Followers

Search Here...

Showing posts with label பாசுரம். Show all posts
Showing posts with label பாசுரம். Show all posts

Wednesday 26 December 2018

பாசுரம் (அர்த்தம்) - அகலகில்லேன் இறையும் என் - நம்மாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். ப்ராரப்த கர்மா அனுபவிக்காமல் மோக்ஷம் கொடுப்பாரா? தெரிந்து கொள்வோமே!!

அகலகில்லேன் இறையும் என்று*
அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்.
உலக மூன்றுடையாய்.
என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே'
- திருவாய்மொழி (நம்மாழ்வார்)





திருவேங்கடமுடையானிடம் தன்னை ஒப்படைத்து, சரணாகதி செய்யும் பாசுரம்.
நம்மாழ்வார் அருளியது. மிகவும் பிரசித்தி பெற்ற பாசுரம்.

'பூலோகத்தில் அவதாரம் செய்ய போகிறேன்' என்று பெருமாள், 'ராம' அவதாரம் செய்த போது, தாயார் 'சீதை'யாக அவதரித்தாள். 
தாயார் உலக கஷ்டங்களை விட, பெருமாளை பிரிந்து வாடும் படியாக ஆகி விட்டது.
'கிருஷ்ண' அவதாரம் செய்த போதும் 'ருக்மிணி' தேவியாக தாயார் அவதரித்து விட்டாள்.
எங்கோ ஒரு அரண்மனையில் திரௌபதி "கோவிந்தா" என்று கதற, அவளுக்காக ஓடினார்.
அர்ஜுனனுக்காக, தர்மபுத்திரருக்காக ஓடினார்.

"தான் தனித்து இனி அவதாரம் செய்வதே கூடாது" என்று முடிவு செய்து, தாமரை (அலர்) மேல் வீற்று இருக்கும் பத்மாவதி தாயார், பெருமாள் அர்ச்சா ரூபத்துடன் திருமலையில் கலி ஆரம்பத்தில் அவதரிக்க சங்கல்பிக்க,
'இனி தனித்த அவதாரம் தான் செய்ய போவதில்லை'
என்று முடிவு செய்து, அந்த மஹாலக்ஷ்மியான பத்மாவதி தாயார், பெருமாளின் ஸ்ரீவத்ச சின்னம் உடைய மார்பில் அவதரித்து விட்டாளாம்.

பெருமாள், "தனியாக அவதாரம் செய்யேன்" என்று சொன்னாலும், "முடியவே முடியாது" என்று பிடிவாதம் செய்து பெருமாளின் மார்பை விட்டு பிரியாமல் உறைகிறாளாம்.

பெருமாளின் மார்பில், உறைந்து இருக்கும் தாயாரை கவனித்த நம்மாழ்வார்,
அகலகில்லேன் இறையும் என்று*
அலர்மேல் மங்கை உறை மார்பா  

என்று பெருமாளை அழைக்கிறார் நம்மாழ்வார்.
அலர் (தாமரை) மேல் மங்கை (அலமேலு தாயார்)
என்ற தமிழ் பெயருக்கு சமஸ்க்ருதத்தில் "பத்மாவதி" என்று பொருள்.
ப்ரம்மாவுக்கும் ஆயுசு உண்டு.
மகா பிரளய காலத்தில், பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், ப்ரம்ம லோகம் முதல் பாதாளம் வரை, அழிந்து விடும்.
ப்ரம்மாவுக்கு பின், மீண்டும் ஒரு ப்ரம்மாவை படைத்து, மீண்டும் உலக ஸ்ருஷ்டி செய்ய செய்கிறார் பரமாத்மாவாகிய நாராயணன்.
  • சொர்க்கத்தில் உள்ள தேவர்கள்,
  • ஜன, தப லோகத்தில் இருக்கும் ரிஷிகள்,
  • சத்ய லோகத்தில் இருக்கும் ப்ரம்மா உட்பட
அனைவரும் ஒரு நாள் அழிந்து விடுவார்கள். 
ஆனால், "வைகுண்டம் அழிவதில்லை".

சொர்க்கலோகத்தில் உள்ள தேவர்களுக்கும் - "அமரர்கள்" என்ற பெயர் உண்டு.

அம்ருதம் குடித்ததால் இவர்களுக்கும் "அமரர்கள்" என்று பெயர் வந்ததே தவிர, 
உண்மையான அமரர்கள் வைகுண்டத்தில் இருக்கிறார்கள்.

இங்கு ஆழ்வார் "நிகரில் அமரர்" என்று குறிப்பிட்டு சொல்கிறார் என்று கவனிக்கிறோம்.
வைகுண்டத்தில் இருக்கும் பரவாசுதேவனுக்கு "நிகராக" என்றுமே "அமரராக" இருக்கும், மோக்ஷம் அடைந்த "நித்ய பார்ஷதர்களை" இங்கு "நிகரில் அமரர்" என்று குறிப்பிடுகிறார் நம்மாழ்வார்.

வைகுண்டத்தில் உள்ள "நித்ய பார்ஷதர்கள்" வைகுண்ட நாதனை போல, அவர்களும் எப்பொழுதும் இருப்பவர்கள். மோக்ஷம் அடைந்தவர்கள்.

பரமாத்மாவாக இருப்பதால், வைகுண்டநாதனுக்கு,
                      உலகத்தை ஸ்ருஷ்டி செய்ய வேண்டும், 
                      உலகத்தை ரக்ஷிக்க வேண்டும் 
என்ற பொறுப்பு உண்டு.

நித்ய பார்ஷதர்களான இவர்களுக்கு, அந்த பொறுப்பு கிடையாது.
இவர்கள் லட்சியம் வைகுண்ட நாதனுக்கு கைங்கர்யம் செய்வதே.
தேவைப்பட்டால், இவர்களே "ப்ரம்ம லோகம் முதல், பூலோகம் வரை" வந்து போகவும் முடியும்.
இவர்கள் சுதந்திரமானவர்கள், அமரர்கள்.
இனி பிறவி (பிறப்பு, மரணம்) எடுக்காதவர்கள்.






அப்படிப்பட்ட "அழிவில்லாத" வைகுண்டத்தில் இருக்கும்
"அமரர்களான" நித்ய பார்ஷதர்களும் (அமரர் முனிக்கணங்கள்), ஆசைப்பட்டு (விரும்பும்) பூலோகத்தில் உள்ள "திருமலை"க்கு வந்து, சாதாரண மனிதர்களை போலவே ரூபம் தரித்து,
நம்மை போன்ற சாதாரண ஜனங்களோடு ஜனங்களாக நம் கூடவே நின்று கொண்டு, நம்மை நெருக்கி கொண்டு, பெருமாளை தரிசனம் செய்ய வருகிறார்களே !! 
என்று தன் ஞான திருஷ்டியால் பார்த்து சொல்கிறார் நம்மாழ்வார்.

நித்ய பார்ஷதர்களும் சேவை செய்ய விரும்பும் பெருமையுடைய 'திருவேங்கடத்தானே' என்று
"நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே"
என்று நம்மாழ்வார் திருமலையப்பனின் புகழை, பெருமையை நமக்கு இந்த பாசுரத்தில் காட்டுகிறார்.
வைகுண்டத்திலேயே எம்பெருமானை சேவிக்கும் பாக்கியம் பெற்ற நித்ய பார்ஷதர்களே, "திருமலை வந்து விரும்பி சேவிப்பார்கள்" என்றால்,
"இந்த உலகத்திலேயே உள்ள எனக்கு உன் திருவடியை தவிர வேறு என்ன கதி இருக்க முடியும்?"
என்று சொல்லுமிடத்தில், நம்மாழ்வார்,
"மோக்ஷத்தின் சாவி அவர் கையில் மட்டுமே உள்ளது. 
வெங்கடேச பெருமாளை சரணாகதி செய்யாமல் இருந்தால் நாம் பிறவி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்.
சரணாகதி  செய்வதை தவிர, நம் மோக்ஷத்திற்கு வேறு கதியே இல்லை
என்று நம்மை  எச்சரிக்கிறார்.

மேலும் நம்மாழ்வார் சொல்கிறார்,
"நித்ய பார்ஷதர்களுக்கு 'திருமலை' இல்லையென்றால், 'வைகுண்டம்' இருக்கிறது. அங்கு போய் அவர்களால் உமக்கு சேவை செய்ய முடியும்.
ஆச்சரியம்,
நித்ய பார்ஷதர்களே எங்களுக்கு வைகுண்டம் வேண்டாம் !! திருமலை தான் வேண்டும் !!
என்று வரும்போது,
'பூலோகத்தில் புகலிடம் இல்லாத எனக்கு, நீஙகள் ஒருவர் தானே கதி' என்று,
"புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்று உள்ளம் உருகுகிறார் நம்மாழ்வார்.
மேலும் நம்மாழ்வார் சொல்கிறார்,
"வைகுண்டம் சென்று உங்கள் திருவடியை பிடிக்க இயலாத எனக்கு, திருமலையில் உள்ள நீங்கள் தானே கதி !!
'புகலிடம் இல்லாத அடியேன், 
உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே'" 
என்று சொல்லி ஏழுமலையானுக்கு தன்னையே ஆத்ம சமர்ப்பணம் செய்கிறார் நம்மாழ்வார்.

இங்கு பாசுரத்தை கவனித்தோம் என்றால்,
"உன் திருவடியில் புகுந்தேனே" 
என்று சொல்லாமல்,
"உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே"
என்று நிதானித்து ஏழுமலையானிடம் விண்ணப்பிக்கிறார் நம்மாழ்வார்.
இங்கு "அமர்ந்து" என்ற சொல்லை சொல்லி, சரணாகதி செய்த நம்மாழ்வார்,
"நான் 'மோக்ஷத்திற்கு தகுதி உடையவன்' என்றாலும், உடனே தந்து விட வேண்டாம்.
கொஞ்ச காலம், 
திருமலையில் தங்கி (அமர்ந்து) உங்களுக்கு இங்கேயே சில காலம் சேவை செய்ய அணுகிரஹம் செய்து, என் ப்ராரப்த காலம் முடிந்த பின்னர் மோக்ஷம் கொடுங்கள்"
என்கிறார் நம்மாழ்வார்.

ஒவ்வொரு சொல்லிலும் தெய்வீக அர்த்தம் உள்ளதினாலேயே ஆழ்வார்கள் கொடுத்த பாசுரங்கள் வேதத்திற்கு சமமாக மதிக்கப்படுகிறது.



பொதுவான ஒரு கேள்வி !!

பூமியில் புண்ணியம் செய்பவர்களுக்கு, "சொர்க லோகம்"  கிடைக்கிறது.
புண்ணியம் தீர்ந்த பின், மீண்டும் பூமியில் பிறக்கிறோம்.
பூமியில் பாவம் செய்பவர்களுக்கு, "நரக லோகம்"  கிடைக்கிறது.
பாவத்திற்கான தண்டனை தீர்ந்த பின், மீண்டும் பூமியில் பிறக்கிறோம்.

மீண்டும் பிறக்காமல் இருக்க, மோக்ஷம் அடைவதே (வைகுண்டம் புகுவதே) வழி.
மோக்ஷத்திற்கான அனுமதியை தருபவர் வெங்கடேசபெருமாள் மட்டுமே. நாராயணன் மட்டுமே. பரவாசுதேவன் மட்டுமே.

பெருமாள் யாருக்கு மோக்ஷம் கொடுக்கிறார் ?
மோக்ஷத்திற்கான தகுதி என்ன?

இரண்டு விதமான நிலைக்கு, மோக்ஷம் கொடுக்கிறார் பெருமாள்.

1. "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்தால், உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

2. "இனி தரிசனம் அடையாமல் உயிர் தரிக்காது. இனி தாளாது" என்ற ஆர்த்தி (துடிப்பு) இல்லாமல், ஆனால் பூரண சரணாகதி செய்து விட்டால், அவன் ப்ராரப்தம் முடியும் வரை, உடம்போடு வாழ்ந்து தான் ஆக வேண்டும். ப்ராரப்தம் முடிந்த பின், மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

ப்ராரப்த கர்மா அனுபவிக்காமல் மோக்ஷம் கொடுப்பாரா?
கோபிகைகள் போல "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து விட்டால், ப்ராரப்த கர்மாவும் பொசுங்கி, உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

இதே நிலையில்,
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் பூரி ஜெகந்நாத்தில், ஸ்ரீ கிருஷ்ணருடன் உடம்போடு மறைந்து விட்டார்.
அதே போல,
பக்த மீரா பிருந்தாவனத்தில் மறைந்து விட்டாள்.

ஞானியும், 'ப்ராரப்த கர்மா'வை அனுபவிக்கிறார்கள்.

நம்மாழ்வார் திருமலையப்பனை பூரண சரணாகதி செய்தவர்.
"இனி தாளாது" என்ற ஆர்த்தியும் (துடிப்பு) உள்ளவர் நம்மாழ்வார்.

மோக்ஷம் வேண்டி ஏழுமலையானை கேட்கும் போது, பெருமாள் இவருக்கு "உடனேயே மோக்ஷம் தர" தயாராக இருந்தாராம்.
உடனே மோக்ஷம் பெறுவதற்கு தகுதி இருந்தும்,
'ப்ராரப்த காலம் முடியும்வரை, இந்த உடலோடு இருந்து, திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டாராம்" நம்மாழ்வார்.

"உடனேயே மோக்ஷம் வேண்டாம், கொஞ்சம் கைங்கர்யம் செய்து விட்டு பின் வைகுண்டம் வருகிறேன்"
என்கிறார் நம்மாழ்வார்.

நித்ய பார்ஷதர்களே, வைகுண்டத்தை விட்டு, திருமலை வந்து ஸ்ரீனிவாச பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யும் போது, தனக்கு உடனே மோக்ஷம் வேண்டும் என்றா கேட்பார், நம்மாழ்வார்?!
இதையே,
"உன் திருவடியில் அமர்ந்து" 
என்று சொல்லி,
"எப்பொழுது ப்ராரப்த காலம் முடியுமோ ! அது வரை  திருவேங்கடமுடையானுக்கு திருமலையில் சேவை செய்து, ப்ராரப்த காலம் முடிந்த பின், வைகுண்டம் சென்று அங்கு போய் பெருமானுக்கு சேவை செய்வோம்"
என்று பிரார்த்தித்தார்.
"தெய்வ பக்தியை வளர்த்தவர்கள்" ஆழ்வார்கள், நாயன்மார்கள்.
தெய்வபக்தியோடு, "தமிழையும் அழியாமல் வளர்த்தவர்கள்", காத்தவர்கள்  ஆழ்வார்கள், நாயன்மார்கள்.

போலி தமிழர்களை புறக்கணிப்போம்.
ஹிந்துக்களை அழிக்க முயற்சிக்கும் போலிகளை இனம் கண்டு, பதில் கொடுப்போம்.

உண்மையான தமிழ் பாசுரங்களின் அழகை ரசிப்போம்.



"தமிழ் பற்றையும், தெய்வ பக்தியையும்"
நம் நாட்டில் வாழ்ந்த, வாழும் மகான்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் அருளால் அடைவோம்.
ஊர் முழுக்க பறை கொட்டி, ஆழ்வார்கள், நாயன்மார்கள் நமக்கு கொடுத்த, தமிழின் அழகை பெருமையை முழக்கமிடுவோம்.

உண்மையான தமிழர்கள்,
ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் கொண்டாடுவார்கள். பகிர்வார்கள்.


Saturday 27 October 2018

திருமலையில் மட்டும் பெருமாள் தடையில்லாமல் எப்படி அணுகிரஹம் செய்கிறார்? அலர்மேல் மங்கையான மகாலட்சுமி (அலமேலு தாயார்) எப்படி நமக்கு அனுக்கிரஹம் கிடைக்க உதவுகிறாள்? தெரிந்து கொள்வோமே

அகல கில்லேன் இறையும்
என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய் உலகமூன் றுடையாய்.
என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே
- நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி


"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா"

பொதுவாக, ஜனங்களோடு ஜனங்களாக இருந்தால், எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியாது.
கொஞ்சம் மாடியில் ஏறி நின்று பார்த்தால், அந்த தெருவில் போகும் எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியும்.

தனக்கு ஒரு ஏழு அடுக்கு மாடி அமைத்துக்கொண்டு, அங்கு நின்று கொண்டால், எல்லோரையும் பார்க்கலாமே என்று சங்கல்பம் செய்தார் பாற்கடலில் உள்ள எம்பெருமான்.
ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன், எம்பெருமான் சங்கல்பத்தை உணர்ந்து, ஏழு மலையாக ஆகி பூலோகத்திற்கு வந்து விட்டார்.
உன்னதமான இடத்தில் இருந்தால் தான், கருணையை அனைவருக்கும் வர்ஷிக்க முடியும் என்பதால், திருமலையின் உச்சியில் போய், எம்பெருமான் அர்ச்ச அவதாரம் செய்து நின்று விட்டார்.
கருணையே வடிவானவள் மகாலட்சுமி.
க்ஷீராப்தியில் இருந்து பெருமாள் பூலோகம் வந்து விட, தனக்கொரு இடம் தேடினாள்.

கருணையே வடிவான மகாலட்சுமி திருமலையை விட உயர்ந்த இடத்தை தேடினாள்.
திருமலையை விட உயரமான இடம், எம்பெருமானின் வக்ஷஸ்தலமே என்று, அங்கு போய் அமர்ந்து விட்டாள்.
திருமலையில் எம்பெருமான் வக்ஷஸ்தலத்தில் (பெருமாள் மார்பில்) எப்பொழுதும் பிரியாமல் இருக்கிறாள் மகாலட்சுமி.

மலர்ந்த (அலர்) தாமரைப்பூவின் மேல் அமர்ந்திருக்கும் மகாலட்சுமிக்கு "அலர்மேல் மங்கை" (அலமேலு தாயார்) என்று பெயர்.

இப்படி எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து, இனி ஒரு நொடி பொழுது (இறை பொழுதும்) கூட உங்களை விட்டு பிரிய மாட்டேன் (அகல இல்லேன்) என்று அமர்ந்தாள் அலர்மேல் மங்கையான மகாலட்சுமி.

எம்பெருமானை தனியாக வழிபடுவதை விட, தாயாரையும் சேர்த்து வழிபடும் போது தான், பெருமாள் தடையில்லாமல் அணுகிரஹம் செய்கிறார்.

"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா"
என்று நம்மாழ்வார் அழைக்கும் போது,
'தாயாரை முதலில் சொல்லி, அவளை முன்னிட்டு,  எம்பெருமானிடம் சரணாகதி' செய்கிறார்.

மகாலட்சுமி (ஸ்ரீ தேவி) எம்பெருமான் மார்பில் இருப்பதால் (நிவாசம்), வெங்கடேச பெருமாளுக்கு, "ஸ்ரீனிவாச பெருமாள்" என்றும் பெயர் வந்தது.

எப்படி பகவானை நாம் அணுக வேண்டும்?
எப்படி அணுகினால், பகவான் தடையில்லாமல் நமக்கு அணுகிரஹம் செய்வார்? என்பதை இந்த ஒரு பாசுரமே நமக்கு காட்டி விடுகிறது.

இப்படி திருமலையில், எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து விட்டாளே மகாலட்சுமி!!
இப்படி அமர்ந்தது அவள் சுகத்திற்காகவா? இல்லை பெருமாள் சுகத்திற்காகவா? என்று கேட்டால், இரண்டுமே இல்லையாம்.
நாம் அனைவரும் சுகம் பெற வேண்டும் என்பதற்காக தான், எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து விட்டாளாம் மகாலட்சுமி.

அது எப்படி?
பொதுவாக ஆழ்வார்கள், மற்ற திவ்ய தேசம் சென்று அங்கு இருக்கும் பெருமாளை சேவிக்கும் போது பிரேம பக்தியுடன் கொஞ்சி மகிழ்வார்கள்.
ஆனால் திருமலை வந்து விட்டால் மட்டும், ஆழ்வார்கள் அனைவரும், கதறி அழுது சரணாகதி செய்து விடுகின்றனர்.





நம்மாழ்வார், திருமலையப்பனிடம் வந்து,
"திருவேங்கடத்தானே !
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்று கதறி அழுது சரணாகதி செய்கிறார்.

திருமலையப்பனிடம் வந்தால் மட்டும் ஏன் இப்படி ஆழ்வார்களின் மனோபாவத்தில் கூட வித்தியாசம் தெரிகிறது?
மற்ற திவ்ய தேச பெருமாளும் இவர் தானே?
இருந்தும்,
திருமலையப்பனுக்கு மட்டும் என்ன விஷேசத்தை ஆழ்வார்கள் பார்த்தார்கள்?

பொதுவாக, திருமலையை தவிர்த்து, மற்ற திவ்ய தேசங்களில் பெருமாள் ஒரு சன்னதியில் இருப்பார். தாயார் தனி சன்னதியில் இருப்பாள்.
மற்றும் சில திவ்ய தேசங்களில் பெருமாளும் தாயாரும் ஒரே சந்நிதியில் அருகருகே கூட இருப்பார்கள்.

பொதுவாக தாய்க்கு தான், தன் பிள்ளை தவறே செய்தாலும் கூட, அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், கருணையே செய்ய தோன்றும்.
தாயுள்ளம் மகத்தானது.

பொதுவாக பெருமாள், தகப்பன் ஸ்தானத்தில், ஒரு நீதிபதி ஸ்தானத்திலும் நம்மை பார்ப்பாராம்.
பக்தனே சில சமயம் தவறு செய்தாலும்  பாரப்பட்சம் காட்ட கூடாது என்று நினைப்பாராம்.

பத்ராசல ராமதாஸர், ராமருக்கு கோவில் கட்ட இஸ்லாமிய அரசன் தானிஷாவின் வரி பணத்தை எடுத்து கட்டி விட்டார்.
இதற்கு 12 வருடம் சிறையில் தள்ளி, தினமும் சவுக்கடி கொடுக்க உத்தரவு இட்டான் தானிஷா.
உடம்பெல்லாம் ரத்தம் ஏற்பட்டு, தினமும் சிறையில் அழுது, ராமரிடம் கீர்த்தனைகள் இயற்றினார்.
ராமரோ தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார் என்று ஒரு நீதிபதி போல பேசாமல் இருந்தார்.
கடைசியில் இனி தாளாது என்ற நிலையில், ராமதாசருக்கு சீதையின் நினைவு வர,
"சீதம்மா...  இந்த ராமதாசனை காப்பாற்ற வருமாறு, நீயாவது அருகில் இருக்கும் ஸ்ரீ ராமரிடம் சொல்லம்மா..."
என்று கதற, சீதை ஸ்ரீ ராமரிடம் "இனி ஒரு க்ஷணம் தாமதிக்காமல் காப்பாற்றுங்கள்" என்று சொல்ல,
தானே ஒரு மனிதனாக வந்து, தானிஷாவை பார்த்து, தங்க கட்டிகளாக வரி பணத்தை வட்டியுடன் கட்டி, விடுதலை செய்யுமாறு செய்து மறைந்து விட்டார்.

பெருமாளை மட்டும் நாம் தனியாக பிரார்த்தனை செய்தால், நம் குற்றம் குறை அவருக்கு தெரிவதால், கட்டுப்பாடு இல்லாமல் அணுகிரஹம் செய்ய கொஞ்சம் தயங்குவாராம்.

ஸ்ரீ ரங்கம் உட்பட மற்ற திவ்ய தேச பெருமாள் கூட, தாயார் அருகில் இல்லாமல் இருப்பதால், ஆழ்வார்களுக்கு கூட தடையில்லாமல் அணுகிரஹம் செய்யாமல் இருந்தார்களாம்.

'அணுகிரஹம் குறைவில்லாமல் செய்யலாமே' என்று மற்ற திவ்ய தேச பெருமாளிடம் காரணம் கேட்டால், "இன்னும் இதயம் கணியட்டும்" என்று மற்ற திவ்ய தேச பெருமாள் எல்லோரும்  சொல்வார்களாம்.

ஒரே பெருமாள் தான் என்றாலும், அந்தந்த திவ்ய தேச மகத்துவம் பொருத்து தான் பழகுவார்களாம்.

இப்படி ஏன் அணுகிரஹம் செய்ய மற்ற திவ்ய தேச பெருமாள் எல்லோரும் தயங்குகிறார்கள்? என்று கேட்டால், நமக்காக சிபாரிசு செய்ய தாயார் கூட இல்லை என்பதால் தான்.

எம்பெருமானை நாம் தனியாக சேவிக்கும் போது, நம் தகுதி, நேர்மையை பார்ப்பாராம். இதனாலேயே அணுகிரஹம் செய்ய தயங்குவாராம்.

ஸ்ரீ ராம அவதார சமயத்தில், 'தானும் வனவாசம் வருவேன்' என்று லக்ஷ்மணன் வந்து விட்டார்.
அன்றைய இரவு பொழுதில், லக்ஷ்மணன் பார்த்து, "பொழுது விடிந்ததும் நீ வேண்டுமானால் அயோத்தி திரும்பி செல்கிறாயா?" என்று ஸ்ரீ ராமர் கேட்டு விட்டார்.
ஸ்ரீ ராமரை விட்டு நொடி பொழுது பிரிந்தாலும், உயிர் போய் விடும் என்ற நிலையில் இருந்த லக்ஷ்மணன், செய்வதறியாது ஸ்ரீ ராமரின் பாதங்களில் விழுந்து விட்டார்.
ஸ்ரீ ராமரின் சம்மதத்தை பெற, ஸ்ரீ ராமரிடம் கேட்டால் நடக்காது என்று அறிந்து, தலையை தூக்கி, அருகில் நின்று இருந்த சீதையை பரிதவிப்புடன் பார்த்து, தனக்கு சிபாரிசு செய்ய பிரார்த்தித்தார்.

லக்ஷ்மணனின் நிலையை புரிந்து கொண்ட சீதை, ஸ்ரீ ராமரை பார்த்து, " எப்படி குளத்தில் இருக்கும் மீனை வெளியே எடுத்தால் அதற்கு உயிர் தங்காதோ, அது போல லக்ஷ்மஷ்ணன் உங்கள் பிரிவை தாள மாட்டான்."
என்று சொல்ல, ராமர் மறு பேச்சின்றி அழைத்து கொண்டார்.
அதற்குப்பின், கடைசி வரை லக்ஷ்மணனை பிரிந்து ஒரு க்ஷணம் இருந்ததில்லை ஸ்ரீ ராமர்.


தாயாருக்கு அத்தனை மதிப்பு கொடுப்பாராம் பெருமாள்.

தாயாரை முன்னிட்டு, பெருமாளை சேவித்தால், நம் தகுதி பார்க்காமல் அணுகிரஹம் உடனே செய்து விடுவார்.

தனியாக தான் சந்நிதியில் இருந்தால், நமக்கு பெருமாள் அணுகிரஹம் செய்வாரோ என்னவோ என்று நினைத்த தாயார், திருமலையில் எம்பெருமான் நெஞ்சில் போய் அமர்ந்து விட்டாளாம்.

பெருமாள், தாயாரை பார்த்து, 'இப்படி என் நெஞ்சோடு அமர்ந்து விட்டாயே, உனக்கு வேண்டுமானால் தனி சன்னதி இருக்க செய்யட்டுமா?" என்று கேட்க,
"வேண்டவே வேண்டாம்" என்றாளாம்.
"சரி, அப்படியென்றால் ஒரே சந்நிதியில் அருகேயே இருக்கிறாயா?" என்று கேட்க,
"அதுவும் வேண்டாம்"
என்றாளாம் தாயார்.
மேலும்,
'எனக்கு தனி சந்நிதி கொடுத்து, ராவணன் தூக்கி போனான் என்ற அனுபவமே போதும்.
தனி சந்நிதி கொடுத்தால், மற்றவர்களை நம்ப இயலவில்லை.
உங்கள் அருகிலேயே இருந்தாலும், உங்களையும் நம்ப முடியாது.
ஒரு சமயம், கஜேந்திரன் என்ற ஒரு யானை உங்களை கூப்பிட்டான் என்றதும், அருகில் இருந்த நான் கூட முக்கியமில்லை என்று, கிளம்பி விட்டீர்களே.
இதனால் எனக்கு தனியாக இடமும் வேண்டாம், உங்கள் பக்கத்திலும் இடம் வேண்டாம்.
நான் இனி இறை பொழுது கூட அகல கில்லேன், அகல கில்லேன்,  நான் உங்கள் நெஞ்சோடு தான் இருப்பேன்.
நீங்கள் எந்த பக்தன் அழைத்தாலும், என்னையும் தூக்கி கொண்டு செல்லுங்கள்"
என்று பிடிவாதம் செய்து அமர்ந்து விட்டாளாம் தாயார்.

இப்படி, நமக்கு தடையே இல்லாமல் அணுகிரஹம் செய்ய, அலர்மேல் மங்கை தாயார் வக்ஷஸ்தலத்தில் இறை பொழுது கூட அகல கில்லேன் என்று அமர்ந்து விட்ட ஸ்ரீனிவாச பெருமாளே என்பதை தான், நம்மாழ்வார்,
"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா"
என்று சொல்கிறார்.

திருமலையில், பெருமாளுக்கு உள்ள விசேஷம் இதுவே.

திருமலையப்பனை காண நாம் மலை ஏறி செல்லும் போது, பெருமாள் பார்ப்பதற்கு முன்,  ஸ்ரீனிவாசனின் மார்பில் இருக்கும் தாயார், நம்மை முதலில் பார்த்து விடுகிறாள்.

பெருமாள் நம் பாவ புண்ணியத்தை பார்க்கும் முன், தாயார் முந்திக்கொண்டு, "நம் குழந்தை, அணுகிரஹம் செய்யுங்கள்" என்று நமக்காக சிபாரிசு செய்து விடுகிறாள்.

தாயார் பார்த்ததினாலேயே, பெருமாள், நம் தகுதி பாராமல், உடனே அணுகிரஹம் செய்து விடுகிறார் ஸ்ரீனிவாச பெருமாள்.

திருமலையப்பனுக்கு உள்ள இந்த தனித்துவம், மற்ற திவ்ய தேச பெருமாளிடம் காண இயலாது.

திருமலையில், தாயாரை தன் மார்போடு வைத்து இருப்பதால், தடையின்றி நம்மிடம் கருணையை வர்ஷிக்கிறார் பெருமாள்.

நிகரில் புகழாய்.
உலக மூன்றுடையாய்.
என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

சொர்க்கத்தில் உள்ள தேவர்கள், தப லோகத்தில் இருக்கும் ரிஷிகள், பிரம்மா உட்பட ஒரு நாள் அழிந்து விடுவார்கள். ஆனால் வைகுண்டத்தில் உள்ள தேவர்களான நித்ய பார்ஷதர்கள் வைகுண்ட நாதனை போல அமரர்கள்.
வைகுண்ட நாதனை போல அவர்களும் என்றுமே இருப்பவர்கள்.
பரமாத்மாவாக இருப்பதால், வைகுண்ட நாதனுக்கு கூட, உலகத்தை ஸ்ருஷ்டி செய்ய வேண்டும், உலகத்தை ரக்ஷிக்க வேண்டும் என்ற பொறுப்பு உண்டு.
நித்ய பார்ஷதர்களான இவர்களுக்கு அந்த பொறுப்பு கிடையாது என்பதால், இவர்கள் லட்சியம் வைகுண்ட நாதனுக்கு கைங்கர்யம் செய்வதே. தேவைப்பட்டால், இவர்களே ப்ரம்ம லோகம் முதல், பூலோகம் வரை வந்து போகவும் முடியும். சுதந்திரமானவர்கள், அமரர்கள்.

அப்படிப்பட்ட அமரர்களான நித்ய பார்ஷதர்களும் (அமரர் முனிக்கணங்கள்), பூலோகத்தில் உள்ள திருமலை வந்து சேவை செய்ய விரும்பும் பெருமை உடைய திருவேங்கடத்தானே என்று
"நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே"
என்று நம்மாழ்வார் திருமலையப்பனின் புகழை நமக்கு காட்டுகிறார்.

வைகுண்டத்திலேயே எம்பெருமானை சேவிக்கும் பாக்கியம் பெற்ற நித்ய பார்ஷதர்களே திருமலை வந்து சேவிப்பார்கள் என்றால், இந்த உலகத்திலேயே உள்ள எனக்கு உன் திருவடி அடையாமல் வேறு என்ன செய்வேன்?

நித்ய பார்ஷதர்களுக்கு திருமலை இல்லையென்றால், வைகுண்டம் இருக்கிறது. அங்கு போய் உமக்கு சேவை செய்து கொள்வார்கள்.
அவர்களே வைகுண்டம் வேண்டாம், திருமலை தான் வேண்டும் என்று வரும்போது,
பூலோகத்தில் புகலிடம் இல்லாத எனக்கு, நீஙகள் ஒருவர் தானே கதி என்று,
"புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்கிறார் நம்மாழ்வார்.

வைகுண்டம் சென்று உங்கள் திருவடியை பிடிக்க இயலாத எனக்கு திருமலையில் உள்ள நீங்கள் தானே கதி. புகலிடம் இல்லாத அடியேன், உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே என்கிறார்.

இங்கு "உன் திருவடியில் புகுந்தேனே" என்று கூறாமல்,
"உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே"என்கிறார்.

இங்கு "அமர்ந்து" என்ற சொல்லை சொல்லி, சரணாகதி செய்த நம்மாழ்வார், மோக்ஷம் வேண்டினாலும், உடனே தந்து விட வேண்டாம், கொஞ்சம் திருமலையில் தங்கி (அமர்ந்து) உங்களுக்கு இங்கேயே சில காலம் சேவை செய்ய அணுகிரஹம் செய்து விட்டு, பின்னர் மோக்ஷம் கொடுங்கள் என்கிறார்.

மோக்ஷம் யாருக்கு கொடுக்கிறார் பெருமாள்?
இரண்டு விதமான நிலைக்கு, மோக்ஷம் கொடுக்கிறார் பெருமாள்.
1. "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து செய்தால், உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

2. "இனி தாளாது என்ற ஆர்த்தி (துடிப்பு) இல்லாமல்" சரணாகதி செய்து விட்டானானால், அவன் ப்ராரப்தம் முடியும் வரை உடம்போடு வாழ்ந்து தான் ஆக வேண்டும்.

ப்ராரப்த கர்மா அனுபவிக்காமல் மோக்ஷம் கொடுப்பாரா?
கோபிகைகள் போல "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து விட்டால், ப்ராரப்த கர்மாவும் பொசுங்கி, உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

ஞானியும் ப்ராரப்த கர்மாவை அனுபவிக்கிறார்கள்.


நம்மாழ்வார் திருமலையப்பனை பூரண சரணாகதி செய்தவர்.
"இனி தாளாது" என்ற ஆர்த்தியும் (துடிப்பு) உள்ளவர்.
உடனே மோக்ஷம் பெறுவதற்கு தகுதி இருந்தாலும்,
பிராரப்த காலம் முடியும்வரை, இந்த உடலோடு இருந்து, திருவெங்கட நாதனுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டாராம் ஆழ்வார்.

இதை குறிப்பதாக, "உன் திருவடியில் அமர்ந்து" என்று சொல்லி, எப்பொழுது பிராரப்த காலம் முடியுமோ, அப்பொழுது திருவெங்கட நாதனுக்கு திருமலையில் செய்த சேவையை, வைகுண்டம் சென்று செய்வோம் என்று பிரார்த்தித்தார்.


Saturday 13 October 2018

உலகம் உண்ட பெருவாயா என்று நம்மாழ்வார் ஏன் அழைக்க வேண்டும்? - திருவாய்மொழி

நம்மாழ்வார் திருவாய்மொழியில்,


"உலகம் உண்ட பெருவாயா.
உலப்பில் கீர்த்தி யம்மானே,
நிலவும் சுடர் சூழொளிமூர்த்தி.
நெடியாய். அடியேன் ஆருயிரே,
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்எம் பெருமானே,
குலதொல் அடியேன் உன்பாதம் கூடு மாறு கூறாயே"
என்று திருமலையப்பனை கண்டு கதறி சரணாகதி செய்கிறார்.
"உலகம் உண்ட பெருவாயா..." என்று நம்மாழ்வார் திருமலையப்பனை இங்கு  கூப்பிடுகிறார்.
உலகத்தை பெருமாள் எப்பொழுது உண்டார்?
"உலகம் உண்ட பெருவாயா"என்று நம்மாழ்வார் ஏன் இங்கு அழைக்க வேண்டும்? என்கிற கேள்விகள் எழுகிறது.
பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், மகா பிரளய காலத்தில், எம்பெருமான் 14 லோகங்களையும் விழுங்கி, தன் திருவயிற்றில் அடக்கி கொள்கிறார் என்பது பிரசித்தம்.
மீண்டும் ஸ்ருஷ்டி செய்யும் போது, உலகங்களை மீண்டும் படைத்து, புதிய பிரம்மாவை நியமிக்கிறார்.
இதுவும் அனைவரும் அறிந்ததே.

அவ்வளவு பெரிய உலகத்தை விழுங்க வேண்டுமென்றால், பெருமாள், சிறுவாயை கொண்டு விழுங்க முடியாதே!!
உலகம் அளவிற்கு, வாயை பெரிதாக திறந்து தானே விழுங்கி இருக்க வேண்டும்? என்று நமக்கு தோன்றும்.

அதனால் தான் நம்மாழ்வார் பெருமானை, "உலகம் உண்ட பெருவாயா" என்று அழைக்கிறார் போலும், என்றும் நமக்கு தோன்றும்.

ஆனால், நம்மாழ்வார் இந்த காரணத்தால் இப்படி சொல்லவில்லையாம்.

பொதுவாக ஜீவனாகிய நாம், மோக்ஷம் அடைய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், சம்சார வாழ்வில் கஷ்டத்தை அனுபவித்தாலும் அனுபவிப்பேன், பிறவி கடலை தாண்ட மாட்டேன், பெருமாளை காண வரமாட்டேன் என்று ஏனோதானோ என்று இருக்க,
திருமலையப்பனாக அர்ச்ச அவதாரம் செய்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள், இந்த ஜீவனை காக்க வேண்டுமே, மோக்ஷம் என்ற சொத்தை கொடுக்க வேண்டுமே என்று காத்து கொண்டு இருக்கிறார். தவித்துக்கொண்டு இருக்கிறார்.





ஜீவன் ஏனோதானோ என்று இருக்கிறான்.
ஜீவனுக்கு ஈஸ்வரனாக, இருக்கும் பெருமாளோ, தனக்கும், ஜீவனுக்கும் உள்ள சம்பந்தத்தை அறிந்தவர் என்பதால், எப்படியாவது மோக்ஷத்தை கொடுத்து விட வேண்டுமே !! என்று தவித்துக்கொண்டு, மோக்ஷம் கொடுக்க சங்கல்பித்து திருமலையில் அர்ச்ச அவதாரம் செய்து விட்டார்.
இப்படி கருணை செய்வது ஒன்றே குறிக்கோளாக, அவதாரம் செய்துள்ள திருமலையப்பன், தன்னை தரிசிக்க மலை ஏறி வரும் பக்தனை கண்டு பூரித்து போகிறார்.
இந்த ஜீவனுக்கு, மீண்டும் பிறவி இல்லாத மோக்ஷம் கொடுத்து விட வேண்டும் என்று அருள் செய்கிறார்.

பக்தனை கண்டு, திருமலையப்பன் எத்தனை பூரிப்பை அடைகிறார்? என்பதை காட்டவே, நம்மாழ்வார் "உலகம் உண்ட பெருவாயா' என்ற பதத்தை பயன்படுத்தினாராம்.

உலகத்தை விழுங்க, பெருமாளுக்கு பெரு வாய் தேவைப்பட்டதா? என்று பார்த்தால், அப்படி ஒன்றும் தேவைப்படவில்லையாம்.
இதை நிரூபிக்க தான், ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்த பெருமாள், அண்ட சராசரங்களையும் தன் சிறு வாயில் யசோதைக்கு காட்டினாராம்.

யசோதை, குழந்தையாக உள்ள கண்ணனை பார்த்து, "மண்ணு தின்றாயா? மண்ணு தின்றாயா?" என்று அதட்ட,
கண்ணன் அழுது கொண்டே, "இல்லம்மா.. இல்லம்மா..." என்றான்.
"வாயை காட்டு" என்று சொல்ல, கண்ணன் தன் சிறுவாயை காட்ட, உலகங்கள் அனைத்தையும் அந்த சிறிய வாயில் கண்டு பிரமித்தாள் யசோதை.

'உலகம் உண்ட சிறுவாயை' கண்ணனிடம் கண்டாளாம் யசோதை.

'உலகத்தை காக்க, சிறுவாய் போதும்' என்ற சர்வ சக்தி உள்ளவனாக இருக்கும் பகவான் காட்டினார்.

பின் ஏன், நம்மாழ்வார் "உலகம் உண்ட பெறுவாயா" என்று சொன்னார்? "உலகம் உண்ட சிறுவாயா" என்று சொல்லி இருக்கலாமே?
என்ற கேள்வி எழும்போது தான்,
பெரியவாச்சான் பிள்ளை, நம்மாழ்வார் இதயத்தில் என்ன நினைத்தார்? என்று விளக்குகிறார்.
ஒரு பெரிய பாத்திரம் முழுவதும் இனிப்பான தின்பண்டம் இருப்பதை பார்த்து, ஒரு குழந்தை, முழுவதும் தானே சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படும்.
அந்த ஆவலில், "அனைத்தையும் எனக்கே போடு" என்று அம்மாவை கேட்டு அடம்பிடித்து, வாங்கிக்கொள்ளும்.

தேவை கொஞ்சம் தான் என்றாலும், தின்பண்டத்தை பார்த்த பூரிப்பில், தேவைக்கும்  அதிகமாக கேட்டு வாங்கிக்கொள்ளும்.
இது பொதுவாக குழந்தையிடம் பார்க்கும் குணாதிசயம்.


சர்வசக்தி உள்ள பகவான், தன் அடியார்களை கண்டு விட்டால், அந்த குழந்தைக்கு ஏற்படும் பூரிப்பை போல, தானும் அடைந்து விடுகிறார்.

தன் பக்தனை கண்டதால் ஏற்பட்ட அளவு கடந்த பூரிப்பில், இவனுக்கு மோக்ஷம் அளிக்க வேண்டுமே!! காக்க வேண்டுமே!! என்ற ஆவலில் "உலகத்தை காப்பதற்கே சிறு வாய் போதும்" என்று இருந்த பெருமாள், ஒரு பக்தனை காப்பதற்காக இவருக்கு ஏற்பட்ட பூரிப்பை பார்த்தால், சிறு உலகை காக்க பெருவாயால் உண்டது போல பூரிப்பில் இருந்தாராம்.
திருமலையப்பனுக்கு ஏற்பட்ட இந்த பூரிப்பை பார்த்து, நம்மாழ்வார் "உலகம் உண்ட பெருவாயா" என்கிறார்.

பக்தியுடன் நாம் திருமலையப்பனை தரிசித்தால், பெருமாள் நம்மிடமும் இந்த பூரிப்பு அடைகிறார்.
நம் தேவைக்கும் அதிகமாக கருணை செய்து, இகத்திலும், பரத்திலும் ஆனந்தமே கிடைக்க அருள் செய்கிறார்.

அனைவரும் திருமலை செல்வோம்.
திருமலையப்பனை பக்தியுடன் தரிசனம் செய்வோம்.


Monday 16 July 2018

வேறு தெய்வங்கள் மேல் த்வேஷம் உள்ளவனா வைஷ்ணவன்? வைஷ்ணவ தர்மம் என்ன? பெரியாழ்வார் பாசுரத்தை கொண்டு, புரிந்து கொள்வோம்.

வேறு அந்நிய தேவதைகள் மேல் த்வேஷம் உள்ளவன் வைஷ்ணவனா? வைஷ்ணவ தர்மம் என்ன? பெரியாழ்வார் பாசுரத்தை கொண்டு, புரிந்து கொள்வோம்.





பெரியாழ்வார், திருவேங்கடமுடையானை பார்த்து, 
"என்னுடையவன் நீ என்று, என்னை எடுத்து கொண்டு விட்டீர்கள்"
என்கிறார்.

பெரியாழ்வார், "திருவேங்கடமுடையானை" பார்த்து  பாடுகிறார்,

சென்னி ஓங்கும்
தண் திருவேங்கடம் உடையாய் !
உலகு தன்னை வாழ நின்ற நம்பீ ! தாமோதரா !
சதிரா !
என்னையும்,
என் உடைமையையும்
உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின் அருளே புரிந்திருந்தேன்
இனி என் திருக்குறிப்பே
--   பெரியாழ்வார் திருமொழி.

"உலகமெல்லாம் வாழும்படியாக, சாநித்யத்துடன் திருவேங்கடத்தில் நின்றுள்ள எம்பெருமானே !
ஒரு பெண்ணிற்கு, ஒருவன் தாலி கட்டி, அவள் 'என்னை சேர்ந்தவள்' என்று சேர்த்து கொள்வது போல,
உங்களுடைய சம்பந்தம் உள்ளவன் 'நான்', என்பதை, முத்திரை இட்டு, உன் சம்பந்தமான சங்கம், சக்கரம் சாற்றிக்கொண்டு, நெற்றியில் திருமண் காப்பு, 'எனக்கும், என் உடமைகளுக்கும்' இட்டுக் கொண்டு விட்டேன்.
முத்திரை இட்டு, நான் உங்களுக்கு அடிபணிந்தேன்.
என்னுடையவன் நீ, என்று சேர்த்து கொண்டீர்கள்.
எப்பொழுதும் உங்கள் கருணையை எதிர்பார்த்தே இருப்பேன்"
என்கிறார் பெரியாழ்வார்.

பெரியவாச்சான் பிள்ளை, இந்த பாசுரத்துக்கு விளக்கம் சொல்லும் போது,
"நம்மாழ்வார், 'என் உடைமையை' என்று சொல்லும் இடத்தில் சரீரத்தையும்,
 'என்னையும்' என்று சொல்லும் இடத்தில், ஆத்மாவையும் சொல்கிறார்" என்று ஆச்சர்யமாக, நம்மாழ்வார் பாடியதின் உண்மை பொருளை பிரதிபலிக்கிறார்.

"என் உடைமையையும்
உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு"
என்று சொல்லும்போது,
'உடைமை' என்று தன் சரீரத்தையும் சேர்த்து, சொல்கிறார் நம்மாழ்வார்.

அதனால் தான், 
'வைஷ்ணவர்கள்', தன் வீடு வாசல், தன் சரீரம், என்று அனைத்திலும் சங்கம் சக்கரம் முத்திரை இட்டு, 'இந்த உடைமை அனைத்தும், உன்னை சேர்ந்தது' என்று ப்ரபத்தி செய்கின்றனர்.

சரீரத்தில் வேண்டுமானால், 'சங்கம், சக்கரம்' போன்ற முத்திரை இட்டு கொள்ளலாம்.
நெற்றியில் 'திருமண் காப்பு' இட்டு கொண்டு,
'நான் எம்பெருமானை சேர்ந்தவன், எம்பெருமானுக்கு சம்பந்தப்பட்டவன்'
என்று வெளி உலகுக்கு காட்டி கொள்ளலாம்.

அது எப்படி ஆத்மாவுக்கு முத்திரை இட முடியும்?
'ஆத்மா' கண்ணுக்கு தெரியாதது ஆயிற்றே?




"என்னையும், உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு" 
என்று பெரியாழ்வார் சொல்லும் போது,
'ஆத்மாவுக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டேன்' என்கிறாரே?

இதன் பொருள் என்ன?


இதற்கும் பெரியவாச்சான் பிள்ளையே, நம்மாழ்வார் எண்ணத்தை அப்படியே நமக்கு விளக்கி தருகிறார்.

"அந்நிய தேவதைகள், 'சம்பந்தமே' ஆத்மாவில் இருக்க கூடாது" என்பதே, 'ஆத்மாவுக்கு செய்யும் பஞ்ச சம்ஸ்காரம்' என்கிறார்.

'ஸ்ரீனிவாசனை தவிர எனக்கு வேறு எந்த தெய்வமும் தெரியாது' 
என்று ஆத்மாவில் ஸ்ரீனிவாசனை மட்டும் முத்திரையாக இடுவதே - 'ஆத்மாவில் செய்யும் பஞ்ச சம்ஸ்காரம்' என்று அர்த்தத்தை விளக்குகிறார்.




ஒரு தர்மபத்னி, கணவனை 'மட்டுமே' தன் நெஞ்சில் சுமப்பது போல, ஆத்மாவில் ஸ்ரீனிவாசனுக்கு மட்டுமே இடம்,
என்று ஆத்மாவில் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டாமா?

உடம்பில் மட்டும் சங்கு சக்கர முத்திரை அணிந்து,
மனதில் வேறு தெய்வங்களுக்கும் இடம் உண்டு என்று சொன்னால், "வைஷ்ணவன்" என்று சொல்லி என்ன பயன்?

ஆதலால்,
ஆத்மாவிலும் 'நீ மட்டுமே',
உடம்பிலும் 'உன் சம்பந்தமான திரு சின்னமே' அணிந்து,
நான் உன்னை சேர்ந்தவன் என்று, உன் கருணையையே எதிர்பார்த்து இருக்கிறேன்"
என்று பெரியாழ்வாரின் வைஷ்ணவ தர்மத்தை, விளக்கி தருகிறார் பெரியவாச்சான் பிள்ளை.

வைஷ்ணவ தர்மமே, "பதிவ்ரதா தர்மம்" தான்.

'வேறு அந்நிய தேவதை, சம்பந்தமே இல்லாமல் இரு. ஸ்ரீனிவாசனையே நினை'
என்று ஆத்மாவுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்யும் வைஷ்ணவ தத்துவத்தை மேலோட்டமாக பார்த்து விட்டு,
'வேறு அந்நிய தேவதைகள் மேல் த்வேஷம் உள்ளவன் வைஷ்ணவன்',
 என்று நினைத்து விட கூடாது. அது அர்த்தம் இல்லை.

ஏற்கனவே சொன்ன மாதிரி, வைஷ்ணவ தர்மமே, பதிவ்ரதா தர்மம் தான்.

ஒரு தர்ம பத்னி, தன் கணவனை, தவிர வேறொரு அந்நிய புருஷனை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டாள் அல்லவா?
இதுவே பதிவ்ரதா தர்மம்.
மற்ற புருஷனையும் தன் கணவனாக நினைப்பாளா ஒரு தர்மபத்னி?

"ஏன் இப்படி பாகுபாடு செய்கிறாள்?
மற்ற புருஷர்கள் மேல் இவளுக்கு ஏன் இப்படி த்வேஷம்?
மற்ற புருஷர்கள் என்ன தாழ்ந்தவர்களா?
அடுத்த வீட்டு புருஷனை இவள் ஏறெடுத்து கூட பார்க்க மாட்டேன் என்கிறாளே?"
என்றா இன்னொரு பெண் சொல்லுவாள்?

ஒரு தர்மபத்னிக்கு, அவள் கணவன் மட்டுமே லட்சியம்.
அவளை பொருத்தியவரை, அந்நிய புருஷன் "குபேரனாகவே" இருந்தாலும், "மன்மதனாக" இருந்தாலும் திரும்பி பார்க்க வேண்டிய அவசியமில்லையே?

இப்படி அந்நிய புருஷனை திரும்பி பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று இருப்பது ஒரு பதிவ்ரதைக்கு "பூஷணமே" (அணிகலன்) அன்றி, அது "தூஷணம்" ஆகாது.

வெளியில் பார்க்க, வெறும் தாலி மட்டும் கட்டிக்கொண்டு, மனதில் தன் கணவனுடன் மற்றொருவனுக்கும் இடம் தந்தால், அது எப்படி பதிவிரதை தர்மமாகும்?
அந்த கற்பு "இதயத்தில்" இருந்தால் தானே, திருமாங்கல்யத்துக்கும் மதிப்பு.

திருமாங்கல்யம் போல, "திருமண் காப்பு".
திருமாங்கல்யம் போல, "துளசி மணி மாலை".
திருமாங்கல்யம் போல, "சங்கு சக்கர முத்திரைகள்".
இந்த உடைமைகள், உன்னை சேர்ந்தது என்று குறிக்கின்றதே தவிர, "ஆத்மாவையும் அர்ப்பணம்" செய்யாது போனால், அவன் எப்படி வைஷ்ணவன் ஆக முடியும்?

எம்பெருமானுக்கே ஆட்பட்டவன், என்று ஆத்மாவையும் அர்ப்பணம் செய்பவனல்லவா சுத்தமான வைஷ்ணவன்?

அதேபோல, நெற்றியில் "திருமண்" இட்டு, "சங்கம் சக்கர" முத்திரையும் இட்டு, பார்க்க வைஷ்ணவன் போல இருந்து, "மனதில் வேறு தெய்வத்துக்கும் இடம் உண்டு" என்று சொன்னால், அது பதிவிரதை தர்மம் ஆகாதே?

இந்த பதிவ்ரதா தர்மத்தை தானே, வைஷ்ணவமும் காட்டுகிறது.

ஆதலால்,
"எம்பெருமான் ஒருவனுக்கே நான் ஆட்பட்டு இருப்பேன்" 
என்று சொல்லும் ஒரு வைஷ்ணவன்,
"பிற தெய்வங்களை பார்ப்பது இல்லை" என்று சொல்வது, அந்த தெய்வங்களிடம் உள்ள த்வேஷத்தால் (வெறுப்பு) அல்ல.

"என் தெய்வம் எம்பெருமான் நாராயணன் மட்டுமே" 
என்ற பதிவ்ரதை தர்மத்தில் இருப்பதே காரணம்.
இதில் த்வேஷம் (வெறுப்பு) இல்லை.

இந்த ஆத்மாவுக்கு 'ஒரு தெய்வம்' தானே இருக்க முடியும்?
வேதமோ, அந்த பரமாத்மா 'நாராயணன்' என்று தெளிவாக கூறுகிறது.
இதை பற்றி படிக்க  www.proudhindudharma.com/2017/12/blog-post_7.html Click செய்யவும்,

நாம் அனைவருக்கும் நாராயணனே அனைத்துமாக (மாதா, பிதா, கணவன் எல்லாம்) உள்ளார்.

ஒரு பதிவ்ரதைக்கு, எப்படி தன் கணவன் மட்டுமே தெரியுமோ,
அதுபோல,
நாராயணனால் படைக்கப்பட்ட நாமும், ஒரு பதிவிரதை போல, அவரால் படைக்கப்பட்ட அந்நிய தெய்வங்களின் சம்பந்தம் கொள்ளாமல், நாராயணனே நம் தெய்வம் என்று இருக்க வேண்டும்"
என்று வழி காட்டுகிறது வைஷ்ணவம்.

இப்படி உயர்ந்த பதிவிரதை தத்துவத்தை கொண்டு,
"நாராயணனை தவிர, வைஷ்ணவனுக்கு வேறு தெய்வம் தெரியாது", 
என்று சொல்லும் போது,
"ஏன் இப்படி பாகுபாடு?
மற்ற தெய்வங்கள் என்ன தாழ்ந்தவர்களா?
ஏன் அந்நிய தேவதைகளை மட்டும் வைஷ்ணவர்கள் வணங்க கூடாது?"
என்று கேட்பதே முட்டாளத்தனம்.




இப்படி "சரீரத்தையும், ஆத்மாவையும் எம்பெருமானுக்கு ஆட்படுத்தி,
'நான் உன்னை சேர்ந்தவன்' என்று இருப்பதே" வைஷ்ணவ லக்ஷணம்.

சரீரத்தையும், ஆத்மாவையும் எம்பெருமானுக்கு ஆட்படுத்திய பின், எப்படி இருப்பான் ஒரு வைஷ்ணவன்?
"எம்பெருமான் இஷ்டம்" என்று இருப்பான்.
சுகம் கொடுத்தாலும் உன் இஷ்டம், துக்கம் கொடுத்தாலும் உன் இஷ்டம் என்று இருப்பான்.

புருஷன் கைவிட்டு விட்டான் என்பதற்காக, ஒரு தர்மபத்னி வேறொரு புருஷனை நினைப்பாளா? (கண்ணகி போன்று தானே நம் பாரத தேசம் முழுவதும் பெண்கள் கற்பை உயிராக நினைத்து, தர்மத்தை மீறாமல் இருந்தனர், இருக்கின்றனர்)

அதுபோல,
"எம்பெருமான் துக்கமே கொடுத்தாலும்,  உன்னுடைய கருணை ஒன்றையே ஆச்ரயித்து இருக்கிறேன்"
என்கிற அர்த்தத்தில், நம்மாழ்வார்,
"நின் அருளே புரிந்திருந்தேன், இனி என் திருக்குறிப்பே" என்று சொல்கிறார்.

ஒரே பாசுரத்தில் திருவேங்கடமுடையானிடம்
சரீரம் மற்றும் ஆத்மாவை, ஒரு பதிவிரதை தன் கணவனிடம் தன்னை சமர்பித்து, அவன் 'கருணையை', அவன் 'அன்பை' எதிர்பார்ப்பது போல, சரண் அடைகிறார்.

திருவேங்கடமுடையானை தரிசிக்கும் போது, பெரியாழ்வார் பாசுரத்தை நாமும் அர்த்தத்துடன் ஸ்மரிக்கலாம்.

வாழ்க ஹிந்துக்கள்.  வாழ்க ஹிந்து தர்மம்.