Followers

Search Here...

Saturday 23 April 2022

குணவான் என்றால் என்ன? வீர்யவான் என்றால் என்ன? ராமரே 'குணவான்', ராமரே 'வீர்யவான்' என்று தமிழரான வால்மீகி 'ராமாயணம்' காட்டுகிறார். தெரிந்து கொள்வோம்.

'குணவான்' என்றால் என்ன? வீர்யவான் என்றால் என்ன? '

நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கலாம். அதற்காக நம்மை குணவான் என்று சொல்லிவிட முடியாது.

'சரணாகதி செய்த பிறகு, பிறருடைய குற்றத்தை அறிந்தும், மன்னிப்பது' என்பது உயர்ந்த குணம்.


'தன்னை நம்பியவர்கள் செய்யும்/செய்த குற்றங்களை மன்னிக்கும் குணம் யாரிடம் இருக்குமோ!' அவர்களை 'குணவான்' என்று சொல்கிறோம்.

எப்படிப்பட்ட எதிரியானாலும், எதிர்த்து வெற்றி கொள்ளும் மஹாவீரனை, "வீர்யவான்" என்று சொல்கிறோம்.

'எதிரியை தண்டிக்கும் மஹாவீரனாக இருந்தும், இப்படி ஒரு குணவான், என் சமகாலத்தில் வாழ்கிறாரா? எதிரி என்று தெரிந்தும், குற்றவாளி என்று தெரிந்தும், தண்டிக்கப்படவேண்டியவன் என்று தெரிந்தும், தன்னை சரணமடைந்தால் மன்னிக்கும் குணம் கொண்டவன் உலகில் இப்பொழுது இருக்கிறாரா?' என்று அன்பில் என்ற தேசத்தில் அவதரித்த வால்மீகி, நாரதரை கேட்கிறார்.

कोन्वस्मिन् सांप्रतम् लोके 

गुणवान् कः च वीर्यवान् |

- வால்மீகி ராமாயணம்

40000 ராக்ஷஸ படையோடு, கர-தூஷணன் ராமபிரானை கொல்ல வந்தான். தனி ஒருவனாக ராமபிரான் மட்டுமே நின்று, 40000 பேரையும் ஒழித்து காட்டினார்.

ராவணன் 'பேடித்தனமாக' ராமபிரான், லக்ஷ்மணன் இல்லாத சமயத்தை ஏற்படுத்தி, சீதாதேவியை கடத்தி சென்றான்.


ராமபிரான் பஞ்சவடியில் இருந்து சீதையை காப்பாற்ற இலங்கை வந்து போர் செய்து சீதையை மீட்க நின்றார்.


'சீதாதேவியை ராமபிரான் இல்லாத சமயத்தில் கடத்தி, இங்கே கொண்டு வந்தது மிகப்பெரிய தவறு' என்று சொன்ன விபீஷணனை, ராவணன் எட்டி உதைத்து வெளியேற்றிய பிறகு, ராமபிரானை சரணாகதி செய்ய வருகிறான். 

சுக்ரீவன், 'ராக்ஷஸனான விபீஷணன், போர் நடக்க போகும் சமயத்தில், எதிரி பக்கத்தில் இருந்து வந்து இருக்கிறான். மஹா ஆபத்து' என்றான்.

ராவணனை நேருக்கு நேர் போர் செய்து வீழ்த்தும் மஹாவீரனாக இருந்தும், 'என்னிடம் சரணம் என்று ஒருவன் வந்தால், அவனுக்கு அபயம் கொடுப்பது எனக்கு விரதம். விபீஷணனை மட்டுமல்ல, அவனோடு அந்த ராவணனே வந்து இருந்தால் (रावणः स्वयम्) அவனையும் மன்னித்து விடுவேன்" என்றார்.

आनयैनं हरिश्रेष्ठ

दत्तमस्याभयं मया ।

विभीषणो वा सुग्रीव

यदि वा रावणः स्वयम्

- வால்மீகி ராமாயணம்

தன்னை அண்டியவன் செய்த குற்றத்தை மன்னிக்கும் குணம் கொண்ட ஒரு மனிதனை பார்ப்பதே அரிது. ராமபிரானுக்கோ, கடல் போன்ற குணங்களில் இதுவும் ஒரு குணமாக இருந்தது.


இந்த இடத்தில் சாதாரண மனிதன் எவன் இருந்திருந்தாலும், "ராவணன் செய்த ஒரு குற்றத்துக்கு, தண்டனை ஒன்றே வழி. மன்னிப்புக்கு இடமே இல்லை" என்று சொல்லி இருப்பான்.


சீதாதேவியை தொலைத்து, பஞ்சவடியில் (மஹாராஷ்டிரா) இருந்து நடந்து, ராமேஸ்வரம் வரை வந்து, 5 நாளில் வானரர்கள் பாலம் அமைக்க, கடும்கோபத்துடன் போருக்கு தயாராக இருந்த சமயத்தில், விபீஷணன் என்று ஒருவன் சரணாகதி செய்ய வருகிறான் என்றதும், "அவனோடு, ராவணன் வந்திருந்தாலும் அபயம் கொடுக்கிறேன்" என்று சொல்வதை பார்க்கும் போது, ராமபிரான் "குணவான்" என்று தெரிகிறது.  


சீதாதேவியை கடத்தினான் என்ற குற்றத்துக்கு தண்டனை கொடுக்க வந்த ராமபிரான், ராவணனை மன்னிக்க அப்பொழுதும் தயாராக இருந்தார் என்று பார்க்கும் போது தான், "பதித பாவன சீதாராம்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிகிறது.


குணவானாக இருக்கும் ராமபிரான் சரித்திரத்தை, அன்பில் என்ற இடத்தில் அவதரித்த தமிழன் வால்மீகி, கவி நடையாக எழுதுகிறார்.


நல்ல மனிதனாக வாழ நினைக்கும் எந்த மனிதனும், இந்த உயர் பண்பை கொண்ட ராமபிரானை வணங்குவார்கள்.

What are the Qualities of Ram? ராமபிரானின் குணங்களை அறிந்த பிறகு, யார் தான் இவரை வழிபட மாட்டேன் என்பார்கள்? ராமபிரானின் குணங்களை அறிவோம்.. வால்மீகி ராமாயணம்.


Sunday 17 April 2022

அஸூயை இல்லாதவர் ராமர். மாத்ஸர்யம் என்றால் பொறாமை. அஸூயை என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்.

 அஸூயை இல்லாத ராமபிரான்...

நமக்கு, சிலர் செய்யும் குற்றத்தை பார்த்து கோபம் வரும். 

அவர்கள் குற்றத்தை பார்த்த பிறகு, அவர்களிடம் உள்ள குணங்கள் கூட தோஷமாக தோன்றும்.

இதற்கு 'அஸூயை' என்று பெயர்.


ஒருவர் குற்றத்தை பார்த்த பிறகும், அவர்களிடம் உள்ள மற்ற குணங்கள் தோஷமாக பார்க்காமல் இருப்பதற்கு, 'அனஸூயை' என்று பெயர்.


'அஸூயை இல்லாதவர் ராமபிரான்' என்று தமிழ் முனிவரான வால்மீகி, 24 வயது ராமபிரானை பார்த்து  சொல்கிறார். 

स हि रूपोपपन्नश्च वीर्यवान् अनसूयकः |

भूमौ अनुपमः सूनुर्गुणै: दशरथोपमः || 

- வால்மீகி ராமாயணம்


ராவணன் 'பேடித்தனமாக' ராமபிரான், லக்ஷ்மணன் இல்லாத சமயத்தை ஏற்படுத்தி, சீதாதேவியை கடத்தி சென்றான்.


ராமபிரான் பஞ்சவடியில் இருந்து கிளம்பி, சீதையை காப்பாற்ற இலங்கை வந்து போர் செய்கிறார்.


ராவணன் முதல் முறையாக ராமபிரானுடன் போர் செய்ய நேருக்கு நேர் வருகிறான்.

அன்று வரை, ராவணன் எந்த போரிலும் தோல்வியை பார்க்காதவன். மஹா வீரன்.

சீதாதேவியை கடத்தியது ராவணன் செய்த குற்றம். 

மற்றபடி, அவனும் மஹாவீரன் தான்.


இவன் செய்த ஒரு குற்றத்துக்காக, வீணாக இவன் வீரத்தை குற்றம் சொல்ல ஆசைப்படவில்லை ராமபிரான்.


முதல் முறை போர் புரிய வந்த ராவணனின் தேரை உடைத்து, கிரீடத்தை தட்டி, அவன் தேர் கொடியை உடைத்து தள்ள, யாரிடமும் இது வரை தோற்று அறியாத ராவணன், 38 வயது ராமபிரானிடம் தோற்றான். 


தன்னிடம் போர் புரிவதற்கு முன், ராவணன் சுக்ரீவனை, கவாக்ஷன், கவயன், ருஷபன், ஜ்யோதிமுகன், நபன், நீலன், ஹனுமான், லக்ஷ்மணன் அனைவரையும் கீழே விழ செய்து, கடைசியாக ராமபிரானிடம் போர் புரிய வந்தான்.


இவர்கள் அனைவரையும் தோற்கடித்த வீரன் என்பதால், ராமபிரான் தோற்று நிற்கும் ராவணனை பார்த்து,

"ராவணா! நீ பெரிய காரியத்தை செய்துள்ளாய். மஹாபலம் கொண்ட என் சேனையை எதிர்த்து வென்றுள்ளாய்.

பலருடன் போர் செய்ததால் நீ தோற்று இருக்கலாம். அதனால் உன்னை இன்று யமலோகம் அனுப்ப நான் நினைக்கவில்லை" என்று அஸூயையே இல்லாமல் சொல்கிறார்.

कृतं त्वया कर्म महत् सुभीमं

हतप्रवीरश्च कृतस्त्वयाऽहम् ।

तस्मात्परिश्रान्त इव व्यवस्य

न त्वां शरैर्मृत्युवशं नयामि ॥ 

- வால்மீகி ராமாயணம்

பெரும் அவமானத்தோடு திரும்பி நடந்து செல்கிறான் ராவணன்.

இந்த இடத்தில் சாதாரண மனிதன் எவன் இருந்திருந்தாலும், ராவணன் செய்த ஒரு குற்றத்துக்கு, அஸூயை கொண்டு, அவன் வீரத்தையும் கேலி செய்து, "பேடி ராவணா! நான் இல்லாத போது சீதாதேவியை கடத்தினாயே? நீயெல்லாம் ஒரு வீரனா?" என்று அவன் வீரத்தை குறையாக சொல்லி இருப்பான்.


சீதாதேவியை கடத்தினான் என்ற குற்றத்துக்கு தண்டனை கொடுக்க வந்த ராமபிரான், ராவணனிடம் உள்ள மற்ற நல்ல குணங்களையோ, திறமையையோ கேலியாகவோ, தோஷமாகவோ பேசவே இல்லை.


'ஒருவரிடம் உள்ள குற்றத்துக்காக, அவரிடம் உள்ள நல்ல குணத்தையும் தோஷமாக சொல்வது' - அஸூயை.


இந்த அஸூயையே இல்லாதவர் ராமபிரான் என்று வால்மீகி சொல்கிறார். 

மனிதனாக வாழ நினைக்கும் எந்த மனிதனும், இந்த உயர் பண்புகள் கொண்ட ராமபிரானை வணங்காமல் இருக்கமுடியாது.


What are the Qualities of Ram? ராமபிரானின் குணங்களை அறிந்த பிறகு, யார் தான் இவரை வழிபட மாட்டேன் என்பார்கள்? ராமபிரானின் குணங்களை அறிவோம்.. வால்மீகி ராமாயணம்.