Followers

Search Here...

Monday 2 October 2017

குரு பக்தி பெரிதா? குருவின் கருணை பெரிதா?....


'பகவானை அடைய, எனக்கு குரு தேவையில்லை, அவர் துணையும் தேவையில்லை, குரு நம்பிக்கையும் இல்லை.
நானே முயற்சி செய்வேன்' 
என்று சொல்பவர்களுக்கு, சாஸ்திரம் பல வழிகளை சொல்கிறது.

கீதையில் இதையே சுருக்கமாக, கர்ம யோகம், ஞான யோகம், சந்யாஸ யோகம் என்று பல வழிகளாக சொல்லி கொடுக்கிறார்.

"நானே முயற்சி செய்வேன்" என்று சொல்பவர்களுக்காக பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு பல வழிகளை தன் திருவாயால் சொல்கிறார்.






செய்யும் காரியங்களை (கர்மத்தை) யோகமாக செய்ய தெரியவில்லையென்றால்,
அது வெறும் கர்மம் (செயல்) என்றாகி விடும்.
கர்மத்துக்கு பாவ, புண்ணியம் உண்டு, அதற்கு பலன் உண்டு.
அதனால், துக்கம், சுகம் உண்டு. மீண்டும் பிறவி உண்டு.
'எதையும் யோகமாக செய்ய தெரியாது' என்றால், தானே முயற்சி செய்வது வீண்.

ராவணன், கர்ணன், போன்றவர்கள் கூட கடும் தவம் செய்து பலம் பெற்றாலும், ஒரு ஆன்மீக குருவை நாடாததால், கர்வம் கொண்டிருந்தனர், அழிந்தனர்.
தானே எந்த செயலையும் யோகமாக செய்யும் திறமை இருந்தால் செய்யுங்கள் என்று யோக தர்மங்களை நமக்கு காட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

"யோகம் செய்து கடவுளை இந்த கலியில் அடைய எனக்கு திறமை இல்லை. 
பகவான் தான் என்னை காப்பாற்ற வேண்டும், அடுத்த பிறவி இல்லாமல் முக்தி கொடுக்க வேண்டும்
என்று உணர்ந்தவர்கள், ஒரு ஆன்மீக குருவை கட்டாயம் நாட வேண்டும்.

அவர் ஆன்மீக முன்னேற்றத்துக்கு என்ன சொல்கிறாரோ, அதன் படி நடக்க வேண்டும்.

இதுவே கலியில் சுலபமான வழியும் கூட.

குருவின் துணையில் யோக ஸித்தி ஏற்பட்டாலும், கர்வம் உண்டாகாது.  
அப்படியே கர்வம் உண்டானாலும், குருவே திருத்தி விடுவார்.

குரு பக்திக்கும், குரு கருணைக்கும் வித்தியாசம் உள்ளது:

ஒரு பெரிய குளத்தில், சுவையான நீர் இருந்தது.
குளத்தில் இறங்க முடியாத படி, கல்லும் முள்ளும் சூழ்ந்து இருந்தது.
குளத்தில் இறங்க நான்கு திசையிலும் அழகாக படித்துறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.



தெற்கு திசையில் உள்ள ஊர்காரர்கள் தெற்கு படித்துறை மூலம் இறங்கி, வேண்டிய அளவு தண்ணீீரை எடுத்துக்கொண்டனர்.
அதே போல, 
ஒவ்வொரு திசையிலும் உள்ள ஊர் மக்கள், அந்தந்த படித்துறைகளை பயன்படுத்தினர்.

இதே போன்று,
மோக்ஷம் (குளத்தில் உள்ள தண்ணீர் போல) அடைய விரும்பும் ஜீவன்களுக்கு, பகவான் "கர்ம யோகம், ஞான யோகம், சந்யாஸ யோகம்.." என்று பல படித்துறைகள் அமைத்து கொடுத்தார்.

கர்ம யோகம் செய்ய சக்தி உள்ளவர்கள் கர்ம யோகம் செய்து அந்த படித்துறை வழியாக மோக்ஷம் என்ற நீரை பருகி வைகுண்டம் சென்றனர். பிறவி கடலை கடந்தனர்.

ஞான யோகம், சந்யாஸ யோகம் செய்ய சக்தி உள்ளவர்கள் அந்தந்த படித்துறை வழியாக மோக்ஷம் என்ற நீரை பருகி வைகுண்டம் சென்றனர். பிறவி கடலை கடந்தனர்.

அப்போது இரண்டு காலும் இல்லாத ஒரு நொண்டி, இந்த குளத்தில் தண்ணீர் இருப்பதை அறிந்து, எப்படியோ கஷ்டப்பட்டு குளம் அருகில் வந்து விட்டான்.

ஆனால்,
படித்துறையில் இறங்கி தண்ணீர் எடுக்க அவனால் முடியவில்லை.




'தண்ணீர் வேண்டும்" என்ற தாகம் இருந்தது.
மேலும், 
படித்துறை வழியாக சென்று தண்ணீர் எடுப்பவர்களையும் பார்த்தான்.

இவர்களிடம் காலில் விழுந்தாவது தண்ணீர் கேட்டு வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.

அப்போது அங்கு  குளத்தில் இறங்க சென்ற ஒரு முதியவரை வணங்கி, 'தனக்கும் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?' என்றான்.

இவன் பார்த்தவுடனேயே நிலைமையை உணர்நத அந்த முதியவர், 'நீயே முயற்சி செய்ய வேண்டியது தானே' என்று கிண்டல் செய்யாமல், இவனுக்காக இரக்கப்பட்டு, தானே இவனுக்காக தானே குளத்தில் இறங்கி, தண்ணீர் எடுத்து, இவன் அமர்ந்து இருக்கும் இடம் வந்து, தண்ணீர் கொடுத்து, தாகத்தை தீர்த்தார்.

இதே போன்று, 
மோக்ஷம் (குளத்தில் உள்ள தண்ணீர் போல) அடைய விரும்பும் ஜீவன், 'தன் முயற்சியினால் மோக்ஷம் அடைய முடியாது' என்று உணர்ந்து,
பகவான் சொன்ன கர்ம யோகம், ஞான யோகம், சந்யாஸ யோகம் என்ற பல படித்துறைகள் வழியாக செல்லும் திறன் படைத்த ஒருவரை தன் ஆன்மீக குருவாக ஏற்று, 
அவரிடம் முக்திக்கு வழி கேட்கும் போது, நம்முடையை நிலையை உணர்ந்து, கேலி செய்யாமல், கருணை கொண்டு, நமக்காக அவர் சிபாரிசு செய்து, மோக்ஷத்திற்கு வழி செய்து கொடுப்பார்.

மோக்ஷத்தில் ஆசை இருந்தும், சக்தி இல்லாதவர்கள் தான் உலகெங்கும் அதிகம் உள்ளோம்.

யோக மார்க்கத்தில் செல்ல துப்பு இருந்தால், இன்று மோக்ஷம் அடைந்து இருப்போமே..

யோக, கர்ம, ஞான என்று எந்த மார்க்கமும் செல்ல சக்தி இல்லாத நமக்கு, மோக்ஷம் அடைய ஆசை ஏற்படும் போது தான், குருவை தேட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். 

குரு பக்தியே இங்கு மிகவும் முக்கியம்
குருவிடம் பக்தி செய்ய வேண்டியது நமக்கு இங்கு தேவைப்படுகிறது. 



அந்த ஊரில் ஒரு வழிப்போக்கன் வந்தான்.
வெயிலின் கொடுமையால், தாகம் எடுத்தது.
தண்ணீர் எங்கு கிடைக்கும்? என்று தெரியாததால், அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான்.

படித்துறையில் இறங்கி தண்ணீர் எடுத்து செல்பவர்களில் ஒரு முதியவர்,
"தண்ணீர் இல்லாமல் யாரும் கஷ்டப்படக்கூடாது!!" என்று நினைத்து, "யாராவது தண்ணீர் கிடைக்குமா என்று அலைகிறார்களா?"
என்று தானே தண்ணீரை எடுத்துக்கொண்டு, ஊர் முழுக்க அலைந்தார்.

இப்படி தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கும் இந்த வழிப்போக்கனை பார்த்து விட்டார் முதியவர்.

இவன் கேட்காமலேயே, இவன் அருகில் வந்து, முக மலர்ச்சியுடன் தன் கையில் உள்ள தண்ணீரை கொடுத்து, தாகம் தீர்த்தார்.
'இவன் தனக்கு நன்றி சொல்வானா?' என்று கூட எதிர்பார்க்காமல், இவன் தாகத்தை தீர்த்த சந்தோஷத்திலேயே சென்று விட்டார்.

இதே போன்று,
மோக்ஷம் (குளத்தில் உள்ள தண்ணீர் போல) அடைய விரும்பும் சில ஜீவன், 
சாஸ்திர அறிவும் இல்லாமல், 
யோக மார்க்கம் என்றால் என்ன? 
கர்ம மார்க்கம் என்றால் என்ன? 
என்று எந்த வழியும் தெரியாமல்,
குருவும் கிடைக்காமல், 
குருவை தானே கண்டு பிடிக்கும் திறனும் இல்லாமல், 
குரு பக்தி என்றால் என்ன? 
என்று தெரிய கூட வாய்ப்பு இல்லாமல்,
மோக்ஷம் அடைய வேண்டும் என்ற தாகம் மட்டும் கொண்டு அலைபவனை, 
ஞானியான ஆன்மீக குரு ஒருவர், தானே கருணையின் காரணமாக, இவனை தேடி  வந்து, அவன் மோக்ஷத்திற்கும் வழி செய்து விடுவார்.

குரு பக்தி கூட தேவையில்லை என்று பெருங்கருணை கொண்டு குரு மோக்ஷ பாதையை சிலருக்கு காட்டி விடுகிறார். 
இதுவே "குருவின் கருணை". 

குரு பக்தி இல்லாதவர்களுக்கும், சில சமயம் ஞான பூரணமான சத்குரு கிடைத்து விடுவதற்கு காரணம் இது தான். 

அபாரமான கருணையின் காரணமாக எந்த தகுதியும் இல்லாதவர்களுக்கும் குரு கிடைத்து விடுவது, குருவின் கருணையால் மட்டுமே.

குருவின் கருணைக்கு பாத்திரமானவன் மஹா பாக்கியவான்.

யோகம் செய்வது கடினம்.
குரு பக்தி செய்வதும் கடினம்.
ஆனால்,
குருவின் கருணைக்கு பாத்திரமாக, 'மோக்ஷம் அடைய வேண்டும்' என்ற தாகமே முக்கியம்.
இந்த தாகம் இருந்தால் கூட போதும். குரு தானே கிடைப்பார். 

குருவின் கருணையால், மோக்ஷமும், வாழும் காலத்தில் சுகமும் உண்டாகும்.

தாகம் இல்லாதவனுக்கு, உண்மையான ஆன்மீக குரு கிடைக்க மாட்டார்.
ஆன்மீக குரு கிடைத்தவர்கள் யாவரும், தாகம் உள்ளவர்களே.

குருவின் கருணை, குரு பக்தியை விட உயர்ந்தது.

தெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? மனித முயற்சியால் பெற முடியாத 5 விஷயங்களை தெய்வத்திடம் கேள் என்று சொல்லி தருகிறார் ஆதி சங்கரர்... தெரிந்து கொள்வோமே...

"தெய்வத்திடம் நாம் 
என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? 
எதை கேட்க வேண்டும்?"
ஆதி சங்கரர் நமக்கு வழி காட்டுகிறார்.


பொதுவாக, நாம் "பக்தியோடு" எதை கேட்டாலும், பகவான் நமக்கு கேட்டதை தருவார்.

கேட்பதில் உயர்ந்த விஷயங்கள் உண்டு,
கேட்பதில் மிகவும் சாதாரண விஷயங்கள் உண்டு.

வரம் கொடுப்பவர், எதையும் கொடுக்க முடிந்தவர் என்று தெரிந்தும், அல்ப விஷயங்களை கேட்பவன், கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும்.

பிரார்த்தனை செய்தேன், நோய் சரியாகி விட்டது, 
பிரார்த்தனை செய்தேன், செல்வம் கிடைத்து விட்டது,
பிரார்த்தனை செய்தேன், வேலை கிடைத்து விட்டது, 
என்று சந்தோஷப்படுவது எல்லாம், கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும்.
அல்ப தெய்வங்கள் இதை மட்டுமே கொடுக்கும்.

"பரவாசுதேவன்" எதையும் தரவல்லவர்.

உன்னதமான சனாதன தர்மத்தை புரிந்து கொள்ளாமல், பொய் மதமான பௌத்த மதம் போன ஒரு சில க்ஷத்ரிய அரசர்களால்,
நம் பாரத நாடு 1000 வருடங்கள் இஸ்லாமியருக்கும், 200 வருடங்கள் கிறிஸ்தவருக்கும் அடிமைப்பட்டு,
க்ஷத்ரிய அரசர்களையும் இழந்து, 
செல்வங்களும் கொள்ளை அடிக்கப்பட்டன.

"வளர்ந்த நாடாக" இருந்த நம் தேசம், விடுதலையின் போது ஏழை நாடாக ஆனது. 1947ADல் ஏழைகளாக விடப்பட்டனர் நம் முன்னோர்கள். 

ஏழை நாடாக விடப்பட்ட பாரத நாடு, பெருமுயற்சி செய்து "வளரும் நாடாக" இன்று உள்ளது.

ஆதி சங்கரர் இதற்கு முன்னரே அவதரித்து, நம் பாரத மக்களுக்கு,
நம் கலாச்சாரத்தின் பெருமையை,
நம் தர்மத்தின் பெருமையை,
நம் வேதத்தின் உண்மையான மகிமையை,
நம் சனாதன தர்மத்தின் பெருமையை போதனை செய்து,
மக்களை தர்ம வழியில் உறுதியாக நிறுத்தி விட்டார்.

இந்த பலமே, க்ஷத்ரிய அரசர்களை நாம் இழந்தும், இன்று வரை நம்மை ஹிந்துவாக வைத்துள்ளது.

ஆதி சங்கரர் மக்கள் தர்மங்களை புரிந்து கொள்ள, வேதத்தை பாஷ்யம் செய்து கொடுத்தார்.


"பாஷ்யமும் அனைவருக்கும் புரிவதற்கும், படிப்பதற்கும் கடினமே" என்று உணர்ந்து, யாவரும் சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் கொடுத்தார்.
"ஸ்லோகங்கள்" மூலம் தர்மங்களை விளக்கினார்.
எளிதாக பாடக்கூடியதான "பஜ கோவிந்தம்" கொடுத்தார்.

முக்கியமாக, "நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?" என்று வேதம் சொல்கிறது என்று எளிதான ஸ்லோகங்கள் மூலம் நமக்கு தர்மத்தை புரியவைத்தார்.

தெய்வத்திடம் அநேகமானவர்கள் பொதுவாக கேட்பது,
"எனக்கு வேலை கிடைக்க வேண்டும்,
எனக்கு குழந்தைகள் இல்லை குழந்தை வேண்டும்,
ப்ரோமோஷன் வேண்டும்,
நோய் தீரனும்,
என் பையனுக்கு, பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும்"
என்று கேட்டு கொண்டிருப்பார்கள்.
ஆதி சங்கரர் 'இதையெல்லாம் போய் பகவானிடம் கேட்காதே' என்று சொல்லி, "நீ கேட்க வேண்டியது என்று சில உள்ளது, உன் முயற்சியால் கூட அடைய முடியாததை பகவானிடம் கேள்" என்று சொல்லி கொடுக்கிறார்.


இனி ஹிந்துவாக இருப்பவர்கள், ஆதி சங்கரர் சொன்ன வழியில் பிரார்த்தனை செய்யலாம்.

நம் புராதன வேதம், நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்? என்று சொல்லி இருக்கிறது என்ற ஆதி சங்கரர் விளக்குகிறார்.

1. கர்வம்
தெய்வத்திடம் நாம் முதலில் கேட்க  வேண்டியது,
"பகவானே !! முதலில் 'நான் செய்கிறேன்' என்ற என் கர்வத்தை (அஹங்காரம்) என்னிடம் இருந்து விலக்கி விடுங்கள்"
என்று கேட்கவேண்டும்.

நமக்கு முக்கியமாக தேவையானது - விநயம் (அடக்கம்).

இந்த விநயம் (அடக்கம்) நமக்கு வராமல் இருப்பதற்கு காரணம், நம்மிடம் "நான் செய்கிறேன்" என்று இருக்கும் கர்வமே காரணம்.

அனைத்தையும் படைத்த பகவானிடம், நாம் போய் "என் கஷ்டம், என் துக்கம், என் வேலை" என்று நான், என்னுடைய என்று சொல்வதே 'நம் கர்வத்தை' காட்டுவதாகும்.

நிறைய படிப்பதனால், உயர்ந்த பதவி கிடைப்பதால், உடனே கர்வம் நமக்கு வந்து விடும்.
"எத்தனை விஷயங்கள் நமக்கு தெரிந்தாலும், அது சமுத்திரத்தில் நாம் எடுத்த ஒரு துளி தான்" 
என்ற மனப்பக்குவம் எப்பொழுதும் நமக்கு இருக்க வேண்டும்.
இந்த மனப்பக்குவம், நமக்கு விநயத்தை தரும்.

மேலும் "எல்லாம் தெரிந்து கொண்டு விட்டோம்" என்ற கர்வத்தை உண்டாக்காமல், "மேலும் தெரிந்து கொள்ளலாம்" என்று நம்மை உணர வைக்கும்.

சாஸ்திரம் நம்மை பார்த்து "எல்லோரும் எல்லாமும் தெரிந்தவர்கள் அல்ல" என்று சொல்லி,
"உனக்கு சில விஷயங்கள் தெரியலாம், 
அடுத்தவருக்கு உனக்கு தெரியாத சில விஷயங்கள் தெரியலாம். 
கற்றுக்கொள்ள வேண்டியது உலக அளவு இருக்க, எப்படி உனக்கு கர்வம் வரும்?" என்று கேட்கிறது.

அனைத்து விஷயங்களிலும் "விநயமாக (அடக்கமாக) இரு"
என்று சொல்கிறது நமது சாஸ்திரம்.

"எல்லாம் தெரியும்" என்ற நம் கர்வம், தெய்வத்திடம் போய் கூட கர்வத்துடன் பேச வைக்கிறது.

"எல்லாம் தெரிந்தவர் அந்த பரவாசுதேவனே" என்று தெரிந்தும்,
நான், என் என்று அவரிடம் பேசுவது தகாது. 

"எல்லாம் தெரிந்தவருக்கு உன் துக்கம், நோய் தெரியாதா? சொல்லித்தான் அவருக்கு தெரியுமா?

அதனால்,
"நம் விநயத்துக்கு எதிரியாக இருக்கும், நம்மால் அழிக்க முடியாத கர்வத்தை நீக்கு"
என்று முதலில் ப்ரார்த்திக்க வேண்டும் என்று ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.


கர்வம் இல்லாதவனிடம் விநயம் (அடக்கம்) தானே வரும். 

விநயம் நம்மில் வளர வளர, "இன்னும் தெரிந்து கொள்வோம்" என்ற ஆசை உண்டாகும்.

விநயம் உள்ளவனுக்கே, கேட்கும் புத்தி வளரும்.

பல விஷயங்கள் கேட்க ஆசை உள்ளவனுக்கு, "உலக அறிவும், ஆன்மீக அறிவும் எளிதில் ப்ரகாசமடையும்".

பர்த்ரு ஹரி ஒரு ஸ்லோகத்தில்,
"ஒரு சமயத்தில் எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து இருந்தேன். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக பெரியோர்கள், மகான்கள் சொல்வதை கேட்க கேட்க, எனக்குள் பல விஷயங்கள் மனதில் பதிய பதிய, இப்பொழுது எனக்கு எதுவுமே தெரியாது என்ற புரிந்து, அடக்க நிலைக்கு வந்து விட்டேன். கர்வம் அழிந்து, இன்னும் தெரிந்து கொள்ள ஆசை கொண்டேன்" 
என்கிறார்.

ஆக,
"ஒருவன் எத்தனை படித்து இருந்தாலும், நமக்கு தெரியாத விஷயங்களும் சிலருக்கு தெரியும்" என்று அடக்கமாக இருக்க வேண்டும்.

"ஒருவன் எத்தனை செல்வந்தனாக இருந்தாலும், நம்மை விட செல்வந்தன் உண்டு" என்று அடக்கமாக இருக்க வேண்டும்.

எந்த காலத்திலும், "நான் உயர்ந்தவன் இல்லை", 
எந்த காலத்திலும் "அந்த பரமேஸ்வரன் ஒருவர் தான் உயர்ந்தவர்" 
என்ற ஞானம் (அறிவு) நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

கொஞ்சம் படித்தாலும்,
கொஞ்சம் பணம் சேர்ந்தாலும்,
கொஞ்சம் பேசினாலும்,
நம்மையும் மீறி, நமக்குள் இந்த கர்வம் வந்து விடும்.

இந்த "நான், எனது" என்கிற கர்வத்தை, "நம் முயற்சியால்" போக்கிக்கொள்ளவே முடியாது. 

தெய்வத்திடம் சொல்லி, தெய்வ அணுகிரஹத்தால் மட்டுமே, நம்மில் இருக்கும் இந்த கர்வத்தை அழிக்க கொள்ள முடியும்.

ஆதி சங்கரர், அதனால் தான், பகவானிடம் நீ முதலில் கேட்க வேண்டியது 'பகவானே, முதலில் என் மனசில் இருக்கும் கர்வத்தை நீக்கி விடு'
என்று பிரார்த்திப்பது தான் என்கிறார்.

2. ஆசை
இரண்டாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.

நாம் செய்யவேண்டிய இரண்டாவது பிரார்த்தனை,
'பகவானே! என்னுடைய மனதில் இன்றுவரை நிறைய ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த ஆசைகளை வராமல் செய்து விடு" 
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

நமக்கு மனதில் எத்தனைக்கு எத்தனை ஆசைகள் உருவாகி கொண்டே இருக்கிறதோ, அந்த ஆசையினால் துக்கங்கள் உண்டாகிறது. 

ஒரு ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, இன்னொரு ஆசை மனதில் உண்டாகிறது.

அந்த ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, மற்றொரு ஆசை மனதில் உண்டாகிறது.



முடிவே இல்லாத ஆசைகள், திருப்தி இல்லாதவனுக்கு வந்து கொண்டே இருக்கும்.
திருப்தி இல்லாததால் துக்கம் உண்டாகும்.

கர்வத்தை நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் வந்து கொண்டே இருக்கும் இந்த ஆசையையும் நம் திறமையால் அழிக்கவே முடியாது.

அதனால்தான், ஆதி சங்கரர் இரண்டாவதாக,
"என் மனதில் ஆசையே இனி வரக்கூடாது" என்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.

பகவான் அனுகிரஹத்தால் மட்டுமே,
நம்மால் அழிக்க முடியாத கர்வத்தையும், நம்மிடம் உருவாகும் ஆசையையும் அழிக்க முடியும்.

3. திருப்தி:
மூன்றாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.

நாம் செய்யவேண்டிய மூன்றாவது பிரார்த்தனை,
'பகவானே! எனக்கு என்று எது உள்ளதோ, அதை பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு"
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.
பகவத் கீதையில், இந்த திருப்தியை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர்
"யதுர்சா லாப சன்துஷ்ட: த்வந் த்வா தீதோ விமத் சர: !
சம: சித்தாவ சித்தௌ ச க்ருத் வா பி ந நிபத் யதே !!'"
(4 chapter, 22 sloka)
என்று சொல்லும் போது,
"நானாக போய் யாரிடமும் கை எந்த மாட்டேன். எனக்கு என்று எது கிடைக்கிறதோ அதை கொண்டு நான் சந்தோஷப்படுவேன் என்கிற திருப்தியில் எவன் இருக்கிறானோ!! அவனை சுகம்-துக்கம், வெற்றி-தோல்வி என்ற எந்த அனுபவமும் மனதளவில் பாதிக்காது" என்கிறார்.

"திருப்தியாக உள்ளவனின் நிலையை" இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.

'மனதில்' த்ருப்தி இல்லாத மனிதனுக்கு'மனதில்' சுகம் கிடைக்காது.

கர்வத்தையும், ஆசையையும் நம்மால் அழிக்க முடியாதது போல, 
"கிடைத்தது போதும்" என்கிற த்ருப்தியும், நம் முயற்சியால் வரவே வராது.

தெய்வ அனுக்கிரகத்தால் மட்டுமே, மனதில் த்ருப்தி ஏற்படும்.

அதனால்தான், ஆதி சங்கரர் மூன்றாவதாக,
"பகவானே! எனக்கு என்று எது உள்ளதோ, அதை பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு" 
என்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.

பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.

4. இரக்கம்:
நான்காவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.


நாம் செய்யவேண்டிய நான்காவது பிரார்த்தனை,
'பகவானே! எனக்கு யாரை பார்த்தாலும் மனதில்
இரக்க சிந்தனை உருவாகும் படி செய்யுங்கள்" 
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

நம்மால் கொண்டு வர முடியாத குணம் "இரக்கம்".
இரக்க குணம் உள்ளவனுக்கு, 
மற்றவர்கள் செய்யும் தவறுகள் தெரிந்தாலும், "அவன் தெரியாமல் செய்கிறான்" என்று அவன் மீதும் இரக்கம் வரும்.

இரக்க குணம் உள்ளவனுக்கு, 
"உயிரை கொன்று, மாமிசம் சாப்பிட கூடாது" என்ற எண்ணம் தோன்றும். 

"இரக்க குணம் உள்ளவனுக்கு", எதை பார்த்தாலும், யாரிடத்திலும் 'கோபமே' வராது.

'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல, 
மனதில் 'த்ருப்தி' கொண்டு வரவே முடியாதது போல, 
எதனிடத்திலும் 'இரக்கம்' காட்டும் குணம், நம் முயற்சியால் வரவே வராது.

தெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, இந்த இரக்க குணம் மனதில் ஏற்படும்.

அதனால்தான், ஆதி சங்கரர் நான்காவதாக,
"பகவானே! எனக்கு யாரிடத்திலும் இரக்கம் வருமாறு உள்ள குணத்தை கொடு" 
என்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.

பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, 
நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி', 'இரக்கம்' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.

5. மோக்ஷம்
கடைசியாக ஐந்தாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.

நாம் செய்யவேண்டிய ஐந்தாவது பிரார்த்தனை,
'பகவானே! பல யுகங்களாக நானும் இந்த ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கி எழுந்து கொண்டு இருக்கிறேன். 
எவ்வளவு தடவை இப்படியே இருந்து கொண்டிருப்பது? 
என்னை இந்த ஸம்ஸார ஸாகரத்தில் இருந்து தாண்ட வைத்து விடு. மோக்ஷத்தை கொடு" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

இங்கு ஸம்ஸார ஸாகரம் என்று சொல்வது, ஜனனம்-மரணம் என்ற சுழற்சியை.

இந்த சுழற்சியையே, ஆதி சங்கரர், பஜ கோவிந்தம் பாடும் போது "புனரபி ஜனனம், புனரபி மரணம்,
புனரபி ஜனனீ ஜடரே சயனம் I
இஹ ஸம்ஸாரே பகுதுஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே !!"
என்று பாடுகிறார்.
இதற்கு அர்த்தம்,
"பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து உண்டாகி கொண்டே இருக்கிறது. இந்த பிறப்பிலும் மீண்டும் தாயின் கருவறையில் பிறந்தாயிற்று. 
கடக்க முடியாத இந்த சக்கரத்தில் இருந்து, விடுவித்து, அக்கரை காண கடாக்ஷித்து அருளமாட்டாயா கோவிந்தா?" என்கிறார்.
நாம் பிறந்தாச்சு. கொஞ்சம் வருஷம் வாழ்ந்து தான் ஆக வேண்டும். பின்பு இறந்து தான் ஆக வேண்டும்.
செய்த பாவ, புண்ணிய பலன் படி, திரும்ப ஏதாவது ஒரு தாயார் வயிற்றில் பிறக்க தான் வேண்டும். 
ஆனால் இப்படியே எவ்வளவு நாள் ஸம்ஸார சாகரத்தில் சூழல்வது?

'கர்வத்தை'யும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் 'த்ருப்தி'யும், 'இரக்கத்தை'யும் நம்மால் கொண்டு வரவே முடியாதது போல,
ஸம்ஸார சக்கரத்தில் இருந்து, நம் முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது.
தெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, மோக்ஷம் நமக்கு ஏற்படும்.

"உன் முயற்சியால், பெற முடியாத இந்த 5 விஷயங்களையும், 
பகவானிடம் கேள்" 
என்று ஆதி சங்கரர் நமக்கு சொல்லிதருகிறார்.

"யாராலும் தர முடியாத, பகவான் மட்டுமே தரக்கூடிய, இந்த 5 விஷயங்களை உனக்கு கேட்டுக்கொள்ளாமல், 
அற்பமான பணத்தையும், 
உனக்கு வந்த நோயை பற்றியும் கேட்டு வீண் செய்யாதே" 
என்று சொல்லி தருகிறார்.
நீ இந்த 5 விஷயங்களையும் பகவானிடம் தினமும் பிரார்த்தித்து கொண்டே இரு. 

பகவான் நம்மிடம் கருணை கொண்டு, அணுகிரஹித்து விட்டால், இதை விட லாபம் ஒரு மனிதனுக்கு ஒன்று உண்டா?
இதை விட்டு, 
மிகவும் அற்பமான எதை எதையோ கேட்டு!! உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதே !

இப்படி, "தெய்வத்திடம் எதை கேட்க வேண்டும்?" 
என்று எளிதாக நமக்கு காரணத்தோடு விளக்கி சொல்லித்தந்த ஆதி சங்கரர், இது போன்று பல தர்ம தத்துவங்களை பல ஸ்லோகங்களில் நமக்காக சொல்லி இருக்கிறார்.
ஹிந்துவாக உள்ள நீங்கள், 
ஆதி சங்கரரின் ஸ்லோகங்களை, தினமும் ஒவ்வொன்றாக படித்து, 'அர்த்தங்களை புரிந்து கொள்ள' முயற்சி செய்யுங்கள். 

அடிக்கடி அர்த்ததோடு ஸ்லோகங்களை மனதில் கொண்டு வந்தாலேயே, நமக்கு எப்படி அழகாக நிம்மதியாக வாழ்க்கையை நடத்த வேண்டும்? என்று புரிந்து விடும்.

"பிரச்சனைகள் பதட்டம், பயம்" உள்ள நம் வாழ்க்கையில், உள்ள தவறுகளையும் திருத்தி கொள்ள முடியும்.

"நாம் ஹிந்துவாக இன்றும் வாழ காரணமாயிருந்த"  ஆதி சங்கருக்கு நாம் செய்யும் நன்றி, நம் தவறுகளை திருத்தி கொண்டு, ஆதி சங்கரரின் பாடல்களை அர்த்தத்துடன் மனதில் அனுபவத்து கொண்டு இருப்பதே

"ஹர ஹர சங்கரா, ஜெய ஜெய சங்கரா"

சிருங்கேரி சங்கராச்சாரியார் அருளுரை

பிரச்சனை வந்தாலும், உன் கடமையை செய்து கொண்டே இரு

ஆதி சங்கரர் சொல்கிறார், 'பிரச்சனைகள் இல்லாதவர்களே உலகில் கிடையாது. அதனால், பிரச்சனை வந்து விட்டதே என்று உன் காரியத்தை விட்டு விட கூடாது. எந்த பிரச்சனை வந்தாலும், நீ உன் கடமையை செய்து கொண்டே இருக்க வேண்டும். கடமையை செய்து கொண்டே, நீ பகவானையும் பிரார்த்தனை செய்' என்கிறார்.



பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை பார்த்து, "தஸ்மாத் சர்வேஷு காலேஷு மாம் அனுஸ்மர யுத்ய ச" (chapter 8, 7th Sloka) என்று சொல்லும் போது இதையே சொல்கிறார். பிரச்சனை, மனகுழப்பம் இருந்தாலும், நீ உன் கடமையை செய் என்று 'யுத்ய ச' என்று சொல்லி, பகவானான என்னையும் நினைத்துக்கொள் என்று 'மாம் அனுஸ்மர' என்று சேர்த்து சொல்கிறார்.


கவலைகள், பிரச்சனை, மனகுழப்பம் உள்ள யாவருக்கும் தேவையான உபதேசம் இது.

"தளர்ந்து விடாமல், கடமையையும் செய்து, அதே வேளை பகவானையும் பிரார்த்தனை செய்" என்கிறார் ஆதி சங்கரர்.

"பிரச்சனை காலத்தில், கடமை செய்யாமல், சும்மா இருந்து விடாதே.
பிரச்சனை காலத்தில், நான் என் கடமையை செய்கிறேன் என்று மட்டும் இருந்து, பகவானை பிரார்த்தனை செய்யாமல் இருந்தும் விடாதே. உன் செயலுக்கு பலன் கொடுப்பவர் அவர் என்று மறந்து விடாதே.
பிரச்சனை காலத்தில், கடமை செய்யாமல், பகவான் காப்பாற்றுவார் என்றும் சும்மா இருந்தும் விடாதே.

நான் என்னுடைய கடமையை செய்கிறேன், அதனோடு பகவானே உன் அனுகிரகத்தையும் எதிர்பார்க்கிறேன் என்று இருக்க வேண்டும்" என்று நமக்கு சொல்லித் தருகிறார் ஆதி சங்கரர்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "மாம் அனுஸ்மர யுத்ய ச" என்று தெளிவாக சொல்கிறார், "பிரச்சனை காலத்தில், துவண்டு விடாமல், என்னை பிரார்த்தித்து கொண்டே, கடமையை செய்" என்கிறார்.

Saturday 30 September 2017

வாழ்க்கையில் நன்மைகள் அமைய என்ன வழி? எளிதான குறிப்புகள்

வாழ்க்கையில் நன்மைகள் அமைய என்ன வழி?



அக்ருத்வா பரஸந்தாபம்
(மற்றவர்களுக்கு உன்னால் துன்பம் ஏற்படாமல் பார்த்துக்கொள்)

அகத்வா கலனம்ரதாம்
(தீயவன் - குடி, மது, மாது, திருட்டு, பொய்,ஒழுக்கம் இல்லாதவன் என்று தெரிந்தால், விலகியே இரு)

அனுத்ஸ்ருஜ்ய ஸதாம் மார்கம்
(மகான்கள் வழியில் நீயும் செல்ல ஆசைப்படு. 
இந்த பாரத தேசத்தில் மட்டுமே மகான்கள் அதிகம் அவதரித்துள்ளனர், அவதரித்து கொண்டே இருக்கின்றனர். 
ரிஷிகள், முனிகள், வால்மீகி, வியாசர், ராமானுஜர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், மீரா, துளசி தாஸ், சூரதாஸ், சொல்லி கொண்டே போகலாம். 
நம் பாட்டனார்கள் கூட சாதுக்களாகவும் மகான்களாகவும் இருந்துள்ளனர்)


யத் ஸ்வல்பம் அபி தத்பஹு
(இந்த மூன்று அறிவுரைகளை முடிந்தவரை சிறிதேனும் நம் வாழ்க்கையில் கடைபிடித்தாலும் அது நன்மை தரும்)




அக்ருத்வா பரஸந்தாபம்
அகத்வா கலனம்ரதாம்
அனுத்ஸ்ருஜ்ய ஸதாம் மார்கம்
யத் ஸ்வல்பம் அபி தத்பஹு

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka

கடவுள் எங்கும் உள்ளார் என்று சொல்லும் நம் சாஸ்திரம், "கோவிலுக்கும் செல்" என்று ஏன் செல்ல வேண்டும்?


கடவுள் எங்கும் உள்ளார் என்று சொல்லும் நம் சாஸ்திரம், "கோவிலுக்கும் செல்" என்று சொல்வதற்கு என்ன காரணம் ?


பொதுவாக,
நாமாக தெய்வத்தை வழிபட்டு, "தெய்வ சாந்நித்யம் பெறுவதை" காட்டிலும்,
"தெய்வம் தன் சாந்நித்யத்தை எப்பொழுதும்  வெளிப்படுத்தும் இடங்களுக்கு சென்று வழிபடுவது" நமக்கு சுலபமாக பலனை தரும்.

தெய்வ சாந்நித்யம் நிறைந்த இடங்களுக்கு (கோவில், தீர்த்தங்கள்) சென்று,
நாம் ஒரு அல்ப பலனுக்காக ஆராதனை செய்தாலும் சரி, அல்லது
பகவானையே நாம் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன்  ஆராதனை செய்தாலும் சரி,
செய்த பிரார்த்தனை, பலன் தரும்.

நாமாக முயற்சி செய்யும் போது, நம் தபசு, பக்தி, ஒழுக்கம் பொருத்து, தெய்வ சாநித்யம் இருக்கும்.

ஸ்ரீ ரங்கம், திருமலை போன்ற க்ஷேத்ரங்கள் எப்பொழுதும் தெய்வ சாநித்யத்தோடே இருப்பதால், நாம் அங்கு சென்று பிரார்த்தனை செய்யும் போது,
நாம் தகுதி உடையவர்களா?, பக்தி உடையவர்களா? என்று கூட பார்க்காமல், தெய்வ அனுக்கிரகம் கிடைக்கிறது.

பரவாசுதேவன் இப்போது உள்ள திருமலை இருந்த இடத்தை தேர்ந்தெடுத்து, அர்ச்ச அவதாரமாக பூமியில் வர இருப்பதாக திருவுள்ளம் கொண்டு நாரதரிடம் சொல்ல, ஆதிஷேஷன் 7 மலைகளாக ஆகி, தனக்காக காத்து இருக்குமாறு கூறினார்.
பெருமாள் பிற் காலத்தில் தன்னை அர்ச்ச அவதாரமாக வெளிக்காட்டுவதற்கு முன்னரேயே, ஆதிசேஷன் அவர் அமர்வதற்காக, தானே ஏழு மலையாக ஆனார்.

பெருமாள் இல்லாத அந்த சமயத்தில் கூட திருமலை சாநித்யத்தோடு இருந்தது. ரிஷிகள் கூட்டம் அலை மோதியது.

அதனால் தான் ஆஞ்சநேயர் போன்ற பக்தர்கள், ரிஷிகள், வெங்கடேச பெருமாள் தன்னை அர்ச்ச அவதாரமாக வெளிக்காட்டும் முன்னரேயே திருமலையில் வாசம் செய்தனர், அவதரித்தனர்.

பிருந்தாவனம் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம் செய்வதற்கு முன்பிலேயே, ஸ்ரீ கிருஷ்ண சாநித்யத்தோடு தான் இருந்தது.

அதனால் தான், துருவன் பெருமாளை பார்க்க வேண்டும், என்று புறப்பட்ட போது, நாரதர், துருவனை, "தெய்வ சாந்நித்யம் உள்ள பிருந்தாவனம் சென்று தியானம் செய், நாராயணரின் தரிசனம் சுலபமாக  கிடைக்கும்" என்று அனுப்பி வைத்தார்.

அதனால் தான், நம் சாஸ்திரம்,
"கடவுள் எங்கும் உள்ளார் என்று சொன்ன போதிலும், எங்கு தெய்வ சாந்நித்யம் அதிகம் உள்ளதோ, அங்கு நாம் ஆசையோடு போய் பார்க்க வேண்டும், பிரார்த்தனைகளும் பலிக்கும்"
என்று சொல்கிறது.

இப்படி சாந்நித்யம் உள்ள இடங்கள் தான், நாம் பார்க்கும்  திவ்ய க்ஷேத்ரங்கள், புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம்.

எந்த காலத்திலேயோ, எந்த காரணத்துக்காகவோ, ஒவ்வொரு க்ஷேத்ரத்திலும் பகவான் சாந்நித்யத்தோடு இருக்கிறார்.

சில கோவில்கள், சில தீர்த்தங்கள் சில ஊர்கள் ரிஷிகளே அமைத்தது. அவர்கள் நமக்காக பகவானிடம் வேண்டி எப்பொழுதும் சாந்நித்யம் குறையாது இருக்குமாறு செய்து விட்டு சென்றனர்.

ப்ருகு, மார்க்கண்டேயர் போன்ற ரிஷிகள், தவம் செய்தார்கள். பகவானை தரிசனம் செய்தார்கள் என்று சில கோவில்களின் சரித்திரத்தை பார்க்கிறோம்.

விழுப்புரம் அருகே உள்ள திருக்கோவிலூர் போன்ற ஊர்களில், மார்க்கண்டேய ரிஷிக்கு, வாமன அவதாரத்தில் உலகை அளந்து காட்டிய பெருமாள், அதே தரிசனத்தை காட்ட, அங்கே ரிஷியினால் கோவில் அமைக்கப்பட்டு, பகவானின் சாந்நித்யம் எப்பொழுதும் இருக்குமாறு வரமும் வாங்கி, அமைக்கப்பட்டது தான் நாம் காணும் "உலகளந்த பெருமாள்" கோவில்.

சில கோவில்கள், சில தீர்த்தங்கள் சில ஊர்கள் தேவர்களே அமைத்தது. 
அவர்கள் பகவானிடம் எப்பொழுதும் சாந்நித்யம் குறையாது அங்கே இருக்குமாறு செய்து விட்டு சென்றனர்.
ஸ்ரீ ரங்கம் போன்ற கோவிலில் உள்ள ரங்கநாதர், ப்ரம்மா  வழிபடுவதற்காக க்ஷீராப்தியில் (பாற்கடலில்) ஸ்வயமே உருவானார்.
பின்னர், ப்ரம்மா, இக்ஷ்வாகு மன்னனுக்கு ஆராதனை செய்ய கொடுத்தார். பிறகு சூரிய வம்ச அரசர்கள் ஆராதித்து, ஸ்ரீ ராமரே ஆராதனை செய்து, பின்னர் விபீஷணன் இலங்கை கொண்டு செல்லும் பொழுது,
ஸ்ரீ ரங்கத்தில் பெருமாள் தங்கி விட்டார்.




ஸ்ரீ ரங்கநாதர், ஸ்வயம் ப்ரம்மாவே வழிபட்ட மூர்த்தி. 
பரவாசுதேவன் ஸ்ரீ ராமராக அவதரித்து, அவரே வழிபட்ட மூர்த்தி.
ஸ்ரீ ரங்கம் சென்று நாம்  பிரார்த்திக்கும் போது, சுலபமாக நம் பிரார்த்தனை பலிக்கிறது.

சில கோவில்கள், சில தீர்த்தங்கள் சில ஊர்கள் பக்தர்களால் அமைக்கப்பட்டு, அவர்கள் பகவானிடம் எப்பொழுதும் சாந்நித்யம் குறையாது அங்கே இருக்குமாறு செய்து விட்டு சென்றனர்.

ஓடிசாவில் இருக்கும் பூரி ஜெகன்னாத் போன்ற கோவில்கள், ஒரு பக்தனால் அமைக்கப்பட்டது.
பக்தனுக்காக பெருமாள் இங்கு எப்பொழுதும் சாந்நித்யம் குறையாது இருக்கிறார்.

இப்படி பல விதமான காரணங்களால், பக்தனுக்காகவும், தேவர்களுக்காகவும், ரிஷிகளுக்காகவும், சாதாரண ஜனங்கள் கட்டியதாகவும் கோவில்களில் இந்த பாரத மண்ணில் காணப் படுகின்றன.

இதை எல்லாம் விட, தன் விருப்பத்தால், தன்னை வெளிப்படுத்திய சில அர்ச்ச அவதார மூர்த்திகளும் உண்டு.
பகவானே தன்னை அர்ச்ச அவதாரமாக காட்டி கோவில் அமைந்ததையும் நாம் பார்க்கும் பாக்கியம் ஹிந்துக்களுக்கே உண்டு.

ஒரு சிற்பியினால் செய்யப்படாத படி, தானே அர்ச்ச அவதாரமாக வந்த திருமேனி தான், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வெங்கடேச பெருமாள்.

திருமலையில், தொண்டைமான் சக்கரவர்த்திக்கு தன்னை வெளிக்காட்டி, பின்னர் இப்பொழுது நாம் காணும் கோவிலை அமைத்துக்கொண்டார்.
அதேபோல,
ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள வராஹ ஸ்வாமியும் ஸ்வயமாகவே தோன்றினார்.
வானமாமலை எம்பெருமாளும் ஸ்வயமாகவே தோன்றியவர்.
பத்ரிநாத்தில் நாராயணரும் ஸ்வயமாகவே தோன்றியவர்.
சாளக்கிராம மூர்த்தியாகவும் தானே தோன்றினார்.

இப்படி ஸ்வயமாகவே தானே அர்ச்ச அவதாரம், பாரதம் முழுவதும் எடுத்து நமக்காக, நம்மை கரையேற்ற நிற்கிறார் நம் பெருமாள்.

இப்பொழுது நாம் பார்க்கும் படியாக இருக்கும் நம் பெருமாள், தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பேயே, ரிஷிகளுக்கு தெரிந்து, பதரிநாத், ஸ்ரீ ரங்கம், திருமலை, போன்ற திவ்ய தேசங்களில் வந்து, த்யானம், யோகம் செய்து கொண்டிருந்தனர்.

ஆகையால், பொதுவாக, பகவான் எங்கும் இருந்தாலும், தானே அர்ச்ச அவதாரம் எடுத்து நிற்கும் திருமலை போன்ற க்ஷேத்ரங்களுக்கு நாம் ஆசையோடு செல்ல வேண்டும்.
தானே உருவான திருமேனியை தரிசிக்கும் பாக்கியத்தை நாம் பெற வேண்டும்.
அனுக்கிரகம் செய்வதற்காகவே வந்த பகவான் என்று அறிய வேண்டும்.
ஆகையால் தான்,
இன்றும் திருமலையில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

அதே பெருமாள் போன்று,  மஹாபாலிபுரத்தில் சிற்பி செதுக்கி வைத்துள்ளான். பார்ப்பதற்கு ஆள் இல்லை.
ஹிந்துக்கள் கல்லை கும்பிடவில்லை என்று இதை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

தேவர்களும், ரிஷிகளே உருவாக்கிய விக்ரஹங்கள், கோவில்கள் அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுகிறது.
அங்கு இருக்கும் தெய்வ சாந்நித்யம், அந்த ரிஷியின் வரத்திற்கு ஏற்ப அனுக்கிரகம் தருகிறது.
அதனால் தான்,
இந்த கோவிலுக்கு போனால், ஜாதக தோஷம் விலகும், கல்யாணம் நடக்கும், குழந்தை பிறக்கும் என்று சொல்லி கேள்விப்படுகிறோம்.

இந்த கோவிலுக்கு நாம் பக்தியுடன் போனால், ரிஷிகள் நமக்காக வாங்கிய வரத்திற்காக, தெய்வங்கள் அனுக்கிரகம் செய்யும்.

திருப்பதி, ஸ்ரீ ரங்கம் போன்ற கோவில்களில், ஸ்வயமே பெருமாள் அர்ச்ச அவதாரமாக வந்து காட்சி கொடுப்பதால்,
வருபவன் துஷ்டனாக இருந்தாலும், அவனையும் கருணையுடன் பார்த்து, இவன் கேட்கும் வரம் அனைத்தையும் நல்லதா, கெட்டதா என்று பார்த்து, நல்லதை மட்டும் கிடைக்குமாறு செய்து கருணை செய்வார்.

பத்ராசல ராமதாசர், பூரி ஜகநாத் கட்டிய அரசன் போன்ற பக்தர்கள் கட்டிய கோவில்களிலும், பக்தனின் ஆசைக்காக, நிரந்தரமாக பகவான் சாநித்யத்தோடு அருள் கொடுக்கிறார்.

இப்படி பக்தர்களால், ரிஷிகளால், தேவர்களால், ஸ்வயம் தானே விரும்பியும் உருவான கோவிலகளுக்கு நாம் சென்று பிரார்த்தனை செய்யும் போது, சுலபமாக நமது பிரார்த்தனைகள் நிறைவேறுகிறது.

தானே முயற்சி செய்து, தெய்வத்தை நம் பக்கம் திருப்பி, அவர் அனுக்கிரகம் பெறுவதற்கு நமக்கு தவமும் போதாது, ஒழுக்கமும் கிடையாது.
ஞானமும் கிடையாது, யோகமும் கிடையாது.


தகுதி இல்லாத நம்மை போன்றவர்களுக்காக, உண்மையான பக்தர்களும், ரிஷிகளும், தேவர்களும் நமக்காக பிரார்த்தனை செய்து, பெருமாளை சாநித்யத்துடன் கோவிலில் இருக்க செய்து விட்டனர்.

இதுவும் போதாதோ என்று, தானே இறங்கி, அர்ச்ச அவதாரம் தரித்து, திருமலையிலும், ஸ்ரீ ரங்கத்தில் வந்து கோவில் அமைத்து கொண்டார் பெருமாள்.

கருணை செய்யும் லட்சியத்துடனேயே தன் சாநித்யத்தை வெளிப்படுத்தும்  கோவிலுக்கு சென்று, நம் பிரார்த்தனைகள் செய்வோம். நலம் பெறுவோம்.

குருநாதர் துணை

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 





sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka