Followers

Search Here...

Showing posts with label கிருஷ்ணன். Show all posts
Showing posts with label கிருஷ்ணன். Show all posts

Friday, 30 May 2025

ஶ்ரீ கிருஷ்ணரின் பத்னிகள் தங்கள் திருமணத்தை பற்றி சொல்கிறார்கள்

ஶ்ரீ கிருஷ்ணரின் மனைவிகள் வந்திருப்பதை பார்த்த திரௌபதி, அவர்களிடம் திருமணம் நடந்த நிகழ்வை பற்றி கேட்டாள்.

"ஜராசந்தனின் தலைமையில் பல மன்னர்கள் சிசுபாலனை எனக்கு மணம் செய்து வைக்க விரும்பினர். திருமணத்தை நிறுத்த நினைப்பவர்களுடன் சண்டையிட அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் கிருஷ்ணர் வந்து, அவர்கள் அனைவரையும் தோற்கடித்து, இரையை எடுத்து செல்லும் சிங்கம் போல என்னை அழைத்துச் சென்றார்" என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், ருக்மிணி.


"என் மாமா ப்ரசேதஸ் கொல்லப்பட்டார், என் தந்தை சத்ரார்ஜித், கிருஷ்ணரை தவறாகக் குற்றம் சாட்டினார். தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க, கிருஷ்ணர் ஜாம்பவானுடன் போரிட்டு, ச்யமந்தக மணியை திரும்பப் பெற்று, அதைத் திருப்பித் தந்தார். பின்னர் என் தந்தை வருத்தப்பட்டு, அந்த ரத்தினத்தை திரும்ப கொடுத்து, என்னையும் கிருஷ்ணருக்கே மணம் செய்து கொடுத்தார்" என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், சத்யபாமா..


“கிருஷ்ணர் என் தந்தையின் குகைக்குள் அந்த ச்யமந்தக மணியை தேடி வந்தார். அவர் யார் என்று தெரியாமல், என் தந்தை ஜாம்பவான், 27 நாட்கள் சண்டையிட்டார். கடைசியில், கிருஷ்ணரே ராமர் என்பதை உணர்ந்தார். பின்னர் அவர் கிருஷ்ணருக்கு ரத்தினத்தையும், என்னை அவரது மணப்பெண்ணாகவும் கொடுத்தார்.”, என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், ஜாம்பவதி.


“கிருஷ்ணரை என் கணவராகப் பெற நான் கடுமையான பிரார்த்தனைகளையும் விரதத்தையும் மேற்கொண்டேன். ஒரு நாள், அவர் அர்ஜுனனுடன் வந்து என்னை மணக்க ஒப்புக்கொண்டார்” என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், காளிந்தி.


“எனது சுயம்வரத்தில், கிருஷ்ணர் மற்ற எல்லா மன்னர்களையும் தோற்கடித்து, என்னைத் தன்னுடன் துவாரகைக்கு அழைத்துச் சென்றார்” என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், மித்ரவிந்தா.


“ஏழு வலிமையான காளைகளை அடக்கக் கூடியவர் யாரோ, அவர் என் பெண்ணை மணக்கலாம் என்று என் தந்தை சொன்னார். கிருஷ்ணர் அதை எளிதாகச் செய்தார், 7 காளைகளையும் அடக்கி, என்னை மணந்தார்” என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், சத்யா.


“நான் ஏற்கனவே விரும்பிய கிருஷ்ணரை, என் தந்தையே அழைத்து, முழுப் படையுடனும் என் தோழிகளுடன் அனுப்பி, என்னை மணம் செய்து கொடுத்தார்” என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், பத்ரா.


“எனது சுயம்வரத்தில் போட்டி நடந்தது. ஒரு மீன் மேலே கட்டப்பட்டு மறைந்திருந்தது, அதன் ப்ரதிபிம்பத்தின் ப்ரதிபிம்பமே  ஒரு பானை தண்ணீரில் காணப்பட்டது. பல மன்னர்கள் அந்த ப்ரதிபிம்பத்தை பார்த்து, மேலே இருந்த மீனை அடிக்க முயற்சி செய்தும், தவறினர். அர்ஜுனன் கிட்டத்தட்ட இலக்கைத் தாக்கினார், ஆனால் தவறிவிட்டார். பின்னர் கிருஷ்ணர் தனது அம்பை எய்து அதை சரியாகத் தாக்கினார். நான் அவர் மீது திருமண மாலையை அணிவித்தேன். மற்ற மன்னர்கள் கோபமடைந்து தாக்கினர், ஆனால் கிருஷ்ணர் அவர்கள் அனைவரையும் தோற்கடித்து, த்வாரகைக்கு ஒரு பிரமாண்டமான திருமணத்திற்காக என்னை அழைத்துச் சென்றார், என்று, தான் ஶ்ரீ கிருஷ்ணனை அடைந்த நிகழ்வை சொன்னாள், லக்ஷ்மணா.


பலராமரின் தாயார் ரோஹிணிதேவி, கிருஷ்ணனின் மற்ற தேவிகளை பற்றி விவரித்தாள். "இவர்கள் அனைவரையும், பௌமாசுரன் என்ற அரக்கன் சிறைப்பிடித்து வைத்திருந்தான். இவர்கள் அனைவரும் பல தேசத்து அரசர்களின் மகள்கள். அந்த அசுரன் இவர்கள் அனைவரையும் பூட்டி வைத்திருந்தான். கிருஷ்ணன் அந்த அசுரனை கொன்று, அனைவரையும் விடுவித்தான். தங்களை ஶ்ரீ கிருஷ்ணன் தான் ஏற்க வேண்டும் என்று கேட்க, அனைவரையும் ஏற்று கொண்டான் ஶ்ரீ கிருஷ்ணன். பின்னர் அனைவரையும் தனது த்வாரகைக்கு இளவரசியாக ஆக்கினான்" என்று கூறினாள்.

Monday, 11 June 2018

உலகில் இவ்வளவு சுக துக்கங்கள் இருக்க காரணமென்ன ?

பகவான் உலகை ஏன் படைக்கிறான்?




அனாதி காலமாய் மாயையில் மோஹித்து கிடக்கும் ஜீவக்கோடிகளை உத்தாரானம் செய்யவே பகவான் உலகை படைக்கிறான்.

பகவானின் விருப்பம் எது? 
உலகில் தோன்றிய ஜீவன்கள் தனது கர்த்தாவான நாராயணனையே காரணமான பரம் பொருள் என்றும், அவனை அடைவதே நமது லக்ஷ்யம் என்றும் தெரிந்து கொண்டு பகவத் பக்தி செய்து, முக்தி பெறுவார்கள் என்று பகவானின் விருப்பம்.

உலகில் இவ்வளவு சுக துக்கங்கள் இருக்க காரணமென்ன ?
* ஜீவனுக்கு கண்ணனை பார்ப்பதை விட காமினிகளைப் பார்ப்பதில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண குணங்களை சிந்திப்பதை விட காமினி, காஞ்சனம் (பணம்), கீர்த்தி (புகழ்) இவைகளை சிந்திப்பதில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண கதைகளை கேட்பதை விட காதல் கதைகளில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண நாமத்தை சொல்வதை விட வம்பு பேசுவதில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண பிரசாதத்தை சாப்பிடுவதை விட மது, மாமிசம், காபி, டீ இவைகளில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண சரண துளசியை முகருவதை விட சென்ட், முக பவுடர் இவைகளின் நறுமனத்தில் விருப்பம்.

* ஜீவனுக்கு ஸத் சங்கத்திற்கு போவதை விட சினிமாவிற்கு போவதில் விருப்பம்.

* ஜீவனுக்கு பகவானுக்கும், பாகவதர்களுக்கும் தொண்டு செய்வதை விட சீட்டாடுவதிலும், திருடுவதிலும் விருப்பம்.





இவ்வாறு புலன்களை கொடுத்தவனிடம் கூட நன்றி இல்லாமல், விரயமாக்கும் ஜீவனுக்கு பாபமே ஏற்படுவதால், பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது.

பல துன்பங்களை அனுபவித்தும், விரக்தி ஏற்படுவதில்லை.


Sunday, 10 June 2018

திருடுவது தவறு. கண்ணபிரான் ஏன் வெண்ணை திருடினார்? தெரிந்து கொள்வோம்...

ஸ்ரீ கிருஷ்ண பகவான். காரணமே இல்லாமல் ஒரு காரியமும் செய்ததில்லை.
குழந்தை கிருஷ்ணன்  வெண்ணெய் திருடுவது மட்டும் காரணம் இல்லாமல் இருக்குமா?
ராம அவதாரத்தில் ஏக பத்னி வ்ரதனாகவும், கம்பீர புருஷனாகவும் வாழ்ந்து காட்டினார்.




அரசனின் சந்ததி மிக முக்கியம் என்ற காரணத்தால் அரசனுக்கு மட்டும் பல திருமணம் அனுமதிக்கப்பட்டது.
இப்படி இருந்தும், ஏக பத்னி வ்ரதனாகவே இருந்தார் ஸ்ரீ ராமர்.

அவர் அனைவரிடமும் பேதம் இல்லாமல் அன்புடன் பழகுவார் என்றாலும், அவரை பார்த்தாலே அவர் கம்பீரம் அவரை நெருங்க விடாமல் தடுக்குமாம்.

ராமர், ஹனுமானின் பக்திக்கு ஈடு இல்லை என்று சொல்லி ஆலிங்கனம் செய்து கொள்கிறார்.


ஸ்ரீ ராமர் இத்தனை சுலபமாக இருந்தாலும், ஹனுமான் ஸ்ரீ ராமரின் கம்பீர தோற்றத்தை பார்த்து நெருங்க முடியாமல், அவர் அருகில் நெருங்கி கை கூப்பி நிற்கிறார். சகஜமாக பேச முடிவதில்லை.
ஹனுமனுக்கே இப்படி நிலை என்றால், எத்தனை ரிஷிகளுக்கு, ஸ்ரீ ராமர் 'பகவான்' என்று தெரிந்தும் பழக முடியாத படி, இவர் கம்பீரமாக உள்ளாரே என்று நினைத்து இருப்பார்கள்?
கம்பீரத்தை காட்டினால், பக்தன் தன்னை நெருங்க கூசுகிறான், என்பதால், விஷ்ணு தன் அடுத்த அவதாரமான கிருஷ்ண அவதாரத்தில் மிகவும் சுலபமாக தன்னை ஆக்கி கொண்டு, சிரித்து கொண்டு, அனைவரிடமும் சகஜமாக உறவு சொல்லிக்கொண்டு பழகினார்.

இவர் பகவத் கீதையை அர்ஜுனனுக்கு சொல்லும்போது குருவாக இவர் ஞானத்தை உபதேசிக்கும் போது கூட,
அர்ஜுனன் தேரின் மேல் அமர்ந்து கோண்டே, கிருஷ்ணர் சாரதியாக கீழே அமர்ந்து கொண்டே சொன்னார்.
அர்ஜுனன் "கிருஷ்ணர் தன் நண்பன் தானே" என்று நினைக்கும் அளவிற்கு தன்னை சுலபமாக்கி கொண்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.

இன்று வரை யாரும் சுலபமாக நினைக்கும் படியாக தன் ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை செய்து கொண்டார்.

இதில் மிகவும் ரசிக்கும் படியாக இருப்பது, குழந்தை பருவம் (little krishna).
இவர் செய்த வெண்ணெய் லீலை மிக பிரசித்தம்.
கோகுலத்திலேயே பணக்காரர், ஊர் தலைவன் நந்தபாபா.
இவர் வீட்டில் இல்லாத வெண்ணெயா!! மற்றவர்கள் வீட்டில் இருக்க போகிறது?

திருடுபவன் வெண்ணையா திருடுவான்?
அதுவும் கோகுலத்தில் இருக்கும் வரை தான் இந்த லீலை! ஸ்ரீ கிருஷ்ணர் செய்தார் என்பதை கவனிக்க வேண்டும்.




ஸ்ரீ கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும் போது, யாராவது "கிருஷ்ணா.. இந்தா வெண்ணெய். சாப்பிடு" என்று கொடுத்தால், "வேண்டாம். எனக்கு வெண்ணெய் பிடிக்காது."
என்று சொல்லி சிரித்துக்கொண்டே மறுப்பான்.

கோகுலத்தில் இன்று சென்றாலும் கூட, தயிர், மோர், வெண்ணெய் பிரசித்தம்.

கோபியர்கள் வெண்ணெய் தயாரித்து தினமும் அருகில் உள்ள மதுராவில் கொண்டு போய் வியாபாரம் செய்வார்கள்.
இவர்கள் தயாரிக்கும் வெண்ணெய்
  • வெண்மையாக இருக்கும். 
  • அதே சமயம், மிருதுவாக இருக்கும். 
  • கொஞ்சம் வெயில் பட்டாலும் இளகி விடும்.
இப்படி அருமையாக செய்த வெண்ணெயை, அவர்கள் வீட்டில் மிக உயரத்தில் யாருக்கும் தெரியாதபடி ஒளித்து வைத்து விடுவர்.
கண்ணன், யாருமில்லாத சமயம் பார்த்து, மெதுவாக சென்று, ஏறி கண்டுபிடித்து, வெண்ணையை எடுத்து சாப்பிட்டு, காலியான பானையையும் உடைத்து விட்டு சிரிப்பான்.

இந்த லீலை குழந்தை விளையாட்டு போல இருந்தாலும், பகவான் செய்யும் லீலைகளில் காரணம் இருக்குமே !

கிருஷ்ண பக்தன், தன் பக்தியை மற்றவர்களுக்கு வெளி காட்டாமல் உலகத்திற்கு பயந்து தன்னை ஒளித்துக்கொள்வான்.
உலக விஷயங்களில் நாட்டமில்லாமல், உயர்ந்த லட்சியமான "கிருஷ்ண பக்தியே லட்சியம்" என்று இருப்பான்.
அவன் மனதும் மிகவும் ம்ருதுவானதாக இருக்கும்.
'கிருஷ்ணா' என்ற சொல்லை கேட்டாலே மனம் இளகி விடும்.
மனதை எப்பொழுதும் தூய்மையாக வைத்து இருப்பான்.

இப்படி தன் பக்தியை மறைத்து கொண்டு உலகத்திற்கு தன்னை வெளிப்படுத்தி கொள்ள பயந்து கொண்டு இருக்கும் மகாத்மாக்களை, யார் கவனிக்கிறார்களோ இல்லையோ, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கவனிக்கிறார்.
இப்படிப்பட்ட ஞானிகளுக்கு தானே, வலிய சென்று தன்னை வெளிக்காட்டுகிறான். 

"ஒளிந்து இருக்கவே ஆசைப்படும் தன் பக்தனை" உலகிற்கு காட்டி மகிழ்கிறார்.
"சூரதாஸ், மீரா, ஆழ்வார்கள், ராமகிருஷ்ணர், கிருஷ்ண  சைதன்யர், துளசி தாசர்..." என்று தன்னை பற்றி வெளிக்காட்டி கொள்ளாத எத்தனை மகாத்மாக்கள், இந்த பாரத பூமியில் இருந்தார்கள், இருக்கிறார்கள்.

உண்மையான பக்தனை, கிருஷ்ண பரமாத்மாவே உலகிற்கு காட்டி விடுகிறார் என்று பார்க்கிறோம்.

குழந்தையாக இருந்த போது "வெண்ணெய் திருடும் லீலையாக" இந்த ரகசியத்தையே காட்டினார் ஸ்ரீ கிருஷ்ணர்.
  1. உயரத்தில் வைத்த வெண்ணையை போல, நம் பக்தியை உயர்வான கிருஷ்ணரிடம் வைத்தோம் என்றால், 
  2. ஒளித்து வைத்த வெண்ணையை போல, நமக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள பக்தியை ரகசியமாக வைத்துக்கொண்டோம் என்றால்,
  3. வெண்மையாக இருக்கும் வெண்ணெய் போல, நாமும் மன தூய்மை உள்ளவராக இருந்தோம் என்றால்,
  4. துளி வெயில் பட்டாலே உறுகிவிடும் வெண்ணெய் போல, நம் இதயமும் 'கிருஷ்ணா' என்ற சொல் கேட்டவுடனேயே மனம் உருகும் என்றால்,
  5. மிருதுவாக இருக்கும் வெண்ணெய் போல, நம் குணமும் மிருதுவாக இருக்கும் என்றால்,
ஸ்ரீ கிருஷ்ணனே வந்து, அந்த வெண்ணெய்  போன்ற மனதை தான் உண்டு, பானையை உடைப்பது போல, இந்த பிறவி கடலை உடைத்து, வைகுண்ட வாசலை திறந்து விடுகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

நம் வீட்டிலோ, கோவிலிலோ, நாமும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு வெண்ணெய் கொடுக்கும் போது, "அழுக்கான இந்த மனதையும்,  இந்த வெண்ணெய் போன்று தூயமையாகவும், ம்ருதுவாகவும், இளகும் படியாகவும் ஆக்கு" என்று பிரார்த்திக்க வேண்டும்.

மகான்களின் குணத்தை போன்று, நாமும் நமக்கு இருக்கும் சிறு பக்தியை மற்றவர்களுக்காக ஆடம்பரத்துக்காக வெளிக்காட்டி கொள்ளாமல், ஒளித்து வைத்து கொண்டு, உயர்ந்த கிருஷ்ண பக்தியே லட்சியமாக வைத்து இருக்க முயற்சிக்க வேண்டும்.

இப்படி இருந்தால், குருவின் அருளால், ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால், இந்த ஜென்மத்தோடு நம் சம்சார கடல் சுழற்சி முடிந்து, கிருஷ்ணனின் திருவருளால் மோக்ஷம் என்ற வைகுண்டத்தை அடைந்து விடலாம்.

கிருஷ்ண பக்தி சுலபம். கிருஷ்ணனும் சுலபம்.
கிருஷ்ண கதையும் சுலபம். வாருங்கள் ஸ்ரீ கிருஷ்ண பக்தி செய்வோம்.