Followers

Search Here...

Thursday 28 February 2019

அன்பே சிவம் என்றும் செயலே தெய்வம் என்று சொல்லும் போலிகளுக்காக ஒரு அலசல்...

நாம் செய்யும் செயலுக்கு, தானாகவே பலன் கிடைத்துவிடும். நடுவில் கடவுள் எதற்கு? என்று கேட்கிறார்கள் சில மூடர்கள். கடவுளை எப்படியாவது மறுக்க வேண்டும் என்பதற்காக, இவர்கள்
"செயலே (கர்மா) தெய்வம்" என்று விஷமமாக பேசுகிறார்கள்..


"கடமையே தெய்வம்", "செயலே தெய்வம்" என்று சொல்லும் இந்த போலிகள், கடவுளை மறுக்க முயல்கிறார்கள்.
அதே போல,
இன்னும் சிலர்,
"அன்பே சிவம்" என்று சொல்லி, கடவுளை மறுக்க முயல்கிறார்கள்.

இன்னும் சிலர்,
"தமிழே தெய்வம்" என்று சொல்லி, கடவுளை மறுக்க முயல்கிறார்கள்.

இன்னும் சிலர்
"அறிவே தெய்வம்" என்று சொல்லி, கடவுளை மறுக்க முயல்கிறார்கள்.

உண்மையை உணர்ந்த ஞானியோ,
"அன்பு மட்டும் தான் தெய்வமா? 
தமிழ் மட்டும் தான் தெய்வமா?
அறிவு மட்டுமே தெய்வமா? 
செயல் (கர்மா) மட்டுமே தெய்வமா? 
எல்லாமுமே தெய்வம் தான்." என்கிறார்கள்.


"தமிழே தெய்வம்" என்று சொன்னால், உலகத்தில் உள்ள பிற மொழிகள் எல்லாம் தெய்வம் இல்லையா?
இப்படி சொல்லும் பிரிவினைவாதிகள் அனைவருமே போலிகள். இவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். மனித சமுதாயத்துக்கே ஒரு கறை போன்றவர்கள்.

தெலுங்கு பேசுபவனுக்கு "தெலுங்கே தெய்வம்",
ஹிந்தி பேசுபவனுக்கு "ஹிந்தியே தெய்வம்".
அவனவனுக்கு அவன் தாய் மொழி தெய்வம்.

"தாய் மொழியை மதிக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு பிற மொழிகளை மிதிக்கலாமா?

இப்படி "தமிழே தெய்வம்" என்று பேசுபவர்கள், "தமிழ் மொழியே தெய்வம், என்று சொல்லி சொல்லி, தெய்வத்தை மறுப்பது மட்டுமில்லாது, பிற மொழி வெறுப்பையும் விதைக்கிறார்கள்.

இவர்கள் உண்மையில் திருடர்கள். இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர்களை ஒதுக்க வேண்டும்.

"தமிழே தெய்வம்" என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே,
"சமஸ்கரிதம் தெய்வமில்லை, கன்னடம் தெய்வமில்லை. ஜப்பானிய மொழி தெய்வமில்லை" 
என்றெல்லாம் பேச வைக்கும்.

இப்படி பேசுவதாலேயே, நமக்குள் ஒரு விஷம் ஏற்றப்படுகிறது. பிறமொழி பேசும் சக மனிதனிடம் பகை உண்டாக்கப்படுகிறது.


குறுகிய மனப்பான்மை கொண்டு, தெய்வத்தை மறுத்து, ஒரு மொழியை மட்டும் தெய்வம் என்று ஏமாற்றும் கூட்டத்தை கண்டிக்க வேண்டும்.

"என் மொழி உயர்ந்தது, தொன்மை வாய்ந்தது" என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்.
அதற்காக தெய்வத்தை மறுத்து, தன் மொழியையே தெய்வம் என்று சொல்லலாமா? 
தமிழ் வேதமாக போற்றப்படும் 4000 திவ்ய பிரபந்தங்கள், நாயன்மார் பாசுரங்கள் தமிழ் மொழியில் தானே எழுதப்பட்டது? 
"தமிழே தெய்வம்" என்று சொல்லும் இந்த போலிகள் பாசுரங்களை மேடைகளில் சொல்லி தமிழை வளர்க்கிறார்களா, வளர்ப்பார்களா? 
தமிழ் பாசுரங்களை, பிரபந்தங்களை ஏற்காமல், அந்த பாசுரங்கள் துதிக்கும் தெய்வங்களை ஏற்காமல், "தமிழே தெய்வம்" என்று பேசும்போதே இவர்கள் போலிகள் என்று தெளிவாக தெரிந்து விடுகிறது.





தமிழை வளர்த்த சித்தர்கள், மகான்கள், சிவனையும், நாராயணனையும் தானே தெய்வம் என்றனர்?
தெய்வத்தை ஒதுக்கி விட்டு, 
இவர்கள் தந்த பாசுரங்களையும் ஒதுக்கி விட்டு, இன்றைய நாத்தீக  போலிகள் "தமிழே தெய்வம்" என்று சொல்லி, ஊரை  ஏமாற்றுகின்றனர். 

"செயலே தெய்வம்" என்றும்,
"மொழியே தெய்வம்" என்றும்,
"அன்பே தெய்வம்" என்றும்
சொல்லி, நம் தெய்வத்தை நிராகரிக்கும் இந்த போலிகளை உதைத்து விரட்டுவோம்.

"அன்பே தெய்வம்" என்று தெய்வத்தை மறுத்து பேசும் போலிகளுக்கு, திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்,
"அன்பு மட்டுமா தெய்வம்?. பாவமும் தெய்வம் தான், புண்ணியமும் தெய்வம் தான். நரகமும் தெய்வம் தான். சொர்க்கமும் தெய்வம் தான்" என்கிறார்.

அன்பு என்பது ஒரு குணம் தானே.
ஒரு குணமே எப்படி தெய்வமாக முடியும்?

தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டுமே "அன்பே சிவம்" என்று சொல்லி, தெய்வத்தை நிராகரிக்க முயல்வார்கள். 
இது போன்ற போலிகளை ஒரு போதும் வளர்க்க கூடாது.

நாயன்மார்களை கேட்டால், அந்த அன்பு என்ற கருணை உடையவன் ஈசன் என்று சொல்லி, "சிவமே அன்பு" என்று அன்பு என்ற குணம் சிவனில் அடக்கம் என்று, சொல்கிறார்கள்.
அப்படி இருக்க ஒரு குணம் மட்டும் எப்படி தெய்வம் என்று சொல்ல முடியும்?
இது தான் தெய்வத்தை மறுப்பவர்கள் பகுத்தறிவா? வெட்கக்கேடு..
இது போன்ற உரையாடல் தான் யாதவப்ரகாசருக்கும், ஸ்ரீ ராமானுஜருக்கும் ஏற்பட்டது. 


யாதவப்ரகாசர் தன் சிஷ்யர்களிடம் "அறிவே தெய்வம்" என்று பேசினார்.

"அறிவே தெய்வம்" என்று சொல்வதால், வேதத்தில் சொன்ன பரமாத்மா 'தெய்வம்' இல்லை என்று சொல்வது போல ஆகி விட்டது.
ஸ்ரீராமானுஜர் எழுந்து
"அறிவே தெய்வம் என்று சொல்கிறீர்களே...
அறிவே தெய்வமா? அல்லது, அறிவு உடையவன் தெய்வமா?" 
என்று திருப்பிக்கேட்டார்.

மேலும்,
"'அறிவே தெய்வம்' என்று சொன்னால் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம்.
ஆனால், தெய்வத்தை மறுத்து 'அறிவே தெய்வம்' என்று நம்மை சொல்லச் சொல்லவிலலையே?

இப்படி சொல்ல ஏன் அனுமதித்தார்கள்? என்று பார்க்க வேண்டி இருக்கிறது.

பெற்ற அறிவை (கல்வியை) பொக்கிஷம் போல, தன் உயிர் போல, ஒருவன் பாதுகாக்க வேண்டும். அறிவை வளர்த்துக்கொள்ள எப்பொழுதும் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காக, "அறிவே தெய்வம்' என்று சொல்லும் பழக்கம் வந்ததே தவிர, தெய்வத்தை மறுத்து, அறிவு மட்டுமே தெய்வம் என்று சொல்வதற்காக சொல்லப்படவில்லை.

'அன்பே தெய்வம்' என்று சொல்வதன் நோக்கம், "நாம் அனைவரும் பிற உயிர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும்" என்பதற்காக சொல்லப்பட்டது. அன்பு என்ற குணம் மட்டுமே தெய்வம் என்று சொல்லி, தெய்வத்தை மறுப்பதற்காக சொல்லப்படவில்லை.

அது போல,
'தமிழே தெய்வம்' என்று சொல்வதன் நோக்கம், "நம்முடைய தாய் மொழியாக உள்ள தமிழை அப்படி உயிராக நினைக்க வேண்டும், பற்று வர வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதே தவிர, தெய்வத்தை மறுத்து, தமிழ் என்ற மொழியையே தெய்வம் என்று சொல்வதற்காக இல்லை.
கடவுளை மறுப்பவன், இது போன்ற சொல்லை பயன்படுத்தினால், கண்டிக்க வேண்டியது ஹிந்துக்களின் கடமை.

அது போல,
'கர்மாவே தெய்வம்', 'கடமையே தெய்வம்' என்று சொல்வதன் நோக்கம்,
"அவனவனுக்கு விதிக்கப்பட்ட கடமையை உயிராக நினைத்து செய்ய வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதேயன்றி, தெய்வத்தை மறுத்து, செயலே தெய்வம் என்று பேசுவதற்காக இல்லை. 

ஒரு செயலே எப்படி தானாக பலன் கொடுக்க முடியும்?
நியாயமாக உழைத்தால் அதற்கு தகுந்த கூலி அந்த செயலாலேயே கிடைத்து விடும் என்றால், எதற்காக சம்பளம் போதாது என்று போராட்டம் நடக்கிறது?
செய்த செயலுக்கு கூலி கிடைக்கவில்லையே என்று போராட்டங்கள் ஏன் நடக்கிறது? 
கர்மாவே தெய்வம் என்றால், போராட்டங்கள் எதற்கு? 

அவனவன் செயலுக்கு, அந்த செயலே கூலி தரும் என்று பேசினால், வேலையை செய்து விட்டு, கூலி தானாக கிடைக்கும் என்று அமைதியாக இருக்கலாமே?

உலக வழக்கில் பார்த்தாலே, நாம் செய்த கர்மாவுக்கு (செயலுக்கு), கூலியை ஒரு முதலாளி தானே, நமக்கு கொடுக்கிறான்.

முதலாளியின் பிரியத்தை சம்பாதித்தவன், தான் செய்யும் செயலுக்கும் மீறி, அதிகமாக கூட கூலி பெறுகிறானே...
கர்மாவே தெய்வமா? கர்மாவுக்கு பலன் கொடுக்கும் முதலாளி தெய்வமா?
யோசிக்க வேண்டாமா?

சில அசட்டு பக்தன், தெய்வம் காப்பாற்றுவார் என்று தன் கடமையை கூட செய்யாமல் இருந்து விடுவான்.

தனக்கு விதிக்கப்பட்ட கர்மாவை செய்யாமல் இருக்க கூடாது, "கர்மாவை செய்" என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார் என்று பார்க்கிறோம்.
அர்ஜுனனை பார்த்து "க்ஷத்ரியனான நீ, உன் கடமையை செய். தர்மத்துக்காக போரிடு. என்னிடம் பக்தியுடன் இரு. நான் உன் கடமைக்கு ஏற்ற கூலியை கிடைக்க செய்கிறேன்" என்கிறார்.

'கர்மாவை செய்' என்று தன் பக்தனுக்கும் சேர்த்து சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
"கர்மாவை செய்.. பலனை எதிர்பார்த்து கர்மாவை செய்யாதே.. பலன் கொடுப்பதை என்னிடம் விட்டுவிடு" என்கிறார்.

தன்னை சரண் அடைந்தவனும் கர்மாவை செய்ய வேண்டும் என்று சொல்லும் ஸ்ரீ கிருஷ்ணர்,
தன் பக்தன் செய்யும் செயலில் குற்றம் குறை இருந்தாலும், முதலாளியாக இருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், செயலுக்கு தகுந்த பலன் மட்டும் கொடுக்காமல், அவன் எதிர்பார்த்ததை விட அதிகமாக பலன்களை, உலக சௌக்கியங்கள் ஆரம்பித்து, மோக்ஷம் வரை வழி செய்து கொடுத்து விடுகிறார்.
"கர்மாவே தெய்வம்" அதனால் வேறு தெய்வம் இல்லை என்று நாத்தீகனை போல பேசும் மூடர்கள் செய்த கர்மா அளவுக்கு மட்டும் பலனை பகவானிடம் இருந்தே பெற்று, கடவுள் இல்லை, கர்மாவே தெய்வம் என்று உலறுக்கிறார்கள்.

தெய்வத்தை மறுத்து,
"அன்பே சிவம்" என்றும்,
"தமிழே தெய்வம்" என்றும்,
"அறிவே தெய்வம்" என்றும் 
பேசும் போலிகளை ஒடுக்குவோம்.

சனாதன தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் ஒன்று படுவோம்.
போலிகளை ஒடுக்குவோம்.

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka  




Saturday 16 February 2019

சரணாகதி செய்து விட்டால் மட்டும், பகவான் காப்பாற்றி விடுவாரா?... ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது...

குருவே துணை

"பகவானை நாம் சரணம் அடைந்தால், பகவான் நம்மை நிச்சயம் காப்பாற்றுகிறார்".


திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற ஒரு மகான் சேங்கனூர் என்ற ஊரில் பிறந்தார்.
பெரியவாச்சான் பிள்ளை, அவரது குரு நம்பிள்ளை
இதே ஊரில் தான் 4000 திவ்ய பிரபந்ததுக்கும் விளக்க உரை எழுதிய ரோகினி நக்ஷத்திரத்தில், அவதரித்த பெரியவாச்சான் பிள்ளை என்ற கிருஷ்ணசூரியும் தோன்றினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தமிழ்நாட்டில், கும்பகோணம் அருகில் உள்ளது "சேங்கனூர்" என்ற இந்த க்ஷேத்ரம்.

சேங்கனூர் அருகில் உள்ள திருக்கண்ணமங்கை கோவிலில் உள்ள பக்தவத்சல பெருமாளிடம் இவருக்கு இருந்த பக்தியின் காரணமாக திருக்கண்ணமங்கை ஆண்டான் எனறே பெயர் அமைந்தது.

கோவிலில் தானே, பூ கைங்கர்யம் செய்து கொண்டு, கோவிலை சுத்தப்படுத்தி கொண்டு, பகவானிடம் சரணாகதி செய்து, வாழ்ந்து வந்தார்.
ஒரு சமயம், "பகவான் சரணாகதி செய்பவர்களை காப்பாற்றுவார் என்று எப்படி நம்புவது?" என்ற சந்தேகத்துடன் இருந்த ஒருவர், திருக்கண்ணமங்கை ஆண்டானிடத்தில், அவர்கள் வந்து,
"சரணாகதி.. சரணாகதி.. என்று சொல்கிறீரே. 
நாம் சரணாகதி செய்து விட்டால் மட்டும் பெருமாள் காப்பாற்றி விடுவாரா?" 
என்று அவரிடம் சாஸ்திரத்தின் மேல் நம்பிக்கை இல்லாததால், விதண்டாவாதம் செய்தார்.


திருக்கண்ணமங்கை ஆண்டான், இவருக்கு சாஸ்திரத்தை கொண்டு பதில் சொல்லவில்லை. மௌனமாகவே உடகார்ந்து இருந்தார்.

'சாஸ்திரம் இப்படி சொல்லி இருக்கிறது' என்று சொன்னால், சாஸ்திரத்தை நம்ப இவர் தயாரில்லை.
இவரிடம், சாஸ்திரத்தை கொண்டு நிரூபிக்க முயற்சி செய்வது வீண்.

சாஸ்திரத்தை நம்பாத ஜனங்களிடம், சகஜமாக உலகத்தில் நடக்கும் விஷயங்களை காட்டி நிரூபிக்கலாம்.

'சாஸ்திரம் இப்படி சொல்லி இருக்கிறது' என்று சொல்லி புரியவைக்க முடியாத ஜனங்களுக்கு, ஹித உபதேசங்கள் செய்து ஆசாரியர்கள் நல்வழி படுத்திவிடுவார்கள்.

அந்த சமயம்,
எதிர் வீட்டில் ஒருவன் நாய் வளர்த்து கொண்டு இருந்தான்.
அன்று, அவனோடு அந்த நாய் தெருவோடு நடந்து கொண்டிருக்கும் போது,
அந்த தெருவிலேயே இருக்கும் இன்னொரு நாய், இதை பார்த்தவுடன், அங்கிருந்து வேகமாக ஓடி வந்து, இவனின் நாயை பார்த்து கோபத்துடன் "லொள் லொள்.." என்று ஹிம்சை பண்ண ஆரம்பித்தது.


யாரிடமோ பேசி கொண்டிருந்த அந்த வீட்டு நாயின் எஜமானன், தான் வளர்க்கும் நாய் ஹிம்சிக்கப்படுகிறது என்று பார்த்த அடுத்த நொடி, 'குபீர்' என்று பாய்ந்து, தன் நாயை தாக்க வந்த அந்த நாயை கல்லால் அடித்து துரத்தி விட்டு, தன் சொந்த நாயை அணைத்து கொண்டு, தன் வீட்டுக்கு கூட்டி சென்றான்.
இந்த நிகழ்வை பார்த்து கொண்டிருந்த திருக்கண்ணமங்கை ஆண்டான், தன்னிடம் விதண்டாவாதம் செய்தவரை பார்த்து,
"இந்த எஜமானனுக்கு ஏன் இந்த நாயின் மேல் அபிமானம் ஏற்பட்டது?
இந்த எஜமானனும் நாயும் ஒரே ஜாதியா? ரத்த சம்பந்த உறவா?"
என்று கேட்க,




"இது இவன் சொந்த நாய். அதனால் அபிமானம் இவனுக்கு ஏற்பட்டது" என்றார்.

"சொந்த நாயாக இது ஆவதற்கு காரணம் என்ன?" என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் கேட்க,

"இந்த நாய் அவன் வீட்டோடு எப்பொழுதும் இருக்கிறது. 
அவன் கொடுக்கும் உணவை சாப்பிட்டு, அவன் காலையே சுற்றி சுற்றி வருகிறது. 

இந்த அன்பு, அந்த எஜமானனுக்கு ஜாதியில் இது நாயாக இருந்தாலும், தன் சொந்தம் என்று நினைக்க வைக்கிறது. இதை காப்பாற்ற வேண்டியது தன் பொறுப்பு என்று நினைக்கிறான்" என்றார்.

"தனக்கு பிரியமான இந்த நாய் மேலே, இன்னொரு நாய் வந்து ஹிம்சை செய்தால் அதை தான் விலக்கி, அணைத்து காப்பாற்றுவது ஒரு அல்ப மனிதனுக்கே ஸ்வபாவமாக இருக்குமென்றால்,
பக்தவத்சலனான திருக்கண்ணமங்கை எம்பெருமான் அப்படி செய்ய மாட்டாரா?
எம்பெருமானே கதி என்று அவர் அடியிலேயே கிடக்கும் அடியார்களை, அணைத்து கொள்ளாமல் இருந்து விடுவாரா?


அந்த தெரு நாய் போன்று, மோக்ஷத்திற்கு எதிரான பாதையில் திருப்பி, மீண்டும் உலக விஷயங்களில் திருப்ப நினைப்பவர்களை, தன் அடியார்களோடு சேரவிடாமல் விலக்கி, அணைத்து கொண்டு காப்பாற்ற மாட்டாரா, எம்பெருமான்?.
"சரணாகதி செய்தால், சத்தியமாக எஜமானன் காப்பாற்றுகிறான்" என்று உலக வாழ்க்கையிலேயே தெரியும் பொழுது,
கருணையே வடிவான எம்பெருமான், சரணாகதி செய்தவர்களை காப்பாற்றுவாரா என்று சந்தேகமும் ஒருவனுக்கு எழும்புமா?"

சரணாகதி செய்த அடியார்களுக்கு எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதே லட்சியம்.

அந்த கைங்கர்யம் செய்து கொண்டிருப்பது மட்டுமே சரணாகதி செய்தவன், தன் எஜமானனான எம்பெருமானுக்கு செய்ய வேண்டியது"
என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் ஹித உபதேசமாக உலக விஷயத்தை வைத்தே விளக்கி சொல்ல,
சந்தேகம் தெளிந்து விடைபெற்றார் அந்த நபர்.

சரணாகதி செய்தவன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

காலை 4 மணிக்கு எழுந்து, 6 மணிக்குள்,
பல் துலக்கி,
கை கால்களை அலம்பிக்கொண்டு,
விஷ்ணு சஹஸ்ரநாமம்,
கஜேந்திர மோக்ஷம்,
ருத்ர கீதம்,
ப்ராத ஸ்மரணம் ,
சுப்ரபாதம்,
ஆத்ம நிவேதனம்,
திருப்பள்ளி எழுச்சி,
திருப்பாவை
முதலியவைகளை சொல்லி,
ராமானுஜர், மாத்வர், ஆதிசங்கரர் போன்ற ஆசார்யர்களும்,
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் போன்ற அவதார புருஷர்களும்,
மேலும் பல மகான்களும் இயற்றிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்து கொண்டு,

காலை 6 மணி முதல், 8 மணிக்குள், 
ஸ்நானம், அனுஷ்டானம் செய்து,
ஸ்ரீமத் பாகவதமோ,
ஸ்ரீமத் ராமாயணமோ,
ஸ்ரீமத் பகவத் கீதையோ,
ஒரு வேளை, தேவர்களின் பாஷையான சம்ஸ்க்ரிதம் தெரியாதவர்கள் என்றால்,
4000 திவ்ய ப்ரபந்தமோ பாராயணம் செய்ய வேண்டும்.
பாராயணம் முடித்து விட்டு, பூஜை செய்ய வேண்டும்.

மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை, தனிமையான இடத்தில் மௌனமாக அமர்ந்து கொண்டு பகவானின் மூர்த்தியை தியானம் செய்து கொண்டோ,
ஹரே ராமா சொல்லிக்கொண்டோ,
குருவிடம் உபதேசம் ஆகி இருந்தால், அவர் உபதேசம் செய்த பகவன் நாமாவை குருவின் திருவடியை தியானம் செய்து கொண்டே சொல்லிக்கொண்டோ, இருக்க வேண்டும்.


தினசரி குடும்ப காரியங்களுக்கு இடையில் ஒழிவு/நேரம் கிடைக்கும் போதும், விடுமுறை நாட்களிலும்
கிருஷ்ண சைதன்யர் சரித்திரமமோ,
ஸ்ரீ ராமகிருஷ்ணர் சரித்திரமோ,
பாரத மண்ணில் தோன்றிய மீரா, துளசிதாஸ், துக்காராம், ஏகநாதர், பத்ராசல ராமதாசர், சமர்த்த ராமதாசர் போன்ற பக்தர்களின் சரித்திரமமோ,
ஆழ்வார்கள், நாயன்மார்கள் சரித்திரமோ,
அல்லது
இந்த மகான்கள் நமக்கு சொன்ன உபதேங்களை தனியாக படித்துக்கொண்டோ, பலபேர் கூடியோ படிக்க வேண்டும்.

பகல் தூக்கம் கூடாது.
பகல் தூக்கம் ஆரோக்கியத்துக்கும் கெடுதல்.
பகல் தூக்கத்தினால், நேரம்  வீணாகி, பாரமார்கத்துக்கும் விரோதமாகிறது.

இந்த விதியை மனிதனாக பிறந்த அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

பெரியவர்கள் மட்டுமில்லாது,
குடும்பத்தில் உள்ள குழந்தைகள், பெண்கள் என்று அனைவரும் அனுசரித்து கொண்டு, உற்சாகத்துடன் செய்ய வேண்டும்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்த வரிசைப்படி செய்ய சொல்லி தர வேண்டும்.

இப்படி ஒரு நியமப்படி, தானும் வாழ உண்மையாக ஆசைப்படுபவர்களுக்கு பகவான் அவர்கள் வாழ்க்கையை அனுகூலம் ஆக்கி கொடுப்பான்.

இப்படி வாழ்ந்தால் பகவான் நம்மை கண்டு மகிழ்ச்சி அடைகிறார். அவரே நம்மை காண வருவார்.
மகான்கள் நம்மை கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இது ஒவ்வொரு ஹிந்துவின் வாழ்க்கை முறை.

ஹிந்துவாக பிறந்த நாம், இந்த முறையில் வாழ முயற்சிப்போம்.

"பகவானை நாம் சரணம் அடைந்தால், பகவான் நம்மை நிச்சயம் காப்பாற்றுகிறார்".

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka


sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka