Followers

Search Here...

Showing posts with label மோக்ஷம். Show all posts
Showing posts with label மோக்ஷம். Show all posts

Friday 17 January 2020

மோக்ஷம் யாருக்கு கிடைக்கும்? உலக விஷயங்களில் விரக்தி எப்படி வரும்? தெரிந்து கொள்வோமே...

"மோக்ஷம் வேண்டும். மீண்டும் இந்த உலகில் பிறக்க கூடாது" என்று ஆசைப்பட்டால்,
முதலாவதாக, முதல் படியாக,
"நமக்கு உலக விஷயங்களில் விரக்தி வர வேண்டும்"
என்று சாஸ்திரம் சொல்கிறது.




இந்த விரக்தி, உலகை கண்டு பயப்படாத, ஆசையும் படாத  'வைராக்கியத்தை' (திடமான இதயத்தை) நமக்கு கொடுக்கும்.
நம் பாரத மண்ணில் வாழ்ந்த மகான்கள் எத்தனை வைராக்கியத்துடன் வாழ்ந்தனர் என்று நினைத்து பார்க்க வேண்டும்.

உலக விஷயங்களில் விரக்தி எப்படி வரும்? 
உலகத்தை உண்மையாக கவனித்தாலேயே நமக்கு விரக்தி வரும்.

"உண்மையை உண்மை என்று உணர்ந்தாலே", நமக்கு வைராக்கியம் கிட்டும்.
மோக்ஷ பாதைக்கு முதல் படியில் கால் வைத்து விடலாம்.

உலகம் உண்மையில் எப்படி இருக்கிறது? என்று பாருங்கள்...

"உலகத்தை கண்டு விரக்தி வருமா? என்று கேட்கிறாயே!! 
உலகத்தை பார்! உலகில் உனக்கு கிடைப்பது எல்லாம் கர்ம பலன் (cause and effect) தானே !" என்கிறது சாஸ்திரம்.

"அனைத்தும் கர்ம பலன்" என்று கண் எதிரே நிச்சயமாக தெரிகிறதே !!
இதற்கு சாட்சி நாம் தானே!!

  • ஒருத்தன் நொண்டியாக பிறக்கிறான்.
  • ஒருத்தன் கண் இல்லாமல் பிறக்கிறான்.
  • கண் இருந்த ஒருத்தனுக்கு, திடீரென்று கண் போய் விடுகிறது.
  • சிலருக்கு காது கேட்க முடியாமல் போய் விடுகிறது.
  • சிலருக்கு வாய் இருந்தும், தெளிவாக பேச முடியாமல் இருக்கிறது.
  • "அம்மா தாயே!" என்று பிச்சை கேட்பவனுக்கு கொஞ்சம் சாதம் போட வந்தால், சிலருக்கு வாங்குவதற்கு கையே இல்லை.
  • சிலருக்கு கால் இல்லாமல், இழுத்து இழுத்து கொண்டு கஷ்டப்படுகிறார்கள்.


  • சில ஜீவன்கள், மிருகங்களாக பிறந்து இருக்கிறது.
  • நாயாக பிறந்து வாழ்நாள் முழுக்க லொள் லொள் என்று கத்தி கொண்டே இருக்கிறது.
  • சில, பன்றியாக பிறந்து சாக்கடையில் உழல்கிறது.
  • மாடாக இருந்து, காலையிலிருந்து, மாலை வரை ஓயாமல் வயல் வெளிகளில் அலைந்து கொண்டு கஷ்டப்படுகிறது.
  • சில ஜீவன்கள் ஆடாக பிறந்து, இயற்கையான மரணம் கூட கிடைக்காதபடி, மனிதனிடம் வெட்டுப்பட்டு சாகிறது.
  • சில ஜீவன்கள், கோழியாக பிறந்து, இயற்கையான மரணம் கூட கிடைக்காதபடி, மனிதனிடம் வெட்டுப்பட்டு சாகிறது.

"உலகத்தை கண்டு விரக்தி வருமா? என்று கேட்கிறாயே!! 
இப்படி எவ்வளவு ஜீவன்கள், பிராணிகள் உலகில் கஷ்டப்படுகிறது!!" 
என்று கொஞ்சம் நிதானத்துடன் பார்..

இது மட்டுமா?


  • ஒரு 'பிராணிக்கு மற்றொரு பிராணி' சத்ருவாக இருக்கிறது.
  • 'மனிதனே மனிதனுக்கு' சத்ருவாக இருக்கிறான்.
  • மனிதனே இன்னொரு மனிதனை பணத்திற்காக குத்தி கொன்று விடுகிறான்.
  • சிலசமயம், காரணமே இல்லாமல் இன்னொரு மனிதனை கொன்று விடுகிறான்.
  • சில சமயம், தன் நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறான் என்று சொல்லி, ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொன்று விடுகிறான்.
  • சிலசமயம், வெளியூருக்கு சென்றவன் திடீரென்று எங்கு போனான்? என்று கூட தெரியாதபடி காணாமல் போய் விடுகிறான்
  • சிலசமயம், யாரிடம் கொலை செய்யப்பட்டானோ! யார் கொண்டு போனார்களோ!! என்று கூட தெரியாமல் தொலைந்து விடுகிறான்.


  • சில சமயம், குழந்தையாக இருக்கும் போதே இறந்து விடுகிறான்.
  • சில சமயம், குழந்தை இறந்து, தாய் தாங்க முடியாத வேதனையை அனுபவிக்கிறாள்.
  • சிலருக்கு, தகப்பனார் இறந்து விடுகிறார். தாயும் பிள்ளையும் கஷ்டப்படும்படியாக நேர்கிறது.
  • சிலருக்கு, தாய் இறந்து விட்டாள், தகப்பனும், குழந்தையும் கஷ்டப்படுகிறது
  • சிலருக்கு, தாயும் தந்தையும் இருவருமே போய் விட, குழந்தைகள் கஷ்டப்படுகிறது.

இத்தனை துயரங்கள் நம்மை சூழ்ந்து இருக்கும் போது, "சௌக்கியம் எங்கு இருக்கிறது?"




"சௌக்கியம்" என்பதே ப்ரமை (mirage) அல்லவா?

உலகில் சௌக்கியம் இருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கிறாய். அவ்வளவு தான்.
பாகவதம் சொல்கிறது,
"உன் தலையில் உள்ள பெரும் சுமையை தூக்க முடியாமல், 
கொஞ்ச நேரம் தோளில் மாற்றி வைத்து கொண்டதும், 'சௌக்கியம்' போல தெரியுமே!! 
அது போல தான், நீ உலகத்தில் அனுபவிக்கும் சௌக்கியமும்!!
சிறிது நேரத்திலேயே, 
நீ தோளில் வைத்து இருக்கும் பாரமே, உனக்கு வலியை கொடுக்க ஆரம்பித்து விடும் !!




அஞானியாக இருக்கும் வரை, 
பாவம், புண்ணியம் என்ற மூட்டைகளின் சுமையை, 
உன் தலையிலும் தோளிலும் தூக்கி கொண்டு அலைய தோன்றுமே தவிர, அதை வீசிவிட்டு நிம்மதியாக இருக்க தெரியாது. 

ஒரு துக்கத்துக்கும், இன்னொரு துக்கத்துக்கும் இருக்கும் இடைவெளி, 
உனக்கு சுகம் போல தெரிகிறதே தவிர, 
'உண்மையான சுகம் உனக்கு இந்த மூட்டை சுமையை தூக்கி கொண்டு அலையும் வரை உனக்கு கிடைக்காது'.

இந்த ஜென்மத்திலும், கடந்த ஜென்மங்களிலும், 
அவரவர்கள் செய்த பாவ புண்ணியத்தால் எத்தனை விசித்திரங்களை, ஏற்றத்தாழ்வை உலகில் கண்கூடாக பார்க்கிறோம். 

அது மட்டுமா?

அவரவர் செய்த புண்ணிய, பாவத்தால், எத்தனை விதமான வேற்றுமையை உலகில் பார்க்கிறோம் என்று  பார்! 



  • இதே உலகில் ஒருவன் மனிதனாக மதிக்கப்படுகிறான்.  
  • இதே உலகில் ஒருவன் மனிதர்களில் மகானாக மதிக்கப்படுகிறான்.
  • மனிதனாக பிறந்தும் ஒருவன் மதிப்பு இல்லாமல் இருக்கிறான்.
  • மனிதனாக பிறக்காமல் சில ஜீவன்கள் தேவதைகளாக, தேவர்களாக இருக்கிறார்கள்.
  • சிலர் மரமாக பிறந்து விடுகிறார்கள்.
  • சிலர் பக்ஷியாக பிறந்து பறந்து கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி பல வித வேற்றுமைகளுக்கு நடுவே,

  • ஒரு இடத்தில் சுகம் கிடைக்கிறது,
  • ஒரு இடத்தில் பயம் உண்டாகிறது.
  • ஒரு இடத்தில் சிந்தனை உண்டாகிறது.
  • ஒரு இடத்தில் மூப்பு உண்டாகிறது.
  • ஒரு இடத்தில் மரணம் உண்டாகிறது.
  • ஒரு இடத்தில் தாங்கமுடியாத ரோகம் வந்து சாகும் வரை  வேதனை உண்டாகிறது.

உலகத்தை பார்.
"உலகத்தை கண்டு விரக்தி வருமா? என்று கேட்கிறாயே!! 
இப்படி எவ்வளவு ஜீவன்கள், பிராணிகள் உலகில் கஷ்டப்படுகிறது!!" 
என்று கொஞ்சம் நிதானத்துடன் உலகத்தை பார்.."




பகவான் ஸ்ரீமன் நாராயணன் கருணையே உருவானவன் ஆயிற்றே !! 
இப்படி ஒரு கஷ்டங்களை நமக்கு தந்து இருக்க மாட்டாரே!!
கருணையே வடிவான, பெருமாள் நமக்கு இருந்தும், 

  • பிறக்கும் போதே, எதற்காக ஒருவனை குருடனாக பிறக்க செய்தார்?
  • என்ன காரணத்தால், ஒருவனை குருடனாக படைத்தார்? 
  • ஏன் ஒருவனை, பணக்கார குடும்பத்தில் பிறக்க செய்கிறார்?

என்ற கேள்வி எழும் போது, உன் கர்ம வினை (cause and effect) என்று காரணத்தை காட்டுகிறது நம் சாஸ்திரங்கள்.
"தெய்வ அனுகிரஹித்தால், உன் கர்ம வினையும் மாறும்" என்கிறது  நம் சாஸ்திரங்கள்.

நேரிடையாக தெய்வ அனுக்கிரஹம் பெற நமக்கு துப்பு இருந்தால், என்றோ வைராக்கியம் நமக்கு ஏற்பட்டு, மோக்ஷத்துக்கான பாதையில் சென்று இருப்போமே!!

மோக்ஷம் அடைய 'துப்பு' இல்லாத நமக்கு, 
'வைராக்கியம்' இல்லாத நமக்கு, 
வைராக்கியம் நிறைந்த, ஞானத்தில் உயர்ந்த ஒருவர்,  'குருவாக கிடைத்தால்', 
அவர் உபதேசமும், அவர் சரித்திரமுமே, 
நம் சித்தத்தை சுத்தம் செய்து, வைராக்கியத்தை கொடுத்து,  
நாம் தூக்கி கொண்டு செல்லும் இந்த பாவ, புண்ணிய மூட்டையை அவர் எடுத்துக்கொண்டு, 
தன் சிபாரிசை கொண்டு, தெய்வத்திடம் நமக்காக பிரார்த்தனை செய்து, ஞானத்தை கிடைக்க செய்து, 
இந்த உலகில் வாழும் வரை வைராக்கியம் குறையாமல், மன சஞ்சலமில்லாமல் வாழ கற்று கொடுத்து, 
தெய்வ பக்தி என்றால் என்ன? என்றும் காட்டி கொடுத்து, 
தெய்வத்திடம் நமக்கு ஆசையை உண்டாக்கி, 
மோக்ஷத்தில் ஆசையை உண்டாக்கி, 
பிறவா நிலை என்ற வைகுண்ட வாழ்வை, குருநாதர், நாராயணனிடம் பெற்று நம் கையில் கொடுத்து விடுகிறார். 

ஹிந்து தர்மத்தின் பெருமை அளவிடமுடியாதது !  
பெருமை அடையவேண்டும் ஹிந்துக்கள் ஹிந்துக்களாக பிறந்ததற்கு ! 

ஹிந்து தர்மம் புரியாமல், குருவையும் நம்பாதவர்கள், மறு பிறவியையும் புரிந்து கொள்ள முடியாதவர்கள், உலகில் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு காலத்தில் "உலகம் தட்டை" என்று உளறி நம்பியவர்களும் இந்த மூடர் கூட்டம் தான்.
கலிலியோவை அடித்து கொன்றவர்களும் இவர்கள் தான்.  
இந்த மூடர் கூட்டம்  சொல்லும் ஆன்மீகத்தை, ஹிந்து தர்மம் சொல்லும் ஆன்மீகத்தோடு ஒப்பீடு நினைப்பது கூட , ஹிந்து தர்மத்திற்கு பெருத்த அவமானம்.

"கடவுள் கருணை வாய்ந்தவர் என்று சொல்லி விட்டு, 
ஒரே பிறவி தான் ஜீவனுக்கு, மறுபிறவி கிடையாது"  
என்று மனிதர்களால் உருவாக்கப்பட்ட முட மதங்கள் சொல்கிறது.
இதை புத்தி உள்ள ஒரு மனிதன் நம்புவானா? 

பாரத மண்ணில் பிறக்காத மூட மதங்களை, சித்தாந்தங்களை, வெளி நாட்டினர் கூட இன்று கேள்வி கேட்கிறார்கள். 

பாரத மண்ணில் பிறந்தும் மூட மதங்களில் விழுபவனை, "அவன் செய்த பாப கர்ம வினை" என்று தானே சொல்ல முடியும்!! 




"கடவுள் கருணை வாய்ந்தவர்" என்று சொல்லி விட்டு, 

  • ஒரே பிறவி தான் என்கிறபோது, பிறக்கும் போதே கடவுள் கருணை இல்லாமல் எதற்காக ஒருவனை குருடனாக பிறக்க செய்தார்?
  • ஒரே பிறவி தான் ஜீவனுக்கு என்றால், என்ன காரணமும் இல்லாமல் ஒருவனை குருடனாக படைத்து ஏன் அந்த ஜீவனை தண்டித்தார்? 
  • ஒரே பிறவி தான் என்கிறபோது, ஏன் ஒருவனை பணக்கார குடும்பத்தில் பிறக்க செய்து ஒரு ஜீவனை வாழ வைக்கிறார்?

என்ற கேள்விக்கு மூட மதங்கள், தெய்வத்தை கருணை இல்லாதவன் என்று தான் பழிக்க வேண்டிவரும். 

மூட மதங்களை பற்றி ஆராய்ச்சி செய்வது கூட, ஒருவன் தனக்கே செய்து கொள்ளும் துரோகம்.

ஹிந்துவாக பிறப்பதே நாம் செய்த புண்ணியத்தால் தான்.

கீழ் புத்தி, பாவ புத்தி உடையவர்களுக்காக, போலி மதங்கள் ஒரு இடத்தில் உலகில் என்றுமே இருக்கதான் செய்யும். 

பாவத்தை வெறுப்பவர்கள். புண்ணியத்தை செய்ய ஆசைப்படுபவர்கள், ஹிந்துவாக வாழவே ஆசைப்படுவார்கள்.

பாவத்தை வெறுத்து, புண்ணியத்தையும் வெறுக்கும் முமுக்ஷுக்களும், ஹிந்துவாகவே பிறக்கிறார்கள். ஹிந்துவாகவே வாழ்கிறார்கள்.

1000 வருட அந்நிய போலி மதங்கள் ஆள முயன்றும், அழிக்க முடியாமல் ஹிந்து தர்மம் இருப்பதற்கு காரணம், அதன் அசைக்கமுடியாத ஆழ்ந்த கருத்துக்களே.. 

மற்ற மதங்களை மனிதர்கள் காக்கிறார்கள்.
ஹிந்து தர்மம் என்று இன்று அழைக்கப்படும் சனாதன தர்மத்தை, பகவான் நாராயணன், ருத்ரன், முப்பத்து முக்கோடி தேவர்கள் காக்கிறார்கள்.

தெய்வம் காக்கும் புண்ணிய தர்மத்தில் ஹிந்துவாக வாழ்வோம். 

போலி தத்துவங்களில் விழுந்து கிடைக்கும் அனைவரையும் ஹிந்து தர்மப்படி வாழ் வழி செய்வோம்.


Saturday 30 November 2019

கர்மாவுக்கும், கர்ம யோகத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தெரிந்து கொள்வோமே

சமைத்ததை அப்படியே சாப்பிட்டால் - சாதம்.
அதையே தெய்வத்திடம் காட்டி
"இன்று எனக்கு சோறு கிடைத்தது. அதை விட, வாயில் போட்டால் சுவைக்கிறது. இவை அனைத்துக்கும் காரணமான உயிரும் இருக்கிறதே. உனக்கு நன்றி. உயிரை நிற்க வைத்துள்ள நீயே இந்த உணவையும் ஜீரணம் செய்கிறாய்" என்று சொல்லிவிட்டு சாப்பிட்டால் - பிரசாதம்.



சாப்பாடு கிடைக்காமலோ, சாப்பிடாமலோ கிடந்தால் - பட்டினி.
சாப்பாடு சாப்பிடாமல், தெய்வ சிந்தனையுடன் இருந்தால் - விரதம்.

தாகம் எடுத்து குடித்தால் - தண்ணீர்.
தாகம் எடுத்து, தெய்வத்திடம் காட்டிவிட்டு, தெய்வ சிந்தனையுடன் குடித்தால் - தீர்த்தம்.

அருமையான பாட்டை அமைத்தால், கேட்டால் - இசை.
அருமையான பாட்டை தெய்வத்திற்காக அமைத்தால், கேட்டால் - கீர்த்தனம்.

ஈவு இரக்கம் கொண்டிருந்தால் - அவனுக்கு இதயம் உள்ளவன் என்று பெயர்.
இறைவனே அனைத்துமாக காட்சி தருகிறார் என்ற நினைவில் ஈவு இரக்கம் கொண்டிருந்தால் - இதயத்தில் இறைதன்மை கொண்டிருக்கும் அவனே கோவிலாகிறான்.

தனக்கும், உறவுக்கும், ஊருக்கும் உழைப்பது - செயல் (கர்மா).
தெய்வம் நம் செயலை பார்த்து திருப்தி அடைய வேண்டும் என்ற ஆசையில், தனக்கும், உறவுக்கும், ஊருக்கும் உழைப்பது - சேவை (கர்ம யோகம்).

தனக்காகவும், பிறருக்ககாவும் பல இடங்கள் செல்வது - பயணம்.
தெய்வம் ஆசைப்படுகிறது என்றும், தெய்வத்தை காணப்பதற்கும் பல இடங்கள் செல்வது - தீர்த்த யாத்திரை.



ஒழுக்கம், தர்மம், அடக்கம் என்று வாழ்பவன் - மனிதன்.
இறைவனே லட்சியம் என்று வாழ்பவன் - புனிதன்.

மனிதர்கள் தெய்வபக்தி இல்லாமல் செயலை செய்யும் போது, செய்யும் காரியங்கள் அனைத்தையும் கர்மமாக ஆகி, பாவம் புண்ணியம் சேர்த்து, யமனிடம் உதைப்பட்டு பின் மீண்டும் பிறந்து விடுகிறான்.

மனிதர்கள் தெய்வபக்தியுடன் செயலை செய்யும் போது, செய்யும் காரியங்கள் அனைத்தையும் கர்ம யோகமாக ஆகி, பாவம் புண்ணியம் அனைத்தும் அந்த தெய்வமே ஏற்று விடுவதால், யமனிடம் உதைப்படாமல், மோக்ஷம் அடைந்து விடுகிறான்.

ஆதலால் நாமும் பக்தி செய்வோம் !!

வாழ்க ஹிந்து தர்மம்.  வாழ்க ஹிந்துக்கள். 



Saturday 25 May 2019

மோக்ஷத்திற்கு மிகவும் எளிதான பாதை எது? சொர்க்கம் எவன் வேண்டுமானாலும் அடையலாம். ஆனால் அது ப்ரயோஜனமில்லை...மோக்ஷமே ஜீவன் அடைய வேண்டிய இலக்கு... ஒரு அலசல்...

ராமபிரான் சரித்திரத்தில் நாம் பல விதமான "ராம பக்தர்களை" பார்க்கிறோம்.



மனிதர்களில் மட்டுமல்லாது, ராக்ஷஸர்களில், மிருங்கங்களில், பறவைகளில், ரிஷிகளில் என்று பல தரப்பட்ட பக்தர்கள், ராமரை 'பரமாத்மா'வாக அறிந்தனர்.

குறிப்பாக "சபரி மற்றும் குகன்" என்ற இரண்டு பக்தர்கள், ஸ்ரீ ராமரை தரிசிக்கும் போது, பழங்களை ஆசையோடு ராமருக்கு சமர்பிக்கும் பாக்கியம் பெற்றனர் என்று பார்க்கிறோம்.

இருவருமே காட்டுவாசிகள்.
ராமரோ அயோத்திக்கு அரசர்.

குலத்தை வைத்து பார்த்தால், இந்த இருவரை விட, உயர்ந்த சூரிய குலத்தில் உதித்தவர் ராமர்.

குணத்திலும் மேன்மையானவர்.
பராக்ரமத்திலும் நிகரற்றவர்.
பார்த்தவர்கள் பார்த்து கொண்டே இருக்க வைக்கும் அழகு கொண்டவர்.
படிப்பிலும் மேன்மையானவர்.


ஆனால் இந்த வேறுபாடுகள் நமக்கு தெரிந்தாலும், ஸ்ரீ ராமருக்கு தெரியவில்லை.

இருவரின் அன்புக்கு கட்டுப்பட்டார்.
குகன் என்ற வேடுவ குல தலைவனை, சக்ரவர்த்தி திருமகன் நண்பனாக பார்த்தார்.
நண்பனை கட்டிக்கொண்டு நலம் விசாரித்தார்.
அதற்கும் மேல், குகனுக்கு சீதையை அறிமுகப்படுத்தும் போது, 'இவள் உன் சகோதரி' என்று உறவு கொண்டாடினார்.
தன் அடியவருக்கு எளியவன் என்று இருந்தார் ஸ்ரீ ராமர்.
குகன் ஸ்ரீ ராமருக்கு, தான் கொண்டு வந்த பழங்களை சமர்பிக்கிறான்.
ஸ்ரீ ராமர் குகனின் அன்புக்கு கட்டுப்பட்டு, அதை தொட்டு ஏற்றுக்கொள்கிறார். சாப்பிடவில்லை.


ஸ்ரீ ராமருக்கு ஒரு கொள்கை இருந்தது.
பிறருக்கு தன்னிடம் உள்ளதை கொடுப்பதற்கு ப்ரியப்படுவாரே ஒழிய, மற்றவர்களிடம் வாங்கும் பழக்கம் இல்லாதவர்.
ஸ்ரீ ராமரின் கைகள் எப்போழுதுமே கொடுப்பதற்காக நீளுமே தவிர, வாங்குவதற்கு நீளாது.

இதை அறிந்த குகன், ஸ்ரீ ராமர் தான் கொடுத்த பழங்களை தொட்டு ஏற்றுக்கொண்டதே தன் பாக்கியம் என்று சந்தோஷப்பட்டார்.
ஸ்ரீ ராமர் கம்பீர புருஷன் என்று குகன் அறிந்தவரும் கூட.

அதே ஸ்ரீ ராமர், காட்டில் வசித்த வயதான மூதாட்டியான "சபரி'யை வனவாச சமயத்தில் சந்தித்தார்.
சபரியின் குருநாதர் 'மதங்க முனி' மறையும் பொழுது, 'ஸ்ரீ ராமர் வரும்வரை ஆஸ்ரமித்தில் வாழ்ந்து, ஸ்ரீ ராமரை தரிசித்த பின், உடலை பூலோகத்திலேயே விட்டு விட்டு, தான் இருக்கும் மேல்லோகத்திற்கு வர சொன்னதாக' ஸ்ரீ ராமரிடம் தன் முழு சரித்திரத்தையும் சொன்னாள்.

ஸ்ரீ ராமருக்கு தான் பறித்த பழங்களை கொடுத்து சாப்பிட சொன்னாள் சபரி பாட்டி.


தன் நண்பன் குகன் ஆசையுடன்  பழங்களை  கொடுக்கும் போது, மரியாதைக்காகவும், குகனின் அன்புக்காகவும் தொட்டு மட்டும் ஏற்றுக்கொண்ட ஸ்ரீ ராமர், 
காட்டுவாசியான சபரி கொடுத்த பழங்களை கை நீட்டி வாங்கி கொண்டார்.
யாரிடமும் வாங்குவதற்கு நீளாத கைகள், உற்ற நண்பன் குகனுக்காகவும் நீளாத கைகள், சபரி என்ற வேடுவச்சிக்காக நீண்டது.
தான் மட்டும் அல்லாமல், தன் கூட இருந்த லக்ஷ்மணரையும் சபரியிடம் பழங்களை வாங்கி சாப்பிட சொன்னார் ஸ்ரீ ராமர்.

இருவருமே வேடுவர்கள், காட்டு வாசிகள்..  சபரியை விட குகனுக்கு ஸ்ரீ ராமர் மேல் அன்பு அதிகம்.
இருந்தும் ஸ்ரீ ராமர் சபரி கொடுத்ததை மட்டும் ஏன் ஏற்றுக்கொண்டார்?... இதில் ஒரு காரணம் இருக்க வேண்டுமே...

பொதுவாகவே இறை பக்தி உள்ளவர்கள் உலகில் அதிகம் காணப்படுகிறார்கள்.
குகனை போன்ற தீவிரமான இறை பக்தி உள்ளவர்களும் உலகில் உண்டு.


கோவிலுக்கு செல்லும் அனைவருமே ஏதோ ஒரு அளவில் இறை பக்தி உள்ளவர்கள் தான்.

பகவான் நாராயணன், தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, அவர்கள் வேண்டும் வரத்தை அளிக்கிறார்.
பிரார்த்தனைகளுக்கு அவர்கள் பக்தியின் நம்பிக்கையை பொறுத்து நடத்தி கொடுக்கிறார்.
திருப்பதியில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள். அவர்கள் பிரார்த்தனை பலிப்பதால் தானே மீண்டும் மீண்டும் வருகிறார்கள்.
குகனை போன்ற பக்தர்கள் இருந்தால், பெருமாள் சிலையாக இருந்தாலும் கனவிலும், மறைமுகமாகவும், நேரிலும் பேசுகிறார். 
மகான்கள் சரத்திரத்தில், பகவான் பேசினார், திருவிலையாடல் செய்தார் என்று பார்க்கிறோம்.
அவரவர் பக்தியை பொறுத்து, பெருமாள் தன்னை வெளிப்படுத்துகிறார்.

குகனை போன்று, சபரிக்கு பக்தி ராமரிடத்தில் இல்லையென்றாலும், அவளின் 'குரு பக்தியும், குருவின் வாக்கின் மீது இருந்த, அசையாத திட நம்பிக்கையுமே', ஸ்ரீ ராமபிரானை அவள் கொடுக்கும் பழத்தை கை நீட்டி வாங்க வைத்தது.
பொதுவாக பெருமாளை அடைவதற்கு, குருவின் துணை இல்லாமல் பக்தி செய்வதை காட்டிலும், 'குரு பரம்பரையை ஆச்ரயித்து பக்தி செய்பவர்களுக்கு' பெருமாள் எதையும் கொடுக்க தயாராகிறார்.
பெருமாள் சுலபமாகிறார். இதற்கு காரணம் உண்டு.

இதையே குகனிடத்தில், சபரியிடத்தில் பெருமாள் பழகிய விதம் காட்டுகிறது.




குகன் பழம் கொடுக்கும் போது, தொட்டு ஏற்று கொண்ட பெருமாள்,
'குருவை ஆச்ரயித்த, குருவின் வாக்கில் துளியும் சந்தேகமற்ற' சபரி, பழம் கொடுக்கும் போது, தன் கொள்கையையும் விட்டு, கை நீட்டி அவள் கொடுக்கும் பழத்தை வாங்கி உண்டார்.
உத்தமமான குருவின் துணை கொண்டு, பெருமாளை தரிசிக்கும் போது,
சுமாரான பக்தனுக்கு கூட, பெருமாள் தடையே இல்லாமல், குருவின் பக்தியை மனதில் வைத்து கொண்டே, சிஷ்யனான பக்தனுக்கும் பேரருள் செய்து விடுகிறார்.

'உத்தமமான குருவை, உத்தமமான குரு பரம்பரையில் உள்ள குருவை நாம் ஆச்ரயிக்கும் போது', நம்மை போன்ற சாதாரண பக்தர்களை பார்க்கும் போதும், பெருமாள் அபரிமிதமான கருணையை வர்ஷித்து விடுகிறார்.

உத்தமமான ஆத்ம குருவை நாம் அடையும் போது, பெருமாளின் கிருபை எளிதாக கிடைக்கிறது.
இதற்கு ப்ரமாணம் சபரியே.

குரு பரம்பரையை ஆச்ரயித்த சபரி மோக்ஷம் அடைந்தாள். 
குரு பரம்பரையை ஆச்ரயித்தவன் வீண் போகவே மாட்டான், அவர்களும் மோக்ஷம் அடைவார்கள் என்று நிரூபணம் செய்யும் விதமாக, ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது...

ஒரு சமயம் ஸ்ரீ ரங்கத்தில், ராமானுஜர் தன் சிஷ்யர்களுக்கு ராமாயண உபன்யாசம் சொல்லிக்கொண்டு இருந்தார்.
சிஷயர்கள் சிரத்தையோடு கேட்டுக்கொண்டு இருந்தனர்.
விபீஷணன் ஸ்ரீ ராமரை சரணாகதி செய்யும் கட்டத்தை சொல்லி கொண்டு இருந்தார், ராமானுஜர்.
ராமானுஜரே (சாக்ஷாத் ஆதிசேஷ அவதாரம், அவரே லக்ஷ்மணன்) ராமாயண உபன்யாசம் செய்தார் என்றால், அந்த உபன்யாசம் எப்படி அற்புதமாக இருந்து இருக்கும்.
கண் கொட்டாமல் பக்தர்கள் கேட்டுக்கொண்டு இருந்தனர்.

விபீஷணன் சரியான காலத்தில் வரவில்லை, 
இவன் ஒரு ராக்ஷஸன், 
ராவணனின் தம்பி, 
நம் படையை வேவு பார்க்க வந்து இருக்கிறான், 
என்று பல தரப்பட்ட விவாதங்கள் வானரர்களுக்குள் நடந்து கொண்டிருந்தது.
ஸ்ரீ ராமானுஜர் தர்ம-அதர்ம விஷயங்கள் பற்றி ஆச்சர்யமாக காலட்சேபம் செய்து கொண்டிருந்தார்.
அனைவரும் ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர் "பிள்ளை உறங்காவில்லி தாசர்" என்பவர், மிகவும் மனம் நொந்து, திடீரென்று உபன்யாசத்துக்கு நடுவில் எழுந்து புறப்பட தயாராகி விட்டார்.

அந்த காலங்களில்,
பகவானை பற்றிய காலட்சேபம் நடக்கும் போது,
பகவானை பற்றிய விஷயங்கள் சொல்லும் போது 
மரியாதை நிமித்தமாகவும், அலட்சியம் செய்ய கூடாது என்பதற்காகவும், உபன்யாசத்தின் நடுவில் எழுந்து போகவே மாட்டார்கள்.

ராமானுஜர், புறப்பட தயாரான பிள்ளை உறங்காவில்லியை தடுத்து நிறுத்தி, "ஏன் புறப்பட்டு விட்டீர்?" என்று கேட்டார்.
பிள்ளை உறங்காவில்லி தாசர் மன வேதனையுடன்,
"இலங்கை ராஜ்யத்தையே விட்டு, நாட்டை விட்டு, 
மக்களை விட்டு, அண்ணனை விட்டு, மனைவியை விட்டு, 
உற்ற உறவினர்களையும் விட்டு, அனைத்தையும் விட்டு விட்டு, 'பெருமாளே கதி எனக்கு' என்று ஸ்ரீ ராமரிடம் சரணாகதி செய்து கொண்டு நிற்கிறார் விபீஷண ஆழ்வான்.
பூரண சரணாகதி செய்த அவர் விஷயமாகவே,
'இவரை சேர்த்து கொள்ளலாமா? சேர்த்து கொள்ள கூடாதா?' 
என்று இத்தனை ஆலோசனை நடக்கும் என்றால்,
அடியேன் ஒன்றையும் விடவில்லையே!!. 
என் மனைவியை விடவில்லை. என் மக்களை விடவில்லை. எதையுமே விடவில்லையே!!. 



இப்படி இருக்க, பெருமாளுக்கு என் விஷயமாக எத்தனை ஆலோசனை இருக்கும்? 
எனக்கு எப்படி பெருமாள் அபயம் கொடுக்க போகிறார்? 
எதையுமே பெருமாளுக்காக தியாகம் செய்யாத எனக்கா வைகுண்டம் தருவார்? என்று தோன்றியதால், மனதில் அதைரியம் உண்டாகி எழுந்து விட்டேன்" என்றார்.

ராமானுஜர், பிள்ளை உறங்காவில்லி தாசரை பார்த்து,
"அது ராமர் கோஷ்டி.. நீர் ராமானுஜன் கோஷ்டி. சஞ்சலப்படாமல் உட்காருங்கள்.
விபீஷணனை சேர்த்து கொள்ளலாமா? வேண்டாமா? என்று ராமர் கோஷ்டியில் தான் ஆலோசனை நடந்தது.
ராமானுஜன் கோஷ்டியில் சேருவதற்கு ஆலோசனையே கிடையாது.
ஆதலால்,
'ராமானுஜரே கதி' என்று கவலைப்படாமல், அதைரியம் அடையாமல் உட்காரும்.

'பெருமாள் சேர்த்து கொள்வார்' என்று என்ன தைரியத்தில் சொல்கிறீர்கள்? என்று கேட்டால், சொல்கிறேன்.

இந்த ராமானுஜன் 'வைகுண்டம்' போக போவது உண்மை தானே?
ராமானுஜன் நரகம் போய்விட போவதில்லையே?
நான் வைகுண்டம் போவது சத்தியம் என்றால், உமக்கும் வைகுண்டம் கிடைக்கப்போவது சத்தியமே. உட்காருங்கள்." என்றார்.


தான் மட்டும் வைகுண்டம் போவேன்!! என்று ராமானுஜர் எப்படி நிச்சயமாக சொன்னார்?
வைகுண்டம் செல்ல அனைத்து தகுதியும் உடையவரல்லவா ஸ்ரீ ராமானுஜர். 
மறுக்க முடியுமா அவர் வாழ்க்கை சரித்திரத்தை.

'நான் ஸ்ரீ மத் ராமாயண காலட்சேபம் செய்கிறேன்.
பரத்துவ ஞானம் உடையவனாக இருக்கிறேன்.
பெருமாளிடம் பக்தி உடையவனாக இருக்கிறேன்.
உலக விஷயங்களில் பற்றில்லாமல் வைராக்கியம் உடையவனாக இருக்கிறேன்.
ஜகத் குருவாக இருக்கிறேன்.
ஸ்ரீ பாஷ்யம் எழுதி இருக்கிறேன்.
சந்யாசியாக இருக்கிறேன்.
பகவத் விஷயங்களே சொல்கிறேன்.
திவ்ய தேசங்கள் அனைத்தும் சென்று பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்து இருக்கிறேன்.
அப்பேற்பட்ட தகுதிகள் மட்டுமில்லாது, நானே ஆதிசேஷன் அவதாரமும் கூட.
அப்பேற்பட்ட ஆச்சார்யனை அடைந்தும் கூடவா, பரமபதம் கிடைக்குமா,? பெருமாள் சேர்த்து கொள்வாரா? என்று உமக்கு சந்தேகம்?!!'
என்று சொல்லிக்கொள்ளவில்லை ராமானுஜர்.


தன்னை பற்றிய பெருமையை பேசவே மாட்டார் ஸ்ரீ ராமானுஜர்.
மாறாக, ஸ்ரீராமானுஜர் பேசலானார்,
"என் ஆச்சாரியன் 'பெரிய நம்பி'களுக்கு வைகுண்டம் உண்டாகில், அடியேனுக்கும் உண்டு.
எனக்கு வைகுண்டம் உண்டாகில், உமக்கும் உண்டு.

'ஆளவந்தாருக்கு' வைகுண்டம் உண்டாகில், அவர் சிஷ்யர் பெரிய நம்பி'களுக்கும் உண்டு.

'மணக்கால் நம்பி'க்கு வைகுண்டம் உண்டாகில், 'ஆளவந்தாருக்கும்' உண்டு.

'உய்யக்கொண்டாருக்கு' வைகுண்டம் உண்டாகில், 'மணக்கால் நம்பி'க்கும் உண்டு.

'நாதமுனி'களுக்கு வைகுண்டம் உண்டாகில், 'உய்யக்கொண்டாருக்கும்' உண்டு.

'விஸ்வத்சேனருக்கு' வைகுண்டம் உண்டாகில் 'நாதமுனி'க்கும் உண்டு.

'பெரிய பிராட்டியான மகாலட்சுமி'க்கு வைகுண்டம் உண்டாகில், 'விஸ்வத்சேனருக்கும்' உண்டு.

அந்த 'பெருமாளுக்கு' வைகுண்டம் உண்டாகில், 'மகாலக்ஷ்மி'க்கும் உண்டு.

இந்த குரு சிஷ்ய பரம்பரை பெருமாள் வரை போகிறது.
இப்பொழுது, இந்த ராமனுஜனை ஆச்ரயித்த ஒருவனுக்கு வைகுண்டம் இல்லையென்றால், இந்த தொடர் சங்கிலி வைகுண்டம் வரை சென்று, பரவாசுதேவனுக்கே வைகுண்டம் இல்லை என்று ஆக்கி விடும்.

ஆக பரவாசுதேவன், மகாலட்சுமி தொடங்கி, நாதமுனிகள் மத்தியில் இருந்து கொண்டு, தொடர்ந்து வரும் குரு பரம்பரையில் இருந்து கொண்டும், பெருமாள் சேர்த்து கொள்வாரா என்று நீர் கவலை பட காரணமில்லையே..



நமக்கு வைகுண்டம் நிச்சயம். கிடைக்க போகும் சொத்து என்பதை உணர்ந்து,
இந்த உலகில் இருக்க போகும் காலம் வரை, நாம் காலத்தை எப்படி கழிக்க வேண்டும்? என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, வைகுண்டம் கிடைக்குமா? என்று கேள்வியே எழ கூடாது.

இருக்கும் காலத்தில், ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெருமாளிடம் பக்தியை வளர்த்து கொள்ள வேண்டும்.
வைராக்யத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.
கர்ம யோகத்தில் வாழ வேண்டும்.
அனுஷ்டானம் தவறாமல் வாழ வேண்டும்.
தியான யோகமும் செய்ய வேண்டும்.
சந்யாசமும் வாங்கி கொள்ள வேண்டும்.
என்று யார் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும்,
'நீர் ஆச்சாரியன் திருவடியே கதி' என்று இருந்தால் போதும்.
நமக்கு மோக்ஷத்திற்கான முயற்சி, சாதனை இதுவே.

யோகம் செய்பவர்கள் செய்யட்டும்.
பக்தி செய்பவர்கள் செய்யட்டும்.
சந்யாசம் வாங்கி கொள்பவர்கள் வாங்கி கொள்ளட்டும்.
குரு பரம்பரையை ஆச்ரயித்த சிஷ்யனுக்கு "ஆச்சாரியன் திருவடியே கதி" என்று இருக்க வேண்டியது தான் மோட்சத்திற்கு சாதனம்.
"ஆச்சாரியன் திருவடியே கதி" என்று இருந்தால் போதும்.
ஆச்சாரியன் நம்மிடத்தில் ஒரு அபிமானம் கொண்டிருந்தாலே நமக்கு போதும்.
நிச்சயம் நம்மை வைகுண்டத்தில் இருந்து தள்ளி விட மாட்டார்கள்.

அப்படிப்பட்ட குருவை ஆச்ரயித்த ஒருவன், வைகுண்டம் தனக்கு நிச்சயம் என்று கவலையே இல்லாமல் இருப்பான்.

பெருமாள் ஆரம்பித்து வரும் இத்தகைய அருமையான பரம்பரையில் ஆச்சாரியனாக ஆக கிடைத்தவன்,
தான் அடைந்த பாக்கியத்தை அறிந்து கொள்ளாமல் இருந்தால், அவனே
துர்பாக்கியசாலி.


'எத்தனை அருமையான சம்பரதாயத்தில் ஆச்சார்யனாக வந்துள்ளோம்' என்று தன் பெருமையை உணர்ந்து கொள்பவர்கள் மகா பாக்கியவான்கள்.

இத்தகைய குரு பரம்பரையில் வந்த குருவை ஆச்ரயித்த ஒருவன் 'ஆச்சரியன் திருவடியே கதி' என்று மட்டும் இருந்தாலேயே, பெருமாள் ஒரு கேள்வியும் கேட்காமல் வைகுண்ட வாசலை திறந்து விட்டு விடுகிறார்.

குருவின் சம்பந்தம் இல்லாமல், பக்தியில் சிறந்த, நண்பனான குகன், பெருமாளுக்கு பழம் சமர்ப்பிக்க, அவன் பக்திக்காக தொட்டு ஏற்று கொண்ட ராமபிரான், 
அதே சமயம், 
குருவை ஆச்ரயித்த சபரி, ஸ்ரீ ராமபிரானுக்கு பழம் கொடுக்க, அவளுடைய குரு பக்திக்கு வசப்பட்டு, யாரிடமும் தன் கைகளை நீட்டி வாங்காத ஸ்ரீராமர், அவள் கொடுத்த பழங்களை வாங்கி சாப்பிட்டார்.

சுயமாக பகவானிடம் பக்தி செய்து, அவர் அணுகிரஹத்தை பெறுவதை விட,
ஸத் பரம்பரையில் வழி வழியாக வரும் குருவை ஆச்ரயித்து, 'ஆசாரியன் திருவடியே கதி' என்று வாழ்ந்து விட்டால், பெருமாள் மரண வேதனை ஏற்படாமல், நம்மையும் வைகுண்டம் அழைத்து சென்று விடுவார்.
குருவே துணை நமக்கு. 
அனைவருக்கும் ஆத்ம குரு அவசியம்  தேவை.
ஸத் பரம்பரையாக ஏற்பட்ட குரு பீடத்தில், ஒரு குருவை ஆச்ரயிக்க வேண்டும். மோக்ஷத்திற்கு ஆசைப்பட வேண்டும்.
நம் பக்தியினால் மட்டுமே பெருமாளை ஆகர்ஷிக்க முடியாது. ஸ்ரீ ராமானுஜர் ஆச்ரயித்தது போன்ற ஒரு குரு பரம்பரையில் நாம் குரு சிஷ்ய சம்பந்தம் பெற வேண்டும்.
அதுவே மோக்ஷத்திற்கு வழி.


மோக்ஷம் அடையாது போனால், மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்க வேண்டியது தான்.
உலகமோ இயற்கையாகவே நம்மை பொறுத்தவரை நிலையற்றது, சுகம் நிரந்தரமாக கொடுக்காதது.
ஸ்ரீ கிருஷ்ணரும் பகவத் கீதையில், 'அநித்யம் அசுகம் லோகம்' என்று சொல்லி எச்சரிக்கிறார்.
'மோக்ஷத்திற்கு முயற்சி செய்' என்கிறார்.

ஸ்ரீ ராமானுஜர், 'மோக்ஷத்திற்கு மிகவும் எளிதான பாதை ஒரு குரு பரம்பரையில் வந்த குருவை பற்றிகொள்வதே' என்று நமக்கு வழி காட்டி விட்டார். 
பெருமாள் நமக்கு வைகுண்ட வாசலை திறந்து விட, குருவை ஆச்ரயிப்போம்.

Hare Rama Hare Krishna - Bhajan

Sandhya vandanam with meaning - morning

Sandhya vandanam with meaning - afternoon



Sandhya vandanam with meaning - evening




Saturday 20 October 2018

"அறம், பொருள், இன்பம், விடுதலை" என்று சொல்லாமல் "அறம், பொருள், இன்பம், வீடு" என்று ஏன் சொன்னார்கள்? காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

"மோக்ஷம்" என்ற சொல்லுக்கு "விடுதலை" என்றும் பொருள் உண்டு, "வீடு" என்ற பொருளும் உண்டு.
தமிழில் "மோக்ஷத்தை" சொல்லும் போது "வீடு" என்ற சொல்கிறார்கள்.

"தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்" என்று வேதம் கூறும் நான்கு விஷயங்களை.
"அறம், பொருள், இன்பம், வீடு" என்று தமிழிலில் சொல்கிறார்கள்.
நன்றாக கவனித்தோமென்றால்,
"அறம், பொருள், இன்பம், விடுதலை" என்று சொல்லவில்லை.
மோக்ஷத்தை, "வீடு" என்ற அர்த்தத்தை கொண்டு ஏன் சொன்னார்கள்? தெரிந்து கொள்ள வேண்டாமா தமிழர்கள்?

1. தர்மம், (धर्म) (rules)
2. அர்த்தம், (अर्थ) (wealth)
3. காமம், (काम) (desire)
4. மோக்ஷம் (मोक्ष) (freedom from rebirth)
என்ற நான்கு விஷயங்களை நோக்கி தான் மனிதர்கள் எப்பொழுதும் பயணிக்கின்றனர் என்கிறது சப்த ப்ரம்மமாகிய வேதம்.

இதை பொதுவாக 4 புருஷார்த்தங்கள் (Purushartha - லட்சியம்) என்று சொல்கிறது.



இதில் "மோக்ஷம்" என்ற விஷயத்தை நோக்கி செல்லும் மனிதர்கள் மட்டும், மீண்டும் பிறவி எடுக்காமல், சம்சார கடலில் இருந்து பகவானால்  விடுவிக்கப்படுகின்றனர்.
பிறவியில் இருந்து விடுதலை பெறுகின்றனர்.
ஆகவே, "மோக்ஷத்தை" தன் லட்சியமாக கொள்ளும் மனிதர்கள் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்.

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கில், அனைவரும் கட்டாயம் தன் வாழ்க்கையின் லட்சியமாக கொள்ள வேண்டியது "தர்மம்" (Human Rules) என்று சொல்லப்படுகிறது.
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற இந்த நான்கு சமஸ்கரித சொல்லுக்கு ஈடாக, தமிழிலில்
1. அறம் (சமஸ்கரித சொல் தர்மம்)
2. பொருள் (சமஸ்கரித சொல் அர்த்தம்)
3. இன்பம் (சமஸ்கரித சொல் காமம்)
4. வீடு (சமஸ்கரித சொல் மோக்ஷம்)
என்று சொல்கிறோம்.

"மோக்ஷம்" என்ற சொல்லுக்கு, "விடுதலை" என்பது தான் நிகரான தமிழ் சொல்.

பின்பு ஏன்?
"அறம், பொருள், இன்பம், விடுதலை"
என்று சொல்லாமல்,
"அறம், பொருள், இன்பம், வீடு"
என்று தமிழிலில் சொன்னார்கள்?

காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

'மோக்ஷம்' என்ற சொல் இரண்டு மோக்ஷத்தை குறிக்கிறது.
1. 'கைவல்யம்' என்பதும் ஒரு மோக்ஷம்.
2. 'வைகுண்டம்' என்பதும் ஒரு மோக்ஷம்.

கைவல்யம் என்றால் என்ன?
வைகுண்டம் என்றால் என்ன?
என்று புரிந்து கொள்ளும் போது, ஏன் 'மோக்ஷம்' என்ற சொல்லுக்கு 'வீடு' என்று தமிழில் சொன்னார்கள்? என்று புலப்படும்.

செய்த பாவத்திற்கு, இறந்த பின், ஜீவ ஆத்மா நரகம் சென்று தண்டனை அனுபவித்து, பின் மீண்டும் உலகில் பிறக்கிறது.

செய்த புண்ணியத்திற்கு, இறந்த பின், ஆத்மா சொர்க்கம் முதல் பிரம்ம லோகம் வரை, சென்று போகங்களை அனுபவித்து, பின் மீண்டும் உலகில் பிறக்கிறது.

ஆக, பாவம் செய்தாலும் மீண்டும் பிறவி உண்டு. புண்ணியம் செய்தாலும் மீண்டும் பிறவி உண்டு.

பிற மதங்களும், புண்ணியங்கள் செய்தால் சொர்க்கம் என்கிறது.

அந்த சொர்க்கமும் நிரந்தரமல்ல என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்.




சொர்க்க லோகத்தில் இருப்பவர்கள் தேவர்கள்.
இவர்கள் நம் புண்ணியம் தீர்ந்த பின், கீழ் லோகமாக இருக்கும் பூமிக்கு மீண்டும் பிறக்க அனுப்பி விடுகின்றனர்.

பிற மதங்கள் சொர்க்கத்துக்கு மேல் ஒன்று இருப்பதாக கூட நினைக்கவில்லை. அதுவே நிரந்தரம் என்றும் சொல்லிக்கொள்கின்றனர்.

நாமோ, சொர்க்க லோகத்துக்கும் மேல், இன்னும் 4 லோகங்கள் உள்ளது என்று சொல்கிறோம். அதுவும் நிரந்தரமில்லை என்றும் சொல்கிறோம்.
சொர்க்க லோகத்துக்கும் மேல்,
மகர லோகம் (stars), ஜன லோகம், தப லோகம், கடைசியாக ப்ரம்ம லோகம் என்று சொல்கிறோம்.

ப்ரம்ம லோகத்தையும் படைத்த நாராயணன் இருக்கும் இடம் வைகுண்டம் என்கிறோம். அங்கு செல்பவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பதில்லை என்கிறது நம் சனாதன தர்மம்.

சொர்க்க லோகத்தில் நின்று விட்ட மற்ற மத அறிவு எங்கே?, நம் அறிவு எங்கே என்று இதிலேயே புரிந்து கொள்ளலாம்.



மோக்ஷம் என்ற கைவல்யம் :
உலகம் நிலை இல்லாதது (அநித்யம்) என்று உணர்ந்து, உடல் வேறு, ஆத்மா வேறு என்று உணர்ந்து, உலகத்தோடு ஒட்டாமல், பாவம் புண்ணியம் செய்யாமல், யோகியாய் இருந்து, இறந்த பின், அந்த ஆத்மா, கைவல்யம் (விடுதலை) என்ற முக்தியை அடைகிறது.

மோக்ஷம் என்ற வைகுண்டம் :
உலகம் நிலை இல்லாதது (அநித்யம்) என்று உணர்ந்து, உலகத்தோடு இருந்து கொண்டே, பாவம் புண்ணியம் அனைத்தையும் நாராயணன் பாதத்தில் சமர்ப்பித்து, நாராயணனே கதி என்று வாழ்ந்து, இறந்த பின், அந்த ஜீவ ஆத்மாவை, பரதெய்வமான நாராயணன், தன் இடமான வைகுண்டம் (வீடு) என்ற முக்தியை, மோக்ஷத்தை கொடுத்து விடுகிறார்.

கைவல்யம் (விடுதலை) அடைந்த ஜீவனும், மீண்டும் பிறப்பதில்லை.
வைகுண்டம் (வீடு) போய் சேர்ந்த ஜீவனும், மீண்டும் பிறப்பதில்லை.

இரண்டுமே மோக்ஷம் தான் என்றாலும், இதில் நாம் அடைய வேண்டியது விடுதலை மட்டுமல்ல, வீடு போய் சேர வேண்டும் என்று வேதத்தின் உண்மையான அபிப்ராயத்தை தெரிந்த தமிழர்கள்,
"அறம் பொருள் இன்பம் விடுதலை"
என்று சொல்லாமல்,
"அறம், பொருள், இன்பம், வீடு"
என்று சொன்னார்கள்.

ஒரு கைதி, பல ஆண்டுகள் சிறையில் இருந்து வந்தான்.
அவனுக்கு திடீரென்று விரக்தி வந்து விட்டது. இந்த சிறைச்சாலை என்னுடையது அல்ல, எப்படியாவது இதை விட்டு தப்பிக்க வேண்டும் என்று முடிவு செயதான்.
தப்பிக்க பல தடவை முயற்சி செய்தும், காவலாளிகள் பிடித்து விட்டனர்.
இனி முரண்டு செய்யாமல், ஒழுக்கமாக இருந்து, நல்ல பெயர் வாங்கி, விடுதலை அடைவோம் என்று எண்ணினான். அதற்கு பல வருடங்களுக்கு பிறகு பலனும் கிடைத்தது. நன்னடத்தை காரணமாக, ஒரு நாள் விடுதலை ஆகி விட்டான்.
இனி சிறை இல்லை, இனி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற விடுதலை காற்றை அனுபவித்த அவன் பேரானந்தம் அடைந்தான். இது தான் கைவல்யம் என்ற மோக்ஷ நிலை.

கைவல்யம் என்பது, சிறையில் வைக்கப்பட்டு இருந்த ஒருவன் விடுதலை ஆவது போல. பிறப்பு இறப்பு என்ற சிறைச்சாலையில் இருந்து "விடுதலை" ஆவதே இவன் நோக்கம்.

அதே சிறைச்சாலையில் இன்னொருவன் இருந்தான். அவனும் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைத்தான். இவன் தப்பிக்க நினைப்பதற்கு விடுதலை மட்டும் காரணமல்ல, அவன் வரவை எதிர்பார்த்து, அவன் தகப்பன், அவன் வீடு எல்லாம் உள்ளது என்று அறிகிறான்.
ஒரு நாள் இவனும் நன்னடத்தை காரணமாக, விடுதலை ஆகி விட்டான்.
இதற்கு முன்னால் விடுதலை ஆனவன், கூப்பிட ஆள் இல்லாததால், நேராக அங்கு இருக்கும் பார்க்கில் சுகமாக படுத்துக்கொண்டு வருவோர் போவோர்களை பார்த்து கொண்டு அலைந்து கொண்டிருந்தான்.

இவனோ, விடுதலை ஆனவுடன், தன் வீட்டுக்கு சென்று தகப்பன் வரவேற்க, அவன் வீட்டுக்கு போய் நிம்மதியாக தகப்பன் நிழலில் நிம்மதியாக இருந்தான்.
வைகுண்டம் என்பது, சிறையில் வைக்கப்பட்டு இருந்த ஒருவன் விடுதலை ஆன பின், தன் சொந்த தகப்பன் வீட்டுக்கு வந்து, தந்தையான நாராயணன் அரவணைப்பில் வீட்டில் இருப்பதே.

இந்த வேற்றுமையை உணர்ந்த தமிழ் ரிஷிகள், கைவல்யம் (விடுதலை) என்ற மோக்ஷத்தை நம் லட்சியமாக கொள்ளாமல், வைகுண்டம் (வீடு) என்ற மோக்ஷத்தையே நம் லட்சியமாக கொள்ள வேண்டும் என்று, அறம், பொருள், இன்பம், வீடு என்றனர்.



"வீட்டுக்கு" போய் சேர்வதே நம் நோக்கம்.

வைகுண்டம் என்பது கைவல்யத்தை விட உத்தமானது.

வீடு என்பது விடுதலையை விட உத்தமானது.

இதனால் தான் அறம், பொருள், இன்பம், விடுதலை என்று சொல்லாமல், அறம், பொருள், இன்பம், வீடு என்ற சொல்லில் முடிக்கின்றனர்.

திருவள்ளுவர் திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மூன்றும் மூன்று பகுதிகளில் சொல்லியிருக்கிறார்.
மோக்ஷத்தைப் பற்றித் தனியாக இப்படிப் பெரிய பகுதி இல்லாவிட்டாலும், அறத்துப் பாலிலேயே ‘இல்லற இயல்’ என்பதற்கு அப்புறம் ‘துறவற இயல்’என்று சில அதிகாரங்கள் பண்ணி, அதில் நூற்றுக்கு மேற்பட்ட குறள்களில் மோக்ஷம் ஸித்திப்பதற்கான வழிகளைச் சொல்லியிருக்கிறார்.
(http://www.kamakoti.org/tamil/3dk257.htm)

திருவள்ளுவர், சமஸ்கிருதம் அறிந்த, தமிழ் புலவர் என்பதும் வெளிச்சம் ஆகிறது.

வாழ்க தமிழ். வாழ்க தெய்வ பாஷை.