Followers

Search Here...

Showing posts with label பெருமாள். Show all posts
Showing posts with label பெருமாள். Show all posts

Thursday 24 December 2020

திருமலையின் நீளம் என்ன? திருப்பதி பெருமாள் எதற்காக வந்தார்? என்ன சொன்னார்? கைங்கர்யம் செய்பவர்கள், ஆதிசேஷனை போல கைங்கர்யம் செய்ய வேண்டும்.

"ஞானம் அடைந்த ஜீவன் மட்டுமே வைகுண்டம் (மோக்ஷம்) அடைய முடியும். 

ஞானம் அடையாதவரை, மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்."
இது பரவாசுதேவன் நியமித்த விதி (சட்டம்).

வைகுண்டத்தில் உள்ள அனைத்து ஜீவனும், பிறப்பு இறப்பில் இருந்து முக்தி அடைந்தவர்கள்.

மீண்டும் இவர்கள், பூலோகத்திலோ, சொர்கத்திலோ, மகர லோகத்திலோ, ஜன, தப, ப்ரம்ம லோகத்திலோ, பாதாள லோகங்களிலோ பிறவி எடுப்பதில்லை.

இவர்களாக ஆசைப்பட்டால், பெருமாளை போன்று அவதாரம் கூட செய்ய முடியும்.
அணுகிரஹம் செய்ய முடியும்.

மோக்ஷம் என்ற பேரானந்தமும், பரவாசுதேவனின் தரிசனமும் இவர்களுக்கு நிரந்தர சொத்து.

வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுக்கு  

  • உலகங்களை படைக்க, காக்க, அழிக்க என்று பல கடமைகள் உண்டு.

ஆனால்,

வைகுண்டத்தில் இருக்கும் முக்தி அடைந்த ஜீவனுக்கு,  

  • எந்த உலக பொறுப்பும் கிடையாது.   
  • இவர்கள் அனுபவிப்பது நிரந்தரமான ஆனந்த அனுபவம் மட்டுமே.
  • இவர்களும் பரவாசுதேவனை போல சுந்திரமானவர்கள்
  • எங்கும் செல்ல கூடியவர்கள். (அஜாமிளனை எம தூதர்களிடமிருந்து மீட்க இவர்களே வந்தார்கள்.)
  • நாராயணனை போலவே சங்கு சக்கரம் உள்ளவர்கள்.



  • திவ்ய ரூபம் உடையவர்கள்.
  • அவர்களுக்கும் பரவாசுதேவன் அனுபவிக்கும் ஆனந்தம் உண்டு.

வைகுண்டத்திற்கு முக்தி அடையாத ஜீவன் வர முடியாது என்பதால், பரவாசுதேவன் தானே விருப்பப்பட்டு, அவர்கள் இருக்கும் லோகங்களில் அவதாரங்கள் செய்கிறார்.

'மோக்ஷம் கொடுக்க வேண்டும் என்ற கருணையின் காரணமாக' அவதாரம் செய்கிறார். 

'மோக்ஷத்தில் நமக்கு ஆசை வருவதற்காகவும்' அவதாரம் செய்கிறார்.

'தன்னை புரிந்து கொள்ளவும்' அவதாரம் செய்கிறார்.

ப்ரம்ம லோகத்தில் இருக்கும் ப்ரம்மாவும் "வைகுண்டம்" சென்று பெருமாளை பார்க்க முடியாது.

பெரிய பெரிய முனிவர்கள், ரிஷிகள், தேவர்கள், ருத்ரன் உட்பட யாரும் வைகுண்டம் சென்று பார்க்க முடியாது.

தேவர்கள், ரிஷிகள், ப்ரம்மா, சிவன் என்று அனைவரும் பார்க்க வேண்டும் என்பதால், வைகுண்டத்தில் இருந்து கொண்டே, க்ஷீராப்தி என்ற பாற்கடலில், "மகாவிஷ்ணு"வாக வ்யூஹ அவதாரம் செய்து, தரிசனம் கொடுக்கிறார்.

வைகுண்டத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் ஆதிசேஷன், க்ஷீராப்தியிலும் கூடவே அவதாரம் செய்தார்.

அவரவர் தகுதிக்கு ஏற்ப தரிசனம் கொடுக்க, ஆங்காங்கு ஒரு காரியாலயம் (office) அமைத்துக்கொள்வதை போன்று தேவ, ப்ரம்ம, ருத்ரன், ரிஷி, கிண்ணரர்கள் என்று அனைவருக்காகவும், க்ஷீராப்தியில் அவதாரம் செய்து, தரிசனம் கொடுத்து, அபயம் தருகிறார் பெருமாள்.

க்ஷீராப்தி என்ற பாற்கடலில், 1000 தலைகள் கொண்ட ஆதிசேஷன் மேல், விஷ்ணு என்ற பெயருடன் பரவாசுதேவன் பள்ளி கொண்டு இருக்கிறார்.

வைகுண்டத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் மகாலட்சுமி,
விஷ்ணு பத்னியாக இதே பாற்கடலில், தேவர்களும் அசுரர்களும் அம்ருதம் கடையும் போது தோன்றினாள்.

ஆதிசேஷனின் 1000 தலைகளிலும் நாக ரத்தினங்கள் ப்ரகாசித்தன

பெருமாளின் பிம்பம் இந்த ஆயிரம் நாகரத்தினங்களிலும் பிரகாசிப்பதை பார்த்து ரசித்து கொண்டே, பெருமாளின் திருவடியை பிடித்து விட்டுக்கொண்டு இருந்தாள், மகாலட்சுமி.

அந்த சமயம், பரவாசுதேவனை பார்ப்பதற்கு, நாரதர் திருபாற்கடல் வந்தார்.

பாற்கடலில் ஜெய விஜயர்கள் அனுமதி இன்றி, பெருமாளை பார்க்க யாரும் உள்ளே போக முடியாது. 
சனகாதி முனிவர்களையே ஒரு முறை ஜெய விஜயர்கள் தடுத்து விட்டனர்.

நாரதர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
த்ரிலோகமும் சுற்றும் நாரதரை மட்டும் யாருமே தடுப்பது இல்லை.
இவரின் முகவெட்டு அப்படி.

இவரை பார்த்தால் கம்சனுக்கு, ஹிரண்யகசிபுவுக்கு கூட, வரவேற்க தோன்றுமாம்.

நாராயண நாமத்தை எப்பொழுதும் சொல்லும் நாரதருக்கு, எங்கு சென்றாலும் வரவேற்பு, மதிப்பு.
கம்சன் போன்றவர்களே நாரதரை வரவேற்பார்கள் என்றால், நாரதரை ஜெய விஜயர்கள் தடுப்பார்களா?..

நாரதர் வீணா கானம் செய்து கொண்டே திருபாற்கடல் வருகிறார்
அடிக்கடி இங்கு வந்து பெருமாளை சேவிப்பது இவருக்கு வழக்கமும் கூட.

எம்பெருமான் நாரதர் வருவதை கண்டதும், சந்தோஷமாக எழுந்து கொண்டு, ஆசையோடு வரவேற்றார்.

பவள பேழையில் முத்துக்களை கோர்த்து வைத்தது போல, எம்பெருமானின் உதடும், பற்களும் இருந்ததாம்.

தேவர்களுக்கும் தேவனான எம்பெருமான், பீதாம்பரம் உடுத்தி,  சங்கு சக்கரம் ஏந்திய கரங்களுடன், கண்ணுக்கு ஆனந்தம் தரக்கூடிய திவ்ய மங்கள வ்யூஹ ரூபத்தை உடையவராய் இருந்தார்.

எம்பெருமானை பார்த்து, கை குவித்து நாரதர் துதிக்கலானார்.
"நாம (name) ரூபங்களை (figure) கடந்து,
எல்லா இடத்திலும் அகண்டமாக இருந்து கொண்டு,
'ஸத்'தாய், 'சித்'தாய், ஆனந்தமாய்,
சத்தியத்தின் சொரூபனாய் இருக்கக்கூடிய நீங்கள்,
பக்தர்களுக்காக திவ்ய மங்கள (மஹாவிஷ்ணு) ரூபத்தை (Figure) ஏற்கிறீர்கள்.

சாமான்ய தேவர்கள், பரதெய்வமான உங்கள் பெருமைக்கு அருகில் கூட வர முடியாது.

கர்ம தாஸர்களாக இருப்பவர்கள் தேவர்கள்.
ஒருவன் செய்யும் கர்மாவுக்கு (செயலுக்கு) தகுந்த பலனை கொடுப்பவர்கள் தேவர்கள். அவ்வளவு தான்.

தானாக ஒருவனுக்கு கிருபை செய்ய தேவர்களுக்கு சக்தியும் கிடையாது.

'நீ ஏன் என்னை காப்பாற்றவில்லை?' என்று இந்திரனை கேட்டாலும்,
'வாஸ்தவம் தான். நீ தினமும் கோவிலுக்கு வந்தாய், என்னை பூஜை செய்தாய். இருந்தாலும் உன் பூஜா பலன் அவ்வளவு தான், உன் நம்பிக்கைக்கு அவ்வளவு தான் பலன் கொடுக்க முடியும்'
என்று கை விரித்து விடுகின்றனர்.




ஆனால் நீங்கள் ஒருவர் மட்டுமே, "உன் கால பலன் அவ்வளவு தான். உன் கர்ம பலன் அவ்வளவு தான்"
என்று சால்ஜாபுகள் சொல்லாமல், பிறர் யோக்கியதை பார்த்து அனுக்கிரகம் செய்யாமல்,  தீனர்களுக்கும் அனுக்கிரகம் செய்கிறீர்கள்.

மற்ற தெய்வங்களுக்கும் புராணம் உள்ளது.
உங்களுக்கும் புராணம் உள்ளது.

ஆனால் உங்களை போன்று வேறு எந்த தெய்வமும் உதவி செய்ததாக தெரியவில்லை.

எது தர்மம்? என்பதை தெரிந்து கொள்ள 'சப்த ப்ரம்மமாகிய வேதத்தை பார்த்து தெரிந்து கொள்கிறோம்'

அப்படிப்பட்ட வேதமே ஒரு சமயம், பிரளய ஜலத்தில் போய் விட்டது

மது கைடபர்கள் வேதத்தை எடுத்து கொண்டு சென்று விட்டனர் என்ற பொழுது, மற்ற தெய்வங்கள் எல்லாம் எங்கே போனார்கள்?
பேசாமல் இருந்து விட்டனரே!!

இப்படி மற்ற எந்த தெய்வங்களும் முன் வராத போது, நீங்கள் தானே மத்ஸ்ய அவதாரம் எடுத்து பிரளய ஜலத்தில் நீந்தி வேதத்தை மீட்டீர்கள்.

ஒரு சமயம், பிரளய ஜலத்தில் பூமியே மூழ்கி விட, பூமி தேவியை காப்பாற்ற, ஒரு தேவனும் முயற்சி செய்யவில்லையே? அப்பொழுதும் சும்மா இருந்தார்களே!!

எல்லா தெய்வங்களுக்கும் கோவில் உள்ளது.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் பக்தர்கள் உண்டு. புராணங்கள் உண்டு.
'பூமியே மூழ்கி விட்டது' என்றதும் இவர்கள் யாருமே ஒரு முயற்சியும் செய்யவில்லையே!! 

உமக்கோ, உடம்பு பறக்கிறது..  உடனே 'வராஹ அவதாரம்' செய்து பூமியை பிரளய ஜலத்தில் இருந்து மீட்டு காப்பாற்றினீர்கள்.

இப்படி பூமியையே காப்பாற்றி, பூமிக்கே ஆதாரமாக இருக்கும் உங்களை, இவர்கள் நன்றியுடன் நினைத்து பார்க்காமல் இருக்கிறார்கள்.

ஒரு சமயம் தேவர்களுக்கு 'அம்ருதம் வேண்டும்' என்று ஆசைப்பட்டு உங்களிடம் வந்து சரணாகதி செய்தார்கள்.


நீங்களே இவர்களுக்காக 'மந்திர மலையை தூக்கி கொண்டு வந்து, 
பாற்கடலில்'
கடையுமாறு சொன்னீர்கள்.
கடையும் பொழுது மலை கடலில் உட்கார்ந்து விட, உடனே கூர்ம அவதாரம் செய்து மலையை முதுகில் தாங்கி, கடையுமாறு சொன்னீர்கள்.

 

'பெருமாளுக்கு முதுகு வலிக்குமே!! இப்படி கடைந்தாவது அம்ருதம் நாம் சாப்பிட வேண்டுமா?'
என்று ஒரு தேவனுக்காவது தோன்றியதா? இல்லையே !!

அம்ருதம் வருகிறதா?... அம்ருதம் வருகிறதா?.. 
என்று தானே பார்த்து கொண்டு இருந்தனர்.

இவ்வளவு கிருபை செய்கிறீர்களே. 
யாருக்காவது நன்றி இருக்கிறதா?

'ரூபத்தை கடந்த பரவாசுதேவனான நீங்கள், திருமேனி எடுத்து கொள்வதே, பிறருக்கு உதவி செய்வதற்கு தான்' என்று அறிகிறேன்.

ஹிரண்யகசிபு 14 லோகங்களையும் (ப்ரம்ம லோகம் முதல் பாதாளம் வரை) தன் தவ வலிமையாலும், உடல் வலிமையாலும் கைப்பற்றி விட்டான்.

யாரும் இவனை ஒன்றுமே செய்ய முடியாத அளவுக்கு சக்தி பெற்று இருந்தான்.

இவன் ஒருவனே 71 சதுர் யுகம் ஆட்டி வைத்தானே. 
எந்த தேவனுக்காகவாவது சக்தி இருந்தால், ஹிரண்யகசிபுவை எதிர்த்து இருக்கலாமே?

ப்ரம்மா முதல் அனைத்து தேவர்களும் பொட்டி பாம்பாக அடங்கி இருந்தார்களே, இவனிடம்.

பிரகலாதன் வரும் வரை, தேவர்கள் அனைவரும் "ஹிரண்யன் அடிப்பானே!" என்று பயந்து
"ஹிரண்யாய நம: ஹிரண்யாய நம:"
என்று சொல்லிக்கொண்டு அமைதியாக இருந்தனரே !!

இப்படி ஒருவனும் ஹிரண்யனை அடக்க புறப்படவில்லை.



அங்கும், நீங்கள் தானே, கடைசியில் பிரகலாதனுக்காக நரசிம்மமாக வந்து, ஹிரண்யனை வதம் செய்து, தேவர்களையும் வாழ வைத்தீர்கள்.

புராணங்களை எடுத்து பார்த்தால், ஆதியில் இருந்து அந்தம் வரை உங்கள் புகழ் தானே தெரிகிறது.

'உலக நிர்வாக பொறுப்பை' நீங்கள் அல்லவோ வைத்துள்ளீர்கள்.
திடீரென யாராவது வந்து, நான் ஈஸ்வரன் என்று சொல்லி விட முடியுமா?

பிரகலாதன் பேரன் பலி சக்கரவர்த்தியும் அவன் ஆட்சி காலத்தில் பூலோகம் முதல் ப்ரம்ம லோகம் வரை கைப்பற்றி விட்டான்.

தேவர்கள் மீண்டும் வாழ இடம் இல்லாமல் தவித்தனர்.
இந்திரனுக்கு அழ கூட தெம்பு இல்லாமல், அவன் தாய் 'அதிதி' உங்களிடம் வந்து அழுது பிரார்த்தித்தாள்.

அப்பொழுதும் நீங்கள் தானே வாமன மூர்த்தியாக அவதாரம் செய்து பலி சக்கரவர்த்தியையும் தன் பக்தனாக்கி, உலகை மீட்டு, இந்திரனுக்கு மீண்டும் சொர்க்க லோகத்தை கொடுத்தீர்கள்.

மண்ணை தானமாக பலி சக்கரவர்த்தியிடம் தானமாக பெற்று, அதற்கு பதிலாக, தன்னையே அவனுக்கு கொடுத்து விட்டீர்களே!!.
'சுதலம்' என்ற பாதாள லோகத்தில், அவனுக்கு இடம் கொடுத்து, அவன் மாளிகையில் நீங்களே கதையை வைத்துக்கொண்டு 'கதாதரனாக' காவல் காத்து கொண்டு இருக்கிறீர்களே?

வயலில் பயிர் செய்த தானியங்களை, ஆடு மாடுகள் மேய்ந்து விடாமல் இருக்க, வேலி அமைப்பது வழக்கம்.

ஆனால் வேலியே பயிரை நாசம் செய்வது போல, ஒரு சமயம், மக்களை காப்பாற்ற வேண்டிய க்ஷத்ரியர்கள் (armed protection force) வலுத்து போய், அவர்களே வீடுதோறும் புகுந்து, கொள்ளை அடித்து, மக்களை கொன்று, அராஜகம் செய்கிறார்கள் என்றதும்,
நீங்களே 'பரசு-ராமராக' அவதாரம் செய்து, அதர்மம் செய்யும் க்ஷத்ரியர்கள் அனைவரையும் 21 தலைமுறைகள் நிர்மூலமாக்கி, அவர்கள் கொட்டத்தை அடக்கி, மீண்டும் அவர்களை, அவர்கள் தர்மத்தில் இருக்க செய்தீர்கள்.

சாதுக்களான மக்களை காப்பாற்றவும் நீங்கள் தானே வர வேண்டி இருக்கிறது.

'கோடாலி, சூலம்' என்று எத்தனை தெய்வங்கள் வைத்து உள்ளன.
அதை வைத்துக்கொண்டு, உலகத்தில் அதர்மம் தலைவிரிக்கும் போதும், பயன்படுத்தாமல், ஒன்றும் செய்யாமல் இருந்தனரே.

கோடாலி எடுத்து, நீங்கள் வந்து தானே மக்களை காப்பாற்ற வேண்டி இருக்கிறது.

தர்மம் வீழ்ச்சி அடையும் போது, எந்த தெய்வமும் "தர்மம் இப்படி பட்டு போய் விட்டதே!!" என்று கவலை படுவதாக கூட தெரியவில்லையே!!

அதே சமயம் "இந்திராய ஸ்வாஹா"
என்று தர்ம ரீதியாக யாராவது ஆஹுதி கொடுத்தால் மட்டும், அதை பெற்று கொள்ள வருகின்றனர்.

'தர்மம் அழிந்து போகிறதே! காப்பாற்ற வேண்டுமே!' என்றால் மட்டும், நீங்கள் தான் வர வேண்டி இருக்கிறது. வேறு எவரும் வருவதில்லை.

இப்படி எதற்கும் தாங்களே வந்து காப்பாற்ற வேண்டி இருக்க, பிற தேவதைகளையும் தன் இஷ்ட தெய்வமாக வழிபடுகின்றனரே!! ஜனங்கள்.

அப்படி என்ன தான் இந்த தெய்வங்கள் இவர்களுக்கு அனுக்கிரகம் செய்து விட்டனரோ? என்று தெரியவில்லை.

மற்ற தெய்வங்களை வணங்கும் இவர்களுக்கு, பரதெய்வமான உங்களின் குண விசேஷங்கள் என்ன?
மற்ற தெய்வங்களின் குண விசேஷங்கள் என்ன? என்பது தெரியவில்லையே!

இப்படி மற்ற தெய்வங்களையும் வழிபடும் இவர்கள், நீரே இவர்களின் ஆத்மாவுக்கு சொந்தக்காரன் என்று அறிந்து கொள்ளவில்லையே!!

காம்யார்த்தமான (பலனை எதிர்பார்த்தே) பக்தி செய்பவர்களாகவே பெரும்பாலும் இருக்கின்றனர்.

"அந்த தேவதையை வழிபட்டால் உடனே பலித்து விடும்" என்று கேள்விப்பட்டால் கூட, அந்த தெய்வத்தின் பக்கம் ஓடி விடுகின்றனர்.

எனக்கு இக லோக சௌக்கியங்கள் எதுவும் வேண்டாம்.
எனக்கு 'உங்கள் சரணத்தில் பக்தியே நிலைக்குமாறு' செய்யுங்கள்.

என்னிடத்தில் தியான யோகமும் இல்லை, கர்ம யோகமும் இல்லை, ஞான யோகமும் இல்லை.

தகுதி பார்க்காமல், நீங்கள் யாரையும் ஏற்றுக்கொள்வீர்கள்! என்றும் மட்டும் அறிவேன்.

உங்கள் பெருமை அறியாமல், நீங்களே இந்த ஜீவனுக்கு (ஆத்மாவுக்கு) சொந்தக்காரர் என்றும் தெரியாமல், பிற தெய்வங்களையும் வழிபடுபவர்களை நான் குறையாக சொல்லவில்லை.

அவரவர் பக்குவத்தை பொறுத்து, அவரவர்கள் பக்தி செய்கின்றனர் என்று அறிகிறேன்.

ஏதோ ஒரு அல்ப பலனுக்காக, ஏதோ ஒரு தெய்வத்திடம் பக்தி செய்கின்றனர்.

என்னை பொருத்தியவரை ஆதி தேவனான உங்களை தவிர, வேறு தெய்வம் எனக்கு தெரியாது.

என்னுடைய கண் பார்வை கூட வேறு ஒரு தெய்வத்திடம் திரும்புவதில்லை."
என்று சொல்லி, கை குவித்து நின்று கொண்டிருந்தார் நாரதர்.

பொதுவாக, ஜனங்களோடு ஜனங்களாக இருந்தால், எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியாது.
கொஞ்சம் மாடியில் ஏறி நின்று பார்த்தால், அந்த தெருவில் போகும் எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியும்.

'பூலோகத்தில் தனக்கு ஒரு ஏழு அடுக்கு மாடி அமைத்துக்கொண்டு, அங்கு நின்று கொண்டால், எல்லோரையும் பார்க்கலாமே'
என்று சங்கல்பம் செய்தார் பாற்கடலில் உள்ள எம்பெருமான்.




கண் மலர்ந்து பார்த்த, எம்பெருமான், ஆதிசேஷன் மேல் சாய்ந்து கொண்டே பேசலானார்,
"நாரதா ! பூலோகத்தில் அவதாரம் செய்து கொஞ்சம் விளையாடி விட்டு வரலாம் என்று நினைக்கிறேன்.
எனக்கு பூலோகத்தில் ஒரு தகுந்த இடம் பார்த்து சொல்.

எல்லோரும் காம்யார்த்த பக்தியே செய்து கொண்டு, என்னிடம் பக்தி செய்வதை கூட விட்டு விட்டு, ஏதேதோ தெய்வங்களை வழிபடுகிறார்கள் என்று குறைபட்டு கொண்டீர்கள்.

அவர்கள் மேல் தோஷம் இல்லை. அது என் தோஷம் தான், நாரதா!

காரணம், நான் பொதுவாக காம்யார்த்த (பலனை எதிர்பார்த்து) பக்தி செய்பவர்களிடம் முகம் கொடுக்காமலேயே இருக்கிறேன்.

அதனாலேயே அவர்களும் வேறு தெய்வங்களிடம் சென்று விடுகின்றனர்.

காம்யார்த்த பக்தி, பிரார்த்தனைக்கு முகம் சுளிக்காமல், எப்பொழுதும் பிரசன்னமாக இருந்து கொண்டே இருந்தால், என்னிடமே இவர்கள் அனைவரும் திரும்பி வருவார்கள்.

ஆதலால், நீங்களே ஒரு ஏற்ற இடத்தை பூலோகத்தில் கண்டுபிடித்து சொல்வீர்கள் என்றால், அங்கேயே நான் அவதாரம் செய்ய நினைத்துள்ளேன்.

எனக்கு வைகுண்டம், க்ஷீராப்தி கூட முக்கியமில்லை.
நான் நிரந்தரமாக பூலோகத்திற்கு வர சங்கல்பித்து உள்ளேன்.

நான் பூலோகத்திற்கு வந்த பிறகு, இந்த சம்சார கடலில் தத்தளிக்கும் ஜனங்கள், என்னை பார்த்ததும், 'என்ன செய்கிறார்கள்?' என்று பார்க்க போகிறேன்.

'கோவிந்தா... கோவிந்தா...'
என்று அனைவரின் வாயிலும் என் நாமத்தை வரவழைத்து, காம்யார்த்த பலனையும் கொடுத்து, மோக்ஷமும் கிடைக்க அனுக்கிரகம் செய்கிறேன்."

என்றார் வைகுண்டபதி.

நாரதர், "என்னை போய் பூலோகத்தில் தகுந்த இடம் எது என்று சொல்ல சொல்கிறீர்களே?" என்றார்.

மகாவிஷ்ணு, சிரித்து கொண்டே, "நீர் மூன்று உலகங்களிலும் சுற்றுபவர் ஆயிற்றே. உமக்கு தெரியாத இடங்களே கிடையாது.
பூலோகத்துக்கு வந்து விட போகிறேன். உம்மை கேட்காமல் யாரிடம் கேட்பது?
" என்றார்.

நாரதர், "பாற்கடலில் இருக்கும் இந்த திவ்ய ரூபத்துடன் இப்படியே பூலோகம் வர சங்கல்பித்து உள்ளீர்களா?" என்று ஆச்சரியம் பொங்க கேட்க,

மகாவிஷ்ணு, "நான் இங்கு பாற்கடலில் இருப்பதை போலவே பூலோகத்திற்கு வர போவதில்லை.
பூலோகத்திற்கு ஏற்ற, அர்ச்சா திருமேனியுடன் அவதாரம் செய்ய சங்கல்பித்து உள்ளேன்.

க்ஷீராப்தியில் என் வ்யூஹ அவதாரத்தை, ஞானியான ரிஷிகளும், ப்ரம்மா, ருத்ரன், தேவர்கள், கிண்ணரர்கள் மட்டுமே பார்க்க முடியும்.
அஞானிகள், பூலோகவாசிகள் இங்கு வந்து பார்க்க முடியாது.

'அஞானிகள் கூட என்னை பார்க்க வேண்டும்' என்பதால், அர்ச்சா திருமேனியுடன் பூலோகத்தில் அவதரிக்க உள்ளேன்" என்றார்.

இதை கேட்ட நாரதர் மேனி சிலிர்த்து எம்பெருமானின் கருணையை நினைத்து கண்ணீர் விட்டார்.

நாரதர் பேசலானார்,
"உங்கள் கிருபைக்கு எல்லையில்லை.
நீங்கள் மத்ஸ்ய, கூர்ம அவதாரங்கள் செய்த போதே, ஏன் இப்படி பெருமாள் தன்னை வருத்தி கொண்டு தானே அவதாரம் செய்கிறார்?
என்று கூட வருந்துவேன்.

இப்படி இருக்க, 'ஒரு விக்ரஹம் போல அர்ச்ச அவதாரம்  செய்து வருவேன்' என்று சொல்கிறீர்களே?

வைகுண்டத்தையும் விட்டு விட்டு, இந்த ஆனந்த ஸ்வரூபனான மஹாவிஷ்ணு ரூபத்தையும் விட்டு விட்டு, ஒரு அசேதனமான (அசையாத) கல் போன்று அவதாரம் செய்வேன் என்கிறீர்களே?"
என்று வருத்தப்பட்டார்.

உடனே பகவான்,
"நாரதா ! நான் கொஞ்சம் சைதன்யம் இருக்கும்படியாக வந்தால் கூட, எவ்வளவு தான் பொறுமையாக இருந்தாலும், சாஸ்திரத்தை மீறி என் முன்னே நடக்கும் அபசாரங்களை, மன்னிக்க முடியாமல் போய் விடும்.

நான் கொஞ்சம் சைதன்யம் தெரியும் படியாக வந்தாலும், உணர்ச்சி என்பது ஏற்படுமல்லவா?

எந்த அபசாரங்கள் செய்தாலும், 'அபசாரங்களுக்கு தண்டனை என்னும் உணர்ச்சி கூட என்னில் வெளிப்பட கூடாது' என்பதால்,  என்னை கல்லாக்கி கொண்டு பூலோகத்தில் அவதாரம் செய்வேன்.

'கருணை ஒன்றே' செய்ய வேண்டும்.
அபசாரங்கள் செய்தாலும், அதை பொருட்படுத்தாமல் இருக்க, அர்ச்சா திருமேனியே சிறந்தது.

அர்ச்சா திருமேனியாக இல்லாமல், நான் விபவ அவதாரமாகவே செய்தால், எல்லையில்லாமல் செய்யும் அபசாரங்களை பொறுத்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது.

விபவ அவதாரம் செய்து வந்தால், அபசாரத்தை கண்டு கொஞ்சமாவது கோபம் வந்து விடும்.

ஆதலால், நான் ஒரு சிலா மூர்த்தியாக என்னை ஆக்கிக்கொண்டு கலியில் அவதாரம் செய்வேன்.
அதற்காக சிலையாகவே இருந்து விடாமல், சிலை ரூபத்திலிருந்து கொண்டே அனைவரையும் பார்த்து, அணுகிரஹம் செய்து கொண்டே இருக்க போகிறேன்.

நான் பார்க்க கல் போல அவதாரம் செய்தாலும், அளவு கடந்த கருணையை வழங்குவேன்.

கல் போல நான் அவதாரம் செய்வதற்கு காரணமே, ஜனங்களின் அபசாரங்களை சகித்து கொள்ளத் தான்.

என் மீதோ, என் எதிரோ எத்தனை அபசாரங்கள் நடந்தாலும், அதை பொருட்படுத்தாமல் கருணை செய்ய, துளிகூட உணர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டும் என்பதாலேயே, நான் அர்ச்ச அவதாரம் செய்ய சங்கல்பித்தேன்.

அர்ச்ச அவதாரமாக இருந்தும் அளவு கடந்த கருணையை பொழிவேன்."
என்று பகவான் சொல்ல,

"பூலோகத்தில், 'சுவர்ணமுகி' என்ற நதிக்கரை ஓரம், கிழக்கு பாரத கடலுக்கு அருகே மேற்கு பாகத்தில் உள்ள பிரதேசம் ஏற்ற இடமாக உங்கள் திருவிளையாடலுக்கு இருக்கும்."
என்று பகவான் அவதாரத்துக்கு ஏற்ற இடத்தை நாரதர் சொன்னார்.

பெருமாள் அவதரிக்க இப்படி இடத்தை சொன்னதை கேட்ட ஆதிசேஷன், "தனக்கு ஏதாவது இதில் கைங்கர்யம் உண்டா?"
என்று எதிர்பார்க்க,
பகவான் தான் படுத்திருக்கும் ஆதிசேஷனை பார்த்து,
"எல்லா விதத்திலும் எனக்கு ஆட்பட்டவன் நீ.
நீ முதலாக பூலோகத்துக்கு சென்று, அங்கு பர்வதமாக (மலையாக) இரு. நான் அங்கு வந்து திருவிளையாடல் செய்கிறேன்.
"
என்று ஆதிசேஷனை பூலோகத்திற்கு அனுப்பினார் பகவான்.

ஒரு பாம்பு நெளிந்து நெளிந்து, பார்ப்பதற்கு மேடு பள்ளம் போல தோன்றுவது போல, ஒரு மலையாக தோன்றிய ஆதிசேஷன், நெளிந்து நெளிந்து ஏழு மலைகளாக ஆகி, சேஷாத்ரி (ஆதிசேஷன் மலை) என்ற பெயருடன், எம்பெருமான் அவதார காலத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

சர்வ விதமான கைங்கர்யத்தையும் செய்பவர் என்பதாலேயே இவருக்கு 'ஆதிசேஷன்' என்று பெயர்.

'தான் ஸ்வாமி இல்லை, தான் எம்பெருமானின் சொத்து'
என்று இருப்பதால் இவருக்கு "சேஷன்" என்று பெயர்.

இவரே எம்பெருமானின் முதன்மையான சொத்தாக இருப்பதால், இவரை "ஆதிசேஷன்" என்கிறோம்.

ஆதிசேஷன் எம்பெருமானுக்கு எப்படி எல்லாம் சேவை செய்கிறார்? என்று பார்க்கும் போது, ஆதிசேஷனின் பெருமை நமக்கு புரியும்.

"ஸ்ரீவைகுண்டத்தில்" எம்பெருமான் பரவாசுதேவனாக இருந்தால், இவர் அமர்வதற்கு தானே 'சிம்மாசனம்' ஆகி விடுகிறார்.

"பாற்கடலில்" எம்பெருமான் வ்யூஹ அவதாரம் செய்து மகாவிஷ்ணுவாக இருந்தால், இவர் படுத்தால், தானே 'பஞ்சுபடுக்கை' ஆகி விடுகிறார்.

எம்பெருமான் நடந்து சென்றால், தானே அவருக்கு 'குடையாகி' விடுகிறார்.
(கிருஷ்ண அவதாரம் செய்த போது யமுனையை கடக்கும் போது குடையானார்)

எம்பெருமான் நின்றால், தானே அவர் திருவடிக்கு 'பாதுகை' ஆகி விடுகிறார்.
(ஸ்ரீனிவாசனாக பெருமாள் நிற்க  சேஷாத்திரி (திருமலை) ஆனார்)

இப்படி

  • சர்வ தேச (எந்த இடத்திலும்),
  • சர்வ கால (எந்த சமயத்திலும்),
  • சர்வ அவஸ்தைகளிலும் (எந்த நிலையிலும்)

எம்பெருமானுக்கு சர்வ கைங்கர்யமும் (எந்த சேவையும்) செய்யக்கூடியவர் ஆதிசேஷன்.

எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவர்கள், ஆதிசேஷனை போல ஆசையோடு செய்ய வேண்டும்.

ஏழுமலைகளாக 'முதல் யுக'த்திலேயே தோன்றிவிட்ட ஆதிசேஷன், "சேஷாத்ரி" என்ற பெயருடன் எம்பெருமான் அவதாரத்திற்கு கலியுகம் வரை காத்து கொண்டிருந்தார்.

ஆதிசேஷன் "சேஷாத்ரி" என்ற 7 மலையாக ஆகி இருந்தார். 

காலப்போக்கில் ஒவ்வொரு மலைக்கும் தனி பெயர் ஏற்பட்டது. 

1. சேஷாத்ரி (உண்மையான பெயர்)

2. வ்ருஷபாத்ரி (வ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்ற மலை)

3. சிம்மாத்ரி (நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த இடம்)

4. அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த மலை)

5. கருடாத்ரி (அம்ருத கலசம் கருடன் கொண்டு வந்த போது, அமர்ந்த மலை)

6. வெங்கடாத்ரி (பாவங்களை பொசுக்கும் மலை, வெங்கடேச பெருமாள் இருக்கும் மலை)

7. நாராயணாத்ரி (நாராயண பட்டருக்கு வைகானச முறைப்படி பூஜை செய் என்று உபதேசத்த மலை)

"அத்ரி" என்றால் மலை என்று அர்த்தம்.

ஆதிசேஷன் எத்தனை நீளமாக படுத்தார்? திருமலையின் நீளம் என்ன?

 

ஆதிசேஷனின் தலை (சிரசு) ஆரம்பிக்கும் இடத்தில், 'காளஹஸ்தி' என்ற க்ஷேத்ரம் உள்ளது.

ஆதிசேஷனின் இதய பகுதியில் அமைந்த க்ஷேத்ரமே "அஹோபிலம்".

ஸ்ரீசைலம் என்ற இடத்தில் ஆதிசேஷனின் வால் பகுதி முடிகிறது

அந்த பாம்பின் வளைந்து இருக்கும் தலையின் உச்சத்தில் ஆதிசேஷன் தரித்து இருந்த நாக ரத்தினத்தின் உச்சத்தில், வெங்கடேசபெருமாள் தன்னை வெளிக்காட்டி, அந்த சிரசையே "வெங்கடாத்ரி" என்ற ஒரு மலையாக ஏற்று வீற்றிருக்கிறார். 

காளஹஸ்தி ஆரம்பித்து, ஸ்ரீசைலம் வரை ஆதிசேஷன் படுத்தார் என்றால், ஏழு மலைகளின் நீளம் நமக்கு புரியும்.

பூலோகத்திற்கு கொண்டு வந்து விட்டார் ஆதிசேஷன்.

இப்படி அதி ஆச்சர்யமாக எம்பெருமான் வருவதற்காக படுத்து விட்டார் ஆதிசேஷன்.

இதை பார்த்த கங்கை, இந்த திருமலைக்கு ஒரு வெள்ளை கொடி பறக்க விடுவது போல, ஆகாச கங்கையாக பொழிய ஆரம்பித்தாள்.

கங்கையே வந்தவுடன், ஏழு மலையையும் சூழ்ந்து கொண்டு அனைத்து புனிதமான தீர்த்தங்களும் ஆங்காங்கே உருவானது.

மலையே செழிப்பு நிறைந்து, பூக்களும், மரங்களும் நிறைந்த பசுமையான சோலை ஆனது. திருமலையே, எம்பெருமானை வரவேற்க காத்திருந்தது.

மலையாக பார்க்காமல், ஆதிசேஷனாக பார்க்கும் போது தான், பக்தன் எப்படி எல்லாம் கைங்கர்யம் செய்கிறான்? என்பது புரியும்.

காற்றில் மரங்கள் யாவும் அசைவதை பார்த்தால், ஆதிசேஷனின் ஆயிரம் தலைகள் அசைவது போல தோன்றுமாம் பக்தனுக்கு.

ஏழு மலையையும்,  வெண்மையான மேகங்கள் சூழ்ந்து வருவதை பார்த்தால், க்ஷீராப்தியில் இருந்த பாற்கடல், 'ஆதிசேஷனும் கிளம்பி விட்டார், எம்பெருமானும் கிளம்பி விட்டார், இனி வைகுண்டத்தில் எனக்கு என்ன வேலை?'
என்று திருமலைக்கு வந்து விட்டதோ! என்று தோன்றுமாம் பக்தனுக்கு.

'வைகுண்டத்தில் இருந்து ஆதிஷேஷனே திருமலையாக வந்து விட்டார்' என்று உணர்ந்த ரிஷிகள், தங்கள் ஆஸ்ரமங்களை கலைத்து விட்டு, திருமலை வந்து பகவத் தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

மயில்களும், குயில்களும் ஆனந்தமாக கானம் செய்து விளையாடியது.




காள என்றால் சிலந்தி,
ஹஸ்தி என்றால் யானை.
இந்த ஸ்தலத்தில் யானையும், சிலந்தியும் சிவ பூஜை செய்த காரணத்தால், இந்த இடத்திற்கு பிற்காலத்தில் "காளஹஸ்தி" என்ற பெயர் உண்டானது.
காளஹஸ்தி 'சிவ' ஸ்தலமாகவும் உள்ளது.

ஸ்ரீசைலம் என்பதும் மற்றொரு சிவக்ஷேத்ரம். இந்த சிவக்ஷேத்ரத்தில், மருத மரமாக (அர்ஜுன மரம்) சிவபெருமானே இருக்கிறார். 
பார்வதி தேவி இங்கு மல்லிகை கொடியாக ஆகி, அந்த மருத மரத்தை சுற்றிக்கொண்டு இருக்கிறாள்.
இதனால் இங்கு சிவபெருமானுக்கு "மல்லிகார்ஜூன்" என்றும் பெயர்.

இயற்கையாக தோன்றிய மலை அல்ல திருமலை.  ஆதிசேஷனே மலையாக இருக்கிறார். 

இங்கு வசிக்கும் மிருகமும், மனிதர்களும், பறவைகளும் என்ன பிரார்த்தனை செய்து இப்படி திருமலையில் வாசம் செய்கிறார்களோ? நமக்கு தெரியாது.

மகான்கள், ஆழ்வார்கள் எல்லோரும் இந்த கண்ணோட்டத்தில் தானே திருமலையை பார்த்தனர். பார்க்கின்றனர்.

ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர் 'அனந்தாழ்வார்' திருமலையில் பூ கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.
ஒரு சமயம், அனந்தாழ்வார் தன் சிஷ்யர்களுடன் 'மேல் நாட்டு திவ்ய தேசங்கள் ஆரம்பித்து, அனந்த பத்மநாபன் வரை சேவிக்கலாம்' என்று புறப்பட்டார்.

'பயணத்திற்கு, திருமலை பிரசாதமே எடுத்துக்கொள்ளலாம்!' என்று ஒரு மூட்டையில் பிரசாதம் எடுத்துக்கொண்டு, கிளம்பினார்கள்.

கிளம்பி வெகுதூரம் சென்ற பின், 'சரி சாப்பிடலாம்' என்று நினைத்து, பிரசாத மூட்டையை அவிழ்க்க, அதில் எறும்புகள் இருப்பதை பார்த்தார், அனந்தாழ்வார்.

அவர் சிஷ்யர்கள்,
"எறும்பை தட்டி விட்டு சாப்பிடலாமா? இல்லை அப்படியே பிரசாதத்தை வைத்து விட்டு பயணத்தை தொடரலாமா?"
என்று கேட்க,
அனந்தாழ்வார்,
"இந்த எறும்புகள் எல்லாம் திருமலையில் இருந்தே வந்திருக்கிறது.
'எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ?' (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் செய்த பிரார்த்தனை, இந்த எறும்புக்கு கிடைத்துள்ளதே!

இது நாள் வரை, திவ்யதேச வாசம் செய்த எறும்புகளை, இப்படி ஏதோ ஒரு கிராமத்தில் விட்டு விட கூடாது.
இவையெல்லாம் எந்த ஜீவனோ நமக்கு தெரியாது.

திருமலை வாசம் பெற்ற இந்த ஜீவனை, நாம் மீண்டும் திருமலை சென்று, அங்கேயே இந்த பிரசாதத்தை வைத்து விட்டு நம் பயணத்தை மீண்டும் தொடர்வோம்"
என்று சொல்லி அவர்கள் யாத்திரையை நிறுத்து விட்டு, மீண்டும் திருமலையில் ஏறி, அந்த எறும்புகளை பிரசாத மூட்டையுடன், மீண்டும் ஸ்வாமி புஸ்கரணி தீர்த்தம் அருகே,  திருமலையிலேயே விட்டு விட்டு, மீண்டும் யாத்திரையை தொடர்ந்தனர்.

நம் பூர்வ ஆச்சாரியர்கள் எப்படி திருமலையை பக்தியுடன் பார்த்தனர்? அங்குள்ள ஜீவராசிகளை எப்படி மதித்து உள்ளனர்? என்று புரிகிறதே.

திருமலையை மற்ற  இயற்கையாக தோன்றிய மலை போலவா ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.

ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும்.
அந்த பக்தி நமக்கும் வரும்.

ஆதிசேஷனே ஏழு மலையாக இருக்கும் போது,
பரவாசுதேவனே திருமலையப்பனாக நின்று கொண்டு இருக்கும் போது,
இங்கு வசிக்கும் விலங்குகளும், பறவைகளும் மட்டும் சாதாரணம் என்று நினைக்க தோன்றுமா? ஒரு பக்தனுக்கு.

ஆழ்வார்கள் போன்று நமக்கும் பக்தி வர ஆசைப்பட வேண்டும்.

"எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ?" (பெருமாள் திருமொழி)
என்று குலசேகராழ்வார் பாடும் பொழுது,
இங்கு இருக்கும் செடி, கொடிகளுக்கு கூட மங்களாசாசனம் செய்து விட்டாரே! என்று தோன்றுகிறது.

இங்கு இருக்கும் ஈ, எறும்பு கூட, எந்த மகானோ! என்றல்லவா நமக்கு தோன்ற வேண்டும்.

ஆயிரம் நாக்கு உடைய ஆதிஷேஷனே திருமலையின் மகத்துவத்தை சொல்ல முடியாத போது, 18 புராணங்களும் திருமலையின் மகத்துவத்தை சொல்வது ஆச்சர்யமில்லையே.

ஆதிஷேஷனே, கலியில் ஸ்ரீ ராமானுஜராக 1017CEல் அவதாரம் செய்தார்.

ஒரு சமயம், யதிராஜனாக (சந்நியாசி) ஆன பின்பு, திருமலையில் ஒரு மாதம் தங்கி, அவர் பூர்வ க்ருஹத்தில் மாமாவான "திருமலை நம்பி"யிடம் ராமாயண காலட்சேபம் கேட்கலாம் என்ற ஆசையோடு திருமலை வந்தார்.

"எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனோ"
என்ற ஆழ்வார் பாசுரத்தை எண்ணி,
'திருமலையில் எப்படி கால் வைத்து போவேன்?'
என்று தயங்கி, தன் இரு கால்களையும் மடக்கி, வாழைத்தண்டால் இருக்க கட்டி கொண்டு, தன் முழங்காலால் நடக்க ஆரம்பித்தார்.

'ஸ்ரீ ராமானுஜர் முழங்கால் தேய திருமலை ஏறிக்கொண்டு இருக்கிறார்' என்று கேள்விப்பட்ட திருமலை நம்பி, கீழே இறங்கி ஓடி வந்தார்.

 

 அதற்குள் ராமானுஜர் முதல் கோபுரம் வரை வந்து விட்டார்.

பூர்வ ஆஸ்ரமித்தில் தன் மருமகன் தான் 'ராமானுஜர்' என்றாலும், யதிராஜராக ஆகி விட்ட ராமானுஜரை சேவித்துக்கொண்டே,
"ஏன் இப்படி வர வேண்டும்?" என்று கேட்க,
"தங்களை சேவிக்கலாம் என்று தான் வந்து கொண்டிருந்தேன்"
என்றார் ராமானுஜர்.

"யதிராஜர் இப்படி முட்டுக்கால் தேய வந்தால் இது சாத்தியமா?
சாதாரணமாக காலால் நடந்து வந்து பெருமாளை திருமலை ஏறி வந்து தரிசிப்பதே ஜனங்களுக்கு கடினமாக இருக்கும் போது, தாங்கள் ஆதிசேஷனாக இருக்கும் திருமலை மேல், கால் படக்கூடாது என்று இப்படி கால்களை கட்டிக்கொண்டு, ஏறி வந்தால், யதிராஜரே கால் வைக்க தயங்கினார் என்று தெரிந்தால், ஒருத்தர் கூட திருமலை வந்து எம்பெருமானை தரிசிக்க மாட்டார்களே!!

நீங்கள் திருமலையில் கால் வைத்து நடப்பது தோஷமில்லை.
ஒரு தாயார் தன் மடி மீது குழந்தை வைத்து கொள்ளும் போது, சில சமயம் தன் சின்ன காலால், தாயை உதைத்தாலும், அது அவளுக்கு ஏற்பு உடையதாக இருக்கும்.
அதை அவள் அபசாரம் என்று நினைப்பதில்லை.
அதுபோல,
திருமலையில் கால் வைத்து ஏறினாலும், அது பெருமானுக்கு ஏற்புடையதாக இருக்குமே தவிர அபசாரமாக இருக்காது.
கால் வைத்து வாருங்கள் என்று சொல்ல தான் ஓடிவந்தேன்"

என்றார் திருமலை நம்பி.

"இதை சொல்வதற்கு யாராவது சிறுவனை அனுப்பி இருக்க கூடாதோ.
நான் ஏற்று இருப்பேனே. இதற்கு தேவரீர் தானே புறப்பட்டு வர வேண்டுமா?"

என்று ராமானுஜர் கேட்க,

"திருமலை முழுவதும் தேடி பார்த்து விட்டேன். அடியேனை தவிர சிறுவன் இங்கு கிடைக்கவில்லை.
யாரை பார்த்தாலும் என்னை விட பெரியவராகவே தெரிகிறது.
இவர் என்ன பாக்கியம் செய்து திருமலையில் வாசம் செய்கிறாரோ என்று மனதில் தோன்றுகிறது.
இங்கு பிறந்த ஈ, எறும்பு கூட என்ன பாக்கியம் செய்ததோ என்று தான் தோன்றுகிறது.
யாரை பார்த்தாலும் பெரியவாளாக தோன்றுகிறது."

என்றார்.

ராமானுஜர் பிறகு, திருமலை ஏறி, பெருமானை தரிசித்தார்.

திருமலையை மற்ற  இயற்கையாக தோன்றிய மலை போலவா, ஆழ்வார்கள் பார்த்தனர்? இல்லையே.

ஆழ்வார்கள், ராமானுஜர் பார்த்த கண்ணால், திருமலையை நாமும் பார்க்கும் பொழுது தானே, நமக்கும் திருமலையின் மகத்துவம் புரியும்.

இப்படி ஆச்சர்யமாக ஆதிஷேஷனே ஏழு மலைகளாக ஆகி, எம்பெருமான் வரவுக்காக காத்திருந்தார்.

கலியுகம் ஆரம்பித்த சமயத்தில், பூலோகத்தில் எல்லாம் தயார் நிலையில் இருக்க, க்ஷீராப்தியில் இருக்கும் பரமபத நாதன், திருமலைக்கு புறப்பட தயாரானார்.



Saturday 21 March 2020

ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) நம்பெருமாள் வருவதற்கு முன் நடந்த சரித்திரம். தெரிந்து கொள்ள வேண்டாமா?

உலக ஸ்ருஷ்டி ஆரம்பமான காலம்:
ப்ரம்மாவுடைய மானஸ புத்ரன் தக்ஷன்.
ப்ரம்மாவின் ஆணையை ஏற்று தக்ஷ ப்ரஜாபதி உலக ஸ்ருஷ்டிகளை செய்தார்.
28 பெண் தேவதைகளை ஸ்ருஷ்டி செய்தார்.
இதில் 27 தேவதைகளே 'நக்ஷத்திரங்களாக' ஜொலிக்கின்றனர். மற்றொருவள் பெயர் "அபிஜித்".

"க்ஷத்ர" என்றால் "மங்கக்கூடிய" என்று பொருள்.
"ந-க்ஷத்ர" என்றால் "மங்காத" என்று பொருள்.

உலகில் மனிதர்களை "மங்காத புகழ்" என்று சொல்ல "நக்ஷரம்" என்று சொல்லி பெருமைபட்டுக்கொள்வார்கள்.
ஆனால்,
அனைவரும் ஒருநாள் மங்கக்கூடியவர்களே !




உண்மையில் என்றுமே மங்காத பெருமையுடன் இரத்தின மாலை போல ஜொலிப்பவர்கள் இந்த தேவதைகள்.

27 பெண்களின் பெயர்: (நக்ஷத்ர தேவத்தைகள்)
அஸ்வினி, பரணி, கிருத்திகா (கார்த்திகை),
ரோகினி, ம்ருகசீர்ஷா, ஆத்ரா (திருவாதிரை),
புனர்வசு (புனர்பூசம்),  புஷ்ய (பூசம்), ஆஸ்லேசா (ஆயில்யம்),
மகா (மகம்), பூர்வ பல்குனி (பூரம்), உத்தர பல்குணி (உத்திரம்),
ஹஸ்த (அஸ்தம்), சித்ரா (சித்திரை), ஸ்வாதி (சுவாதி),
விஷாகா (விசாகம்), அனுராதா (அனுஷம்), ஜ்யேஷ்டா (கேட்டை),
மூல (மூலம்), பூர்வ ஆஷாடா (பூராடம்), உத்தர ஆஷாட (உத்திராடம்),
ஸ்ரவண (திருவோணம்), தனிஷ்டா (அவிட்டம்), சதபிஷா (சதயம்),
பூர்வ பாத்ரபதா (பூரட்டாதி), உத்திர  பாத்ரபதா (உத்திரட்டாதி), ரேவதி

தன் 28 பெண்களையும், பாற்கடலில்  தோன்றிய சந்திரனுக்கே மணம் செய்து கொடுத்தார்.
பார்ப்பதற்கே குளிர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கும் சந்திரன், செல்வத்துக்கு அதிதேவதையான மகாலட்சுமிக்கு சதோதரன்
என்ற காரணத்தினாலேயே மனமுவந்து தன் 27 பெண்களையும் கொடுத்தார்.

பெருமாளும், தாயாரும் நமக்கு தாய் தந்தை.
அதன் காரணத்தாலேயே, மகாலட்சுமியின் சகோதரனான சந்திரனை "சந்திர மாமா" என்றும் "அம்புலி மாமா" என்று உறவு சொல்லி அழைக்கிறோம்.
இந்த அதி தேவதைகளே 27 நக்ஷத்திர மண்டலங்களாக, சந்திரனுடன் நமக்கு காட்சி கொடுக்கிறார்கள்.

28 பெண்களை மனம் செய்து கொடுத்தாலும், சந்திரன் ரோகினியிடம் மட்டும் தனி பிரியம் கொண்டிருந்தார்.
மற்ற மனைவிகளிடம் சமமாக பழகாமல் இருந்து வந்தார்.

தங்கள் குறையை தகப்பனாரான தக்ஷனிடம் மற்ற 27 பெண்கள் சொல்ல, மனைவியிடம் பிரியம் இல்லாமல் இருக்கும் சந்திரன் மேல் கடும் கோபம் கொண்டார்,  தக்ஷ பிரஜாபதி.
மாப்பிள்ளையை சபித்தால் யாருக்கு நஷ்டம்?
தன் பெண்களுக்கு தானே நஷ்டம் !

கோபத்தில், சந்திரனை பார்த்து "உன் பொலிவான தோற்றத்தில் க்ஷய ரோகம் (தேய்மானம்) ஏற்படட்டும்" என்று சபித்துவிட்டார்.

சாபத்தால், நாளுக்கு நாள் சந்திரனின் பொலிவு தேய ஆரம்பிக்க, "அமாவாசை வருவதற்குள் நாம் முழுவதும் பொலிவு இல்லாமல் அழிந்து விடுவோம் போல உள்ளதே!!" என்று ப்ருகு முனிவரை சந்திரன் சரண் அடைந்து உபாயம் கேட்டார்.

ப்ருகு சந்திரனை பார்த்து, "நீ உடனேயே பூலோகம் சென்று, அங்கு வாசுதேவனை  ஆராதனை செய். அப்படி செய்தாய் என்றால், உனக்கு இந்த க்ஷய ரோகம் நிவர்த்தி ஆகும்" என்று சொல்ல,

சந்திர தேவன்  பூலோகம் வந்து, தானே ஒரு புண்ணிய தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, வாசுதேவனை குறித்து ஆராதனை செய்ய தொடங்கினார்.

சந்திரனால் ஏற்பட்ட இந்த தீர்த்தத்துக்கு "சந்திர புஷ்கரணி " என்று பெயர் ஏற்பட்டது.
இது காவிரி உருவாவதற்கும் முந்தைய காலம்.
திருவரங்கத்திற்கு நம்பெருமாள் இன்னும் வராத காலம்.

"சந்திர புஷ்கரணி " என்ற தீர்த்தம் அமைத்து, அதன் நான்கு பக்கங்களிலும் மேலும் (உப) சில தீர்த்தங்களும் அமைத்தார் சந்திர தேவன்.

ப்ராச்ய (கிழக்கு) திசையில், நாவல் (ஜம்பு) மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'ஜம்பு தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
ஜம்பு (நாவல்) மரத்துக்கு ஈஸ்வரனாக இருக்கும் சிவபெருமானை அங்கு பிரதிஷ்டை செய்தார். (திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் கோவில்).

தக்ஷிண (தெற்கு)திசையில், புன்னை மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'புன்னாக தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
அங்கு, ப்ருகு முனிவர் சொன்னபடி,  "வாசுதேவனை" பிரதிஷ்டை செய்தார்.

பஸ்சிம (மேற்கு) திசையில், வில்வ  மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'வில்வ தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
அங்கு, தன் சகோதரியான மகாலட்சுமியை பிரதிஷ்டை செய்தார்.

"சந்திர புஷ்கரணி " தீர்த்தத்துக்கு உத்திர (வடக்கு) திசையில், கதம்ப   மரங்கள் நிறைந்த இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'கதம்ப  தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது. அங்கும் புருஷோத்தமனை பிரதிஷ்டை செய்தார்.  (கதம்பனூர் என்றும் கரம்பனூர் என்றும் சொல்கிறோம். திருக்கரம்பனூர் உத்தமர் கோயில்)

சந்திரன் அமைத்த "சந்திர புஷ்கரணி"  என்ற தீர்த்த கரையில் பிற்காலத்தில், த்ரேதா யுகத்தில், விபீஷணனால், கொண்டு வரப்பட்டு, ஸ்ரீ ரங்கநாத பெருமாளே வந்து சேருகிறார்.

சந்திரன் அமைத்த மற்ற தீர்த்தங்களை ஸ்ரீ ரங்கநாதர், பங்குனி மாதம் ஒவ்வொரு தீர்த்தத்துக்கு சென்று தங்கி, ஸ்ரீரங்க எல்லையை தானே காத்து வருகிறார்.
பங்குனி திருநாள் உத்சவம் என்று ஸ்ரீரங்கத்தில் இன்றும் பெருமாள் தன் ராஜ்யத்தை நடத்தி வருகிறார்.

இப்படி பல தீர்த்தங்கள் அமைத்து, பெருமாளை வாசுதேவனாக, ஆராதனை செய்த சந்திர தேவன், தன் க்ஷய ரோகத்தில் இருந்து விடுபட்டு, அமாவாசை முடிந்து சுக்ல பக்ஷத்தில் மீண்டும் வளர்ச்சி அடைந்து விட்டார்.

தக்ஷன் சொன்ன வார்த்தையும் சத்தியம் செய்வதற்காக, கிருஷ்ண பக்ஷத்தில் மட்டிலும் க்ஷத ரோகத்தை அனுபவிக்கிறார்.

வாசுதேவனின் அனுகிரஹத்தால்
, சந்திர தேவனுக்கு ஏற்பட்ட க்ஷய ரோகம் மட்டும் நீங்காமல், தன் மனைவிகளிடத்தில் இருந்த வேற்றுமை உணர்வும் நீங்கியது.
ஸ்ரீ ரங்கத்தில் உள்ள, இந்த சந்திர புஷ்கரணியின் அருகிலேயே வாசுதேவ சன்னதி இருக்கிறது. 
இந்த வாசுதேவன் பெரிய பெருமாள் (ரங்கநாதர்) இங்கு வருவதற்கு முன்பேயே வந்தவர்.

ஸ்ரீ ரங்கத்தில் உள்ள, இந்த சந்திர புஷ்கரணியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு, க்ஷய ரோகங்கள் (தோல் சம்பந்தமான) நிவர்த்தியாகி விடும்.
ரோகங்கள் வருவதற்கான  காரணம் "நாம் செய்த பாபங்களே"
அந்த பாபங்கள் வாசுதேவனின் சாநித்தியத்தாலேயே பொசுங்கி விடும்.

ஸ்ரீரங்கநாதர் வருவதற்கு முன்பேயே வந்தவர் "வாசுதேவன்".
வாசுதேவன் சந்நிதி இன்றும் சந்திர புஷ்கரணி தீர்த்தத்துக்கு அருகிலேயே இருக்கிறது.

வாசுதேவன் சாநித்தியத்துடன் இருக்கும் இந்த சந்திர புஸ்கரணியிலே,
நாம் தீர்த்தமும், முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்தால், கோடி புண்ணியம். 
நம் முன்னோர்கள் எல்லோரும் நல்ல கதியை அடைவார்கள்.


அந்த தீர்த்த கரையிலேயே வாசம் செய்யும் வேத ப்ராம்மணர்களுக்கு, நாம் அன்ன தானம், வஸ்திர தானம், கோ (பசு) தானம், தனம் முதலியவை கொடுத்தால், எந்த காலமும் செல்வம் குறையாத நிலையில் வாழும் பாக்கியம் நமக்கு கிடைக்கும்.




அழிவில்லா செல்வம் தரக்கூடிய புண்ணிய காரியங்கள் இவை.

சந்திரா புஷ்கரணி தீரத்தில், யார் ஜபம், தபசு செய்கிறார்களோ! அவர்களுக்கு சீக்கிரமாக தான் எதிர்பார்த்த பலங்கள் ஸித்தி ஆகிறது.

அனைத்து புண்ணிய நதிகளும், இந்த சந்திர புஷ்காரணியில் வசிக்கிறார்கள்.

அனைவரும் சென்று பார்க்க வேண்டும்.

Friday 3 January 2020

பாசுரம் (அர்த்தம்) - முழுசி வண்டாடிய தண் துழாயின் - திருமங்கை ஆழ்வார். காஞ்சியில் அஷ்டபுஜ பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அனைத்து படைப்புக்கும், உயிர்களுக்கும் ஆதிமூலமாக (root) இருக்கும் ஸ்ரீமந் நாராயணன் கஜேந்திரனை காக்க, எட்டு கைகளுடன், எட்டு ஆயுதங்கள் ஏந்தி வந்தார் காஞ்சிபுரத்தில்.




கஜேந்திரனை முதலையிடமிருந்து காப்பாற்ற ஒரு சக்கரமே போதும்!!
இருந்தாலும் 8 கைகளுடன் வந்து தரிசனம் கொடுத்தாரே பெருமாள்?!
உண்மையில், பெருமாள், தன் அஷ்ட மஹிஷிகளுடன் கஜேந்திரனுக்கு  தரிசனம் தரவே 8 கைகளுடன் வந்தாராம்.
"அர்ச்ச அவதாரமே பெருமாள். அர்ச்ச அவதாரமே போதும்" என்று இருந்தவர் திருமங்கை ஆழ்வார்.

அவர் காஞ்சிபுரம் வந்து அஷ்ட புஜனாய் இருக்கும் பெருமாளை கண்டதும், தானே "பரகால நாயகி" என்ற பெண்ணாகி விட்டார்.

பெருமாள் தன் 8 மஹிஷிகளுடன்,   தன் எதிரே தரிசனம் கொடுக்க,
"அடடா.. யார் இவர்? இவர் போல நாம் யாரையுமே பார்த்ததில்லையே!! ஏற்கனவே 8 மஹிஷிகளுடன் இருக்கும் இந்த பெருமாள், மங்கையான தன்னையும் கரம் பிடிக்க பார்க்கிறாரே!!"
என்று தானும் ஒரு மங்கையாகவே ஆகி, பெருமாளை பார்த்து சொக்கி போய்விட்டார்.
"பெருமாள் எப்படி அவருக்கு காட்சி கொடுக்கிறார்?" என்ற தன் அனுபவத்தை அப்படியே நமக்கும் பாசுரமாக கொடுக்கிறார்.

பாசுரம் மிகவும் அழகானது..




முழுசி வண்டாடிய தண் துழாயின்
மொய்மலர் கண்ணியும்,
மேனி அஞ்சாந்து இழுசிய கோலம் இருந்தவாறும்
எங்ஙனஞ் சொல்லுகேன்!! ஓவிநல்லார் எழுதிய தாமரை என்ன கண்ணும்
ஏந்தி எழில் ஆகமும்
தோளும் வாயும்,
அழகிய தாம் இவர் யார் கொல் என்ன
அட்ட புயகரத் தேன் என்றாரே

பெருமாள் எப்படி அவருக்கு காட்சி கொடுக்கிறார்? என்ற தன் அனுபவத்தை அப்படியே நமக்கும் கொடுக்கிறார்.

பெருமாள் கழுத்தில் துளசி மாலை இருப்பதை, முதலில் கவனித்த பரகால நாயகியாக இருக்கும் திருமங்கை ஆழ்வார், "தண் துழாய்" என்று வர்ணிக்கிறார்.

பெருமாள் அணிந்திருந்த துளசி மாலையிலிருந்து, நறுமணம் எங்கும் பரவி இருந்ததாம்.
பெருமாள் கழுத்தில் இருந்ததாலேயே துளசி துளியும் வாடாமல், பச்சைபசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியை தந்ததால், "துழாய்" என்று மட்டும் சொல்லாமல் "தண் துழாய்" என்ற பதத்தை சொல்லி, "நல்ல தன்மையுடன் கூடிய துளசி மாலையை பெருமாள் அணிந்து இருக்கிறார்" என்று கவனிக்கிறார் ஆழ்வார்.

துளசி மாலையுடன்,
5 விதமான பூக்களை கொண்டு, கண்டு கண்டாக கட்டிய (மொய் மலர் கண்ணி) ஒரு அழகான வைஜயந்தி மாலையும் அணிந்து இருந்தாராம் பெருமாள்.
பெருமாள் அணிந்து இருந்த துளசி மாலையின் நறுமணமும், 5 வித பூக்களால் கட்டப்பட்ட வைஜயந்தி மாலையையும் பார்த்து விட்டு, தேன் குடிக்கும் ஆவலில், அந்த பூக்களின் மகரந்தத்தில் வண்டுகள் ரீங்காரமிட்டு ஆடிக்கொண்டு (முழுசி வண்டாடிய) இருப்பதை பார்த்து விட்டாளாம் இந்த பரகால நாயகி.

இந்த மாலையே இந்த நாயகியின் மனதை மயக்க,
அடுத்ததாக பெருமாள் மேனி எப்படி இருக்கிறது? என்று பார்த்தாளாம்.

கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிக்கு செல்லும் போது, சந்தனம் கொடுப்பார்கள்.
பொதுவாக நாம், சந்தனத்தை தொடுவோம், அதிகபட்சம் கொஞ்சம் நெற்றியில், கொஞ்சம் கைகளில், மார்பில் பூசி கொள்வோம்.

அஷ்ட புஜமாக இருக்கும் இந்த பெருமாளும் சந்தனம் பூசி கொண்டு இருந்தாராம்.. ஆனால் நம்மை போன்று, கொஞ்சம் நெற்றியில், கைகளில் மட்டும் பூசிக்கொண்டு இருக்க வில்லையாம்.
அங்கே இங்கே என்று நாகரீகமாக கை, நெற்றி என்று மட்டும் பூசி கொள்ளாமல், அவர் இஷ்டத்துக்கு முதுகு, கழுத்து என்று வேண்டிய இடத்திலெல்லாம் சந்தனத்தை இழுசி கொண்டு, சந்தன குழம்பு போல நறுமணத்துடன் நின்று கொண்டு, காட்சி கொடுக்க,
"மேனி அஞ்சாந்து இழுசிய கோலம் இருந்தவாறும்"
என்று வர்ணிக்கிறார்.




வெளி பொருட்களான துளசி மாலையும், வைஜயந்தி மாலையும், சந்தனமும் எப்படி இருந்தது? என்று கவனித்து வர்ணித்துக்கொண்டு இருந்த பரகால நாயகி, அவர் மேனி எப்படி இருக்கிறது? என்று சற்று கவனிக்க,
"அந்த திவ்யமான பெருமாளின் திருமேனி அழகை எப்படி சொல்வேன்?" என்று வியந்து,
"எங்ஙனஞ் சொல்லுகேன்?" என்ற சொக்கி நிற்கிறார்.

ப்ரம்மாவின் ஸ்ருஷ்டியில் படைக்கப்பட்ட நம்மையே நன்றாக கவனித்தால் ஏதாவது ஒரு சிறு குறையாவது தென்படும்.
முதுகு லேசாக கூனி இருக்கும்,
புருவங்கள் அழகாக இருக்காது,
ஒரு கண் இன்னொரு கண் போலவே இருக்காது.. இப்படி ஏதாவது ஒரு குறை ப்ரம்ம படைப்பில் இருக்குமாம்.

ஆனால், இந்த பரகால மங்கையின் முன் நின்று காட்சி கொடுக்கும் இவரை பார்த்தால், சாமுத்ரிகா லக்ஷணம் தெரிந்த ஒரு நல்ல ஓவியன் (ஓவிநல்லார் எழுதிய) இவ்வளவு நீளம் கை, இவ்வளவு நீளம் கால், விரல் என்று குறையே இல்லாமல் எழுதிய ஓவியம் போல, அமைப்பாக இருந்தாராம்.

சாமுத்ரிகா லக்ஷணம் இவரை பார்த்து தான் எழுதப்பட்டதோ என்று வியக்கும் அளவுக்கு, அப்படி ஒரு அழகுள்ள இவரின் மேனியை பார்த்து,
தாமரை போன்ற கண்களை, ஓவியத்தில் எழுதியது போல,
ஓவியத்தில் எழுதியது போல மார்பும்,
(என்ன கண்ணும், ஏந்தி எழில் ஆகமும், தோளும் வாயும்)
ஓவியத்தில் எழுதியது போல தோளும்,
ஓவியத்தில் எழுதியது போல வாயும், கொண்ட பெருமாளை கண்டு,
"இப்படி அழகாக ஒருத்தர் இருக்க முடியுமா? யார் இவர்?" என்று, பரகால நாயகி சொக்கி நின்று கேட்க,
(அழகிய தாம் இவர் யார் கொல் என்ன)
பெருமாளே தன்னை "அஷ்டபுஜன்" என்று அறிமுகப்படுத்தி கொண்டு,
(அட்ட புயகரத் தேன் என்றாரே) தன்னை ஆட்கொண்டார்
என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

காஞ்சிபுரம் சென்று அஷ்டபுஜ பெருமாளை தரிசிக்கும் போது, திருமங்கை ஆழ்வார் பாடிய இந்த பாசுரத்தை அவசியம் சேவிக்க வேண்டும்.
மேலும் பாசுரம் அர்த்தத்துடன் அறிந்து கொள்ள "கதியேல் இல்லை நின் அருள் அல்லது"




Tuesday 23 April 2019

அகால மரணம் ஏற்படக்கூடாது என்று ஆசையா? பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பதன் நோக்கம் என்ன?.. பிறப்புக்கும், நோய்க்கும் காரணம் என்ன?

"யாருக்குமே அகால மரணம் ஏற்பட கூடாது"
என்ற அக்கறை நம் ஹிந்து மதத்துக்கு எப்பொழுதுமே உண்டு.
'பிற மதத்தவர்கள் சாக வேண்டும், மகாத்மா காந்தியாக இருந்தாலும், பில் கேட்ஸாக இருந்தாலும், என் மதத்தில் இல்லையென்றால், அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், எல்லோரும் நரகம் போவார்கள்' 
என்று உளராத, உன்னத தர்மம் கொண்டது சனாதன ஹிந்து தர்மம்.


'மோக்ஷம் அடையும் வரை, பிறந்து கொண்டே இருக்கிறான்' என்று மறுபிறவியை காட்டும் தர்மம், நம்முடைய ஹிந்து தர்மம்.

'அப்துல் கலாமும், அன்னை தெரசாவும், பிற மதத்தில் பிறந்தாலும், அவர்கள் செய்த புண்ணிய செயல்களுக்கு சொர்க்கம் தான் போவார்கள், பின் மீண்டும் மண்ணில் ஹிந்து குடும்பத்தில் பிறந்து, மோக்ஷத்தை (பிறவாநிலை) அடைய, பெருமாள் பக்தி செய்வார்கள்'
என்று சொல்லி, 'யாருமே நாசமாக மாட்டார்கள், யாவரும் ஹிந்துக்களே!' என்று சொல்லி, மற்றவர்களை வெறுக்காத உயர்ந்த தர்மம் நம்முடையது.

சில கோவிலுக்கு சென்று வழிபட்டால், அங்கு ரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷமான தெய்வங்கள், 'நமக்கு அகால மரணம் ஏற்படாமல் இருக்க' அணுகிரஹம் செய்வார்கள், என்று பலனாக சொல்லப்படுகிறது.
உதாரணத்திற்கு, 'திருவெள்ளக்குளம்' என்றும் 'அண்ணன் பெருமாள் கோவில்' என்று அழைக்கப்படும் திவ்ய தேசத்துக்கு சென்று (சீர்காழி அருகில் உள்ளது), அங்கு உள்ள 'ஸ்ரீநிவாச பெருமாளை பக்தியுடன் வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், அகால மரணம் ஏற்படாது' என்று பலன்.

வட இந்தியாவில், வெளி நாட்டில், வெகு தொலைவில் இருப்பவர்களால், வயதானவர்களால், இது போன்ற பிரத்யேகமான கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராட முடியாமல் போகலாம்.
'யாருமே அகால மரணம் அடைய கூடாது' என்று வேதம் ஆசைபடுகிறது.
கோவிலுக்கு போக முடியாதவர்களுக்கும், ஒரு வழி சொல்கிறது நம் சனாதன ஹிந்து தர்மம்.

சீர்காழி அருகில் இருக்கும் திருவெள்ளக்குளம் சென்று பெருமாளை தரிசித்து, அங்குள்ள குளத்தில் நீராட முடியாதவர்கள், பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை,
சாளக்கிராம மூர்த்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, எடுத்து கொண்டால் கூட 'அகால மரணம் ஏற்படாது' என்று பலனை வேதமே சொல்கிறது.
இதனால் தான், பெருமாள் கோவிலில், தீர்த்தம் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.
எத்தனை அற்புதமானது நம் ஹிந்து தர்மம்!!

'நமக்கு அகால மரணம் ஏற்பட கூடாது' என்று பெருமாள் ஆசைப்படுகிறார்.
'நீண்ட நாள் வாழ்ந்து கிருஷ்ண பக்தி இவன் செய்ய வேண்டும்' என்று பெருமாள் ஆசைப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளை அருளிகிறார்.


கோவிலுக்குள் வரும் நம் அனைவருக்கும், தீர்த்தம் கொடுத்து, கருணையை வர்ஷிக்கிறார்.
அவர் செய்யும் கருணையை நாம் சிறிது நேரமாவது, நினைத்து பார்க்க வேண்டும்.

ஹிந்துக்கள் செய்யும் எந்த காரியத்திலும் ஒரு உன்னத நோக்கம் உண்டு.
ஹிந்துவாக பிறந்ததே நாம் செய்த மஹா புண்ணியம் அல்லவா!
இந்திய பூமியை தவிர எங்கு பிறந்து இருந்தாலும், ஹிந்து தர்மத்தின் மகிமையை, அழகை உணர்ந்து இருக்க முடியுமா?
இந்திய மண்ணில் பிறந்தும், ஹிந்துவாக வாழாதவர்கள் இந்த ஜென்மத்தில் துரத்ரிஷ்டசாலிகள்.
ஹிந்து தர்மத்தில் வாழும் அனைவரும் பாக்கியாசாலிகள்.

கோவிலில் உள்ள பெருமாள், 'ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள், மகாத்மாக்களால் வழிபட்டவர்கள்' என்பதை நாம் மறந்து விட கூடாது.
'இவர் பேச மாட்டார், வெறும் கல் தானே' என்று நினைத்து விட கூடாது. இழப்பு நமக்குத்தான்.
திருமலையப்பன் பேசும் தெய்வம். நாம் நினைத்ததை நிறைவேற்றி தருவார் திருமலையப்பன்.
இல்லையென்றால், கல்லை பார்க்கவா 6 அறிவுள்ள கோடிக்கணக்கான ஜனங்கள், இந்த நவீன உலகத்திலும், தினமும் மலையேறி மலையேறி, கால் கடுக்க காத்து இருந்து தரிசனம் செய்து கொண்டு இருக்கிறார்கள்?
தெய்வத்திடம் அன்பு (பக்தி) உள்ள நமக்கு, ஸ்ரத்தை (திடநம்பிக்கை) குறைவாக இருப்பதால், நம்மிடம் மறைமுகமாகவும், மனதோடும் பெருமாள் பேசுகிறார்.
மனதில் தோன்றும் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்க்கிறார்.

தெய்வங்கள் ஆழ்வார்களிடம் பேசியது போல, நம்மிடம் பேச, நமக்கு அசைக்க முடியாத 'ஸ்ரத்தையும், பக்தியும்' தேவைப்படுகிறது.
சிவபெருமானும், விஷ்ணுவும் உண்மையான பக்தியுடைய இவர்களிடம் பேசியுள்ளார்கள் என்பதற்கு இவர்களின் "தெய்வ பாசுரங்களே" சான்று.
இன்றும், ஒவ்வொரு கோவிலிலும், பெருமாள் தன் சாநித்யத்தை குறைத்து கொள்ளாமல், ஆழ்வார்கள், மகாத்மாக்களின்  பிரார்த்தனைக்காகவும், ரிஷிகளின் பிரார்த்தனைக்காகவும், இன்று பிரசன்னமாக இருக்கிறார்.




நம் வீட்டில் உள்ள ராம, கிருஷ்ண விக்ரஹங்களுக்கும், சாளக்கிராம மூர்த்திக்கும், உண்மையான பக்தியுடன் (அன்புடன்) அபிஷேகம் செய்து,
அந்த அபிஷேக தீர்த்தத்தையும் நாம் மரியாதையோடு எடுத்து கொண்டால் கூட, அகால மரணம் ஏற்படாது.
தீர்க்க ஆயுசு பெருமாள் அருளால் கிடைக்கும்.
ஒவ்வொரு ஹிந்துக்கள் வீட்டிலும் தெய்வ விக்ரஹங்கள் உண்டு. இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்து வந்தனர். செய்து வருகின்றனர்.
அந்த அபிஷேக தீர்த்தத்தை பக்தியுடன் எடுத்து கொண்டனர்.
இதனால், ஹிந்துக்கள் மனதில் தெய்வ சிந்தனையும் வளர்ந்தது. அகால மரணம் ஏற்படாமல், தெய்வங்கள் அணுகிரஹத்தால், ஆரோக்கியமாக 90 வயது வரை ஆஸ்பத்திரி கால் வைக்காமல் வாழ்ந்தனர்.


கடந்த சில பத்தாண்டுகளாக தான், ஹிந்துக்கள் தடம் புரண்டு ஒடுகிறோம்.
ஒருவரும் தன் வீட்டில் அபிஷேகம் செய்து தெய்வ வழிபாடு செய்வதில்லை.
வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்கள் மரியாதை அற்று இருக்கிறது. இப்படிப்பட்ட செயல்களால், இன்று உள்ள ஹிந்துக்களுக்கு மனதில் தெய்வ சிந்தனையை விட, கீழ் தரமான சிந்தனைகள் பல எழும்புகிறது.
அகால மரணத்தை நோக்கி, பல நோய்கள் இளம் வயதிலேயே வருகிறது.
ஹிந்துக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். தெய்வ பக்தி வளர நாம் முயற்சி செய்ய வேண்டும்.
அகால ம்ருத்யு ஹரணம்,
சர்வ வியாதி நிவாரணம்,
சமஸ்த பாபக்ஷய ஹரம்,
விஷ்ணு பாதோதகம் சுபம்
என்று வேத வாக்கு.
அகால மரணத்தை நீக்க கூடியது,
அனைத்து வியாதியும் போக்க கூடியது,
அனைத்து பாபத்தையும் போக்க கூடியது,
விஷ்ணுவின் பாதத்தில் பட்ட தீர்த்தம் - என்று வேதமே சொல்கிறது.
மஹா விஷ்ணுவின் கால் நகத்தில் பட்டு ஓடி வந்ததால் தான், கங்கை நதிக்கே 'புண்ணியநதி' என்று பெயர் கிடைத்தது என்றால்,
நாம் செய்யும் அபிஷேகம் தீர்த்தம்,
நாம் கோவிலில் பெறும் அபிஷேக தீர்த்தம்,
எத்தனை மகத்துவம் வாய்ந்தது!! என்று புரிந்து கொள்ள முடியும்.

கோவிலில் பெருமாள் தீர்த்தத்தை வாங்கும் போது, 
இடது கையில் துணியை வைத்துக்கொண்டு, அதன் மேல் வலது கையால், ஜாக்கிரதையாக அபிஷேக தீர்த்தத்தை வாங்கி கொள்ள வேண்டும்.
நம்முடைய காலிலேயே தீர்த்தம் சிந்தி விடாமல், பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து வாங்கிக்கொள்ள வேண்டும்.


பெருமாள் அபிஷேக தீர்த்தத்தை, கொடுப்பவரும் ஜாக்கிரதையாக கொடுக்க வேண்டும்.
அகால மரணத்தை தடுக்கும் அருமருந்து என்ற ஞாபகத்துடன், 
கங்கை நதியே இவர் கால் நகம் பட்டதால் தான், புண்ணிய நதியாக ஒடுகிறாள் என்ற ஞானத்துடனும், அபிஷேக தீர்த்தத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவன் 'அல்ப ஆயுசாக போக மாட்டான்'.
"சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)" இருந்தால், நீண்ட ஆயுசு உண்டாகும், எந்த நோயும் சரியாகும்.

'நோய்' வருவதற்கு காரணம் - நாம் செய்த 'பாபங்களே',
'ஆயுள்' குறைவுக்கு காரணமும் - நாம் செய்த 'பாபங்களே'.
'சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)' இருந்து, பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவனுக்கு, 
அவனிடம் உள்ள பாபங்களும் பொசுங்கி போகும் 
என்று வேதமே சொல்கிறது.
அகால ம்ருத்யு ஹரணம்,
சர்வ வியாதி நிவாரணம்,
சமஸ்த பாபக்ஷய ஹரம்,
விஷ்ணு பாதோதகம் சுபம்
என்று வேத வாக்கு.

கோவிலில் நாம் பெற்றுக்கொள்ளும் பெருமாள் 'தீர்த்ததுக்கு' இத்தனை மகத்துவம் உண்டென்றால்,  பெருமாளிடம் சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு) வைக்க நமக்கு என்ன தடை இருக்க முடியும்?


பெருமாளின் பாத தீர்த்ததுக்கு அத்தனை பெருமை உண்டு என்று அறிந்து, "நம் பெருமாள்" என்று ஆசையுடன், நாம் அனைவரும் பக்தி செய்வோம்.
அதே சமயம் மரியாதையுடன் தெய்வ சந்நிதியில், பெருமாள் நம்மை பார்க்கிறார் என்ற கவனத்துடன் செயல்படுவோம்.

வாழ்க ஹிந்துக்கள். கோவில்களே நமக்கு உயிர்.
நம்முடைய பெருமாளை (நம்பெருமாள்) வணங்குவோம்.
நீண்ட ஆயுளுடன் ஹிந்து தர்மத்தில் இருந்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்து கொடுப்போம்.
பொய் மதங்களை துரத்துவோம்.
பொய் மதங்களில் உழலும் அனைவரையும் கிருஷ்ண பக்தி செய்ய அழைப்போம்.

Hare Rama, Hare Krishna - Bhajan 

Sandhya Vandanam - Evening (With Meaning)

Sandhya Vandanam - Afternoon  (With Meaning)



Sandhya Vandanam - Morning (With Meaning)




Saturday 27 October 2018

திருமலையில் மட்டும் பெருமாள் தடையில்லாமல் எப்படி அணுகிரஹம் செய்கிறார்? அலர்மேல் மங்கையான மகாலட்சுமி (அலமேலு தாயார்) எப்படி நமக்கு அனுக்கிரஹம் கிடைக்க உதவுகிறாள்? தெரிந்து கொள்வோமே

அகல கில்லேன் இறையும்
என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய் உலகமூன் றுடையாய்.
என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே
- நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி


"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா"

பொதுவாக, ஜனங்களோடு ஜனங்களாக இருந்தால், எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியாது.
கொஞ்சம் மாடியில் ஏறி நின்று பார்த்தால், அந்த தெருவில் போகும் எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியும்.

தனக்கு ஒரு ஏழு அடுக்கு மாடி அமைத்துக்கொண்டு, அங்கு நின்று கொண்டால், எல்லோரையும் பார்க்கலாமே என்று சங்கல்பம் செய்தார் பாற்கடலில் உள்ள எம்பெருமான்.
ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன், எம்பெருமான் சங்கல்பத்தை உணர்ந்து, ஏழு மலையாக ஆகி பூலோகத்திற்கு வந்து விட்டார்.
உன்னதமான இடத்தில் இருந்தால் தான், கருணையை அனைவருக்கும் வர்ஷிக்க முடியும் என்பதால், திருமலையின் உச்சியில் போய், எம்பெருமான் அர்ச்ச அவதாரம் செய்து நின்று விட்டார்.
கருணையே வடிவானவள் மகாலட்சுமி.
க்ஷீராப்தியில் இருந்து பெருமாள் பூலோகம் வந்து விட, தனக்கொரு இடம் தேடினாள்.

கருணையே வடிவான மகாலட்சுமி திருமலையை விட உயர்ந்த இடத்தை தேடினாள்.
திருமலையை விட உயரமான இடம், எம்பெருமானின் வக்ஷஸ்தலமே என்று, அங்கு போய் அமர்ந்து விட்டாள்.
திருமலையில் எம்பெருமான் வக்ஷஸ்தலத்தில் (பெருமாள் மார்பில்) எப்பொழுதும் பிரியாமல் இருக்கிறாள் மகாலட்சுமி.

மலர்ந்த (அலர்) தாமரைப்பூவின் மேல் அமர்ந்திருக்கும் மகாலட்சுமிக்கு "அலர்மேல் மங்கை" (அலமேலு தாயார்) என்று பெயர்.

இப்படி எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து, இனி ஒரு நொடி பொழுது (இறை பொழுதும்) கூட உங்களை விட்டு பிரிய மாட்டேன் (அகல இல்லேன்) என்று அமர்ந்தாள் அலர்மேல் மங்கையான மகாலட்சுமி.

எம்பெருமானை தனியாக வழிபடுவதை விட, தாயாரையும் சேர்த்து வழிபடும் போது தான், பெருமாள் தடையில்லாமல் அணுகிரஹம் செய்கிறார்.

"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா"
என்று நம்மாழ்வார் அழைக்கும் போது,
'தாயாரை முதலில் சொல்லி, அவளை முன்னிட்டு,  எம்பெருமானிடம் சரணாகதி' செய்கிறார்.

மகாலட்சுமி (ஸ்ரீ தேவி) எம்பெருமான் மார்பில் இருப்பதால் (நிவாசம்), வெங்கடேச பெருமாளுக்கு, "ஸ்ரீனிவாச பெருமாள்" என்றும் பெயர் வந்தது.

எப்படி பகவானை நாம் அணுக வேண்டும்?
எப்படி அணுகினால், பகவான் தடையில்லாமல் நமக்கு அணுகிரஹம் செய்வார்? என்பதை இந்த ஒரு பாசுரமே நமக்கு காட்டி விடுகிறது.

இப்படி திருமலையில், எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து விட்டாளே மகாலட்சுமி!!
இப்படி அமர்ந்தது அவள் சுகத்திற்காகவா? இல்லை பெருமாள் சுகத்திற்காகவா? என்று கேட்டால், இரண்டுமே இல்லையாம்.
நாம் அனைவரும் சுகம் பெற வேண்டும் என்பதற்காக தான், எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து விட்டாளாம் மகாலட்சுமி.

அது எப்படி?
பொதுவாக ஆழ்வார்கள், மற்ற திவ்ய தேசம் சென்று அங்கு இருக்கும் பெருமாளை சேவிக்கும் போது பிரேம பக்தியுடன் கொஞ்சி மகிழ்வார்கள்.
ஆனால் திருமலை வந்து விட்டால் மட்டும், ஆழ்வார்கள் அனைவரும், கதறி அழுது சரணாகதி செய்து விடுகின்றனர்.





நம்மாழ்வார், திருமலையப்பனிடம் வந்து,
"திருவேங்கடத்தானே !
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்று கதறி அழுது சரணாகதி செய்கிறார்.

திருமலையப்பனிடம் வந்தால் மட்டும் ஏன் இப்படி ஆழ்வார்களின் மனோபாவத்தில் கூட வித்தியாசம் தெரிகிறது?
மற்ற திவ்ய தேச பெருமாளும் இவர் தானே?
இருந்தும்,
திருமலையப்பனுக்கு மட்டும் என்ன விஷேசத்தை ஆழ்வார்கள் பார்த்தார்கள்?

பொதுவாக, திருமலையை தவிர்த்து, மற்ற திவ்ய தேசங்களில் பெருமாள் ஒரு சன்னதியில் இருப்பார். தாயார் தனி சன்னதியில் இருப்பாள்.
மற்றும் சில திவ்ய தேசங்களில் பெருமாளும் தாயாரும் ஒரே சந்நிதியில் அருகருகே கூட இருப்பார்கள்.

பொதுவாக தாய்க்கு தான், தன் பிள்ளை தவறே செய்தாலும் கூட, அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், கருணையே செய்ய தோன்றும்.
தாயுள்ளம் மகத்தானது.

பொதுவாக பெருமாள், தகப்பன் ஸ்தானத்தில், ஒரு நீதிபதி ஸ்தானத்திலும் நம்மை பார்ப்பாராம்.
பக்தனே சில சமயம் தவறு செய்தாலும்  பாரப்பட்சம் காட்ட கூடாது என்று நினைப்பாராம்.

பத்ராசல ராமதாஸர், ராமருக்கு கோவில் கட்ட இஸ்லாமிய அரசன் தானிஷாவின் வரி பணத்தை எடுத்து கட்டி விட்டார்.
இதற்கு 12 வருடம் சிறையில் தள்ளி, தினமும் சவுக்கடி கொடுக்க உத்தரவு இட்டான் தானிஷா.
உடம்பெல்லாம் ரத்தம் ஏற்பட்டு, தினமும் சிறையில் அழுது, ராமரிடம் கீர்த்தனைகள் இயற்றினார்.
ராமரோ தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார் என்று ஒரு நீதிபதி போல பேசாமல் இருந்தார்.
கடைசியில் இனி தாளாது என்ற நிலையில், ராமதாசருக்கு சீதையின் நினைவு வர,
"சீதம்மா...  இந்த ராமதாசனை காப்பாற்ற வருமாறு, நீயாவது அருகில் இருக்கும் ஸ்ரீ ராமரிடம் சொல்லம்மா..."
என்று கதற, சீதை ஸ்ரீ ராமரிடம் "இனி ஒரு க்ஷணம் தாமதிக்காமல் காப்பாற்றுங்கள்" என்று சொல்ல,
தானே ஒரு மனிதனாக வந்து, தானிஷாவை பார்த்து, தங்க கட்டிகளாக வரி பணத்தை வட்டியுடன் கட்டி, விடுதலை செய்யுமாறு செய்து மறைந்து விட்டார்.

பெருமாளை மட்டும் நாம் தனியாக பிரார்த்தனை செய்தால், நம் குற்றம் குறை அவருக்கு தெரிவதால், கட்டுப்பாடு இல்லாமல் அணுகிரஹம் செய்ய கொஞ்சம் தயங்குவாராம்.

ஸ்ரீ ரங்கம் உட்பட மற்ற திவ்ய தேச பெருமாள் கூட, தாயார் அருகில் இல்லாமல் இருப்பதால், ஆழ்வார்களுக்கு கூட தடையில்லாமல் அணுகிரஹம் செய்யாமல் இருந்தார்களாம்.

'அணுகிரஹம் குறைவில்லாமல் செய்யலாமே' என்று மற்ற திவ்ய தேச பெருமாளிடம் காரணம் கேட்டால், "இன்னும் இதயம் கணியட்டும்" என்று மற்ற திவ்ய தேச பெருமாள் எல்லோரும்  சொல்வார்களாம்.

ஒரே பெருமாள் தான் என்றாலும், அந்தந்த திவ்ய தேச மகத்துவம் பொருத்து தான் பழகுவார்களாம்.

இப்படி ஏன் அணுகிரஹம் செய்ய மற்ற திவ்ய தேச பெருமாள் எல்லோரும் தயங்குகிறார்கள்? என்று கேட்டால், நமக்காக சிபாரிசு செய்ய தாயார் கூட இல்லை என்பதால் தான்.

எம்பெருமானை நாம் தனியாக சேவிக்கும் போது, நம் தகுதி, நேர்மையை பார்ப்பாராம். இதனாலேயே அணுகிரஹம் செய்ய தயங்குவாராம்.

ஸ்ரீ ராம அவதார சமயத்தில், 'தானும் வனவாசம் வருவேன்' என்று லக்ஷ்மணன் வந்து விட்டார்.
அன்றைய இரவு பொழுதில், லக்ஷ்மணன் பார்த்து, "பொழுது விடிந்ததும் நீ வேண்டுமானால் அயோத்தி திரும்பி செல்கிறாயா?" என்று ஸ்ரீ ராமர் கேட்டு விட்டார்.
ஸ்ரீ ராமரை விட்டு நொடி பொழுது பிரிந்தாலும், உயிர் போய் விடும் என்ற நிலையில் இருந்த லக்ஷ்மணன், செய்வதறியாது ஸ்ரீ ராமரின் பாதங்களில் விழுந்து விட்டார்.
ஸ்ரீ ராமரின் சம்மதத்தை பெற, ஸ்ரீ ராமரிடம் கேட்டால் நடக்காது என்று அறிந்து, தலையை தூக்கி, அருகில் நின்று இருந்த சீதையை பரிதவிப்புடன் பார்த்து, தனக்கு சிபாரிசு செய்ய பிரார்த்தித்தார்.

லக்ஷ்மணனின் நிலையை புரிந்து கொண்ட சீதை, ஸ்ரீ ராமரை பார்த்து, " எப்படி குளத்தில் இருக்கும் மீனை வெளியே எடுத்தால் அதற்கு உயிர் தங்காதோ, அது போல லக்ஷ்மஷ்ணன் உங்கள் பிரிவை தாள மாட்டான்."
என்று சொல்ல, ராமர் மறு பேச்சின்றி அழைத்து கொண்டார்.
அதற்குப்பின், கடைசி வரை லக்ஷ்மணனை பிரிந்து ஒரு க்ஷணம் இருந்ததில்லை ஸ்ரீ ராமர்.


தாயாருக்கு அத்தனை மதிப்பு கொடுப்பாராம் பெருமாள்.

தாயாரை முன்னிட்டு, பெருமாளை சேவித்தால், நம் தகுதி பார்க்காமல் அணுகிரஹம் உடனே செய்து விடுவார்.

தனியாக தான் சந்நிதியில் இருந்தால், நமக்கு பெருமாள் அணுகிரஹம் செய்வாரோ என்னவோ என்று நினைத்த தாயார், திருமலையில் எம்பெருமான் நெஞ்சில் போய் அமர்ந்து விட்டாளாம்.

பெருமாள், தாயாரை பார்த்து, 'இப்படி என் நெஞ்சோடு அமர்ந்து விட்டாயே, உனக்கு வேண்டுமானால் தனி சன்னதி இருக்க செய்யட்டுமா?" என்று கேட்க,
"வேண்டவே வேண்டாம்" என்றாளாம்.
"சரி, அப்படியென்றால் ஒரே சந்நிதியில் அருகேயே இருக்கிறாயா?" என்று கேட்க,
"அதுவும் வேண்டாம்"
என்றாளாம் தாயார்.
மேலும்,
'எனக்கு தனி சந்நிதி கொடுத்து, ராவணன் தூக்கி போனான் என்ற அனுபவமே போதும்.
தனி சந்நிதி கொடுத்தால், மற்றவர்களை நம்ப இயலவில்லை.
உங்கள் அருகிலேயே இருந்தாலும், உங்களையும் நம்ப முடியாது.
ஒரு சமயம், கஜேந்திரன் என்ற ஒரு யானை உங்களை கூப்பிட்டான் என்றதும், அருகில் இருந்த நான் கூட முக்கியமில்லை என்று, கிளம்பி விட்டீர்களே.
இதனால் எனக்கு தனியாக இடமும் வேண்டாம், உங்கள் பக்கத்திலும் இடம் வேண்டாம்.
நான் இனி இறை பொழுது கூட அகல கில்லேன், அகல கில்லேன்,  நான் உங்கள் நெஞ்சோடு தான் இருப்பேன்.
நீங்கள் எந்த பக்தன் அழைத்தாலும், என்னையும் தூக்கி கொண்டு செல்லுங்கள்"
என்று பிடிவாதம் செய்து அமர்ந்து விட்டாளாம் தாயார்.

இப்படி, நமக்கு தடையே இல்லாமல் அணுகிரஹம் செய்ய, அலர்மேல் மங்கை தாயார் வக்ஷஸ்தலத்தில் இறை பொழுது கூட அகல கில்லேன் என்று அமர்ந்து விட்ட ஸ்ரீனிவாச பெருமாளே என்பதை தான், நம்மாழ்வார்,
"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா"
என்று சொல்கிறார்.

திருமலையில், பெருமாளுக்கு உள்ள விசேஷம் இதுவே.

திருமலையப்பனை காண நாம் மலை ஏறி செல்லும் போது, பெருமாள் பார்ப்பதற்கு முன்,  ஸ்ரீனிவாசனின் மார்பில் இருக்கும் தாயார், நம்மை முதலில் பார்த்து விடுகிறாள்.

பெருமாள் நம் பாவ புண்ணியத்தை பார்க்கும் முன், தாயார் முந்திக்கொண்டு, "நம் குழந்தை, அணுகிரஹம் செய்யுங்கள்" என்று நமக்காக சிபாரிசு செய்து விடுகிறாள்.

தாயார் பார்த்ததினாலேயே, பெருமாள், நம் தகுதி பாராமல், உடனே அணுகிரஹம் செய்து விடுகிறார் ஸ்ரீனிவாச பெருமாள்.

திருமலையப்பனுக்கு உள்ள இந்த தனித்துவம், மற்ற திவ்ய தேச பெருமாளிடம் காண இயலாது.

திருமலையில், தாயாரை தன் மார்போடு வைத்து இருப்பதால், தடையின்றி நம்மிடம் கருணையை வர்ஷிக்கிறார் பெருமாள்.

நிகரில் புகழாய்.
உலக மூன்றுடையாய்.
என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

சொர்க்கத்தில் உள்ள தேவர்கள், தப லோகத்தில் இருக்கும் ரிஷிகள், பிரம்மா உட்பட ஒரு நாள் அழிந்து விடுவார்கள். ஆனால் வைகுண்டத்தில் உள்ள தேவர்களான நித்ய பார்ஷதர்கள் வைகுண்ட நாதனை போல அமரர்கள்.
வைகுண்ட நாதனை போல அவர்களும் என்றுமே இருப்பவர்கள்.
பரமாத்மாவாக இருப்பதால், வைகுண்ட நாதனுக்கு கூட, உலகத்தை ஸ்ருஷ்டி செய்ய வேண்டும், உலகத்தை ரக்ஷிக்க வேண்டும் என்ற பொறுப்பு உண்டு.
நித்ய பார்ஷதர்களான இவர்களுக்கு அந்த பொறுப்பு கிடையாது என்பதால், இவர்கள் லட்சியம் வைகுண்ட நாதனுக்கு கைங்கர்யம் செய்வதே. தேவைப்பட்டால், இவர்களே ப்ரம்ம லோகம் முதல், பூலோகம் வரை வந்து போகவும் முடியும். சுதந்திரமானவர்கள், அமரர்கள்.

அப்படிப்பட்ட அமரர்களான நித்ய பார்ஷதர்களும் (அமரர் முனிக்கணங்கள்), பூலோகத்தில் உள்ள திருமலை வந்து சேவை செய்ய விரும்பும் பெருமை உடைய திருவேங்கடத்தானே என்று
"நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே"
என்று நம்மாழ்வார் திருமலையப்பனின் புகழை நமக்கு காட்டுகிறார்.

வைகுண்டத்திலேயே எம்பெருமானை சேவிக்கும் பாக்கியம் பெற்ற நித்ய பார்ஷதர்களே திருமலை வந்து சேவிப்பார்கள் என்றால், இந்த உலகத்திலேயே உள்ள எனக்கு உன் திருவடி அடையாமல் வேறு என்ன செய்வேன்?

நித்ய பார்ஷதர்களுக்கு திருமலை இல்லையென்றால், வைகுண்டம் இருக்கிறது. அங்கு போய் உமக்கு சேவை செய்து கொள்வார்கள்.
அவர்களே வைகுண்டம் வேண்டாம், திருமலை தான் வேண்டும் என்று வரும்போது,
பூலோகத்தில் புகலிடம் இல்லாத எனக்கு, நீஙகள் ஒருவர் தானே கதி என்று,
"புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்கிறார் நம்மாழ்வார்.

வைகுண்டம் சென்று உங்கள் திருவடியை பிடிக்க இயலாத எனக்கு திருமலையில் உள்ள நீங்கள் தானே கதி. புகலிடம் இல்லாத அடியேன், உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே என்கிறார்.

இங்கு "உன் திருவடியில் புகுந்தேனே" என்று கூறாமல்,
"உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே"என்கிறார்.

இங்கு "அமர்ந்து" என்ற சொல்லை சொல்லி, சரணாகதி செய்த நம்மாழ்வார், மோக்ஷம் வேண்டினாலும், உடனே தந்து விட வேண்டாம், கொஞ்சம் திருமலையில் தங்கி (அமர்ந்து) உங்களுக்கு இங்கேயே சில காலம் சேவை செய்ய அணுகிரஹம் செய்து விட்டு, பின்னர் மோக்ஷம் கொடுங்கள் என்கிறார்.

மோக்ஷம் யாருக்கு கொடுக்கிறார் பெருமாள்?
இரண்டு விதமான நிலைக்கு, மோக்ஷம் கொடுக்கிறார் பெருமாள்.
1. "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து செய்தால், உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

2. "இனி தாளாது என்ற ஆர்த்தி (துடிப்பு) இல்லாமல்" சரணாகதி செய்து விட்டானானால், அவன் ப்ராரப்தம் முடியும் வரை உடம்போடு வாழ்ந்து தான் ஆக வேண்டும்.

ப்ராரப்த கர்மா அனுபவிக்காமல் மோக்ஷம் கொடுப்பாரா?
கோபிகைகள் போல "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து விட்டால், ப்ராரப்த கர்மாவும் பொசுங்கி, உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

ஞானியும் ப்ராரப்த கர்மாவை அனுபவிக்கிறார்கள்.


நம்மாழ்வார் திருமலையப்பனை பூரண சரணாகதி செய்தவர்.
"இனி தாளாது" என்ற ஆர்த்தியும் (துடிப்பு) உள்ளவர்.
உடனே மோக்ஷம் பெறுவதற்கு தகுதி இருந்தாலும்,
பிராரப்த காலம் முடியும்வரை, இந்த உடலோடு இருந்து, திருவெங்கட நாதனுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டாராம் ஆழ்வார்.

இதை குறிப்பதாக, "உன் திருவடியில் அமர்ந்து" என்று சொல்லி, எப்பொழுது பிராரப்த காலம் முடியுமோ, அப்பொழுது திருவெங்கட நாதனுக்கு திருமலையில் செய்த சேவையை, வைகுண்டம் சென்று செய்வோம் என்று பிரார்த்தித்தார்.