Followers

Search Here...

Sunday 30 January 2022

தாண்டகம் என்றால் என்ன? கலியன் என்றால் என்ன? திருமங்கையாழ்வார் பாடிய முதல் பாசுரம் எது? அறிந்து கொள்வோம்.

வடமொழியில் "தண்டகம்" என்ற ஒரு வகையான பாடும் (ஸ்தோத்திர) முறை உண்டு. 

அம்பாள் மேல் ஸ்யாமளா தண்டகம், மஹாலக்ஷ்மி மேல் கோமளா தண்டகம் என்று தண்டகங்கள் உள்ளன.


"தண்டவத் ப்ரணாமம்" என்ற சொல்லே "தண்டம் சமர்ப்பிக்கிறேன்' என்று தமிழில் சொல்லப்படுகிறது.


"தண்டகம்" என்ற வடசொல்லையே "தாண்டகம்" என்றும் "தண்டம்" என்றும் சொல்கிறோம்.


வைஷ்ணவர்கள் பெரியோர்களுக்கு கடிதம் எழுதும் போது, 'நமஸ்கரிக்கிறேன்' என்று எழுதாமல் "தேவரீர் திருவடியில் தண்டம் சமர்ப்பிக்கிறேன்" என்று எழுதுவார்கள்.


தண்டகம் என்றால் மரக்கட்டை என்று அர்த்தம்.

தன்னை ஒரு மரக்கட்டையாக பாவித்து, பெரியவர்கள் காலில் விழுவதால், "தண்டம் சமர்ப்பிக்கிறேன்"  என்று சொல்வார்கள்.

சந்யாசிகளும் தங்கள் கைகளில் "தண்டம்" வைத்து கொண்டிருகிறார்கள். 


ஸ்ரீமத் பாகவதத்தில், அக்ரூரர், பகவான் அவதாரம் செய்து இருக்கிறார் என்று அறிந்ததால், ஆர்வத்தோடு பிருந்தாவனம் வந்த போது, பலராமரோடு கிருஷ்ணரை பார்த்தபோது, மரக்கட்டை போல இருவருடைய கால்களிலும் விழுந்து விட்டார்.

रथात् तूर्णम् अवप्लुत्य स:

अक्रूर: स्‍नेह विह्वल: ।

पपात चरण उपान्ते

दण्डवद् राम-कृष्णयो: ॥

திருமங்கையாழ்வார் திருகுறுந்தாண்டாகம், திருநெடுந்தாண்டாகம் இயற்றி,  பெருமாளின் திருவடியில் தன்னையே தண்டம் போல சமர்பிக்கிறார். 


'நீலன்' என்ற பெயர் கொண்ட இவர், திருவாலி என்ற தேசத்தை சிற்றரசனாக ஆட்சி செய்து வந்தார்.

ஒரு சமயம், குமுதவல்லி என்ற பெண்ணை கண்டு மணந்து கொள்ள ஆசைப்பட்டார்.


அந்த பெண்ணோ, இவர் சம்ஸ்காரம் செய்து கொண்டு வைஷ்ணவனாக ஆக வேண்டும், தினமும் 1000 வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தாள்.

இதை ஏற்று கொண்ட மணந்து கொண்ட திருமங்கை மன்னன், திருநரையூர் எம்பெருமானிடம் வைஷ்ணவனாக சம்ஸ்காரம் பெற்றார்.


பூம்புகார் செல்லும் வழியில், திருமங்கைமடம் என்ற இடத்தில், தினமும் 1000 வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்து வந்த இவர், சொத்தையெல்லாம் இழந்து விட்டார்.


இருந்தாலும் அன்னதானம் செய்வதில் பெரும் ஆர்வம் கொண்டார். 

"அன்னதானம் எந்த காரணம் கொண்டும் நிற்க கூடாது" என்று நினைத்தார்.


ஒரு நிலையில், "கொள்ளை அடித்தாவது அன்னதானம் செய்தே ஆக வேண்டும்" என்று இறங்கி விட்டார். 


இவரை ஆட்கொள்ள நினைத்த வயலாலி மணவாளன், தானே பிராம்மண பையனாக, தாயாரோடு, புது மண தம்பதிகளாக நகைகளை அணிந்து கொண்டு, இவர் சஞ்சரிக்கும் இடமான வேதராஜபுரத்திற்கு வந்தார்கள். 

இவர்கள் அணிந்து இருக்கும் நகைகளை பார்த்த திருமங்கை மன்னன், இவர்களை வழிமறித்து, அனைத்து நகைகளையும் கழட்ட சொல்லி மிரட்டி, ஒரு பெரிய மூட்டையாக கட்டி கொண்டார்.


மிகவும் பலசாலியான இவரால், தான் கட்டிய நகை மூட்டையை தூக்க முடியவில்லை.


அருகில் நின்று கொண்டிருந்த இந்த பிராம்மணன் சிரிக்க, 'இவர் ஏதோ மந்திரம் சொல்லி, இந்த மாயம் செய்கிறார்' என்று நினைத்தார் பரகாலன்.


எவ்வளவு முறை முயன்றும், மூட்டையை தூக்க முடியாமல் போக, உடனே கோபத்தோடு, வாளை உருவி, "ப்ராம்மணரே! நீர் ஏதோ மந்திரம் ஜெபித்து தான் இந்த மாயாஜாலம் செய்கிறீர்கள் என்று அறிகிறேன். உங்களை பார்த்தால், இப்பொழுது தான் மணமாகி இருக்கிறது என்று தெரிகிறது.

இந்த நிலையில் உங்கள் நகைகளை எடுத்து கொள்ள நான் விரும்பவில்லை. சீதனமாக நானே தருகிறேன் எடுத்து கொண்டு செல்லும். ஆனால், நீர் எந்த மந்திரத்தை சொல்லி இந்த மாயம் செய்தீரோ அந்த மந்திரத்தை எனக்கு சொல்லி கொடுத்து விட்டு, பிறகு எடுத்து கொள்ளும்" என்றார்.


அந்த பிராம்மணனோ, "நகையும் உனக்கு கிடையாது. மந்திரமும் கிடையாது" என்றார்.

உடனே வாள் எடுத்து மிரட்டினார். மசியவில்லை அந்த பிராம்மணன்.


மரியாதையோடு, சேவை புத்தியோடு பிறகு கேட்க, ப்ராம்மணனாக வந்த வயலாலி மணவாளன், அவருக்கு திருவஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார். 

இப்படி பெருமாளே, பரகாலனை தடுத்தாட்கொண்டதும், தன் நிஜ ஸ்வரூபம் என்ன? என்று ரகசியத்தை அறிந்து கொண்டார். 

உடனே, 'வாடினேன் வாடி வருந்தினேன்..."என்று முதல் பாசுரத்தை பாட ஆரம்பிக்கிறார்.

முதல் பாசுரத்தை முடிக்கும் போது, திருமங்கையாழ்வார், "கண்டு கொண்டேன் நாராயணன் என்னும் நாமம்' என்று பாடுகிறார். 

திருமங்கையாழ்வார் முதன்முதலாக 'பெரிய திருமொழி' தான் பாடினார் என்பது 'கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமத்தை' என்ற வாக்கியத்தை கொண்டே அறிய முடிகிறது.

வாடினேன் 

வாடி வருந்தினேன் 

மனத்தால்

பெருந்துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன் 

கூடி இளையவர் தம்மோடு

அவர் தரும் கலவியே கருதி ஓடினேன்

ஓடி உய்வதோர் பொருளால்

உணர்வெனும் பெரும் பதம் திரிந்து நாடினேன் 

நாடி நான் கண்டுகொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

- பெரிய திருமொழி.


'சம்சார சக்கரத்தில் உழன்று, சிற்றின்பத்தில் விழுந்திருந்த நான், உய்வதற்கு பெரும் பதம் எங்கு கிடைக்கும் என்று தேடி திரிந்தேன். வயலாலி மணவாளா! உங்கள் கருணையால் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமத்தை' என்று சொல்லி முதல் பாசுரத்தை பாடுகிறார்.

வயலாலி மணவாளனை சாக்ஷாத்காரம் செய்த திருமங்கையாழ்வார், தொடர்ந்து 1000 பாசுரங்கள் பாடினார். நமக்கு பெரிய திருமொழி கிடைத்தது.

கடைசியில், 'இந்த சம்சார உலகத்தில் நான் உழன்றது போதும். பெரிய திருமொழி பாடவே இந்த உலகத்தில் வந்தேன் என்று அறிகிறேன். பதரியில் இருந்து திருபுல்லாணி வரை ஒவ்வொரு திவ்ய தேசமும் கால் நெடுக நடந்து சென்று, மங்களாசாசனம் செய்தேன். திருவரங்கம் போன்ற திவ்ய தேசங்களில் கைங்கர்யமும் செய்து விட்டேன். இனி இந்த சம்சாரத்தில் இருக்க மாட்டேன். வந்த காரியம் முடிந்து விட்டது. எனக்கு வைகுண்டம் கொடுங்கள். என்னை உங்கள் திருவடியில் அழைத்து கொள்ளுங்கள்' என்று பெரிய திருமொழி முடிக்கும் போது கதறி விண்ணப்பம் செய்கிறார்.

முசுகுந்த சக்கரவர்த்தி போன்றோர், பெருமாளிடம் வைகுண்டம் கேட்டும், 'கர்மா இன்னும் தீரவில்லை, இன்னும் 2 யுகம் கழித்து துவாபர யுகத்தில் தான் வைகுண்டம்' என்று சொல்லி விட்டார். 

அதேபோல, பரத யோகீஸ்வரர், பெருமாளிடம் வைகுண்டம் கேட்டும், கர்மாவினால், மானாக பிறந்து, பிறகு ஜடபரதராக பிறந்து,  2 ஜென்மங்கள் கழித்து தான் வைகுண்டம் சென்றார். 


வைகுண்டத்தில் இருக்கும் நித்ய சூரிகளே, 12 ஆழ்வார்களாக அவதரித்தனர். 

கர்மாவுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆழ்வார்கள். அவதார புருஷர்கள்.

இப்படி ஆழ்வார் பெரிய திருமொழி முடிக்கும் போது வைகுண்டம் கேட்டு கதறியும், எம்பெருமானோ, 'அஜாமிளன் என்றால், உடனே பரமபதம் கொடுத்து விடலாம்.

இன்னும் கொஞ்ச நாள் இவர் பூலோகத்தில் இருந்தால், தனக்கு மேலும் சில பிரபந்தம் கிடைக்குமே! மேலும் இவர் பாடுவாரே! இவர் பாடுவது நன்றாக இருக்கிறதே! அதை கேட்டு ஆனந்தபடலாமே" என்று திருவுள்ளம் கொண்டார். 

திருமங்கையாழ்வாருக்கு உடனே பரமபதம் கொடுக்க தயங்கினார் பெருமாள். 

'இன்னும் கர்மா பாக்கி உள்ளது. இப்பொழுது பரமபதம் கிடையாது' என்று முசுகுந்தன், பரத யோகிக்கு சொன்னது போல, ஆழ்வாரிடம் சொல்ல முடியாது,

இனி இவர் இந்த உலகத்தில் ஜீவிக்க வேண்டுமென்றால், இவருக்கு பகவத் அனுபவமே ஆதாரம். 

திருமங்கையாழ்வார் இப்படி ஆர்த்தியோடு வைகுண்டம் கேட்டும், பரமபதம் கொடுக்க தயங்கிய பெருமாள், இவரை மேலும் சில காலம் பூலோகத்தில் இருக்க வைக்க, தானே அவருக்கு சில திவ்யகாட்சிகளை, சில அனுபவங்களை கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். 

இப்படி பெருமாளால் கிடைக்கப்பெற்ற காட்சிகளாலும், அனுபவங்களாலும் உகந்திருந்த திருமங்கையாழ்வார், தொடர்ந்து, திருகுருந்தாண்டாகம், திருநெடுந்தாண்டாகம் என்று பாட ஆரம்பிக்கிறார்.

ஆழ்வாருக்கு ஏற்பட்ட இந்த திவ்ய அனுபவங்களே, அடுத்து அவர் இயற்றிய, திருகுறுந்தாண்டாகம், திருநெடுந்தாண்டாகம், மேலும் திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் போன்ற பாசுரங்களில் காண்கிறோம். 


தானே நாயகியாக ஆகி, விரகத்தில் அழுவதும், சிரிப்பதும், ப்ரணய கோபம் அடைவதும்,

நாயகியான தன் நிலையை கண்டு, தனக்கு பரிந்து கொண்டு தாய் வருந்தி பெருமாளிடம் சொல்லி அழுவதுமாக, பெருமாள் இவருக்கு கொடுத்த அனுபவங்களை பாசுரங்களாக அள்ளி கொடுத்து விட்டார்.

Wednesday 26 January 2022

திருநெடுந்தாண்டாகம் சேவிப்போருக்கு கிடைக்கும் பலன் என்ன? என்று சொல்கிறார், திருமங்கையாழ்வார். பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. மின்னுமா மழைதவழும் மேக வண்ணா..

திருநெடுந்தாண்டாகம் சேவிப்போருக்கு கிடைக்கும் பலன் என்ன? என்று சொல்கிறார், திருமங்கையாழ்வார்.

மின்னும் மா மழை தவழும் மேக வண்ணா.

விண்ணவர்தம் பெருமானே! அருளாய், என்று,

அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த

அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை,

மன்னு மாமணி மாட வேந்தன்

மானவேல் பரகாலன் கலியன் சொன்ன

பன்னிய நூல் தமிழ்மாலை வல்லார் 

தொல்லைப் பழவினையை முதல் அரிய வல்லார் தாமே


மின்னிக்கொண்டு பெரிய மழை கொட்டக்கூடிய மேகம் போன்ற வண்ணம் உடையவரே! (மின்னும் மா மழை தவழும் மேக வண்ணா)

தேவாதி தேவனே (விண்ணவர்தம் பெருமானே!) அருளாய்! என்று முனிவர்களும்,தேவர்களும் துதிக்க (முனிவரோடு அமரர் ஏத்த)

ஹம்சாவதாரம் செய்து வந்து, வேதத்தினுடைய அர்த்தத்தை சொன்ன பெருமானே ! (அன்னமாய் அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை)


பெரிய பெரிய மணிமாடங்களையுடைய திருநாங்கூர் என்ற சாம்ராஜ்யத்துக்கு மன்னனாக இருக்கக்கூடிய, கையில் வேல் வைத்திருக்கும் இந்த பரகாலன், கலியன் என்று புகழ் பெற்றவன் சொன்ன அற்புதமான இந்த தமிழ் நூலை, எந்தெந்த பாக்கியவான்கள் சேவிக்கிறார்களோ (மன்னு மாமணி மாட வேந்தன் மானவேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னிய நூல் தமிழ்மாலை வல்லார்)

அவர்கள் ஜென்ம ஜென்மமாக செய்த கோடி பாவங்களும் பொசுங்கி போகும்.


எத்தனை முறை களை எடுத்தாலும், அது மீண்டும் மீண்டும்  வளரும். அது போல முன்பு செய்த பாபங்கள் பொசுங்கினாலும், பாவம் செய்ய வேண்டும் என்கிற வாசனையால் மீண்டும் பாவம் செய்ய தோன்றும். 

எப்படி மண்ணுக்கடியில் உள்ள அந்த வேர் கிழங்கை வெட்டி எரிந்தால், மீண்டும் களை வளராதோ, அது போல, பாவம் செய்ய 'முதல்' காரணமான அந்த வாசனையும் சேர்ந்து அழிந்து போகும்" (தொல்லைப் பழவினையை 'முதல்' அரிய வல்லார் தாமே)

என்று திருநெடுந்தாண்டாகத்திற்கு பலஸ்ருதியும் தானே சொல்கிறார் திருமங்கையாழ்வார்.

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் திருவடிகளே சரணம்

பரகால நாயகி, ஸ்ரீரங்கநாதரோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள்.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென்

பரகால நாயகி, ஸ்ரீரங்கநாதரோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள்.

உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்து

என் ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே

தெள்ளூரும் இளந்தெங்கின் தேறல் மாந்தி

சேல் உகளும் திருவரங்கம் நம்மூர் என்ன

கள்ளூரும் பைந்துழாய் மாலை யானை

கனவு இடத்தில் யான் காண்பன் 

கண்ட போது,

புள்ளூரும் கள்வா நீ போகேல், என்பன்

என்றாலும் இது நமக்கோர் புலவி தானே?

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி 'வயலாலி மணவாளன்' நினைவாகவே இருக்கிறாள்.





தன் தோழியிடத்தில் சொல்கிறாள்.

"ஒரே பெருமாள் தான், அனைத்து திவ்ய தேசங்களிலும் இருக்கிறார். 

பெருமாள், என்னிடத்தில் எதையும் எதிர்பார்க்கமல் (அவ்யாஜமான) கருணையையும், உறவையும் காட்டி, 

அவருடனேயே இருக்க வேண்டும் என்ற ஆசையை மூட்டி,

சற்று அவரை பிரிந்தாலும், 'எனக்கு தாளவே தாளாது' என்கிற விரக வேதனையையும் கொடுத்து விட்டார்.


விரக வேதனை மற்றவர்களுக்கும் ஏற்பட்டு இருக்கலாம். 

ஆனால், 

என் அளவுக்கு இப்படி ஒரு தாளாத விரக வேதனையை, வேறு யாரும் அனுபவித்து இருக்க முடியாது. 

அப்படி ஒரு விரக வேதனையை 'எனக்கே' கொடுத்து இருக்கிறார்.

பிரிவு என்பது இருவருக்கும் பொது தானே!

ஆனால், இந்த விரகம் எனக்கு மட்டும் ஏற்படுகிறதே தவிர, அவருக்கு கொஞ்சம் கூட ஏற்படுவதாக தெரியவில்லை. 


பெருமாள் திடீரென்று வருகிறார். என்னை கட்டிக்கொள்கிறார். பிறகு என்னை விட்டு விட்டு எங்கோ சென்று விடுகிறார். பிறகு மீண்டும் வருகிறார். கட்டிக்கொள்ள வருகிறார். பிரிகிறார். 

என்னை கட்டிக்கொள்ள வருகிறாரே! தவிர, என்னை பிரியும் போது, இவர் வேதனைப்படுவதாகவே தெரியவில்லை. 

பிரிவு ஏற்படும் போது, இருவருக்குமே விரகம் ஏற்பட்டால் 'சரி அவருக்கும் விரகம் உள்ளது' என்று சற்று சமாளிக்கலாம்.

இங்கோ! மொத்த விரகமும் எனக்கே ஏற்படுகிறது. 

இப்படி விரகம் என்ற நோயை எனக்கே தந்து விட்டு சென்று விடுகிறார் (உள்ளூரும் சிந்தைநோய் 'எனக்கே' தந்து)

இந்த தாள முடியாத விரகத்தால், என் உடல் மெலிந்து, என் வளையல்கள் கையில் நிற்காமல் விழுந்து விடுகிறது. 

நான் வாடி போய், என் அழகும் விரகத்தால் உருக்குலைந்து போய் விடுகிறது. 

இவர் என்னை பிரியும் போது, என்னை விரகத்தில் மூழ்கடித்து, என் வளையையும், என் முகத்தில் இருந்த பொலிவையும் கூட எடுத்து கொண்டு சென்று விடுகிறார். (என் ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே)


ஒரு சமயம், கருட வாகனத்தில் பெருமாள் என் எதிரே வந்தார்.

அப்போது அவர் கழுத்தில் போட்டிருந்த துளசி மாலையில் உள்ள மகரந்த சுகந்தம் என்னை மயக்கி விட்டது.

(கள்ளூரும் பைந்துழாய் மாலை யானை)

மயங்கி அவர் மார்பிலேயே விழுந்தேன். அவரும் என்னை அணைத்து கொண்டார்.

சற்று நேரம் கழித்து, கண் விழித்து அவரை கண்ட போது, (கண்ட போது) "நீங்கள் எந்த ஊர் பெருமாள்? இது எந்த ஊர் துளசி? வைகுண்டத்தில் இருந்து வந்த துளசியா?" என்று கேட்டேன்.

உடனே அவர், 

"இளம் தென்னை மரங்களில் பூத்த பூக்கள், தெளிந்த நீரில் சிந்தி கிடக்க, அதில் உள்ள தேனை குடித்து சேல் மீன்கள், துள்ளி விளையாடும் திருவரங்கம் நம்மூர். இது ஸ்ரீரங்க துளசி" என்றார் (தெள்ளூரும் இளந்தெங்கின் தேறல் மாந்தி சேல் உகளும் திருவரங்கம் நம்மூர் என்ன)

"நீங்கள் எந்த ஊர்?" என்று கேட்டதற்கு, "திருவரங்கம் என் ஊர்" என்று சொல்லாமல், "திருவரங்கம் நம்மூர்" என்று என்னையும் சேர்த்து கொண்டு சொல்கிறாரே! என்று கவனித்தேன். 

பெருமாள் என்னிடம் எத்தனை ப்ரியம் கொண்டுள்ளார்! என்று நினைத்து ஆனந்தம் அடைந்தேன்.

இப்படி சிறிது நேரம் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே, கருடனை ஒரு கையால் பெருமாள் தொட, உடனே அந்த கருடாழ்வார் பெருமாளை தூக்கிக்கொண்டு மேலே சென்று விட்டார்.


"கருட வாகனத்தில் உள்ள கள்வா! என்னை விட்டு போகாதீர்கள்!!" என்று சொல்லியும், கேளாமல் என்னை மீண்டும் விட்டு விட்டு சென்று விட்டார்.

(புள்ளூரும் கள்வா நீ போகேல், என்பன்)


"உங்கள் நினைவாக, அந்த துளசியையாவது தந்து விட்டு போங்கள்!" என்றேன். 

'உனக்கு துளசி பிரசாதத்தை விட, விரகம் என்ற உயர்ந்ததான பிரசாதத்தை தருகிறேன்' என்று சொல்லி, 'விரகத்தை எனக்கே தந்து விட்டு போனார்" என்று பரகால நாயகி தான் படும் விரகத்தை சொல்லி கண்ணீர் வடிக்கிறாள்.

முதலில் வயலாலி மனவாளனாக வந்தார். இப்போது, ஸ்ரீரங்கநாதனாக வந்து ஒரு க்ஷணம் அணைத்து கொண்டார். 

'ஒரு க்ஷணம் தான் என்பதால், நான் நிஜத்தில் பெருமாளின் அணைப்பை அனுபவித்தேனா? அல்லது கனவில் அனுபவித்தேனா?' என்று குழம்பி நிற்கிறேன்.

ஒருவேளை உண்மையிலேயே கிடைத்த தரிசனம் தான், கனவு போல போய்விட்டதோ! என்றும் தெரியவில்லை.

ஒரு க்ஷணம் நான் கண்டு அனுபவித்தது, கனவு போல இருக்கிறதே தவிர, ஆசை தீர அனுபவித்ததாக தெரியவில்லை. 

(கனவு இடத்தில் யான் காண்பன்)

ஒரு வேளை, 'என்னை விட்டு போகாதீர்கள்' என்று சொன்னதற்கு பதில், 'என்னையும் கூட்டி கொண்டு செல்லுங்கள்' என்று சொல்லி இருந்தால் என்னையும் கூட்டிக்கொண்டு சென்று இருப்பாரோ?'  (என்றாலும் இது நமக்கோர் புலவி தானே?) என்று சொல்லி கண்ணீர் விட்டாள்.

இப்படி திடீரென்று வருவதும், திடீரென்று போவதுமாக பெருமாள் இருக்க,  'பெருமாள் எனக்கே விரகத்தை கொடுத்து செல்கிறார்' என்று ஏங்கி நிற்கிறாள் பரகாலநாயகி.

Sunday 23 January 2022

பரகால நாயகி, வயலாலி மணவாளனோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள்... பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. நைவளமொன் றாராயா

பரகால நாயகி, வயலாலி மணவாளனோடு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள். 

நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா

நாணினார் போல் இறையே 

நயங்கள் பின்னும் செய்வளவில் 

என் மனமும் கண்ணும் ஓடி

எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய 

இப்பால் கைவளையும் மேகலையும் காணேன்

கண்டேன் கனம் மகர குழை இரண்டும் 

நான்கு தோளும்

எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில்? என்றேற்கு

இது வன்றோ எழில் ஆலி, என்றார் தாமே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

தன்னுடைய 'நாயகன்' தான் இவர்! என்று தெரிந்தும், வயலாலி மணவாளன் கோதண்ட ராமராக வந்திருப்பதால், அவரை கண்டு அஞ்சி, பரகாலநாயகி அவரை பார்க்காமல் நின்றாள்.

"பரகால நாயகி தன்னை பார்ப்பாள்" என்று தான் வயலாலி மணவாளன் வீதி உலாவே வந்திருந்தார். 

தன்னை பார்க்காமல் முகத்தை திரும்பி கொண்டு இவள் இருப்பதை பார்த்து விட்டு, 'இந்த கோதண்டம் தான் இவளை தடுக்கிறது போலும். இவள் ஒரு கோபிகையாயிற்றே! கண்ணனாக வந்தால் தானே இவள் நம்மை பார்ப்பாள்" என்று தீர்மானித்து 'இந்த வேஷம் வேண்டாம்!' என்று கோதண்டத்தை வைத்து விட்டு, கண்ணனாக அலங்காரம் செய்து  கொண்டார்.

ராகத்தை, தமிழில் "பண்" என்று அழைக்கிறோம்.

காலையில் மனதில் இன்பம் உண்டாக, "நைவளம்" (கம்பீர நாட்டை) என்ற பண் இசைப்பார்கள்.

நண்பகலில் மனதில் இன்பம் உண்டாக "பாலை" என்ற பண் இசைப்பார்கள்.

மாலையில் மனதில் இன்பம் உண்டாக "ஆம்பல்"  என்ற பண் இசைப்பார்கள்.

இரவில் அச்சம் ஏற்படாமல் இருக்க, "குறிஞ்சி" (ஹரிகாம்போதி) என்ற பண் இசைப்பார்கள்.

அது போல, 

படுமலைப்பாலை (கரகரப்ரியா), காந்தார பஞ்சமம் (கேதார கௌளம்), இந்தளம் (ஆனந்தபைரவி), அரும்பாலை (கல்யாணி), இளிப்பண் (சுத்த தன்யாசி), கொல்லி (சுத்த சாவேரி) போன்று பல ராகங்கள் (பண்) உள்ளன.

ஒவ்வொரு ராகத்துக்கும் அதற்குரிய தேவதைகள் இருக்கிறார்கள்.

கண்ணன் 'வேணுகானம் செய்யலாம்' என்று குழல் எடுத்து விட்டால், உடனேயே அனைத்து தேவதைகளும் 'இன்று நம்மை கூப்பிடுவாரா? நம்மை கூப்பிடுவாரா?' என்று காத்து கொண்டிருப்பார்கள்.  


கண்ணன் பொழுது போவதற்காக பாட மாட்டானாம்.

ஒரு ராகத்தை எடுத்து பாடினால், ஒரு அர்த்ததோடு தான் பாடுவானாம்.

'கல்யாணி' என்று ஒரு கோபிகை. அவளை பார்க்க அன்று கண்ணன் ஆசைப்பட்டால், உடனே "கல்யாணி" என்ற ராகத்தை பாடுவான். 

'வசந்தா' என்று ஒரு கோபிகை. அவளை பார்க்க அன்று கண்ணன் ஆசைப்பட்டால், உடனே "வசந்தா" என்ற ராகத்தை பாடுவான். 


கண்ணன் வேணுகானம் செய்யும் போதே, 'இன்று தன்னை தான் அழைக்கிறான்' என்று அந்தந்த கோபிகைக்கு தெரியுமாம்.

இப்படி வேணுகானம் செய்தே அந்தந்த கோபிகையை அழைக்கும் கண்ணன், "இந்த பரகால நாயகி தன்னை பார்க்காமல் இருக்கிறாளே! இவள் பார்க்கத்தானே நான் வந்துள்ளேன்

என்று நினைத்தார்.

இந்த கோபிகை "நைவளம்" என்ற ராகத்தை மிகவும் விரும்பி கேட்பாள்.

அவளை கடைகண்ணால் பார்த்து கொண்டே, அவளுக்கு மிகவும் பிடித்தமான 'நைவளம்" என்ற ராகத்தை தானே கண்ணனாக இருந்து வேணுகானம் செய்தார். 

வேணுகானம் செய்வதை கேட்ட பரகாலநாயகி (கோபிகை) வந்திருப்பது 'கண்ணன்' என்று அறிந்தும் "பார்க்க கூடாது" என்று கொஞ்சம் ராங்கி செய்தாள்.

'வந்திருப்பது கண்ணன் தானே! பிறகு ஏன் இவளுக்கு இத்தனை ராங்கி?' என்று கேட்டால், 

"முதலிலேயே கண்ணனாக வந்திருக்கலாமே இவர். கோதண்ட ராமனாக வந்து அச்சத்தை கொடுத்தாரே! முதலில் ராங்கி செய்தது இவர் தானே" என்று பரகாலநாயகி திருப்பி கேட்டாள்.


வேணுகானம் இவளை மயக்கினாலும், தலையை கூட ஆட்டக்கூடாது! என்று அழுத்தமாக பெருமாளை பார்க்காமல் நின்று கொண்டிருந்தாள் பரகாலநாயகி


"இவளுக்கு பிடித்தமான ராகத்தை இசைக்கிறேன். கொஞ்சம் சிரிக்கலாம்! யார் குழல் ஊதினார்? என்று தலை நிமிர்ந்தாவது பார்க்கலாம்! குறைந்தபட்சம், ராகத்தை கேட்டு கொஞ்சம் தலையையாவது அசைத்து ரசிக்கலாம்! 

இப்படி எதுவுமே செய்யாமல் அழுத்தமாக இருக்கிறாளே! 

நான் ஒரு ஆண் பிள்ளை. வலிய வந்து நாயகியான இவளை சமாதானம் செய்து பேச வந்தால், விருப்பம் இருந்தும் என்னை பார்க்க மாட்டேன் என்று பிடிவாதமாக நிற்கிறாளே!

(நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா) என்று பெருமாள் தன் முயற்சியில் தோல்வியுற்று சிறிது வெட்கப்பட்டவர் போல நின்று, (நாணினார் போல் இறையே

பிறகு மீண்டும் (பின்னும்) இவளை எப்படியாவது சமாதானம் செய்தே தீர வேண்டும் என்று தீர்மானித்து மேலும் முயற்சிக்கிறார். 

"இப்போது நைவளத்தோடு, சேர்த்து கூடவே அழகான வார்த்தைகளையும் சேர்த்து பெருமாள் வேணுகானம் செய்ய (நயங்கள் செய்வளவில்), திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி தன் நிலையை தானே சொல்கிறாள்.

"இதுவரை இவரை பார்க்க கூடாது என்று பல்லை கடித்து கொண்டு இருந்த பரகாலநாயகியான நான், என்னை அறியாமலேயே என் மனது கண்ணனிடத்தில் ஓடி, என் கண்களும் அவரை நோக்கி ஓட (என் மனமும் கண்ணும் ஓடி), ஒரு காலை ஊன்றி, மற்றோரு காலை மாற்றி வைத்து இருக்கும் அந்த திருவடிக்கீழ் என் அங்கம் படும்படியாக சேவித்தேன். (எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய)

திருவடி ஸ்பரிசித்த ஆனந்தத்தால் தலை நிமிர்ந்தேன்..  

'முன்பு பெருமாள் கிடைக்கவில்லையே!' என்ற விரகத்தில் உடல் மெலிந்து என் கை வளையல் தானாக அவிழ்ந்தது, 

இப்பொழுது, இவரை ஸ்பரிசித்த ஆனந்தத்தால் உடல் பூரிப்பு அடைந்து புஷ்டியாகி விட, நான் அணிந்திருந்த வலையலும், இடுப்பில் அணிந்திருக்கும் ஒட்டியானமும் இப்பொழுது உடல் பூரிப்பினால் உடைந்து தானாக நழுவி விழுந்தது (இப்பால் கைவளையும் மேகலையும் காணேன்)


இப்படி பூரிப்போடு தலை நிமிர்ந்து பார்த்த போது, அவருடைய இரண்டு காதுகளில் மகர குண்டலங்கள் அசைவதை பார்த்ததும் மனம் மயங்கி விட்டது. 

உடனே பெருமாள் என்னிடமுள்ள பிரியத்தால், நான்கு கைகளாலும் என்னை தூக்கி  விட்டார். 

ஒரு கையால் என் நெற்றியில் இருந்த வியர்வையை துடைத்து விட்டு, மறு கையால் என் மார்பை தடவி கொடுத்து, மற்றொரு கையால்  அவிழ்ந்த கேசத்தை முடிந்து விட்டு, நான்காவது கையால் என்னை ஆசுவாசப்படுத்தி தூக்கி, அவர் எதிரே நிற்க வைத்து கொண்டார் (கண்டேன் கனம் மகர குழை இரண்டும் நான்கு தோளும்).

என்ன நடக்கிறது? என்று புரியாத மயக்கத்தில் இருந்து பரகால நாயகியாகிய நான், 

இது எந்த திவ்ய தேசம்? நாம் எங்கு இருக்கிறோம்? எந்த ஊர் பெருமாள் இவர்? என்று நினைத்து, அவரிடமே, 'என்னிடம் இத்தனை ப்ரியம் வைத்துள்ளீர்களே! உங்கள் கோவில் எவ்வளவு தூரம் இருக்கிறது?' (எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில்? என்றேற்கு) என்று கேட்க, 

இந்த ஊர் நம் இருவருக்கும் சொந்த ஊர் ஆயிற்றே! இது தானே திருவாலி திருநகரி திவ்ய தேசம். (இது வன்றோ எழில் ஆலி, என்றார் தாமே) என்றார் பெருமாள். 

இப்படி வயலாலி மணவாளனுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறாள் பரகால நாயகி. 


Friday 21 January 2022

வருணன் என்றால் என்ன? "இமம் மே வருண..." என்று சந்தியாவந்தனத்தில் உள்ளது. வருண என்ற சொல்லுக்கு ஈடான தமிழ் சொல்லை திருமங்கையாழ்வார் பயன்படுத்துகிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோம்.

சந்தியாவந்தனத்தில், சூரியனுக்கும் ஆத்மாவாக (நமக்கும்) இருக்கும் பரமாத்மாவை பார்த்து, மாலையில் "இமம் மே வருண" என்று சொல்வோம். 

திருமங்கையாழ்வார், 

"அனலுருவாய் பெருமாள் இருக்கிறார்" என்று சொல்லி, பிறகு,

"வருண" என்ற வடசொல்லுக்கு ஈடாக "புனலுருவாய் பெருமாள் இருக்கிறார்" என்கிறார்.

அனல் உருவாய் - என்றால் "அக்னி போன்று பரமாத்மா இருக்கிறார்" என்று அர்த்தம்.

"தீ" எப்பொழுதுமே மேல் நோக்கியே செல்லும். மற்றவர்கள் தொட முடியாதபடி இருக்கும். தீக்கு அருகில் சென்றால் விழுங்கி விடும்.

அது போல, 

பெருமாளும் தேவர்களுக்கெல்லாம் தேவனாக, அவரை எவரும் தொட முடியாதபடி உயர இருக்கிறார். பெருமாள் பக்கத்தில் சென்றால், அப்படியே விழுங்கி விடுவார்.

இப்படி யாருக்கும் எட்டாதபடி அனலுருவாய் இருக்கும் பெருமாள், புனலுருவாயும் இருக்கிறார். 

புனல் உருவாய் - என்றால் "தண்ணீர் போன்று பரமாத்மா இருக்கிறார்" என்று அர்த்தம்.

தண்ணீர் எப்பொழுதுமே கீழ் நோக்கியே செல்லும். மற்றவர்களுக்கு கிடைக்கும்படி நிலத்திற்கு தானே வரும்.

அது போல,

பெருமாள் நிஜத்தில் அனலுருவாய் எங்கோ உயரத்தில் இருந்தாலும், "தானே இறங்கி ராமனாக, கண்ணனாக மனிதனை போன்று அவதாரம் செய்து, கோவிலில் அரச்ச அவதாரம் செய்து, நம்முடன் சமமாக பழகி, தானே வலிய வந்து கிடைக்கிறார்" என்கிறார்.

மாலையில் "இமம் மே வருண..." என்று சொல்லுமிடத்தில், "புனலுருவாய்" என்ற சொல்லின் அர்த்தத்தை நினைத்து சொல்லும் போது, பெருமாள் எத்தனை கருணையோடு நாம் காணும்படியாக கோவிலில், நம் வீட்டில் விக்ரக ரூபமாக அவதரித்து நிற்கிறார் என்பது புரியும்.


"அனலுருவாய்" என்று சொல்லும் போது, பெருமாளின் பர-தத்துவம், கம்பீரம் வெளிப்படுகிறது.

"புனலுருவாய்" என்று சொல்லும் போது, பெருமாளின் கருணை வெளிப்படுகிறது.


Thursday 20 January 2022

'என்னையெல்லாம் இப்படி பெருமாள் மதிக்கிறாரே' என்று நினைத்தேன். அந்த நினைவிலேயே பேரின்பம் பெற்றேன் என்று பரகால நாயகி நிம்மதி அடைகிறாள். பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்... அன்றாயர் குலமகளுக்....

"பெருமாள் தன்னையும் அவருடைய நாயகிகளோடு சேர்த்து கொண்டாரே!" என்று பேரின்பத்தில் பாடுகிறார்.

அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை

அலைகடலை கடைந்து 

அடைத்த அம்மான் தன்னை

குன்றாத வலி 

அரக்கர் கோனை மாள

கொடுஞ்சிலைவாய் 

சரம் துரந்து 

குலம் களைந்து வென்றானை, 

குன்றெடுத்த தோளினானை

விரி திரை நீர் விண்ணகரம் மருவி 

நாளும் நின்றானை, தண்குடந்தை கிடந்த மாலை

நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

அன்று, நீளா என்ற நப்பினைக்காக (கோபிகைக்கு) 7 காளையை அடக்கி, அவள் துயரத்தை போக்கிய தலைவனே!

(அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை)

மஹாலக்ஷ்மியை அடைவதற்காக அலை எறிகின்ற பாற்கடலை கடைந்தவரே !

(அலைகடலை கடைந்து


சீதாதேவியை மீட்பதற்காக, இலங்கைக்கு பாலம் அமைத்து, செல்வத்தில், படை பலத்தில் குறைவில்லாத வலிமையான ராக்ஷஸ அதிபதி ராவணனை தன்னுடைய தீர்க்கமான கோதண்டத்தில்,  அம்புகளைத் தொடுத்துப் பிரயோகித்து அரக்கர் குலத்தையே நிர்மூலமாக்கி வெற்றி பெற்றவரே (அடைத்த அம்மான் தன்னை குன்றாத வலி அரக்கர் கோனை மாள கொடுஞ்சிலைவாய் சரம் துரந்து குலம் களைந்து வென்றானை)

கோபிகைகள் மேல் ஒரு தூரல் கூட விழ கூடாதென்று, கோவர்த்தன மலையையே தன் கையால் குடையாக எடுத்தவரே! (குன்றெடுத்த தோளினானை)


இப்படி நீங்கள் செய்த ஒவ்வொரு காரியத்தை கவனிக்கும் போது, நீங்கள் ஒவ்வொரு நாயகிக்கும் பரிந்து கொண்டு அவரகளுக்கு வேண்டிய ரக்ஷணத்தை செய்கிறீர்கள் என்று தெரிகிறதே!

'நானும் ஒரு நாயகி இருக்கிறேன்' என்று தெரிந்து கொண்டு, பரந்த அலைகளையுடைய பொய்கைகள் நிரம்பிய திருவிண்ணகரிலே, அந்த நாயகியில் என்னையும் ஒருவளாக சேர்த்து கொண்டு, ஸர்வோத்தமருமான ஒப்பிலியப்பனாக நிற்கிறாரே! குடந்தையில் ஆராவமுதனாக எனக்காக படுத்து இருக்கிறாரே

நான் அல்பமானவள். 'என்னையெல்லாம் இப்படி மதிக்கிறாரே பெருமாள்' என்று நினைத்தேன். அந்த நினைவிலேயே பேரின்பம் பெற்றேன். (விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை, தண்குடந்தை கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே)

திருநெடுந்தாண்டாகம் என்பது ஆச்சர்யமான பிரபந்தம். மிகவும் ரசமானது.

இப்படி 9 பாசுரங்கள் திருமங்கையாழ்வார் பரகால நாயகியாக ஆகி, பெருமாளை தன் இதயத்தில் பூட்டி விட்டார்.

Wednesday 19 January 2022

"பெருமாள் கிடைத்தாலும் அழுது கொண்டே இருப்பேன்" என்று முடிவு செய்த பரகால நாயகி. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. தென்னிலங்கை யரண்சிதறி

திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி, தன் தோழியான பராங்குச நாயகியிடம், "தான் பெருமாளிடம் பிரணய கலகம் செய்யப்போவதாக சொல்கிறாள்".

தென் இலங்கை அரண் சிதறி

அவுணன் மாள சென்று 

உலக மூன்றினையும் திரிந்து 

ஓர் தேரால் ன் இலங்கு 

பாரதத்தை மாள ஊர்ந்த

வரை உருவின் மா களிற்றை தோழீ, 

என்றன் பொன் இலங்கு

முலை குவட்டில் பூட்டிக் கொண்டு

போகாமை வல்லேனாய் 

புலவி எய்தி,

என்னில் அங்கமெல்லாம் வந்து இன்பம் எய்த

எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

பரகால நாயகி, தன் தோழியிடம், 

"முதலில் ராமபிரானாக கண்டேன்.

பிறகு கண்ணனாக வந்தார். 

பிறகு வயலாலி மணவாளனாக வந்தார்.

பிறகு, நம்பெருமாளாக வந்தார்.

பிறகு, ஆமருவியப்பனாக வந்தார்.

பிறகு, சவுரிராஜனாக வந்தார்.

இவர் எப்பொழுது வருவார்? என்று பல நாட்கள் விரகத்தில் இருக்கும் போது, ஒரு நாள் இப்படி என்னை பார்க்க வருவார். 

இவர் வந்ததுமே, விரகம் தீர்ந்து போய்விடும்., அவரிடம் சிரித்து பழகுவேன்.

உடனே மீண்டும் அழ விட்டு, எங்கோ போய் விடுகிறார். 

இன்று வரட்டும். 

ப்ரணய கலகம் செய்து, அழுது கொண்டே இருக்கலாம் என்று தீர்மானித்து இருக்கிறேன்" என்றாள்.


"இப்போது பெருமாள் கிடைக்காமல் அழுகிறேன். 

இவர் வந்தாலும், கூடவே இருக்காமல், மீண்டும் கிளம்பி சென்று விடுகிறார். எப்படி இருந்தாலும் நான் அழத்தானே போகிறேன். 

ஒரே ஒரு பெண்ணை மீட்பதற்காக, இலங்கைக்கு சென்று, ஊரையே அலற அடித்து, மதில் சுவற்றை சிதற அடித்து, அந்த ராவணனை கொன்று  போட்டாரே! அந்த சீதையிடம் தான் அவருக்கு எத்தனை ப்ரியம்!! (தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள சென்று)

அது போல, 

பூலோகத்தை பலி சக்கரவர்த்தி பிடித்து விட, பூமி பிராட்டியை மீட்பதற்காக, பூமியோடு சேர்த்து ப்ரம்ம லோகம் வரை அடியெடுத்து வைத்து மீட்டாரே! 

அந்த பூமி பிராட்டியிடம் எத்தனை ப்ரியம் இருந்தால், அப்படி த்ரிவிக்ரமனாய் அளந்திருப்பார். (உலக மூன்றினையும் திரிந்து)

பாரத யுத்தம் செய்ததே இவர் தான். 'சமாதானம் செய்கிறேன்' என்று தூது சென்று, யுத்தத்தை கிளப்பி விட்டதே இவர் தான் 

பார்த்தசாரதியாக இருந்து தேரோட்டி, பாரத யுத்தம் செய்ததே இவர் தான்  (திரிந்து ஓர் தேரால் மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த)




ஏன் இப்படி இருக்கிறார்? 

அவரால் ஒன்றுமே செய்யாமல், ஆதிசேஷன் மேல் படுத்து கொண்டு இருக்கவே முடியாது.

ராமாயண யுத்தம் அப்படி போட்டாரல்லவா! அதோடு நிறுத்தி கொள்ள மாட்டாரோ? 

யுகத்துக்கு யுகம் சண்டை போடுகிறார்.


இப்படி தானாகவே பல வேலைகளை தானே இழுத்து கொண்டு, என்னிடம் 'நேரம் ஒதுக்க முடியவில்லை' என்கிறார். 

இன்று வரட்டும். பார்த்து கொள்கிறேன்.

அவர் எப்பொழுது வருவார்?  எப்பொழுது வருவார்?  என்று எதிர்பார்த்து தாபத்தோடு காத்து இருந்தால், திடீரென்று வருவார். 

இவர் வந்துவிட்டார் என்றதுமே, இருந்த தாபம் தீர்ந்து போவதால், சிரித்து பேசுவேன்.

"சரி தான். இவள் நாம் இல்லாமல் போனாலும், சாதாரணமாக தான் இருக்கிறாள் போல" என்று நினைத்து கொண்டு, மீண்டும் ஏதோ ஒரு வேலையை தானே ஏற்படுத்திக்கொண்டு கிளம்பி விடுகிறார். 

மீண்டும் அழுகை தான் எனக்கு மிச்சமாகிறது.

ஒரு நாள் சிரிப்பு, பிறகு மீண்டும் ஆயிரம் நாளும் அழுது கொண்டே தானே இருக்கிறேன்! 

சரியான முரடன் இவர் !

இப்பொழுது இவர் வரும்போது, நான் சிரித்து கொண்டு பேச போவதில்லை. 

இவரிடம் முகம் கொடுக்காமல், நான் இவர் இல்லாமல் எப்படி அழுதேன் என்று காட்டத்தான் போகிறேன். (புலலி எய்தி)

தோழீ!! நான் அழும்போது, என்னிடம் பரிவு காட்டி பேச அருகில் வருவார். 

மலைபோன்ற, பெரிய யானை போன்ற பெருமானை, இனி தப்பிக்க முடியாதபடி, என் மார்போடு கட்டி பூட்டி கொண்டு விடுவேன். (வரை உருவின் மா களிற்றை தோழீ, என்றன் பொன் இலங்கு முலை குவட்டில் பூட்டிக் கொண்டு போகாமை வல்லேனாய்)


இப்படி  சுதந்திரமாக இருக்க விடாமல் இவரை செய்கிறேனே!' என்று அப்பொழுதும் அழுவேன்.

முன்பு விரகத்தில், 'பெருமாள் கிடைக்கவில்லையே' என்று அழுதேன். 

இப்பொழுது 'பெருமாள் என் நெஞ்சில் இருக்கிறார்' என்பதால் கிடைக்கும் பேரின்பத்தில் அழுவேன்" (என்னில் அங்கமெல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே) என்று பரகாலநாயகி, பெருமாள் தன்னிடமே கிடைத்து விட்டதாக சொல்லி சமாதானம் அடைகிறாள்.

பெருமாள் தன் இதயத்தில் நிரந்தரமாக தங்கி விட்டார் என்று நிலையில், திருமங்கையாழ்வார், பாசுரத்தை முடிக்கிறார்.

Tuesday 18 January 2022

நாரையை திருக்கண்ணபுரத்துக்கு தூது அனுப்புகிறாள் பரகால நாயகி. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம். செங்கால மடநாராய் இன்றே சென்று...

பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

செங்கால மடநாராய்

இன்றே சென்று

திருக்கண்ணபுரம் புக்கு

என் செங்கண் மாலுக்கு

என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்

இது ஒப்பது எமக்கு இன்பமில்லை

நாளும் பைங்கான மீதெல்லாம் உனதேயாக

பழனமீன் கவர்ந்து உண்ண தருவன்

தந்தால் இங்கே வந்து இனிதிருந்து 

உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் 

இனிது இன்பம் எய்தலாமே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

கொக்கில் ஒரு இனம் 'நாரை'. வெண்மையாக இருக்கும் நாரைக்கு கால் சிவப்பாக இருக்கும்.

ஒருநாள், மோகமுள்ள பக்ஷி ஒன்று (மடநாராய்) திருக்கண்ணபுரம் நோக்கி பறந்து சென்று கொண்டிருப்பதை பார்க்கிறாள் பரகால நாயகி.

அது உணவுக்காக கடலை நோக்கி தான் செல்கிறது என்று அறிந்து கொண்டாள்.


"திருக்கண்ணபுரத்தில் ஒப்பிலியப்பன் நிற்கிறாரே! அவரிடம் தனக்காக தூது செல்ல, அந்த நாரையை அழைக்கலாமா?" என்று நினைத்தாள் பரகால நாயகி.

"சிவந்த கால்களையுடைய நாரையே! நீ கடலுக்கு சென்று மீன் தேட வேண்டாம். 

நீ அதற்கு பதில் இன்றே திருக்கண்ணபுரம் செல்லேன்!

அங்கு மீன் போன்ற கண்களை உடைய சவுரிராஜன் இருக்கிறார். என் சித்தத்தை மயக்கிய செங்கண் மாலுக்கு, என் காதலருக்கு, என் துணைவருக்கு, 'இப்படி ஒருவள் உங்களுக்காக தவித்து, காத்து இருக்கிறாள்' என்று சொல்வாயாகில், அதை விட ஒரு பேருதவி ஒன்றும் இருக்க முடியாது. அதை விட பேரின்பம் ஒன்று கிடையாது எனக்கு" (செங்கால மடநாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பமில்லை) என்றாள் பரகாலநாயகி

"நான் எனக்கு உணவான மீனை சாப்பிடுவதற்காக கடலுக்கு செல்லும் போது, உனக்கு தூது செல்லுமாறு அழைக்கிறாயே! உனக்கு உதவி செய்தாலும், அங்கே எனக்கு யார் சாப்பிட கொடுப்பார்கள்?" என்று நாரை கேட்க,

"கவலையே படாதே! நீ அவரிடம் என்னை பற்றி சொல்லிவிட்டு, திரும்பி இங்கே வா. பெருமாளிடம் தூது சென்ற நீ, எனக்கு உறவினன் ஆகிறாய்! 

உனக்காக  சோலையாக இருக்கும் என்னுடைய தோட்டம் முழுக்க திறந்து விடுகிறேன். தோட்டம் முழுவதும் உனக்குத்தான். உனக்கு விருந்து வைக்கிறேன்.

அதில் உள்ள பெரிய குளத்தில் துள்ளி விளையாடும் மீன்களை நானே உனக்கு உண்ண தருவேன். உங்களை விரட்டவே மாட்டேன் (நாளும் பைங்கான மீதெல்லாம் உனதேயாக பழனமீன் கவர்ந்து உண்ண தருவன்)


நீ மட்டுமல்ல, உன்னோடு உன் காதலியான பெண் நாரையையும் அழைத்து கொண்டு வா. 

இந்த பெரிய தோட்டத்திலேயே நீங்கள் இருவரும் விளையாடி மகிழலாம்.

(தந்தால் இங்கே வந்து இனிதிருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே)

என்று நாரையிடம் தூது விடுகிறாள் பரகாலநாயகி.

திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி, நீயும் உன் பேடையும் என்று நாரையையும், முந்தைய பாசுரத்தில் இதே போல வண்டையும் சொல்கிறார். 

ஆசாரியனையும், அவருடைய தர்ம பத்னியையும் சொல்கிறார் என்பது தத்துவம்.

ஆசாரியன் தான், நமக்காக 'பெருமாளிடம் சென்று சிபாரிசு செய்கிறார்'. 

அப்படி பேருதவி செய்த குருவுக்கு, நாம் என்ன பதில் செய்து விட முடியும்?

தனக்காக தூது சென்று, பெருமாளிடம் நம்மை பற்றி சொன்ன நாரைக்கு தன் இடத்தையே கொடுத்து, அவருக்கு பிடித்த உணவை கொடுப்பது போல, குருவுக்கும், அவர் தர்ம பத்னிக்கும் சேவை செய்யவேண்டும் என்பதே தாத்பரியம்.

Sunday 16 January 2022

சிறு வண்டை தூது விடுகிறாள் பரகாலநாயகி. தேமருவு பொழிலிடத்து... பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்

பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

தேன் மருவு பொழில் இடத்து மலர்ந்த போது

தேன் அதனை வாய்மடுத்து

உன் பெடையும் நீயும்,

பூமருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த

அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,

ஆமருவி நிரை மேய்த்த அமரர் கோமான்

அணியழுந்தூர் நின்றானுக்கு 

இன்றே சென்று,

நீ மருவி 

அஞ்சாதே நின்று 

ஓர் மாது நின் நயந்தாள் 

என்று இறையே இயம்பி காணே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையழ்வார்)

பரகால நாயகியை ஆட்கொண்ட பிறகு, 'ஸ்ரீரங்கம் செல்கிறேன்' என்று சொல்லி விட்டு சென்று விட்டார் பெருமாள். 

பரகால நாயகி, 'வருவாரா?' என்று காத்து கிடக்கிறாள். 

வெகு நாட்கள் ஆகி விட்டது. 'என்னை மறந்து விட்டாரா?' என்று நினைக்கிறாள்.

தன் காதலனோடு சேர முடியாமல் தவிக்கும் பரகால நாயகி, ஒருசமயம் நந்தவனத்தில் (பொழில் இடத்து) தேன் நிரம்பி இருக்கும் (தேன் மருவு) மலர்ந்த பூக்களில் உள்ள (மலர்ந்த போது) தேனை வாய் முழுவதும் எடுத்து ஒரு ஆண் வண்டு தன் காதலியியுடன் சேர்ந்து குடிப்பதை பார்க்கிறாள் (தேன் அதனை வாய்மடுத்து).

தன் காதலனோடு சேர்ந்து தேன் குடித்து, அந்த பூவின் இதழ்களிலேயே படுத்து விளையாடும், ஆண் வண்டையும், அதன் காதலியையும் பார்த்து, தனக்காக தூது செல்லுமாறு கேட்கிறாள் பரகால நாயகி.

"பூக்களின் இதழில் உன் பேடையோடு விளையாடி, புள்ளிகள் ஏற்பட்டு இருக்கும் வண்டே! 

எம்பெருமாள் இங்கு இல்லை. எம்பெருமானிடம் என்னை பற்றி சொல்லேன்! 

என்னை அவருடன் சேர்க்க, எனக்காக தூது செல்வாயா? 

நீ எனக்கு இந்த உதவி செய்தால், உன்னுடைய ஆறு சிறு கால்களிலும் விழுந்து தொழுவேன் (உன் பெடையும் நீயும், பூமருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை)

மேலும்,

திருவரங்கம் செல்கிறேன்! என்று சொல்லி சென்றவர். தேவாதிதேவனான அவர், இப்பொழுது (மாயவரம் அருகில்) தேரழுந்தூர் என்ற திவ்ய தேசத்தில் இருக்கிறார் என்று கேள்வி படுகிறேன்.' என்றாள்.

அந்த ஜோடி வண்டு, "உன்னையும் அவரோடு சேர்த்து வைக்கிறேன். அவர் அடையாளம் சொல்லேன்" என்று கேட்க,

"முப்பத்து முக்கோடி தேவர்களையும் மேய்க்கும் என் நாதன், 

பிருந்தாவனத்தில் மேய்த்தது போதாதென்று, யமுனா நதியில் மேய்த்தது போதாதென்று, 

அந்த பசு மாடுகளை எல்லாம் கூட்டிக்கொண்டு, காவிரி தீரத்தில் வந்து மாடு மேய்க்க ஆசைப்பட்டு, அங்கு சென்று இருப்பதாக கேள்விப்படுகிறேன்" என்றாள் பரகால நாயகி.

'மாடு மேய்ப்பதில் ஏன் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது?' என்று வண்டு கேட்க,





"தேவர்களுக்கு அம்ருதம் கிடைக்க கூர்ம அவதாரம் செய்து முதுகை கொடுத்தார். அசுரர்கள் அம்ருதத்தை தூக்கி சென்று விட, அவர்களுக்காக மோகினி வேடம் போட்டு அம்ருதத்தை வாங்கி தந்தார். 

"தன்னிடம் என்ன கிடைக்கும் என்று பார்த்தார்களே தவிர, தனக்கு பெருமாள் தான் வேண்டும் என்று கேட்பவர்கள் குறைச்சல் தானே என்று நினைத்த இவர், தேவர்களை மேய்த்ததோடு, மாடுகளையும் மேய்க்கலாம் என்று வர, இந்த மாடுகளோ, தனக்கு போட்ட புல்லையும் உண்ணாமல், பெருமாள் திருவடியே போதுமென்று, இவர் பாதத்தையே நக்கி கொடுக்க, "பெருமாள் தான் வேண்டும்" என்று நினைக்கும் மாட்டின் மீது இவருக்கு பிரியம் ஏற்பட்டுவிட்டது' என்றாள்.

'அவர் அடையாளம் என்ன?' என்று வண்டு கேட்க,

"பசுமாட்டை தனக்கு பின்னால் நிறுத்தி கொண்டு, அதன் மீது ஒரு கையை போட்டு கட்டிக்கொண்டு (ஆமருவி), மற்றொரு கையில் சுருள் கோல் வைத்து கொண்டு, திருவழுந்தூர் என்ற தெரழுந்தூரில் நின்று கொண்டிருப்பார் (நிரை மேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக்கு). அது தான் அவரது அடையாளம்" என்றாள் பரகால நாயகி.


"சரி. இரண்டு நாள் கழித்து செல்லவா?" என்று வண்டு கேட்க,

"இன்றே செல்லுங்கள்" (இன்றே சென்று,) என்றாள் பரகால நாயகி.


"நீ சொல்வதால் போகிறேன். ஆனால் பயமாக இருக்கிறதே!" என்று சொல்ல,


"நீ அஞ்சவே வேண்டாம். அவர் மிகவும் சாந்த ஸ்வபாவம் உடையவர் (நீ மருவி அஞ்சாதே). தைரியமாக அவரை ஒரு சுற்று சுற்றிவிட்டு, 'உங்களை எதிர்பார்த்து ஒரு மாது காத்து கொண்டு இருக்கிறாளே!" என்று மட்டும் சொல்லி விட்டு, அவர் முகத்தை கவனித்து விட்டு வா" (நின்று ஓர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பி காணே) என்று சொன்னாள்,

"மாது என்று மட்டும் சொன்னால் போதுமா? அவரிடம், பரகால நாயகி என்று உங்கள் பெயரை சொல்லவேண்டாமா?" என்று கேட்க,


"எனக்கு தரிசனம் கொடுத்து, என்னை கட்டிக்கொண்டு, என்னை அழ விட்டு சென்றார். அவரிடம் "ஒரு மாது" என்று சொன்னாலேயே என்னை பற்றி தான் நினைவுக்கு வரும்" என்று சொல்ல,

"அவரின் முகத்தை கவனி என்று சொன்னாயே?" என்று வண்டு கேட்க,

"நீ என்னை பற்றி சொன்னதுமே 

அவளா! என்று என்னை அலட்சியமாக நினைக்கிறாரா? அல்லது

யாரை சொல்கிறாய் என்று தெரியவில்லையே! என்று நினைக்கிறாரா? 

அல்லது

அப்படியா! என்று கருணையோடு கேட்கிறாரா?

என்று கவனித்து எனக்கு சொல். 

அவர் அப்படியா!  என்று என்னை பற்றி நினைவோடு கேட்டால், அவர் என் மீது கருணை வைத்து இருக்கிறார் என்று அறிந்து கொள்வேன்" என்றாள் பரகால நாயகி.

Friday 14 January 2022

'என்னை அடிமையாக்கி விட்டு, ஸ்ரீரங்கம் சென்றாரே' என்று பரகால நாயகி சொல்கிறாள். பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்... மின்னிலங்கு திருவுருவும்...

பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

மின் இலங்கு திரு உருவும்

பெரிய தோளும்

கரி முனிந்த கை தலமும்

கண்ணும் வாயும்

தன் அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கும் 

மகரம்சேர் குழையும் காட்டி

என் நலனும் என் நிறையும்

என் சிந்தையும்

என் வளையும் கொண்டு 

என்னை ஆளும் கொண்டு

பொன் அலர்ந்த நறுஞ்செருந்தி பொழிலின் ஊடே

புனல் அரங்கம் ஊரென்று போயினாரே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

'மின்னல் போல ஜொலிக்கும் அவருடைய திரு உருவமும் (மின் இலங்கு திரு உருவும்), 

அவருடைய அழகிய பெரிய தோளும் (பெரிய தோளும்), 

குவலயாபீடம் என்ற யானை ஒரே குத்தில் வீழ்த்திய அந்த திரு கைகளும் (கரி முனிந்த கை தலமும்), 

அவருடைய அழகிய கண்களும், மந்தஹாசம் செய்யும் திருவாயும் (கண்ணும் வாயும்), 

அன்று மலர்ந்த நறுமணமிக்க பூக்களை கொண்டு, அவர் கழுத்தில் போட்டுக்கொண்டிருக்கும் பெரிய வைஜயந்தி மாலையும், அவர் காதில் போட்டுக்கொண்டிருக்கும் மகர குண்டலங்கள் அந்த வைஜயந்தி மாலையை ஸ்பரிசிக்கும் அழகையும் எனக்கு காட்டி (தன் அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி), 

எனக்கு எது நலமோ, எனக்கு எது நிறைவோ, அதை தானே நிர்வாகம் செய்வதாக ஆக்கி (என் நலனும் என் நிறையும்), 

என் எண்ணத்தையும், என் வளையல்களையும் எடுத்து கொண்டு, கடைசியில் என்னையே அவருக்கு அடிமையாக்கி கொண்டு விட்டு (என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு) 'போய் வருகிறேன்' என்று சொல்லி கிளம்பிவிட்டார். 

அவருக்கு அடிமையாகிய நானும் அவர் எங்கு செல்கின்றார்? என்று பார்த்தேன். 

திடீரென்று மறைந்து விடாமல், தன்னுடைய பின் அழகையும் காண்பித்து, பொன் நிறத்தில் பூக்கும் பொய்கையில் புதர் புதராக வளரும் செருந்தி பூக்கள் (சம்பகா புஷ்பம்) பூத்த நந்தவனத்திற்கு இடையே புகுந்து, 'எங்கள் ஊர் திருவரங்கம் செல்கிறேன்' என்று சொல்லி போகின்றாரே ! (பொன் அலர்ந்த நறுஞ்செருந்தி பொழிலின் ஊடே புனல் அரங்கம் ஊரென்று போயினாரே)' என்று பெருமாள் தனக்கு தரிசனம் கொடுத்து விட்டு சென்று விட்டாரே என்று கண்ணீர் சிந்துகிறாள்.

Thursday 13 January 2022

பெரியோர்களிடம் எப்படி பழக வேண்டும்? ஆளவந்தார் திருவனந்தபுரம் செல்ல வைத்த பாசுரம். அர்த்தம் தெரிந்து கொள்வோம். கெடுமிட ராயவெல்லாம் ...

பெரியோர்களை பார்க்கும் போது, "முதலில் அவர்களுடைய திருவடியை தான் பார்க்க வேண்டும். பிறகு தான் அவர்களின் முகத்தை பார்க்கவேண்டும்".

இது பெரியோர்களிடம் மரியாதையாக பழகும் முறை. 

ஒரு அரசனை பார்த்தாலும், இப்படி தான் பார்க்க வேண்டும்.

நம்முடைய ஆசாரியனை பார்த்தாலும், முதலில் அவருடைய திருவடியை பார்த்து விட்டு தான் அவருடைய முகத்தை பார்க்க வேண்டும்.

தெய்வத்தை பார்த்தாலும், முதலில் திருவடியை பார்த்து விட்டு தான், அவருடைய திருமுகத்தை பார்க்க வேண்டும்.


திருவடியை பார்த்து விட்டு, முகத்தை பார்ப்பது என்பது "மரியாதை".

முகத்தை பார்த்து விட்டு, பிறகு வெட்கப்பட்டு தலை குனிந்து திருவடியை பார்ப்பது என்பது "அன்பு".

திருவடியின் பெருமையை ஆளவந்தார் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் நமக்கு காட்டுகிறது.

திருமங்கையாழ்வார், திருவரங்கத்தில் நம்பெருமாள் முன்பு தம்முடைய திருநெடுந்தாண்டக பாசுரங்களை அனுபவித்துப் பாடினார்

அரங்கன், “ஆழ்வாரின் விருப்பம் என்னவோ?” என்று கேட்க, 

திருமங்கையாழ்வார், ”மார்கழியின் மோக்ஷ உத்ஸவத்தன்று வடமொழி வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியையும் அரங்கன் கேட்டருள வேண்டும்”  என வேண்டினார். 

அரங்கன் மகிழ்வுடன் இணங்கினார்


இதை படிப்படியாக சீர்படுத்தப்பட்டு, இதில் மோஹினி அவதாரம், திருக்கைத்தல சேவை, வேடுபறி, மற்றும் நம்மாழ்வார் மோக்ஷம் போன்றவை சேர்த்து பிரமாண்ட உத்ஸவமாக நாதமுனிகள் ஆரம்பித்தார்.

அவரை தொடர்ந்து ஆளவந்தார், சுவாமி ராமானுஜர் மற்றும் மணவாள மாமுனிகள் என்னும் ஆச்சாரியார்கள், தொடர்ந்து, இன்று வரை நிர்வகித்து வருகின்றனர்.

இந்த உத்ஸவத்திற்காக ஆழ்வார்திருநகரியில் இருந்து நம்மாழ்வார் விக்கிரகத்தை திருவரங்கம் கோயிலுக்கு எழுந்தருள செய்வார்கள்.  

இது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி முதல் பத்து நாட்கள் நடைபெறும்.

இந்நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி அரையர்களால் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும். 

இது பத்து  நாட்கள் இரவில் நடைபெறும். 

எனவே ’இராப்பத்து’ எனப்படுகிறது.  

இதுவே ’அத்யயன உத்ஸவம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.

அத்யயன உத்சவ காலத்தில், வைஷ்ணவ ஆசாரியர்கள் பெருமாளை விட்டு போகவே மாட்டார்கள்.

அத்யயன உத்ஸவத்தில் தான், திவ்ய பாசுரங்களை, பெருமாளே உட்கார்ந்து கேட்பார்.

பரம ரசிகர்களான ஆசாரியர்கள் பாசுரத்தையும், பெருமாள் கேட்பதையும் அனுபவிக்காமல் வேறு எங்காவது போக ஆசைப்படுவார்களா? 

இந்த அனுபவத்தை விடுவதற்கு யாருக்கு தான் மனம் வரும்?

இந்த அத்யயன உத்ஸவத்தை ஆரம்பித்தவரே நாதமுனிகள் தான்.

அவரை தொடர்ந்து நிர்வகித்து வந்தவர் ஆளவந்தார்.

"108 திவ்ய தேசங்களை நமது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து, திவ்ய தேச தரிசனம் செய்ய சொல்லி இருக்கிறார்களே! 

மேல் நாட்டு, மலை நாட்டு திவ்ய தேசங்கள் அனைத்தும் பார்க்க வேண்டுமே! பார்க்க வேண்டுமே!"

என்று ஆளவந்தார் ஆசைப்பட்டு கொண்டிருந்தார்.


அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. மேலும், நம்பெருமான் அனுமதிக்காக காத்து இருந்தார்.

அத்யயன உத்சவம் நம்பெருமாளுக்கு ஆரம்பமானது.

பாசுரங்களை கேட்டு, பெருமாளையும் பார்த்து ரசித்து கொண்டிருந்தார் ஆளவந்தார்.





பத்மநாபன் மீதான பாசுரம் வந்த போது, "அனந்தபுர நகர் புகுதும் இன்றே" என்று சொல்லும்போது, கொஞ்சம் வீசி சொல்லி, ஆளவந்தாரை அரையர் பார்க்க, 'இது தான் நம்பெருமாள் நியமனம்' என்று, அப்படியே புறப்பட்டு விட்டார்.


ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு, போகும் வழியில் உள்ள திவ்ய தேசங்கள் அனைத்தையும் சேவித்து கொண்டே, நடந்து நடந்து, 'திருவனந்தபுரம்'  வந்து சேர்ந்தார்.


பத்மநாபனை அங்கு மூன்று வாசல் வழியாக தான் பார்க்க முடியும். 

முதலில் திருவடி, பிறகு திருநாபி, பிறகு திருமுகம் என்று மூன்று ஸ்தானமாக பெருமாளை இங்கு பார்க்கலாம்.

'மூன்று உலகங்களாக விராட் புருஷனாக (வ்யாஹ்ருதி - பூ: புவ ஸுவ:) தானே இருக்கிறேன்' என்கிறார்.

ஸ்ரீரங்கத்தில் இருந்து நடந்தே வந்து, ஆசையோடு பார்க்க வந்த ஆளவந்தார், கோவிலுக்குள் வந்து, முதல் வாசலில் பெருமாளின் "திருவடியை" பார்த்தார்.

பார்த்து விட்டு, உடனேயே, திரும்பி விட்டார்.

சேவை செய்து வைப்பவர்கள், ஆளவந்தாரை கூப்பிட்டு, 'இதோ பாருங்கள் பெருமாளின் நாபி கமலம். ப்ரம்ம தேவனை படைத்த நாபி கமலத்தை பாருங்கள்' என்று காண்பித்து அழைக்க,

ஆளவந்தார் அவர்களிடம், "அதற்கு அதிகாரம் நமக்கில்லை. திரு நாபியை தரிசிக்கவோ,திருமுகத்தை தரிசிக்கவோ பிராட்டிக்கு தான் அதிகாரம். அடியேனுக்கு திருவடியே போதும்" என்று சொல்லிவிட்டு திரும்பினார்.

ஆளவந்தாரை திருவனந்தபுரம் கொண்டு வர செய்த நம்மாழ்வார் பாசுரம் :

கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார் விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் தடமுடை வயல் அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே

- திருவாய்மொழி (நம்மாழ்வார்)

கேசவா! என்ற மூன்றெழுத்து நாமத்தை சொன்னால் துன்பம் அனைத்தும்  தொலைந்து போகுமே! (கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன

இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு நரக வேதனைகளை அனுபவிக்க யமலோகம் யமதூதர்கள் அழைத்து செல்லும் போது, 

இங்கு ஏன் வந்தாய்? அனைத்து பாவங்களையும் நாசம் செய்யவல்ல, கேசவனை நீ பஜிக்கவில்லையா? கேசவனின் நாமத்தை சொல்பவர்களுக்கு நரக வேதனை நேராதே! கேசவ நாமத்தை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும், கேசவனை பூஜை செய்ததற்கு சமம் அன்றோ!' என்று எமதர்மன் கேட்பாரே!

கேசவா! என்று சொல்பவருக்கு எம பயமில்லையே! (நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்)

ஆதிசேஷன் மேல் விரும்பி பள்ளி கொள்பவன் வீற்று இருக்கும் (விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான்)

வண்டுகள் ரீங்காரம் செய்யும், தடாகங்கள் நிறைந்த, வயல்வெளிகள் நிறைந்த (சுரும்பு அலற்றும் தடம் உடை வயல்)

திருவனந்தபுரத்திற்கு இன்றே செல்வோமே! (அனந்தபுரநகர் புகுதும் இன்றே)


இதை கேட்டதும், ஆளவந்தார், நம்பெருமாள் உத்தரவாக ஏற்று,  திருவனந்தபுரத்திற்கு கிளம்பி விட்டார். 

Tuesday 11 January 2022

ஸ்ரீரங்கம் வா, உனக்கு இடம் தருகிறேன்' என்று பெருமாள் பரகால நாயகியிடம் சொல்கிறார். இருகையில்சங் கிவைநில்லா.. பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்

 பரகால நாயகியாக இருந்து, திருமங்கையாழ்வார் பாடுகிறார்.


இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்
இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட,பெருவயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்
பெரும் தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு 
ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து
என் பொரு கயல் கண்ணீர் அரும்ப புலவி தந்து
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!
- திருநெடுந்தாண்டகம் (திருமங்கையாழ்வார்)

பெருமாளுடைய மகத்துவம் தெரிந்ததால், அவருடைய பிரிவினால் விரகம் ஏற்பட்டு, உடல் மெலிந்து, நான் அணிந்திருந்த வளையல்கள் கூட என் கையில் நிற்காமல், தானே கழண்டு விழுந்து விடுகிறதே ! (இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்),

அவர் எப்பேர்பட்டவர் தெரியுமா?

பேரொலி எழுப்பும் அலைகளை உடைய பெருங்கடலில் உள்ள நீரை தன்னுடைய பெரிய வயிற்றில் நிரப்பி கொள்ளும் காளமேகத்தின் நிறத்தை ஒத்து இருப்பார். கருமுகில் போல வண்ணம் உடையவர். (இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட, பெருவயிற்ற கருமுகிலே ஒப்பர் வண்ணம்)

உலகத்தையே உண்டவர். பூமி பிராட்டி மீது அத்தனை அன்பு அவருக்கு, (உலகுண்ட பெருவாயர்) அது போல, பரகால நாயகியான என்னிடத்திலும் பேரன்பு உடையவர். என்னையும் அப்படியே விழுங்கிவிடுவார்.

பெருமாள் ஆசையோடு என்னிடத்தில் பேசுவதற்காக அருகில் வந்தார் (இங்கே வந்து). நானும் குழைந்து குழைந்து அவர் முன் நின்றேன். 

என்னிடம் பேசிக்கொண்டிருந்த பெருமாள், திடீரென்று "சற்று இரு" என்று சொல்லிவிட்டு திரும்பி சென்றார்.

இப்படி எங்கே அவசரமாக செல்கிறார்? என்று கொஞ்சம் எட்டி பார்த்தேன்..

அங்கு பெருமாளை பார்க்க, கூட்டமாக ரிஷிகள் வந்திருந்தனர். 
பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்து, தவம் செய்து இப்போது பெருமாளை பார்க்க வந்து இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ரிஷிகளுக்கு தன் தரிசனத்தை கொடுக்க பெருமாள் கிளம்பி இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன் !

பெருமாளும் அந்த ரிஷிகளுடன் பேசிக்கொண்டிருந்தார் 

இப்படி என்னை விட்டு விட்டு சென்றுவிட்டாரே! என்ற அசூயை எனக்கு இல்லை. 
அவர்கள் தவத்துக்கு பலனாக பெருமாள் தரிசனம் தருகிறார்  என்று அறிகிறேன்! (பெரும் தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ)

அவர்களிடம் பேசி விட்டு, ரிஷிகளுக்கு, 'ஒரு கையில் சங்கும், ஒரு கையில் கதை ஏந்தி தரிசனமும் கொடுத்தார்.'

(ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி)


இப்படி எப்பொழுதுமே இவரை சுற்றி ரிஷிகள் கூட்டமும், தேவர்கள் கூட்டமும் சூழ்ந்து கொண்டே இருக்க, எனக்கு நேரம் ஒதுக்க பெருமாளால் முடியவில்லையே! என்றதும் என் கண்களில் நீர் வழிய (என் பொரு கயல் கண்ணீர் அரும்ப புலவி தந்து), என்னிடம் பேரன்பு கொண்ட பெருமாள், இத்தனை காரியங்கள் இடையிலும் என்னை திரும்பி பார்த்து விட்டார்.

உடனே என்னை சமாதானம் செய்து, "நம்முடைய ஊர் ஸ்ரீரங்கம் உள்ளது. அங்கு உன்னையும் அழைத்து வைத்து கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றாரே ! (புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!) என்று பரகால நாயகி தன்னிடம் பிரியம் கொண்டுள்ள பெருமாளை நினைத்து உருகி நிற்கிறாள்.

Monday 10 January 2022

சீதாதேவிக்கு ஏற்பட்ட நிலை என்ன? சீதாதேவி, ராமபிரானை முதன்முதலாக பார்க்கிறாள். அப்போது, சீதாதேவிக்கு ஏற்பட்ட நிலையை, பரகால நாயகி பார்த்து சொல்கிறாள். பாசுரத்தின் அர்த்தத்தை கொண்டே தெரிந்து கொள்ளலாம். மைவண்ண நறுங்குஞ்சி.

சீதாதேவி ராமபிரானை முதன்முதலாக பார்த்த போது, சீதாதேவிக்கு ஏற்பட்ட நிலையை, பரகால நாயகி பார்த்து சொல்கிறாள். 

மை வண்ணம் நறுங்குஞ்சி 

குழல் பின் தாழ

மகரம் சேர் குழை 

இரு பாடு இலங்கி யாட

எய் வண்ண வெஞ்சிலையே துணை ஆ இங்கே

இருவராய் வந்தார் 

என் முன்னே நின்றார்

கைவண்ணம் தாமரை வாய் கமலம் போலும்

கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே,

அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழீ.

அவரை நாம் தேவரென்று அஞ்சினோமே!

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

முதல் 10 பாசுரங்களை, 'பரகாலன்' என்ற புகழ் பெற்ற திருமங்கையாழ்வார், தன் நிலையில் இருந்து கொண்டே எம்பெருமானை நினைத்து உருகி பாடுகிறார்.


அடுத்த 10 பாசுரங்களை, பரகால நாயகி என்ற கோபிகையாக தானே ஆகி, எம்பெருமானை அடைய முடியாத விரகத்தில் கிடக்க, தனக்காக தன்னுடைய தாய், தன் மகள் படும் வேதனையை கண்டு வருந்தி புலம்புவது போல பாடுகிறார்.

கடைசி 10 பாசுரங்களில், 9 பாசுரங்களை பரகால நாயகி என்ற கோபிகையாகவே இருந்து, தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பாடுகிறார். 

திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகி, திருவாலி திருநகரில் இருக்கும் 'வயலாலி மணவாளனை' கோதண்டத்துடன் தரிசித்தார்.

நாயகியான இவள், சீதாதேவி, இந்த கோதண்ட ராமரை மிதிலையில் எப்படி பார்த்து இருப்பாள்? என்ன பாடுபட்டு இருப்பாள்? என்று நினைக்கிறார்.

பரகால நாயகியாக பாடும் முதல் பாசுரம் இது.

மிதிலாபுரியில் பெருமாள், இளைய பெருமாளான லக்ஷ்மணரோடு, விசுவாமித்திரர், மற்றும் பல ரிஷிகளின் கூட்டத்தின் மத்தியில் நடந்து வருகிறார்.


விசுவாமித்திரர், மற்றும் கூடவே வந்த மற்ற ரிஷிகளுக்கு ராமபிரானாக வந்திருப்பது "பரவாசுதேவன்" என்ற ஞானம் இருந்தது.


அன்று ராமபிரானை மிதிலாபுரியில் கண்ட சாதாரண மக்களுக்கு, "இவர் யார்? என்று தெரியாமல் போனாலும், இயற்கைக்கு அப்பாற்பட்ட இவருடைய பேரழகை பார்த்ததிலேயே மயங்கி இருந்தனர்.





"பல ஜென்மங்களாக யோகாப்யாஸம் செய்து, ஹ்ருதயத்தில் சாக்ஷாத்கரிக்க வேண்டிய பரம்பொருள், சர்வ சாதாரணமாக ரூபம் தரித்து அனைவரும் பார்க்கும் படியாக நடு வீதியில் வந்தால், அஞானிகள் என்ன பாடுபடுவார்கள்? என்ன நிலையில் இருந்தார்கள்?" என்று கம்ப ராமாயணத்தில் வர்ணிக்கிறார்.


ராமபிரானின் தோளை முதலில் பார்த்தவர்களால், அவர்கள் கண்ணை அவர்களாலேயே திருப்ப முடியாமல், தோளையே பார்த்து கொண்டிருந்தனர்.


ராமபிரான் மிதிலா வீதியில் திருவடி வைத்து நடந்து கொண்டிருக்க, அந்த திருவடியை முதலில் பார்த்தவர்களால், வைத்த கண்ணை பிரட்ட முடியாமல், திருவடியையே பார்த்து கொண்டிருந்தனர்.


'அவதார காலத்தில் தான் பெருமாள் இப்படி இருந்தார்' என்று இல்லாமல், வைகுண்டத்திலும் "ஸதா பஸ்யந்தி சூரய: ! ஸதைக ப்ரிய தர்சன:" என்றபடி பெருமாளை எப்பொழுதும் நித்ய சூரிகள் பார்த்து கொண்டே இருக்கிறார்கள்.


எத்தனை முறை பார்த்தாலும், பார்த்து கொண்டே இருந்தாலும், மேலும் மேலும் உற்சாகமே உண்டாகுமே தவிர, ஆசை உண்டாகுமே தவிர, அலுக்கவே அலுக்காத படி பெருமாள் இருக்கிறார்

பார்க்க பார்க்க பிரியம் வளரும். பிரியம் வளர வளர மேலும் மேலும் பார்க்க தோன்றும். பார்க்க பார்க்க மேலும் பிரியம் வளரும்

வேறு ஒரு அந்நிய விஷயத்தை நினைக்க கூட தோன்றாது. வேறொரு விஷயத்தை பற்றி நினைக்க ஆசை கூட எழும்பாது. எப்பொழுதும் பெருமாளையே நினைத்து கொண்டிருக்க தோன்றும் படியாக இருக்கிறார்.

மோக்ஷமடைந்த நித்யசூரிகள் மட்டுமே வைகுண்டத்தில் அனுபவிக்கும் இந்த அனுபவத்தை, ராம அவதார காலத்தில், பெருமாள் அயோத்தியில் இருந்த போதும், மிதிலாவில் இருந்த போதும், வனவாசியாக மரவுரி தரித்து அலைந்த போதும், பார்ப்பவர்கள் அனைவருக்குமே இதே நிலை, இதே அனுபவம் ஏற்பட்டது.


காட்டில் ராமபிரான் இருந்த போது, ரிஷிகள் மட்டுமல்லாது, காட்டு மிருகங்கள் உட்பட, ராமபிரானையே பார்த்த வண்ணம் இருந்தது.


சபல புத்தியே கொண்ட, இங்கும் அங்கும் தாவக்கூடிய வானரர்கள் கூட ராமபிரானை வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டே இருந்தனர்.


வானரர்கள் மட்டுமா? பார்த்த மாத்திரத்தில், நரமாமிசம் உண்ணும் சூர்ப்பனகை கூட மனதை பறி கொடுத்து, நாணத்தை விட்டு, ராமபிரானிடம்  தன்னை மணந்து கொள்ளுமாறு வற்புறுத்தி கேட்கிறாள்.

தன்னை அடித்து வீழ்த்திய ராமபிரானிடம் நியாயம் கேட்க வேண்டும் என்று நினைத்த வாலீ, ராமபிரானை முதன்முறையாக பார்த்ததுமே, "பார்க்க பார்க்க ப்ரியம் வளரும்படியாக இருக்கிறீரே!" ("ப்ரிய தர்ஸனா") என்று ஆரம்பிக்கிறான்.


'தன் கணவன் வாலியை அடித்து வீழ்த்தியவர் இவர் தான்' என்று தெரிந்தும், ராமபிரானின் ரூபத்தை தரிசனம் செய்த மாத்திரத்தில், "இவரை போய் மனிதன் என்று சொல்லமுடியுமா? இயற்கைக்கு அப்பாற்பட்ட ரூப சௌந்தர்த்துடன் இருக்கிறாரே!" என்று பேச ஆரம்பித்து விடுகிறாள் தாரை.

(मनुष्य देह अभुदयम् विहाय दिव्येन देह अभ्युदयेन युक्तः || valmiki ramayan

அதே போல,

தன் கணவன் ராவணனை வீழ்த்திய செய்தி கேட்டு அலறி அடித்து கொண்டு வரும் மண்டோதரி, ராமபிரானின் ரூபத்தை தரிசனம் செய்த மாத்திரத்தில், சமாதானம் அடைந்து, "சங்கு சக்கரம் ஏந்தி இருக்கும் பரம்பொருளே" என்று பேச ஆரம்பிக்கிறாள்.


இப்படி "அப்ராக்ருதமான அழகுடன் இருக்கும் ராமபிரானை மிதிலையில் பலர் பார்த்து மயங்கினார்கள்! 

உண்மையில் பார்க்க வேண்டியவள் இன்னும் பார்க்கவில்லையே! 

அந்த சீதாபிராட்டி அல்லவோ இவரை பார்க்க வேண்டும்."

என்று பரகாலநாயகி நினைத்தாள்.

இப்படி இருக்க, அன்று சீதாதேவி, சிற்பவேலைபாடுகள் அமைந்த வித விதமான பதுமைகள் வைக்கப்பட்டிருந்த தன்னுடைய மாளிகைக்கு வந்தாள்.

மாடியில் ஏறி, அங்கிருந்து, மிதிலா நகர வீதியை, அங்கு விளையாடும் சிறுவர்களை பார்ப்பது சீதாதேவிக்கு வழக்கம்.


அன்றும், சீதாதேவி மாடியில் தன் தோழிகளோடு விளையாடி கொண்டிருந்த போது, மிதிலா நகர வீதியில், ராமபிரானும், கூடவே லக்ஷ்மணரும் விஸ்வாமித்ரருடன் நடந்து வந்து கொண்டிருந்தனர்.


ராமபிரான் மிதிலா நகரத்தின் அழகை பார்த்து கொண்டே வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது, அந்த மாளிகையை பார்க்கிறார். 

அதில் வைக்கப்பட்டு இருந்த பதுமைகளை ஒவ்வொன்றாக பார்த்து கொண்டே வந்த ராமபிரான், 'தங்க பதுமை போல அழகான ஒரு பொம்மை' ஒன்று நிற்பதை கவனித்தார்.

'பொம்மை தான்' என்று பார்த்த ராமபிரான், அதன் கண்கள் மட்டும் அங்கும் இங்கும் அலைவதை கவனித்து விட்டார்.


பொதுவாக பெண்களை பார்க்க மாட்டார். ஸதாச்சாரம் உடையவர் ராமபிரான். 

'தான் பார்த்தது பொம்மை அல்ல' என்று தெரிந்ததும், உடனே மறுபக்கம் தலையை திருப்பி கொண்டார்.


அடுத்த அடி எடுத்து வைக்க முயன்றும் முடியாமல், சீதாதேவியின் பொன் போன்ற முகம் மனதில் தெரிய, என்ன செய்வதென்று தெரியாமல் தலையை அங்கும் இங்கும் திருப்ப, ராமபிரான் காதுகளில் அணிந்து இருந்த மகர குண்டலங்கள் அசைந்தன. 


"உத்தம குலத்தில் பிறந்துள்ள நாம், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, அப்பா சொல்லும் பெண்ணை தான் விவாஹம் செய்து கொள்ள வேண்டும்" என்று நினைத்து இருந்தார் ராமபிரான்.


மனதை எப்பொழுதுமே தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும், மற்ற பெண்களை பார்க்கும் பழக்கமே இல்லாத ராமபிரானுக்கு, "இப்படி தன் மனது கட்டுப்பாட்டை இழந்து நிற்கிறதே. அப்பா பார்த்து தனக்கு விவாஹம் செய்து வைக்க வேண்டியிருக்க, இப்படி நாமே ஒரு பெண்ணை பார்த்தோம் என்று ஆகி விட்டதே! " என்று நினைத்ததும், ராமபிரானுக்கு கண்ணீரே வந்து விட்டது.





கூடவே வரும் லக்ஷ்மணர், ராமபிரான் கண்ணீரை பார்த்து விட்டு, "அண்ணா அங்கே என்ன பார்த்தார்? யாரை பார்த்தார்?" என்று பார்க்காமலேயே ஹ்ருதயத்தை புரிந்து கொண்டு விட்டார்.


உடனே அண்ணாவை பார்த்து, "அண்ணா! உங்கள் மனம் கலங்கவே கலங்காது. அப்படி ஒருவேளை கலங்கி இருந்தால், நீங்கள் பார்த்தது என்னுடைய மன்னியே தான். உங்கள் ஹ்ருதயம் என்றுமே பவித்ரமானது தான்" என்று சொல்ல, சமாதானம் அடைந்தார் ராமபிரான்.


இப்படி 'பதுமை' என்று ராமபிரான் பார்த்து இப்படி திகைத்து நின்ற சமயத்தில், சீதாதேவியும் ராமபிரானை பார்த்து விட்டாள்.


"ராமபிரானின் அழகை யாரெல்லாமோ பார்த்து பார்த்து மயங்குகிறார்களே! 

ராமபிரானின் அழகை கண்ட சீதாதேவி எப்படி மயங்கி இருப்பாள்?' 

என்று நினைத்த திருமங்கையாழ்வாராகிய பரகால நாயகி "சீதாதேவிக்கு என்ன அனுபவம் ஏற்பட்டது?" என்று  பாடுகிறாள்.


பெருமாளை பார்த்த அனைவருக்கும் அவர் மேல் ப்ரியம் வளரும். 

ப்ரியம் வளர வளர மேலும் பார்க்க ஆசை ஏற்படும். 


பெருமாளிடம் நமக்கு ஏற்படும் ப்ரியத்துக்கு (காதலுக்கு) தான் "பக்தி" என்று பெயர். 


இந்த பக்தி சீதாதேவிக்கு பெருமாளை பார்த்ததுமே ஏற்பட்டு விட்டது.

பொதுவாக,

பெரியோர்களை பார்க்கும் போதும், வணங்கும் போதும், அவர்களை உச்சந்தலை ஆரம்பித்து பார்க்க கூடாது.


பெரியோர்களை பார்க்கும் போது, "முதலில் அவர்களுடைய திருவடியை தான் பார்க்க வேண்டும். பிறகு தான் அவர்களின் முகத்தை பார்க்கவேண்டும்".

இது பெரியோர்களிடம் மரியாதையாக பழகும் முறை. 

ஒரு அரசனை பார்த்தாலும், இப்படி தான் பார்க்க வேண்டும்.

நம்முடைய ஆசாரியனை பார்த்தாலும், முதலில் அவருடைய திருவடியை பார்த்து விட்டு தான் அவருடைய முகத்தை பார்க்க வேண்டும்.

தெய்வத்தை பார்த்தாலும், முதலில் திருவடியை பார்த்து விட்டு தான், அவருடைய திருமுகத்தை பார்க்க வேண்டும்.


இந்த பாசுரத்திலோ, ராமபிரானின் கேசத்தில் ஆரம்பித்து திருவடி வரை வர்ணனை உள்ளது.

திருவடியை பார்த்து விட்டு, முகத்தை பார்ப்பது என்பது "மரியாதை".

முகத்தை பார்த்து விட்டு, பிறகு வெட்கப்பட்டு தலை குனிந்து திருவடியை பார்ப்பது என்பது "ப்ரேமை".

இந்த ப்ரேமையை கிருஷ்ண அவதாரத்திலும் பார்க்கிறோம்.

ஸ்ரீமத் பாகவதத்தில், பலராமனோடு வந்த கண்ணன் வேணுகானம் செய்து கொண்டே பிருந்தாவனத்துக்குள் பிரவேசிக்க, அதை கோபியர்கள் பார்க்கிறார்கள். 

குழல் ஊதும் கண்ணனை, மயில் இறகிலிருந்து திருவடி வரை கோபியர்கள் பார்க்கிறார்கள்.

बर्हा-पीडं नटवर-वपु: 

कर्णयो: कर्णिकारं

बिभ्रद् वास: कनक-कपिशं 

वैजयन्तीं च मालाम् ।

रन्ध्रान् वेणो: अधर-सुधया 

पूरयन् गोप-वृन्दै: 

वृन्दारण्यं स्वपद-रमणं 

प्राविशद् गीत-कीर्ति ||

- SrImad-BhAgavatam

கிருஷ்ண அவதாரத்துக்கு முன் ராம அவதாரம் இருப்பதால், கோபியர்களுக்கும் வழிகாட்டியாக சீதாதேவி இருக்கிறாள்.


இங்கு "சீதாதேவி என்ற நாயகி பெருமாளின் முகத்தை ப்ரியத்தோடு பார்த்து, பிறகு வெட்கி தலை குனிந்து அவர் திருவடியை பார்க்கிறாள்" என்பதை கவனித்த மற்றொரு நாயகியான 'பரகால நாயகி', சீதாதேவி பார்த்ததை இங்கு வர்ணிக்கிறாள்.


பொதுவாக, பிரம்மச்சாரிகள் தலையில் எண்ணெய் வைத்து கொள்வதில்லை. மேலும், நறுமணமிக்க பூக்களை அணிந்து கொள்வதுமில்லை.

மிதிலைக்கு வந்த போது ராமபிரான் பிரம்மச்சாரி

பல நாட்களாக விஸ்வாமித்ரருடன்  அயோத்தியிலிருந்து கிளம்பி, வந்து கொண்டு இருக்கிறார். 





மல்லிகை, சந்தனம் என்று நறுமணங்கள் பல விதமுண்டு. 

அதில், சில நறுமணங்கள் அளவுக்கு அதிகமாக நெடியை உண்டாக்கினால், அதுவே தும்மல் கூட ஏற்படுத்தும்.எரிச்சல் உண்டாக்கும்.

ராமபிரானுடைய கேசத்தில் இயற்கையாகவே ஒரு தெய்வீக நறுமணம் நாற்புறமும் வீசும். 

அந்த நறுமணம் அளவுக்கு அதிகமாக வீசினாலும், நெடி உண்டாக்காமல், பெரும் ஆனந்தத்தை உண்டாக்கும்.

ராமபிரான் சீதாதேவி இருக்கும் மாளிகை பக்கம் வந்ததும், அவர் கேசத்திலிருந்து கம கமவென்று ஒரு நறுமணம் (நறு) வீச, 'விளையாடி கொண்டிருந்த சீதாதேவி, "அது என்ன சுகந்தம்?" என்று பார்க்க, மாடத்திலிருந்து குனிந்து மிதிலா 'நகரவீதியை பார்த்தாள்' என்று பரகால நாயகி கண்டு சொல்கிறாள்.

"எங்கிருந்து இந்த நறுமணம் வருகிறது?" என்று தேடிய சீதாதேவி, மிதிலா வீதியில் நடந்து வரும், ராமபிரானின் கேசத்தை பார்த்துவிட்டாள்.


'தான் அனுபவித்த அந்த நறுமணம் (நறு) அவருடைய கேசத்திலிருந்து தான் வருகிறது' என்று உணர்ந்த சீதாதேவி, அவருடைய கேசத்தை கண்டு மயங்கி விட்டாள்.

 

எண்ணெய் தடவாத கேசமாக இருந்தாலும், கண்ணுக்கு இட்டுக்கொள்ளும் மை வண்ணத்தில் (மை வண்ணம்), நல்ல கருகருவென்று, இயற்கையான கருப்புடன் அடர்த்தியாக ராமபிரான் கேசம் இருப்பதை சீதாதேவி பார்க்கிறாள்.

மேலும், 

ஒவ்வொரு கேசமும் மூன்று சுருட்டைகளுடன் (त्रिशीर्ष:) (குஞ்சி)  தோள் வரை நீண்டு வளர்ந்து (குழல் பின் தாழ) இருந்ததையும், சீதாதேவி கவனிக்கிறாள்.


ரத்தினங்கள் பல உண்டு. 

பல வருடங்கள் வாழ்ந்த நாகத்திடம் 'நாக ரத்தினம்' உண்டாகும். 

அதுபோல, யானையின் தந்தத்தில் 'கஜ ரத்தினம்' உண்டாகும்.

முதலையிடம் "மகர ரத்தினம்" உண்டாகும்.

க்ஷத்ரியர்கள் பிறரிடம் யாசகம் வாங்கி ஆபரணங்கள் அணிந்து கொள்ள மாட்டார்கள். 

தானே யானையை அடக்கி, விஷமுள்ள கருநாகத்தை அடக்கி, முதலையை அடக்கி, அதில் கிடைக்கும் ரத்தினத்தை எடுத்து குண்டலமாக, மாலையாக அணிந்து கொள்வார்கள். 

மஹா வீரர்கள் என்று அடையாளம் காட்ட, இது போன்ற குண்டலங்கள் அணிவார்கள் க்ஷத்ரியர்கள்.

ராமபிரானின் சுகந்தமான, கிருஷ்ணமான (கருமையான), குஞ்சித (சுருண்ட) கேசத்தை பார்த்த சீதாதேவி, அந்த கருமையான கேசத்தில் பளீச் பளீச்சென்று மின்னல் போல அவருடைய இரு காதுகளிலும் (இரு பாடு) மகர குண்டலங்கள்  (மகரம் சேர் குழை) அலைவதையும்  (இலங்கி ஆட) பார்க்கிறாள். 

சீதாதேவி மாடத்திலிருந்து மிதிலா வீதியை பார்க்கும் போது, "ராமபிரான் முகத்தை தானே முதலில் பார்த்து இருக்க வேண்டும்? சீதாதேவி கேசத்தை எப்படி முதலில் பார்த்து இருக்க முடியும்?" 

என்ற கேள்விக்கு சேங்கனூரில் அவதரித்த பெரியவாச்சான் பிள்ளை அர்த்தம் சாதிக்கிறார்.

எங்கிருந்து இந்த சுகந்தம் வருகிறது? என்று அங்கும் இங்கும் சீதாதேவியின் கண்கள் அலைந்த போது, ராமபிரான் "தங்க பதுமை" என்று நினைத்து சீதாதேவியை பார்த்து விட்டார்.

"இது பொம்மை அல்ல" என்று அறிந்ததும், ராமபிரான் தலையை திருப்பி கொள்ள, அந்த சமயத்தில் சீதாதேவி "ராமபிரானின் கேசத்தை தரிசித்தாள்

என்று ஆழ்வாரின் ஹ்ருதயத்தை பெரியவாச்சான் பிள்ளை நமக்கு காட்டுகிறார்.

"பல வருடங்களாக வாழும் முதலையில் இருந்து கிடைத்த மகர ரத்தினத்தை ராமபிரான் அணிந்து இருக்கிறார்" என்று ஆழ்வார் சொல்கிறாரே?


ராமபிரான் எந்த முதலையை அடக்கினார்? என்று கேட்டால், அது இந்த அவதாரத்தில் நடந்தது இல்லையாம். 

தான் நாராயணனாகவே இருக்கும் போது, கஜேந்திரன் "ஆதிமூலமே" என்று காப்பாற்ற அழைத்த போது, ஒரு முதலையை வதம் செய்தாரே! அந்த முதலையிடமிருந்து கிடைத்த மகர குண்டலத்தை தான், தன்னுடைய ராம அவதாரத்திலும், கிருஷ்ண அவதாரத்திலும் அணிந்து கொண்டாராம். 

இந்த மகர குண்டலத்தை தன்னுடைய வீரத்தை மட்டும் காட்ட அணியவில்லையாம். தானே ஆதிகர்தா என்று உலகுக்கு காட்டவும், அவதார காலத்திலும் அணிந்து கொண்டாராம்.


ராமபிரானின் காதில் அணிந்து இருக்கும் மகர குண்டலங்களை பார்த்த சீதாதேவி, ராமபிரானை போன்றே இருக்கும், வெளுப்பாக இருக்கும் இளையவரான லக்ஷ்மணரும், கூடவே துணையாக (எய் வண்ண வெஞ்சிலையே துணை ஆ) வருவதையும் பார்க்கிறாள் சீதாதேவி. 

சூர்ப்பனகை ராமபிரானை பார்த்ததுமே, "மணந்து கொள்ள வேண்டும்" என்று ராமபிரானிடம் கேட்டு விடுகிறாள்.


'நான் ஏக பத்னி வ்ரதமுடையவன்' என்று ராமபிரான் சொல்ல, 

"ஒரு பத்னியுடன் தானே இருக்க வேண்டும். சீதையை ஒழித்து விடுகிறேன். நான் மட்டும் உங்களுக்கு ஏக பத்னியாக இருக்கிறேன்" என்றாள்.

இப்படி அநாகரிகமாக பேசும் இவளிடம் மேலும் பேச கூசினார் ராமபிரான். 

உடனே அருகில் இருக்கும் லக்ஷ்மணரை காட்டி, "அதோ என் இளைய சகோதரன். இப்போது மனைவி கூட இல்லை. என்னை போல விரதமும் கிடையாது. அவனிடம் பேசி பார்" என்று சொல்லிவிட்டார்.

திரும்பி பார்த்த சூர்ப்பனகை, "அடடா! இவர் கருநீலமாக இருக்கிறார். இளையவர் இவரை போலவே இருக்கிறார். நல்ல சிவப்பாக இருக்கிறாரே! இவரையே மணந்து கொள்வோம்" என்று நினைத்து, லக்ஷ்மணரிடம் சென்று, "உங்கள் அண்ணா, உங்களுக்கு என்னை நிச்சயம் செய்து இருக்கிறார். என்னை மணந்து கொள்ளுங்கள்" என்றாள்.

ஒரு பதிவ்ரதை இப்படி செய்வாளா?


மிதிலா வீதியில் ராமபிரான், இளையவரோடு இருவராய் வந்தும், சீதாதேவியின் கண் முன்னே ராமபிரான் மட்டுமே நின்றார் (இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்) என்று பரகால நாயகி சீதாதேவியின் பதிவ்ரதா தர்மத்தை பார்த்து சொல்கிறாள்.


இப்படி இளையவரோடு வந்து நிற்கும் ராமபிரானை பார்த்த சீதாதேவி, கோதண்டத்தை பிடித்து இருக்கும் திருக்கைகளை கவனித்தாள். 

அந்த உள்ளங்கைகள் செந்தாமரை வண்ணத்தில் இருக்க (கைவண்ணம் தாமரை), அந்த சமயம் ராமபிரானின் முகமும் தெரிய, அவருடைய உதடும் சிவந்த தாமரை போல இருப்பதை பார்த்த (வாய் கமலம் போலும்), சீதாதேவி, தைரியத்தை வரவழைத்து கொண்டு, தலை தூக்கி, பெருமாளின் கண்களையும் பார்த்து விட்டாள்." என்கிறாள் பரகால நாயகி.


"பெருமாளின் வக்ஷஸ்தலத்தை, முகத்தை நேருக்கு நேராக பார்க்க எனக்கு தகுதி இல்லை. சீதாதேவிக்கு மட்டுமே அந்த தகுதி" என்று ஆளவந்தார் அனந்தபத்மநாபனின் திருவடியை மட்டும் சேவித்து விட்டு திரும்பினார் என்று பார்க்கிறோம்.


'சரணாகதி செய்தவனுக்கு, பெருமாள் காட்சி கொடுத்தால்,' அது நியாயம்.

சரணாகதி செய்வதற்கு முன்பேயே, வலிய வந்து பெருமாள் காட்சி கொடுத்தால்?,... சாகஷாத்காரம்  பெற்றவன் "கைமாறு செய்ய முடியவில்லையே!" என்று எப்படி தவித்து, அவர் திருவடியை பார்ப்பானோ! 

அது போல, தானே மிதிலா நகருக்குள் வந்து, தான் பார்ப்பதற்கு முன்பேயே அவர் பார்த்து, இப்பொழுது தனக்கு முன்னால் வந்து நிற்கும் ராமபிரானை கண்டதும், ஒரு பக்தையை போல உருகி, சீதாதேவியும் பெருமாளின் கண்ணை பார்த்த பிறகு, அவருடைய திருவடியை பார்த்தாள்" என்கிறாள் பரகால நாயகி.

மேலும்,

அந்த கண்களின் ஓரத்தில் இளம் சிவப்பு ஓடி, தாமரை போன்று குளிர்ச்சியாக இருக்க (கண் இணையும் அரவிந்தம்), பெண் என்பதாலும், அச்சம், மடம், நாணம் உள்ள சீதாதேவியின் கண்கள், அதற்கு மேல் பார்க்க தைரியத்தை இழந்து,  தானாகவே கண்கள் தாழ்ந்து, பெருமாளின் திருவடியை பார்த்தது.

'அந்தோ! அந்த திருவடியும் தாமரை போன்று சிவந்து இருக்க' (அடியும் அஃதே), சீதாதேவி மனதை ராமபிரானிடம் பறிகொடுத்தே விட்டாள்.' என்கிறாள் பரகால நாயகி.


"இப்படி பார்த்தவர்கள் மயங்கும் பேரழகு உடைய பெருமாளிடம் நாம் அனைவரும் ப்ரேமை கொள்ளாமல், இது நாள் வரை ஏதோ பரதெய்வம் என்று தூர நின்றிருந்தோமே!" என்று தன் தோழியிடம் சொல்கிறாள்.

பெருமாள் இரண்டு விதமாக இருப்பார்.  

"நாராயணன்" என்று பார்ப்பவர்களுக்கு, நெருங்க முடியாதபடி 'தேவாதி தேவனாக' இருப்பார். மரியாதையோடு பழக தோன்றும்.

"நம் கண்ணன், நம் ராமன்" என்று பார்ப்பவர்களுக்கு, சுலபமாக யாவரும் நெருங்கும்படி, 'நாயகனாக' இருப்பார். ப்ரேமையோடு பழக தோன்றும்.


இப்படி சீதாதேவியின் நிலையை அருகில் நின்று கொண்டு பார்த்த பரகால நாயகி, "இவரை தேவன் என்று நினைத்தோமே! இவர் நமக்கும் நாயகன் அல்லவோ" என்று நினைத்தாள்.

இவர் நம்முடைய நாயகன் என்று அறிந்தும், நெருங்க முடியாமல், ஒரு வித அச்சம் ஏற்பட்டதாம் பரகாலநாயகிக்கு.


"கையில் கோதண்டத்துடன் இருக்கிறாரே! கையில் கோதண்டம் இருக்கும் போது, இவரை சீதாதேவி மட்டும் தானே நெருங்க முடியும். 

ஏகபத்னி வ்ரதனான இவரிடம் சூர்ப்பனகை தன் ஆசையை சொல்லி என்ன பாடு பட்டாள் என்று அனைவருக்கும் தெரியுமே!! 

இவருடைய இதயத்தில் சீதாதேவிக்கு மட்டுமே இடம் என்று தெரிந்த பின், இந்த நாயகனிடம் தன் விருப்பத்தை எப்படி சொல்வது என்று அஞ்சினோமே! என்கிறாள் பரகால நாயகி. (அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும், தோழீ! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே)

 'அஞ்சினோமே' என்று சொல்லி பரகாலநாயகி, வயலாலி மணவாளனை பார்க்காமல் திரும்பி கொண்டாள்.

இவ்வாறு கடைசி 10 பாசுரங்களில், முதல் பாசுரத்தில், திருமங்கையாழ்வார், தானே பரகால நாயகியாக ஆகி, சீதாதேவிக்கு அன்று ஏற்பட்ட அனுபவத்தை நமக்கு காட்டி விட்டார்.