Followers

Search Here...

Saturday 17 February 2018

ப்ரம்மாவின் வயது என்ன ?

ப்ரம்மாவின் வயது என்ன ?

பரம் என்ற பரமாத்மா (நாராயணன்) ப்ரம்மாவை படைத்தார்.
ப்ரம்மாவின் இன்றைய வயது என்ன ?
50 வயதை கடந்து, 51வது வருடத்தின் முதல் நாள் கடந்து கொண்டு இருக்கிறது.

ப்ரம்மாவின் ஒரு பகலில், 14 மனு அரசர்கள் ஆள்கின்றனர்.
ஒவ்வொரு மனுவின் காலம் முடிந்த பின், 17 லட்சத்தி 28 ஆயிரம் வருடங்கள் உலகம் கடலில் மூழ்கும்.

ஒவ்வொரு மனு அரசனும் 71 சதுர் யூகங்களை ஆள்கின்றனர்.

ஒரு சதுர் யுகம் என்பது 43 லட்சத்தி 20 ஆயிரம் வருடங்கள்.

ஆக, ஒரு மனு அரசர் 30 கோடியே 67 லட்சத்தி 20 ஆயிரம் வருடங்கள் ஆள்கிறார்.

ப்ரம்மாவின் இந்த ஒரு நாளில், 14 மனு அரசர்களில், இதுவரை 6 மனு அரசர்கள் காலம் முடிந்துள்ளது.

இப்பொழுது 7வது மனு அரசர் ஆண்டு கொண்டு இருக்கிறார்.
இவர் பெயர் : வைவஸ்வதன்.

இவருடைய 71 சதுர் யூகங்களில் இதுவரை 27 சதுர் யூகங்கள் முடிந்து விட்டது.
இப்பொழுது இவர் 28வது சதுர் யூகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறார். இந்த சதுர் யூகத்தில் 3 யுகங்கள் (சத்ய, த்ரேதா, த்வாபர) முடிந்து விட்டது. 4வது யுகம் "கலி யுகம்" நடந்து கொண்டு இருக்கிறது.

கலி யுகத்தின் மொத்த வருடம் 4 லட்சத்தி 32 ஆயிரம் வருடங்கள்.
ஆங்கிலேய calendar படி கலி யுகம் 3102 BCல் ஆரம்பிக்கிறது.

சுமார் 3300 BCல் ஸ்ரீ கிருஷ்ணராக, ப்ரம்மாவை படைத்த அந்த பரமாத்மாவே அவதரித்து மகாபாரத போர் செய்தார்.
3300 BC முதல் 1700 BC வரை indus valley civilization என்று கண்டுபிடித்து உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

2017ல், கலியுகம் 5118 வருடங்கள் கடந்து உள்ளது. இன்னும் 432000 - 5118 வருடங்கள் உள்ளது. நியாயமாக, கலி யுகம் இப்பொழுது தான்  ஆரம்பித்துள்ளது. 😊

நம் ஒரு வருடம், சொர்க்க லோகத்தில் இருக்கும் தேவர்களுக்கு, ஒரு நாள்.

தேவர்கள் அவர்கள் காலப்படி 100 வருடம் இருந்து, அங்கு அவர்கள் செய்த புண்ணியத்துக்கு ஏற்ப, சொர்க்க லோகத்திலிருந்து மேல் இருக்கும் மகர் லோகத்துக்கோ, ஜன லோகத்துக்கோ, தப லோகத்துக்கோ செல்வர்.
இந்த மகர, ஜன, தப லோகத்தில் உள்ளவர்களிடம் ஏதாவது பாவம் செய்திருந்தால், கீழ் லோகமான பூமியில் பிறப்பர்.
தேவர்களை பொறுத்தவரை மனிதர்கள் கீழ் தரமானவர்கள் 😊.

தப லோகத்துக்கும் மேல், சத்ய லோகம் உள்ளது. அங்கு தான் ப்ரம்மா இருக்கிறார்.

14 மனு அரசர்கள் ஆட்சி செய்து முடிக்கும் பொழுது, ப்ரம்மாவுக்கு ஒரு பகல் முடியும்.

ப்ரம்மாவின் இரவு, பகலை போன்று நீளமானது.
இந்த சமயத்தில், ப்ரம்மா தன் இருப்பிடமான சத்ய லோகத்தையும், மக, ஜன, தப லோகத்தை தவிர்த்து, பூலோகம், புவர் லோகம், சொர்க்க லோகம் மற்றும் கீழ் 7 லோகங்கள் அனைத்தையும் அழித்து விடுகிறார்.
இத்தனை காலங்கள் பிறந்தும், இறந்தும் இன்னும் நாராயணனை அடையாமல் உலக வாழ்க்கையே மீண்டும் மீண்டும் செய்து வாழ்ந்த அனைத்து ஆத்மாக்களும் ப்ரம்மாவின் இரவு காலம் முழுவதும், தான் இருக்கிறோம் என்று தெரியாமல் தூங்குவது போல அந்த பரமாத்மாவில் ஒடுங்கும்.

மீண்டும் ப்ரம்மாவின் பகல் ஆரம்பித்தவுடன், பிரம்மா மீண்டும் பூலோகம், புவர் லோகம், சொர்க்க லோகம் மற்றும் கீழ் 7 லோகங்கள் அனைத்தையும் படைத்து, முக்தி அடையாமல், அறியாமல் தூங்கும் நிலையில் உள்ள ஜீவாத்மாக்களை உலகில் மரமாகவோ, பறவையாகவோ, விலங்காகவோ, மனிதனாகவோ அவரவர் செய்த பாவ, புண்ணியத்தை பொறுத்து மீண்டும் பிறக்க வைக்கிறார்.

நிம்மதி கெடுவதற்கு காரணம்

நிம்மதி

மனதில் நிம்மதி உடையவன், எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கிறான்.

நிம்மதி எப்படி கெடு்கிறது?
பொதுவாக, இந்த உலகத்தில் நாம் பலருடன் பழகுவதினாலேயே நமக்கு நிம்மதி கெடு்கிறது.

நிம்மதி கெடுவதற்கு காரணம், நாம் பழகும் மனிதனோ, மிருகமோ ஏதுவாக இருந்தாலும் அதில் உள்ள குறைகளே காரணம்.
அந்த குறைகளை, நாம் அறியும் போது, நமக்கு நிம்மதி கெடுகிறது. மற்றவர் குறையால், இழப்பது நம் நிம்மதியை தான்.

சிறிது நாள் பழகினாலேயே, நமக்கு மற்றவர்களின் குறைகள் தெரிய ஆரம்பிக்கிறது. இதுவே கடைசியில் நம் நிம்மதியை கெடுக்கிறது.

கணவன், மனைவி இடையே கூட இந்த குறைகளே, இருவருக்கும் இருந்த நிம்மதியை கெடுக்கிறது.

மாமியார் தன் மருமகளின் குறைகளை கண்டுபிடித்தே, இருந்த நிம்மதியை தானும் கெடுத்துக் கொள்கிறாள், வீட்டிலும் நிம்மதியை கெடுக்கிறாள்.

இதேபோல மருமகள், மாமியார் குறைகளை கண்டு பிடித்து, இருந்த நிம்மதியை கெடுத்துக் கொள்கிறாள், வீட்டிலும் நிம்மதியை கெடுக்கிறாள்.

வீட்டிலே உள்ளவர்களின் குறையே, நம் நிம்மதியை கெடுக்கும் என்றால், வெளி மனிதர்களை பற்றி சொல்லவே வேண்டாம்.
இந்த உலகில் பல மனிதர்கள். அவரவர்களுக்கு பல ஸ்வபாவம், பல நம்பிக்கை உள்ளது.
இப்படி பலருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையில், இவர்களிடம் உள்ள குறைகள், நம் நிம்மதியை அழித்தே விடும் என்பதில் சந்தேகமேயில்லை.

நிம்மதியை பாதுகாத்துக்கொள்ள 2 வழிகள் :
1. தனிமையில் எப்போதும் இருக்க முயற்சி செய்தால், பிறர் குறை தெரிய வாய்ப்பு இல்லை. இதுவே நிம்மதியை பாதுகாத்துக்கொள்ள ஒரு வழி. இதில் ஒரு குறைபாடு உள்ளது. தனிமையில் இருக்கும் போதும், மனம் அடங்காமல் இருப்பதால், மனம் தன்னிடம் உள்ள குறையை எடுத்துக் காட்டும். மற்றவர் மீது பார்த்த குறையை விட, தன்னிடம் பார்க்கும் குறைகள் இன்னும் நிம்மதியை கெடுக்கும் வாய்ப்பு உள்ளது.

2. மகான்கள் மற்றும் குருவின் வழி : குருவுக்கு பல சிஷ்யர்கள் உண்டு. குரு உலகப் பற்று இல்லாமல் இருந்தாலும், நம்மை போன்றவர்களை வாழ்வில் உயர்த்த நம் வரை வந்து சகஜமாக பேசுகின்றனர். நாம் பேசும் கீழ் தரமான பேச்சுக்கள், செய்யும் செயல்கள் அனைத்துமே அவருக்கு குறைகளாக இருந்தும், 1000 குறைகள் இருந்தாலும், அதில் எங்காவது ஒளிந்திருக்கும் 1 நல்ல குணத்தை கண்டுபிடித்து, அதை மட்டுமே பெரிதுப்படுத்தி குறை உள்ளவனிடமும், புன்முறுவலோடு பேசுகிறார். இந்த முறையினால், மகான்கள் லட்சம் பேரிடம் பழகும் போதும், தன் நிம்மதியை கெடுத்துக் கொள்வதில்லை.

கலி புருஷன் "இந்த கலி யுகத்தில், நான் அதர்மத்தை நிலை நிறுத்தி, கலியின் கொடுமையை மக்களுக்கு காட்டுவேன்." என்று சொல்லி, மேலும், "எங்கே "ஹரி"யின் நாமம் கேட்கிறதோ அங்கு இந்த கலியின் கொடுமை இருக்காது, தர்மம் நிலைக்கும், மக்கள் அவதிப்பட மாட்டார்கள்" என்று சொன்னான்.
இதனை கேட்ட அர்ஜுனனின் பேரன், அபிமன்யுவின் மகன், பரீட்சித்து மன்னன், பல இன்னல்களை மக்கள் இந்த கலியுகத்தில் அனுபவிக்க நேரிடுமே என்று ஒரு கவலையினால், தன் நிம்மதி கெட வாய்ப்பு இருந்தும், கலி புருஷன் "ஹரி" நாமம் சொன்னால் பாதிப்பில்லை என்று சொன்னது மட்டும் பெரிதாகப் பட்டது.
கலி புருஷனிடமும் ஒரு நல்ல குணத்தை பார்த்தார் பரீட்சித்து.

நிம்மதி கெடாமல் இருப்பதற்கு, ஓடி ஒளிவதை விட, மற்றவர்களிடம் உள்ள நல்ல குணத்தை மட்டும் பார்ப்பதே சரியான வழி.

தீய குணத்தை பார்ப்பதால், நம் நிம்மதியும் கெடும், பகையும் வளரும்.

இருக்கும் ஒரு நல்ல குணத்தை பார்ப்பதால் கூட, நம் நிம்மதி நம்மிடமே இருக்கும். மேலும் குறை உள்ளவனும், இதனால் மேலும் பல நல்ல குணங்களை காலம் செல்ல செல்ல வளர்த்துக் கொள்வான்.