Followers

Search Here...

Friday 18 May 2018

பிரேதங்கள், பிசாசுகள், பித்ருக்கள் யார்?

பிரேதங்கள், பிசாசுகள், பித்ருக்கள் யார்?

காலத்தில் மரணம் அடைந்து, ஸம்ஸ்காரம் செய்யப்படாதபடி அல்லது ஸம்ஸ்காரம் ஆகும் வரை அலைந்து கொண்டிருப்பவர்கள் - "பிரேதங்கள்".




அகாலத்தில் தற்கொலையோ அல்லது ஆயுதம், தீ, விஷம் முதலியவைகளாலோ துர்மரணம் அடைந்து அலைந்து கொண்டு இருப்பவர்கள் - "பிசாசுகள்".

தாங்கள் செய்த புண்யத்தாலும், புத்ரன் செய்யும் ஸம்ஸ்கார பலத்தாலும், தெய்வத்தன்மையை அடைந்து விட்டவர்கள் - "பித்ருக்கள்".

இவர்கள் யாவருக்கும் யம தர்மராஜா தலைவராவார்.

பித்ரு லோகம் என்பது ஸூவர்கத்துக்கு கீழே, பூமிக்கு மேலே தென் திசையில் இருக்கிறது.
நாம் சிரார்த்தம் செய்யும் போது, 8 வஸூ, 11 ருத்ர, 12 ஆதித்யர்கள் என்ற 3 தேவகணங்கள் மூலமாக பித்ருக்களை போய் அடைகிறது.

பித்ருக்கள், தேவர்களை விட கிருபை அதிகம் உள்ளவர்கள்.
பித்ருக்கள் அனுக்ரஹம் செய்யவும், நிக்ரஹம் செய்யவும் சக்தி உள்ளவர்கள். 
பித்ருக்களுக்கு, நாம் செய்யும் சிராத்தத்தாலோ, பிண்டத்தினாலோ, தில தர்பணத்தாலோ ஆகவேண்டியது ஏதுமில்லை.
இவைகளை நாம் அளித்தாலும் முகர்ந்து விட்டு த்ருப்தி அடைகின்றனர்.




ஆயினும், 
நம் கையால் ஏதாவது ஏதாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அனுக்ரஹம் செய்ய வேண்டுமென்றும் இந்த ரீதியில் பரலோகம் சென்ற பிறகு கூட நம்முடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.

அவர்களை நாம் மறந்து விட்டால் பித்ரு த்ரோஹிகள் ஆகிவிடுகிறோம்.

Friday 11 May 2018

பிரேத சரீரம் எப்படி உருவாகிறது. 12 நாள் அபர காரியம்

ஒருவர் இறந்து போன பிறகு அவருக்கு செய்ய வேண்டிய கர்மா 'அபர காரியம்' என்று சொல்லப்படுகிறது.


ஸ்தூல (மாமிச உடம்பை) சரீரத்தை விட்டு, "ஜீவன்" ஸூக்ஷ்ம சரீரத்துடன் மரண காலத்தில் வெளியேறுகிறான்.

ஸூக்ஷ்ம சரீரத்துடன் உடலை விட்டு சென்ற ஜீவன், கொஞ்ச நாட்கள் பிரேத சரீரத்தை பெறுகிறான்.
இந்த பிரேத சரீரத்துடன் ஆகாசத்தில் ஸஞ்சாரம் செய்கிறான்.

அதன் உடலானது தகனம் செய்யப்பட்டு விட்டதால், அந்த பிரேதத்துக்கும் பசி,தாகம் முதலியவை உண்டாகி விடுகிறது.
அந்த பசி, தாகம் தீருவதற்காக, இறந்த முதல் நாள் கொண்டு 11 நாள் வரை வாஸோ தகம், திலோ தகம், பிண்ட தானம் செய்யப் படுகிறது.

ஒரு பாஷாணத்தில் பிரேதத்தை ஆவாஹனம் செய்து பூஜை செய்யப்படுகிறது.


பிரேத சரீரம் எப்படி உருவாகிறது?
என்று ருஷ்யசிருங்கர் கூறுகிறார்.

முதல் நாள், பிண்ட தானம் செய்யும் போது தலையும்,

2வது நாள் பிண்ட தானம் செய்யும் போது, கண், காது, மூக்கும்

3வது நாள் பிண்ட தானம் செய்யும் போது கைகள், மார்பு, கழுத்தும்

4வது நாள் பிண்ட தானம் செய்யும் போது, நாபி, குதம், குறியும்

5வது நாள் பிண்ட தானம் செய்யும் போது, தொடைகளும்

6வது நாள் பிண்ட தானம் செய்யும் போது, தோலும்

7வது நாள் பிண்ட தானம் செய்யும் போது, நரம்புகளும்,

8வது நாள் பிண்ட தானம் செய்யும் போது, ரோமங்களும்,

9வது நாள் பிண்ட தானம் செய்யும் போது வீரியமும்,

10வது நாள் பிண்ட தானம் செய்யும் போது பசி நிவிருத்தியும் ஆகிறது. இந்த நாளில் தான் பூத பலி போடப்படுகிறது.

11வது நாள் ஏகோத்திஷ்டம் செய்ய வேண்டும். இதனால் ஜீவன் பிசாசத்துவத்தை அடைகிறான்.


12வது நாள் இப்படியே பிசாசாகவே விட்டு விடாத படி பித்ரு லோகத்தை அடைய செய்வதே 'ஸபிண்டீகரணம்'.

ஸபிண்டீகரணம் செய்வதால், ஜீவன் பிரேத சரீரத்தை விட்டு, பித்ரு லோகத்தை அடைகிறான்

இப்படி செய்யப்படாமல் இருக்கும் போது, ஜீவன் உடலை விட்டு விலகிய பின், பிரேத சரீரத்துக்குள் இருக்கும் ஜீவன் பிரேதங்களாகவே (ஆவி) அலைகின்றனர்.

பிரேதங்களுக்கு தன் குடும்பம், ஆசை இருப்பதால், தங்கள் வாசனையை தீர்த்துக் கொள்ள வேண்டி பிற சரீரங்களில் ஆவேசித்து விடுகின்றனர்.

பிரேதங்களுக்கு தன் சொந்தங்களை தெரியும்.
எப்படியாவது மீண்டும் இவர்களோடு முன்பு போல வாழ வேண்டும் , உறவு கொள்ள வேண்டும் என்று ஆசை படுகின்றன.

பிரேதங்களுக்கு குரல் மட்டும் கொடுத்து பேசவோ, கனவில் தரிசனம் தரவோ முடியும்.
பகவானின் நாம சங்கீர்த்தனம்,
பூஜை ஸமயத்தில் அடிக்கும் மணி, சங்கம் இவைகளின் ஓசை,
தூபம்,
தீபம்,
துளசி, வில்வம்
முதலியவை பிரேதங்களை தடுத்து விடுகின்றன.


இன்றும் பிரேதங்களுடன் பேசக்கூடிய சில மந்திரவாதிகள் இருக்கின்றனர்.

மனித வர்க்கத்துக்கு தான் இந்த நியமம்.

பசு, பக்ஷிகள், பூச்சிகள் இவைகள் யாவும் பிரேத சரீரத்தையோ, மற்ற லோகங்களான பித்ரு, தேவ, எம, ப்ரஹ்ம லோகங்களையோ அடைவதில்லை.

இவ்வுலகில் செத்து, இவ்வுலகிலேயே வேறு வேறு ஜென்மங்களை அடைந்து விடுகின்றன.

எனவே, ஒருவர் இறந்த நாள் முதல், 12வது நாள் சபிண்டீகரணம் வரை அவசியம் சாஸ்த்திரப் விதிப்படி யாவரும் செய்ய வேண்டும்.
இறந்து போனவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை அது.

இந்திய பூமி கர்ம பூமி.
இங்கு செய்யாது விட்டால், பித்ருக்கள் நமக்கு சாபம் விடுகின்றனர்.



அத்வைதம், விஷிஷ்ட அத்வைதம், த்வைதம் - 947ல் சிக்கி, 1947ல் விடுதலை ஆன பாரத பூமியில் மக்களை ஹிந்துக்களாகவே இருக்க வைத்தது

த்ருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம் முடிந்து, 3102BCல் கலி யுகம் ஆரம்பித்தது.

சுமார் 563BCல் க்ஷத்ரியனான சித்தார்தன் என்ற புத்தரால், உலகம் சூன்யம் என்ற பௌத்த மதம் உருவாகி, பாரத பூமியை ஆக்கிரமித்தது.





அசோக சக்கரவர்த்தியின் மத மாற்றத்தால், பாரத பூமி பௌத்த நாடாக போனது. 

நாட்டை காக்க வேண்டிய அரசன் க்ஷத்ரியனாக இருக்க வேண்டும் என்று சொல்லும் வேத தர்மத்தை (ஹிந்து) விட்டு விட்டு, சந்யாசிகளுக்கு போதிக்கும் பௌத்த தர்மத்தை தனக்கு எடுத்துக்கொண்டான்.

பாரத தேசத்தை ஆண்டு கொண்டிருந்த பேரரசன், அனைத்து அரசர்களையும் போர் செய்யாமல், ஒரு சந்யாசி போல, சாதுவாக அரசாட்சி நடத்த சொன்னான். 

பாரத தேசத்தில் இருந்த ஆப்கான், ஈரான் போன்ற எல்லை ராஜ்யங்கள் பௌத்த ராஜ்யம் ஆகி, அரசர்கள் போர் பயிற்சி இல்லாமல், பலவீனமாகி கொண்டிருந்தார்கள். 

போர் வீரர்கள், போர் பயிற்சி இல்லாமல், பௌத்த ஆலயங்கள் கட்டி கொண்டிருந்தனர்.
சுமார் 30ADல் ஏசு என்ற யூதர் ரோமானியர்களால் இஸ்ரேலில் உள்ள ஜெருசலம் என்ற ஊரில் கொல்லப்பட்டார்.

ஏசுவின் ஆதரவாளர்கள் யூத மதத்தில் இனி இருந்தால், ரோமானியர்களால் கொல்லப்படுவோம், அழிவு நிச்சயம் என்று உணர்ந்தனர்.

ஏசுவின் பெயரால், ஏழைகள், பாதிக்கப்பட்டவர்கள் என்று அனைவருக்கும் ஆதரவாக பேசியும், ஏசு உங்களுக்காக தான் உயிர் நீத்தார் எனவும், ஏசு திரும்ப வருவார், எனவும், ஏசு கொல்லப்பட்டாலும், மீண்டும் வருவார் என்றும் சோகத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதல் செய்தனர்.

இந்த ஆறுதல் பிரச்சாரம், காலப்போக்கில் வாழ்க்கையில் ஆறுதல் எதிர்பார்க்கும் ஏழைகள், இரக்க குணம் உள்ளவர்களை ஈர்த்தது.  

பெரும் கூட்டம் இவர்களுக்கு சேர சேர, ஒரு சமயம் ரோமானிய பேரரசனும் இவர்கள் வலையில் வீழ்ந்தான். 

ரோமானிய மன்னன் புதிய மதத்துக்கு ஆதரவை காட்டியவுடன், மக்களும் புதிய மதத்துக்கு இழுக்கப்பட்டனர்.






விளைவு: ரோமானிய பேரரசும், அதன் கலாச்சாரம் அழிந்து, அதே ரோமானியாவில் ஏசுவின் பெயரால் சர்ச் உருவாக்கினர். பின் ஊரையே மதம் மாற்றினர். 

ஏசு கடவுள் இல்லை என்று, ரோமானிய கிறிஸ்தவர்களை (Roman catholic) எதிர்த்து, ப்ராடெஸ்டெண்ட் (Protestant Christians) என்ற பிரிவு உருவானது.

வேத சம்பந்தமான தெய்வங்களை வணங்காமல், ஆகஸ்ட், ஜுபிடர் என்று வணங்கி கொண்டிருந்த ரோமானியர்களை மதம் மாற்றுவது எளிதாக முடிந்தது.

இப்படி மேற்கு நாடுகள் கிறிஸ்துவத்துக்கு மாற்றப்பட்டு கொண்டிருக்க,

சுமார் 570ADல் அரேபியாவில் இஸ்லாம் (சரணாகதி - surrender to god) என்ற புது மதம், யூத மதத்தில் இருந்து பிரிந்து முகமது நபி என்பவரால் எழுதப்பட்டு, உருவானது.

முகமது நபி இறந்த பிறகு, அவரின் மருமகன் உருவான "அலி இபின் அபிதலிப்" என்பவரை அடுத்த தலைமையாக ஏற்றனர். 
முகமது நபி தனக்கு பிறகு இவர் வர வேண்டும் என்று யாரையும் நியமிக்கவில்லை என்று, பலர் எதிர்க்க, உட்பூசல், சண்டை, கலவரம் ஏற்பட்டு, மருமகன் தலைமையை ஏற்ற இஸ்லாமியர்கள் தங்களை "ஷியா" (Shia) முஸ்லீம் என்று அடையாள படுத்திக்கொண்டனர்.

ஏற்காதவர்கள், தாங்கள் மட்டுமே உண்மையான இஸ்லாமியர்கள் என்று தங்களை "சன்னி" (sunni) முஸ்லீம் என்று அடையாள படுத்திக்கொண்டனர்.

அன்று ஆரம்பித்த பகை, இன்று வரை தொடர்கிறது.

தங்களுக்குள் அடித்துக்கொண்டாலும், பிற மதங்களை எதிர்ப்பது இவர்கள் கொள்கையாகவே இருந்தது. 

இஸ்லாமியனாக மாற விரும்பாமால், கிறிஸ்தவனாகவும் மாற விரும்பாமல், யூதர்களாகவே வாழ விரும்பியவர்கள் வாழ்க்கை சூன்யமானது. பரதேசிகள் ஆகினர்.

பல தெய்வ கொள்கை உடையவர்களை எதிர்த்தது இஸ்லாம் என்ற இந்த புதிய மதம். 

இஸ்லாமியனாக இல்லாத வேறு தெய்வங்களை வணங்கும் அனைவரும் காபிர்கள் என்று கொள்கை கொண்டிருந்தனர். 

இதனால் பிற மதங்களை சேர்ந்தவர்களை கடுமையாக தாக்கினர்.

இதனால் கிரேக்க, ரோமானிய கலாச்சாரம் இஸ்லாமியர்களுடன் கடும் போராலும், கிறிஸ்தவர்களின் மத மாற்றத்தாலும், அவர்களின் தெய்வ வழிபாடு மூட நம்பிக்கையாகவும் இருந்ததால், வேகமாக வேரோடு அழிந்தது.







இதே சமயத்தில், பாரத தேசத்தில், வேதத்தை உபாஸிக்கும் ப்ராம்மணர்களும், வேதத்தில் உள்ள ஞான மார்க்கத்தை புறக்கணித்து, கர்ம மார்க்கமே சிறந்தது என்று யாகம் போன்ற கர்ம காரியங்களில் மட்டும் நாட்டம் கொண்டிருந்தனர். 

ஞானத்தை போதிக்கும் ப்ராம்மணர்கள், கர்ம மார்க்கத்தை மட்டுமே நாட, பாரத மக்களுக்கு ஞானத்தை உபதேசிக்க ஆளில்லாமல் போனது.
ப்ராம்மணர்களால் ஞான மார்க்கம் புறக்கணிக்கப்பட, க்ஷத்ரிய அரசன், வைஸ்யன் (business), சூத்திரன் (employee) என்று அனைத்து ஹிந்துக்களும்  ஞான மார்க்கத்தை போதிக்கும் புத்தரின் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டனர். 
பௌத்த மதம் தீ போல பாரதம் முழுவதும் பரவி இருந்தது.

எங்கு பார்த்தாலும் மொட்டை தலைகள்.

எங்கு பார்த்தாலும், "புத்தம் சரணம் கச்சாமி" என்ற ஒலிகள் ஒலித்தது.

பொய் மதங்களை கண்டிக்க, "அனைத்தும் ப்ரம்மமே" என்ற அபேதத்தை காட்டும், ஞானத்தை போதிக்கும், வேத ஸ்ருதிகளை மட்டும் எடுத்து, "அத்வைதம்" என்ற ஞான  சித்தாந்தத்தை நிலை நிறுத்தினால் தான் ஹிந்துக்கள் வாழ வழி செய்ய முடியும் என்ற நிலை உருவானது.

ரோமானிய, கிரேக்க கலாச்சாரங்கள், இல்லாத தெய்வங்களை வழிபட்டதால், இன்னொரு பொய் மதம் புகுந்தவுடன் தன் கலாச்சாரத்தையும், தெய்வத்தையும் இழந்தது. 

கிரேக்க வீரர்கள், ரோமானிய வீரர்கள் கிறிஸ்துவதுக்கு மதம் மாறினர். தன் கலாச்சாரத்தை தானே அழித்துக்கொண்டனர்.

ஹிந்துக்களின் வேதமோ, சத்தியமானது. இங்கு சொல்லப்படும் யமன், இந்திரன் என்று அனைத்து தெய்வங்களும் சத்தியமாக இருப்பவர்கள்.

பாரத தேசம் பொய் மதங்களால், பொய் தெய்வங்களால் சூழ்ந்து, ஹிந்து மக்கள் அழிவதை தெய்வங்கள் அனுமதிப்பதில்லை.
பொய் மதங்களை, பொய் தெய்வங்களை, மனிதர்கள் தங்கள் முயற்சியால், பொய் பிரச்சாரத்தாலும், பேச்சாலும் வளர்க்கின்றனர்.

ஹிந்து தர்மத்தை, தெய்வங்களே முன் நின்று காப்பாற்றுகின்றனர்.
சிவபெருமானே, இந்த சமயத்தில்,  கேரளாவில் காலடி என்னும் ஊரில், 788ADல் அவதரித்தார். ஆதி சங்கரர் என்று ஜகத்குருவாக அவதாரம் செய்தார்.



காலத்தை அனுசரித்து, வேதத்தில் உள்ள அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டினார்.

வேதத்தில் சொன்ன தெய்வங்களில் பேதம் இல்லை. உலகில் காணும் அனைத்துமே அந்த பரப்ரம்மம் தான். அவரே எல்லாமுமாக உள்ளார் என்று அபேதத்தை நிலை நிறுத்தும் அத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார்.

அத்வைத சித்தாந்தமும் வேத சம்மதமே என்பதால், மடங்களை பாரத தேசம் முழுவதும் நிறுவி, ஹிந்துக்களின் மனதில் ஹிந்து தர்மத்தின் மேன்மையை விளக்கி, பொய் மதங்களில் வீழ்ந்து விடாமல் தடுத்தார்.

அத்வைத சித்தாந்தத்தால், பௌத்தர்களின் சூன்ய வாதம் "பொய்" என்று நிரூபிக்கப்பட்டது.

பௌத்த மதம் போல, 70க்கும் மேற்பட்ட பொய் மதங்கள் உருவாகி இருந்த காலம் அது. 
அனைத்தையும் பொய் என்று வாதிட்டு, பொய் மதங்களில் ஹிந்துக்கள் வீழாமல் இருக்க செய்தார்.

பாரத மக்கள், மீண்டும் வேத மார்க்கத்தின் பக்கம் திரும்பினர்.
புத்தர் சொன்ன ஞான மார்க்கத்தை விட, வேதத்தில் சொல்லியுள்ள ஞான மார்க்கமான, அத்வைத சித்தாந்தமே உண்மையானது என்று ஹிந்துக்கள் திரும்பினர்.

தெய்வங்களுக்குள் பேதம் இல்லை என்று சொல்லும் வேத மந்திரங்களை கொண்டு, “அத்வைத” சித்தாந்தம் ஆதி சங்கரரால் ப்ரகாசப்படுத்தப்பட்டது. 

இஸ்லாமியர்கள், தங்கள் மதத்தை பரப்பும் நோக்கில், இவர்கள் பார்வை பாரத தேசத்தை நோக்கி 947ADல் திரும்பியது.

947ADல் இஸ்லாமியர்களின் படையெடுப்பு “ஈரான், ஆப்கான்” போன்ற பாரத தேச பக்கம் திரும்ப தொடங்கியது.

அசோக சக்கரவர்த்தியினால் மாற்றப்பட்டு இருந்த பௌத்த தேசங்களான ஈரான், ஆப்கான் போன்ற நாடுகள், அரேபியர்களின் படையெடுப்பில் வீழ்ந்தது.
இரு நாடுகளும் இஸ்லாமிய நாடாக மாறியது.
ஆப்கான் நாட்டை ஆண்டு கொண்டிருந்த “அமீர் சூரி” என்ற பௌத்த அரசன், இவர்களிடம் எதிர்க்க முடியாமல் தோற்றான்.

பௌத்த மதம் அரசர்களை கோழைகள் ஆக்கி, சோம்பேறிகள் ஆக்கி இருந்தது.

இஸ்லாமிய மதத்தின் எதிர்க்கும் குணம், பொதுவான இறை கொள்கைகள் இவனுக்கு பிடித்து போக, தன் மகன்களை பௌத்தனாக வளர்க்காமல் இஸ்லாமியனாக வளர்த்தான்.

அமீர் சூரி என்ற பௌத்த அரசன் மதம் மாறியதால், அவன் சந்ததியின் காரணமாக, இந்தியாவில் பல கோவில்கள் இடிய காரணம் ஆனது. 
விளைவு: இவனுக்கு பிறகு, ஈரான், ஆப்கான் தேசங்கள் இவன் பிள்ளைகளால், பின் வந்த பேரன்களால், இஸ்லாமிய நாடாகி போனது.  

“முகம்மது கோரி” போன்றவர்கள் இவன் குடும்பத்தில் வந்தவர்களே.  கோரி அரசாட்சி (Ghurid Dynasty) உருவாக அமீர் சூரி வித்திட்டான். 
அங்கு இருந்த ஹிந்து கோவில்கள், பௌத்த ஆலயங்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன.

ஹிந்து தேச மக்கள், ஒரு சமயம் பௌத்தனாகி, பின் இஸ்லாமியனாக ஆகி, நாட்டையே இஸ்லாமிய நாடாக ஆக்கினர். 
இன்று வரை ஆப்கான், ஈரான் போன்ற பாரத தேசங்கள் இஸ்லாமிய நாடாக தான் உள்ளது.

மதம் மாறிய இந்த கூட்டமே, பின் இந்தியாவுக்கு பெரும் சவாலை தர ஆரம்பித்தது. 

ஸ்ரீ ராமரின் தம்பி "பரதன்" அமைத்த காந்தாரம் (gandahar) இன்று இஸ்லாம் நாடாகி விட்டது. 

ஸ்ரீ ராமரின் தம்பி "பரதன்" அமைத்த "தக்ஷஷீலா" (Taxila), புருஷபுரா (peshavar) இன்று பாகிஸ்தான் என்று பிரித்து கொடுத்ததால், இன்று இஸ்லாம் நாடாகி விட்டது.

ஸ்ரீ ராமரின் மகன் லவன்  அமைத்த "லவ புரா" (Lahore) பிரித்து கொடுத்ததால், பாகிஸ்தானில் இன்று இஸ்லாம் நாடாகி விட்டது.

மதம் மாறுபவர்களால் அந்த சமயத்தில், பெரும் ஆபத்து ஏற்படாவிட்டாலும், அவர்களுக்கு பின் வரும் சந்ததியினர் செய்யும் அட்டகாசங்கள் ஹிந்துக்களை பாதிக்கிறது. 

ஹிந்துக்கள் பயத்தில் மதம் மாறுவதற்கும், வேதம் தெய்வத்தை பற்றி என்ன சொல்கிறது என்பதை சொல்வதற்கும் அவதார புருஷர்கள் தேவைப்பட்டனர். 

சரித்திரத்தை பார்க்கும் போது, மதம் மாறும் ஹிந்துக்களின் சந்ததியினர் செய்த அட்டகாசங்கள் மிக அதிகம். 





தன் முந்திய தலைமுறை ஹிந்துக்கள் என்று தெரிந்தும், இவர்கள் இடித்த கோவில்கள் அதிகம். இவர்களால் கொல்லப்பட்ட ஹிந்துக்கள் அதிகம். கொள்ளை அதிகம்.

ஈரான், மற்றும் ஆப்கான் என்ற இரு தேசங்களை இழந்ததால், பெரும் ஆபத்தை இந்திய பூமி சந்திக்க வித்திட்டது.

அடுத்த 1000 வருடங்கள்,
இந்தியர்கள் கோடிக்கணக்கில் மடிவதற்கும்,
வட இந்தியா முழுவதும் தென் இந்தியாவில் உள்ள கோவிலை போன்று இருந்த லக்ஷக்கணக்கான கோவில்கள் தரைமட்டம் ஆனதற்கும்,
தங்கத்தில் புரண்டு கொண்டிருந்த பாரத மக்கள் ஏழை ஆவதற்கும்,
கலாச்சாரம் அழியாமல் அவரவர் தொழிலை மற்றவர் பிடுங்காமல், அனைவருக்கும் ஒரு சுயதொழில், சுய வருமானம், சுய கௌரவம் என்று வாழ வைத்துக்கொண்டிருந்த க்ஷத்ரிய அரசகுலம் அழிவதற்கும் வித்திட்டது. 

இதற்கு மூல காரணமாக இருந்தவர் "சாம்ராட் அசோகர்". க்ஷத்ரிய அரசர்களை பௌத்தனாக்கி, கோழைகள் ஆக்க மூல காரணமானார்.

இப்படி இஸ்லாமும், பௌத்தமும் பாரத தேசத்தை உலுக்கி கொண்டிருக்க,
"ஒரே தெய்வம்" என்ற கொள்கை பாரத மக்களிடம் ஸ்தாபிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

ஒரே தெய்வம் வேதத்தில் சொல்லவில்லை என்ற பிரமையை இஸ்லாமும், பௌத்தமும் பாரத மக்களிடம் விதைக்க பார்த்தது.
வேதத்தின் உண்மையை விளக்க, ஒரு அவதார புருஷர் மீண்டும் தேவைப்பட்டார்.
விஷிஷ்ட அத்வைத சித்தாந்தத்தை பிரகாசபடுத்த ஒரு அவதார புருஷர் தேவைப்பட்டார்.

பாரதத்தில் இன்னும் கொஞ்சம் ஓடிக்கொண்டிருந்த பௌத்த பிடிப்பையும், ஒரே கடவுள் என்ற கொள்கை கொண்ட இஸ்லாம் என்ற மதத்தின் நுழைவையும் கட்டுப்படுத்த, ஹிந்துக்களுக்கு வர இருக்கும் பெரும் ஆபத்தில் இருந்து சமாளிக்கும் தெம்பு கொடுக்க, ஹிந்துக்களாகவே வாழ நெஞ்சுறுதி கொடுக்க, இம்முறை பரவாசுதேவனின் படுக்கையாக இருக்கும் ஆதி சேஷனை அவதாரம் செய்யுமாறு  நியமித்தார் பெருமாள். 
1017ADல் ஆதி சேஷனே தமிழகத்தில், சென்னையின் அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் மனித அவதாரம் செய்தார்.

"ஸ்ரீ ராமானுஜர்" என்றும் எதிராஜர் என்றும், போற்றப்படும் மகான் அவதாரம் செய்தார். இது தமிழனுக்கு பெருமை.

அனைவரும் ஹரிஜனங்களே (ஹரியின் குழந்தைகளே) என்றும், 
அனைவருக்கும் மோக்ஷம் உண்டு என்றும், 
அனைவரும் நாராயண பக்தி செய்யலாம் என்றும் சமூக புரட்சியும் செய்து, 
அடுத்த 1000 வருடங்கள் இஸ்லாமிய ஆட்சி நடந்தும், கிறிஸ்துவர்கள் 200 வருடங்கள் ஆட்சி செய்தும், ஹிந்துக்கள் அழியாமல் இருக்க வழி செய்தார். 

காலத்தால் அழியாமல் இருக்கும் ஆதி சங்கரரும், ஸ்ரீ ராமானுஜரும் வேதத்தில் சொன்ன சிவனும், ஆதி சேஷனான தெய்வங்கள் என்று ஞாபகத்தில் கொள்ள வேண்டும். 

மற்ற மதத்தை காக்கும் பொறுப்பு, அந்த மதத்தை பின் பற்றுபவர்கள் கையில் உள்ளது. அவர்கள் பிரச்சாரத்தை நம்பித்தான், அவர்கள் மதம் வாழப்போகிறது. 
ஹிந்து மதத்தை காக்கும் பொறுப்பை தெய்வங்களே ஏற்று கொண்டு உள்ளனர் என்பதே நம் ஹிந்து மதத்தின் பெருமை.

காலத்தை அனுசரித்து, பேதம், அபேதம் இரண்டையும் காட்டும் வேத ஸ்ருதிகளை எடுத்து, "விஷிஷ்ட அத்வைதம்" என்ற சித்தாந்தத்தை பாரதத்தில் நிலை நிறுத்தினார், ஸ்ரீ ராமானுஜர்.

நாம் அனைவரும் ஜீவாத்மா, 'விஷ்ணு' ஒருவரே பரமாத்மா என்று வேத வாக்கியத்தால் நிர்ணயம் (முடிவு) செய்தார்.

ஸ்ரீ ராமானுஜர் அவதரித்து இருக்காவிட்டால், ஹிந்துக்களை மிரட்டி, குழப்பி, 1000ADயிலேயே மத மாற்றம் செய்து இருப்பார்கள்  இஸ்லாமியர்களும், பௌத்தர்களும்.
ஒரே கடவுளை தான் வேதம் சொல்கிறது என்று விஷிஷ்ட அத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார்.

ஏற்கனவே அத்வைத சித்தாந்தத்தால் நிலை குலைந்து இருந்த பௌத்த மதம், ராமானுஜரின் விஷிஷ்ட அத்வைத சித்தாந்தத்தால் பாரத மக்களால் நிராகரிக்கப்பட்டது.



அனைவரும் வேத மார்க்கத்தை ஏற்றனர். பௌத்த மதம் பாரதத்தை விட்டு போனது.
அனைவரும் அந்த விஷ்ணுவின் அடியார்களே. அனைவரும் வைஷ்ணவர்களே. நமக்கு ஒரே தெய்வம் "நாராயணனே" என்று வேத வாக்கியத்தால் நிரூபித்தார். பாரத மக்கள், மீண்டும் வேத மார்க்கத்தின் பக்கம் திரும்பினர்.

இந்த தெளிவு கிடைத்த பின்னர், ஹிந்துக்கள், அத்வைத சித்ததாந்தத்தையும், விஷிஷ்ட அத்வைத சித்ததாந்தத்தையும், தலையில் வைத்து பூஜித்தனர்.

1200 வருடங்கள் அந்நிய மதங்கள் கோடிக்கணக்கான ஹிந்துக்களை கொன்றாலும்,
லக்ஷகணக்கான கோவிலை இடித்து அதில் மேல் மசூதி, மஹால் என்று கட்டினாலும்,
அனைத்து செல்வங்களையும் கொள்ளை அடித்தாலும்,
ஹிந்துக்களை பிச்சைக்காரகள் போன்ற நிலைக்கு ஆக்கினாலும், பொய் மதம் போவதில்லை என்று மானத்தை இழக்காமல், கஷ்டங்களை சமாளித்தனர் ஹிந்துக்கள்.

947ல் சிக்கி, 1947ல் விடுதலை ஆன பாரத பூமியில் 90% மக்கள் ஹிந்துக்களாகவே இருந்தனர்.
ரோமானியர்களை போல, கிரேக்கர்களை போல, அழிந்து விடவில்லை, மதம் மாறி விடவில்லை.

கஞ்சிக்கு அலையும் நிலையில் பெரும்பாலான ஹிந்துக்கள் தள்ளப்பட்டு இருந்தனர். இருந்த போதும், ஹிந்துக்களாகவே இருந்தனர்.

பொய் மதங்களை பொய் தெய்வங்களை மறுத்தனர்.

இந்த நெஞ்சுரத்துக்கு விதை போட்டவர்கள், வேதத்தில் சொன்ன சிவபெருமானும், ஆதி சேஷனுமே. 
ஆதி சங்கரரையும், ஸ்ரீ ராமானுஜரையும் அறியாத ஹிந்துக்கள் நன்றி கெட்டவர்கள்.

நாம் இன்று ஹிந்து என்றும், ஹிந்துக்களின் பெயர் வைத்து கொண்டும் இருப்பதற்கு இவர்களே காரணம்.

அவர்கள் சரித்திரத்தை ஒவ்வொரு ஹிந்துவும் படிக்க வேண்டும்.

நாத்தீகன் கூட ஸ்ரீ ராமானுஜர் கதையை நாடகம் அமைத்து விட்டான் இந்த காலத்தில்.

இவர்கள் இருவரை பற்றி இன்று வரை தெரியாமல் இருந்தால் கூட, இனியாவது தெரிந்து கொள்ள பல புத்தகங்கள், ஒளிப்பதிவுகள் கண்டு தெரிந்து கொள்ள வேண்டும். 

நாம் இன்று ஹிந்துவாக இருக்க வேண்டும் என்று, தெய்வங்கள் ஆசைப்பட்டு உள்ளன என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

சிவனும், ஆதி சேஷனும் அவதாரம் செய்த சரித்திரத்தை தெரிந்து கொள்ளாமல், ஒரு ஹிந்து இருக்கலாமா?

தெய்வங்களுக்குள் பேதம் இருப்பதாக சொல்லும் வேத மந்திரங்களை கொண்டு,  1238ADல் கர்நாடகாவில் அவதரித்த ஆனந்த தீர்த்தர் என்ற மத்வ ஆச்சாரியார், “த்வைத” சித்தாந்தத்தை மீண்டும் ப்ரகாசப்படுத்தினார். 

பகவான் நாராயணன் மட்டுமே பரமாத்மா, 
நாம் அனைவரும் ஜீவாத்மா என்ற பேதத்தை காட்டி, நாம் அனைவரும் அவரிடம் பக்தி செய்ய வேண்டும் என்று த்வைத சித்தாந்தத்தை ப்ரகாசப்படுத்தினார். கர்நாடகாவில் பக்தி வளர்ந்தது. 


Tuesday 1 May 2018

"ஸஞ்சிதம்", "ப்ராரப்தம்" ,"ஆகாமி" என்றால் என்ன?

"ஸஞ்சிதம்" என்றால் என்ன?
"ப்ராரப்தம்" என்றால் என்ன?
"ஆகாமி" என்றால் என்ன?

ஜீவனுக்கு ஜனனமும், மரணமும் மாறி மாறி சுற்றிக்கொண்டே வருவதால் 'ஸம்சார சக்கரம்' என்று சொல்லப் படுகிறது

உலகில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் காரணம், பூர்வ கர்மமே (செயல்) ஆகும்.

கர்ம பலன் இல்லாவிடில், உலகில் இவ்வளவு சுக துக்கங்கள் இருக்க காரணமென்ன?

ஒரு பிறவியிலேயே அனுபவிக்க படாத கர்மபலன் மிச்சமிருக்கும் போது, மறு பிறவியை அடைகிறான்.




பூர்வ ஜென்மத்தில் மிச்சப்பட்ட கர்மபலனை இப்பிறவியில் அனுபவித்ததும், இப்பிறவியில் செய்த கர்மபலனை அடுத்த பிறவியில் அனுபவிக்கவும் நேரிடுவதால், ஜீவன் பல ஜென்மங்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறான்.

இவ்வாறு ஜனனமும், மரணமும் மாறி மாறி சுற்றிக்கொண்டே வருவதால் "ஸம்சார சக்கரம்" என்று சொல்லப் படுகிறது.

பலன் கொடுக்க அவகாசமின்றி மீந்து விட்ட கர்மபலன்களின் மூட்டையை "ஸஞ்சிதம்"  என்றும்,

பலன் கொடுக்க ஆரம்பித்து விட்ட கர்மபலன்களை "ப்ராரப்தம்" என்றும்,

இப்பிறவியில் செய்த கர்மாக்களின் பலன், இனி வரப்போவதால் "ஆகாமி" என்றும் சொல்லப் படுகிறது.

இந்த மூன்று விதமான கர்மபலன்களையும் அனுபவித்து தீர்த்த பிறகு தான், மோக்ஷம் கிடைக்கும் என்ற நியமம் ஏதும் இல்லை.

ஸஞ்சித்தையும், அகாமியையும் ஞான அக்னியால் பொசுக்கி விட்டு, ப்ராரப்தத்தை மட்டும் அனுபவித்தால், இப்பிறவியிலேயே மோக்ஷம் கிடைக்கும்.

யாரும் ஞானத்துக்காக ஆசைப் படவில்லை. முயற்சிக்கவும் இல்லை.

பெரும்பாலும் அஞ்ஞானிகளே இருப்பதால், ஸம்சார சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது.


பாபங்களுக்கு தண்டனை அனுபவித்தும் ஏன் மீண்டும் மீண்டும் ஜீவன் பாபம் செய்கிறான்?

பாப வாசனை
இந்த உடலை விட்டு ஜீவன் பிரிந்த பின்,
எம தர்மராஜன் ஆணை படி "செய்த பாவங்களுக்கு நரகத்தில் தண்டனை அனுபவிக்கிறான்".



மீண்டும், இந்த உலகில், இவன் செய்த கர்ம பலன்களை பொறுத்து, அதற்கு தகுந்த தாய், தந்தை தேர்ந்தெடுத்து, இந்த உலகில் மீண்டும் பிறக்க அனுக்கிரஹம் செய்கிறார்.

'தான் கொடுத்த தண்டனையில் இவன் திருந்தி, இப்பொழுது கிடைத்த இந்த சரீரத்தை கொண்டாவது ஒழுங்காக வாழ்ந்து, கிருஷ்ண பக்தி செய்து,   கிருஷ்ண சரணம் அடைவானா' என்று எம தர்மராஜன் எதிர்பார்க்கிறார்.

ஆனால் கிடைத்த பிறவியை இந்த ஜீவன், மீண்டும் பாவங்கள் செய்து, கிருஷ்ண பக்தி செய்யாமல் வீணடித்து, கிடைத்த மனித சரீரத்தை இழக்கிறான்.
கிடைத்த ஜென்மத்தை வீணடித்து, மீண்டும் எம தர்மராஜன் முன் வந்து நிற்கும் போது எம தர்மராஜன்,
"எத்தனை தண்டனை முன்பு கொடுத்தாலும், வைகுண்டம் செல்லாமல், ஏன் மீண்டும் மீண்டும் இங்கேயே தண்டனைக்கு வருகிறாய்?"
என்று வருத்தத்தால், கடுங்கோபத்துடன், தன் கடமை படி மீண்டும் தண்டனை கொடுத்து முடிந்தவரை மகா பாபங்களை குறைத்து, மீண்டும் இந்த உலகில் பிறக்க (மனிதனாகவோ, விலங்காகவோ, மரமாகவோ) வழி செய்கிறான்.
பாபங்களுக்கு தண்டனை அனுபவித்தும், ஏன் மீண்டும் மீண்டும் ஜீவன் பாபம் செய்கிறான்? 
அதற்கு பெயர் தான் "வாசனை"

தண்டனை அனுபவித்தும், ஜீவனுக்கு அவன் "பாப குணங்கள் என்ற வாசனை விட்டு விலகுவதில்லை".

இந்த வாசனையே இந்த ஜீவனுக்கு மீண்டும் மீண்டும் செய்த பாபத்தையே செய்ய வைக்கிறது.

வாசனை என்றால் என்ன? புரியும் படியாக சொல்ல வேண்டுமானால்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒருவன் வந்து "என்னுடைய வீட்டில் இருந்த நகையை யாரோ திருடி விட்டார்கள்… யார் திருடினார்கள் என்று தெரியவில்லை" என்று அழுதான்.

போலீஸ் இன்ஸ்பெக்டர், அருகில் இருந்த போலீஸ்காரரிடம் அந்த ஏரியாவில் உள்ள ஒரு கேடியின் பெயரை சொல்லி அழைத்து வரச் சொன்னார்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அந்த கேடி, தலையை சொறிந்து கொண்டே, சிரித்துக் கொண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டரை பார்த்து "வணக்கம் ஸார்" என்று ஸலாம் போட்டான்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபத்துடன் ஒரு அடி போட்டு, "என்னடா, நகையை திருடினாயா?" என்றார்.



உண்மையை ஒத்துக்கொண்டு, திருடிய நகையை திருப்பி கொடுத்தான்.

நகையை இழந்தவர், "எப்படி கண்டுபிடித்தீர்கள்?" என்று கேட்டார்

"இவன் ஒரு கேடி. இது போன்று பல முறை, இதே போல தவறு செய்து என்னிடம் மாட்டியிருக்கிறான். 
ஒவ்வொரு தடவையும் அடி கொடுத்தாலும் திருந்தாமல் மீண்டும் மீண்டும் செய்கிறான். 
பல தடவை இது போல அடி வாங்கி, பழகி போனதாலோ என்னவோ, ஜெயிலுக்கு போவதும், அடி வாங்குவதும் இவனுக்கு பழகிவிட்டது போல" என்று வருந்தவும் செய்தார்.

இது தான் "வாசனை".
அது போல, 
"பாபம் செய்ய வேண்டும் என்ற வாசனை", இந்த ஜீவனை விட்டு விலகுவதில்லை.
அதனால் தான், தண்டனை பல அனுபவித்தும், உலகில் துக்கமே அதிகம் அனுபவித்தும், பாப வாசனை இருப்பதால், பாபம் செய்து கொண்டே இருக்கிறான்.

இந்த பாப வாசனையை அழிக்க எம தர்மராஜனாலும் முடியாது.

இந்த பாப வாசனை அழிய வேண்டுமானால், இடை விடாது "ராம, ராம, ராம, ராம ..." என்று சொல்லுவதே இந்த ஜீவனுக்கு சித்த சுத்தி தரும்.
ராம நாமம் என்ற மந்திரம், இந்த ஜீவனின் இந்த பாப வாசனையை அழித்து, ராம, கிருஷ்ண பக்தியில் ஆழ்த்தி விடும்.
பாபம் செய்ய வேண்டும் என்ற ஆசையை அழித்து விடும்.

எம தர்மராஜன் "ராம, ராம, ராம, ராம …" என்று சொல்லும் ஜீவனை கண்டு பேரானந்தம் அடைகிறார்.

இந்த ஜீவன் இந்த உலகத்தை விட்டு செல்லும் போது, தானே வந்து, தன் தலை மேல் கால் வைத்து ஏறி வைகுண்டம் செல்லுமாறு வேண்டுகிறார்.

ஒரு ஜீவன் முக்தி அடைந்து விட்டது என்று ஆனந்தம் அடைகிறார் எம தர்மராஜன்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 





sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka