Followers

Search Here...

Thursday 25 June 2020

பாசுரம் (அர்த்தம்) - இடங்கொள் சமயத்தை. "பாற்கடலில், ஹரிபக்தி செய்பவர்களின் பக்தி எப்படி உள்ளது?" என்று நம்மாழ்வார் வர்ணிக்கிறார். தெரிந்து கொள்வோமே !

ஒரு சமயம் நாரதர், நர நாராயணனாக வீற்று இருக்கும் பதரிநாத்க்கு வந்தார்.



எப்பொழுதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் நாரதர், முகம் வாடி இருந்தார்..

இதை கவனித்த பதரி நாராயணன், "என்ன காரணம்?" என்று விஜாரித்தார்.

நாரதர் பல உலகங்கள் சஞ்சாரம் செய்பவர்.
எங்கு போனாலும் இவருக்கு மரியாதை, வரவேற்பு தான் கிடைக்கும்.

கம்சன் அரண்மனைக்கு சென்றாலும் வரவேற்பு கிடைக்கும், சிவபெருமானை பார்க்க சென்றாலும் வரவேற்பு கிடைக்கும்.

இவரை மதிக்காதவர் உலகில் இல்லை.

இருந்தாலும், ஒரு சமயம் ஒரு இடத்துக்கு இப்பொழுது தான் முதல் முறையாக சென்றாராம்.

அங்கு இருந்தவர்கள் அனைவரும் ஹரி நாம கீர்த்தனை தான் செய்து கொண்டு இருந்தார்கள்.

நாரதரும் ஹரி நாம கீர்த்தனை செய்பவர் தான்.
ஆசையாக இவர்கள் அருகில் சென்றும், நாரதர் வந்து இருக்கிறார் என்று கூட கவனிக்காமல், 
மெய்மறந்து நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு இருந்தார்களாம். ஆடினார்களாம்.. துள்ளினார்களாம்.. பாடினார்களாம்...குனிந்து நிமிர்ந்து நமஸ்காரம் செய்து ஆடி பாடினார்களாம்...
ஆனால் கடைசி வரை நாரதர் இருப்பதையே கவனிக்க வில்லையாம்...

இப்படி ஒரு ஹரி நாம கீர்த்தனையை நாரதர் கேட்டதே இல்லையாம்.. மேலும், தன்னை கவனிக்காததும் ஆச்சரியம் தர,
பதரி நாராயணனிடம் "இப்படி ஹரிநாம பஜனை செய்யும் இவர்கள் யார்?"
என்று கேட்க,
பதரி நாராயணன் நாரதரை பார்த்து,
"நீங்கள் பார்த்தது க்ஷீராப்தியில் அருகில் உள்ள இடம்.
அதற்கு ஸ்வேத த்வீபம் என்று பெயர்.
விஷ்ணு பக்தி செய்த புண்ணிய ஆத்மாக்கள், இங்கே தடையில்லாமல், தன்னையே மறந்து என்னை பஜித்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நானே லட்சியமாக இருக்கிறேன்.
இதனாலேயே, வந்திருப்பது யார் என்று கூட அவர்கள் கவனிக்கவில்லை.
அவர்கள் பக்தி அலாதியானது"
என்றார்.
விஷ்ணு லோகமான 'க்ஷீராப்தியில் உள்ள உன்னதமான பக்தர்கள் எப்படி பஜனை செய்கிறார்கள்?'
என்று தன் பாசுரத்தில் "நம்மாழ்வார்" நமக்கு காட்டுகிறார்.

இடங்கொள் சமயத்தை யெல்லாம்
எடுத்துக் களைவன போல !
தடங்கடல் பள்ளிப் பெருமான்
தன்னுடைப் பூதங்களேயாய் !
கிடந்தும் ! இருந்தும் ! எழுந்தும் !
கீதம் பலபல பாடி !
நடந்தும் ! பறந்தும் ! குனித்தும் !
நாடகம் செய்கின்றனவே !!




'பரமபதத்தில்' நாராயணன் நான்கு கைகளுடன், சங்கு சக்கரம் ஏந்தி அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.
அதே நாராயணன்,
'க்ஷீராப்தியில்' விஷ்ணுவாக இருக்கும் போது, இரண்டு கைகளுடன், ஆதிசேஷன் மேல், யோக நித்திரையில் பாற்கடலில் பள்ளி கொண்டு இருக்கிறார்.

'க்ஷீராப்தியில்' ப்ரம்ம தேவன், ருத்ரன், தேவர்கள், ரிஷிகள் பேசி பழகும் படியாக பிரசன்னமாக பாற்கடலில் இருக்கிறார்.

பாற்கடலில் வீற்று இருக்கும் விஷ்ணுவை, ஸ்வேத த்வீபத்தில் இருக்கும் இவர்கள் எப்படி பஜிக்கிறார்கள்? என்று சொல்கிறார் நம்மாழ்வார்.

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை (தடங்கடல் பள்ளிப் பெருமான்)
நினைத்து நினைத்து, ஸ்வேத தீவபத்தில் இருக்கும் இவர்கள் ஆனந்தத்தில் திளைக்கிறார்களாம்,
விஷ்ணுவின் நாமத்தை, கைகளில் தாளத்தை வைத்து கொண்டு "நாராயண..நாராயண..நாராயண.." என்று சொல்ல சொல்ல, கோஷ்டியாக 1000 பேர் சேர்ந்து கொண்டு குனிந்து, நிமிர்ந்து ஆடியும் பாடியும் அபிநயமும் செய்து கொண்டு இருக்கின்றனராம்.

பாற்கடலில் இருக்கும் இவர்களுக்கு "நாராயணனை' பஜிப்பதே லட்சியம்.

பெருமாளே இவர்களுக்குள் புகுந்தது போல இருந்தார்களாம் இவர்கள்.
அதையே "பெருமாள் தன்னுடைப் பூதங்களேயாய் !" என்கிறார்.

இப்படி பெருமாள் இவர்களிடம் ஆவேசித்து இருக்க,
க்ஷீராப்தியில் ஆதிசேஷன் மேல் படுத்து கொண்டிருக்கிறார் என்று பாடும் போது,
தானும் அது போல அபிநயம் செய்து கிடப்பார்களாம் (கிடந்தும்)
மற்றொரு சமயம்,
பரமபத்தில் அமர்ந்த கோலத்தில் பரவாசுதேவனாக இருக்க, இவர்களும் பரவாசுதேவன போலவே அமர்ந்த படி (இருந்தும்) அபிநயம் செய்வார்களாம்.
மற்றொரு சமயம்,
திருமலையில் ஸ்ரீனிவாசனாக எழுந்து நின்று இருப்பது போலவே நின்று (எழுந்ததும்) அபிநயம் செய்வார்களாம்.

வெறும் அபிநயம் மட்டும் செய்தால் நன்றாக இருக்குமா?... அபிநயத்தோடு பல பல கீதங்கள் பாடுவார்களாம்.

தண்டகாரண்யத்தில் ராமபிரானாக நடந்ததையும், ஸ்ரீ பிருந்தாவனத்தில் கண்ணனாக நடந்ததையும் பாடும் போது,
கண்ணனாகவே நடந்து (நடந்தும்) அபிநயம் செய்வார்களாம், ராமபிரானாகவே நடந்து (நடந்தும்) அபிநயம் செய்வார்களாம்.

கருடனில் பறந்து வரும் பெருமாளாக பாடும் போது, தன் கைகளே இறக்கையாக நினைத்து, தானும் பறப்பது போல அபிநயம் (நாடகம்) செய்து ஆடுகிறார்களாம் (குனித்தும்) இவர்கள்.

இதையே,
கிடந்தும் ! இருந்தும் ! எழுந்தும் !
கீதம் பலபல பாடி !
நடந்தும் ! பறந்தும் ! குனித்தும் !
நாடகம் செய்கின்றனவே !!
என்கிறார்.

நெல் விதைக்கப்பட்ட நிலத்தில், தேவையில்லாத கோரை புல் இடையிடையே வளர்ந்து இருக்கும்.
நெல் வளர்ச்சியை தடுக்கும், இந்த கோரை புற்களை முழுமூச்சுடன் உடனே களையெடுக்க, அந்த விவசாயி குனிந்து, நிமிர்ந்து அதை தேடி கண்டுபிடித்து, அறுத்து எரிவார்களாம்,
குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதால், களைப்பு ஏற்படாமல் இருக்க கிராமத்து பாடல் பாடிக்கொண்டே, அறுத்து எரிவார்களாம்,
கோரை புல்லை பிடுங்கி எரிந்து, நெல்லை காப்பாற்றும் விவசாயி போல, இங்கு இவர்கள் குனிந்தும், நிமிர்ந்தும் ஆடுவதையும், 
களைப்பு தெரியாமல் இருக்க இவர்கள்  "நாராயண.. நாராயண.." என்று சொல்லிக்கொண்டே பாடுவதையும் பார்த்தால், 
எதையோ தூக்கி எரிவது போல தோன்றியதாம்!  நம்மாழ்வாருக்கு.




அப்படி என்ன எறிந்தார்களாம் இவர்கள்?
விஷ்ணு பக்தியை வளர்க்காத போலி மதங்களை எல்லாம், க்ஷீராப்தியில் இருக்கும் இவர்கள் கோரை புல்லை பிடுங்கி எரிவது போல தூக்கி எறிந்தார்களாம்.

மற்ற விஷயங்கள் புகாமல், நாராயணனின் நினைவே க்ஷீராப்தியில் நிரம்பி இருந்தது  என்ற ரீதியில் ரசித்து, 'க்ஷீராப்தியில் உள்ள விஷ்ணு பக்தர்கள் செய்யும் பஜனையை' ரசிக்கிறார் நம்மாழ்வார்.

இதையே,
இடங்கொள் சமயத்தை யெல்லாம்
எடுத்துக் களைவன போல !
என்று சொல்கிறார்.

குருநாதர் துணை.

Tuesday 23 June 2020

பாசுரம் (அர்த்தம்) - முனியே நான்முகனே... நம்மாழ்வார் க்ஷீராப்தி நாதனை நினைத்து பாடிய அழகான பாசுரம். சிவபெருமானை 'அப்பா' என்று வைஷ்ணவரான நம்மாழ்வார் அழைக்கிறார். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பரமபதத்தில் (வைகுண்டம்) "நாராயணன்" நித்ய வாசம் செய்கிறார்.
ஆதிசேஷனும், மஹாலக்ஷ்மியும் கூடவே இருக்கிறார்கள்.




மோக்ஷம் அடைந்த ஜீவன்கள், பரமபதத்தில், திவ்ய பார்ஷத ரூபத்துடன், பகவானை எப்பொழுதும் பார்த்து கொண்டே இருக்கின்றனர்.

ப்ரம்ம தேவனும் செல்ல முடியாத இடம் 'பரமபதம்'.
ப்ரம்ம தேவனே தரிசிக்காத இடம் "பரமபதம்".
"பரமபதம்" மோக்ஷம் அடைந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடியது என்பதால்,
"பிரம்ம தேவன், ரிஷிகள், தேவர்கள் போன்றோர் தன்னை தரிசனம் செய்ய"  'க்ஷீராப்தி என்ற பாற்கடலை' ஸ்ருஷ்டி செய்து கொண்டு, 
அங்கு வ்யூஹ ரூபத்துடன் 'விஷ்ணு'வாக ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு இருக்கிறார்.
பிறகு, ஒரு சமயம் தேவர்களுக்கு அம்ருதம் கிடைக்க, பாற்கடலை கடைய சொல்ல,
மஹாலக்ஷ்மியை பாற்கடலை கடையும் போது, வரச்செய்து தானே மணந்து கொண்டார்.

பிரம்ம தேவனுக்கும், ருத்ரனுக்கும் "அந்தர்யாமியாக" இருக்கும் பரவாசுதேவன்,
இவர்களோடு சமமாக பழக ஆசைப்பட்டு, "விஷ்ணுவாக" அவதரித்து விட்டார்.
பிரம்ம தேவனுக்கு "படைக்கும்" தொழிலை கொடுத்து,
ருத்ரனுக்கு "சம்ஹார" தொழிலை கொடுக்க,
தான் விஷ்ணுவாக "காக்கும்" தொழில் செய்கிறேன்,
என்று வந்து விட்டார்.

தேவர்களுக்கு கஷ்டம் என்றால், இவர்தான் காக்க ஓடுவார்.
ஒரு சமயம், ருத்ரனுக்கே பஸ்மாசுரன் என்ற அசுரனால் கஷ்டம் ஏற்பட, ருத்ரனை காக்க ஓடினார்.

ஆதிபுருஷனாக இருந்தும், தன்னை மும்மூர்த்திகளில் ஒருவனாக காட்டி கொள்ள ஆசைப்படுகிறார்.

தான் படைத்த பிரம்ம தேவனுக்கு சம ஆசனம் கொடுக்கிறார்.
சுலபமான தெய்வமாக இருக்கிறார் பெருமாள்.
யாருக்கும் கிடைக்கிறார்.

அதுமட்டுமா?
தேவர்களுக்கு மத்தியில் "உபேந்திரன்" என்ற ஒரு தேவனாக அவதரித்தார். தேவர்களுடன் சுலபமாக பழகுகிறார்.

ரிஷிகள் கூட்டத்தில் தானும் ஒரு ரிஷி என்று "வ்யாஸராக" அவதரித்தார். ரிஷிகளுடன் சுலபமாக பழகுகிறார்.
மனிதர்கள் கூட்டத்தில் தானும் ஒரு மனிதன் என்று "ராமபிரானாக" அவதரித்தார். மனிதர்களுடன் சுலபமாக பழகுகிறார்.

ஒரு சமயம், பன்றி கூட்டத்தின் நடுவே, தானும் "ஒரு பன்றியாக" கூட அவதரித்து விட்டார்.

மீன் கூட்டத்தின் நடுவே, தானும் "ஒரு மீனாக" கூட அவதரித்து விட்டார்.

இப்படி அனைவரையும் படைத்து, அனைவருக்குள்ளும் தானே அந்தர்யாமியாக இருந்து கொண்டு,
அதுவும் போதாதென்று,
தானும் அவர்களை போலவே சில சமயம் அவதரித்து,
எப்பொழுதும் அனைத்து ஜீவனிடத்திலும் உறவாட ஆசைப்படுகிறார் பெருமாள்.

'தானே அனைத்துமாக இருக்கிறேன்' என்றும் காட்டுகிறார்.




பரப்ரம்மத்தையே உபாசிக்கும் நம்மாழ்வார் 'தனித்த பொருளான பரவாசுதேவன், தன்னை மும்மூர்த்திகளில் ஒருவனாக காட்டி கொண்டு, க்ஷீராப்தியில் இருப்பதை கண்டு ஆசைதீர, அந்த க்ஷீராப்தி நாதனுக்கு மங்களாசாசனம்' செய்கிறார்.

க்ஷீராப்தி - 108 திவ்ய தேசத்தில் ஒன்று.

க்ஷீராப்திக்கு மங்களாசாசனம் செய்த பாசுரம் தெரிந்து கொள்வோமே.

பாசுரம்:
முனியே நான்முகனே!
முக்கண்ணப்பா!
என் பொல்லாக் கனிவாய்த்
தாமரைக்கண் கருமாணிக்கமே!
என் கள்வா !
தனியேன் ஆருயிரே !
என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் !
என்றும் மாயம் செய்யேல் என்னையே !
-- நம்மாழ்வார் (திருவாய்மொழி)

'வைணவ பக்தி' ஆழ்வார்களால் ஒரு புறம் வளர,
'சைவ பக்தி' நாயன்மார்களால் மறுபுறம் வளர்ந்தது.

"பொறாமை இல்லாமல் பக்தியே நம்மிடம் இருந்தது" என்பதற்கு இந்த பாசுரமே சான்று.

இந்த பாசுரத்தில் ஆழ்வார், "தனித்தவரான பரவாசுதேவன் நாராயணன், மும்மூர்த்திகளில் தானும் ஒருவராக தன்னை காண்பித்து கொள்ள க்ஷீராப்தி வந்து விட்டாரே" என்று ஆச்சரியமும், ஆனந்தமும் அடைகிறார்.

வேதம் சொல்லும் மும்மூர்த்திகளை, நம்மாழ்வாரும் இங்கு சொல்கிறார்.
இங்கு ஆழ்வார்,
சிவபெருமானை எப்படி அழைக்கிறார்? என்று பாருங்கள்...

முனியே நான்முகனே! 
முக்கண்ணப்பா!
என்று ஆரம்பிக்கும் போது,
முனிவர்களுக்குள் உயர்ந்த நான்முகனான "ப்ரம்ம தேவனை" முதலில் சொல்கிறார்.
பிறகு,
சிவபெருமானை ஆழ்வார் சொல்லும்போது "முக்கண்ணா" என்று மட்டும் சொல்லி அழைத்து இருக்கலாம்!!
ஆனால்,
மூன்று கண் உடைய சிவபெருமானை "அப்பா" என்று சொல்லி அழைக்கிறார்.

சிவபெருமானை 'அப்பா' என்று வைஷ்ணவரான நம்மாழ்வார் அழைக்கிறார்!!
என்று கவனிக்க வேண்டும்.

எங்கு இருந்தது நமக்குள் சிவ விஷ்ணு வெறுப்பு?...

"சிவ-த்வேஷம் வைணவ-த்வேஷம்" என்று சொல்லி சொல்லி, "ஹிந்துக்களிடையே பிரிவினையை உருவாக்க வேண்டும்" என்று திட்டமிட்டு, வெளி மதத்தை சேர்ந்தவர்கள் இன்றுவரை பெருமுயற்சி செய்கின்றனர்.

சிவபக்தியினால் கிருமிகண்ட சோழன் மட்டும் தான், அவன் காலத்தில் வைஷ்ணவ வெறுப்பை காட்டினான்.
இதை மட்டுமே எப்பொழுதும் காட்டி காட்டி, இன்று வரை ஹிந்துக்களை பிரிக்க நினைக்கின்றனர்.

கிருமிகண்ட சோழனுக்கு முன்னால் இருந்த சோழனும்,
அவனுக்கு பின்னால் வந்த சோழர்களும் தான், 'பல வைணவ கோவிலையும் கட்டினர், பல சிவன் கோவிலையும் கட்டினார்கள்'
என்ற உண்மையை இவர்கள் சொல்ல விரும்புவதில்லை.

ஹிந்துக்களை ஒழிப்பதே இவர்கள் நோக்கமாக உள்ளது.

ஹிந்துக்களை பிரித்து,
ஹிந்துக்களுக்கு இடையே வெறுப்பை உருவாக்கி,
தன் போலி மதத்தை நுழைத்து,
தன் மதத்தில் ஆள் சேர்க்க,
இவர்கள் செய்யும் முயற்சிகளை ஹிந்துக்கள் வேரறுக்க வேண்டும்.

கும்பகோணத்தில் ஒரு தெருவில் சாரங்கபாணி இருக்க,
மறு தெருவில் கும்பேஸ்வரர் இருக்கும் போது,
இப்படி ஹிந்துக்களிடையே பிரிவினை உருவாக்க முயற்சிக்கும் இவர்களை ஹிந்துக்கள் வேரறுக்க வேண்டும்.

ஆழ்வார் சிவபெருமானை அழைப்பதே நமக்கு ஆச்சர்யமாக இருக்க,
இங்கு சிவபெருமானை "முக்கண்ணா" என்று மட்டும் அழைக்காமல் "முக்கண்ணப்பா" என்று ஏன் அழைத்தார் ஆழ்வார்?..

ஒரு தகப்பன், தன் பிள்ளை எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவனுக்கு நல்லதே செய்வான்.

'ஆத்மாவே நான்' என்ற அறிவுடன், அனுபவத்தில் வாழும் ஞானிக்கு இந்த உடலே ஒரு சிறையாக தோன்றுமாம்.

இந்த "உடல் இல்லாமல் இருந்தால், அந்த பரமாத்மா நாராயணனை இப்பொழுதே அடைந்து விடலாமே!"
என்று ஞானிகள் ஆசைப்படுவார்களாம்.





'சம்ஹாரம்' என்ற அழிக்கும் தொழிலை செய்யும் சிவபெருமான், "மரணம் என்ற காரியத்தின் மூலம், ஆத்மாவுக்கு இந்த சிறையில் இருந்து விடுதலை கொடுக்கிறார்".

ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு பார்த்து பார்த்து நல்லது செய்வது போல, "மரணம் என்ற உபகாரம் செய்து கொடுத்து, இந்த ஜீவ ஆத்மாக்கள் வைகுண்டம் செல்லட்டும் என்று தகப்பன் போல பேருதவி செய்கிறாரே"
என்றதும் சிவபெருமானை 'அப்பா' என்று அழைக்க ஆசை வர, "முக்கண்ணப்பா" என்று நன்றியுடன் அழைக்கிறார் ஆழ்வார்.

ஆழ்வார் பிரம்மாவையும், சிவபெருமானையும் சொல்கிறாரே..
அவருக்கு இஷ்ட தெய்வம் யார்? 
என்ற கேள்விக்கு அவரே இந்த பாசுரத்தில் விடையும் தருகிறார்.
தனித்து இருக்கும் (தனியேன்) ஆதி புருஷனான நாராயணனே, பிரம்மாவுக்கும், சிவனுக்கும் நடுவில் "விஷ்ணு"வாக க்ஷீராப்தியில் அவதரித்து இருப்பதை பார்த்து விட்டு,
'என் மாணிக்கமே..என் கள்வா.. என் ஆருயிரே..'
என்று பல தடவை "என்னுடைய, என்னுடைய.." என்று கூப்பிடுகிறார்.

இதன் மூலமே, நாராயணன் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர் ஆழ்வார் என்று தெரிகிறது.

அதே சமயம் மற்ற தெய்வங்கள் மேல் மரியாதையும் உண்டு என்றும் காட்டுகிறார்.

"மரியாதை மற்ற தெய்வங்களிடம் இருக்க வேண்டும்.
ஆனால் நம் இஷ்ட தெய்வத்திடம் ஆசையும் பக்தியும் நமக்கு வேண்டும்" 
என்றும் காட்டுகிறார் நம்மாழ்வார்.

மும்மூர்த்திகளில் பிரம்மாவையும், சிவபெருமானையும் "நான்முகனே! முக்கண்ணப்பா!" என்று மரியாதையோடு அழைக்கிறார்.

"நாராயணனே இவர்களுக்கு உள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார்" என்பதால் அவர்களுக்கான மரியாதையை கொடுக்கிறார்.

ப்ரம்மாவை பார்த்தால் வேத மூர்த்தியாக அமைதியாக இருக்கிறார்.
சிவபெருமானோ ஜடை வளர்த்து, சுடுகாட்டு சாம்பலை பூசிக்கொண்டு யோகி போல இருக்கிறார்.

மரியாதை ஏற்பட்டதேயன்றி, இதயத்தை இவர்களுக்கு கொடுத்து விடவில்லையாம் ஆழ்வார்.

என் ஆசையெல்லாம் உலக விஷயங்களில் மட்டுமே சுற்றிக்கொண்டு இருக்க, ஒருசமயம்,
பரவாசுதேவன் நாராயணனே "விஷ்ணுவாக" இருப்பதை பார்க்க வாய்ப்பு கிடைக்க,
"தன் திருமேனி அழகை காட்டியே, உலக விஷயங்களில் அலைந்து கொண்டிருந்த என்னை திருடி, தனக்கு அடியானாக ஆக்கிக்கொண்டு விட்டாரே, இந்த பொல்லாத பெருமாள்!" என்று பாடுகிறார்.
இவரோ, பிரம்மாவை போல, சிவபெருமானை போல அமைதியாக இருக்காமல், 
தன் அழகான சிரிப்பால் உள்ளத்தை மயக்கி, தன் கண் அழகினாலேயே இவர் இதயத்தை திருடி விட்டார் என்றதும்,
விஷ்ணுவின் தாமரை போன்ற கண்களையும், கனிந்த உதடுகளையும் பார்த்து மயங்கி போனதால், "என் மனதை திருடிய கள்வா, பொல்லாதவனே!" என்றெல்லாம் ஆசை தீர கூப்பிடுகிறார்.

என் பொல்லாக் கனிவாய்த்
தாமரைக்கண் கருமாணிக்கமே!
என் கள்வா !
தனியேன் ஆருயிரே !
என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் !
என்றும் மாயம் செய்யேல் என்னையே!
என்று தனித்து இருக்கும் பரவாசுதேவன், "இப்படி விஷ்ணுவாக, பிரம்மாவுக்கும், சிவனுக்கும் நடுவில் அவதரித்து, திருமேனி அழகினால் தன் இதயத்தை திருடி விட்டாரே!" என்கிறார்.

இங்கு,
விஷ்ணுவாக இருக்கும் நாராயணனை பார்த்து,
"என் தாமரைக்கண் கருமாணிக்கமே' என்று திருமேனி அழகில் மயங்கியதை குறிப்பிடுகிறார்.

தனித்த புருஷனாக (தனியேன்) இருந்தாலும்,
மும்மூர்த்திகளில் தானும் ஒருவர் போல இருந்தாலும்,
இவர் தன் இதயத்தை திருடிவிட்டாரே (கள்வா) என்றதும், "என் பொல்லா" என்கிறார்.

"பல ஜென்மங்களாக உங்களிடம் மட்டும் அகப்படாமல் தப்பித்த என்னை, பொல்லாத நீங்கள், உங்கள் திருமேனி அழகை காட்டி, ஒரு சிரிப்பு சிரித்து இன்று என்னை பிடித்து விட்டீர்களே!" என்கிறார்
"பரவாசுதேவனான உங்களிடம் சிக்கிய பின், இனி நான் சம்சாரத்தில் மீண்டும் விழப்போவதில்லை.
உலக மாயையும் எங்களை இனி ஒன்றும் செய்யாது"
என்று கடைசியில் விஷ்ணுவை சரண் அடைந்தவன் பெரும் பயனை பற்றி சொல்கிறார்.

என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் !
என்றும் மாயம் செய்யேல் என்னையே !

க்ஷீராப்தி என்ற பாற்கடலுக்கு,
'சொர்க்க லோகம், ஜன லோகம், தப லோகம், சத்ய லோகம், கைலாசம்' போன்றவற்றில் வசிக்கும் தேவர்களும், ரிஷிகளும், பிரம்மாவும், ருத்ரனுமே சென்று பார்க்க முடியும்.

பூமியில் இருக்கும் நம்மால் இந்த உடலோடு செல்ல முடியாது.
ஆனால்,
க்ஷீராப்தி நாதனை நம் மனதில் இந்த ஆழ்வார் பாசுரத்தின் மூலம் கண்டு விடலாம். 

குருநாதர் துணை...