Followers

Search Here...

Showing posts with label முடியாது. Show all posts
Showing posts with label முடியாது. Show all posts

Sunday 1 September 2019

ஞானியையும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஞானியை ஆஸ்ரயித்த பக்தனையும் புரிந்து கொள்ள முடியவில்லையே... ஏன்? தெரிந்து கொள்வோமே.

ஞானியின் செயலை, ஞானியின் அனுபவத்தை, புலன்கள் வழியாகவே பார்க்கும் அஞானிகளான சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.



"ஞானியை புரிந்து கொண்டேன்" என்று அஞானிகளான ஜனங்கள் நினைப்பதே தவறு..

"ஞானியை புரிந்து கொண்டேன்" என்று அஞானிகளான ஜனங்கள் சொல்வதே பொய்.
கோடியில் ஒருவன் ஞானியாக பிறக்கிறான்.

சாதாரண மக்களும் வி(பி)ருந்தாவனம் போய் பார்க்கிறார்கள்.
புலன்களின் தூண்டுதலால் மனதில் ஏற்படும் எண்ணங்களேயே ஆதாரமாக கொண்டு பார்க்கும் சாதாரண மக்களுக்கு, உத்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீபிருந்தாவனமும், டில்லியை போன்று இன்னொரு ஊராக தான் தெரிகிறது.
ஞானியோ ஸ்ரீபிருந்தாவனம் என்றதுமே, கிருஷ்ணர் கால் பட்ட பிரதேசமாகவே அனுபவிக்கிறார்கள்.

உலகத்தில் எது எதையெல்லாம் பார்க்கிறோமோ, அனுபவிக்கிறோமோ அது எல்லாம் இயற்கையினால் வந்த ஸ்வபாவமே..

எதை பார்த்தாலும் சரி, எதை கேட்டாலும் சரி, எதை பற்றி மனதால்  சிந்தனை செய்தாலும் சரி அது எல்லாம் இயற்கையினால் வந்த ஸ்வபாவமே.

மனம் அழிந்து போன பிறகு, ஜென்ம ஜென்ம புண்ணியங்களால் ஏற்படக்கூடிய அனுபவமே இயற்க்கைக்கு அப்பாற்பட்டது. இந்த அனுபவத்தை ஞானிகள் மட்டுமே அனுபவிக்கிறார்கள். 

கண் காது மூக்கு, தோல், நாக்கு, மனம் போன்ற இந்திரியங்களால் நாம் அனுபவிக்கும் அனைத்து விஷயங்களும் 'காமமே'.
எந்த அனுபவத்தை மனமும் அழிந்த பிறகு அனுபவிக்கிறாயோ அதுவே 'பிரேமை'
என்று ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் சொல்கிறார்..

அந்த பிரேமை சுயநலமில்லாதது. எதிர்பார்ப்பு இல்லாதது.
இந்த பிரேமை பகவானிடத்திலும், சத்குருவிடம் மட்டுமே ஏற்படும்.
மற்ற யாரிடத்திலும் நாம் கொள்ளும் அனுபவங்கள் எல்லாம் காமமே.

புலன்களால் தூண்டப்படாத, மனதுக்கு அப்பாற்பட்ட அனுபவங்கள் ஞானிக்கு ஏற்படுகிறது.

விஷய சுகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நிலையை அனுபவிக்கிறார்கள் ஞானிகள்.

சாதாரண மக்களுக்கு "உறக்கம்", "விழிப்பு" என்ற நிலை ஏற்படுகிறது.

மகான்களுக்கு விழிப்பு நிலையில் "சமாதி" என்ற நிலையும் ஏற்படுவதுண்டு..
"சமாதி" நிலையில் "மூச்சும்" நின்று விடுகிறது..
கிருஷ்ண சைதன்யர் பிருந்தாவனம் வந்த போது, சமாதி நிலைக்கு சென்று விட்டார்.



சாதாரண மக்களால் இவர் நிலையை புரிந்து கொள்ள முடியுமா?

'கிருஷ்ண சைதன்யர் சமாதி நிலையில் உயிரை பிரித்து கொண்டு விட்டாரா, இல்லை சமாதி நிலையில் தான் இருக்கிறாரா?'
என்று புரிந்து கொள்ள முடியாத பக்தர்கள், செய்வதறியாது,
அவரை சுற்றிக்கொண்டு அவருக்கு உயிரான "ஹரே ராம ஹரே கிருஷ்ண" மந்திரத்தை உரக்க சொல்ல ஆரம்பித்தனர்.
சமாதி நிலையில் உள்ள சைதன்யர் மூச்சு நின்று விட்டாலும், உடல் ஜில்லிட்டு போகவில்லை. உடல் கட்டை போல கிடக்கிறது.

ஒரு வாரம் ஆகியும், சைதன்யர் சமாதி நிலையை விட்டு வரவில்லை.

ஒரு ஞானியின் நிலையை, ஞானி மட்டுமே தெரிந்து கொள்ள முடியுமல்லவா...

அப்பொழுது ஸ்ரீ பிருந்தாவன யாத்திரையாக ராமச்சந்திர கவிராயர் என்பவர் வந்து இருந்தார்.

"கிருஷ்ண சைதன்யர் இப்படி கிடக்கிறார்... ஒரு வாரம் ஆகியும் நினைவு திரும்பவில்லை"
என்று பக்தர்கள் கவலைப்பட்டு சொல்ல,
கிருஷ்ண சைதன்யர் சமாதி நிலையில் கிடப்பதை பார்த்த கவிராயர், அவர் அருகிலேயே தானும் மூர்ச்சை ஆகி விழுந்து விட்டார்..
சிறிது நேரத்தில் இருவரின் சமாதியும் கலைந்து எழுந்து விட்டனர்.

கிருஷ்ண சைதன்யர் என்ற கௌரங்கர், சகஜ நிலைக்கு திரும்பினார்.
பக்தர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

என்ன நடந்தது?
ஏன் சைதன்யர் இப்படி ஆனார்?
என்று சாதாரண ஜனங்களுக்கு ஞானிகளின் எண்ண ஓட்டம், நிலை புரியுமா !!
ஒரு ஞானியை ஞானியே அறிய முடியும் அல்லவா.
ஸ்ரீ பிருந்தாவனம் வந்த சைதன்யர் (கௌரங்கர்), "பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணர் இங்கு தானே லீலைகள் செய்தார்" என்ற அனுபவத்திலேயே, தியானத்தில் இருந்தார்.

அப்பொழுது, ராதையின் மோதிரம் யமுனையில் விழுவது போல ஒரு காட்சி.
அப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணர் வந்து கொண்டிருப்பது தெரிந்து, ஸ்ரீராதையின் தோழிகள்,
"நாங்கள் யமுனையில் இறங்கி, மோதிரத்தை தேடி எடுத்து கொண்டு வருகிறோம்"
என்று சொல்லி ராதையை அனுப்பி, யமுனையில் இறங்கி தேட ஆரம்பித்தனர்.






இந்த காட்சியை கண்ட கிருஷ்ண சைதன்யர், தானும் கௌரங்கி என்ற ஒரு கோபிகையாக ஆகி விட்டார்.
"மோதிரத்தை நான் தேடி எடுத்து வருகிறேன். ஸ்ரீ கிருஷ்ணரும் ராதையும் உங்களுக்காக காத்து இருப்பார்கள். நீங்கள் எல்லோரும்  செல்லுங்கள்" 
என்று அவர்களையும் ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் செய்ய அனுப்பி விட்டு, தானே யமுனையில் குதித்து மோதிரத்தை தேட ஆரம்பித்தார் கோபியான கௌரங்கி.

தானே ஒரு கோபியாக ஆகி, சமாதியில் லயித்து இருந்தார் சைதன்யர்.
ஒரு வாரம் ஆகி விட்டது... மோதிரம் கிடைக்கவில்லை..

கிருஷ்ண சைதன்யரின் இந்த அனுபவத்தை புரிந்து கொண்ட ஞானியான ராமச்சந்திர கவிராயர், தானும் அதே சமாதி நிலைக்கு சென்று, யமுனையில் தானும் குதித்து, விழுந்த ராதையின் மோதிரம் கிடைத்து விட்டதாக காட்ட, பரம ஆனந்தத்தை அடைந்து சகஜ நிலைக்கு திரும்பினார் கிருஷ்ண சைதன்யர்.

ஞானியின் நிலையை மற்றொரு ஞானி தானே அறிந்து கொள்கிறார். அறிந்து கொள்ள முடியும்.

நம்முடன் ஞானிகள் பழகினாலும், மனித ரூபம் எடுத்து விட்டதால்,
நம்மை போலவே ஞானிகள் கஷ்டப்படுகிறார்கள், சாப்பிடுகிறார்கள், உறங்குகிறார்கள் என்று தோன்றினாலும், "ஞானிகள் வேறு, நாம் வேறு" என்று அறிந்து பழக வேண்டும்.

"நம்மை போன்றவர் தான்" என்று நினைத்து ஏமாற கூடாது.

ஞானிகள் நிலையை, அனுபவத்தை, புலன்களை கொண்டு பார்க்கும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதை இந்த சம்பவத்திலேயே நாம் புரிந்து கொள்ளலாம்.

ஞானியை புரிந்து கொள்ள முடியாது என்பது ஒரு புறம் இருக்க,
இதை விட இன்னொரு ஆச்சர்யம்..
ஞானியை ஆச்ரயித்த ஜனங்களையும் உலகத்தார்களால் புரிந்து கொள்ள முடியாது.
பல கோடி புண்ணியங்களின் பலனாக, வைதீக லக்ஷணம் கொண்ட மகாத்மாவை, கோடியில் சிலர் ஸத்குருவாக அடைகிறார்கள்.

இப்படி வைதீக பூரணமான ஞானியான ஸத்குருவை அடைபவர்களையும், இந்த உலகில் உள்ள ஜனங்களால் புரிந்து கொள்ளவே முடியாது.

உலகத்தில் இருக்கும் மற்றவர்களை போல, இவர்கள் இருப்பதில்லை.
அன்பே (ப்ரேமை) உருவான, தெளிந்த ஞானம் உடைய, பகவானை நாம் நெருங்கி சென்று பார்த்தாலேயே,
அவருக்காக நாம் வாழ வேண்டும், அவருக்காக நாம் இருக்க வேண்டும் என்று மனம் மாறி விடும்.



இந்த அன்பு 'பகவானிடத்தில்' மட்டும் தான் ஏற்படும் என்று நினைத்து விட கூடாது...
நமக்கு பகவானை காட்டும் 'உத்தம குருவை' பார்த்தாலும் இதே போன்ற மனநிலை நமக்கு ஏற்பட்டு விடும்.
அன்பு எல்லையில்லாமல் ஊற்றெடுக்கும்.

ஆழ்வார்கள், பகவானிடம் ஏற்பட்ட இந்த ஈர்ப்பால், "எனக்கு உள்ள ஆசைக்கு இறுக கட்டி கொள்வேன்... கடித்து விழுங்கியே விடுவேன்" என்ற அளவுக்கு அன்பு மிகுதியால் பாடுகிறார்கள்...
இதே போன்ற எல்லையில்லா அன்பு, ஸத்குருவை பார்த்தாலும் தோன்றும்.

ஸத்குருவை அடைந்த இவர்களும், மற்றவர்கள் போல குடும்பம் நடத்துகிறார்கள்.. படிக்கிறார்கள்..  கஷ்டப்படுகிறார்கள்.. சிரிக்கிறார்கள்.. வேலைக்கு செல்கிறார்கள்.
என்னதான் இவர்கள் உலகத்தில் பழகினாலும், 'இவர்கள் வேறு மாதிரி தான் இருக்கிறார்கள்' என்று சாதாரண ஜனங்களுக்கு தோன்றுகிறது.
குருவையே தியானத்து கொண்டு,
குரு கொடுத்த பாகவதத்தையே எப்பொழுதும் படித்து கொண்டு இருக்கும் இவர்களுக்கும், வாழ்க்கையில் 'துக்கம் ஏற்படுகிறது, சுகம் ஏற்படுகிறது'

எத்தனை பெரிய துக்கம் வந்தாலும், சுகம் வந்தாலும், ஏதோ ஒரு சக்தி இவர்களுக்கு உள்ளேயே ரகசியமாக இருந்து கொண்டு, ஏதோ ஒரு 'ஆனந்தத்தை, தைரியத்தை' கொடுத்து கொண்டே இருக்கிறது.

அதுவே அவர்களை எந்த நிலையிலும், விடாமல் பக்தி செய்ய வைக்கிறது..
"பாகவதம் பாகவதம் என்று இதை கட்டி கொண்டு அழுகிறாயே!! என்ன கிழித்து விட்டாய்?.. " என்று கூட கோபத்தில் கேட்டு விடுவார்கள்.

"ஏன் இப்படி இருக்கிறோம்?" என்ற கேள்விக்கு ஸத்குருவின் கிருபைக்கு பாத்திரமான அவர்களால் கூட பதில் சொல்ல முடியாது...

"பாகவதம் படித்து என்ன பலன்? என்று என்னிடம் கேட்டு ப்ரயோஜனமில்லை.
நான் ஏன் படிக்கிறேன்? என்று என்னிடம் கேட்காதே..
உலகத்தில் என்ன தான் சகஜமாக பழகினாலும், ஏதோ ஒன்று எனக்குள்ளே உட்கார்ந்து கொண்டு இப்படி செய்ய வைக்கிறது... 
உனக்கு பதில் வேண்டுமென்றால், நேராக என் குருவிடம் சென்று கேள்"
என்று சொல்லி விட வேண்டுமாம்.
அதுவே உண்மையும் கூட.



சாதாரண ஜனங்களுக்கு, ஞானியான குருவை ஆச்ரயித்த பக்தனையே எளிதில் புரிந்து கொள்ள முடியாத போது,
ஒரு உண்மையான ஞானியை, நம் புலன்களை கொண்டு பார்த்து, புரிந்து கொண்டு விட்டேன் என்று நினைத்து விட முடியுமா!!

ஞானியின் செயலைஞானியின் அனுபவத்தை,
புலன்கள் வழியாகவே பார்க்கும் அஞானிகளான சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.

சாதாரண ஜனங்கள் கஷ்டம் வர கூடாது என்பதற்காக பல முயற்சிகள் செய்வார்கள்.
கஷ்டம் வந்தால் கவலைப்படுவார்கள். தைரியத்தை இழப்பார்கள். 

கஷ்ட காலத்திலும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாமல் தவிப்பார்கள்.

உத்தம ஞானியை குருவாக ஆச்ரயித்த பக்தன், அஞானியாக இருந்தாலும், கஷ்டம் வந்தாலும் கலங்காமல், ஏதோ ஒரு சக்தி உள்ளிருந்து காக்கிறது என்று மட்டும் உணர்ந்து வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்கிறான்.

உத்தம ஞானியோ, புலன்களால் உந்தப்பட்டு, மனதால் ஏற்படும் எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல், தெய்வ சிந்தனையுடனேயே எப்பொழுதும் இருக்கின்றனர்.

உலகில் கோடீஸ்வரனுக்கும் வியாதி உண்டு, மரணம் உண்டு, துக்கம் உண்டு.

வாழ்க்கை (சம்சாரம்) என்றாலே அதில் துக்கமும் உண்டு, சுகமும் உண்டு.

சாதாரண ஜனங்கள், துக்கத்தை கண்டு அஞ்சுகின்றனர்.
துக்கம் வரக்கூடாதே என்று அஞ்சுகின்றனர்

வரும் துக்கத்திலும் நிதானமாக, ஆனந்தமாக மனதை ஆக்கி கொள்ள, ஸத் சங்கமே வழி.

ஆனந்தத்தையே எப்பொழுதும் அனுபவிக்கிறார்கள் 'ஞானிகள்'.

உத்தம குருவின் கருணைக்கு பாத்திரமான பக்தன்,
 அஞானியாக இருந்தாலும்,
குடும்ப கடமைகளை செய்து கொண்டிருந்தாலும்,
அவன் உள்ளிருந்து அனுபவிக்கும் ஆனந்தமும், குருநாதரின் நினைவும், அவனை வேறுபடுத்தி காட்டி விடுகிறது..
ஞானியை போன்று இவர்களும் சுகம் துக்கம் இரண்டையும் குருவின் அணுகிரஹ பலத்தால், சமமாக பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

சுகம் வந்தாலும் அதிகமாக குதூகலிக்காமல்,
துக்கம் வந்தாலும் எல்லை மீறி கோபமோ துக்கமோ ஏற்படாமல்,
அஞானியாக இருந்தும், இவர்கள் சம நிலையில் இருக்கிறார்கள்.



சுகத்தையும், துக்கத்தையும் சமமாக பார்க்கும் இந்த அனுபவத்தை ஏப்படி அஞானியாக இருந்தும், இவர்கள் அடைகிறார்கள்? என்று கண்டுபிடித்து, அதற்கு காரணமான அந்த ஆத்ம ஞானியை நாமும் சரண் அடைவோமே என்று சாதாரண ஜனங்கள் அனைவரும் நினைக்க வேண்டும்..

ஸத் சங்கத்தை, நாம் அனைவரும் நாட வேண்டும்.

ஸத் சங்கத்தில் அஞானியாக இருக்கும் ஜனங்கள் கூட, வைதீகமான ஞான பூர்ணனான ஸத்குருவை ஆச்ரயித்தவர்கள் என்பதை மறக்க கூடாது.

ஸத் சங்கத்தை நாம் நாடு செல்லும் போது, நமக்காக அந்த ஞான குரு நன்மை தேடி வருவார்.
நமக்கும் ஞான அனுபவங்கள் ஏற்படும்.

உலக வாழ்க்கையில் ஏற்படும் துக்கங்களை எதிர்கொள்ள,
துக்க காலங்களிலும் ஆனந்தம் பாதிக்க படாமல் வாழ,
ஸத் சங்கத்தை, வைதீகமான ஞானியான ஸத்குருவை நாம் அனைவரும் ஆச்ரயிக்க வேண்டும்.

வாழ்க ஹிந்துக்கள்.

வாழ்க ஞானிகள்.  வாழ்க ஞானிகளை தொடரும் பக்தர்கள்.