Followers

Search Here...

Thursday 3 February 2022

கனவு உண்மையா? பல கனவுகள் ஏற்படுகிறது.. ஆண்டாள், ஆழ்வார்கள் கனவில் பெருமாள் வந்ததாக சொல்கிறார்கள். நம்மில் சிலருக்கு தெய்வங்கள் கனவில் காட்சி கொடுக்கிறார்கள். பல சமயம் கெட்ட கனவுகள், நல்ல கனவுகளும் வருகிறது. கனவுகள் உண்மையா? ராமானுஜர் என்ன சொல்கிறார்? தெரிந்து கொள்வோம்...

'கனவு' என்பது அவஸ்தை (அனுபவம்) தானே! அதை எப்படி உண்மை என்று நம்ப முடியும்?

ராமானுஜர் தனது ஸ்ரீ பாஷ்யத்தில், 

"விழித்து இருக்கும் போது நாம் காணும் காட்சிகள் எந்த அளவுக்கு சத்தியமோ!, அது போல, கனவில் காணும் காட்சிகளும் சத்தியமே" என்கிறார்.

ஒருநாள், 

ஒருவன் திடீரென்று காக்கையாகி விட்டான். காகம் போல கறைந்து கொண்டு பறக்கிறான். தன் வீட்டை பார்த்ததும், வாசல் வழியாக நுழைய முயன்றான். அவன் மனைவியே "சூ சூ..." என்று துரத்தி விட்டாள்.

"ஐயோ! என் நிலைமை இப்படி ஆகி விட்டதே!"

என்று புலம்பி அழ, விழித்துக்கொண்டு விட்டான்.

"அட.. சீ! என்ன கனவு இது!" என்று பெருமூச்சு விட்டான். கனவு பொய் என்று நினைத்தான்.

ராமானுஜரிடம் கேட்டால்,

"கனவு சத்தியம் தான். ஏதோ ஒரு பூர்வ ஜென்மத்தில் காக்கையாக இருந்திருப்பான், அந்த வாசனை இன்னும் போகாததால், இப்படி ஒரு கனவு கண்டான்" என்கிறார்.


ஒருநாள், 

திடீரென்று நான்கு பேர் சேர்ந்து கொண்டு, இவனை அடி அடியென்று அடித்து நொறுக்கி விட்டார்கள். ரத்தம் சொட்ட, வலி தாங்க முடியாமல், உயிருக்கு பயந்து இவன் ஓட, விழித்துக்கொண்டு விட்டான்.

"அப்பாடா! பெரிய கஷ்டத்தில் இருந்து தப்பித்தோம்! .. சீ! என்ன கனவு இது!" என்று நினைத்தான்.


ராமானுஜரிடம் கேட்டால்,

"கனவு சத்தியம் தான். இவனுக்கு இப்படி ஒரு அவஸ்தை விழிப்பு நிலையில் இவனது பூர்வ கர்மாவால் நடக்க வேண்டியிருக்க, பெருமாளின் கருணையால், இந்த அனுபவத்தை கனவில் கொடுத்து,  பாப கர்மாவின் கணக்கை கழித்து விட்டார்." என்கிறார். 

'நியாயமாக இவன் பெருமாளுக்கு நன்றி சொல்ல வேண்டும்' என்கிறார்.

'கெட்ட கனவும், பாபத்தை கழிக்கவே வருகிறது. இது பெருமாளின் கருணையையே காட்டுகிறது' என்கிறார்.


ஒருநாள், 

பெரிய மாளிகையில், பெரிய சிம்மாசனத்தில் இவன் அமர்ந்து இருக்கிறான். 

ஆயிரக்கணக்கான வேலைக்காரர்கள் சூழ, பல வித உணவுகள் இருக்க, சகல வசதியுடன் இருக்கிறான். 

'ஆஹா எத்தனை சுகமான வாழ்க்கை' என்று அனுபவித்து கொண்டு இருக்கும் போது, விழித்துக்கொண்டு விட்டான்.

ஒட்டு வீட்டில், வெறும் தரையில் படுத்து கொண்டு இருக்கிறான்.

"அடடா.. என்ன அற்புதமான கனவு இது!" என்று நினைத்தான்.


ராமானுஜரிடம் கேட்டால்,

"இந்த கனவு சத்தியம் தான். இவனுக்கு இப்படி ஒரு அவஸ்தை விழிப்பு நிலையில் இவனது பூர்வ கர்மாவால் நடக்க வேண்டியிருக்க, பெருமாளின் கருணையால், இந்த சௌக்கியமான அனுபவத்தை கனவில் கொடுத்து,  புண்ணிய கர்மாவின் கணக்கை கழித்து விட்டார்." என்கிறார். 


'நல்ல கனவு, புண்ணியத்தை கழிக்கவே வருகிறது. இதுவும் பெருமாளின் கருணையே' என்கிறார்.

பெரிய மாளிகை கட்டி, வசதியாக வாழும்படி நிஜத்தில் நடத்தி இருக்க கூடாதா? என்று கேட்டால்,

'வசதி நிஜத்தில் கொடுத்து இருக்கலாம். கஷ்டம் இருந்தால், பெருமாளை கொஞ்சமாவது நினைப்பான்.

அதீத வசதி கொடுத்தால், பெருமாளை விட்டு விலகி சென்று விடுவானே! மீண்டும் சம்சார சுகத்தில் வீழ்ந்து விடுவானே! அதனால் தான் அந்த புண்ணிய அனுபவத்தையும் கனவில் கொடுத்து, அதையும் கழித்து விடுகிறார்" என்கிறார்.


இப்படி, நல்ல கனவும், கெட்ட கனவும், 'பூர்வ ஜென்ம வாசனையாலும், சில பாவ கர்மாக்களை கழிக்கவும், சில புண்ணிய கர்மாக்களை கழிக்கவும்' ஏற்படுகிறது என்கிறார்.

சிலருக்கு ஆச்சர்யமாக கனவில் பெருமாள் தோன்றுகிறாரே!

ஆண்டாள் தனது கனவில் பெருமாள் வந்து தன்னை கரம் பிடித்ததாக கண்டேன் என்று சொல்கிறாளே!  மற்ற ஆழ்வார்களும் கனவில் பெருமாளை தரிசித்தேன் என்று சொல்கிறார்களே!

நமக்கும், எப்பொழுதாவது, 

தெய்வீக காட்சிகள் ஏற்படுகிறதே! அதற்கு காரணம் என்ன? என்று கேட்டால்,

ராமானுஜர், "அந்த திவ்ய காட்சிகள் சத்தியமே! என்கிறார்.


பெருமாள் நேரில் வந்தால் தாங்க முடியாது. நேரில் பார்த்த ஆழ்வார்களால் உலகத்தோடு பழக முடியவில்லை. நேராக தெய்வம் வந்து பேசினால் பித்தனாகி விடுவோம். உலக விஷயங்களில் பிறகு மனம் செல்லவே செல்லாது. 

ஆதலால், பெருமாள், பக்குவம் இல்லாத தன் பக்தனிடம், பழக ஆசைப்படும் போது, முதலில் கனவில் வருகிறார்.

'நாளைக்கு பெருமாளை கனவில் பார்க்க போகிறேன்' என்று சொல்லி யாரும் பார்த்து விட முடியாது. 

'பெருமாள் கனவில் வருவது நம் சாமர்த்தியத்தால் அல்ல, அவர் கருணையால் மட்டுமே!' என்பதால் கனவில் எற்படும் திவ்ய காட்சிகளை சத்தியம் என்றே உணர வேண்டும்.


தன்னிடம் பழக தெய்வம் வருகிறார் என்று கனவில் பார்த்த பக்தன், மேலும் மேலும் நம் பக்தியை வளர்த்து கொள்ள வேண்டும்.


வேதத்தில் இல்லாத, சொல்லாத உருவங்கள், போலி தெய்வங்கள் கனவில் ஏற்பட்டால், அது இந்த ஜென்மத்தில் பழகிய வாசனையே என்று உதற வேண்டும்.

Sunday 30 January 2022

தாண்டகம் என்றால் என்ன? கலியன் என்றால் என்ன? திருமங்கையாழ்வார் பாடிய முதல் பாசுரம் எது? அறிந்து கொள்வோம்.

வடமொழியில் "தண்டகம்" என்ற ஒரு வகையான பாடும் (ஸ்தோத்திர) முறை உண்டு. 

அம்பாள் மேல் ஸ்யாமளா தண்டகம், மஹாலக்ஷ்மி மேல் கோமளா தண்டகம் என்று தண்டகங்கள் உள்ளன.


"தண்டவத் ப்ரணாமம்" என்ற சொல்லே "தண்டம் சமர்ப்பிக்கிறேன்' என்று தமிழில் சொல்லப்படுகிறது.


"தண்டகம்" என்ற வடசொல்லையே "தாண்டகம்" என்றும் "தண்டம்" என்றும் சொல்கிறோம்.


வைஷ்ணவர்கள் பெரியோர்களுக்கு கடிதம் எழுதும் போது, 'நமஸ்கரிக்கிறேன்' என்று எழுதாமல் "தேவரீர் திருவடியில் தண்டம் சமர்ப்பிக்கிறேன்" என்று எழுதுவார்கள்.


தண்டகம் என்றால் மரக்கட்டை என்று அர்த்தம்.

தன்னை ஒரு மரக்கட்டையாக பாவித்து, பெரியவர்கள் காலில் விழுவதால், "தண்டம் சமர்ப்பிக்கிறேன்"  என்று சொல்வார்கள்.

சந்யாசிகளும் தங்கள் கைகளில் "தண்டம்" வைத்து கொண்டிருகிறார்கள். 


ஸ்ரீமத் பாகவதத்தில், அக்ரூரர், பகவான் அவதாரம் செய்து இருக்கிறார் என்று அறிந்ததால், ஆர்வத்தோடு பிருந்தாவனம் வந்த போது, பலராமரோடு கிருஷ்ணரை பார்த்தபோது, மரக்கட்டை போல இருவருடைய கால்களிலும் விழுந்து விட்டார்.

रथात् तूर्णम् अवप्लुत्य स:

अक्रूर: स्‍नेह विह्वल: ।

पपात चरण उपान्ते

दण्डवद् राम-कृष्णयो: ॥

திருமங்கையாழ்வார் திருகுறுந்தாண்டாகம், திருநெடுந்தாண்டாகம் இயற்றி,  பெருமாளின் திருவடியில் தன்னையே தண்டம் போல சமர்பிக்கிறார். 


'நீலன்' என்ற பெயர் கொண்ட இவர், திருவாலி என்ற தேசத்தை சிற்றரசனாக ஆட்சி செய்து வந்தார்.

ஒரு சமயம், குமுதவல்லி என்ற பெண்ணை கண்டு மணந்து கொள்ள ஆசைப்பட்டார்.


அந்த பெண்ணோ, இவர் சம்ஸ்காரம் செய்து கொண்டு வைஷ்ணவனாக ஆக வேண்டும், தினமும் 1000 வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தாள்.

இதை ஏற்று கொண்ட மணந்து கொண்ட திருமங்கை மன்னன், திருநரையூர் எம்பெருமானிடம் வைஷ்ணவனாக சம்ஸ்காரம் பெற்றார்.


பூம்புகார் செல்லும் வழியில், திருமங்கைமடம் என்ற இடத்தில், தினமும் 1000 வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்து வந்த இவர், சொத்தையெல்லாம் இழந்து விட்டார்.


இருந்தாலும் அன்னதானம் செய்வதில் பெரும் ஆர்வம் கொண்டார். 

"அன்னதானம் எந்த காரணம் கொண்டும் நிற்க கூடாது" என்று நினைத்தார்.


ஒரு நிலையில், "கொள்ளை அடித்தாவது அன்னதானம் செய்தே ஆக வேண்டும்" என்று இறங்கி விட்டார். 


இவரை ஆட்கொள்ள நினைத்த வயலாலி மணவாளன், தானே பிராம்மண பையனாக, தாயாரோடு, புது மண தம்பதிகளாக நகைகளை அணிந்து கொண்டு, இவர் சஞ்சரிக்கும் இடமான வேதராஜபுரத்திற்கு வந்தார்கள். 

இவர்கள் அணிந்து இருக்கும் நகைகளை பார்த்த திருமங்கை மன்னன், இவர்களை வழிமறித்து, அனைத்து நகைகளையும் கழட்ட சொல்லி மிரட்டி, ஒரு பெரிய மூட்டையாக கட்டி கொண்டார்.


மிகவும் பலசாலியான இவரால், தான் கட்டிய நகை மூட்டையை தூக்க முடியவில்லை.


அருகில் நின்று கொண்டிருந்த இந்த பிராம்மணன் சிரிக்க, 'இவர் ஏதோ மந்திரம் சொல்லி, இந்த மாயம் செய்கிறார்' என்று நினைத்தார் பரகாலன்.


எவ்வளவு முறை முயன்றும், மூட்டையை தூக்க முடியாமல் போக, உடனே கோபத்தோடு, வாளை உருவி, "ப்ராம்மணரே! நீர் ஏதோ மந்திரம் ஜெபித்து தான் இந்த மாயாஜாலம் செய்கிறீர்கள் என்று அறிகிறேன். உங்களை பார்த்தால், இப்பொழுது தான் மணமாகி இருக்கிறது என்று தெரிகிறது.

இந்த நிலையில் உங்கள் நகைகளை எடுத்து கொள்ள நான் விரும்பவில்லை. சீதனமாக நானே தருகிறேன் எடுத்து கொண்டு செல்லும். ஆனால், நீர் எந்த மந்திரத்தை சொல்லி இந்த மாயம் செய்தீரோ அந்த மந்திரத்தை எனக்கு சொல்லி கொடுத்து விட்டு, பிறகு எடுத்து கொள்ளும்" என்றார்.


அந்த பிராம்மணனோ, "நகையும் உனக்கு கிடையாது. மந்திரமும் கிடையாது" என்றார்.

உடனே வாள் எடுத்து மிரட்டினார். மசியவில்லை அந்த பிராம்மணன்.


மரியாதையோடு, சேவை புத்தியோடு பிறகு கேட்க, ப்ராம்மணனாக வந்த வயலாலி மணவாளன், அவருக்கு திருவஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார். 

இப்படி பெருமாளே, பரகாலனை தடுத்தாட்கொண்டதும், தன் நிஜ ஸ்வரூபம் என்ன? என்று ரகசியத்தை அறிந்து கொண்டார். 

உடனே, 'வாடினேன் வாடி வருந்தினேன்..."என்று முதல் பாசுரத்தை பாட ஆரம்பிக்கிறார்.

முதல் பாசுரத்தை முடிக்கும் போது, திருமங்கையாழ்வார், "கண்டு கொண்டேன் நாராயணன் என்னும் நாமம்' என்று பாடுகிறார். 

திருமங்கையாழ்வார் முதன்முதலாக 'பெரிய திருமொழி' தான் பாடினார் என்பது 'கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமத்தை' என்ற வாக்கியத்தை கொண்டே அறிய முடிகிறது.

வாடினேன் 

வாடி வருந்தினேன் 

மனத்தால்

பெருந்துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன் 

கூடி இளையவர் தம்மோடு

அவர் தரும் கலவியே கருதி ஓடினேன்

ஓடி உய்வதோர் பொருளால்

உணர்வெனும் பெரும் பதம் திரிந்து நாடினேன் 

நாடி நான் கண்டுகொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

- பெரிய திருமொழி.


'சம்சார சக்கரத்தில் உழன்று, சிற்றின்பத்தில் விழுந்திருந்த நான், உய்வதற்கு பெரும் பதம் எங்கு கிடைக்கும் என்று தேடி திரிந்தேன். வயலாலி மணவாளா! உங்கள் கருணையால் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமத்தை' என்று சொல்லி முதல் பாசுரத்தை பாடுகிறார்.

வயலாலி மணவாளனை சாக்ஷாத்காரம் செய்த திருமங்கையாழ்வார், தொடர்ந்து 1000 பாசுரங்கள் பாடினார். நமக்கு பெரிய திருமொழி கிடைத்தது.

கடைசியில், 'இந்த சம்சார உலகத்தில் நான் உழன்றது போதும். பெரிய திருமொழி பாடவே இந்த உலகத்தில் வந்தேன் என்று அறிகிறேன். பதரியில் இருந்து திருபுல்லாணி வரை ஒவ்வொரு திவ்ய தேசமும் கால் நெடுக நடந்து சென்று, மங்களாசாசனம் செய்தேன். திருவரங்கம் போன்ற திவ்ய தேசங்களில் கைங்கர்யமும் செய்து விட்டேன். இனி இந்த சம்சாரத்தில் இருக்க மாட்டேன். வந்த காரியம் முடிந்து விட்டது. எனக்கு வைகுண்டம் கொடுங்கள். என்னை உங்கள் திருவடியில் அழைத்து கொள்ளுங்கள்' என்று பெரிய திருமொழி முடிக்கும் போது கதறி விண்ணப்பம் செய்கிறார்.

முசுகுந்த சக்கரவர்த்தி போன்றோர், பெருமாளிடம் வைகுண்டம் கேட்டும், 'கர்மா இன்னும் தீரவில்லை, இன்னும் 2 யுகம் கழித்து துவாபர யுகத்தில் தான் வைகுண்டம்' என்று சொல்லி விட்டார். 

அதேபோல, பரத யோகீஸ்வரர், பெருமாளிடம் வைகுண்டம் கேட்டும், கர்மாவினால், மானாக பிறந்து, பிறகு ஜடபரதராக பிறந்து,  2 ஜென்மங்கள் கழித்து தான் வைகுண்டம் சென்றார். 


வைகுண்டத்தில் இருக்கும் நித்ய சூரிகளே, 12 ஆழ்வார்களாக அவதரித்தனர். 

கர்மாவுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆழ்வார்கள். அவதார புருஷர்கள்.

இப்படி ஆழ்வார் பெரிய திருமொழி முடிக்கும் போது வைகுண்டம் கேட்டு கதறியும், எம்பெருமானோ, 'அஜாமிளன் என்றால், உடனே பரமபதம் கொடுத்து விடலாம்.

இன்னும் கொஞ்ச நாள் இவர் பூலோகத்தில் இருந்தால், தனக்கு மேலும் சில பிரபந்தம் கிடைக்குமே! மேலும் இவர் பாடுவாரே! இவர் பாடுவது நன்றாக இருக்கிறதே! அதை கேட்டு ஆனந்தபடலாமே" என்று திருவுள்ளம் கொண்டார். 

திருமங்கையாழ்வாருக்கு உடனே பரமபதம் கொடுக்க தயங்கினார் பெருமாள். 

'இன்னும் கர்மா பாக்கி உள்ளது. இப்பொழுது பரமபதம் கிடையாது' என்று முசுகுந்தன், பரத யோகிக்கு சொன்னது போல, ஆழ்வாரிடம் சொல்ல முடியாது,

இனி இவர் இந்த உலகத்தில் ஜீவிக்க வேண்டுமென்றால், இவருக்கு பகவத் அனுபவமே ஆதாரம். 

திருமங்கையாழ்வார் இப்படி ஆர்த்தியோடு வைகுண்டம் கேட்டும், பரமபதம் கொடுக்க தயங்கிய பெருமாள், இவரை மேலும் சில காலம் பூலோகத்தில் இருக்க வைக்க, தானே அவருக்கு சில திவ்யகாட்சிகளை, சில அனுபவங்களை கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். 

இப்படி பெருமாளால் கிடைக்கப்பெற்ற காட்சிகளாலும், அனுபவங்களாலும் உகந்திருந்த திருமங்கையாழ்வார், தொடர்ந்து, திருகுருந்தாண்டாகம், திருநெடுந்தாண்டாகம் என்று பாட ஆரம்பிக்கிறார்.

ஆழ்வாருக்கு ஏற்பட்ட இந்த திவ்ய அனுபவங்களே, அடுத்து அவர் இயற்றிய, திருகுறுந்தாண்டாகம், திருநெடுந்தாண்டாகம், மேலும் திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் போன்ற பாசுரங்களில் காண்கிறோம். 


தானே நாயகியாக ஆகி, விரகத்தில் அழுவதும், சிரிப்பதும், ப்ரணய கோபம் அடைவதும்,

நாயகியான தன் நிலையை கண்டு, தனக்கு பரிந்து கொண்டு தாய் வருந்தி பெருமாளிடம் சொல்லி அழுவதுமாக, பெருமாள் இவருக்கு கொடுத்த அனுபவங்களை பாசுரங்களாக அள்ளி கொடுத்து விட்டார்.