு பல்லக்கில் வரும் வரை மனம் சஞ்சலம் அடையாமல், ஸ்ரீ ராமரை அடையப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தாள் சீதை.

மூடு பல்லக்கில் இருந்து இறங்கி, வானர படைகளின் பேரிரைச்சல் நடுவில் நடக்கும் போது, சீதைக்கு திடீரென்று மனம் சஞ்சலம் அடைந்தது. பெரும் துக்கம் சூழ்ந்தது.

தன்னை வெளிக்காட்டி கொள்ள விரும்பாத சீதை, உடனே தன் புடவை தலைப்பு கொண்டு, தன் முகத்தை முழுவதுமாக மூடி, அவமானத்தால் கூனி குறுகி நடந்து வந்து, ஸ்ரீ ராமர் முன் நின்றாள்.

சீதையின் நிலை என்ன? என்ன துக்கத்தை அடைந்தாள் சீதை?

கற்புக்கரசியான சீதை, தான் களங்கப் படாதவளாக இருந்தாலும், 
பத்து மாதங்கள் ஒருவன் பிடியில் அகப்பட்டதையும், 
அதனால் உலகம் தன்னையும், ஸ்ரீ ராமரையும் கேட்கப் போகும் கேள்விக்கும், 
அதனால் ஸ்ரீ ராமருக்கு உண்டாக போகும் தர்ம சங்கடத்திற்கு தான் காரணமாகிவிட்டோமே!!
என்று தன்னை தானே வெறுத்தாள்.

"இப்படி ஒரு நிலையை ஸ்ரீ ராமருக்கு தந்து விட்டோமே!!" என்று சொல்லமுடியாத துக்கம் அடைந்தாள்.
"இப்பொழுதே அக்னிப்ரேவேசம் செய்து பிராண தியாகம் செய்து விடலாமா?" என்று எண்ணினாள்.
"இருந்தாலும் ஸ்ரீ ராமர் மனம் தெரியாமல் தானாக முடிவு செய்யக் கூடாது" என்ற மனசஞ்சலத்தோடு ஸ்ரீ ராமரை நோக்கி நடந்தாள்.

ஸ்ரீ ராமரும், சீதையும், மனம் ஒத்த திவ்ய தம்பதிகள்.
சாக்ஷாத் நாராயணனும் லக்ஷ்மியும் ஆவார்கள்.
பேசிக்கொள்ளாமலேயே,  இருவருக்கும் மற்றவர் என்ன நினைக்கிறார்? என்ன ஆசைப்படுகிறார்? என்று தெரியும்.

சமாதானமே செய்யமுடியாத சோகத்துடன் வரும் சீதையின் மன சஞ்சலத்தை அறிந்து கொண்டார் ஸ்ரீராமர்.

தன்னை இந்த உலகிற்கு கொடியவனாக காட்டி கொண்டாலும் பரவாயில்லை, ஆனால் 'சீதையை யாரும் குறை சொல்ல கூடாது' என்று எண்ணினார்.

உடனே, சீதையின் முகத்தையும் பாராமல்,
"சீதை, உன்னை காப்பாற்றியது, என்னுடைய கடமை.
நானும் ஒரு புருஷன் என்று நிருபித்தேன்.
உன்னிடம் மீண்டும் வாழவேண்டும் என்றில்லை.
நீ வாழ்வதோ! உயிரை போக்கி கொள்வதோ! உன் இஷ்டம்.
நீ வாழவேண்டும் என்றால், கவலை படாதே. நான் உன்னை வாழ வைக்கிறேன்.
உன்னை தாயை போன்று, என் தம்பிகள் உன்னை காப்பாற்றுவார்கள்.
அயோத்யாவிலேயே நீ வாழலாம். 
இல்லை என்றால், கிஷ்கிந்தையில் நீ வாழலாம்.
சுக்ரீவனும் உன்னை தாயை போல காப்பாற்றுவான்.
இல்லை என்றால், இங்கேயே வாழலாம்.
விபிஷணன் உன்னை காப்பாற்றுவான்.
எதுவும் பிடிக்க வில்லை என்றால், நீ எங்கு வேண்டுமானாலும் வாழ். 
நான் உன்னை வாழ வைக்கிறேன்."
என்றார்.

சீதைக்காகவே 1000 மைல் நடந்து,
சீதைக்காகவே படைகளை  திரட்டி, 
சீதைக்காவவே கடலில் பாலம் அமைத்து, 
சீதைக்காகவே ராக்ஷஸர்களுடன் போர் செய்து,
சீதைக்காகவே ராவணனை கொன்று,
சீதையை மீட்ட பின், ராமபிரான் இப்படி கடுமையாக பேசியது, அங்கு கூடி இருந்த சுக்ரீவன் போன்றவர்களுக்கே திகைப்பை ஊட்டியது.




ஆனால், இந்த கடுஞ் சொற்கள், சீதைக்கு மன சமாதானமாக இருந்தது.
இதை ஒரு வாய்ப்பாக எடுத்து, லக்ஷ்மணனை பார்த்து சீதை கட்டளை இட்டாள்,
"லக்ஷ்மணா, இந்த இடத்திலேயே எனக்கு அக்னியை மூட்டு, நான் அக்னி பிரவேசம் செய்யப்போகிறேன்.
நான் பதிவ்ரதை!! என்பது உண்மையானால், 
ஸ்ரீ ராமரும் ஏக பத்னிவ்ரதன்!! என்பது உண்மையானால், 
இந்த அக்னி என்னை பாதுகாக்கட்டும்" 
என்றாள்.

லக்ஷ்மணன், ஸ்ரீ ராமர் முகத்தை பார்த்தார். 
ஸ்ரீ ராமர்  முகத்தில் சம்மதம் தெரிந்தது. தைரியமாக சிதை மூட்டினார்.

அருகில்,
ஆஞ்சநேயர் எந்த ஒரு மன சஞ்சலமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தார்.

லக்ஷ்மனின் நிலை என்ன? ஆஞ்சநேயர் நிலை என்ன?

லக்ஷ்மணன், ஸ்ரீ ராமரை நன்கு உணர்ந்தவர்.
ஸ்ரீராமர், எந்த ஒரு நிலையிலும் நீதி தவறாதவர், குற்றமற்றவர், நிதானமனாவர், தர்மம் தெரிந்தவர், சர்வ நல்ல குணங்களும் உள்ளவர் என்று நன்கு உணர்ந்தவர் லக்ஷ்மணன்.

இப்படிப்பட்ட "ஸ்ரீஅண்ணாவுக்கு சம்மதம் என்றால், அதுவே சாஸ்த்ரம்.
மறு கேள்வி இல்லை." என்று நினைத்தார்.
இது லக்ஷ்மணனின் நிலை.

ஆஞ்சனேயர், "சீதைக்கு அக்னியால் ஒன்றும் ஆகாது" என்று திடமாக முடிவு செய்திருந்தார்.
தான் இலங்கையை நெருப்பால் பொசுக்கிய போது, சீதை செய்த சபதம் அவருக்கு ஞாபகம் வந்தது.

"நான் பதிவ்ரதை என்பது உண்மையானால், இந்த அக்னி, ஹனுமனை சுடாமல், குளிர்ச்சி கொடுக்கட்டும்" என்றாள் சீதை .

"சீதையின் கற்பிற்கு தானே சாட்சி" என்பதாலும்,
சீதை இப்பொழுது செய்த சபதத்தில்,
"நான் பதிவ்ரதை என்பது உண்மையானால்,
ஸ்ரீ ராமர் ஏக பத்னிவ்ரதன் என்பது உண்மையானால், 
இந்த அக்னி என்னை பாதுகாக்கட்டும்"
என்று சொன்னதால், துளியும் கவலை இல்லாமல், அமைதியாக
இருந்தார், ஹனுமார்.
சீதை உடனே அக்னி பிரவேசம் செய்தாள்.
புகைக்கு உள்ளே சென்று வெளியே வருவது போல, சீதை தன் நெற்றியில் வியர்வை கூட இல்லாமல், வெளியே வந்தாள்.
அக்னி பிரவேசம் செய்து வெளி வந்ததால், சீதை "தன் கற்பை நிரூபித்த திருப்தி அடைந்தாள்".
இப்பொழுது சீதையின் மனோநிலை, சமாதானம் அடைந்தது.

"தன்னை சேர்த்து கொண்டால், தேசத்தின் அரசனான ஸ்ரீ ராமரை இந்த உலகம் என்ன கேட்குமோ? என்ற சங்கடம் நீங்கி, நிம்மதி அடைந்து இருந்தாள் சீதை.

தன் நிலையை உணர்ந்து, வெளி உலகத்திற்கு தன்னை கோபக்காரனாக காட்டினாலும், ஸ்ரீ ராமரின் அனுக்ரஹத்தை எண்ணி உருகினாள்.

சீதையை கோபமாக பேசியது ஸ்ரீராமரின் நோக்கம் அல்ல.
அக்னி பிரவேசம் செய்த பின், மன சஞ்சலம் இல்லாமல் இருந்தாள் சீதை.
உற்சாகத்துடன் ஸ்ரீ ராமர் அருகில் நின்றாள்.
மனதில் குறை அகன்று இருந்த சீதையை கண்டு, ஸ்ரீ ராமர், மகிழ்ச்சியுடன் சீதையை அருகில் அமர செய்து, சீதா ராம தம்பதிகளாய் காட்சி கொடுத்தனர்.

சற்று முன் ராமபிரான் காட்டிய கோபமும், அக்னி பிரவேசம் செய்த பின், சீதையை மகிழ்ச்சியுடன் சேர்த்து கொண்ட காரணத்தையும் புரிந்து கொள்ள, 
சீதையின் நிலை எவ்வாறு இருந்தது என்று நம்மால் பார்க்க முடிந்தால் மட்டுமே, "ராமபிரானின் இதயத்தை" புரிந்து கொள்ள முடியும். 


வாழ்க திவ்ய தம்பதிகள் புகழ்.  வாழ்க சீதா ராம புகழ்.
வாழ்க அயோத்தியா. 




Friday 16 March 2018

கல்லை, "கடவுள்" என்று கும்பிடுகிறான் ஹிந்து. எத்தனை முட்டாள் தனம்?

கல்லை, "கடவுள்" என்று கும்பிடுகிறான் ஹிந்து.

நமக்கும் மேல் உள்ள கடவுளை,
நம்மால் உணர முடியாத கடவுளை,
நம்மையும் படைத்த கடவுளை,
ஒரு வடிவமாக அமைத்து வழிபடுவது என்பது, எத்தனை முட்டாள் தனம்?



அதை விட முட்டாள் தனம், கல்லையே "கடவுள்" என்று நம்புவது.
அதை விட முட்டாள் தனம், அந்த கல்லிடம் போய் பேசுவது, பாடுவது, வரம் கேட்பது.


இப்படி ஒரு கேள்வி, ஹிந்துக்கள் முன் வைக்கப்படுகிறது.

உண்மையில்,
ஒரு சிறு குழந்தையை, கோவிலுக்கு கூட்டிச்சென்று "இது உம்மாச்சி" என்று சிவலிங்கத்தை பார்த்து கும்பிட சொன்னால், சில குழந்தைகள் கேட்கும் முதல் கேள்வியும் இது தான் "இது கல்லு தானே'" என்று.

மிக சாதாரண கேள்வி.
பெரும்பாலும் பாரத குழந்தைகள் கூட இது போன்ற கேள்வியை கேட்பதில்லை.
காரணம் பாரத குழந்தைகள் கூட அறியும், "இது ஒரு சாதாரண கேள்விஎன்று.

வளர்ந்த பின்னும், இந்த கேள்வி சிலருக்கு மனதில் எழுந்து கொண்டே இருக்கும்.
பதில் சொன்னாலும் புரியாது.

கல்லை, "கடவுள்" என்று கும்பிடுகிறான் ஹிந்து என்று வளர்ந்து, முடி நரைத்த பின்னும், சிர் இன்று கூட இந்த கேள்வியை, கேட்பதை உலகத்தில் நாம் பார்க்கலாம்.

கல்லை "கடவுள்" என்று ஏன் ஹிந்து வழிபடுகிறான்?  
இதற்கு பதில் இல்லாமலா கோடிக்கணக்கான வருடங்களாக ஹிந்துக்கள் சிலை வழிபாடு செய்கின்றனர்?  சற்று யோசிப்போம்.

பாரத மக்கள் பெரும்பாலும் அறிவாளிகள், பண்பு உடையவர்கள்.
இதை உலகமே ஒத்துக்கொள்கிறது.



பெரும்பாலும் ஹிந்துக்கள் சிலை வழிபாடு செய்கின்றனர்.

பாரத மக்கள் பெரும்பாலும் அறிவாளிகள் என்றால், பெரும்பாலான ஹிந்துக்கள் வழிபடும் சிலை வழிபாடும் சரியாக தான் இருக்க வேண்டும்.

அறிவாளிகள் என்பதால் தான், இன்று வரை சிலை வழிபாடு செய்கின்றனர்.

"கல்லை 'கடவுள்' என்று கும்பிடுகிறான்" என்று கேள்வி கேட்பவர்கள், இதோடு, இன்னொரு கேள்வியும் கேட்கலாமே?
ஏன், அதே கல்லில் செய்யப்பட்ட, அதே கடவுள் சிலையை, தூண்களிலோ கோபுரத்திலோ, கடைகளிலோ, மியூசியத்திலோ காணும் போது, மிஞ்சி போனால், மரியாதையாக பார்க்கிறானே தவிர, பூஜையோ, வேண்டுதலோ, செய்யவில்லை?

"மியூசியத்தில் இருக்கும் இந்த சிலை "தெய்வமா?" என்று ஹிந்துவிடம் கேட்டால், "இது சிலை" என்கிறான்.

காலில் விழுந்து, சூடம் ஏற்றி வரம் கேட்காமல், "இது சிலை" என்கிறான்.
செருப்பு அணிந்து கொண்டு அருகில் நிற்கிறான்.

"மியூசியத்தில் இருக்கும் இந்த சிலை 'தெய்வ சிலை' தானே?" 
என்று கேட்டால்,
"ஆம், தெய்வ சிலை தான், ஆனால் இதுவே தெய்வம் இல்லை. தெய்வ சிலையாக இருப்பதால்மரியாதை செய்கிறேன்.
ஆனால் வழிபட வேண்டும் என்று தோன்றவில்லை" என்கிறான்.

அப்படியென்றால், பார்க்கும் கல்லை எல்லாம் "கடவுள்என்று நினைக்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. இது யோசிக்கவும் வைக்கிறது.

அழகான கடவுள் சிலை, கோவில் தூணில் இருந்தால், பார்த்து "அழகாக இருக்கிறது" என்று ரசிக்கிறானே தவிர கும்பிடுவதில்லை.
தூணில் இருக்கும் சிலையை, "தெய்வத்தின் பிம்பம்" என்று தான் பார்க்கிறான். அதுவே "தெய்வம்" என்று பார்க்கவில்லை.

நமக்கு பிடித்த ஒருவரின் போட்டோவை, சிலையை வைத்து இருப்பது போல தான், தூணில் இருக்கும் தெய்வத்தை பார்க்கிறான்.
அதிக பட்சம் தெய்வ சிலையை பார்த்தால், மரியாதை செய்கிறான்.
இதுவே "தெய்வம்" என்று நினைப்பதில்லை

ஒரு தூணில் இருக்கும் தெய்வ சிலையை, "தெய்வம்" என்று நினைக்காவிட்டாலும், தெய்வ சிலையாக உள்ளதால்மரியாதையாக பார்க்கிறான்.




ஆனால்,
தூணில் இருக்கும் தெய்வ சிலையையும், கோவிலில் கர்ப்க்ரஹத்தில் உள்ள சிலையையும் ஹிந்து ஒன்றாக பார்க்கிறானா ?
பதில்: இல்லை.
இதில் தான் ரகசியம் அடங்கி இருக்கிறது.

தூணில் இருக்கும் சிவனின் சிலை, பிரம்மாண்டமாக மிக அழகாக கூட இருக்கும்.
அந்த சிலையை, "கல் சிலை" என்று பார்க்கிறான் ஹிந்து.

கோவிலில் எங்கு பார்த்தாலும் கடவுள் சிலைகள்.
அனைத்தையும் "கல் சிலை" என்றே பார்க்கிறான்.

ஆச்சர்யம் எங்கே என்று கவனித்தால்?
அந்த கோவிலில் கர்ப்க்ரஹத்தில் இருக்கும்,
அழகான உருவம் கூட இல்லாத,
பார்ப்பதற்கு, நிமிர்த்தி வைத்த அம்மி கல் போன்ற கல்லை,
"சிவன்" என்று சொல்கிறான்.

தூணில் மிக அழகாக வடித்து வைத்து இருந்த சிவனின் சிலையை, 'சிவன் சிலை" என்று பார்த்த இந்த ஹிந்து,
இந்த லிங்க கல்லை, "தெய்வம்" என்று பார்க்கிறான்.
"சிவன்" என்று தீர்மானமாக சொல்கிறான்.

அதை விட ஆச்சர்யம், அதை "தெய்வம்" என்று நினைப்பதால், அந்த கல்லை, "சிவன்" என்று பார்த்து, தன் பிரார்த்தனைகளை செய்து வழிபடுகிறான்.

பொதுவாக ஸ்ரீ கிருஷ்ணர் என்றாலே அழகு உடையவர்.
அவருடைய சிலையை, உருவத்தை பார்த்தாலே அழகாக இருக்கும்.

நாதீகனுக்கும், கிறிஸ்தவனுக்கும், முஸ்லிமுக்கு கூட, ஸ்ரீ கிருஷ்ணனின் குழந்தை உருவத்தை பார்த்தால் பிடித்து போகும்.
பூரி ஜகன்நாத்தில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹம் பார்க்கும் போது, நம்மை ஒரு நிமிஷம் பதற வைக்கும்.
மர கட்டையில், பெரிய முழியுடன் கை கால் விழுந்தது போன்ற நிலையில் இருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.



(இது என்ன காரணம் என்று அறிய ஆவல் இருந்தால், இங்கு படிக்கவும் ... http://proudhindudharma.blogspot.in/2017/12/odisha-orissa.html?m=1)

ஆச்சர்யம் என்னவென்றால், கர்ப்க்ரஹத்தில் இருக்கும் லிங்கத்தை பார்த்து கடவுள் என்று உணருவது போல, இந்த மர சிலையை பார்த்தாலும், ஏற்படுகிறது.

கர்ப்க்ரஹத்தை விட்டு, இந்த ஹிந்துக்கள் வெளியே வந்த பிறகு, அதே போன்ற சிலையை வெளியில் காண்பித்தால், "சிலை" என்கிறான்.

ஹிந்துக்கள் பார்க்கும் கல்லை எல்லாம் "கடவுள்" என்று வழிபாடு செய்வது போல தெரியவில்லையே?


  • கடவுள் நம்மை படைத்தார்.
  • கடவுள் நம் கற்பனைக்கு, புத்திக்கு எட்டாதவர்.

இப்படி நம் வேதத்தில் சொல்லி இருக்கிறது.

எங்கும் உள்ள இறைவனுக்கு, கோவில் தேவை இல்லை.
இறைவனுக்கு, கோவில் தேவை இல்லை.
ஆனால்,
நமக்கு, இறைவன் ஒரு இடத்தில், ஒரு உருவத்தில் தேவைப்படுகிறான்.

"எல்லாம் ப்ரம்மமயம்" என்று இருக்கும் அத்வைத "ஞானி"
கல்லை தெய்வம் என்று கும்பிடுவதில்லை.

எங்கும் அந்த கடவுள் இருக்கிறார் என்று இருந்த ஞானி யார்? என்று பார்க்கும் போது, நமக்கு தெரிபவர், "பிரகலாதன்".
பிரகலாதன், "நாராயணன் எங்கும் உள்ளார்" என்ற அத்வைத நிலையிலேயே இருந்தார்.

தன் தந்தை ஹிரண்யகசிபு பல வழிகளில் கொலை செய்ய முயற்சி செய்தும், பிரகலாதன் நாராயணனை உதவிக்கு கூப்பிடவில்லை.

ஏன்?

அனைத்துமே நாராயணன் என்று பார்த்து கொண்டிருந்த பிரகலாதன், தன் தந்தை, மலை, விஷம், தன்னை கொலை செய்ய வருபவன், தான் உட்பட அனைத்தையும் நாராயணனாகவே பார்த்தான்.
இவை எல்லாம் வேறு, நாராயணன் வேறு என்று தோன்றினால் தானே, "நாராயணா, காப்பாற்று" என்று ஒருவன் சொல்லுவான்?

இந்த நிலையில் எங்கும் கடவுளை பார்த்த பிரகலாதன், விஷம் குடிக்க சொன்னாலும், அதுவும் நாராயணனே என்று விஷத்தை குடித்தான்.  

ஒன்றும் ஆகவில்லை என்றதும் ஹிரண்யகசிபு குழம்பினான்.
ஆனால் பிரகலாதன், 'தான் பிழைத்தற்கு நன்றி' என்று கூட நாராயணனுக்கு சொல்லவில்லை.
தான் பிழைத்தது பற்றி ஆச்சர்யப்பட கூட இல்லை.

இப்படிப்பட்ட ஞானிக்கு, சிலை வழிபாடு தேவை இல்லை.

எப்படி சிலை வழிபாடு தோன்றியது?
ஏன் கர்ப்க்ரஹத்தில் இருக்கும் கல்லை "தெய்வம்" என்று சொல்கிறான்?  
 அதே கல்லை கோவிலில் கோபுரத்தில் பார்த்தால் "சிலை" என்கிறான். என்ன ரகசியம் இது?



இதற்கு பதிலையும், பிரகலாதன் வாழ்க்கையிலேயே கண்டு பிடித்து விடலாம்.

தூணில் உள்ள தெய்வ சிலை தெய்வமில்லை, ஆனால் கர்பக்ரஹத்தில் உள்ள சிலையை "தெய்வம்" என்று எப்படி ஆனது

ஹிரண்யகசிபு, தன் மகனை பார்த்து, "அந்த நாராயணன் எங்கடா இருக்கிறான்?" என்று ஆத்திரத்தோடு கேட்கிறான்.

எங்கும் நாராயணனை பார்க்கும் பிரகலாதனுக்கோ, இவன் கேட்கும் கேள்விக்கு, "இங்கு தான் உள்ளார்" என்று ஒரு இடத்தை பார்த்து சொல்ல முடியவில்லை.
அதனால், "நாராயணன் எங்கும் உள்ளார்." என்றார்.

தெய்வம் எங்கும் உள்ளார் என்று புரிந்து கொள்ள முடியாத ஹிரண்யகசிபு,
"ஏதாவது ஒரு இடத்தை காட்டி இங்கு உள்ளார் என்று சொல் அவனை கொன்று விடுகிறேன்" என்கிறான்.

எங்கும் நாரராயணனை பார்க்கும், பிரகலாதனால், எந்த இடத்தை காட்டி சொல்ல முடியும்?

இவன் இப்படி கேட்டால் சொல்ல மாட்டான் என்று ஹிரண்யகசிபு, தானே, கல் மண் கொண்டு கட்டிய தூணை பார்த்து, "இதில் இல்லையா உன் நாராயணன்?" என்றான்.

இந்த கேள்வி பதில் சொல்ல எளிதாக இருந்தது பிரகலாதனுக்கு.

"எங்கும் நாராயணனே இருக்கிறார் என்கிற பொழுது, இந்த தூணிலும் இருக்கிறாரே. உங்களுக்கு தெரியவில்லையா?" என்றான் பிரகலாதன்.

நான் கட்டிய கல் தூணில், என் மாளிகையில் உள்ள இந்த தூணில், நாராயணன் இருக்கிறானா? என்றான்.

பிரகலாதனுக்கு "நாராயணன் தூணுக்குள் தெரியவில்லை, தூணும் நாராயணனாக தான் தெரிந்தது".

அதனால், பிரகலாதன், "இதோ இருக்கிறாரே" என்றான்.

ஹிரண்யகசிபு, தூணுக்கு உள்ளே நாராயணன் இருக்கிறான் போல, அதை தான் தன் மகன் பார்க்கிறான் போல என்று நினைத்து,  
இந்த தூணை உடைத்து, உள்ளே இருக்கும் நாராயணனை பிடித்து கொன்று விடுவோம் என்று நினைத்தான்.

தன் கையாலேயே, தான் கட்டிய கல்தூணை ஓங்கி ஒரு குத்து விட்டான்.
இடி விழுந்தது போன்ற சத்தத்தில், தூண் இரண்டாக பிளக்க, கல் தூணில் இருந்து, படு பயங்கர உக்கிர மூர்த்தியாக, சிங்க முகத்தில், மனித உடம்பை கொண்டு, "நரசிங்கமாக" வெளி வந்தார் 'நாராயணன்'.

கல் எப்படி தெய்வம் ஆகிறது?
இப்பொழுது புரிந்து இருக்கும்.

பார்க்கும் கல்லை எல்லாம், ஹிந்துக்கள் தெய்வம் என்று கும்பிடுவதில்லை.  
அந்த தெய்வ பிம்பத்திற்கு மரியாதை தான் செய்கின்றனர்.

சில கல் மட்டும், தெய்வம் ஆகிறது.
 
கல் தெய்வம் ஆனது ஏன்?

பிரகலாதன் போன்ற ஞானியும், ரிஷிகளும், மகான்களும், யோகிகளும், பக்தர்களும், ஏதோ ஒரு சமயத்தில்
ஒரு கல்லையோ, மரத்தையோ, மலையையோ தெய்வம் என்று பூஜித்து, அதில் தெய்வம் வெளிப்பட்டு அவர்களுக்கு அணுகிரஹம் பெறுகிறார்கள்.



பாரத மண்ணில் மட்டும் தான் ஞானிகள் மீண்டும் மீண்டும் பிறக்க ஆசைப்படுகின்றனர்.

இவர்களால் பூஜிக்கப்பட்ட கல் சிலையில், தெய்வங்கள் காட்சி கொடுக்க, இரக்க குணம் கொண்ட நம் ரிஷிகள், ஞானிகள், யோகிகள், அந்த தெய்வத்திடம், தான் மறைந்தாலும், இந்த கல்லில், மரத்தில், மலையில் சாந்நித்யதோடு இருக்குமாறு வரம் வாங்கி விடுகின்றனர்.

இங்கு வந்து பிரார்த்திக்கும் சாதாரண ஜனங்களுக்கும், இது கல் என்று தோன்றாமல், தெய்வம் என்று மனதில் எண்ணம் உருவாக்கி, அவர்கள் குறைகள் யாவையும் தீர்க்க வேண்டும் என்று பிரார்த்தித்து, வரமாக வாங்கி விடுகின்றனர்.

"சாதாரண ஜனங்கள், உன்னை போன்ற நம்பிக்கை இல்லாதவன் ஆயிற்றே. ஒழுக்கம் இல்லாதவன் கூட என்னிடம் வந்து நிற்பானே
என்று நாராயணன் கேட்டால்,
"தனக்காக இந்த சாதாரண ஜனங்கள் செய்யும் பிழை, பாவத்தை பொறுத்து கொண்டு, அணுகிரஹம் மட்டுமே செய்ய வேண்டும்"
என்று தங்கள் பக்தியால் கட்டிப்போட்டு விடுகின்றனர்.

இப்படி ஒவ்வொரு கோவிலுக்கு சென்று, அந்த மூல விக்ரஹ சிலை யாரால் அமைக்கப்பட்டது என்று அறிந்து கொண்டால், யாரோ ஒரு ரிஷியோஞானியோ, யோகியோ, மகானோ, பக்தனோ ஏதோ ஒரு அணுகிரஹத்தால் அமைத்து இருப்பார் 
அவரின் பிரார்த்தனை பொறுத்து, அந்த கோவில் தெய்வங்கள் அணுகிரஹம் செய்கிறது.

அதனால் தான்,

  • இந்த சிவன் கோவிலுக்கு சென்றால், குழந்தை பிறக்கும்.
  • இந்த சிவன் கோவிலுக்கு போனால், கணவன் மனைவி சண்டை தீர்ந்து, அன்பு வளரும்.
  • இந்த பெருமாள் கோவிலுக்கு போனால் மோக்ஷம் கிடைக்கும்.
  • இந்த பெருமாள் கோவிலுக்கு போனால் செல்வம் கிடைக்கும்.

என்று ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு பலன் சொல்கின்றனர்.

ஒரே சிவன் தான்.
ஏன் இந்த சிவன் கோவிலுக்கு சென்றால், இந்த பலன்?
அந்த சிவன் கோவிலுக்கு சென்றால் உன்னொரு பலன்? என்று வித்யாசம் சொல்கின்றனர்?
சிவனுக்கு ஏன் ஒரே கோவிலில் அணைத்து பலனையும் கொடுக்க சக்தி இல்லையா?

இதற்கு காரணமும் இப்பொழுது புரிந்து இருக்கும்.
ஏன் திருப்பதியில் மட்டும் இத்தனை கூட்டம்

ஒரு கல்லில் தன்னை வெளிப்படுத்தி, ஏதோ ஒரு பக்தனுக்காக வருகிறார் பெருமாள்.
அந்த பக்தன் கேட்ட வரத்திற்கு ஏற்ப அந்தந்த கோவிலில் அணுகிரஹம் செய்கிறார்.

ஆனால், திருப்பதி பெருமாள் மட்டும், எந்த பக்தனுக்காகவும் வந்தவர் இல்லை.
தானே இஷ்டப்பட்டு, சிலையாக வைகுண்டத்தில் இருந்து இறங்கி வந்தவர்.
இந்த காரணத்தால், திருப்பதி பெருமாளுக்கு மட்டும், வரும் பக்தனுக்கு கருணை செய்ய தடையே இல்லை.
அனைத்து பலனையும் தானே தருகிறார்.
வேண்டுவதெல்லாம் பலிக்கிறது.

இதனால் தான் திருப்பதி பெருமாளுக்கு மட்டும் கூட்டம் அலை மோதுகிறது.

கல் கடவுள் இல்லை. ஆனால், கடவுள் ஒரு பக்தனுக்காக வருகிறான்.
அவன் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கிறான்.

நம் வீட்டில் உள்ள, சிறு கிருஷ்ண விக்ரஹத்தையும், சிறு சிவ லிங்கத்தையும் கூட, அந்த பிரகலாதன் போன்று பக்தி செய்தால், நம் வீட்டில் உள்ள குட்டி சிலையிலும் பகவான் தன் சாந்நித்யத்தை வெளி காட்டுவார்.



நம்மிடம் பேசும் அளவிற்கு பக்தி செய்ய முடிந்தால், ஞானிகள் போன்று, உலகத்திற்காக இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம்,
நம் குடும்பத்தில் பிறக்கும் தலைமுறைகள் நோய் இல்லாமல், சிறப்போடு, பக்தியுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்து, பகவானிடம் நம் பக்தியால் வரம் வாங்கி கொடுத்து விடலாம்.

கோவிலில் கர்ப்கிரஹ சிலையில் தெய்வம் இருக்க செய்த ஞானிக்கு, ரிஷிக்கு, மகானுக்கு, பக்தனுக்கு நாம் என்ன பதில் செய்ய முடியும்?

இவர்கள் நமக்காக கடவுளை பக்தியால் ஒரு கல்லில் கட்டுப்படுத்தாமல் இருந்து இருந்தால்,
வானத்தை பார்த்து, "கடவுளே, கடவுளே எங்கு இருக்கிறாய்?" என்று ஹிரண்யகசிபு போல கத்தி கொண்டு இருந்து இருப்போம்.

தெய்வ அணுகிரஹம், ஒரு ஞானியின் சிபாரிசு மூலம் நமக்கு கோவிலில் கிடைத்து விடுகிறது.

தெய்வ அனுக்கிரகம் நாமே சம்பாதிக்க, நமக்கோ தெய்வ பக்தி இல்லை.  

தெய்வ அணுகிரஹம் இல்லாமல் போனால், செய்யும் பாவங்கள் எறிக்கொண்டே போகும்.
செய்த புண்ணியத்துக்கு மட்டுமே பலன் கிடைக்கும்.
தெய்வ அணுகிரஹத்தால் கிடைக்கும் பலன்கள் கிடைக்காமல் போகும்.

கோவிலுக்கு சென்று வழிபடுவது எத்தனை முக்கியம் என்று இப்பொழுது புரிந்து இருக்கும்.
யாரோ ஒரு ஞானி, நமக்காக தெய்வத்தை தன் பக்தியால் கட்டி போட்டு இருக்கிறார்.

நாம் போய், பிரார்த்தனை செய்வது ஒன்றே போதுமானது. தெய்வம் வேறு வழி இல்லாமல் அணுகிரஹிக்கும்.

பலன் அடைந்தால், "நன்றி" அந்த தெய்வத்துக்கு சொல்கிறோமோ இல்லையோ,  
அந்த தெய்வத்தை நிறுத்திய அந்த ஞானிக்கோ, மகானுக்கோ நாம் செய்ய வேண்டும்.

"நன்றி உள்ள மனிதன்", ஞானிகளையோ, மகான்களையோ, யோகிகளையோ, பக்தனையோ மறக்க மாட்டான்.
தெய்வத்தை நமக்கும் அணுகிரஹம் செய்ய வைத்த, அந்த மகானே நமக்கு குரு.

வாழ்க ஹிந்து

Hare Rama Hare Krishna - Bhajan
Sandhyavandanam - Morning Prayer (With meaning)

Sandhyavandanam - Afternoon Prayer (With meaning)




Sandhyavandanam - Evening Prayer (with meaning)