Followers

Search Here...

Friday 24 September 2021

ஒவ்வொரு வேத மந்திரத்துக்கும் முகம், கண், காது, மூக்கு, கை, கால்கள் உண்டு என்று சொல்லப்படுகிறது. அவை என்ன? சந்தியா வந்தனத்தில், தலை, மூக்கு, இதயம் ஏன் தொடுகிறோம்? தெரிந்து கொள்வோம்..

வேத மந்திரம் கற்றுக்கொள்ளும் முறை என்ன?

ஒவ்வொரு வேத மந்திரத்துக்கும் அங்கம் உள்ளது.  

அவை 

"வ்யாகரணம், சிக்ஷை, நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம், சந்தஸ்".


முதலில்,

வேதத்தை பூரணமாக அத்யயனம் செய்து விட வேண்டும்.

பிறகு, 

ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது, ஒவ்வொரு வேத மந்திரத்தின் 

  1. முகம் எது? 
  2. மூக்கு எது? 
  3. காது எது? 
  4. கண் எது? 
  5. கைகள் எது? 
  6. கால் எது? 

என்று வேத மந்திரத்தின் 6 அங்கங்களை படித்து அறிந்து கொண்டு சொல்பவன், ப்ரம்ம லோகத்தில் பூஜிக்கப்படுவான் என்று சொல்லப்படுகிறது.





புரிந்து கொள்வதற்காக, வேத மந்திரங்கள் அனைத்துக்கும் மாதாவான காயத்ரீ மந்திரம் மட்டும் எடுத்து கொள்வோம்.

காயத்ரீ மந்திரம், 3 பாதமாக உள்ளது. மொத்தம் 24 அக்ஷரம் உள்ளது.

தத் ஸ வி து: வ ரே ணி யம் (8 அக்ஷரம்)

பர் கோ தே வ ஸ்ய தீ ம ஹி (8 அக்ஷரம்)

தி யோ யோ ந: ப்ர சோ த யாத் (8 அக்ஷரம்)

பொதுவாக, 

காயத்ரீ மந்திரம் சொல்லி அர்க்யம் விடும் போது, 24 அக்ஷரமாக சொல்ல வேண்டும்.

அதே காயத்ரீயை, 

ஜபமாக செய்யும் போது, விச்வாமித்ரர் ஜபம் செய்தது போல, "ஒரு அக்ஷரம் குறைத்து, 23 அக்ஷரமாக சொல்லவேண்டும்" என்று சொல்லப்படுகிறது.

அதனால், "நிச்ருத் காயத்ரீ" என்று சொல்லி பிறகு ஜபம் செய்வது வழக்கம்.

நிச்ருத் காயத்ரீ (3 பாதம், 23 அக்ஷரம்)

தத் ஸ வி து: வ ரேண் யம் (7 அக்ஷரம்)

பர் கோ தே வ ஸ்ய தீ ம ஹி (8 அக்ஷரம்)

தி யோ யோ ந: ப்ர சோ த யாத் (8 அக்ஷரம்)

ஒவ்வொரு வேத மந்திரத்துக்கும் "6 அங்கங்கள்" உண்டு. அவை...

1. வ்யாகரணம் (வேத மந்திரத்தின் - முகம் (face) என்று தியானிக்க வேண்டும்)

வேத மந்திரத்தின் உண்மையான அர்த்தம் என்ன? என்று சொல்லித்தருவது வ்யாகரணம்.

காயத்ரீ மந்திரம் ஜபம் செய்யும் போது, அர்த்தம் புரிந்து சொல்ல வேண்டும். 

அந்த அர்த்தமே "காயத்ரீ மந்திரத்தின் முகம்" என்று தியானிக்க வேண்டும்.


2. சிக்ஷை (வேத மந்திரத்தின் - மூக்கு (nose) என்று தியானிக்க வேண்டும்)

ஸ்வரம் மாறாமல், அக்ஷரம் தவறாமல், மாத்ரை தவறாமல், எப்படி உச்சரிப்பது? என்று சொல்லித்தருவது சிக்ஷை. 

இப்படி சொல்லித்தர இங்கு குரு அவசியமாகிறார். அவர் சிஷ்யனுக்கு உச்சரிப்பு சொல்லித்தருக்கிறார்.

காயத்ரீ மந்திரம் ஜபம் செய்யும் போது, ஸ்வரம், அக்ஷரம், மாத்ரை மாறாமல், சரியான உச்சரிப்புடன் சொல்ல வேண்டும். 

அந்த உச்சரிப்பே, "காயத்ரீ மந்திரத்தின் மூக்கு" என்று தியானிக்க வேண்டும்.





3. நிருக்தம் (வேத மந்திரத்தின் - காது (ear) என்று தியானிக்க வேண்டும்)

விஷ்ணு, ருத்ரன், இந்திரன் என்று வேத மந்திரங்கள் தேவதைகள் பெயரை சொல்கிறது. 

வேத ஒலிகளை காதால் கேட்கிறோம். அந்த நாமங்கள் எதனால் அந்தந்த தேவதைக்கு ஏற்பட்டது? என்ற ஞானத்தை சொல்லித்தருவது நிருக்தம்

காயத்ரீ மந்திரம் "ஸவிதா" என்று பரமாத்மாவை அழைக்கிறது. 

இங்கு ஸவிதா என்பது சூரியனா? நம்மிடமும்சூரியனுக்கு உள்ளிருக்கும் நாராயணனா? என்ற ஞானத்தை நிருக்தம் கொடுக்கிறது. 

காயத்ரீ மந்திரம் ஜபம் செய்யும் போது, அதை கேட்கும் நாம், 'ஸவிதா என்பது சூரியநாராயணனே!' என்று உணர்ந்து சொல்ல வேண்டும்.

எந்த தேவதையை சொல்கிறோம் என்ற ஞானமே (அறிவே),  "காயத்ரீ மந்திரத்தின் காது" என்று தியானிக்க வேண்டும்.


4. ஜ்யோதிஷம் (வேத மந்திரத்தின் - கண் (eye) என்று தியானிக்க வேண்டும்)

எந்த வேத மந்திரத்தை எந்த காலத்தில் சொல்லவேண்டும்? என்று காலத்தை கணிக்க சொல்லித்தருவது ஜ்யோதிஷம்.

காயத்ரீ மந்திரம் இந்த வேளையில் தான் சொல்ல வேண்டும் என்று விதி உள்ளது. இந்த காலவிதியை ஜோதிஷம் கணித்து சொல்லித்தருகிறது.

சரியான காலத்தில் அதற்கான வேத மந்திரத்தை சொல்லும் போது, அந்த கால நிர்ணயமே,   "காயத்ரீ மந்திரத்தின் கண்" என்று தியானிக்க வேண்டும்.





5. கல்பம் (வேத மந்திரத்தின் - கை (hand) என்று தியானிக்க வேண்டும்)

எந்த வேத மந்திரத்தை எந்த யாகத்தில் சொல்ல வேண்டும்? என்று சொல்லித்தருவது கல்பம்.

காயத்ரீ மந்திரம் தெரியும் என்பதற்காக, யாகம் செய்யும் போதெல்லாம் சொல்ல கூடாது. 

எந்த மந்திரத்தை எங்கு சொல்லவேண்டும்? என்று நமக்கு வழிகாட்ட, ஒரு "கை" போல, கல்பம் உதவுகிறது.

இந்த இடத்தில் காயத்ரீ மந்திரம் சொல்ல வேண்டும் என்பதையே, "காயத்ரீ மந்திரத்தின் கை" என்று தியானிக்க வேண்டும்.


6. சந்தஸ் (வேத மந்திரத்தின் - கால் (leg) என்று தியானிக்க வேண்டும்)

வேத மந்திரம் ஒவ்வொன்றும் எத்தனை அக்ஷரமாக சொல்ல வேண்டும்? என்கிற விதியை சொல்லித்தருவது சந்தஸ். 

இந்த வேத மந்திரத்தை காயத்ரீ சந்தஸில் சொல்ல வேண்டும், என்றால், 

உடனேயே அந்த மந்திரத்தை 3 பாதமாக பிரித்து, 8,8,8 அக்ஷரமாக பிரித்து, 24 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று புரிந்து விடும்.

ரிக் வேதத்தின் முதல் மந்திரமான ‘அக்னீமீளே’ ஸூக்தமும் காயத்ரீ சந்தஸில் தான் அமைந்துள்ளது

அக்  நி மீ ளே பு ரோ ஹி தம் 

யக் ஞஸ் ய தே வம் ருத் வி ஜம் 

ஹோ தா ரம் ரத் ந தா த மம்

அர்த்தம்

யக்ஞத்தின் தேவனும், யக்ஞத்தில் வரிக்கப்பட்டவரும், முதன்மையாக இருப்பவரும், எல்லா தேவர்களையும் கூப்பிடுபவரும், செல்வத்தை தருபவரும், ஸ்ரேஷ்டமாக இருப்பவருமான அக்னி பகவானே ! பூ: புவ: ஸுவ: என்று விராட் ரூபத்தையே நாராயணனாக பார்க்கும் போது, அவருடைய கண்களாக இருக்கும் அக்னியே உன்னை துதிக்கிறேன்


ஒவ்வொரு மந்திரத்துக்கும் உள்ள சந்தஸ் என்ன? என்று தெரிந்தால், வேத மந்திரத்தை அதற்கேற்ப சொல்ல முடியும்.

காயத்ரீ சந்தஸ் போல பல சந்தஸ் உள்ளன..

சில வேத மந்திரங்களை, "உஷ்ணிக்" சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 3 பாதமாக பிரித்து, முதல் 2 பாதத்தை 8, 8 அக்ஷரமாக, 3வது பாதத்தை 12 அக்ஷரமாக, மொத்தம் 28 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 


சில வேத மந்திரங்களை, அனுஷ்டுப் சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 4 பாதமாக பிரித்து, ஒவ்வொரு பாதத்தை 8 அக்ஷரமாக, மொத்தம் 32 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 

சில வேத மந்திரங்களை, ப்ருஹதி சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 4 பாதமாக பிரித்து, முதல் மூன்று பாதத்தை 8 அக்ஷரமாக, 4வது பாதத்தை 12 அக்ஷரமாக, மொத்தம் 36 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 

சில வேத மந்திரங்களை, ப்ங்க்தி சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 4 பாதமாக பிரித்து, ஒவ்வொரு பாதத்தை 10 அக்ஷரமாக, மொத்தம் 40 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 

சில வேத மந்திரங்களை, த்ரிஷ்டுப் சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 4 பாதமாக பிரித்து, ஒவ்வொரு பாதத்தை 11 அக்ஷரமாக, மொத்தம் 44 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 


சில வேத மந்திரங்களை, ஜகதீ சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 4 பாதமாக பிரித்து, ஒவ்வொரு பாதத்தை 12 அக்ஷரமாக, மொத்தம் 48 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 

இப்படி பல சந்தஸ் உள்ளன. 


"அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காச்யப, அங்கீரஸ"

என்ற 7 ரிஷிகள், 

"காயத்ரீ, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தி, த்ருஷ்டுப், ஜகதீ"

என்ற 7 சந்தஸ் கொண்ட பல வேத மந்திரங்களை கொண்டு,

அக்னி, வாயு, அர்க, வாகீச, வருண, இந்த்ர, விச்வே தேவர்கள் 

என்ற 7 தேவதைகளை ஆராதனை செய்கிறார்கள்.


சந்தியா வந்தனத்தில், 

அந்த 7 ரிஷிகளின் பெயர்களை சொல்லும் போது, தலையை தொட்டு, ரிஷிகளை வணங்குகிறோம்.

அவர்கள் வேத மந்திரங்களை 7 சந்தஸை கொண்டு ஸ்வரம், அக்ஷரம், மாத்திரை மாறாமல் சொன்னார்கள் என்பதை நாமும் தியானிக்க, மூக்கை தொடுகிறோம்.

அந்த 7 ரிஷிகள் வழிபட்ட தேவதைகளை நாமும் இதயத்தில் வழிபடுவதாக நினைத்து இதயத்தை தொட்டு கொள்கிறோம்.


இவ்வாறு, ரிஷிகளை, தேவதைகளை தியானிக்கும் பாக்கியத்தை சந்தியா வந்தனம் நமக்கு தருகிறது.


Sunday 19 September 2021

தமிழா! பழங்குடி தமிழன் யாரை முதலில் வணங்கினான்? வேதத்தை பற்றி ஆதிகுடி தமிழன் என்ன சொல்கிறான்? தமிழா! நீ தெரிந்து கொள்ள வேண்டாமா? சங்க இலக்கியம் பரிபாடல் சொல்கிறது...

தமிழா! "பழங்குடி தமிழன்" யாரை முதலில் வணங்கினான்? 

வேதத்தை பற்றி ஆதிகுடி தமிழன் என்ன சொல்கிறான்?

எழுத்து வடிவில் இல்லாமல், காதால் கேட்டு கேட்டு, வாயால் சொல்லி சொல்லியே மனனம் செய்வதால், பரமாத்மாவின் அறிவு என்று அழைக்கப்படும், ஆகாசத்தில் என்றுமே இருக்கும் வேத ஒலிகளை, சமஸ்க்ரித மொழி "ஸ்ருதி" என்றும், தமிழ் மொழி "மாயா வாய்மொழி" என்றும் அழைக்கிறது.

'உண்மையான தமிழன் யாரை வணங்கினான்?" என்று சங்க இலக்கியங்கள் நமக்கு காட்டுகிறது.

1.

மாயா வாய்மொழி

உரைதர வலந்து

வாய்மொழி ஓடை மலர்ந்த

தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீ என மொழியுமால் அந்தணர் அருமறை

- பரிபாடல் (சங்கத்தமிழ்)

அர்த்தம்:

வேதத்தை தந்தவன் திருமால். 

வேதம் என்னும் வாய்மொழி ஓடையில் மலர்ந்தது தாமரை. 

தாமரையில் வெளிப்பட்டார் ப்ரம்ம தேவன்

அந்த ப்ரம்ம தேவனின் தந்தை நீங்கள்! என்று அந்தணர் வாய்மொழியாக வரும் வேதம் சொல்கிறது





இப்படி சங்க இலக்கியமான பரிபாடல், வேதத்தை பற்றி சொல்லி, ப்ரம்ம தேவனை பற்றி, நாராயணன் பற்றி பேசுகிறது.

2.

பரிபாடல், "கெடு இல் கேள்வி" (தோஷமற்ற நூல் வேதம்) என்று வேதத்துக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறது.

வடு இல் கொள்கையின்

உயர்ந்தோர் ஆய்ந்த

கெடு இல் கேள்வியுள்

நடு ஆகுதலும்

- பரிபாடல் (சங்கத்தமிழ்)

அர்த்தம்

மாசு இல்லாத (வடு இல்) கொள்கையுடைய உயர்ந்தோர், நன்கு ஆராய்ந்த பிறகு, "ஒரு குறையும் இல்லாதது வேதம். இந்த குறைவில்லாத வேதத்தில் (கெடு இல் கேள்வி) நடுவாக, உட்பொருளாக (நடு ஆகுதலும்) திருமால் இருக்கிறார்" என்கிறார்கள்.


ஆகாசத்தில் என்றுமே இருக்கும் அழியாத வேத ஒலிகள், வெளியோட்டமாக யாகம், ஜபம், பூஜை போன்ற கர்மாவை செய்ய சொல்வது போல தோன்றினாலும், பரமாத்மாவையே விராட் புருஷனாக பல விதத்தில் துதிக்கிறது.

நேரடியாக பரமாத்மாவை பற்றி சொல்ல தயங்கி, மறைத்து பேசுகிறது வேதம்

தமிழ்மொழி, வேதத்தை "மறை" என்றும் அழகாக சொல்கிறது.

தத்துவங்களை, உட்கருத்தை மறைத்து பேசுவதால், வேதத்துக்கு "மறை" என்று பெயர் கொடுக்கிறது நம் தமிழ் மொழி.




3.

பரிபாடல், 'வேதம்' என்ற சொல்லுக்கு ஈடாக "மறை" என்றும் சொல்கிறது. 

வேதத்து மறை நீ!

பூதத்து முதலும் நீ!

வெஞ்சுடர் ஒளியும் நீ!

திங்களுள் அளியும் நீ!

அனைத்தும் நீ!

அனைத்தின் உட்பொருளும் நீ! 

- பரிபாடல்

அர்த்தம்

பரிபாடல் திருமாலை பற்றி சொல்லும் போது, 

"வேதம் முழுவதின் உட்கருத்தாக, தத்துவமாக (மறை) நீயே இருக்கிறாய்" என்று "வேதத்தின் மறை நீ" என்கிறது.

மேலும்,

"உலக படைப்பிற்கும் முன் இருந்த ஆதி புருஷன் நீ !

ஒளிக்கு ஒளியானவன் நீ!

சந்திரனுக்கும் குளிர் தருபவன் நீ!

மொத்தத்தில் நீ தான் அனைத்துமாக இருக்கிறாய்.

அனைத்துக்கும் உள்ளிருந்து கொண்டு நீயே செயல்படுகிறாய்"

என்று பரிபாடல் நாராயணனை பற்றி சொல்லும் போது, "வேதத்தின் உட்கருத்து நீ" என்று சொல்கிறது.