Followers

Search Here...

Showing posts with label ராமபிரான். Show all posts
Showing posts with label ராமபிரான். Show all posts

Monday 28 December 2020

ராமர் பார்க்க எப்படி இருப்பார்? (How Ram actually looked?) அற்புதமான 22 ஸ்லோகங்களால் ராம வர்ணனை - அவர் அடையாளம் எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே!

ராமர் பார்ப்பதற்கு எப்படி இருந்தார்? அற்புதமான 22 ஸ்லோகங்களால் ஹனுமான் வர்ணிக்கிறார்
"சுக்ரீவ மகாராஜனின் மந்திரி நான். என் பெயர் ஹனுமான். 
நான் கடலை கடந்து இலங்கை வந்தேன்.
என் பராக்ரமத்தால் அந்த ராவணனின் தலையில் (அதாவது இலங்கை) என் காலை வைத்து உங்களை தரிசிக்க வந்துள்ளேன்.
என்னை ராவணன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.
உங்கள் சந்தேகத்தை விடுங்கள். என் வாக்கை நம்புங்கள்
என்றார் ஹனுமான்.

தாம் து ராம கதாம் ஸ்ருத்வா
வைதேஹி வானரர்ஷபாத் |
உவாச வசனம் சாந்த்வம்
இதம் மதுரயா கிரா ||
तां तु राम कथां श्रुत्वा वैदेही वानरर्षभात् |
उवाच वचनं सान्त्वम् इदं मधुरया गिरा || 1
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
ராமபிரானால் அனுப்பப்பட்டு வந்த ஹனுமானை பார்த்து, மதுரமான குரலில் சீதாதேவி பேச தொடங்கினாள்..

க்வ தே ராமேன சம் ஸர்க 
கதம் ஜானாசி லக்ஷ்மணம் |
வானரானாம் நரானாம் ச
கதம் ஆஸீத் சமாகம: ||
क्व ते रामेण संसर्गः कथं जानासि लक्ष्मणम् |
वानराणां नराणां च कथम् आसीत् समागमः || 2
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
"ராமபிரானை எங்கு சந்தித்தீர்கள்? 
உங்களுக்கு லக்ஷ்மணனை எப்படி தெரியும்? எப்படி வானரர்களுக்கும் மனிதர்களுக்கும் நட்பு ஏற்பட்டது? 

யானி ராமஸ்ய லிங்கானி
லக்ஷ்மணஸ்ய ச வானர |
தானி பூய: சமா-சக்ஷ்வ
ந மாம் சோக: சமாவிசேத் ||
यानि रामस्य लिङ्गानि लक्ष्मणस्य च वानर |
तानि भूयः समाचक्ष्व न मां शोकः समाविशेत् || 3
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
ராம லக்ஷ்மணர்களின் அடையாளம் என்ன? இதை நீங்கள் எனக்கு சொல்வதால் என் சோகம் நீங்கும்.




கீத்ருஸம் தஸ்ய சம் ஸ்தானம்
ரூபம் ராமஸ்ய கீத்ருஸம் |
கதம் ஊரு கதம் பாஹு
லக்ஷ்மணஸ்ய ச சம்ஸ மே ||
कीदृशं तस्य संस्थानं रूपं रामस्य कीदृशम् |
कथम् ऊरू कथं बाहू लक्ष्मणस्य च शंस मे || 4
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
ராமபிரான் எப்படி இருப்பார்? அவருடைய அடையாளம் என்ன? அவருடைய கால்கள், புஜங்கள் எப்படி இருக்கும்? லக்ஷ்மணன் எப்படி இருப்பார்?" என்று விளக்கி சொல்லுங்கள் என்றாள் சீதாதேவி.

ஏவமுக்தஸ்ய வைதேஹ்யா
ஹனுமான் மாருத ஆத்மஜ: |
ததோ ராமம் யதா தத்வம்
ஆக்யாதும் உப-சக்ரமே ||
एवमुक्तस्तु वैदेह्या हनूमान् मारुत आत्मजः |
ततो रामं यथा तत्त्वम् आख्यातुम् उपचक्रमे || 5
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
சீதாதேவியின் பேச்சை கேட்ட ஹனுமான், சீதாதேவியின் நம்பிக்கையை பெறுவதற்காக, ராமபிரானின் தோற்றத்தை சொல்ல ஆரம்பித்தார்

ஜானந்தி பத திஷ்டயா மாம்
வைதேஹி பரிப்ருச்சஸி |
பர்து: கமல பத்ராக்ஷி
சங்க்யானம் லக்ஷ்மணஸ்ய ச ||
जानन्ती बत दिष्ट्या मां वैदेहि परिपृच्छसि |
भर्तुः कमलपत्राक्षि सङ्ख्यानं लक्ष्मणस्य च || 6
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
"தேவி! ராமபிரானை பற்றி நன்கு அறிந்த நீங்கள், என் மூலமாக ராமபிரானையும், லக்ஷ்மணனையும் கூறும் படி கேட்கிறீர்கள். இதை என் பாக்கியம் என்று உணர்கிறேன்.

யானி ராமஸ்ய சின்ஹானி
லக்ஷ்மணஸ்ய ச யானி வை |
லக்ஷிதானி விசாலாக்ஷி
வதத: ஸ்ருனு தானி மே ||
यानि रामस्य चिह्नानि लक्ष्मणस्य च यानि वै |
लक्षितानि विशालाक्षि वदतः शृणु तानि मे || 7
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
தேவி! நான் உங்கள் அனுமதியோடு, ராமபிரானின், லக்ஷ்மணரின் அடையாளங்களை சொல்கிறேன். கவனமாக கேளுங்கள்

ராம: கமல பத்ராக்ஷ:
ஸர்வ பூத மனோஹர: |
ரூப தாக்ஷிண்ய சம்பண்ண:
ப்ரஸூதோ ஜனக ஆத்மஜே ||
रामः कमल पत्राक्षः सर्व भूत मनोहरः |
रूप दाक्षिण्य सम्पन्नः प्रसूतो जनक आत्मजे || 8
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
அவர் அனைவரையும் கவரும் பேரழகன் (ராம), அவர் உடல் முழுவதுமே  பேரழகு. பெரிய ஆற்றில், எதோ ஒரு கரை ஓரத்தில் இறங்கி குளிப்பவன் போல, அந்த பேரழகு என்ற பெரிய ஆற்றில், அவரின் தாமரை போன்ற கண் அழகில் நான் இறங்கி அதில் மயங்கினேன் (கமலபத்ராக்ஷ),
வானரர்களான எங்களுக்கு மனம் ஒரு இடத்தில் நிலைக்க முடியாது. ஒன்றை பார்க்கும் போதே மற்றொரு விஷயத்தில் ஆசை ஏற்பட்டு விடும். அப்படி மனம் அலைபாயும் எங்கள் மனதும், இவரை பார்த்து விட்டால் அசையாமல் இருக்கிறது (ஸர்வ பூத மனோகரா). அந்தஸ்து பார்க்காமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமமாக பழகுவதற்கு "தாக்ஷின்யம்" என்று பெயர். இப்பேர்ப்பட்ட பேரழகான ரூபத்தை வைத்து கொண்டு, அதை தன் மாளிகையில் இருப்பவர்களுக்கு மட்டும்  காட்டாமல், பெரும் தாக்ஷின்யத்துடன் தன் ரூபத்தை எங்களை போன்ற சாதாரண குரங்குகள் பார்க்கும் படியாக வனத்தில் இருக்கிறார் (ரூப தாக்ஷிண்ய சம்பண்ண), நீங்கள் எப்படி மனித யோனியில் பிறக்காமல் பூமியில் இருந்து ஜனகருக்கு வெளிபட்டீர்களோ, அது போல எங்களுக்கு இவர் வெளிப்பட்டார் ( ப்ரஸூதோ ஜனக ஆத்மஜே).

தேஜஸா ஆதித்ய சங்காச:
க்ஷமயா ப்ருதிவீ சம: |
ப்ருஹஸ்பதி சமோ புத்த்யா
யஷஸா வாசவோபம: ||
तेजसा आदित्य सङ्काशः क्षमया पृथिवी समः |
बृहस्पति समो बुद्ध्या यशसा वासवोपमः || 9
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
அவருடைய பொலிவை கண்டால் சூரியன் போல ப்ரகாசிக்கிறார். அவருடைய பொறுமையை கண்டால் பூமியை போல இருக்கிறார். அவருடைய புத்தியை கண்டால் ப்ருஹஸ்பதியை போல இருக்கிறார். அவருடைய புகழை கண்டால் இந்திரனை போல இருக்கிறார்

ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய
ஸ்வ-ஜனஸ்ய ச ரக்ஷிதா |
ரக்ஷிதா ஸ்வஸ்ய வ்ருத்தஸ்ய
தர்மஸ்ய ச பரந்தப: ||
रक्षिता जीव लोकस्य स्व-जनस्य च रक्षिता |
रक्षिता स्वस्य वृत्तस्य धर्मस्य च परन्तपः || 10
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
உலகத்தில் உள்ள அனைவரையும் காக்க கூடியவர். தன் பரிவாரங்களை பிரத்யேகமாக காக்க கூடியவர். தன் தர்மத்தை விட்டு விடாமல் காப்பவர். பொதுவாக எங்குமே தர்மத்தை காக்க கூடியவர்.




ராமோ பாமினி லோகஸ்ய
சாதுர் வர்ணஸ்ய ரக்ஷிதா |
மர்யாதானாம் ச லோகஸ்ய
கர்தா காரயிதா ச ஸ: ||
रामो भामिनि लोकस्य चातुर् वर्ण्यस्य रक्षिता |
मर्यादानां च लोकस्य कर्ता कारयिता च सः || 11
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
ராமபிரான் நான்கு வர்ணத்தில் (ப்ரம்ம விசாரமே செய்பவர்கள், உயிரை பற்றி கவலையில்லாமல் நாட்டுக்கு பணி செய்பவர்கள், வேலை கொடுக்கும் வியாபாரிகள், வேலை செய்யும் தொழிலாளிகள்) இருக்கும் அனைவரையும் காக்க கூடியவர்.
தன் தர்மத்தில் (க்ஷத்ரிய) இருக்க ஆசைப்படுபவர். அதே சமயம் அவரவர் வர்ணத்துக்கு ஏற்ற தர்மத்தில் இருக்க செய்பவர்.

அர்சிஸ்மான் அத்யர்தம்
ப்ரஹ்மசர்ய வ்ரதே ஸ்தித: |
சாதூணாம் உபகாரஞ:
ப்ரசாரஞ: ச கர்மனாம் ||
अर्चिष्मान् अत्यर्थम् ब्रह्मचर्य व्रते स्थितः |
साधूनाम् उपकारज्ञः प्रचारज्ञ: च कर्मणाम् || 12
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
அற்புதமானவர். அனைவராலும் வணங்கத் தக்கவர், ப்ரம்மச்சர்யத்திலேயே இருப்பவர், நல்லவர்களுக்கு என்றுமே துணை நிற்பவர்ஒவ்வொரு காரியத்திலும் அடங்கி இருக்கும் சிக்கல்களை அவர் நன்கு அறிந்துள்ளார்.

ராஜ வித்யா வினீத: ச
ப்ராஹ்மணானாம் உபாஸிதா |
ஸ்ருதவான் ஷீல சம்பண்ண:
வினீத: ச பரந்தப: ||
राज विद्या विनीतश्च ब्राह्मणानाम् उपासिता |
श्रुतवान् शील सम्पन्नः विनीत: च परन्तपः || 13
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
அரசியல் அறிவு, அரசியல் நிர்வாகம் செய்ய தெரிந்தவர். தர்மத்தை, வேதத்தை அறிந்த ப்ராம்மணர்களை மதிப்பவர். பெரியோர்களிடத்தில் சாஸ்திரங்களை சந்தேக புத்தி இல்லாமல் கேட்பவர். நன்கு படித்தவர், அதே சமயம் நல் ஒழுக்கம் உடையவர். அடக்கமானவர்.

யஜுர் வேத வினீத: ச
வேத வித்பி: சுபூஜித: |
தனுர் வேத ச வேதே ச
வேதாங்கேசு ச நிஷ்டித: ||
यजुर् वेद विनीतश्च वेद विद्भिः सुपूजितः |
धनुर् वेदे च वेदे च वेदाङ्गेषु च निष्ठितः || 14
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
யஜுர் வேதம் நன்கு கற்றவர். வேத ரகசியங்கள் அறிந்தவர்கள் இவரை பூஜிக்கிறார்கள். வேத அங்கங்களும், தனுர் வேதமும் நன்கு அறிந்தவர்.

விபுலாம்சோ மஹாபாஹு:
கம்பு-க்ரீவ சுபானன: |
கூடஜத்ரு: சுதாம் ராக்ஷோ
ராமோ தேவி ஜனை: ஸ்ருத: ||
विपुलांसो महाबाहुः कम्बुग्रीवः शुभाननः |
गूढ जत्रुः सुताम् राक्षो रामो देवि जनैः श्रुतः || 15
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
நீண்ட கைகளும், சங்கு போன்ற உருண்டு திரண்ட கழுத்தும், மங்களமான முகமும் கொண்டவர்.
சதை பிடிப்புடன் இருக்கும் இவருடைய தோளில், கழுத்து எலும்புகள் தெரியாது. அவருடைய கண் ஓரத்தில் செந்தாமரையில் காணப்படும் சிவப்பு வர்ணம் இருக்கிறது. எந்த கூட்டத்தில் இவர் இருந்தாலும், தனித்து தெரிவார்.

துந்துபி ஸ்வன நிர்கோஷ:
ஸ்னிக்த வர்ண: ப்ரதாபவான் |
சம: சம-விபக்தாங்கோ
வர்ணம் ஸ்யாமம் சமாஸ்ரித: ||
दुन्दुभि स्वन निर्घोषः स्निग्ध वर्णः प्रतापवान् |
समः सम-विभक्ताङ्गो वर्णं श्यामं समाश्रितः || 16
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
துந்துபியின் ஒலியை போல இவர் குரல் இருக்கிறது. ஸ்யாமளா வர்ணத்துடன் (நீளத்தில் கருப்பு சேர்ந்தாற்போல) இருக்கிறார். அவர் நிறமே கண்ணை கவரும். ஒரு கதாநாயகன் போலவே இருப்பார். உடல் அமைப்பில் எந்த இடத்திலும் ஏற்ற-குறைவு மாறுபாடு இல்லாமல், பொருத்தமாய் அமைக்கப்பட்ட சரீரத்தை கொண்டுள்ளார். எதை பார்த்தாலும் சரிசமமாகவே இருக்கும். அவருடைய உடல் அமைப்பே வடித்தது போல இருக்கும்.
த்ரி ஸ்திர: த்ரி ப்ரளம்ப: ச
த்ரி சம: த்ரிஷு ச உன்னத: |
த்ரி தாம்ர: த்ரிஷு ச
ஸ்னிக்தோ கம்பீர: த்ரிஷு நித்யஷ: ||
त्रि स्थिरः त्रि प्रलम्बश्च त्रि समः त्रिषु च उन्नतः |
त्रि ताम्र: त्रिषु च स्निग्धो गम्भीर: त्रिषु नित्यशः || 17
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
ராமபிரானுக்கு, மூன்று இடங்கள் உறுதியாகவும் (மார்பு, முஷ்டி மற்றும் மணிக்கட்டு). மூன்று இடங்கள் நீளமாகவும் (கைகள், புருவம், விருஷணம்). மூன்று இடங்கள் ஏற்ற-குறைவு இல்லாமல் சமமாகவும் (கேசத்தின் நுனி, முழங்கால்கள், விருஷணம்). மூன்று பகுதிகள் ஏற்றத்துடனும் (வயிறு, தொப்புள் மற்றும் மார்பு). மூன்று இடங்கள் சிவப்பாகவும் (உள்ளங்கால்கள், உள்ளங்கை, கடைக்கண்). மூன்று இடங்கள் வழுவழுப்பாகவும் (பாதரேகை, தலை கேசம், ஆண் உறுப்பு), மூன்று கம்பீரமாகவும் (குரல், உடல் வலிமை, தொப்புள்) இருக்கும்.

த்ரி வலீவான் ஸ்த்ரய வனத:
சதுர் வ்யங்க: த்ரி சீர்ஷவான் |
சது: கல: சதுர் லேக:
சது: கிஷ்கு: சது: ஸம: ||
त्रि वलीवान् स्त्र्य वनतः चतुर् व्यंग त्रि शीर्षवान् |
चतुष् कलः चतुर् लेखः चतुष् किष्कुः चतुस् समः || 18
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
மூன்று மெல்லிய மடிப்புகள் அவர் கழுத்திலும், வயிற்று பகுதியிலும் இருக்கும். இவருடைய ஒவ்வொரு கேசமும் மூன்று சுருளாக உள்ளது. மூன்று இடங்கள் உள் ஆழ்ந்தும் (மார்பு, மார்பில் உள்ள காம்பு, பாதரேகை), நான்கு இடங்கள் ஒடுங்கியும் உள்ளது (நரம்பு வெளியில் தெரியாத பாதங்கள், மெல்லிய மயிர்க்கால், ஆண் உறுப்பு, சதை இல்லாத அடிவயிறு), ஏற்றக்குறை இல்லாமல் சமமாக குடைபோல, வட்டமாக விசாலமான சிரஸையும், கட்டைவிரலடியில் நான்கு ரேகையையும் இருக்கும். நான்கு கோடுகள் இவர் நெற்றியில் உள்ளது. 96 அங்குலம் அடங்கிய நான்கு முழம் கொண்ட தேகம் உடையவர் (8 feet). நான்கு அங்கங்கள் இடமும் வலமும் சமமாகவும் (கைகள், முழங்கால், தொடை, கன்னம்) உள்ளது.




சதுர் தச சம த்வந்த:
சதுர் தம்ஸ்ட்ர: சதுர் கதி: |
மஹோஷ்ட ஹனு நாச: ச
பஞ்ச ஸ்நிக்த: அஷ்ட வம்சவான் ||
चतुर् दश सम द्वन्द्वः चतुर् दंष्ट्रः चतुर् गतिः  |
महोष्ठ हनु नासश्च पञ्च स्निग्ध: अष्ट वंशवान् || 19
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
14 இடங்களில் இடமும் வலமும் ஏற்றக்குறை இல்லாமல் சமமாக ஒன்று போல இருக்கும் (புருவம், மூக்கு, காது, உதடு, முலைக்காம்பு, முழங்கை, மணிக்கட்டு, முழங்கால், விருஷணம், இடுப்பு, கை, கால், பின்பாகம், முதுகு). இரண்டு பல் வரிசைகளில், நான்கு பெரிதாகவும் கூர்மையாகவும் இருக்கிறது. நான்கு விதமான நடை உடையவராக இருக்கிறார். ராமபிரான் ஒரு சமயம் சிங்கம் வருவது போலவும், காளை வருவது போலவும், புலி வருவது போலவும், யானை வருவது போலவும் நடப்பவர். சிவப்பான எடுப்பான உதடும், சதை நிறைந்த கன்னமும், உயர்ந்த மூக்கும் கொண்டவர். ஐந்து அங்கங்கள் மிருதுவாகவும், கண்ணை கவரும் படியாகவும்  இருக்கும் (தலைக்கேசம், கண்கள், பற்கள், தோல், உள்ளங்கால்). எட்டு அங்கங்கள் நீளமாக (சரீரம், முதுகு, கை, கால், கண், காது, விரல், ஆண் உறுப்பு) இருக்கும்.


தச பத்மோ தச ப்ருஹத்
த்ரிபி: வ்யாப்த: த்வீ சுக்லவான் |
ஷட் உன்னதோ நவதனு:
த்ரிபி: வ்யாப்னோதி ராகவ: ||
दश पद्मो दश बृहत् त्रिभिः व्याप्तः द्वि शुक्लवान् |
षड् उन्नतो नवतनुः त्रिभिः व्याप्नोति राघवः || 20
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
10 இடங்கள் தாமரை போன்று சிவந்து இருக்கும் (முகம், வாய், கண், நாக்கு, உதடு, தாடை, மார்பு, நகம், கை, கால்). 10 இடங்கள் கம்பீரமாகவும் விசாலமாகவும் இருக்கும் (மார்பு, தலை, முகம், கழுத்து, புஜம், தோள், நாபி, இடபுறம், பின்புறம், குரல்), மூன்று விஷயங்கள் இவரிடம் பிரசித்தியாக உள்ளது (பொலிவு, புகழ், ஐஸ்வர்யம்), இரண்டு இடங்கள் வெண்மையாக இருக்கும் ((பற்கள், கண்)), ஆறு இடங்கள் உயர்ந்தும் ((சதை தொங்காத கஷ்கம், வயிறு, மார்பு, மூக்கு, தோள், முகம்), ஒன்பது மற்றவர்களுக்கு சூக்ஷ்மமாகவும் (தலைக்கேசம், மீசை, நகம், தாடி, தோல், கட்டைவிரல், ஆண் உறுப்பு, மன கருத்து, புத்தி), மூன்று காலங்களிலும் (முன்பகல், நடுப்பகல், பிற்பகல்) தன்னுடைய தர்மத்தை அனுஷ்டிப்பவராகவும் இருக்கிறார்.

சத்ய தர்ம பர: ஸ்ரீமான்
சங்க்ரஹ அனுக்ரஹே ரத: |
தேச கால விபாகஞ:
சர்வ லோக ப்ரியம் வத: ||
सत्य धर्म परः श्रीमान् सङ्ग्रह अनुग्रहे रतः |
देशकाल विभागज्ञः सर्व लोक प्रियंवदः || 21
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
ராமபிரான் சத்யத்தையும் தர்மத்தையும் பெரிதாக மதிப்பவர். இவர் பலரோடு கலந்து பழகுபவர், அனைவரையும் க்ஷேமமாக வைத்து இருப்பவர். எத்தனை பேர் இருந்தாலும், அனைவரும் திருப்தி அடையும் படி அனைவரும் தன்னிடம் பழக இடம் கொடுப்பவர். யாரிடத்திலும் மிகவும் அழகாக பேச கூடியவர்.

ப்ராதா ச தஸ்ய த்வைமாத்ர:
சௌமித்ரி: அபராஜித: |
அனுராகேன ரூபேன
குண: ச ஏவ ததா வித: ||
भ्राता च तस्य द्वैमात्रः सौमित्रि: अपराजितः |
अनुरागेण रूपेण गुणैश्चैव तथाविधः || 22
- வால்மீகி ராமாயணம் *Valmiki Ramayan
யாராலும் ஜெயிக்க முடியாத, அவர் சகோதரன் லக்ஷ்மணன், ராமபிரானை போலவே உருவத்திலும், குணத்திலும், லக்ஷணங்களிலும் ஒத்து இருக்கிறார்.

இவ்வாறு, ராம லக்ஷ்மணர்களின் அடையாளம் என்ன? என்று கேட்ட சீதாதேவிக்கு, சர்வ கைங்கர்யம் செய்யும் தாசனான ஹனுமான், ராமபிரானை அசோகவனத்தில் பிரதிஷ்டை செய்து விட்டார்

ஹனுமானின் சொற்களை கேட்டு, சீதாதேவிக்கு சோகம் நீங்கியது.

Thursday 26 September 2019

ராமபிரான் தன்னை "மனிதன் என்றும்", "தசரதனின் பிள்ளை" என்றும் சொல்லி மனிதனாகவே காட்டி கொண்டார். ஒரு சில சமயங்களில் வேறு வழியில்லாமல், தன்னை பரமாத்மா என்று காட்டி கொள்ளும் படி ஆனது. அப்படி ஒரு அருமையான சமயத்தை நாமும் தெரிந்து கொள்ளலாமே..

12 வருட வனவாசம் முடிந்த நிலையில், அகத்தியரை தரிசித்தார் ஸ்ரீ ராமர். 
தன்னிடமிருந்த அனைத்து அஸ்திர, சஸ்திரங்களையும் ஸ்ரீ ராமரிடம் சமர்ப்பித்தார் அகத்தியர் முனி.
அவர் ஆசிரமத்தில் ஒரு இரவு தங்கி விட்டு, மறுநாள் அருகில் உள்ள பஞ்சவடியை நோக்கி புறப்படலானார்கள்.

பஞ்சவடிக்கு (Panchavati, Maharastra) வந்த ஸ்ரீ ராமர், முதன் முதலாக 'ஜடாயு'வை தான் தரிசித்தார்.
ஸ்ரீ ராமர் வருவதை பார்த்த ஜடாயு, "நீங்கள் தசரதன் பிள்ளைகளா?" என்று கேட்டார்.


ஜடாயு இப்படி கேட்டதும், ராமர் ஆச்சரியப்பட்டார்.
"எங்கள் தகப்பனாரின் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்?"
என்று ஆவலுடன் கேட்டார்.

"தசரதனின் முக ஜாடை உங்கள் முகத்தில் தெரிந்ததால் கேட்டேன்"
என்று ஜடாயு சொல்ல,

ஸ்ரீ ராமர், "எங்கள் அப்பாவை உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்க,

"ஆஹா... தேவர்களுக்கு சகாயம் செய்ய சொர்க்க லோகம் அடிக்கடி வருவார். உங்கள் அப்பா எனக்கு நெருங்கிய நண்பர் ஆயிற்றே!!"
என்று சொல்ல,
அடுத்த நொடி, ஸ்ரீ ராமர் 'ஜடாயுவை' கை குவித்து வலம் வந்து வணங்கினார்.

"தன் அப்பாவின் நண்பர்" என்று கூட நினைக்கவில்லை.
ஜடாயுவை "தன் தகப்பனாராகவே நினைத்தார்" ஸ்ரீ ராமர்.

ஸ்ரீ ராமரின் "பித்ரு பக்தி எப்படி இருந்தது?" என்று தெரிகிறது.

இப்படி ஒரு உத்தமமான பிள்ளையை "நியாயம் இல்லாமல்" 14 வருடம் வனவாசம் அனுப்ப நேர்ந்ததும், தசரதன் உயிர் பிரிந்ததில் ஆச்சர்யம் இல்லையே!!
தசரதனுக்கு கிடைத்தது போன்ற மகன், எந்த தகப்பனுக்கும் அவருக்கு முன்னும், அவருக்கு பிறகும் இன்றுவரை
"ஸ்ரீ ராமரை போன்று உத்தம புத்திரன் பிறக்கவில்லையே.".

ஸ்ரீ ராமருக்கு, "தசரதன் மேல் மட்டும் தான் பக்தி (மரியாதை) என்று நினைத்து விட கூடாது, அவர் சம்மந்தப்பட்ட அனைத்திலும் பக்தி செய்தார்".

உலகத்தில்,
"அப்பா ஆசையாக ஒரு பூனை வளர்த்தார்" என்பதற்காக,
"அந்த பூனையை போய், 'அப்பா வளர்த்த பூனை' என்று அப்பாவுக்கு கொடுக்கும் மரியாதையுடன் மதிப்பார்களா?..".

"அப்பாவுடன் கூட பிறந்த சித்தப்பாவை கூட அப்பாவாக மதிக்க முடியாத" கல் நெஞ்சம் கொண்ட உலக ஜனங்களுக்கு,
ராமரின் மென்மையான மனம் எப்படி புரியும்?..

"வயதாகி விட்ட அப்பாவே சுமை என்று நினைக்கும்" கல் நெஞ்சம் கொண்ட உலக ஜனங்களுக்கு,
ராமரின் மென்மையான மனம் எப்படி புரியும்?..

ஜடாயு என்ற தேவ பக்ஷியை தன் "தகப்பனாகவே பார்த்தார்" ஸ்ரீ ராமர்.
என்பது, கல் நெஞ்சம் கொண்ட உலக ஜனங்களுக்கு
ராமரின் மென்மையான மனம் எப்படி புரியும்?..


ஜடாயு "தசரதன்..." என்ற பெயரை உச்சரித்த மறுகணமே,
ஸ்ரீ ராமருக்கு தன் 'தகப்பனாரை பார்த்த ஆனந்தம் உண்டானது' என்பது ஆச்சரியமில்லையே...

ஜடாயுவை வலம் வந்து, "தன் தகப்பனுக்கு சம்பந்தப்பட்டவர் என்பதாலேயே அவரை கௌரவித்து வணங்கினார்" ஸ்ரீ ராமர்.

ஸ்ரீ ராமர் 'வனவாசமாக வந்த விஷயத்தை சொல்ல, தன் தகப்பனார் தசரதர் காலகதி அடைந்து விட்டார்' என்று ஸ்ரீ ராமர் சொல்ல,
நண்பனை இழந்த ஜடாயு, மிகவும் வருத்தப்பட்டார்.
ஸ்ரீ ராமரை பார்த்து
"ராமா.. நீங்கள் இந்த பஞ்சவடியில் தங்கும் போது, ஒரு வேளை நீங்கள் இருவரும் வேட்டையாட செல்ல நேர்ந்தால், என் நாட்டுப்பெண் சீதையை நான் இருந்து காவல் காப்பேன்." என்று ஒரு தகப்பனாகவே பேசினார்.
ஒரு வருஷ காலம், பஞ்சவடியில் ஸ்ரீ ராமர், சீதை வசித்தனர்.

கொஞ்சம் அருகிலேயே ஜடாயுவும், ஒரு மரத்திலேயே அமர்ந்து கொண்டு சீதாராம தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

லக்ஷ்மணன், "குடில் அமைப்பது, வீடு பெருக்குவது, காய் கனிகள் கொண்டு வருவது" என்று சகல சேவையும் செய்து வந்தார்.


"இன்னும் ஒரு வருட காலத்தில் அயோத்தி திரும்ப போகிறோம்"
என்ற மனநிலையில் இருந்த சீதைக்கு
"அயோத்தி திரும்பும் போது, மாதா கௌசல்யாவுக்கு ஏதாவது கொண்டு போகலாமே!" என்று ஆசை தோன்றியது.

"மாரீசன்" என்ற ராக்ஷஸன், தங்கத்தாலான மாய மானாக தன்னை உருமாற்றிக்கொண்டு, காட்டில் அலைவதை பார்த்ததும்,
"அந்த தங்க மானை அயோத்தி எடுத்து சென்று, கௌசல்யா மாதாவுக்கு காட்டுவோம்" என்று ஆசைப்பட்டாள்.
"ராவண வதம்" என்ற அவதார நோக்கம் ஒரு புரம் ரகசியமாக இருக்க,
சீதை முதல் முறையாக "எனக்கு இந்த மானை பிடித்து தாருங்கள்."
என்று வாய் திறந்து கேட்டாள் என்றதும்,
"அந்த மானை எப்படியாவது பிடித்து தருவேன். மாய மானாக இருந்தால் கொன்று விட்டு திரும்புவேன்"
என்று சீதையிடம் சொல்லி கொண்டு ஸ்ரீ ராமர் புறப்பட்டார்.

மாய மானாக இருந்த மாரீசன், வெகு தூரம் ஸ்ரீ ராமரை இழுத்து செல்ல, "இனியும் நேரம் கடத்த முடியாது" என்று ஸ்ரீ ராமர் அந்த மாய மானை தன் அம்பினால் அடிக்க,
மாரீசன் என்ற அரக்கன் தன் சுய ரூபத்துடன் கீழே விழுந்து
"சீதே... சீதே...லக்ஷ்மணா.. லக்ஷ்மணா..."
என்று ஸ்ரீ ராமரின் குரல் போலவே அழைத்து உயிர் விட்டான்.

"ஸ்ரீ ராமருக்கு தான் ஏதோ ஆபத்து ஏற்பட்டு விட்டது"
என்று நிஜமாகவே நம்பி விட்டாள் சீதை.
லக்ஷ்மணனை கட்டாயப்படுத்தி போய் பார்க்க அனுப்பினாள்.

நிலைமை கை மீற,
ராவணன் போலியான சாதுவாக வேடம் போட்டு,
பிக்ஷை வாங்குவது போல வந்து,
சீதையை புஷ்பக விமானத்தில் (flight used 12 lak yr before 'treta yuga') இழுத்து கொண்டு இலங்கையை நோக்கி புறப்பட்டே விட்டான்.

சீதை நடக்கும் விபரீதத்தை கண்டு அலற ஆரம்பித்தாள்...
"ஐயோ. . என்னை ராவணன் தூக்கி செல்கிறான்.. யாராவது ஸ்ரீ ராமரிடத்தில் சொல்லுங்கள்.."
என்று அலற,

கொஞ்சம் கண் அயர்ந்து இருந்த ஜடாயு, சீதையை ராவணன் தூக்கி செல்வதை பார்த்து விட்டார்.

நடக்கும் விபரீதத்தை கண்டதும், வயதாகி போனாலும், தன் முழு பலத்தால், தன் இரு சிறகுகளையும் அடித்து கொண்டு, ராவணன் போகும் புஷ்பக விமானத்தின் அருகில் சென்று, ராவவனை பார்த்து கர்ஜித்தார்...
"ராவணா... எப்படிப்பட்ட காரியத்தை செய்து கொண்டிருக்கிறாய் நீ??...
இவள் யார் என்று நினைத்து தூக்கி செல்ல பார்க்கிறாய்?
ஸ்ரீ ராமபிரானின் தர்ம பத்னி இவள்.

நீ எப்பேர்ப்பட்ட 'பலம்' பொருந்தியவனாகவும் இருக்கலாம்...
நீ எப்பேர்ப்பட்ட 'தபோ' பலம் கொண்டவனாகவும் இருக்கலாம்..
இந்திரன் உட்பட அனைத்து தேவர்களையும் அடக்கியவனாகவும் இருக்கலாம்..
உலகையே ஆள்பவனாகவும் இருக்கலாம்...

எத்தகைய பெருமைகள் உன்னிடம் இப்போது வரை இருந்தாலும், 
நீ சீதையை அபகரித்து செல்ல முயன்றால், உன் தவம் எல்லாம் பொசுங்கி, நீயும் அழிந்து போவாய்..


பிறர் மனைவியை தொடுவதை காட்டிலும் பெரிய பாபம் உலகத்தில் கிடையாது.
ஒரு கணவன் தன் மனைவியை எப்படி காப்பானோ, அது போல பிறர் மனைவியை காக்க வேண்டுமே தவிர, இப்படி கீழ்த்தரமான காரியம் செய்யலாமா?!! 

சாஸ்திரம் தெரிந்தும் இந்த பாபத்தை செய்கிறாய்..
உன் அழிவு காலம் நெருங்கி விட்டதால் தான் இந்த பாபத்தை செய்ய துணிந்து விட்டாய்..

நீ என்னை விட வயதில் சிறியவன்.. நானோ முதியவன்.
உன்னை எதிர்த்து சமாளிக்க முடியுமா? என்பது எனக்கு முக்கியமில்லை... ஆனால்,
என் உயிர் இருக்கும் வரை, சீதையை கொண்டு போக விட மாட்டேன்.."
என்று 'உலகமே நடுங்கும் ராவணனை' பார்த்து கர்ஜித்தார் ஜடாயு.

பக்ஷியாக இருந்தாலும், வயதான ஜடாயு ராவணனுடன் போர் செய்தார்.

"தான் உயிருடன் இருக்கும் வரை சீதையை கொண்டு செல்ல முடியாது" என்று தன் முழு பலத்தாலும் போர் செய்ய ஆரம்பித்தார்.

ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் யுத்தம் ஆரம்பிக்க,
தன் "அலகுகளையும், சிறகுகளையும்" மட்டும் வைத்து கொண்டே, ஆயுதங்கள் ஏந்திய ராவணனுடன் போர் செய்தார்.

தன் அலகுகளால், சாரதியை கொன்று,
ராவணன் கையில் இருந்த நாண் கயிறை அறுத்து,
அவனிடம் இருந்த வில்லை முறித்து,
ராவணனின் மகுடத்தை கீழே தள்ளி
கடுமையாக யுத்தம் செய்தார் 'ஜடாயு'.
ஜடாயுவை சமாளிக்க முடியாத ராவணன், கடைசியில் சிவபெருமான் கொடுத்த "சந்திரஹாசம்" என்ற வாளை உருவி கொண்டு, ஜடாயுவின் இரண்டு இறக்கைகளையும்  துண்டிக்க,
"சீதே.. சீதே..."
என்று ஜடாயு கீழே விழுந்து விட்டார்.

ராமன் வரும்வரை உயிர் போகாமல் "உயிரை பிடித்து கொண்டு இருந்தார்" ஜடாயு.

ராமபிரான் மாரீச்சனை கொன்றதும், இவன் "ஹா சீதே" என்று குரல் கொடுக்கவே,
'இவன் இப்படி குரல் கொடுக்க காரணம் என்னவோ?!. என்ன நேர்ந்ததோ சீதைக்கு?!..."
என்று பதட்டத்துடன் ஸ்ரீ ராமர் தன் குடிலுக்கு ஓடி வர, எதிரில் லக்ஷ்மணர் வருவதை பார்த்ததும்,
"சீதை எங்கே?..." 
என்று கேட்க, நடந்த சம்பவத்தை அறிந்து, லக்ஷ்மணன் கையை பற்றி கொண்டு, வேகவேகமாக ஓடி வந்து குடிலை பார்க்க,
காய் கனிகள் சிதறி, அங்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது என்பதை உணர்ந்தார் ஸ்ரீ ராமர்.

அந்த இடமே சூன்யமாகி விட்டது..
சீதா பிராட்டியை காணவில்லை.

"கோதாவரியில் தண்ணீர் எடுக்க போய் இருப்பாளோ??!!"
என்று ஸ்ரீ ராமர் "சீதே..சீதே...மைதிலி... வைதேகி" என்று குரல் கொடுத்தும்,
பதிலுக்கு சீதை குரல் கேட்காமல் இருக்க,
நடந்த விபரீதத்தை புரிந்து கொண்டு கலங்கி நின்றார்.

"வனவாசம் போ.. உனக்கு அயோத்தி அரியணை கிடையாது"
என்று சொன்ன போது கூட
"அப்பொழுது பூத்த செந்தாமரையை வென்றதுவோ" 
என்று கம்பன் சொல்வது போல, சோகப்படாமல், கலங்காமல், மகிழ்ச்சி குறையாமல் இருந்த ஸ்ரீ ராமர்,

சீதையை தொலைத்ததும், தாளமுடியாத துக்கத்தில் மூழ்கினார்.
எதற்கும் கலங்காதவர் கலங்கினார்.

வனத்தில் மனித நடமாட்டமே  கிடையாது...
யாரிடமும் கேட்க கூட முடியாத நிலை.
"சீதையை கண்டீர்களா? சீதையை கண்டீர்களா?"
என்று ஸ்ரீ ராமர் அங்கு இருந்த வில்வ மரத்தையும், செடி கொடிகளையும், மலையையும் கேட்டு கொண்டே கதறி அழுதார்.


"இப்படி மனம் தடுமாறி நிற்கிறாரே ஸ்ரீ ராமர்!! இவர் பெருமாளாக இருப்பாரா?
பெருமாள் எப்பொழுதும் ஆனந்த மூர்த்தியாக தானே இருப்பார்??"
என்று ஞானம் இல்லாதவர்களுக்கு சந்தேகம் வருமாம்.

ஆஞ்சநேயர் சொல்கிறார்
"பக்தன் துன்பத்தை கண்டு, ஒரு துளி பக்தனை நினைத்து கண்ணீர் கூட விடாத பகவான், நமக்கு வேண்டவே வேண்டாம்." 
என்கிறார்.
மேலும் ஆஞ்சநேயர் சொல்கிறார்
"ஸ்ரீராமர் ஆனந்த மூர்த்தியாக தான் இருக்கிறார்.
இருந்தும், தன் பக்தன் துன்பப்படுவதை பார்த்து, அவர் நமக்காக கண்ணீர் சிந்துகிறார்"
என்கிறார்.

ஸ்ரீ ராமரின் முதல் பக்தை 'சீதை' அல்லவா.

"வனவாசம் போக வேண்டும்" என்று ஸ்ரீ ராமர் சொன்னதும்,
"என்னை உங்கள் பத்னியாக கூட்டி செல்ல வேண்டாம்..
உங்கள் பக்தையாக கூட்டி செல்லுங்கள்.. உங்களுக்கு ஒரு குறை இல்லாமல் சேவை செய்வேன்"
என்று சொன்னவள் அல்லவா சீதை.
"அப்படிப்பட்ட சீதையை இழந்து விட்டோமே!!" என்றதும்,
"அருமையான பக்தையான சீதையை தொலைத்து விட்டேனே! தன் பக்தையான சீதை கஷ்டப்படுவாளே!!"
என்று நினைத்து கலங்கினார் ஸ்ரீ ராமர்.




பக்தனுக்காக கலங்கும், பக்தன் துயர் போக்க தானே வந்து காப்பாற்றும் தெய்வமல்லவா, ஸ்ரீ ராமர்.
ஸ்ரீ ராமரை நம்பி கெட்டவர்கள் உலகில் இல்லையே.

சீதையை காணாமல், தேடி வந்த ராமர், "சிறகுகள் வெட்டப்பட்டு உயிர் பிரியும் நிலையில் கிடக்கும் ஜடாயுவை பார்த்ததும், ஏதோ சீதை சம்பந்தமாக பெரிய யுத்தம் நடந்துள்ளது"
என்று உணர்ந்தார்.

ஜடாயுவை தன் மடியில் போட்டுகொண்டு, தகப்பனை இழந்தது போல அழுதார்.
ஸ்ரீராமர் வந்து விட்டதை பார்த்த ஜடாயு,
"ராமா.. உனக்கா தான் உயிரை பிடித்து வைத்துள்ளேன்..
என்னுடைய ப்ராணனை கொடுக்க முயற்சித்தும், என் ப்ராணனுக்கும் மேலான என் மகள் சீதையை லங்காதிபதியான ராவணன் தூக்கி சென்று விட்டான்.." என்றார்.

"ராவணன் ஏன் சீதையை தூக்கி சென்றான்? கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள்"
என்று கேட்க,

மேலும் பேச முடியாத நிலையில்,
"அந்திம காலத்தில், தகப்பன் தன் மகனுக்காக மனமுவந்து சொல்லும் ஆசிகள் பலிக்கும் என்பார்கள்.

ராமா!!... அபூர்வமான மூலிகையை தேடி வந்தவன் போல வரும் நீ, கட்டாயம் சீதையை மீண்டும் அடைவாய்!! அடைந்து, அயோத்தி ராஜ்யத்தையும் அடைவாய்.. தீர்க்க ஆயுசுடன் இருப்பாய்"
என்று சொல்லிக்கொண்டே, ஸ்ரீ ராமரின் மடியிலேயே ஜடாயுவின் உயிர் பிரிந்து விட்டது.

தசரதருக்கு கிடைக்காத பாக்கியம், தகப்பனாக மதித்த ஜடாயுவுக்கு கிடைத்து விட்டது.

மகன் மடியில் உயிர் விடும் பாக்கியத்தை, ஜடாயு பெற்று விட்டார்.
காசியில், இறந்து போகும் அனைத்து ஜீவனுக்கும்,
சிவபெருமானே "ராம" நாமத்தை கடைசி மூச்சு விடும் சமயத்தில் அந்த ஜீவனுக்கு காதில் சொல்லி, 'மோக்ஷம்' அனுப்புகிறார்.


கடைசி மூச்சு விடும் சமயத்தில், "ராமா" என்ற நாமத்தை காதில்  கேட்டதற்கே மோக்ஷம் என்றால்,
சாஷாத் ஸ்ரீ ராமரே அவதாரம் செய்து இருக்கும் போது,
அவர் மடியிலேயே, 
அவரை பார்த்து கொண்டே உயிர் பிரியும் பாக்கியத்தை பெற்ற 'ஜடாயுவுக்கு' மோக்ஷம் நிச்சயம் அன்றோ!!

"மோக்ஷம் நிச்சயம்" என்று அறிந்து இருந்த ஸ்ரீ ராமர்,
"தனக்காக உயிரையே விட்டு விட்டாரே? இவருக்கு பதில் செய்ய முடியாமல் ஆகி விட்டதே" என்ற தாபம் உண்டாகிவிட்டது ராமபிரானுக்கு..

இது ஒரு "பக்ஷி வர்க்கம்" என்று புதைக்க விரும்பவில்லை ஸ்ரீராமர்.

"தன் தகப்பனுக்கு கொடுக்கும் ஸ்தானத்தை கொடுக்க நினைத்தார்" ஸ்ரீ ராமர்.
பக்ஷி வர்க்கமாக இருந்தாலும்,
"தன் கையாலேயே ஜடாயுவின் சரீரத்துக்கு அபிஷேகம் செய்து, 
திருமண் இட்டு, 
லக்ஷ்மணை கொண்டு சிதை மூட்ட சொல்லி, 
அந்த சிதையில் ஜடாயுவின் சரீரத்தை வைக்கும் போது, 
என்னென்ன வேத மந்திரங்கள் உண்டோ, அனைத்தையும் தானே சொல்லி, 
ப்ரம்மமேதா சம்ஸ்காரம் முறையாக செய்து, 
தன் கையாலேயே நெருப்பு போட்டார்" ஸ்ரீராமர்.

சந்நியாசிக்கு தகனம் கிடையாது.
சந்நியாசிகளுக்கு வேறு விதமான ஸம்ஸ்கார முறைகள் சொல்லப்பட்டு உள்ளது.

"உடல் வேறு ஆத்மா வேறு" என்று ஞானத்தை சம்பாதித்த சந்யாசிகள், உடலை விட்டு பிரியும் போது, முழுமனத்துடன் இஷ்டப்பட்டு செல்கிறார்கள்.
ஆதலால் உடலை விட்டு பிரிந்த துக்கத்தை சந்யாசிகள் பெறுவதில்லை.

ஆதலால் சந்யாசிகளை புதைத்தாலும்,
"உடல் புதைக்கப்பட்டதே, உடல் உள்ளே இருக்கிறதே" என்று வருத்தப்படாமல்,
"எப்படியாவது அந்த உடலில் மீண்டும் புகுந்து விட மாட்டோமா?"
என்ற எண்ணமும் இல்லாமல் இருப்பதால், அவர்கள் நற்கதி அடைந்து விடுகிறார்கள்.

குடும்பஸ்தர்கள் யாவருக்கும் இறந்த பின், "அவர்கள் உடலை தகனம் செய்து விட வேண்டும்" என்று சாஸ்திரம் சொல்கிறது.

சன்யாசம் பெறாதவர்களை புதைப்பது, அந்த ஜீவனை அந்த உடல் புதைக்கப்பட்ட இடத்தை விட்டு பிரிய விடாமல் செய்யும்.

புதைக்கும் பழக்கம் உள்ள பிற மதங்களில் "பிசாசு, சாத்தான், ஆவிக்கு கொடுக்கப்படும் பயம் அதிகம். ஆவிக்கு கொடுக்கப்படும்  முக்கியத்துவம் பல சமயம் அவர்கள் வழிபடும் தெய்வத்துக்கு கூட கிடையாது.".
இந்த எண்ணங்களுக்கு காரணமே இந்த புதைக்கும் பழக்கம் தான்.

புதைக்கும் பழக்கம்,
  • இறந்த ஜீவனுக்கும் நல்லதல்ல, 
  • பூமியையும் பிணங்களால் நிரப்பி வாழ இடமில்லாமல் செய்வதும் நல்லதல்ல.
"உடல் அழிந்து பஸ்பமாகி விட்டது" என்று பார்த்த பின் தான், உடலை விட்டு பிரிந்த ஜீவன், இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை என்று சமாதானம் அடைகிறான்.
அந்த ஜீவன் எம லோகத்துக்கு அனுப்பப்பட்டு பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்க, நரக லோகம் இருந்து விட்டு, மீண்டும் பிறக்க பூலோகம் வந்து விடுகிறார்கள்.

"பாவ புண்ணியம் இரண்டுமே செய்யாத" முமுக்ஷுக்கள் (மோக்ஷத்தை நாடுபவர்கள்) மீண்டும் பிறக்காமல் மோக்ஷம் என்ற வைகுண்டத்தை அடைந்து விடுகிறார்கள்.

வேதம் கொஞ்சம் அறிந்த ப்ராம்மணனுக்கு, "அனாஹித அக்னி" என்ற முறையில் உடலை தகனம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

வேதம் முழுவதும் கற்று அறிந்த தீட்சிதர்கள், கனபாடிகள் போன்றவர்கள் இறந்தால், "ஆஹித அக்னி"  என்ற முறையில் உடலை தகனம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது சாஸ்திரம்.
குடும்பத்தில் இருந்த தேசிகர் போன்ற மகான்களாக இருந்தால் மட்டுமே, "ப்ரம்ம மேதா சம்ஸ்காரம்" செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.


பொதுவாக வேதம் அறியாதவர்களுக்கு "கோவிந்தா கோவிந்தா..." என்று பகவானின் நாமத்தை சொல்லி கொண்டே, "நெருப்பு போட வேண்டும்" என்று சாஸ்திரம் சொல்கிறது.

இறந்தவர்களுக்கு முன்னால் வெடி போட்டு கொண்டு போவது, 
இறந்தவர்களுக்கு முன்னால் ஆடி கொண்டு போவது, 
உடலை விட்டு பிரிந்த ஜீவனுக்கு புண்ணியம் தராது. 
மரணம் ஒரு இழப்பல்லவா...?

1960 வரை கூட, தமிழ்நாட்டில் "கோவிந்தா .. கோவிந்தா.." என்று, பகவானின் நாமத்தை சொல்லிக்கொண்டே தான் இறந்தவர்கள் உடலை எடுத்துக்கொண்டு தகனம் செய்தனர்.

இந்த 'புண்ணியத்தை' கூட, இன்று அந்த இறந்த ஜீவனுக்கு கொடுக்க மறந்து விட்டார்களே இந்த தமிழகத்தில்!!

கிறிஸ்தவன் இறந்தால், அவர்கள் கூட அவர்கள் தெய்வ சம்பந்தமாக ஏதோ சொல்லி, புதைக்கிறார்கள்.
முஸ்லீம் இறந்தால் கூட, அவர்களும் ஏதோ அவர்கள் முறையில் ஏதோ பிரார்த்தனை செய்து புதைக்கிறார்கள்.

வேத மந்திரங்கள் ஓதி தகனம் செய்ய வேண்டாம்...
குறைந்தபட்சம்,
"கோவிந்தா கோவிந்தா" என்று பரவாசுதேவன் நாமத்தையாவது சொல்லி கொண்டு தகனம் செய்யலாமே!!.ஹிந்துக்கள்!!
பகவானின் நாமத்தை கூட சொல்லாமல், ஆட்டம் போட்டு கொண்டு,
"உடலை விட்டு ஜீவன் போய் விட்டான்" என்று எரித்து விட்டால்,
எத்தகைய அவமரியாதையை செய்கிறோம் அந்த ஜீவனுக்கு!! என்று யோசிக்க வேண்டாமா?
ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டாமா?

இது வருத்தப்பட வேண்டிய விஷயமில்லையா..ஹிந்துக்களுக்கு.

ஹிந்துக்களாக பிறந்தும், பகவானின் நாமத்தை சொல்லாமல் எரித்து விட்டால், இறந்த ஜீவனுக்கு துரோகம் செய்தோம் என்றல்லவா ஆகி விடும்!!.

வட இந்தியாவில் இன்று வரை,
இறந்த உடல்களை தூக்கி கொண்டு
"ராம நாம் சத்ய ஹை" (ராம நாமமே சத்யம்)
என்று உரக்க சொல்லி கொண்டு தகனம் செய்கின்றனர்.

வெடி போட்டு, ஆட்டம் போட்டு, உடலை எடுத்து கொண்டு செல்லும் ஹிந்துக்கள், ஜீவனின் நல்ல கதிக்காகவாவது "கோவிந்தா.. கோவிந்தா..." என்று சொல்லலாமே!!..
மரணம் ஒரு இழப்பல்லவா...?

மெளனமாக, பகவான் நாமத்தை சொல்லி கொண்டு ஜீவனின் நற்கதிக்கு வழி செய்ய வேண்டாமா!! ஹிந்துக்கள்.

வேதம் அறிந்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு வேத மந்திரங்கள் சொல்லி நெருப்பு போடலாம் என்று சொல்கிறது.

பக்ஷியான ஜடாயுவுக்கு, "கோவிந்தா கோவிந்தா..." என்று பகவானின் நாமத்தை சொல்லி கொண்டே கூட, ஸ்ரீ ராமர் நெருப்பு போட்டு இருக்கலாம்!!

ஆனாலும் ஸ்ரீ ராமர், ஜடாயுவுக்கு வேத மந்திங்கள் சொல்லி,
மோக்ஷத்திற்கு அதிகாரம் உள்ள முமுக்ஷக்களுக்கு செய்யும் "ப்ரம்ம மேதா சம்ஸ்காரத்தை" துணிந்து செய்கிறார்.

தன் தகப்பன் போன்று கௌரவம் கொடுத்த ஜடாயுவுக்கு,
சீதைக்காக உயிரையே தியாகம் செய்த ஜடாயுவுக்கு,
தன் விருப்பத்தின் காரணமாக,
தன் கையால் "ப்ரம்ம மேதா சம்ஸ்காரம் செய்து, நெருப்பு போட்டார்" ஸ்ரீராமர்.

"மோக்ஷத்தை தேடும் மகான்களுக்கு தான் ப்ரம்ம மேதா சம்ஸ்காரம் மோக்ஷத்தை தரும்" என்று சொல்கிறது சாஸ்திரம்.

ஜடாயு என்ற பக்ஷியோ, மோக்ஷத்திற்காக வாழ்ந்த ஜீவன் இல்லை.

"தன் ஆசைக்காக", இப்படி ப்ரம்ம மேதா சம்ஸ்காரம் செய்தாரே தவிர, ப்ரம்ம மேதா சம்ஸ்காரம் செய்ததால் ஜடாயு மோக்ஷம் அடைவார்!! என்று சாஸ்திரம் அறிந்த ஸ்ரீ ராமரும் நினைக்கவில்லை..
காரணம்,
மோக்ஷத்திற்காகவே வாழ்ந்த தேசிகர் போன்ற மகான்களுகளுக்கு மட்டுமே, "ப்ரம்ம மேதா சம்ஸ்காரம்" பலனை கொடுக்கும்.


இந்த உண்மை ஸ்ரீராமருக்கும் தெரியும்.

ஸ்ரீ ராமருக்கோ, "ஜடாயுவுக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டும்" என்று ஆசை ஏற்பட்டது.

தன் ஆசைக்காக செய்த "ப்ரம்ம மேதா சம்ஸ்காரம்" முமுக்ஷுக்களுக்கு தான் பலிக்கும் என்பதால்,
"ஜடாயு இந்த ஸம்ஸ்காரத்தால் மோக்ஷம் அடைவாரா??" என்பது சந்தேகமே !
"ஜடாயுவின் புண்ணிய பலத்தால் மோக்ஷம் அடைவாரா?" என்று பார்த்தாலும் சந்தேகமே...

காரணம்,
சீதைக்காக போர் செய்து உயிர் விட்ட ஜடாயுவுக்கு,
சாஸ்திரப்படி, "வீர சொர்க்கம் கிடைக்குமே தவிர, மோக்ஷம் கிடைக்க வாய்ப்பில்லை".

'ப்ரம்ம மேதா ஸம்ஸ்காரமும்' ஜடாயுவுக்கு மோக்ஷம் கொடுக்க முடியாது,
ஜடாயுவின் 'புண்ணியமும்' மோக்ஷம் கொடுக்க முடியாது
என்று உணர்ந்த ஸ்ரீராமர்,
"தான் பரவாசுதேவனாகவே இருந்து ஜடாயுவுக்கு மோக்ஷம் தர" முடிவு செய்தார்.

யார் கேட்டாலும் "நான் சாதாரண மனிதன், தசரதன் பிள்ளை" என்றே சொல்லிக்கொள்ளும் ராமபிரான்,
இந்த இடத்தில் மட்டும் தான் "தான் சர்வேஸ்வரன்" என்று வெளிக்காட்டுகிறார்.

உரிமை இல்லாத வீட்டுக்கு, யாரோ ஒருவன் அவன் நண்பனை பார்த்து  "இன்னொரு வீட்டுக்குள் நீ போ" என்று சொன்னாலும், அந்த உரிமையாளன் துரத்தி விட வாய்ப்பு உண்டு.

ஆனால் வீட்டின் உரிமையாளனே, ஒருவனை பார்த்து, "நீ என் வீட்டுக்கு என் அனுமதியோடு போ" என்று சொல்ல முடியும். யாரும் எதிர்க்க முடியாது.

நெருப்பு போட்டு விட்டு, ஸ்ரீராமர் பரமாத்மாவாக பேச ஆரம்பிக்கிறார்,
"ஜடாயு, என் அனுமதியோடு நீ மோக்ஷத்திற்கு செல்.
மோக்ஷம் அடையும் முன்,
மஹா புருஷர்கள், உத்தமமான பிராம்மணர்கள், எந்தெந்த புண்ணிய லோகங்களை அடைவார்களோ, அந்த லோகங்கள் எல்லாம் சென்று பார்த்து விட்டு,
பூமி தானம் செய்த பெரியோர்கள் எந்தெந்த புண்ணிய லோகங்களை அடைவார்களோ, அந்த லோகங்கள் எல்லாம் சென்று பார்த்து விட்டு,
தர்மத்துக்காக போராடி, போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த க்ஷத்ரியர்கள் எந்தெந்த லோகங்களை அடைவார்களோ, அந்த லோகங்கள் எல்லாம் சென்று பார்த்து விட்டு,
முடிவாக பரமபதம் என்ற மோக்ஷத்தை அடைவாயாக..!"
என்று வாசுதேவனாக பேசினார் ராமபிரான்.

ராமபிரான் "ஜடாயுவுக்கு மோக்ஷம் தர வேண்டும்" என்று ஆசைப்பட்ட பின்,
உடனே மோக்ஷம் (ஸத்யோ முக்தி) செல்ல அனுமதித்து இருக்கலாமே?
ஏன் இப்படி பல லோகங்களை பார்த்து விட்டு கடைசியாக பரமபதம் செல்ல சொன்னார்? 
என்று நமக்கு தோன்றலாம்.

மோக்ஷம் என்ற பரமபதத்தை ஒருவன் அடைந்து விட்டால், மீண்டும் அவனுக்கு பிறவி கிடையாது..
"சத்ய லோகம் முதல் பாதாளம் வரை", எந்த லோகத்துக்கும் திரும்பி வர இவர்களுக்கு அவசியமும் இல்லை.
ஒரு வேளை,
ஜடாயுவுக்கு உடனே நேரடியாக மோக்ஷத்தை கொடுத்து விட்டால்,
போகும் வரை "சீதைக்கு என்ன ஆனதோ??" என்று வருத்தப்படுவாரே என்று உணர்ந்த ராமபிரான்,
"தான் சீதையை மீட்டு, அயோத்தி அரியணை ஏறும் வரை, பல புண்ணிய லோகங்களில் இருந்து கொண்டே பார்த்து கொண்டு,
சீதை மீட்கப்பட்ட விஷயத்தை அறிந்த பின், 
மன கவலை இல்லாமல், மோக்ஷம் அடையட்டும்" 
என்பதால், இவருக்கு இப்படி ஒரு மோக்ஷ க்ரமத்தை கொடுத்தார் ஸ்ரீ ராமர்.
இதற்கு "க்ரம முக்தி" என்று பெயர்.

ராமர் "தன் அனுமதியால் மோக்ஷம் செல்" என்று வாக்கு கொடுத்ததும், அது நிரூபணம் ஆகும் விதமாக,
ஜடாயு தன் சரீரத்தை விட்டு, 'திவ்ய பார்ஷத ரூபம்' பெற்று, மோக்ஷம் செல்ல தயாரானார்.
உடலை விட்டு பிரிந்த ஜடாயு, திவ்யமான பார்ஷத ரூபத்துடன் திவ்யமான ஞானத்துடன், ஸ்ரீ ராமரை பார்த்து ஸ்தோத்திரம் செய்கிறார்,
"சகல உலகங்களும் இருப்பதற்கு காரணமான,
வேதத்துக்கு காரணமான,
முதல் தெய்வமான,
பரமாத்மாவாக இருக்கும் உங்களுக்கு நமஸ்காரம் !


ஒவ்வொரு யுகத்திலும் எப்பொழுதெல்லாம் தர்மம் வீழ்கிறதோ!! அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலை நிறுத்த தேவரீர் அவதாரம் செய்கிறீர்கள்.

மனிதனாக இப்பொழுது நீங்கள் செய்து இருக்கும் அவதாரமும், 'கேவலம் ராக்ஷஸர்களை அழிப்பதற்காக இல்லை' என்று அறிகிறேன்.

உங்கள் 'சங்கல்பத்தின்' மூலமே ராக்ஷஸர்களை வதம் செய்ய முடியும். இதற்கு அவதாரம் செய்ய தேவையில்லை என்று அறிகிறேன்.
'எப்படிப்பட்ட கஷ்டம் வந்தாலும், எப்படிப்பட்ட நஷ்டம் வந்தாலும்,
ஒரு மனிதன் தன்னுடைய தர்மத்தை மீற கூடாது'
என்று காட்டுவதற்காக மனித அவதாரம் செய்து உள்ளீர்கள் என்று அறிகிறேன்.

அனைத்தும் அறிந்தவனாக (சர்வஞ்ன்) இருந்தும், மனித அவதாரத்தில் ஒன்றும் தெரியாதவர் போல இருக்கிறீர்.

மகா சக்தி (சர்வ சக்தன்) உடையவனாக இருந்தும், பிறர் உதவியை நாடுகிறீர்.
(குரங்குகள் உதவியை இதன் பிறகு கேட்க போகிறார் என்று அறிந்து சொல்கிறார் ஜடாயு)

எப்பொழுதும் ஆனந்தமாக (ஆனந்தமூர்த்தி) இருந்தும், தான் துக்கப்படுவது போல இருக்கிறீர்.

உங்கள் கபடநாடகம் தெரியாதா?

சீதையை காணவில்லை என்றதும்,
'சீதை எங்கே? சீதை எங்கே? சீதை கண்டீர்களா? சீதை கண்டீர்களா?'
என்று சாதாரண மனிதனை போல, சக்தி இல்லாதவன் போல தேடி வருகிறீர்கள்.

கடைசியில் இங்கு வந்து, ஒரு கழுகுக்கு
'என் ஆணையால் மோக்ஷம் கொடுக்கிறேன்'
என்று சொல்ல, இதோ திவ்ய பார்ஷத ரூபத்துடன் மோக்ஷம் செல்ல நிற்கிறேனே!!
இது எப்படி? 

காசியில் விஸ்வநாதர், அங்கு உயிர் விடும் அனைத்து ஜீவனுக்கும் 'ராம ராம ராம' என்று உங்கள் நாமத்தை (பெயரை) தானே, அவர்கள் காதில் சொல்லி மோக்ஷம் கொடுக்கிறார்.

'உங்கள் பெயர் சொன்னாலே மோக்ஷம் கிடைக்குமென்றால்,
ஸ்ரீராமனாகிய உங்கள் கைகளாலேயே சம்ஸ்காரம் செய்யப்பட்டேன் என்று பார்க்கும் போது, என் பாக்கியத்தை என்னவென்று சொல்வது?'

'ராம நாமத்தாலேயே" சிவபெருமான் 'மோக்ஷம் கொடுக்கிறார்' என்றால், 
இந்த உடலை விட்டு பிரியும் போது, 'ராமரே எனக்கு அருகில் இருந்தார்!!' என்ற 'என் பாக்கியத்தை' என்னவென்று சொல்வது?

'ராம' நாமமே ஒருவனுக்கு மோக்ஷம் கொடுத்துவிடுமென்று தெரிந்தும், பறவையான எனக்கு போய் தகனமும் செய்து, வைதீக சம்ஸ்காரமும் சேர்த்து செய்கிறீர்.

'ராம நாமமே மோக்ஷ வாசலை கொடுக்கும்' என்ற போது,
எனக்கு  'வைதீக சம்ஸ்காரம் செய்தது, மோக்ஷத்திற்கு அல்ல, உங்கள் தனிப்பட்ட ஆசையினால் செய்தீர்கள்' என்று அறிகிறேன்.

'தசரதனை போன்று, என்னையும் தகப்பன் ஸ்தானத்தில் என்னை நீங்கள் நினைத்ததால்,
உங்கள் கையால் கொள்ளி போட  ஆசைப்பட்டீர்கள்' என்று அறிகிறேன்.

பறவைக்கு சம்ஸ்காரம் கிடையாது..  தேவையுமில்லை..
ஆனாலும், 
'எனக்கு வைதீக சம்ஸ்காரம் செய்து, உங்கள் ஆசையை, பூர்த்தி செய்து கொண்டீர்கள்' என்று அறிகிறேன்.

உங்கள் மடியில் உயிரை விட்ட பாக்கியத்தால், எனக்கு மோக்ஷம் நிச்சயித்துவிட்டது.

'சீதையை காக்க தன் உயிரையே விட்டு விட்டாரே' என்று பார்க்கும் நீங்கள்,
'ஜடாயு'வுக்கு என்ன பதில் செய்வேன்?
என்று நினைக்கிறீர்கள்.

"நான் செய்த சிறு முயற்சிக்கு, மோக்ஷத்தையும் கொடுக்க சம்மதித்த உங்களுக்கு,
நான் என்ன செய்ய போகிறேன்?" என்று திகைக்கிறேன்...

உங்களுடைய கருணையே எப்பொழுதும் மிஞ்சி இருக்கிறது.
'உங்களுடைய கருணையை பார்க்க பார்க்க, நாம் செய்யும் பக்தி குறைவாக இருக்கிறது' என்று புரிகிறது.

உங்களுடைய கருணையை உணர்ந்த அடியார்கள் நிலை எப்படி இருக்கும்? என்றும் புரிகிறது.


இத்தகைய கருணையை பரமாத்மா நாராயணன் எனக்கு வர்ஷிக்கிறாரே!! அவருக்கு நாம் எப்படி பதில் செய்வோம்?
என்று நினைக்கும் அடியார்கள், 
முதலில்
அவர்கள் 'வாக்கை' உங்களுக்கு அர்ப்பணம் செய்து விடுகிறார்கள்.
'வாக்கு இனி உலக விஷயம் பேசாது' என்ற பிறகு, 
எப்பொழுதும் 'ராம ராம ராம ராம ராம ராம ...' என்று சொல்லி தன் வாக்கை உங்களுக்கு சமர்ப்பணம் செய்கின்றனர்.

நீங்களோ அதை விடவும் கிருபை செய்து விட,
அவர்கள் 'மனதையும்' உங்களுக்கு அர்ப்பணம் செய்து விடுகிறார்கள்.
எப்பொழுதும் உங்கள் நினைவுகளே கொள்கிறார்கள். வேறு நினைவை மறக்கிறார்கள்.

நீங்களோ அதை விடவும் கிருபை செய்து விட,
அவர்கள் 'உடலையும்' உங்களுக்கு அர்ப்பணம் செய்து விடுகிறார்கள்.
எப்பொழுதும் எம்பெருமான் கருணையை நினைத்து, 
கண்களால் கண்ணீர் பெருக்கி, 
கையால் பூஜை செய்து கொண்டு, 
கால்களால் நடந்து சென்று, 
எப்பொழுதும் அவர் சரணத்திலேயே 
உடலால் கைங்கர்யம் செய்கிறார்கள்.

நீங்களோ அதை விடவும் கிருபை செய்து விட,
அவர்கள் 'ஆயுளையும்' உங்களுக்கென்றே அர்ப்பணம் செய்து விடுகிறார்கள்.
தன் 'ஆயுட்காலம் முழுவதும் நீங்களே லட்சியம்' என்று ஆத்ம சமர்ப்பணம் செய்து, உங்களுக்காகவே கடைசிவரை வாழ்ந்து விடுகின்றனர், உன் அடியார்கள்.

இப்படிப்பட்ட அடியார்கள் அநேக பேர் உங்களுக்கு உண்டு.
அப்படிப்பட்ட அடியார்கள் கூட்டத்தில், 'அடியேனும் ஒருவன்'.

ஹே ரகுநாதா!, 
உங்கள் சரணத்தில் என் ஆயுளையே அர்ப்பணம் செய்தேன்.

பொதுவாக 'பரோபகாரார்த்தம் இதம் சரீரம்' என்று சொல்கிறார்கள்.
'இந்த உடம்பு கொடுக்கப்பட்டதே பிறருக்கு உதவியாக இருப்பதற்கு தான்' என்று சொல்கிறார்கள்.

'என் சரீரம் உங்களுக்காக அர்ப்பணம் செய்யப்பட்டது' 
என்ற பாக்கியத்தை நினைக்கும் போது, நான் பிறவி எடுத்த பயன் பெற்றேன் என்று அறிகிறேன்.

எப்படி இருந்தாலும், என்றோ ஒரு நாள் நிச்சயமாக அழிய கூடியது தான் இந்த சரீரம் (உடல்).
இந்த சரீரம், இன்று எனக்கு நீங்கி விட்டது.
உங்கள் கையால் தகனம் செய்யப்படும் பாக்கியத்தையும் பெற்றது.

உங்களையும் நேரில் காணும் பாக்கியமும் பெற்றேன்.


உங்களிடமிருந்து விடைபெற்று, நீங்கள் திறந்து விட்ட வைகுண்டம் நோக்கி செல்கிறேன்"
என்று நமஸ்கரித்து விடைபெற்றார் ஜடாயு.

ஜடாயுவை மோக்ஷம் அனுப்பி, ஸ்ரீராமர் ராவணனை ஒழித்து, சீதையை மீட்க, லக்ஷ்மணனுடன் கிளம்பினார்.



Tuesday 27 March 2018

அக்னி பிரவேசம் செய்த போது, தேவி சீதை என்ன நினைத்தாள்? ராமபிரான் என்ன நினைத்தார்? லக்ஷ்மணன், ஹனுமான் என்ன நினைத்தார்கள்?. சீதையின் உண்மை நிலை என்ன? யாரிடமும் கடிந்து பேசாத ஸ்ரீ ராமர், சீதையை பார்த்து ஏன் கடிந்து பேசினார்?

ராவணன், சீதையை அபகரித்து இலங்கைக்கு கொண்டு சென்று விட்டான்.
அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை, "ஸ்ரீராமர் வந்து காப்பாற்றுவார்" என்று பத்து மாதங்கள் காத்திருந்தாள்.
சீதையை மீட்க,
பெரும் வானர படை திரட்டி, கடலில் சேது அமைத்து,
பெரும் போர் செய்து,  ராவணன் 10 தலையையும் கீழே சாய்த்து,
விபீஷணனை இலங்கை அரசனாக்கி,
மகிழ்ச்சியுடன் விபீஷணனை பார்த்து,
சீதையை தன்னிடம், அழைத்து வர சொன்னார் ஸ்ரீ ராமர்.




சீதையை சகல மரியாதையுடன், மூடு பல்லக்கில் அழைத்து வந்தார் விபீஷணன்.

"எந்த சீதைக்காக, தங்கள் உயிரை கூட தியாகம் செய்ய தயாராக இருந்தார்களோ! அந்த சீதையை, வானரர்கள் தரிசனம் செய்ய வேண்டும்"
என்று ஆசைப்பட்ட ஸ்ரீ ராமர், சீதையை பல்லக்கை விட்டு இறங்கி, வானரர்கள் பார்க்க நடந்து வர சொன்னார்.

க்ஷத்ரிய பெண்ணான சீதை, ராவணனை கூட கண்டு அஞ்சாத வீரமிக்கவள், என்ன காரணத்தாலோ, 'திடீரென்று, தன் முகத்தை தன் புடவையால் மூடி கொண்டு, முகத்தை காட்டிக்கொள்ள பிரியப்படாமல், தலை குனிந்து கொண்டே', வானரர்களுக்கு இடையே நடந்து, ராமபிரான் அருகில் வந்து நின்றாள்.

தன் உயிருக்கு உயிரான சீதையை மீட்க, இலங்கை வரை படையை திரட்டிக்கொண்டு சென்று, ராவணனை கொன்று, 'தன் பத்னியான சீதையை ஆசையுடன் அழைத்து வர சொன்ன ஸ்ரீ ராமர்'தலை குனிந்து கொண்டே தன் அருகில் வந்து நிற்கும் சீதையை கவனித்ததும்,
அவளை பார்க்க கூட செய்யாமல், எங்கோ பார்த்து கொண்டு, யாருமே எதிர்பார்க்காத கடும் சொற்களை பேசினார்.

இந்த கடும் சொற்களை கேட்ட சீதை, துளியும் பயம் இல்லாமல், லக்ஷ்மணரை பார்த்து,
"லக்ஷ்மணா! எனக்கு இங்கேயே அக்னியை மூட்டு, நான் அக்னி பிரவேஷம் செய்கிறேன்." என்றாள்.

"அக்னியை மூட்டுவதா? வேண்டாமா?" என்ற நிலையில், லக்ஷ்மணன் ராமபிரானை பார்க்க, ஸ்ரீ ராமர் முகத்தில் சம்மதம் தெரிந்தது. உடனே அக்னி மூட்டிவிட்டார்.

ஸ்ரீ ராமருக்காக 'சீதையை தேடி இலங்கை சென்று பார்த்த' ஆஞ்சநேயரும் இங்கு நடக்கும் நிகழ்வை கண்டு துக்கப்படவில்லை.

வெளியோட்டமாக பார்க்கும் போது, யாரிடமும் கடிந்து பேசாத ஸ்ரீ ராமர், சீதையை பார்த்து ஏன் இப்படி பேசினார்? என்று தோன்றும்.

ராமபிரான் கடிந்து பேசியதே ஆச்சர்யம்! 
அதற்கு சீதை பதிலாக "நான் அக்னி பிரவேசம் செய்து என்னை நிரூபிக்கிறேன்" என்று சொன்னதும் ஆச்சர்யம்.
இதை கண்டு, பதட்டம் அடையாத லக்ஷ்மணரும், ஹனுமனும் கூட ஆச்சர்யமே !!

நடப்பது அநியாயம் போல தோன்றும் இந்த நிகழ்வில், ஏன் ஹனுமனும், லக்ஷ்மணனும் அமைதியாக இருந்தனர்? என்றும் கேள்விகள் தோன்றும்.

ஸ்ரீ ராமரும், சீதையும் திவ்ய தம்பதிகள்.

சாதாரண தம்பதிகளுக்கும், திவ்ய தம்பதிக்கும் பல வித்யாசம் உண்டு.

சாதாரண உலக தம்பதிகளுக்கு, மற்றவர் என்ன சொல்ல நினைக்கிறார்? என்ன ஆசைப்படுகிறார்? என்பதை சொன்னால் தான், புரிந்து கொள்ள முடியும்.

திவ்ய தம்பதிகளுக்கு, தன் கணவன் என்ன சொல்ல நினைக்கிறார்? தன் மனைவி என்ன சொல்ல நினைக்கிறாள்? என்ன ஆசைப்படுகிறார்? என்பதை  அவர்கள் குறிப்பு அறிந்தே புரிந்து கொள்ள முடியும்.
திவ்ய தம்பதிகள் தன் தேவைகளுக்கு பேச கூட அவசியமில்லாமல் இருப்பர். 
திவ்ய தம்பதிகள் பேசினால், பேசுவதற்கு ஆசை பட்டு தான் பேசுவார்களே தவிர, தேவைக்கு பேசக்கூட அவசியமில்லாமல் இருப்பார்கள்...

ஸ்ரீ ராமரும், சீதையும் திவ்ய தம்பதிகள் என்பதை நாம் மறக்க கூடாது.

நம்மை போன்ற சாதாரண தம்பதிகள் என்ற பார்வையில் பார்த்தாலே, அது நமக்கு பாவத்தை தரும்.
இவர்கள் சாக்ஷாத் அந்த 'விஷ்ணுவும், லட்சுமியும்' என்ற உணர்வில் பார்க்க வேண்டும்.

உண்மையில் என்ன நிகழ்ந்தது?
ஸ்ரீ ராமர், ராவணனை கொன்ற பின், விபீஷணனை பார்த்து சீதையை சகல மரியாதையுடன் அழைத்துவர சொன்னார்.

சுக்ரீவனும் அவனுடைய சேனைகளும், சீதையை பார்த்தது கூட இல்லை. ஆனால், சீதைக்காக தங்கள் உயிரை கூட விட துணிந்து போர் செய்தனர்.
யாருக்காக தன் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருந்தார்களோ! அந்த சீதையின் தரிசனம் இவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கருணை கொண்டார் ஸ்ரீராமர்.

இதன் காரணமாக, சீதையை ஸ்நானம் செய்து, சர்வ ஆபரணத்துடன் சேனைகளுக்கு நடுவே நடத்தி அழைத்து வருமாறு சொன்னார்.

பத்து மாதம் சிறையில் இருந்த சீதையை, விபீஷணன் தன் மனைவியை முன்னிட்டு, "ஸ்ரீ ராமர் தங்களை பார்க்க ஆவலாக, அழைப்பதாக" சொன்னார்.

இந்த ஒரு சொல்லுக்காக காத்திருந்த சீதை, உடனே சந்தோசத்துடன் கிளம்ப தயாரானாள்.

ஸ்ரீ ராமர், "சீதையை ஸ்நானம் செய்து, சர்வ ஆபரணத்துடன் அழைத்து வருமாறு" சொன்னதாக சொல்ல,
பணிப்பெண்களும், விபீஷணனின் பத்னியும், சீதைக்கு ஸ்நானம், அலங்காரம் செய்து, மூடு பல்லக்கில், மகாராணி சீதையை சர்வ மரியாதையுடன் அழைத்துக் கொண்டு, ஸ்ரீ ராமரை நோக்கி வந்தனர்.

வானர சேனைகள், சீதையை காண முடியாமல், மூடு பல்லக்கை ஆச்சர்யமாக பார்த்தனர்.




வானர படைகளின் "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற கோஷம் விண்ணை முட்டியது.

'வானரர்கள் யாருக்காக தன் உயிரையும் துறக்க துணிந்தார்களோ! அவர்களுக்கு சீதையின் தரிசனம் கிடைக்க வேண்டும்' என்று எண்ணினார் ஸ்ரீ ராமர்.




உடனே, ஸ்ரீ ராமர், வானரர்கள் சீதா தேவியை பார்க்க வேண்டும் என்ற கருணையால், மூடு பல்லக்கு இல்லாமல், சீதையை சகல மரியாதையுடன் நடத்தி அழைத்து வருமாறு சொன்னார்.

கம்பீரமான, தாயுள்ளம் கொண்ட சீதை, மகிழ்ச்சியுடன் பெரும் சேனைக்கு நடுவே ஸ்ரீ ராமரை நோக்கி நடக்கலானாள்.

'தனக்காக பெரும் படையை திரட்டி, ஜெயராமனாக இருக்கும் ஸ்ரீராமரை காணப்போகிறோம்' என்று ஆனந்தப்பட்டாள் சீதை.

பெரும் வானர படை வீரர்களை கண்டு, ஸ்ரீ ராமருக்கும், தனக்கும் கிடைத்த குழந்தைகள் போல நினைத்தாள், சீதை.
தாயுள்ளதோடு அனைவரையும் கண்டாள்.

சீதையை கண்டதும், பேரிரைச்சல் உண்டானது.
வானர்கள்,
"இதோ சீதா மாதா...",
"ஆஹா... இவள்தான் சீதா தேவியோ !",
"சீதா ராம் கீ ஜெய்"
என்று எங்கும் பேரிரைச்சல் உண்டானது.

மூடு பல்லக்கில் வரும் வரை மனம் சஞ்சலம் அடையாமல், ஸ்ரீ ராமரை அடையப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தாள் சீதை.

மூடு பல்லக்கில் இருந்து இறங்கி, வானர படைகளின் பேரிரைச்சல் நடுவில் நடக்கும் போது, சீதைக்கு திடீரென்று மனம் சஞ்சலம் அடைந்தது. பெரும் துக்கம் சூழ்ந்தது.

தன்னை வெளிக்காட்டி கொள்ள விரும்பாத சீதை, உடனே தன் புடவை தலைப்பு கொண்டு, தன் முகத்தை முழுவதுமாக மூடி, அவமானத்தால் கூனி குறுகி நடந்து வந்து, ஸ்ரீ ராமர் முன் நின்றாள்.

சீதையின் நிலை என்ன? என்ன துக்கத்தை அடைந்தாள் சீதை?

கற்புக்கரசியான சீதை, தான் களங்கப் படாதவளாக இருந்தாலும், 
பத்து மாதங்கள் ஒருவன் பிடியில் அகப்பட்டதையும், 
அதனால் உலகம் தன்னையும், ஸ்ரீ ராமரையும் கேட்கப் போகும் கேள்விக்கும், 
அதனால் ஸ்ரீ ராமருக்கு உண்டாக போகும் தர்ம சங்கடத்திற்கு தான் காரணமாகிவிட்டோமே!!
என்று தன்னை தானே வெறுத்தாள்.

"இப்படி ஒரு நிலையை ஸ்ரீ ராமருக்கு தந்து விட்டோமே!!" என்று சொல்லமுடியாத துக்கம் அடைந்தாள்.
"இப்பொழுதே அக்னிப்ரேவேசம் செய்து பிராண தியாகம் செய்து விடலாமா?" என்று எண்ணினாள்.
"இருந்தாலும் ஸ்ரீ ராமர் மனம் தெரியாமல் தானாக முடிவு செய்யக் கூடாது" என்ற மனசஞ்சலத்தோடு ஸ்ரீ ராமரை நோக்கி நடந்தாள்.

ஸ்ரீ ராமரும், சீதையும், மனம் ஒத்த திவ்ய தம்பதிகள்.
சாக்ஷாத் நாராயணனும் லக்ஷ்மியும் ஆவார்கள்.
பேசிக்கொள்ளாமலேயே,  இருவருக்கும் மற்றவர் என்ன நினைக்கிறார்? என்ன ஆசைப்படுகிறார்? என்று தெரியும்.

சமாதானமே செய்யமுடியாத சோகத்துடன் வரும் சீதையின் மன சஞ்சலத்தை அறிந்து கொண்டார் ஸ்ரீராமர்.

தன்னை இந்த உலகிற்கு கொடியவனாக காட்டி கொண்டாலும் பரவாயில்லை, ஆனால் 'சீதையை யாரும் குறை சொல்ல கூடாது' என்று எண்ணினார்.

உடனே, சீதையின் முகத்தையும் பாராமல்,
"சீதை, உன்னை காப்பாற்றியது, என்னுடைய கடமை.
நானும் ஒரு புருஷன் என்று நிருபித்தேன்.
உன்னிடம் மீண்டும் வாழவேண்டும் என்றில்லை.
நீ வாழ்வதோ! உயிரை போக்கி கொள்வதோ! உன் இஷ்டம்.
நீ வாழவேண்டும் என்றால், கவலை படாதே. நான் உன்னை வாழ வைக்கிறேன்.
உன்னை தாயை போன்று, என் தம்பிகள் உன்னை காப்பாற்றுவார்கள்.
அயோத்யாவிலேயே நீ வாழலாம். 
இல்லை என்றால், கிஷ்கிந்தையில் நீ வாழலாம்.
சுக்ரீவனும் உன்னை தாயை போல காப்பாற்றுவான்.
இல்லை என்றால், இங்கேயே வாழலாம்.
விபிஷணன் உன்னை காப்பாற்றுவான்.
எதுவும் பிடிக்க வில்லை என்றால், நீ எங்கு வேண்டுமானாலும் வாழ். 
நான் உன்னை வாழ வைக்கிறேன்."
என்றார்.

சீதைக்காகவே 1000 மைல் நடந்து,
சீதைக்காகவே படைகளை  திரட்டி, 
சீதைக்காவவே கடலில் பாலம் அமைத்து, 
சீதைக்காகவே ராக்ஷஸர்களுடன் போர் செய்து,
சீதைக்காகவே ராவணனை கொன்று,
சீதையை மீட்ட பின், ராமபிரான் இப்படி கடுமையாக பேசியது, அங்கு கூடி இருந்த சுக்ரீவன் போன்றவர்களுக்கே திகைப்பை ஊட்டியது.




ஆனால், இந்த கடுஞ் சொற்கள், சீதைக்கு மன சமாதானமாக இருந்தது.
இதை ஒரு வாய்ப்பாக எடுத்து, லக்ஷ்மணனை பார்த்து சீதை கட்டளை இட்டாள்,
"லக்ஷ்மணா, இந்த இடத்திலேயே எனக்கு அக்னியை மூட்டு, நான் அக்னி பிரவேசம் செய்யப்போகிறேன்.
நான் பதிவ்ரதை!! என்பது உண்மையானால், 
ஸ்ரீ ராமரும் ஏக பத்னிவ்ரதன்!! என்பது உண்மையானால், 
இந்த அக்னி என்னை பாதுகாக்கட்டும்" 
என்றாள்.

லக்ஷ்மணன், ஸ்ரீ ராமர் முகத்தை பார்த்தார். 
ஸ்ரீ ராமர்  முகத்தில் சம்மதம் தெரிந்தது. தைரியமாக சிதை மூட்டினார்.

அருகில்,
ஆஞ்சநேயர் எந்த ஒரு மன சஞ்சலமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தார்.

லக்ஷ்மனின் நிலை என்ன? ஆஞ்சநேயர் நிலை என்ன?

லக்ஷ்மணன், ஸ்ரீ ராமரை நன்கு உணர்ந்தவர்.
ஸ்ரீராமர், எந்த ஒரு நிலையிலும் நீதி தவறாதவர், குற்றமற்றவர், நிதானமனாவர், தர்மம் தெரிந்தவர், சர்வ நல்ல குணங்களும் உள்ளவர் என்று நன்கு உணர்ந்தவர் லக்ஷ்மணன்.

இப்படிப்பட்ட "ஸ்ரீஅண்ணாவுக்கு சம்மதம் என்றால், அதுவே சாஸ்த்ரம்.
மறு கேள்வி இல்லை." என்று நினைத்தார்.
இது லக்ஷ்மணனின் நிலை.

ஆஞ்சனேயர், "சீதைக்கு அக்னியால் ஒன்றும் ஆகாது" என்று திடமாக முடிவு செய்திருந்தார்.
தான் இலங்கையை நெருப்பால் பொசுக்கிய போது, சீதை செய்த சபதம் அவருக்கு ஞாபகம் வந்தது.

"நான் பதிவ்ரதை என்பது உண்மையானால், இந்த அக்னி, ஹனுமனை சுடாமல், குளிர்ச்சி கொடுக்கட்டும்" என்றாள் சீதை .

"சீதையின் கற்பிற்கு தானே சாட்சி" என்பதாலும்,
சீதை இப்பொழுது செய்த சபதத்தில்,
"நான் பதிவ்ரதை என்பது உண்மையானால்,
ஸ்ரீ ராமர் ஏக பத்னிவ்ரதன் என்பது உண்மையானால், 
இந்த அக்னி என்னை பாதுகாக்கட்டும்"
என்று சொன்னதால், துளியும் கவலை இல்லாமல், அமைதியாக
இருந்தார், ஹனுமார்.
சீதை உடனே அக்னி பிரவேசம் செய்தாள்.
புகைக்கு உள்ளே சென்று வெளியே வருவது போல, சீதை தன் நெற்றியில் வியர்வை கூட இல்லாமல், வெளியே வந்தாள்.
அக்னி பிரவேசம் செய்து வெளி வந்ததால், சீதை "தன் கற்பை நிரூபித்த திருப்தி அடைந்தாள்".
இப்பொழுது சீதையின் மனோநிலை, சமாதானம் அடைந்தது.

"தன்னை சேர்த்து கொண்டால், தேசத்தின் அரசனான ஸ்ரீ ராமரை இந்த உலகம் என்ன கேட்குமோ? என்ற சங்கடம் நீங்கி, நிம்மதி அடைந்து இருந்தாள் சீதை.

தன் நிலையை உணர்ந்து, வெளி உலகத்திற்கு தன்னை கோபக்காரனாக காட்டினாலும், ஸ்ரீ ராமரின் அனுக்ரஹத்தை எண்ணி உருகினாள்.

சீதையை கோபமாக பேசியது ஸ்ரீராமரின் நோக்கம் அல்ல.
அக்னி பிரவேசம் செய்த பின், மன சஞ்சலம் இல்லாமல் இருந்தாள் சீதை.
உற்சாகத்துடன் ஸ்ரீ ராமர் அருகில் நின்றாள்.
மனதில் குறை அகன்று இருந்த சீதையை கண்டு, ஸ்ரீ ராமர், மகிழ்ச்சியுடன் சீதையை அருகில் அமர செய்து, சீதா ராம தம்பதிகளாய் காட்சி கொடுத்தனர்.

சற்று முன் ராமபிரான் காட்டிய கோபமும், அக்னி பிரவேசம் செய்த பின், சீதையை மகிழ்ச்சியுடன் சேர்த்து கொண்ட காரணத்தையும் புரிந்து கொள்ள, 
சீதையின் நிலை எவ்வாறு இருந்தது என்று நம்மால் பார்க்க முடிந்தால் மட்டுமே, "ராமபிரானின் இதயத்தை" புரிந்து கொள்ள முடியும். 


வாழ்க திவ்ய தம்பதிகள் புகழ்.  வாழ்க சீதா ராம புகழ்.
வாழ்க அயோத்தியா.