Followers

Search Here...

Friday 21 January 2022

வருணன் என்றால் என்ன? "இமம் மே வருண..." என்று சந்தியாவந்தனத்தில் உள்ளது. வருண என்ற சொல்லுக்கு ஈடான தமிழ் சொல்லை திருமங்கையாழ்வார் பயன்படுத்துகிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோம்.

சந்தியாவந்தனத்தில், சூரியனுக்கும் ஆத்மாவாக (நமக்கும்) இருக்கும் பரமாத்மாவை பார்த்து, மாலையில் "இமம் மே வருண" என்று சொல்வோம். 

திருமங்கையாழ்வார், 

"அனலுருவாய் பெருமாள் இருக்கிறார்" என்று சொல்லி, பிறகு,

"வருண" என்ற வடசொல்லுக்கு ஈடாக "புனலுருவாய் பெருமாள் இருக்கிறார்" என்கிறார்.

அனல் உருவாய் - என்றால் "அக்னி போன்று பரமாத்மா இருக்கிறார்" என்று அர்த்தம்.

"தீ" எப்பொழுதுமே மேல் நோக்கியே செல்லும். மற்றவர்கள் தொட முடியாதபடி இருக்கும். தீக்கு அருகில் சென்றால் விழுங்கி விடும்.

அது போல, 

பெருமாளும் தேவர்களுக்கெல்லாம் தேவனாக, அவரை எவரும் தொட முடியாதபடி உயர இருக்கிறார். பெருமாள் பக்கத்தில் சென்றால், அப்படியே விழுங்கி விடுவார்.

இப்படி யாருக்கும் எட்டாதபடி அனலுருவாய் இருக்கும் பெருமாள், புனலுருவாயும் இருக்கிறார். 

புனல் உருவாய் - என்றால் "தண்ணீர் போன்று பரமாத்மா இருக்கிறார்" என்று அர்த்தம்.

தண்ணீர் எப்பொழுதுமே கீழ் நோக்கியே செல்லும். மற்றவர்களுக்கு கிடைக்கும்படி நிலத்திற்கு தானே வரும்.

அது போல,

பெருமாள் நிஜத்தில் அனலுருவாய் எங்கோ உயரத்தில் இருந்தாலும், "தானே இறங்கி ராமனாக, கண்ணனாக மனிதனை போன்று அவதாரம் செய்து, கோவிலில் அரச்ச அவதாரம் செய்து, நம்முடன் சமமாக பழகி, தானே வலிய வந்து கிடைக்கிறார்" என்கிறார்.

மாலையில் "இமம் மே வருண..." என்று சொல்லுமிடத்தில், "புனலுருவாய்" என்ற சொல்லின் அர்த்தத்தை நினைத்து சொல்லும் போது, பெருமாள் எத்தனை கருணையோடு நாம் காணும்படியாக கோவிலில், நம் வீட்டில் விக்ரக ரூபமாக அவதரித்து நிற்கிறார் என்பது புரியும்.


"அனலுருவாய்" என்று சொல்லும் போது, பெருமாளின் பர-தத்துவம், கம்பீரம் வெளிப்படுகிறது.

"புனலுருவாய்" என்று சொல்லும் போது, பெருமாளின் கருணை வெளிப்படுகிறது.


Thursday 20 January 2022

'என்னையெல்லாம் இப்படி பெருமாள் மதிக்கிறாரே' என்று நினைத்தேன். அந்த நினைவிலேயே பேரின்பம் பெற்றேன் என்று பரகால நாயகி நிம்மதி அடைகிறாள். பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்... அன்றாயர் குலமகளுக்....

"பெருமாள் தன்னையும் அவருடைய நாயகிகளோடு சேர்த்து கொண்டாரே!" என்று பேரின்பத்தில் பாடுகிறார்.

அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை

அலைகடலை கடைந்து 

அடைத்த அம்மான் தன்னை

குன்றாத வலி 

அரக்கர் கோனை மாள

கொடுஞ்சிலைவாய் 

சரம் துரந்து 

குலம் களைந்து வென்றானை, 

குன்றெடுத்த தோளினானை

விரி திரை நீர் விண்ணகரம் மருவி 

நாளும் நின்றானை, தண்குடந்தை கிடந்த மாலை

நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே

- திருநெடுந்தாண்டாகம் (திருமங்கையாழ்வார்)

அன்று, நீளா என்ற நப்பினைக்காக (கோபிகைக்கு) 7 காளையை அடக்கி, அவள் துயரத்தை போக்கிய தலைவனே!

(அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை)

மஹாலக்ஷ்மியை அடைவதற்காக அலை எறிகின்ற பாற்கடலை கடைந்தவரே !

(அலைகடலை கடைந்து


சீதாதேவியை மீட்பதற்காக, இலங்கைக்கு பாலம் அமைத்து, செல்வத்தில், படை பலத்தில் குறைவில்லாத வலிமையான ராக்ஷஸ அதிபதி ராவணனை தன்னுடைய தீர்க்கமான கோதண்டத்தில்,  அம்புகளைத் தொடுத்துப் பிரயோகித்து அரக்கர் குலத்தையே நிர்மூலமாக்கி வெற்றி பெற்றவரே (அடைத்த அம்மான் தன்னை குன்றாத வலி அரக்கர் கோனை மாள கொடுஞ்சிலைவாய் சரம் துரந்து குலம் களைந்து வென்றானை)

கோபிகைகள் மேல் ஒரு தூரல் கூட விழ கூடாதென்று, கோவர்த்தன மலையையே தன் கையால் குடையாக எடுத்தவரே! (குன்றெடுத்த தோளினானை)


இப்படி நீங்கள் செய்த ஒவ்வொரு காரியத்தை கவனிக்கும் போது, நீங்கள் ஒவ்வொரு நாயகிக்கும் பரிந்து கொண்டு அவரகளுக்கு வேண்டிய ரக்ஷணத்தை செய்கிறீர்கள் என்று தெரிகிறதே!

'நானும் ஒரு நாயகி இருக்கிறேன்' என்று தெரிந்து கொண்டு, பரந்த அலைகளையுடைய பொய்கைகள் நிரம்பிய திருவிண்ணகரிலே, அந்த நாயகியில் என்னையும் ஒருவளாக சேர்த்து கொண்டு, ஸர்வோத்தமருமான ஒப்பிலியப்பனாக நிற்கிறாரே! குடந்தையில் ஆராவமுதனாக எனக்காக படுத்து இருக்கிறாரே

நான் அல்பமானவள். 'என்னையெல்லாம் இப்படி மதிக்கிறாரே பெருமாள்' என்று நினைத்தேன். அந்த நினைவிலேயே பேரின்பம் பெற்றேன். (விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை, தண்குடந்தை கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே)

திருநெடுந்தாண்டாகம் என்பது ஆச்சர்யமான பிரபந்தம். மிகவும் ரசமானது.

இப்படி 9 பாசுரங்கள் திருமங்கையாழ்வார் பரகால நாயகியாக ஆகி, பெருமாளை தன் இதயத்தில் பூட்டி விட்டார்.