'தன் பர்த்தாவான "ப்ரம்ம தேவனின்" யாகத்தை அழிக்க, நதி ரூபமாக அதி வேகத்துடன் வந்த வேகவதியை (சரஸ்வதி தேவி) தடுப்பதற்காக, பெருமாளே ஒரு பெரிய அணை போல, காஞ்சியில் உள்ள திருவெஃ காவில், படுத்துக்கொண்டார்'
என்பது புராண காலத்தில் நடந்த சரித்திரம்.
இந்த பெருமாளுக்கு தான் "யதோத்தகாரி" என்றும் "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" என்று பெயர்.
காஞ்சியில் உள்ள இந்த திவ்ய தேசத்துக்கு "திருவெஃ கா" என்று பெயர்.
'பெருமாள் இங்கு அணை போல படுத்துக்கொண்டது, வேகவதியை தடுப்பதற்காக தான்' என்ற போதிலும், 'பெருமாள் படுத்துக்கொண்டதற்கான காரணம் வேறோ?'
என்று கேட்கிறார் பேயாழ்வார்.
பெருமாளை பார்த்து கேட்கிறார், "முன்பு ஒரு சமயம், பாற்கடலை கடைந்து தேவர்கள் அம்ருதம் எடுத்து கொள்ள, பாற்கடலை கடைவதற்கு, தகுதியான (இசைந்த) மந்திர மலையையே (வெற்பும்) மத்தாக ஆக்கி, தகுதியான (இசைந்த) வாசுகி என்ற பாம்பையே (அரவமும்) கயிறாக்கி, நீங்களே க்ஷீராப்தியில் கடைந்தீர்களே (பசைந்து)! தேவர்களுக்காக நீங்களே அம்ருதம் கடைந்தீர்களே !
விஷம் வந்ததும், தேவர்களும், அசுரர்களும் பாதியில் விட்டு விட்டு ஓடிய பிறகும், அந்த வாசுகியின் தலையையும், வாலையும் பற்றி கொண்டு, நீரே கடைந்தீரே ! ஆயிரம் தலைகளுடன் நீரே அந்த மலையின் கொடு முடியை பிடித்துக்கொண்டு இருந்தீரே ! முதுகை கொடுத்து மலையை நீரே கிளப்பி கொண்டு, தாங்கி கொண்டு இருந்தீரே ! அவ்வளவும் நீரே செய்து விட்டு, கடைசியில் கிடைத்த அம்ருதத்தை ((அங்கு அமுது படுப்ப) அப்படியே அவர்களுக்கு கொடுத்து விட்டு, அங்கு க்ஷீராப்தியில் ஓய்வில்லாமல் நின்று வேலை செய்ததால் (நின்றதுவும் அங்கு) ஏற்பட்ட களைப்பினால், காஞ்சியில் உள்ள இந்த திரு வெஃகாவில் வந்து இளைப்பாறுகிறீரோ? (அசைந்து கடைந்த வருத்தமோ)"
என்று பேயாழ்வார், திருவெஃகாவில் உள்ள யதோத்தகாரி பெருமாளை பார்த்து கேட்பது போல, நமக்கு பாசுரத்தை தருகிறார்.
திருவெஃகாவில் உள்ள யதோத்தகாரி என்ற சொன்ன வண்ணம் செய்த பெருமாள், காஞ்சி வரதராஜனுக்கும் (அத்தி வரதர்) முன்பே தோன்றிய அர்ச்சா அவதாரம்.
அருமையான பாசுரம். திவ்ய தேசத்தில் நாம் பாடவேண்டிய பாசுரம்.
ஸ்ரீ கிருஷ்ணர், துவாரகை என்ற ஆச்சரியமான நகரத்தை உருவாக்கி, ராஜ்யம் செய்து கொண்டிருந்தார்.
சத்யபாமாவுக்கு, அவள் அரண்மனையில் செல்வங்கள் கொட்டி இருந்தாலும், 'போதவில்லையே!' என்று எப்பொழுதும் குறைப்பட்டு கொண்டாள்.
"இன்னும் கொஞ்சம் செல்வம் சேர்ந்தால் நன்றாக இருக்குமே!!" என்று கூட தோன்றியது.
சாஷாத் நாராயணனின் அவதாரமான கிருஷ்ணனுக்கு மனைவியாக இருந்தும், பெரிய அரண்மனையில் இருந்தும், 'சத்யபாமா' இப்படி குறைபட்டு கொண்டாள்.
மஹாலக்ஷ்மியே ருக்மிணி தேவியாக அவதரித்து இருந்தும், 'ருக்மிணி அனுக்கிரகம் தனக்கு வேண்டாம்' என்று நினைத்தாள்.
'ருக்மிணியின் அரண்மனையில் செல்வங்கள் நிறைந்து இருப்பது போல, தன்னிடம் இல்லையே!!'
என்று அசூயைபட்டாள் சத்யபாமா.
ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து, "மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டாள்.
சத்யபாமாவிடம் கிருஷ்ணரும், "சரி, அப்படியென்றால் மஹாலக்ஷ்மியை ஸ்தோத்திரம் செய்து அவள் கடாக்ஷம் பெறுவோம்"
என்று, பரப்ரம்மமாகிய ஸ்ரீ கிருஷ்ணரே, க்ஷீராப்தியில் இருக்கும் மஹாலக்ஷ்மியை ஸ்தோத்திரம் செய்து தரிசனம் தர பிரார்த்தித்தார்.
கிருஷ்ண பரமாத்மா கூப்பிட்டும், மஹாலக்ஷ்மி வராமல் இருப்பாளா?...
தாமரை பூவின் மேல் அமர்ந்தபடி, இரண்டு கைகளிலும் தாமரை மலரை வைத்துக்கொண்டு,
மஹாலட்சுமி காட்சி தந்தாள்.
சாமானிய மனிதனை போல லட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி விட்டு, கிருஷ்ண பரமாத்மா, ச்ரத்தையுடன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நிற்க... சத்யபாமாவும் ஸ்ரீகிருஷ்ணருடன் சேர்ந்து வணங்கினாள்.
ஸ்ரீ கிருஷ்ணர் நாராயணனின் அவதாரம் தானே!!
அவரின் பத்னி தானே மஹாலக்ஷ்மி!!
மஹாலக்ஷ்மிக்கு ஸ்ரீ கிருஷ்ணர் நாராயணன் என்று தெரியாதா? கிருஷ்ண பரமாத்மா, எதற்கு வணங்கினார்?... என்ற கேள்வி நமக்கு எழலாம்.
ஒரு சமயம் அர்ஜுனனை வைகுண்டமே அழைத்து கொண்டு சென்று விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.
பரவாசுதேவன் நாராயணனை, ஸ்ரீ கிருஷ்ணர் நமஸ்கரித்தார்.
ஏன் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னையே நமஸ்கரித்தார்?
ஸ்ரீ கிருஷ்ணர் நமஸ்கரிக்கவில்லையென்றால், தனக்கு பின்னால் நிற்கும் அர்ஜுனன் மரம் போல நிற்பான் என்று, தானே நமஸ்கரிக்க, அர்ஜுனனும் பரவாசுதேவனை நமஸ்கரித்தான்.
ராமபிரான், தன் அர்ச்ச அவதாரமான ஸ்ரீரங்கநாதரை வணங்கியதும் இதன் காரணமே...
நாம் அவரிடம் எப்படி பழக வேண்டும்? என்பதையும் தானே காட்டுகிறார்.
அதுபோல, இப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணர், மஹாலக்ஷ்மியை பார்த்து கை குவித்துக்கொண்டு, "அம்மா.... நீ ஒரு இடத்தில் ஸ்திரமாக இருக்கமாட்டேன் என்று இருக்கிறாயே!! திடீரென ஒருவனை கோடீஸ்வரனாக செய்துவிடுகிறாய்.. திடீரென ஒருவனை தரித்திரனாக செய்துவிடுகிறாய்... ஒரு இடத்தில் இல்லாமல் ஓடி ஓடி போய் விடுகிறாயே!! ஒரே இடத்தில் ஸ்திரமாக நீ இருக்க கூடாதா?"
என்று கிருஷ்ண பரமாத்மா கேட்க,
உடனே ஸ்ரீதேவி சொல்கிறாள், "நான் ஒருவனிடம் வருவதற்கு காரணம் இருக்கிறது.. எதற்காக நான் ஒருவனிடம் வருகிறேன் என்று சொல்கிறேன்.. நான் வந்தால், 'தான தர்மம் செய்வானே!' என்பதற்காக வருகிறேன்.
இப்படி ஆசையோடு நான் வந்த பிறகு, இவன் என்ன செய்கிறான் தெரியுமா?
முதலிலாவது கொஞ்சம் தான தர்மம் செய்து கொண்டிருந்தவன், நான் செல்வங்களை அள்ளி கொடுத்த பின், கொஞ்சம் செய்து கொண்டிருந்த தான தர்மத்தையும் விட்டு விடுகிறான்.
அது மட்டுமல்ல, என் கடாக்ஷத்தால் கிடைக்கும் செல்வங்களை கொண்டு, எவர்கள் 'சூதாடு'கிறார்களோ! எவர்கள் 'மது பானம்' அருந்துகிறார்களோ! எவர்கள் 'ஜீவ ஹிம்சை' செய்கிறார்களோ! இவர்கள் வீட்டில் நான் தங்குவதில் எனக்கு பிரியமில்லை.
மேலும், எவன் 'வேசி வீட்டுக்கு' செல்கிறானோ! எவர்கள் 'பொய் சாட்சி' சொல்கிறார்களோ! எவர்கள் 'பேராசையுடன்' இருக்கிறார்களோ! எவர்கள் 'லோபியாக' (கஞ்சன்) இருக்கிறார்களோ! இவர்களிடத்தில் நான் இருப்பதை விரும்ப மாட்டேன்.
மேலும், எவர்கள் பிறருடைய சொத்தை அபகரிக்க நீதிமன்றத்திலேயே நேரத்தை செலவழிக்கிறார்களோ! எவர்கள் மற்றவர்களை பார்த்து அசூயை (பொறாமை) படுகிறார்களோ! அவர்களிடத்திலும் நான் இருப்பதை விரும்பாமல் சென்று விடுவேன்.
மேலும், எவர்கள் பிறருடைய ஏழ்மையை பார்த்து சந்தோஷப்படுகிறார்களோ! எவர்கள் தன்னிடம் உள்ள செல்வங்களை நினைத்து கர்வப்பட்டு கொள்கிறார்களோ! எவர்கள் தற்புகழ்ச்சியே செய்து கொள்கிறார்களோ! அவர்களிடத்தில் இருந்தும் நான் சென்று விடுகிறேன்.
தானம் வாங்க தகுதி இல்லாதவனுக்கு யார் அள்ளி கொடுகிறார்களோ! யாருக்கு தானம் கொடுப்பது நியாயமோ அவர்களுக்கு தானம் கொடுக்காமல் யார் தள்ளுகிறார்களோ! சாதுக்கள், மகாத்மாக்கள் விஷயத்தில் யார் தர்மம் செய்யவில்லையோ! தெய்வங்கள் விஷயத்தில் யார் தர்மம் செய்யவில்லையோ! தர்மங்கள் விஷயத்தில் யார் தர்மம் செய்யவில்லையோ! அவர்கள் வீட்டில் நான் தங்குவதில்லை.
மேலும், எவர்கள் சோம்பேறிகளோ! எவர்கள் நாதீகர்களோ! எவர்கள் தன் ஆசாரத்தை, தர்மத்தை செய்வதில்லையோ! அவர்கள் வீட்டில் நான் தங்குவதில்லை.
மேலும், விசேஷமாக சொல்கிறேன்... யார் விஷ்ணுவிடம் குறிப்பாக த்வேஷம் காட்டுகிறார்களோ! யார் விஷ்ணுவின் அடியார்களை கிண்டல், கேலி என்று த்வேஷிக்கிறார்களோ! அவர்களை விட்டு உடனேயே விலகி விடுவேன்."
என்று மஹாலக்ஷ்மி சொன்னாள்.
செல்வமே இல்லாமல், ஏழையாக இருந்தும், மஹாலக்ஷ்மி சாநித்யம் இருந்ததால், குசேலன் ஏழ்மை நிலையிலும் ஒரு குறையும் தோன்றாமல், நிம்மதியாக இருந்தார்.
சத்யபாமா "ருக்மிணி கடாக்ஷம் வேண்டாம்' என்று நினைத்ததால், செல்வம் குவிந்து கிடந்தும், ஸ்ரீ கிருஷ்ணரே கணவனாக அமைந்தும், போதவில்லையே என்ற மனகுறையுடன் இருந்தாள் சத்யபாமா.
இது மஹாபாரதத்தில் நடந்த சம்பவம்.
சத்யபாமா "ருக்மிணி கடாக்ஷம் வேண்டாம்' என்று நினைத்ததால், விஷ்ணுவின் பக்தையை வெறுத்ததால், சத்யபாமாவுக்கே இப்படி மனக்குறை ஏற்பட்டது என்று கவனிக்க வேண்டும்.
மஹாலக்ஷ்மி தாயார் இப்படி சொல்ல, ஸ்ரீ கிருஷ்ணர் பேசினார்.. "அம்மா... நீ இப்பொழுது என்ன காரணத்தால் நீ ஒருவன் வீட்டில் நிலையாக இருப்பதில்லை என்று சொன்னாய். இனி, நீ எந்த வீட்டில் ஸ்திரமாக இருப்பாய் என்றும் சொல்ல வேண்டும்"
என்று கிருஷ்ண பரமாத்மா கேட்க,
மஹாலக்ஷ்மி சொல்ல ஆரம்பித்தாள்... "எவனிடத்தில் நன்னடத்தை இருக்கிறதோ! எந்த வீட்டில் தான தர்மங்கள் நடக்கிறதோ! எந்த வீட்டில் சாதுக்களுக்கு மரியாதை இருக்கிறதோ! அந்த வீட்டில் நான் சாஸ்வதமாக இருப்பேன்.
எந்த வீடு பசுஞ்சாணியால் மெழுக்கப்பட்டு, வாசலில் அலங்காரமாக கோலங்கள் போட்டு, சுத்தமாக இருக்கிறதோ! எந்த வீட்டில் துளசி செடியோ, வில்வ மரமோ இருக்கிறதோ! அந்த வீட்டில் நான் இருக்க ஆசைப்படுவேன்.
எந்த வீட்டில் சுமங்கலியான பெண்கள் நிறைய இருக்கிறார்களோ! அந்த சுமங்கலியாக இருக்கும் பெண்கள், எந்த வீட்டில் மாலை வேளையில் முத்து போல அழகான தீபம் ஏற்றி வைக்கிறார்களோ! அந்த வீட்டில் நான் இருப்பேன்.
எந்த வீட்டில் பகவானை ஆராதனை செய்யும் மணி ஓசை தினமும் கேட்கிறதோ! எந்த வீட்டில் என் பதியான விஷ்ணுவுக்கு பூஜை தினமும் நடக்கிறதோ! எந்த வீட்டில் வைஷ்ணவனுக்கு அன்ன தானம் நடக்கிறதோ! அந்த வீட்டில் நான் இருப்பேன்.
எந்த வீட்டில் வேத மந்திரங்கள் சொல்லப்படுகிறதோ! எந்த வீட்டில் ஸ்தோத்திர பாடங்கள் நடக்கிறதோ! எந்த வீட்டில் அங்கு உள்ளவர்கள் யாரிடத்திலும் விநயமாகவும், அன்புடனும் பழகுகிறார்களோ! அந்த வீட்டில் நான் இருப்பேன்.
எந்த வீட்டில் இருப்பவர்கள் மற்ற சொந்தங்களை பார்த்து பொறாமை, அசூயை அடையாமல் இருக்கிறார்களோ! எந்த வீட்டில் ஒருவருக்கு ஒருவர் ப்ரேமையுடன் (அன்புடன்) இருக்கிறார்களோ! அந்த வீட்டில் நான் இருப்பேன்.
எந்த வீட்டில், ஒரே கூச்சலும், சண்டையும், துக்கமும், அழுகையும், ஒப்பாரியும் இருக்கிறதோ! அந்த வீட்டில் எனக்கு இருக்க பிடிக்காது. உடனேயே சென்று விடுவேன்.
சுருக்கமாக சொல்கிறேன்... எந்த வீட்டில் தினசரி விஷ்ணு பூஜை நடக்கிறதோ! அந்த வீட்டில் நான் மிகவும் சமதோஷமாக வாசம் செய்கிறேன்"
என்று மஹாலக்ஷ்மி சொல்லி அணுகரஹம் செய்து விட்டு மறைந்தாள்.
"மஹாலக்ஷ்மி யாரிடம் தங்குவாள்? யாரை விட்டு விலகுவாள்?"
என்பதை, மஹாலக்ஷ்மியின் திருவாயாலேயே, கிருஷ்ணரும், சத்யபாமாவும் கேட்ட பின்,
ஸ்ரீ கிருஷ்ணர், சத்யபாமாவை பார்த்து, "கேட்டாயா சத்யபாமா! மஹாலக்ஷ்மி சொன்னது போல நாமும் நடக்க வேண்டும். அப்பொழுது தான் நமக்கும் நிறைந்த செல்வம் உண்டாகும்"
என்று உபதேசித்தார்.
சத்யபாமாவுக்கு, ருக்மிணி தேவி குறையே இல்லாமல் இருப்பதற்கு காரணம் புரிந்தது. ருக்மிணியிடம் இருந்த பொறாமையை விலக்கி கொண்டாள், சத்யபாமா.