Followers

Search Here...

Showing posts with label தாஸ. Show all posts
Showing posts with label தாஸ. Show all posts

Saturday 4 January 2020

சோகம் என்றால் என்ன? அத்வைத உபதேசம் என்ன சொல்கிறது? விஷிஷ்டாத்வைத உபதேசம் என்ன சொல்கிறது ? தெரிந்து கொள்வோமே!!

வேதம் ஒரு இடத்தில் "பரமாத்மா வேறல்ல, ஜீவாத்மா வேறல்ல" என்று "அத்வைதமாக" சொல்கிறது.

இன்னொரு இடத்தில் "ஜீவாத்மாக்கள் மோக்ஷம் அடைய, பரமாத்மா நாராயணனை துதிக்க வேண்டும்" என்ற பிரித்து "அத்வைதமாக" சொல்கிறது..




வேதம் "அத்வைதம் மட்டுமே சொல்கிறது என்று த்வைதத்தை புறக்கணிப்பது, முழுமையான வேதத்தின் அபிப்பிராயமாக இருக்க முடியாது".

அதே போல,
வேதம் "த்வைதம் மட்டுமே சொல்கிறது என்று அத்வைதத்தை புறக்கணிப்பது, முழுமையான வேதத்தின் அபிப்பிராயமாக இருக்க முடியாது".


"அத்வைதத்தில் ஒளிந்து உள்ள விசேஷ அர்த்தமான த்வைதத்தை சேர்த்து" சொல்வதே "விஷிஷ்டாத்வைதம்".
வேதத்தின் முழுமையான நோக்கத்தை சொல்வதே "விஷிஷ்டாத்வைதம்" (தெரிந்து கொள்ள படிக்கவும்).

ஜீவனாக பிறந்த நாம்,
கிருஷ்ண பக்தி செய்து (த்வைதம்) ,
கிருஷ்ண க்ருபைக்கு பாத்திரமாகி,
அவர் நம்மை மீண்டும் ஜீவனாக பிறக்க செய்யாமல், தன்னோடு சேர்த்து கொண்டு விட்டால் அதுவே மோக்ஷம் (அத்வைத நிலை).
----- விஷிஷ்டாத்வைதம்.

ஒரு சிஷ்யன் "தனக்கு ஒரு ஆத்ம குரு வேண்டும்" என்று ஆசைப்பட்டான்.
ஒரு நாள், ஒரு அத்வைத சந்யாசியை தரிசிக்க நேர்ந்தது.

அவரிடம் "தனக்கு உபதேசம் செய்யுமாறு" வேண்டினான்.
அவர் "ஸோகம்" (சோகம்) என்று உபதேசித்து, "இதையே எப்பொழுதும் சொல்லி கொண்டே இரு" என்று உபதேசித்தார்.

ஸோகம் (ஸ: அந்த: ஆத்மா ஆஹம்) என்றால், "உள்ளிருக்கும் ஆத்மாவே நான்" என்று அர்த்தம்.
மோக்ஷம் அடைந்த அத்வைத நிலை அது.

இதை புரிந்து கொண்டு ஜபம் செய்ய செய்ய, "உடல் நானல்ல, பிராணன் நான் அல்ல, மனசு நான் அல்ல, புத்தி நான் அல்ல... தனித்த பொருளாக உள்ளிருக்கும் ஆத்மாவே நான்" என்ற அனுபவம் ஏற்படும்.
இது ஒரு அத்வைத நிலை.

இப்படியே "ஸோகம்.. ஸோகம்.." என்று சொல்லிக்கொண்டு இருந்தான் இந்த சிஷ்யன்.




குருவின் கருணையால் "ஆத்மா தான் நான்" என்ற புரிதல் ஏற்பட்டாலும், மனதில் ஏனோ திருப்தி ஏற்படவில்லை அவனுக்கு.
ஏதோ ஒரு குறையை உணர்ந்தான்.

ஒரு சமயம், விஷிஷ்டாத்வைத சந்யாசியை கண்டான்.
அவரை பார்த்ததும் அவரிடமும் உபதேசம் பெறலாம் என்று ஆசைப்பட்டான்.

அந்த வைஷ்ணவரிடம் சென்று, "தனக்கு 'ஸோகம்' என்று ஏற்கனவே ஒரு குரு உபதேசம் செய்து இருக்கிறார்.. அதை தான் இன்று வரை ஜபித்து கொண்டு இருக்கிறேன்..
உங்களிடமும் உபதேசம் பெற ஆசைப்படுகிறேன்' என்றான்.
வைஷ்ணவர்,
"உன்னுடைய முதல் குரு உபதேசித்த மந்திரம் சரியானது தான்.. ஆனால் ஒரு அக்ஷரம் விட்டு போய் விட்டது..
அதனால் தான் உனக்கு திருப்தி ஏற்படாமல் இருக்கிறது..
'ஸோகம்' என்ற மந்திரத்தில், "தா" என்ற அக்ஷரத்தை முதலில் சேர்த்து "தாஸோஹம்" என்று சொல்" என்று உபதேசித்தார்.

"தாஸோகம்" என்றால், "உள்ளிருக்கும் ஆத்மா தான் நான். ஆனால் ஜீவாதமாகிய எனக்கு ஈஸ்வரன் இருக்கிறார். அந்த பரமாத்மாவின் தாஸன் நான்" என்று அர்த்தம்.

"மோக்ஷம் என்ற அத்வைத நிலையை அடைவதற்கு,
ஜீவனாக த்வைத நிலையில் இருக்கும் நாம், அந்த பரந்தாமனின் கருணையை பெற, அவருக்கு தாசனாக தொண்டு செய்யவேண்டும்"
என்று அத்வைதத்தில் சொல்லாமல் விட்ட விஷேச அர்த்தத்தை சேர்த்து கொடுத்தார் அந்த வைஷ்ணவ சந்நியாசி.

"தாஸோகம்" என்ற மந்திரத்தின் அர்த்தம் புரிந்து கொண்டு ஜபம் செய்ய செய்ய, "உடல் நானல்ல, பிராணன் நான் அல்ல, மனசு நான் அல்ல, புத்தி நான் அல்ல... தனித்த பொருளாக உள்ளிருக்கும் ஆத்மாவே நான்.
நான் ஜீவாத்மா. என்னை படைத்தவர் அந்த பரமாத்மா. எனக்கு ஆதாரமாக இருப்பவர் அந்த பரமாத்மா. நான் அவருக்கு தாஸன். அவருக்கு தொண்டு செய்வதே, என் கடமை. அவர் கருணையால் ஜீவாத்மாவாக இருக்கும் என்னை (த்வைத) மீண்டும் பிறக்க செய்யாமல் தன்னுடன் சேர்த்து (அத்வைதம்) கொள்வார்"
என்ற தெளிந்த ஞானம் ஏற்படும்.
இது அத்வைதத்தில் விசேஷ அர்த்தத்தை சேர்த்து கொண்ட "விஷிஷ்டாத்வைத" அனுபவ நிலை.




மனக் குறை நீங்கிய அந்த சிஷ்யன், "தாஸோகம்… தாஸோகம்" என்று ஜபம் செய்து கொண்டு இருந்தான்.

ஒரு சமயம், மீண்டும் தன்னுடைய முதல் குருவை பார்க்க நேர்ந்தது.
அத்வைத சந்நியாசி இவனிடம் "சோஹம் என்ற உபதேச மந்திரத்தை ஜபம் செய்கிறாயா?" என்று கேட்டார்.

"ஆம்.. சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.. அதனோடு "தா" சேர்த்து "தாஸோகம்" என்று இன்னொரு சந்நியாசி சொல்ல சொன்னார்.. அப்படியே சொல்லி கொண்டு இருக்கிறேன்" என்றான்.

அத்வைத சந்நியாசி "பரவாயில்லை... அவரும் ஒரு அக்ஷரம் விட்டு விட்டார். இப்பொழுது சொல்லிக்கொண்டு இருப்பதோடு 'ஸ' என்ற அக்ஷரத்தை சேர்த்து 'ஸதா ஸோகம்' என்று சொல்" என்று உபதேசித்தார்.

"ஸதா" என்றால், "எப்பொழுதும், எந்த நிலையிலும்" என்று அர்த்தம்.

"ஸதா சோகம்" என்றால் "எப்பொழுதும், எந்த நிலையிலும், உடல் நானல்ல, பிராணன் நான் அல்ல, மனசு நான் அல்ல, புத்தி நான் அல்ல... தனித்த பொருளாக உள்ளிருக்கும் ஆத்மாவே நான்" என்று அர்த்தம்.
இது ஒரு அத்வைத நிலை.

"ஆத்மாவே நான். ஜீவானாக பிரிந்து கிடக்கும் என்னை, அந்த பரமாத்மா சேர்த்து கொண்டால் தான், அத்வைத நிலை ஏற்படும். அவரே எனக்கு ஆதாரம். அவரே எனக்கு ஈஸ்வரன். அவரின் தாஸன் நான்" என்ற தெளிவுடன் இருந்த அந்த சிஷ்யன், இப்படி தனக்கு "ஸதா சோகம்" என்று உபதேசித்து விட்டாரே என்று, மீண்டும் வைஷ்ணவ சந்யாசியை பார்க்க சென்றான்.
விஷிஷ்டாத்வைத சந்நியாசி "பரவாயில்லை... அவரும் ஒரு அக்ஷரம் விட்டு விட்டார். இப்பொழுது சொல்லிக்கொண்டு இருப்பதோடு 'தா' என்ற அக்ஷரத்தை சேர்த்து 'தாஸ தாஸோகம்' என்று சொல். இதுவே முடிவான நிலை." என்று உபதேசித்தார்.

"தாஸ தாஸோகம்" என்றால், "உள்ளிருக்கும் ஆத்மா தான் நான். ஆனால் ஜீவாதமாகிய எனக்கு ஈஸ்வரன் இருக்கிறார். அந்த பரமாத்மாவின் தாஸனாக யார் இருக்கிறாராரோ, அவருக்கு தாஸன் நான். அவரே என் குரு. அவர் அந்த ஈஸ்வரனுக்கு அடியார். நான் அந்த அடியார்க்கு அடியான்" என்று அர்த்தம்.

"குரு வழியே செல்" என்று தீர்க்கமான முடிவை வைஷ்ணவ சந்நியாசி உபதேசம் செய்ய, அத்வைத சந்யாசியும் பிறகு மறுக்க இயலவில்லை.

இப்படியே "தாஸ தாஸோகம்.. தாஸ தாஸோகம்.." என்று சொல்லிக்கொண்டு அந்த வைஷ்ணவ சந்யாசிக்கு அடியான் என்று குருவுக்கு கீழ் படிந்த, குரு காட்டும் வழியை பின்பற்றினான் அந்த சிஷ்யன்.

குருவே நமக்கு துணை.